Archives: ஜனவரி 2018

உறைந்த பனியைப்போல வெண்மை

கடந்த டிசம்பர் மாதத்தில் நான் என் குடும்பத்தோடு மலைப் பகுதிக்குச் சென்றோம். நாங்கள் எங்கள் வாழ்நாள் முழுதும் வெப்பமண்டலப் பகுதியிலேயே வாழ்ந்ததால் முதல் முறையாக நாங்கள் உறைந்த பனியையும்  அதன் அற்புத அழகையும் காண முடிந்தது. வெள்ளை போர்வை போர்த்தியதைப் போல காட்சியளித்த வயல் வெளிகளைக் கண்ட எனது கணவர், “உங்கள் பாவங்கள் சிவேரென்றிருந்தாலும் உறைந்த மழையைப் போல வெண்மையாகும்” (ஏசா. 1:18) என்ற வசனத்தைக் குறிப்பிட்டார்.

சிவேரென்பதின் அர்த்தம் என்ன என்பதை எங்களுடைய மூன்று வயது மகள் கேட்டதோடு, “சிவப்பு நிறம் கெட்டதா? எனவும் கேட்டாள். பாவம் என்பது தேவன் வெறுக்கும் காரியம் என்பது அவளுக்குத் தெரியும். ஆனால், இந்த வசனம் வெறும் நிறத்தை மட்டும் குறிப்பிடவில்லை, இங்கு தீர்க்கதரிசி விளக்குவது என்னவெனின், ஆழ்ந்த சிவப்பு நிறச்சாயம் ஒரு சிறிய பூச்சியின் முட்டையிலிருந்து தயாரிக்கப்படுகிறது. ஆடைகள் இந்த ஆழ்ந்த சிவப்பு சாயத்தில் இருமுறை சாயமேற்றப்படுகின்றன. எனவே இந்த நிறம் நிரந்தரமாக ஒட்டிவிடுகிறது. மழையோ, அல்லது எப்படித் துவைப்பதாலேயும் அந்த நிறத்தை எடுக்க முடியாது. பாவமும் அப்படியே தான். மனித முயற்சியால் நம் பாவத்தை நீக்க முடியாது. அது இருதயத்தில் பதிந்து விடும்.

தேவனால் மட்டுமே இருதயத்தை பாவத்திலிருந்து சுத்திகரிக்க முடியும். இந்த மலையைப் பார்க்கும் போது, ஒரு வியத்தகு தூய வெண்மையைக் காண்கிறோம். ஆழ்ந்த சிவப்பில் சாயமிடப்பட்ட ஒரு துணியைத் தேய்ப்பதாலோ அல்லது எந்த நிற நீக்கியினாலோ இந்த தூய வெண்மையைக் கொண்டு வரவேமுடியாது. பேதுருவின் போதகத்தை நாம் பின்பற்றும் போது, ‘உங்கள் பாவங்கள் நிவிர்த்தி செய்யப்படும் பொருட்டு நீங்கள் மனந்திரும்பி குணப்படுங்கள்” (அப். 3:20) தேவன் நம்முடைய பாவங்களை மன்னித்து நமக்கு ஒரு புது வாழ்வைத் தருகிறார். இயேசு கிறிஸ்துவின் தியாகம் மட்டுமே நமக்கு ஒரு தூய உள்ளத்தைத் தர முடியும். இது எத்தனை பெரிய ஈவு.

வல்லவரும், அணுகக்கூடியவரும்

என்னுடைய தாயாருக்கு புற்றுநோய் என்ற அறிக்கை வந்த போது, என் கணவர் வேலைக்குச் சென்று விட்டிருந்தார். நான் அவருக்கும், சில நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் இச்செய்தியைத் தெரியப்படுத்தினேன். என் முகத்தை நடுங்கும் கரங்களால் மூடிக்கொண்டு “எனக்கு உதவும் கர்த்தாவே” என்று விம்மி அழ ஆரம்பித்தேன். நான் முற்றிலும் தனிமையை உணர்ந்த அந்த நேரத்திலேயே தேவன் என்னோடிருந்து என்னைத் தேற்றி, என்னருகில் இருக்கிறார் என்ற உத்திரவாதத்தை எனக்குத் தந்தார்.

