Archives: மார்ச் 2018

ராஜாவின் கிரீடம்

நாங்கள் ஒரு மேசையைச் சுற்றி அமர்ந்திருந்தோம். நாங்கள் ஒவ்வொருவரும் ஒரு பல் குத்தும் குச்சை எங்கள் முன்னேயிருந்த பஞ்சு தகட்டில் குத்தினோம். ஈஸ்டருக்கு முந்திய வாரங்களில், ஒவ்வொரு இரவு உணவின் போதும் நாங்கள் முள்ளினால் ஆன ஒரு கிரீடத்தை உருவாக்கினோம். அதிலுள்ள ஒவ்வொரு பல் குத்தும் முள்ளும், நாங்கள் அந்நாளில் செய்த தவறுகளையும், அதற்காக நாங்கள் மனம் வருந்தினதையும், கிறிஸ்து எங்கள் பாவங்களுக்கான அபராதத்தைச் செலுத்தி விட்டார் என்பதையும் நினைவுபடுத்துகிறது. இந்தப் பயிற்சியை நாங்கள் எங்கள் வீட்டிலும், ஒவ்வொரு இரவும் செய்தோம். எங்களுடைய தவறுகளினால் நாம் குற்றவாளிகளாகிறோம். நமக்கு ஒரு மீட்பர் தேவை என்பதைக் குறித்து நினைவுகூர இது உதவியது இயேசு கிறிஸ்து சிலுவையில் மரித்ததன் மூலம் நம்மை விடுவித்தார் என்பதையும் நினைவுகூர்ந்தோம்.

இயேசு கிறிஸ்துவை சிலுவையிலறையும் முன்பு, முள்ளினாலான ஒரு கிரீடத்தைச் செய்து அதை இயேசுவுக்கு அணிவித்தது, ரோம போர் வீரர்களின் மிகக் கொடூரமானச் செயல். அவர்கள் இயேசுவிற்கு ராஜரீக உடையான சிவப்பு அங்கியை அணிவித்து, இயேசுவை அடிக்க பயன்படுத்திய கோலை, அவர் கையில் அரச செங்கோல் போல கொடுத்தனர். அவர்கள் இயேசுவை கேலி செய்து அவரை, ‘‘யூதருக்கு ராஜா” (மத். 27:29) என அழைத்தனர். அவர்கள், தங்களுடைய இச்செயல் பிற்காலத்தில் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு நினைவுகூரப்படும் என்பதை உணராதிருந்தார்கள். இவர் ஒரு சாதாரண அரசன் அல்ல. இவர் ராஜாதி ராஜா. அவருடைய மரணமும், உயிர்த்தெழுதலும் நமக்கு நித்திய வாழ்வையளிக்கின்றது.

ஈஸ்டர் காலையில், நாங்கள் நமக்குக் கொடுக்கப்பட்ட ஈவாகிய மன்னிப்பையும், புது வாழ்வையும் கொண்டாடும் வகையில் அங்குள்ள பல் குத்தும் குச்சிகளை எடுத்து விட்டு மலர்களைச் சொருகுவோம். தேவன் நம்முடைய பாவங்களையெல்லாம் நீக்கி விட்டு நமக்கு விடுதலையையும், அவருக்குள் நித்திய வாழ்வையும் தருகிறார் என்ற செய்தி எத்தனை மகிழ்ச்சிகரமானது.

துயரத்தின் பாதை வழியே

பரிசுத்த வாரத்தில், இயேசு கிறிஸ்து சிலுவையிலே அறையப்படுவதற்கு முன்னான நாட்களை நினைவு கூருவோம். எருசலேமின் வீதிகள் வழியே இயேசு கிறிஸ்து சிலுவையை சுமந்து சென்ற பாதையை துயரத்தின் பாதை என அழைக்கின்றனர்.

எபிரெயர் நிருபத்தை எழுதியவர் இயேசு சென்ற பாதையை துயரத்தின் பாதையையும் விட மேலாகக் கருதுகின்றார். இயேசு துயரத்தின் பாதை வழியே கொல்கொதாவை நோக்கிச் செல்வதை மனப்பூர்வமாய் ஏற்றுக் கொண்டதினால், நாம் தேவனுடைய பிரசன்னத்தை நோக்கிச் செல்ல ஒரு ‘‘புதிய வாழும் வழி”யைத் திறந்துள்ளார் (எபி. 10:20).

