Archives: நவம்பர் 2017

குறைவுள்ளது என்றாலும் நேசிக்கப்பட்டது

ஜப்பானில் உணவுப்பொருட்கள் மிகவும் சுத்தமாகத் தயாரிக்கப்பட்டு பாக்கெட்டில் அடைப்பார்கள். அவைகள் ருசியாய் இருப்பதோடுகூட அழகாயும் காணப்பட வேண்டும். அநேக நேரங்களில் நான் பாக்கெட்டின் அழகிற்காக வாங்குகிறேனா அல்லது உணவிற்காக வாங்குகிறேனா என்ற சந்தேகம் எனக்கு வரும்! ஜப்பானியர்கள் தங்கள் பொருளின் தரத்தைக் காப்பதற்காகச் சிறிய குறை இருந்தாலும் அதை விற்காமல் நிராகரித்து விடுவார்கள். ஆனால் சமீபகாலத்தில் ‘’வாகீரி’’ என்றும் விற்பனைப் பொருட்கள் பிரபலமடைந்திருக்கின்றன. ‘’வாகீரி’’ என்றால் “ஒரு காணரமுண்டு” என்று ஜப்பானிய மொழியில் பொருள்படும். இந்த பொருட்கள் எறிந்துவிடப்படுவதில்லை. ஆனால், ஏதோ ஒரு குறையிருக்கும் காரணத்தால் (ஒரு பிஸ்கட் பாக்கெட்டில் ஒன்று உடைந்திருக்கலாம்) மலிவுலிலையில் விற்கப்படுகிறது.

ஜப்பானில் வசிக்கும் என் நண்பன் “வாகீரி” என்பது குறையுள்ள மனிதர்களையும் குறிக்கும் பழிச்சொல்லாகவும் பயன்படுகிறது என்றான்.

இயேசு அனைவரையும் நேசிக்கிறார் சமுதாயம் ஒதுக்கிவிடும் ‘’வாகீரி’’ மனிதர்களையும் இயேசு நேசிக்கிறார். பரிசேயனின் வீட்டில் இயேசு இருக்கிறார் என்பதைக் கேள்விப்பட்ட பாவியான பெண்ணொருத்தி, அந்த வீட்டிற்குள் வந்து, இயேசுவுக்குப் பின்னால் முழங்கால்படியிட்டு கண்ணீரால் அவர் பாதங்களை நனைத்தாள் (லூக். 7:37-38). பரிசேயன் அவளைப் ‘பாவி’ என்ற பட்டம் தீட்டினான் (39). ஆனால், இயேசுவோ அவளை ஏற்றுக்கொண்டார். அவளிடம் அன்பாகப் பேசி, அவள் பாவங்கெல்லாம் மன்னிக்கப்பட்டதென்று கூறினார் (வச. 48).

இயேசு குறையுள்ள “வாகீரி” மனிதர்களை அதாவது உங்களையும், என்னையும் நேசிக்கிறார். அவர் அன்பின் மாபெரும் வெளிபாடு என்னவென்றால் “நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததே” (ரோம. 5:8). அவர் அன்பை ருசித்த நாம் நம்மை சுற்றியுள்ள குறைவுள்ள மனிதர்களுக்கு அவருடைய அன்பின் வாய்க்கால்களாயிருந்து, அவர்களும், தங்கள் குறைகளோடுகூட தேவனின் அன்பை ருசிக்க முடியும் என்பதை அறிந்துகொள்ளச் செய்வோம்.

