Archives: டிசம்பர் 2017

விசுவாசத்தைக் கட்டும் நினைவலைகள்

இசையால் நிறைந்திருந்த பரிசுத்த ஸ்தலத்தில் நான் நுழைந்தபோது, புது வருஷத்தைக் கொண்டாட புத்தாண்டிற்கு முந்தையநாள் அங்கு வந்திருந்தவர்களைச் சுற்றிப் பார்த்தேன். கடந்த ஆண்டு நாங்கள் ஏறெடுத்த ஜெபங்களை நான் நினைத்த பொழுது சந்தோஷம் என் இருதயத்தை நம்பிக்கையால் துள்ளப்பண்ணிற்று. சபையாக நாங்கள், வழிதவறிப்போன பிள்ளைகள், அருமையானவர்களின் மரணம், வேலையிழப்பு, முறிந்த உறவுகள் ஆகிய வற்றால் துக்கப்படுகிறவர்களுக்காக ஜெபித்தோம். தேவனுடைய கிருபையால் மனந்திரும்பினவர்கள், உறவுகள் மறுபடியும் சீராக்கப்பெற்றவர்கள்… போன்றவர்களையும் நினைத்தோம். வெற்றிகள், திருமணங்கள், பட்டம்பெற்றது, தேவசபையில் இணைக்கும் ஞானஸ்நானங்கள் ஆகியவற்றையும் நாங்கள் கொண்டாடினோம். தத்தெடுக்கப்பட்ட மற்றும் பிறந்த குழந்தைகள் அர்பணிக்கப்பட்ட குழநதைகளை வரவேற்றோம். இன்னும் இது போன்ற பல காரியங்களை எண்ணி நன்றி கூறினோம்.

எரேமியா தன் சிறுமையையும், தவிப்பையும் (புல. 3:19) நினைத்ததுபோல, நாங்களும் எங்கள் சக குடும்பத்தினர் சந்தித்த பாடுகளின் வரலாற்றை நினைவுகூர்ந்தோம். “நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை” (புல. 3:22) என்பதை நான் விசுவாசித்தேன். தீர்கதரிசி, கடந்தகாலத்தில் தேவனுடைய உண்மையை நினைத்து “தமக்குக் காத்திருக்கிறவர்களுக்கும் தம்மைத்தேடுகிற ஆத்துமாவுக்கும் கர்த்தர் நல்லவர்” (வச. 25) என்ற வார்த்தையினால் தன்னைத் தேற்றிக்கொண்டது, அது என்னையுயம் ஆறுதல்படுத்தினது.

அந்த இரவில், எங்கள் சபையிலுள்ள ஒவ்வொருவரும் வாழ்வை மறுரூபமாக்கும் தேவனுடைய அன்பிற்கு அடையாளமாயிருந்தனர். கிறிஸ்துவின் சரீரமாகிய சபையின் உறுப்பினர்கள் யாவரும், வரப்போகிற ஆண்டுகளில் எதை சந்திக்க நேர்ந்தாலும், அவரையே சார்ந்திருக்க முடியும். நாம் ஒருவரையொருவர் தாங்கி, தொடர்ந்து தேவனைத் தேடும்பொழுது, எரேமியாவைப் போல நாமும் விசுவாசத்தைக் கட்டும் நினைவுகளால் பெலப்பட்டு, தேவனுடைய மாறாத்தன்மைiயும் நம்முடைய நம்பிக்கையையும் அவர் மீது சார்ந்திருக்கச் செய்வார்.

நிறைவேற்றின காலங்கள்

வருடத்தின் முடிவில் நாம் செய்து முடிக்காத காரியங்களின் பாரம் நம்மை சோர்வுக்குள்ளாக்கலாம். குடும்பப் பொறுப்புகளும் வேலைகளும் ஒருநாளும் ஓயாது என்பது போல தோன்றலாம். இன்று முடியாத வேலைகள் நாளைய வேலைகளுடன் சேர்ந்து கொள்ளுகிறது. ஆனால், நம் விசுவாச பயணத்தில், நாம் நிறைவேற்றின பணிகளுக்காகவும், தேவனுடைய உண்மைக்காகவும் நாம், நின்று, கொண்டாடும் நேரங்கள் இருத்தல் வேண்டும்.