பல நூற்றாண்டுகளாக யூத ஜனங்கள் தேவனுடைய பிரசன்னத்திற்குள் வருவதற்கு மிருகங்களை பலியிடுவதன் மூலம் தேவனுடைய நியாயப்பிரமாணத்தைக் கைக்கொண்டனர். ஆனால் இந்த சட்டங்களெல்லாம் வரப் போகிற நன்மையான காரியங்களின் ஒரு நிழலாகவேயிருந்தது. ஏனெனில் ஒரு காளை அல்லது வெள்ளாட்டுக்கடா, இவைகளின் ரத்தம் நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்ய முடியாது (வச. 1,4).

இயேசு மேற்கொண்ட துயரத்தின் வழியேயான பாதை, அவருடைய மரணத்திற்குப் பின்பு உயிர்த்தெழுதலுக்கும் வழி வகுத்தது. அவரை விசுவாசிக்கும் போது அவராலேயே நம்முடைய பாவங்களுக்கான மன்னிப்பைப் பெற்று, அவருடைய தியாகத்தினாலேயே பரிசுத்தமாக்கப்படுகிறோம். அவருடைய நியாயப் பிரமாணங்களையும் கட்டளைகளையும் முழுமையாக கடைப்பிடிக்க முடியாமற் போனாலும், தேவனுடைய பிரசன்னத்தண்டை பயமில்லாமலும், தைரியமாகவும் வரும்படி நாம் அன்போடு அழைக்கப்படுகின்றோம் (வச. 10,22).

கிறிஸ்துவினுடைய துயரத்தின் பாதை, தேவனிடம் செல்ல நமக்கு ஒரு புதிய வாழும் வழியைத் திறந்துள்ளது.

அன்பின் பாத்திரம்

அநேக ஆண்டுகளுக்கு முன்னர், ஒரு நாள் இயற்பியல் ஆசிரியர் வகுப்பிற்கு வந்ததும், யாரும் பின்னால் திரும்ப வேண்டாம், இந்த வகுப்பறையின் பின் பக்கச் சுவரின் வண்ணம் என்ன? என்று சொல்லுமாறு கேட்டார். ஒருவராலும் பதிலளிக்க முடியவில்லை. ஏனெனில், நாங்கள் யாருமே அதைக் கவனிக்கவில்லை.

சில வேளைகளில் நாமும் வாழ்வின் சில அம்சங்களைப் பார்க்கத் தவறி விடுகிறோம். ஏனெனில் நம்மால் அவையனைத்தையும் சிந்தனைக்குள் எடுத்துக் கொள்ள முடிவதில்லை. சில வேளைகளில் நீண்ட நாட்களாக இருக்கின்ற சிலவற்றைக்கூட பார்க்கத் தவறி விடுகிறோம்.

இதைப் போன்றே, நானும் சமீபத்தில் இயேசு கிறிஸ்து தனது சீடர்களின் கால்களைக் கழுவிய நிகழ்ச்சியை மீண்டும் வாசித்தேன். இது அனைவருக்கும் நன்கு தெரிந்த ஒன்று. ஏனெனில் இப்பகுதியை பரிசுத்த வாரத்தில் தவறாது வாசிப்பர். நம்முடைய இரட்சகரும் ராஜாவுமானவர் குனிந்து சீடர்களின் கால்களைக் கழுவுகின்றார். இது நம்மை வியப்படையச் செய்கிறது. இயேசு கிறிஸ்துவின் காலத்தில் யூத வேலையாட்கள் கூட இச்செயலைச் செய்வதில்லை, ஏனெனில் அதனை அவர்களின் தகுதிக்குத் தாழ்ந்ததாகக் கருதினார். ஆனால் நான் இப்பகுதியில் கவனிக்கத் தவறியது எதுவெனின், மனிதனாகவும், தேவனாகவும் திகழ்ந்த இயேசு, யூதாசுடைய கால்களையும் கழுவினார். யூதாஸ் தன்னைக் காட்டிக் கொடுப்பான் என்பதை இயேசு அறிந்திருந்தும் (யோவா. 13:11) இயேசு தன்னைத் தாழ்த்தி யூதாசின் கால்களையும் கழுவினார்.

