ஒரு நாள் எங்கள் கார் செல்லும் பாதைக்கு வலது பக்கத்தில் எதிர்பாராத விதமாக ஒரு மஞ்சள் நிறம், இரு பெரிய கற்களுக்கிடையே பிரகாசித்ததைக் கண்டேன். ஆறு ஓங்கி வளர்ந்த டாப்படில் செடிகள் அழகிய மஞ்சள் நிறமலர்களைக் கொண்டிருந்தது. நான் அவற்றை நடவோ, உரமிடவோ, அவற்றின் கிழங்குகளுக்கு நீர் விடவோயில்லை. எப்படி இவை எங்கள் நிலத்தில் முளைத்தன என்பதை என்னால் ஊகிக்க முடியவில்லை.

விதைகளைத் தூவும் ஓர் உவமையில் இயேசு ஆவிக்குரிய வளர்ச்சியி;ன் மறைவான கருத்துக்களை விளக்குகிறார். அவர் தேவனுடைய ராஜ்ஜியத்தை நிலத்தில் விதைகளைத் தூவுகின்ற ஒரு விவசாயிக்கு ஒப்பிடுகின்றார் (மாற். 4:26). விதைக்கிறவன் தன் விதையை நிலத்தில் தூவுகின்றான். அவன் தன் நிலத்திற்குத் தேவையான கவனத்தைக் கொடுத்திருக்கிறான். அந்த மனிதன் இரவில் தூங்கி, பகலில் விழித்திருக்க அவனுக்குத் தெரியாத விதமாய் விதை முளைத்துப் பயிராகிறதற்கு ஒப்பாயிருக்கிறது. எப்படியெனில், நிலமானது முன்பு முளையையும், பின்பு கதிரையும், கதிரிலே நிறைந்த தானியத்தையும் பலனாகத் தானாய் கொடுக்கும் (வச. 27-28). அந்த எஜமான் அறுவடையின்போது பலனடைகிறான் (வச. 29). இந்த விளைவின் பலன் அவனுடைய செயலின் பலனுமல்ல, அல்லது அந்த நிலத்திற்கு அவன் செய்த வேலையின் பலனுமல்ல. தேவனே விளையச் செய்கிறார்.

என்னுடைய டாப்படில்கள் மலர்ந்திருந்ததைப் போன்று, இயேசு சொன்ன உவமையில் சொல்லப்பட்ட விதைகளும் பலனளித்தது. தேவன் குறித்த நேரத்தில் அது நடக்கும். ஏனெனில் விளையச் செய்யும் வல்லமை தேவனுக்கேயுரியது. தேவனுடைய வருகை வரையில், நம்முடைய தனிப்பட்ட ஆவிக்குரிய வாழ்வில் வளர்வதோ அல்லது சபையின் விருத்தியைக் குறித்த தேவனுடைய திட்டம் ஆகியவை அவருடைய மர்மமான வழிகள், அது நம்முடைய திறமைகளைச் சார்ந்தது அல்ல, அவருடைய கிரியைகளைக் குறித்த நம்முடைய புரிதலையும் சார்ந்ததல்ல. ஆனாலும் நாம் தேவனைப் பற்றி தெரிந்து கொள்ளவும், சேவை செய்யவும், விளையச் செய்பவரைத் துதிக்கவும் அழைக்கப்படுகின்றோம். நம் மூலமாக அவரே பயிரிட்டுள்ளார். ஆவியில் முதிர்ச்சியடைந்தவற்றை அறுவடை செய்பவரும் அவரே.