தங்களது முதல் மிஷனரி பயணத்தில் நிறைவேற்றின கிரியைகளுக்காக, பவுலும் பர்னபாவும் தேவனுடைய கிருபைக்கு ஒப்புவிக்கப்பட்டுப் புறப்பட்டு அந்தியோகியாவுக்கு வந்து சேர்ந்தார்கள் (அப். 14:26). இயேசுவை அறிவிக்கும் பணி நெருக்கினாலும், நாங்கள் நிறைவேற்றின கிரியைகளுக்காகத் தேவனுக்கு நன்றி சொல்ல நேரம் ஒதுக்கினார்கள்.” அவர்கள் அங்கே சேர்ந்தபொழுது, சபையைக் கூடிவரச்செய்து தேவன் தங்களைக்கொண்டு செய்தவைகளையும், அவர் புறஜாதிகளுக்கு விசுவாசத்தின் கதவைத் திறந்ததையும் அறிவித்தார்கள் (வச. 27).

கடந்த வருடத்தில் தேவன் உங்கள் மூலமாகச் செய்தது என்ன? நன்கு அறிந்து நேசிக்கிற ஒருவருக்கு தேவன் விசுவாசக் கதவை எவ்வாறு திறந்தார்? நம்மால் நினைத்துக்கூடப் பார்க்கமுடியாத வழியில், முற்றுப்பெறாததாய் அல்லது அற்பமாய்த் தோன்றுகிற காரியங்களில், தேவன் நம்மூலமாக செயல்பட்டுக்கொண்டே இருக்கிறார்.

தேவன் நம்மூலமாகச் செய்த காரியம் முடிவடையாததை நினைத்து வேதனைப்படும் பொழுது, அவர் நம்மூலமாக செயல்பட்ட வழிகளுக்காய், மறக்காமல் நன்றி சொல்லுவோம். தேவன் கிருபையாய் செய்தவைகளை நினைத்து களிகூறுவதே வரப்போகும் அடுத்த கட்டத்திற்கு அஸ்திபாரமாகும்.

கண்களில் நிலை நிற்பவை எது?

ஹம்மிங் பறவையின் பெயர் (HUMMING BIRD) இதன் இறக்கைகள் வேகமாக அடிப்பதால் ஏற்படும் ரீங்கார ஓசையினால் இதற்கு இந்தப் .பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. போர்த்துக்கீசிய மொழியில் “பூக்களை முத்தமிடும் பறவை” (FLOWER KISSER) என்றழைக்கப்படுகிறது. ஸ்பானிய மொழியில் “பறக்கும் ரத்தினம்” (FLYING JEWELS) எனப்படும். எனக்குப் பிடித்த பெயர்களில், மெக்சிகன் ஒன்று. சப்போடெக் மொழியில் பியுலூ என்பதே. இதன் அர்த்தம் “கண்களில் நிலைநிற்பது” என்பதாகும் அதாவது இந்த ஹம்மிங் பறவையை ஒரு முறை பார்த்துவிட்டால் மறக்கவே முடியாது!

ஜீ. கே. செஸ்டர்ட்டன் “உலகில் அதிசயங்கள் ஒழிந்துபோவதேயில்லை. ஆச்சரியப்படுபவர்கள் இல்லாததுதான் குறை;” என்றார். இந்த ஹம்மிங் பறவை அப்படியொரு அற்புதம். இந்த சின்னக் குருவியில் என்ன அற்புதம் இருக்கிறது? அவைகளின் சிறிய உருவம் கிட்டத்தட்ட ஒரு விரல் நீளம் (2-3) இருப்பதாலோ அல்லது ஒரு வினாடிக்கு 50 முதல் 200 தடவை இறக்கைகளை அடிப்பதாகவோ இருக்கலாம்.

104ம் சங்கீதத்தை எழுதியது யார் என்று திட்டமாகத் தெரியவில்லை. ஆனால் அவர் இயற்கையின் அழகினால் நிச்சயம் கவரப்பட்டிருந்தார். சிருஷ்டிப்பின் பல அதிசயங்களை, உதாரணமாக லீபனோனின் கேதுரு மரங்கள், காட்டுக் கழுதைகள் போன்றவற்றை வர்ணித்தபின், “கர்த்தர் தம்முடைய கிரியைகளிலே மகிழுவார்” (வச. 3) என்று பாடினார். அதன்பின் “நான் அவரைத் தியானிக்கும் தியானம் இனிமையாயிருக்கும் என்று ஜெபித்தார் (வச. 340).