அன்பு, ஒரு பாத்திர நீரில் ஊற்றப்பட்டது. தன்னைக் காட்டிக் கொடுப்பவன் மீதும் அவருடைய அன்பு பகிரப்பட்டது. இயேசுவின் உயிர்த்தெழுதலுக்கு முந்திய வார நிகழ்வுகளை நினைத்துப் பார்க்கும் போது, நாமும் தேவனுடைய ஈவாகிய தாழ்மையைப் பெற்றுக் கொண்டு, இயேசுவின் அன்பை நம்முடைய நண்பர்களுக்கும் பகைவர்களுக்கும் கொடுப்போம்.

நோக்கிப் பார், அமைதியாயிரு

மெக்ஸிக்கன் பாடலாசிரியர் ரூபன் சோடேலோ எழுதிய ‘‘அவரை நோக்கிப் பார்” என்ற பாடல் சிலுவையிலிருந்த இயேசு கிறிஸ்துவைப் பற்றி விளக்கியுள்ளது. அவர் நம்மனைவரையும் இயேசுவை நோக்கிப் பார், அமைதியாயிரு என்கின்றார். ஏனெனில், இயேசு கிறிஸ்து சிலுவையில் செயல்படுத்திக் காட்டிய அன்பிற்கு முன்பாக சொல்வதற்கு ஒன்றுமேயில்லை. சுவிசேஷங்களில் விளக்கப்பட்டுள்ள காட்சிகளை, விசுவாசத்தோடு நாம் கற்பனை செய்து பார்க்க முடிகிறது. நாம் அந்த சிலுவையையும், அவருடைய இரத்தத்தையும், ஆணிகளையும், வேதனைகளையும் கற்பனை செய்து பார்க்க முடியும்.

இயேசு தன் கடைசி மூச்சை விட்ட போது இந்தக் காட்சியைப் பார்க்கும்படி கூடி வந்திருந்தவர்கள்... தங்கள் மார்பில் அடித்துக் கொண்டு திரும்பிப் போனார்கள்” (லூக்கா 23:47-48). மற்றவர்கள் தூரத்திலே நின்று இவைகளைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள் (வச. 49) அவர்களெல்லாரும் பார்த்து அமைதியாயிருந்தார்கள். ஒரேயொரு மனிதன் பேசுகிறான். நூற்றுக்கு அதிபதி சம்பவித்ததைக் கண்டு ‘‘மெய்யாகவே இந்த மனுஷன் நீதிமானாயிருந்தான்” என்றான் (வச. 47).

பாடல்களும், கவிதைகளும் இந்த பெரிய அன்பை விளக்கி எழுதப்பட்டிருக்கின்றன. அநேக ஆண்டுகளுக்கு முன்பு எரேமியா, எருசலேமின் பேரழிவுக்குப் பின் அதன் வேதனைகளை விளக்கி எழுதினார். ‘‘வழியில் நடந்து போகிற சகல ஜனங்களே, இதைக் குறித்து உங்களுக்குக் கவலையில்லையா?” (புலம். 1:12) என ஜனங்களை நோக்கிப் பார்க்கச் சொல்கின்றார். எருசலேமிற்கு நடந்த கொடுமைகளைக் காட்டிலும் வேறே துக்கமில்லை எனக் கருதுகின்றார். எப்படியாயினும், இயேசு சகித்த துன்பத்தைக் காட்டிலும் வேறு துயரம் என்ன இருக்கிறது?

நாம் அனைவரும் சிலுவையின் அருகிலுள்ள பாதையின் வழியே கடந்து செல்கிறோம். அவருடைய அன்பை நோக்கிப் பார்க்கின்றோமா? வார்த்தைகளும், பாடல்களும் நம்முடைய நன்றியையும் தேவனுடைய அன்பையும் விவரிக்க போதாது. நாம் இயேசுவின் மரணத்தைக் குறித்து சிறிது நேரம் நினைத்துப் பார்த்து, நம் இருதயத்தின் ஆழத்தில் நம்முடைய ஆழ்ந்த அன்பினை அவருக்குக் கொடுப்போம்.

விளையச் செய்பவருக்கு மகிமையுண்டாவதாக

ஒரு நாள் எங்கள் கார் செல்லும் பாதைக்கு வலது பக்கத்தில் எதிர்பாராத விதமாக ஒரு மஞ்சள் நிறம், இரு பெரிய கற்களுக்கிடையே பிரகாசித்ததைக் கண்டேன். ஆறு ஓங்கி வளர்ந்த டாப்படில் செடிகள் அழகிய மஞ்சள் நிறமலர்களைக் கொண்டிருந்தது. நான் அவற்றை நடவோ, உரமிடவோ, அவற்றின் கிழங்குகளுக்கு நீர் விடவோயில்லை. எப்படி இவை எங்கள் நிலத்தில் முளைத்தன என்பதை என்னால் ஊகிக்க முடியவில்லை.