பிறர் உணர்வை நமதாக்கிக் கொள்ளுதலின் வல்லமை

R70i என்னும் ஆடை முதுமை எப்படியிருக்கும் என்பதை செயற்கையாகக் காட்டும் ஓர் வகை ஆடை. அதில் ஒரு விசேஷித்த தலைக்கவசம் உண்டு. அதிலுள்ள கண்ணாடிகள் அதை நீங்கள் அணிந்தவுடனேயே உங்கள் பார்வையை மங்கச் செய்யும். அதிலுள்ள ஒலிபெருக்கிகள் காதுகள் சரியாகக் கேட்க விடாது, நடமாட்டத்தையும் குறைத்து விடும். அந்த உடையைப் போட்டுக்கொண்டால் இன்னும் நாற்பது வருடங்களில் நீங்கள் எப்படி இருப்பீர்கள் என்பதை உங்களுக்கு உணர்த்தும். வயதானவர்களைப் பராமரிப்பவர்கள் முதியோரின் பலவீனங்களையும் பிரச்சனைகளையும் அனுபவிக்கச்செய்து, அதன்மூலம் வயதானவர்களின் உணர்வுகளைப் புரிந்து செயல்பட முடியும். பத்திரிக்கையாளர் “வால் ஸ்ட்ரீட் ஜர்னல்” நிருபர் ஜெப்ரி ஃபவுலர் ஒருமுறை இதை அணிந்து பார்த்து விட்டு “முதிர் வயதடைவது என்பது மறக்கமுடியாததும், சில வேளைகளில் சோர்வுக்குள்ளாக்கும் அனுபவம் மட்டுமல்ல, இந்தக் கருவி (ஆடை) முதுமையின் உண்மைத் தன்மையையும் அவர்களின் உணர்வுகளை நமதாக்கிக் கொள்ளும் பண்பைக் கற்றுத்தந்து, நம்மைச் சுற்றியுள்ள உலகை வேறு கண்ணோட்டத்துடன் பாக்கச் செய்கிறது என்றார்.

ஒருவரது உணர்வுகளைஅறிந்து அவரோடு அதைப் பகிர்ந்துகொள்வது என்பது ஓர் திறமை. இயேசுவைப் பின் பற்றினவர்களுக்கு கொடுமையான உபத்திரவம் வந்தபொழுது, எபிரெய நிருப ஆக்கியோன், விசுவாசிகளை “கட்டப்பட்டவர்களோடே நீங்களும் கட்டப்பட்டவர்கள் போல அவர்களை நினைத்துக் கொள்ளுங்கள்; நீங்களும் சரீரத்தோடிருக்கிறவர்களென்று அறிந்து, தீங்கனுபவிக்கிறவர்களை நினைத்துக் கொள்ளுங்கள்:” என்று எழுதினார் (13:3).

இதைத்தான் நமது இரட்சகர் நமக்குச் செய்தார். இயேசு நம்மைப் போல் மாறினார் “…எவ்விதத்திலும் தம்முடைய சகோதரருக்கு ஒப்பாகவேண்டியதாயிருந்தது. ஆதலால், அவர்தாமே சோதிக்கப்பட்டுப் பாடுபட்டதினாலே, அவர் சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவிசெய்ய வல்லவராயிருக்கிறார் (எபி. 2:17-18).

நம்மைப்போன்ற மனிதனாக வந்த கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பாடுபடுகிறவர்களோடு, அவர்கள், பாடுபடுகையில் நாமும் பாடுபடுகிறவர்கள் போல அவர்களுடன் நிற்க நம்மை அழைக்கிறார்.

உண்மையிலேயே வேதாகமத்தை நாங்கள் நம்பலாமா?

இன்றைய நவீன உலகிலே, வேதாகமம் ஒரு அறிவற்ற பழைய புத்தகமே தவிர வேறொன்றுமில்லை என்றும், அது காலத்துக்குக் காலம் திரும்பத் திரும்ப எழுதப்பட்ட, தேவதைகள் பற்றிய கதைகள், சிறுவர் கதைகள் ஆகியவை சேர்ந்த ஒரு கட்டுக் கதையின் கலவை என்றும் பலர் நம்புகிறார்கள். வேதாகமம் மிகச் சரியானதும், நம்பக்கூடியதுமான புத்தகம் என்பதை நிரூபிப்பதற்கு என்ன ஆதாரங்கள் உள்ளன?