என்றும் கண்களில் நிலைத்து நிற்கும் அழகும் பூரணமும் கொண்ட அநேகக் காரியங்கள் இயற்கையிலுண்டு. நாம் அவற்றைத் தியானித்து கர்த்தரை எவ்வாறு பிரியப்படுத்தலாம்? நாம் அவற்றைக் கண்டு, ரசித்து, களிகூரும்பொழுது, கர்த்தருடைய கிரியைகளை நினைத்து, ஆச்சரியப்பட்டு, அவருக்கு நன்றி சொல்லலாம்.

ஒவ்வொரு நாளின் மணித்துளிகள்

நான் வாங்கிய பலசரக்குகளைக் காரில் வைத்தபின் கார் நிறுத்தும் இடத்திலிருந்து கவனமாக வெளியே எடுத்தேன். திடீரென்று ஒருவன், நான் வருவதைக் கவனியாமல் என் முன் வேகமாக குறுக்கே வந்துவிட்டான். நல்ல வேளை நான் ‘சடன் பிரேக்’ போட்டு அவன் மேல் மோதாமல் பார்த்துக் கொண்டேன். அவன் திகைத்துப் போய் என்னையே உற்றுப் பார்த்தான். அந்தச் ஷணத்தில், நான் இரண்டில் ஒன்று செய்திருக்கலாம்; கண்களை உருட்டி வெறுப்பைக் காட்டியிருக்கலாம்; அல்லது மன்னிக்கும் புன்னகையைக் காட்டியிருக்கலாம். நான் புன்னகித்தேன்.

அவன் முகத்தில் ஒரு தெளிவு தோன்றி மறைந்தது; அவனும் நன்றியோடு புன்னகித்தான்.

நீதிமொழிகள் 15:13 “மனமகிழ்ச்சி முகமலர்ச்சியைத்தரும்; மனோதுக்கத்தினாலே ஆவி முறிந்துபோம்” என்கிறது. நமது வாழ்வில் வரும் எல்லா இடையூறுகளிலும், ஏமாற்றங்களிலும், தொல்லைகளிலும் நாம் சிரித்த முகத்தோடிருக்க வேண்டுமென்று இதை எழுதியவர் கூறுகின்றாரா?  நிச்சயமாக இல்லை! சில வேளைகளில் நாம் உண்மையிலேயே துக்கப்படுகிறோம், சோர்ந்துபோகிறோம், அநியாயத்திற்குக் கோபப்படுகிறோம். அந்த வினாடியில், ஒரு புன்னகை நமக்குத் தெளிவையும், நம்பிக்கையையும் தொடர்ந்து முன்னேறுவதற்கான கிருபையையும் தர முடியும்.

உள்ளான மன நிலையைப் பொறுத்து, புன்னகை தானாக வரும் என்பதே இந்த நீதிமொழியின் உள்ளான கருத்து. ஒரு சந்தோஷமான இருதயம், சமாதானத்தோடிருக்கும், மனரம்மியமாயிருக்கும், தேவனுடைய சிறந்த நன்மைக்குத் தன்னை அர்ப்பணிக்கும். இப்படி உள்ளத்திலிருந்து சந்தோஷம் பொங்கி வெளிவரும் இருதயமிருந்தால், எந்த சூழ்நிலையையும் புன்னகையோடு எதிர்கொள்ளளலாம்.. தேவனிடத்திலுள்ள நம்பிக்கையையும் சமாதானத்தையும் பெற்று அனுபவிக்க மற்றவர்களையும் அழைக்கலாம்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

இது மதிப்புக்குரியது

ஜார்ஜ் ஸ்மித், வில்லியம் கேரி: ஷூமேக்கர் அண்ட் மிஷனெரி என்ற தனது புத்தகத்தில், கேரியால் ஞானஸ்நானம் பெற்ற முதல் விசுவாசியான கிருஷ்ணா பால் ஞானஸ்நானம் பெற்ற முக்கியமான தருணத்தைப் பற்றி எழுதுகிறார். கிருஷ்ணா பால் கங்கையின் சேற்று நீரிலிருந்து எழுந்த சமயம், இந்திய திருப்பணிகளில் ஒரு மைல்கல்லாக இருந்திருக்க வேண்டிய விஷயம், கேரியின் சூழ்நிலைகளால் சிதைக்கப்பட்டது. கேரியின் மனைவி மற்றும் அவரது ஊழியத்தின் கூட்டாளி ஜான் தாமஸ் இருவரும் மனநலம் பாதிக்கப்பட்டனர். ஆயினும் அவர்களது அலறல்களுக்கும், அலைக்கழிப்புகளுக்கும் மத்தியில், கேரி மகிழ்ச்சியுடன் கொண்டாட்டத்தில் இனைந்து ஒரு வங்காளப் பாடலைப் பாடினார் - காணாமல்போன ஆத்துமா வீடு வந்ததே.