என் கணவர் உடனே வீட்டிற்கு வந்தார். என்னுடைய நண்பர்கள் உறவினரின் ஆதரவும் எனக்குக் கிடைத்தது. நான் தேவனுக்கு நன்றி கூறினேன். எங்கெங்கிருந்தும், எவ்வெப்பொழுதும் நாம் அவருடைய உதவியைக் கேட்கும் போது, தயாராகவும் உண்மையுள்ளவராகவும் வந்து நம்மை அமைதிப்படுத்தும் அவருடைய பிரசன்னத்தை, நான் அந்த முதல் சில மணித்துளிகள் தனிமையாக துயருற்றபோது உண்ர்ந்தேன்.

சங்கீதம் 46ல், சங்கீதக்காரன் தேவன் நமக்கு அடைக்கலமும், பெலனும், அனுகூலமான துணையுமானவர் எனத் தெரிவிக்கின்றார். நம்மைச் சுற்றியுள்ள அனைத்தும் குழப்பமாக இருப்பதை நாம் உணரும் போதும் நாம் நம்பியிருந்த உறுதி யாவும் நொறுக்கப்பட்ட போதும், நாம் பயப்படத் தேவையில்லை (வச. 2-3) தேவன் தள்ளாடுவதில்லை (வச. 4-7). அவருடைய வல்லமை உண்மையும் செயல் திறனுமுள்ளது. (வச. 8-9) அவர் நம்மை முடிவில்லாமல் காப்பவர். அவருடைய மாறாத தன்மையின் மீது நமக்கு நம்பிக்கையைத் தருகிறார் (வச. 10). நமக்கு உறுதியான பாதுகாப்பாக அவர் எப்பொழுதும் நம்மோடிருக்கிறார் (வச. 11).

ஜெபத்தில் ஒருவரையொருவர் தாங்கவும், ஊக்குவிக்கவுமே, தேவனைப் பின்பற்றுகிறவர்களை அவர் உருவாக்கினார். அவர் வல்லவரும், எப்பொழுதும் நமக்கு உதவ ஆயத்தமாயிருக்கிறார் என்ற உறுதியை நமக்களிக்கின்றார். நாம் அவரை நோக்கிக் கூப்பிடும் போது நமக்கு உதவி செய்ய, அவருடைய வாக்குத்தத்தங்களை நிறைவேற்ற வல்லவராயிருக்கிறார் என நாம் அவரை நம்பலாம். அவருடைய பிள்ளைகள் மூலமாயும், அவருடைய பிரசன்னத்தாலும் அவர் நம்மைத் தேற்ற வல்லவராயிருக்கிறார்.

ஒரு சிறு குழந்தையைப் போல

பல ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு நாள் மாலையில் என்னுடைய இரண்டு வயது மகளுடன் இரவு ஜெபத்தை முடிக்கும் போது, என் மகள் என் மனைவியிடம் ஒரு வியக்கத்தக்க கேள்வியைக் கேட்டாள். “அம்மா, இயேசு எங்கேயிருக்கிறார்? அதற்கு என் மனைவி லுஆன், “இயேசு கிறிஸ்து மோட்சத்திலிருக்கிறார், மேலும் அவர் எல்லா இடத்திலும் இருக்கிறார். இப்பொழுது நம்மோடும் இருக்கிறார். நீ அவரை என் இருதயத்தில் வாரும் என்று அழைத்தால் அவர் உன் இருதயத்திலும் இருக்க முடியும்” என்று கூறினாள்.

“நான் இயேசு என் இருதயத்தில் இருக்க விரும்புகிறேன்.”

“ஒரு நாள் நீ அவரை வரும்படி கேள்.”

“நான் இப்பொழுதே அவர் என் இருதயத்தில் வரும்படி கேட்பேன்.”

எனவே என்னுடைய சிறிய மகள் சொன்னாள், “இயேசுவே, தயவு கூர்ந்து என் இருதயத்தினுள் வாரும். வந்து என்னோடிரும்” அன்று முதல் இயேசுவோடு அவளுடைய விசுவாச பயணம் துவங்கியது.

இயேசுவின் சீடர் பரலோகராஜ்ஜியத்தில் எவன் பெரியவனாய் இருப்பான் என்று கேட்டபோது, அவர் ஒரு சிறு பிள்ளையை தம்மிடத்தில் அழைத்து அவர்கள் நடுவே நிறுத்தி (மத். 18:1-2) “நீங்கள் மனந்திரும்பிப் பிள்ளைகளைப் போலாகாவிட்டால் பரலோகராஜ்ஜியத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள்… இப்படிப்பட்ட ஒரு பிள்ளையை என் நாமத்தினிமித்தம் ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்கிறான். (வச. 3-5) என்றார்.