விதைகளைத் தூவும் ஓர் உவமையில் இயேசு ஆவிக்குரிய வளர்ச்சியி;ன் மறைவான கருத்துக்களை விளக்குகிறார். அவர் தேவனுடைய ராஜ்ஜியத்தை நிலத்தில் விதைகளைத் தூவுகின்ற ஒரு விவசாயிக்கு ஒப்பிடுகின்றார் (மாற். 4:26). விதைக்கிறவன் தன் விதையை நிலத்தில் தூவுகின்றான். அவன் தன் நிலத்திற்குத் தேவையான கவனத்தைக் கொடுத்திருக்கிறான். அந்த மனிதன் இரவில் தூங்கி, பகலில் விழித்திருக்க அவனுக்குத் தெரியாத விதமாய் விதை முளைத்துப் பயிராகிறதற்கு ஒப்பாயிருக்கிறது. எப்படியெனில், நிலமானது முன்பு முளையையும், பின்பு கதிரையும், கதிரிலே நிறைந்த தானியத்தையும் பலனாகத் தானாய் கொடுக்கும் (வச. 27-28). அந்த எஜமான் அறுவடையின்போது பலனடைகிறான் (வச. 29). இந்த விளைவின் பலன் அவனுடைய செயலின் பலனுமல்ல, அல்லது அந்த நிலத்திற்கு அவன் செய்த வேலையின் பலனுமல்ல. தேவனே விளையச் செய்கிறார்.

என்னுடைய டாப்படில்கள் மலர்ந்திருந்ததைப் போன்று, இயேசு சொன்ன உவமையில் சொல்லப்பட்ட விதைகளும் பலனளித்தது. தேவன் குறித்த நேரத்தில் அது நடக்கும். ஏனெனில் விளையச் செய்யும் வல்லமை தேவனுக்கேயுரியது. தேவனுடைய வருகை வரையில், நம்முடைய தனிப்பட்ட ஆவிக்குரிய வாழ்வில் வளர்வதோ அல்லது சபையின் விருத்தியைக் குறித்த தேவனுடைய திட்டம் ஆகியவை அவருடைய மர்மமான வழிகள், அது நம்முடைய திறமைகளைச் சார்ந்தது அல்ல, அவருடைய கிரியைகளைக் குறித்த நம்முடைய புரிதலையும் சார்ந்ததல்ல. ஆனாலும் நாம் தேவனைப் பற்றி தெரிந்து கொள்ளவும், சேவை செய்யவும், விளையச் செய்பவரைத் துதிக்கவும் அழைக்கப்படுகின்றோம். நம் மூலமாக அவரே பயிரிட்டுள்ளார். ஆவியில் முதிர்ச்சியடைந்தவற்றை அறுவடை செய்பவரும் அவரே.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

தேவனே என் துணையாளர்

என் நண்பர் ராலே தனது எண்பத்தைந்தாவது பிறந்தநாளை நோக்கி விரைகிறார்! அவரை நான் முதன்முதலில் சந்தித்ததிலிருந்து முப்பத்தைந்து வருடங்களுக்கும் மேலாக எனக்கு ஊக்கமளிக்கக்கூடிய ஆதாராமாக அவர் இருந்துள்ளார். பணி ஓய்வு பெற்ற பிறகு, அவர் ஓர் புத்தகம் எழுதும் பணியை நிறைவுசெய்துவிட்டு, வேறொரு வேலையை செய்வதாக என்னிடம் கூறினார். அவற்றைக் கேட்க எனக்கு ஆர்வமாயிருந்தது ஆனால் ஆச்சரியப்படவில்லை. 