ரோம சாம்ராஜ்ஜியத்தால் கிறிஸ்தவர்கள் பெரும் துன்புறுத்தலை எதிர்கொண்ட நேரத்தில், பவுல் ரோமாபுரியின் சபையினருக்கு எழுதினார். பவுல் முன்வைத்த சுவிசேஷத்தை நடைமுறைப்படுத்துவது எளிதல்ல. அதற்கு பெரும் தியாகம் தேவைப்பட்டது. ஏறக்குறைய தனது மூன்றாவது மிஷனரி பயணத்தின் முடிவில், மற்றும் நினைத்துப்பார்க்கக்கூடிய ஒவ்வொரு கஷ்டத்தையும் தாங்கிய பிறகு, பவுல் "இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே" (வ.37) என்று கூறினார். அவர் , துன்பம், பசி, நிர்வாணம், நாசமோசம் (வ.35) என்றனைத்தையும் மகிழ்ச்சியுடன் தாங்கினார், ஏனெனில் அவரை நம்பி ஒப்படைக்கப்பட்ட பிரதான பணியே காரணம். மிஷனெரி பணிகளில் முன்னோடியாக, ரோமாபுரியின் விசுவாசிகளை அவர்களின் உபத்திரவங்களைச் சகித்திட அவர் ஊக்குவிக்கிறார், ஏனெனில் கிறிஸ்துவின் விவரிக்கமுடியாத அன்பு அதற்கு "பாத்திரமானது" (வ.38-39).

வில்லியம் கேரி மற்றும் அப்போஸ்தலன் பவுல் ஆகியோரின் தியாகங்களை "மதிப்பானவையாய்" செய்த இந்த அன்பு, நமக்கும் வழங்கப்படும் அதே அன்புதான். குறிப்பாக நம்முடைய விசுவாசத்தின் நிமித்தம் பாடுகள் வரும்போது, நாம் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்பதை நினைவில் கொள்வோம் (மத்தேயு 5:10). பின்வாங்கி, சமரசம் செய்து கொள்ளாமல், கிறிஸ்துவின் அன்பு எப்போதும் "தகுதியானது" என்பதை அறிந்து நமது பாடுகளை எதிர்கொள்வோம். 

 கிறிஸ்துவுடன் ஆழமான நட்பு

இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜில் உள்ள க்ரைஸ்ட் கல்லூரியின் சிற்றாலயத்தில் உள்ள நினைவுச்சின்னம், 17ம் நூற்றாண்டைச் சேர்ந்த “இணைபிரியா நண்பர்களாகிய" ஜான் ஃபின்ச் மற்றும் தாமஸ் பெயின்ஸ் என்ற மருத்துவர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டதாகும். இருவரும் மருத்துவ ஆராய்ச்சியில் ஒன்றாக பணியாற்றியவர்கள் மற்றும் அரசாங்க பயணங்களில் ஒன்றாக பயணித்தவர்கள். 1680 இல் பெயின்ஸ் இறந்தபோது, ஃபின்ச் 36 காலமாக “ஈருடல் ஓருயிராக” இருந்த அவர்களின் நட்புக்காக வருந்தினார். அவர்களுடைய நட்பில் அன்பு, உண்மை, அர்ப்பணிப்பு இருந்தது. 

இப்படிப்பட்ட நெருக்கமான நட்பு தாவீது ராஜாவுக்கும் யோனத்தானுக்கும் இருந்தது. அவர்கள் உள்ளத்தின் ஆழத்திலிருந்து ஒருவரையொருவர் நேசித்தனர் (1 சாமுவேல் 20:41), மேலும் ஒருவருக்கொருவர் உடன்படிக்கையும் செய்தனர் (வ.8–17, 42). அவர்களின் நட்பில் உண்மையாக இருந்தனர் (1 சாமுவேல் 19:1–2; 20:13). தாவீது ராஜாவாவதற்காக, யோனத்தான் தனது உரிமையைத் தியாகம் செய்தார் (20:30-31; பார்க்க 23:15-18). யோனத்தான் மரித்தபோது, அவன் தன்மேல் வைத்திருந்த அன்பு " ஸ்தீரீகளின் சிநேகத்தைப்பார்க்கிலும் அதிகமாயிருந்தது" என்று தாவீது புலம்பினார் (2 சாமுவேல் 1:26). 