இயேசுவின் கண்கள் பார்க்கின்ற படியே நாமும் ஒரு நம்பிக்கையுள்ள குழந்தையை நம் விசுவாசத்திற்கு எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். அவருக்கு தன்னுடைய இருதயத்தைத் திறக்கிற அனைவரையும் வரவேற்க கற்பிக்கப்பட்டுள்ளோம். “சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள். அவர்களைத் தடை பண்ணாதிருங்கள். பரலோகராஜ்ஜியம் அப்படிப்பட்டவர்களுடையது” என்று இயேசு சொன்னார் (19:14)

மகிழ்ச்சி

நான் ஒரு புதிய காலநிலையை அடைகிறேன். முதிர்வயதின் குளிர்காலம் இன்னும் அதற்குள் வரவில்லை. ஆனால், நான் இன்னமும் அதை அடையவில்லை. வருடங்கள் வேகமாக குதித்து ஓடிக்கொண்டிருந்தாலும், நான் அவற்றின் வேகத்தைச் சற்று குறைக்க விரும்பினேன். எனக்குள் என்னைத் தாங்குகின்ற மகிழ்ச்சி இருக்கிறது. ஒவ்வொரு நாளும் தேவன் எனக்குத் தருகின்ற ஒரு புதியநாள். நானும் சங்கீதக்காரனோடு சேர்ந்து, “கர்த்தரைத் துதிப்பதும்… காலையிலே உமது கிருபையையும், இரவிலே உமது சத்தியத்தையும் அறிவிப்பதும் நலமாயிருக்கும்” (சங். 92:1,3) என்று சொல்லுகிறேன்.

என் வாழ்வில் போராட்டங்களும் வேதனைகளும் இருந்த போதிலும், மற்றவர்களின் கஷ்டங்கள் சில வேளைகளில் என்னை மேற்கொள்கின்றன. தேவன் என்னையும் சங்கீதக்காரனோடு சேர்ந்து பாட பெலப்படுத்துகிறார்” உமது கரத்தின் கிரியைகளினிமித்தம் ஆனந்த சத்தமிடுவேன் (பாடுவேன்) (வச. 4). தேவன் தந்த ஆசிர்வாதங்களுக்காக, நமது குடும்பம், நண்பர்கள், மேலும் திருப்தியளிக்கக்கூடிய வேலை ஆகியவற்றினை அவருடைய எழுச்சியூட்டும் வார்த்தைகளுக்காகவும் மகிழ்ச்சியடைவோம். தேவன் நம்மை அதிகமாக நேசித்ததினால், நம்முடைய பாவங்களுக்காக அவர் மரித்தார். நமக்கு மகிழ்ச்சியைத் தந்தார். மெய்யான மகிழ்ச்சியின் மூலக்காரணராகிய பரிசுத்த ஆவியானவரை நமக்குத் தந்தார் (ரோம. 15:13). தேவனாகிய கர்த்தராலே “நீதிமான் பனையைப் போல் செழித்திருப்பான்… அவர்கள் முதிர்வயதிலும் கனிதந்து புஷ்டியும் பசுமையுமாயிருப்பார்கள் (சங். 92:12-15).

இந்த கனி என்பதென்ன? நம்முடைய வாழ்க்கைச் சூழல் அல்லது காலம் எப்படியிருந்தாலும், நம்முடைய வாழ்வினாலும் நாம் பேசும் வார்த்தையினாலும் அவருடைய அன்பிற்கு எடுத்துக்காட்டாயிருப்போம். நம் தேவனைத் தெரிந்துகொள்வதும், அவருக்காக வாழ்வதும் அவரைப் பற்றி பிறருக்குச் சொல்வதுமே உண்மையான மகிழ்ச்சி.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

அன்புக்காக தாகம்

சிறுவயதில் கோடை விடுமுறையில் வேலூரில் உள்ள கோடைக்கால வேதாகம பள்ளிக்கு (விபிஎஸ்) சென்று வந்தேன். வெப்பநிலை சுமார் 45 டிகிரி சென்டிகிரேட் ஆக இருக்கும். வானத்தில் மேகமோ, மரங்களில் இலையோ, தென்றல் வீசும் அறிகுறியோ இருக்காது. கொதிக்கும் வெயிலுக்கு இதமாக எங்களுக்கு இருந்த ஒரே நிவாரணம், எங்கள் புட்டிகளில் உள்ள தண்ணீரும் தன்னார்வலர்கள் வாளிகளில் கொண்டு வந்த பழச்சாறுகள் மட்டுமே. பழச்சாறு நிறைந்த ஒரு குவளை படியளப்பிற்கு நாங்கள் எங்கள் கோப்பைகளுடன் வரிசையில் நிற்போம். எவ்வளவு மெதுவாகக் குடிப்போம்! ஆயினும்கூட, எங்கள் கோப்பைகள் வறண்டு போகும், மேலும் நாங்கள் அதிகம் பெறத் தவிப்போம், அரிதாகவே இரண்டாவது முறையும் கிடைக்கும்.