தனது எண்பத்தைந்து வயதில், வேதாகமத்தில் இடம்பெற்றுள்ள காலேப் தன் ஓட்டத்தை நிறுத்த தயாராக இல்லை. தேவன் இஸ்ரவேலுக்கு வாக்களித்த கானான் தேசத்தை சுதந்தரிப்பதற்காக பல சகாப்தங்களாக வனாந்தர வாழ்க்கை மற்றும் யுத்தங்கள் ஆகியவற்றின் மத்தியிலும், தேவபக்தியும் விசுவாசமும் அவரை தாங்கியது. அவர், “மோசே என்னை அனுப்புகிற நாளில், எனக்கு இருந்த அந்தப் பெலன் இந்நாள்வரைக்கும் எனக்கு இருக்கிறது; யுத்தத்திற்குப் போக்கும் வரத்துமாயிருக்கிறதற்கு அப்போது எனக்கு இருந்த பெலன் இப்போதும் எனக்கு இருக்கிறது” (யோசுவா 14:11) என்று உரைக்கிறார். அவர் எந்த வழிகளில் ஜெயங்கொள்வார்? “கர்த்தர் என்னோடிருப்பாரானால், கர்த்தர் சொன்னபடி, அவர்களைத் துரத்திவிடுவேன்” (வச. 12) என்று காலேப் பதிலளிக்கிறார். 

வயது, வாழ்க்கையின் நிலை அல்லது சூழ்நிலை ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல், தேவனை முழுமனதோடு பற்றிகொள்ளும் யாவருக்கும் தேவன் உதவிசெய்ய வல்லவராயிருக்கிறார். நமக்கு உதவும் நம் இரட்சகராகிய இயேசுவில், தேவன் வெளிப்பட்டார். சுவிசேஷங்கள், கிறிஸ்துவிடத்திலிருந்து தேவன்மீது விசுவாசம் வைப்பதை நமக்கு போதிக்கிறது. உதவிக்காக தேவனை அண்டிய யாவருக்கும் தேவன் தன் அக்கறையையும் இரக்கத்தையும் வெளிப்படுத்துகிறார். எபிரெய நிருப ஆசிரியர் “கர்த்தர் எனக்குச் சகாயர், நான் பயப்படேன்” (எபிரெயர் 13:6) என்று அறிக்கையிடுகிறார். இளைஞரோ அல்லது வயதானவரோ, பலவீனமானவரோ அல்லது பலவானோ, கட்டுண்டவரோ அல்லது சுதந்திரவாளியோ, வேகமாக ஓடுகிறவரோ அல்லது முடவனோ, யாராக இருந்தாலும் இன்று அவருடைய உதவியைக் கேட்பதிலிருந்து நம்மைத் தடுப்பது எது?

 

கிறிஸ்துவில் ஐக்கிய பன்முகத்தன்மை

பேராசிரியர் டேனியல் போமன் ஜூனியர் தனது “சர்வீஸ் அன் தி ஸ்பெக்ட்ரம்” என்ற கட்டுரையில், ஓர் மனஇறுக்கம் கொண்ட நபராக தனது தேவாலயத்திற்கு எவ்வாறு சேவைசெய்வது என்பது குறித்த முடிவுகளை மேற்கொள்வதில் உள்ள சிரமத்தைப் பற்றி எழுதுகிறார். அவர் குறிப்பிடும்போது “இதுபோன்ற மனஇறுக்கம் கொண்ட மக்கள் ஒவ்வொரு முறையும் முன்னோக்கி செல்ல ஓர் புதிய பாதையை உருவாக்கவேண்டும். அவை ஓர் தனித்துவமான பாதையை அமைக்கிறது... மன, உணர்ச்சி மற்றும் உடல் ஆற்றல்... தனிமை/புத்துணர்வூட்டும் தருணங்கள்; உணர்வு உள்ளீடுகள் மற்றும் ஆறுதல் நிலை...அன்றைய நாள்பொழுது; நாம் நமது பெலனானவைகளுக்காக மதிக்கப்படுகிறோமா மற்றும் உணரப்பட்ட குறைபாடுகளுக்காக ஒதுக்கப்படாமல் நமது தேவைகளுக்கு இடமளிக்கப்படுகிறோமா இல்லையா என்று சிந்தித்தல்...; இன்னும் பற்பல காரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.” அதுபோன்ற தீர்மானங்கள் “மக்களின் நேரத்தையும் ஆற்றலையும் மாற்றியமைக்கும்போது, அவை மற்றவர்களையும் நம்மையும் மறுசீரமைக்க உதவும்” என்று போமன் எழுதுகிறார். 