நமது வல்லமையுள்ள தேவன்

ஒரு நாள் கடற்கரையில் நின்றுகொண்டு, கடலில் சறுக்குப்பலகைகளில், தங்கள் கைகளில் பாராசூட் போன்ற பட்டங்களைப் பிடித்துக்கொண்டு, காற்றினால் ஒவ்வொரு அலையாகத் தாண்டித்தாண்டி விளையாடியவர்களைக் கண்டு ரசித்தேன். கரைக்கு வந்த ஒருவனிடம், பெரிய பட்டத்தைப் பிடித்துக்கொண்டு சறுக்கும் அனுபவம் கடினமாக இல்லையா? என்று கேட்டேன். அதற்கு அவன், “இல்லை, சறுக்குப்பலகைகளில் அலைகளைத் தாண்டுவதைவிட இது எளிதாக உள்ளது. ஏனென்றால், காற்றின் வலிமையைக் கட்டுப் படுத்துகிறேன்” என்றான்.

அதன் பின், சறுக்குபவர்களைத் தள்ளுவது மட்டுமன்றி, என் முடியையும் கலைத்து முகத்தில் அறைகிற காற்றின் வலிமையை நினைத்துக்கொண்டே கடற்கரையில் நடந்தேன். தீடீரென்று நின்று நமது வல்லமையுள்ள சிருஷ்டிகரை நினைத்து அதிசயித்தேன். ஆமோஸ் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறபடி “தேவன் பர்வதங்களை உருவாக்கினவரும் காற்றை சிருஷ்டித்தவரும் விடியற்காலத்தை அந்தகாரமாக்குகிறவருமாயிருக்கிறார்” (வச. 13)

இந்தத் தீர்க்கதரிசியின் மூலம், தேவன் தம்முடைய ஜனங்களைத் தம்மிடத்தில் திரும்பி வர அழைக்கும் பொழுது தம்முடைய வல்லமையை அவர்களுக்கு நினைவுபடுத்தினார் (வச. 13). அவர்கள் அவருக்குக் கீழ்படியாமற்போனாலும், தம்மை அவர்களுக்கு வெளிப்படுத்துவேன் என்று கூறுகிறார். இந்த இடத்தில் அவருடைய நியாயாத்தீர்ப்பை அறிந்தாலும் வேதத்தின் மற்ற பகுதிகளில் தம்முடைய குமாரனை பலியாக அனுப்பின அவருடைய தியாகமான அன்பைக்குறித்து வாசிக்கிறோம் (யோவா. 3:16).

தெற்கு இங்கிலாந்து கடற்கரையில் வீசிய காற்றின் வலிமை தேவனுடைய மகத்துவத்தை எனக்கு உணர்த்தியது. இன்றைக்கு அப்படியொரு காற்று வீசுமானால் நாம் இன்று வல்லமையுள்ள தேவனை  ஏன் தியானிக்கக்கூடாது?

இன்னும் மேலாக அறிதல்

நாங்கள் ஒரு பையனை வெளிநாட்டிலிருந்து தத்தெடுத்து கடல் கடந்து எங்கள் வீட்டிற்கு கொண்டுவந்தபொழுது. அவனிடத்தில் அளவு கடந்த அன்பை பொழிந்து, கடந்த காலத்தில் அவன் அனுபவித்திராத விதவிதமான உணவுகளையும், அவனுக்குக் கொடுத்தோம். உணவு பற்றாக்குறையினால் அவனுக்கு ஒரு குறையிருந்தது. குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவர்களிடம் காட்டியும் அவன் வளர்ச்சியடையவில்லை. மூன்று வருடங்களுக்குப்பின் அவனுக்கு சில உணவுகள் ஒவ்வாமை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அப்படிப்பட்ட உணவுகளை விலக்கியவுடன், சில மாதங்களுக்குள் அவன் ஐந்து அங்குலம் வளர்ந்துவிட்டான். அவன் வளர்ச்சியை தடைசெய்த உணவுகளைத் தெரியாமல் கொடுத்ததற்காக வருந்தினாலும், அவனுடைய வளர்ச்சியினால் சந்தோஷப்பட்டோம்.