வறண்டு போகத் தக்கதான கோடையில் திரவங்களுக்கான நமது தாகத்தைப் போலவே, பாழான அன்பற்ற உலகில் நாம் அனைவரும் அன்பிற்காகத் தாகம் கொள்கிறோம். நாம் பல்வேறு இடங்களில் அன்பைத் தேடுகிறோம், மேலும் அது பெரும்பாலும் அளந்து போடும்படிக்கு வறண்டு கிடக்கிறது அல்லது நிபந்தனைக்குட்பட்டு விலைகொடுத்து வாங்க வேண்டும் என்பதாகக் காண்கிறோம். ஆனால் ஒருபோதும் வறண்டு போகாத "ஜீவத்தண்ணீரின்" மூல ஆதாரம் இருப்பதாக வேதாகம நமக்குக் கற்பிக்கிறது (யோவான் 4:13-14). ஜீவத் தண்ணீர் பரிசுத்த ஆவியானவரைக் குறிக்கிறது (யோவான் 7:39). அப்போஸ்தலனாகிய பவுல் பரிசுத்த ஆவியின் மூலம் "தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிற(தாக)" (ரோமர் 5:5) நமக்குக் கூறுகிறார். இது அளந்து போடப்படுவதல்ல அல்லது நமது தகுதிக்கு தக்கதாகவும் அல்ல. மாறாக, அது எல்லையற்றது மற்றும் அளவிட முடியாதது.

நாம் அவருக்கு விரோதமாக முரட்டாட்டம் செய்தபோதும், தேவன் தம்முடைய குமாரனாகிய இயேசுவை நமக்காக மரிக்க அனுப்பியதன் மூலம் நம்மீதான தம்முடைய அன்பை வெளிப்படுத்தினார் (வ.8). இயேசுவின் பலியின் காரணமாக, அவரிடமிருந்து பிரிந்திருந்த தனிமையிலிருந்து நாம் இரட்சிக்கப்படுகிறோம், தேவனுடன் நாம் ஒப்புரவாக்கப்படுகிறோம். அவர் அவருடைய அன்பை நமக்குள் ஊற்ற, அது அன்பின் ஊற்றாக மாறும் (வ.10) . நீங்கள் அன்பிற்காகத் தாகமாக இருந்தால், தேவனிடம் செல்லுங்கள். அவரே அன்பு.

தேவன் மட்டுமே திருப்தியாக்குவார்

பெரிய இறால், ஷவர்மா, சாலடுகள் மற்றும் ஆயிரக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பல உணவு வகைகள் அந்த வீட்டு உரிமையாளரிடம் வழங்கப்பட்டது. ஆனால் அவர் விருந்து வைக்கவில்லை. உண்மையில், அவர் அந்த வகையறாவான உணவை வாங்கவுமில்லை; அவரது ஆறு வயது மகன் செய்தான். இது எப்படி நடந்தது? தந்தை தூங்குவதற்கு முன் தனது மகனை தனது அலைபேசியில் விளையாட அனுமதித்தார், அவனோ பல உணவகங்களில் இருந்து விலையுயர்ந்த உணவுகளை தாராளமாக வாங்க அதைப் பயன்படுத்தினான். “ஏன் இப்படி செய்தாய்?” என தந்தை, போா்வைக்குப் பின் மறைந்திருந்த மகனிடம் கேட்டார். ஆறு வயது சிறுவன், “எனக்கு பசித்தது” என்றான். சிறுவனின் பசியும், முதிர்ச்சியின்மையும் அதிக விலைக்கிரயம் செலுத்த வழிவகுத்தது.