நட்பைத் திருமணத்துடன் ஒப்பிடுவது இன்று நமக்குக் கடினமாயிருக்கலாம், ஆனால் ஃபின்ச் மற்றும் பெயின்ஸ், தாவீது மற்றும் யோனத்தான் போன்ற நட்புகள், நம் சொந்த வாழ்வில் நட்பை அதிக ஆழப்படுத்த ஊக்குவிக்கிறது. இயேசுவும் தம்முடைய மார்பில் சாய தமது நண்பர்களை ஏற்றுக்கொண்டார் (யோவான் 13:23-25). அவர் காட்டும் உண்மை, நம்பகத்தன்மை மற்றும் அர்ப்பணிப்பு நாம் ஒன்றாக உருவாக்கும் ஆழமான நட்பின் அடித்தளமாக இருக்கட்டும். 

கிறிஸ்துவுக்கு பூரணமாய் சரணடைதல்

1920 ஆம் ஆண்டில், ஒரு சீன போதகரின் ஆறாவது மகனான ஜான் சுங், அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் படிக்க உதவித்தொகை பெற்றார். அவர் உயர்ந்த மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றார். முதுகலை படிப்பை முடித்து, முனைவர் பட்டமும் பெற்றார். ஆனால் அவர் தனது படிப்பைத் தொடரும்போது, தேவனை விட்டு விலகிச் சென்றார். பின்னர், 1927இல் ஒரு இரவு, அவர் தனது வாழ்க்கையை கிறிஸ்துவிடம் ஒப்படைத்தார் மற்றும் ஒரு போதகராகும் அழைப்பைப் பெற்றார்.

பல அதிக ஊதியம் பெறும் வாய்ப்புகள் அவருக்கு சீனாவில் மீண்டும் காத்திருந்தன. ஆனால் அவருடைய இலட்சியங்களை ஒதுக்கி வைக்கும்படிக்கு பரிசுத்த ஆவியானவரால் ஏவப்பட்டார். அவரது அர்ப்பணிப்பின் அடையாளமாக, அவர் தனது பெற்றோருக்கு கனம்செலுத்தும் நோக்கத்தோடு தனது பிஎச்டி சான்றிதழை மட்டும் வைத்துக்கொண்டு, மற்ற அனைத்து விருதுகளையும் கடலில் வீசினார்.

தம்முடைய சீடராக மாறுவது பற்றி இயேசு சொன்னதை ஜான் சங் புரிந்துகொண்டார்: “மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன?” (மாற்கு 8:36). நாம் நம்மையே வெறுத்து, கிறிஸ்துவையும் அவருடைய வழிநடத்துதலையும் பின்பற்றுவதற்காக நமது பழைய வாழ்க்கையை விட்டு மனம்திரும்பும்போது (வச. 34-35), அவரைப் பின்பற்றுவதிலிருந்து நம்மைத் திசைதிருப்பும் தனிப்பட்ட ஆசைகளையும் பொருள் ஆதாயத்தையும் தியாகம் செய்ய அவசியமாகலாம்.

அடுத்த பன்னிரண்டு ஆண்டுகளாக, ஜான் தனது தேவன் கொடுத்த பணியை முழு மனதுடன் நிறைவேற்றினார். சீனா மற்றும் தென்கிழக்கு ஆசியா முழுவதும் ஆயிரக்கணக்கானோருக்கு நற்செய்தியை அறிவித்தார். நாம் எப்படி? நாம் பிரசங்கிகளாகவோ அல்லது மிஷனரிகளாகவோ இருக்க அழைக்கப்படாமல் இருக்கலாம். ஆனால் தேவன் நம்மை எங்கு ஊழியம் செய்ய அழைக்கிறாரோ, அவருடைய ஆவி நம்மில் கிரியை செய்வதால், நாம் அவருக்கு முழுமையாக சரணடைவோமாக. 

- ஜாஸ்மின் கோ