அநேக ஆண்டுகளாக ஆலயத்தில் காணாமற்போயிருந்த நியாயப்பிரமாண புத்தகம் கிடைத்தவுடன் யோசியா ராஜாவும் என்னைப்போலவே சந்தோஷப்பட்டிருப்பான்; என்று நினைக்கிறேன். நான் அறியாமலேயே என் மகனின் வளர்ச்சிக்கு தடையாய் இருந்ததால் வேதனையுற்றது போல யோசியாவும், தன் அறியாமையினால், தேவன் தன் மக்களுக்காகக் கொண்ட மிகச்சிறந்ததும், பூரணமானதுமான விருப்பங்களை இழந்ததற்காக மனம் வருந்தினான் (2 இரா. 22:11). தேவனுடைய பார்வையில் செம்மையானதைச் செய்ததற்காக அவன் புகழப்பட்டாலும் (வச. 2), நியாயப்பிரமாண புத்தகம் கிடைத்தபின் தேவனை எப்படி இன்னும் அதிகமாக கனம் பண்ணவேண்டுமென்று அறிந்துகொண்டான். இப்பொழுது புதிதாகப் பெற்ற அறிவினால் தேவன் கற்பித்தபடியே தேவனை ஆராதிக்க ஜனங்களை வழிநடத்தினான் (23:22-23).

வேதத்திலிருந்து தேவனை எவ்வாறு கனம் பண்ணவேண்டும் என்று தெரிந்து கொண்டபின் நாம் அவ்வாறே தேவனுடைய சித்தத்தின்படி செய்யாமற் போனதற்காக வருத்தப்படுவோம். ஆனாலும் அவர் நம்மை குணப்படுத்தி, திரும்ப உயிர்ப்பித்து, இன்னும் ஆழமாக அவரை அறிகிற அறிவிற்குள் நடத்துகிறபடியால் ஆறுதல் அடைய முடியும்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

இணைந்து இயேசுவுக்கு ஊழியம் செய்தல்

மைக்ரோனேசியாவில் உள்ள ஓர் தீவில் சிக்கித்தவிக்கும் இரண்டு ஆண்களுக்கு உதவ மீட்புப் பணியாளர்கள் பிரயாசப்பட்டனர். அவர்களுக்கு சுகாதார நெருக்கடி ஏற்படுவதற்கு முன்பு அவர்களை விரைந்து காப்பாற்றுவதற்கு குழுவாய் செயல்படவேண்டியது அவசியமாய் தோன்றியது. அவர்களை முதலில் கண்டுபிடித்த விமானி, அவர்களின் அருகாமையிலிருந்த ஆஸ்திரேலிய கப்பலுக்கு செய்தியனுப்பினார். கப்பல், இரண்டு ஹெலிகாப்டர்களை அனுப்பியது, அவை உணவு, தண்ணீர் மற்றும் மருத்துவ சேவைகளை வழங்கின. பின்னர், அமெரிக்க கடலோர காவல்படை அங்கு வந்து ஆட்களை சரிபார்த்து தகவல் அளித்தனர். இறுதியாக, ஓர் மைக்ரோனேசிய ரோந்துப் படகு அவர்களை பத்திரமாக அழைத்துக்கொண்டு வந்துவிட்டது.