ஏசாவின் பசியும் அவருக்கு ஆயிரக்கணக்கான ரூபாய்களை விட அதிக நஷ்டத்தை அளித்தது. ஆதியாகமம் 25ல் உள்ள கதை, அவர் சோர்வடைந்து உணவுக்காக ஏங்குவதை காட்டுகிறது. அவர் தன் சகோதரனிடம், “அந்தச் சிவப்பான கூழிலே நான் சாப்பிடக் கொஞ்சம் தா, இளைத்திருக்கிறேன்” (வ.30) என்றான். அதற்கு யாக்கோபு ஏசாவின் சேஷ்ட புத்திரபாகத்தை கேட்டார் (வ.31). அந்த பிறப்புரிமையில், முதற்பேறான ஏசாவின் அதிகாரம், தேவனின் வாக்குதத்தங்களின் ஆசீர்வாதம், சொத்தில் இருமடங்கு பங்கு மற்றும் குடும்பத்தின் ஆவிக்குரிய தலைவராக இருக்கும் பாக்கியம் ஆகியவை அடங்கும். தன் பசிக்கு தானே பலியான ஏசா, “புசித்துக் குடித்து” மற்றும் “தன் சேஷ்ட புத்திரபாகத்தை அலட்சியம்பண்ணினான்” (வ. 34).

நாம் சோதிக்கப்பட்டு, எதையாவது விரும்பும்போது நமது பசி நம்மைக் கொடிய தவறுகளுக்கும் பாவங்களுக்கும் இட்டுச் செல்ல விடாமல், பசியுள்ள ஆத்துமாவை “நன்மைகளால்” (சங்கீதம் 107:9) திருப்திப்படுத்துகிற பரலோகத் தகப்பனை மட்டும் அணுகுவோம்.

நெருக்கத்தின் குரல்

நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த இடிபாடுகளின் இரண்டு தளங்களுக்கு அடியில் சிக்கியிருந்த சிரியா நாட்டுச் சிறுமியான ஐந்து வயது ஜினான், தனது சிறிய சகோதரனைச் சுற்றியுள்ள இடிபாடுகளில் இருந்து காப்பாற்றியபோது மீட்புப் பணியாளர்களை அழைத்தார். “என்னை இங்கிருந்து வெளியே கூட்டிச்செல்லுங்கள்; நான் உங்களுக்காக எதையும் செய்வேன், நான் உங்கள் வேலைக்காரியாகவும் இருப்பேன்” என்று அவள் நொறுங்கிய உள்ளத்தோடு அழைத்தாள்.

நெருக்கத்திலிருந்து அழைப்பது என்பது சங்கீதம் முழுதும் உள்ளது, “நெருக்கத்திலிருந்து கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன், கர்த்தர் என்னைக் கேட்டருளி விசாலத்திலே வைத்தார்” (118:5). பூகம்பத்தால் இடிந்து விழுந்த கட்டிடங்களின் எடையை நாம் அனுபவிக்கவில்லை என்றாலும், சவாலான உடல்நிலை, பொருளாதாரக் கஷ்டம், எதிர்காலத்தைப் பற்றிய நிச்சயமற்ற தன்மை அல்லது உறவுமுறை இழப்பு போன்றவற்றின் நெருக்குதலை நாம் அனைவரும் அனுபவிக்கிறோம்.

அந்த தருணங்களில் நாம் விடுதலைக்காக தேவனிடம் பேரம் பேசலாம். ஆனால் உதவிக்காக தேவனை வற்புறுத்த வேண்டியதில்லை. அவர் பதிலளிப்பதாக உறுதியளிக்கிறார், அது நமது சூழ்நிலையிலிருந்து விடுவிக்கவில்லை என்றாலும், அவர் நம்முடனும் நம் அருகிலும் இருப்பார். மரணம் உட்பட வேறு எந்த ஆபத்துக்கும் நாம் பயப்படத் தேவையில்லை. சங்கீதக்காரனோடு நாமும், “எனக்கு அநுகூலம் பண்ணுகிறவர்கள் நடுவில் கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார்; என் சத்துருக்களில் சரிக்கட்டுதலைக் காண்பேன்” (வ.7) எனலாம்.

ஜினானும் அவளது தம்பியும் பெற்றுக்கொண்டதை போல வியத்தகு மீட்பு நமக்கு வாக்களிக்கப்படவில்லை, ஆனால் சங்கீதக்காரனை “விசாலத்திலே” (வ. 5) கொண்டு வந்த நமது உண்மையுள்ள தேவனை நாம் நம்பலாம். அவர் நம் நிலைமையை அறிந்திருக்கிறார், மரணத்திலும் அவர் நம்மை கைவிடமாட்டார்.