1 கொரிந்தியர் 12இல் பவுல் விவரிக்கும் பரஸ்பர பார்வை ஓர் குணப்படுத்தும் தீர்வாக இருக்கும் என்று போமன் நம்புகிறார். அதில் 4-6 வசனங்களில், தேவன் தன் ஜனங்கள் ஒவ்வொருவருக்கும் வரங்களை “அவனவனுடைய பிரயோஜனத்திற்கென்று அளிக்கப்பட்டிருக்கிறது” (வச. 7) என்று குறிப்பிடுகிறார். ஒவ்வொருவரும் கிறிஸ்துவின் சரீரத்தில் இன்றியமையாத அவயங்கள் (வச. 22). திருச்சபை அனைவரையும் மாற்றமுடியாத ஒரே பாதையில் பயன்படுத்தாமல், அவரவருக்கு தேவன் கொடுத்த வரங்களின் அடிப்படையில் தேவனுடைய இராஜ்யத்திற்காய் அவற்றை நேர்த்தியாய் பிரயோகிக்க அனுமதிக்கலாம். 

இந்த வழியில், ஒவ்வொரு நபரும் செழிப்பையும் முழுமையையும் காண்பதோடு, கிறிஸ்துவின் சரீரத்தில் தங்கள் மதிப்புமிக்க இடத்தில் பாதுகாப்பாக இருக்க முடியும் (வச. 26).

 

இயேசு – மெய்யான சமாதானக் காரணர்

1862, டிசம்பர் 30ஆம் தேதி, அமெரிக்காவில் உள்நாட்டுப் போர் மூண்டது. எதிர் துருப்புக்கள் ஓர் ஆற்றின் எதிர்பக்கங்களில் எழுநூறு மீட்டர் இடைவெளியில் முகாமிட்டிருந்தனர். அவர்கள் தீ மூட்டி குளிர்காய்ந்துகொண்டிருந்தபோது, மற்றொரு பகுதியில் சிப்பாய்கள் தங்கள் வயலின்களையும் ஹார்மோனியங்களையும் எடுத்துக்கொண்டு “யாங்கி டூடுல்” என்ற இசையை வாசிக்கத் துவங்கினர். பதிலுக்கு, மறுபக்கத்தில் இருந்த வீரர்கள் “டிக்ஸி” என்று ஓர் பாடல் இசையை  வாசித்தனர். அப்படி மாறி மாறி வாசிக்கையில், இறுதியில் இருதரப்பினரும் இணைந்து “ஹோம், ஸ்வீட் ஹோம்” என்ற இசையை வாசித்தனர். ஒன்றுக்கொன்று எதிரிகளாய் இருந்த இரண்டு தேசத்து இராணுவ வீரர்களும் இரவில் இசையைப் பகிர்ந்து, கற்பனைசெய்ய முடியாத அளவு சமாதானத்தை பிரதிபலித்தனர். இருப்பினும் அந்த மெல்லிசைப் போர்நிறுத்தம் குறுகிய காலமே நீடித்தது. மறுநாள் காலை, அவர்கள் தங்கள் இசைக்கருவிகளை கீழே வைத்துவிட்டு, தங்கள் துப்பாக்கிகளை கையில் எடுத்தனர். அந்த போரில் 24,645 வீரர்கள் உயிரிழந்தனர்.

அமைதியை உருவாக்குவதற்கான நமது மனித முயற்சிகள் தவிர்க்க முடியாமல் பெலனற்றுபோகிறது. பகைமைகள் ஓர் இடத்தில் அணைந்து, வேறொரு இடத்தில் நெருப்பை பற்றவைக்கிறது. ஓர் குடும்பப் பிரச்சனை திடீரென்று முடிவுக்கு வரும், சிறிது நாட்கள் கழித்து மறுபடியும் சூடுபிடிக்கும். நமக்கு நம்பிக்கையான சமாதானக் காரணர் தேவன் மட்டுமே என்று வேதம் சொல்லுகிறது. “என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டு” (16:33) என்று இயேசு தெளிவுபடுத்துகிறார். இயேசுவில் நாம் இளைப்பாறக்கூடும். அவருடைய சமாதானப் பணியில் நாமும் இணைந்துகொள்ளும்போது, மெய்யான சமாதானத்தை அவர் நமக்கு அருளுவார். 

இவ்வுலகத்தின் உபத்திரவ பாதையிலிருந்து நாம் தப்பித்துக்கொள்ள முடியாது என்று இயேசு கூறுகிறார். “உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன்” (வச. 33) என்று இயேசு சொல்லுகிறார். நம்முடைய முயற்சிகள் பல சமயங்களில் பயனற்றவையாக இருந்தாலும், நம் அன்பான தேவன் (வச. 27) இந்த உடைந்த உலகில் நமக்கு சமாதானத்தை அருளுகிறார்.