நாங்கள் ஒரு மேசையைச் சுற்றி அமர்ந்திருந்தோம். நாங்கள் ஒவ்வொருவரும் ஒரு பல் குத்தும் குச்சை எங்கள் முன்னேயிருந்த பஞ்சு தகட்டில் குத்தினோம். ஈஸ்டருக்கு முந்திய வாரங்களில், ஒவ்வொரு இரவு உணவின் போதும் நாங்கள் முள்ளினால் ஆன ஒரு கிரீடத்தை உருவாக்கினோம். அதிலுள்ள ஒவ்வொரு பல் குத்தும் முள்ளும், நாங்கள் அந்நாளில் செய்த தவறுகளையும், அதற்காக நாங்கள் மனம் வருந்தினதையும், கிறிஸ்து எங்கள் பாவங்களுக்கான அபராதத்தைச் செலுத்தி விட்டார் என்பதையும் நினைவுபடுத்துகிறது. இந்தப் பயிற்சியை நாங்கள் எங்கள் வீட்டிலும், ஒவ்வொரு இரவும் செய்தோம். எங்களுடைய தவறுகளினால் நாம் குற்றவாளிகளாகிறோம். நமக்கு ஒரு மீட்பர் தேவை என்பதைக் குறித்து நினைவுகூர இது உதவியது இயேசு கிறிஸ்து சிலுவையில் மரித்ததன் மூலம் நம்மை விடுவித்தார் என்பதையும் நினைவுகூர்ந்தோம்.

இயேசு கிறிஸ்துவை சிலுவையிலறையும் முன்பு, முள்ளினாலான ஒரு கிரீடத்தைச் செய்து அதை இயேசுவுக்கு அணிவித்தது, ரோம போர் வீரர்களின் மிகக் கொடூரமானச் செயல். அவர்கள் இயேசுவிற்கு ராஜரீக உடையான சிவப்பு அங்கியை அணிவித்து, இயேசுவை அடிக்க பயன்படுத்திய கோலை, அவர் கையில் அரச செங்கோல் போல கொடுத்தனர். அவர்கள் இயேசுவை கேலி செய்து அவரை, ‘‘யூதருக்கு ராஜா” (மத். 27:29) என அழைத்தனர். அவர்கள், தங்களுடைய இச்செயல் பிற்காலத்தில் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு நினைவுகூரப்படும் என்பதை உணராதிருந்தார்கள். இவர் ஒரு சாதாரண அரசன் அல்ல. இவர் ராஜாதி ராஜா. அவருடைய மரணமும், உயிர்த்தெழுதலும் நமக்கு நித்திய வாழ்வையளிக்கின்றது.

ஈஸ்டர் காலையில், நாங்கள் நமக்குக் கொடுக்கப்பட்ட ஈவாகிய மன்னிப்பையும், புது வாழ்வையும் கொண்டாடும் வகையில் அங்குள்ள பல் குத்தும் குச்சிகளை எடுத்து விட்டு மலர்களைச் சொருகுவோம். தேவன் நம்முடைய பாவங்களையெல்லாம் நீக்கி விட்டு நமக்கு விடுதலையையும், அவருக்குள் நித்திய வாழ்வையும் தருகிறார் என்ற செய்தி எத்தனை மகிழ்ச்சிகரமானது.