நாம் இணைந்து செயல்பட்டால் நிறைய சாதிக்க முடியும். பிலிப்பிய விசுவாசிகள் அப்போஸ்தலர் பவுலை ஆதரிக்க தங்கள் முயற்சிகளை ஒருங்கிணைத்தனர். லீதியாளும் அவரது குடும்பத்தினரும் அவரை தங்கள் வீட்டிற்குள் வரவேற்றனர் (அப்போஸ்தலர் 16:13-15). கிலேமெந்து, எயோதியாள் மற்றும் சிந்திகேயாள் (இவர்கள் ஒத்துப்போகவில்லை) அனைவரும் நற்செய்தியைப் பரப்புவதற்கு அப்போஸ்தலருடன் நேரடியாக வேலை செய்தனர் (பிலிப்பியர் 4:2-3). பின்னர், பவுல் ரோமில் சிறையில் அடைக்கப்பட்டபோது, தேவாலயம் (விசுவாசிகள்) அவரது பராமரிப்புக்குத் தேவைப்படும் பொருளாதாரத்தை சேகரித்து, எப்பாபிராத்து மூலம் (வச. 14-18) விநியோகித்தது. பவுல் அப்போஸ்தலரின் ஊழியத்திற்காக பிலிப்பிய திருச்சபை தொடர்ந்து ஜெபத்தில் தரித்திருந்திருக்கக் கூடும் (1:19).

இந்த பண்டைய திருச்சபை விசுவாசிகள் ஒன்றாக இணைந்து ஊழியம் செய்ததற்கான எடுத்துக்காட்டுகள் இன்று நம்மை ஊக்குவிக்கும். தேவன் நம்மை வழிநடத்தி, நமக்கு அதிகாரம் கொடுத்ததால், ஜெபிக்கவும் மற்றவர்களுக்கு ஊழியம்செய்யவும், சக விசுவாசிகளுடன் ஒத்துழைக்கவும், நம்மால் இயன்றதைவிட அதிகமாக செய்யமுடிகிறது. “தனித்து வேலை செய்தால் நாம் ஒரு துளி, ஆனால் இணைந்து வேலை செய்தால் நாம் சமுத்திரம்.”

 

தேவனே என் துணையாளர்

என் நண்பர் ராலே தனது எண்பத்தைந்தாவது பிறந்தநாளை நோக்கி விரைகிறார்! அவரை நான் முதன்முதலில் சந்தித்ததிலிருந்து முப்பத்தைந்து வருடங்களுக்கும் மேலாக எனக்கு ஊக்கமளிக்கக்கூடிய ஆதாராமாக அவர் இருந்துள்ளார். பணி ஓய்வு பெற்ற பிறகு, அவர் ஓர் புத்தகம் எழுதும் பணியை நிறைவுசெய்துவிட்டு, வேறொரு வேலையை செய்வதாக என்னிடம் கூறினார். அவற்றைக் கேட்க எனக்கு ஆர்வமாயிருந்தது ஆனால் ஆச்சரியப்படவில்லை. 

தனது எண்பத்தைந்து வயதில், வேதாகமத்தில் இடம்பெற்றுள்ள காலேப் தன் ஓட்டத்தை நிறுத்த தயாராக இல்லை. தேவன் இஸ்ரவேலுக்கு வாக்களித்த கானான் தேசத்தை சுதந்தரிப்பதற்காக பல சகாப்தங்களாக வனாந்தர வாழ்க்கை மற்றும் யுத்தங்கள் ஆகியவற்றின் மத்தியிலும், தேவபக்தியும் விசுவாசமும் அவரை தாங்கியது. அவர், “மோசே என்னை அனுப்புகிற நாளில், எனக்கு இருந்த அந்தப் பெலன் இந்நாள்வரைக்கும் எனக்கு இருக்கிறது; யுத்தத்திற்குப் போக்கும் வரத்துமாயிருக்கிறதற்கு அப்போது எனக்கு இருந்த பெலன் இப்போதும் எனக்கு இருக்கிறது” (யோசுவா 14:11) என்று உரைக்கிறார். அவர் எந்த வழிகளில் ஜெயங்கொள்வார்? “கர்த்தர் என்னோடிருப்பாரானால், கர்த்தர் சொன்னபடி, அவர்களைத் துரத்திவிடுவேன்” (வச. 12) என்று காலேப் பதிலளிக்கிறார். 

வயது, வாழ்க்கையின் நிலை அல்லது சூழ்நிலை ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல், தேவனை முழுமனதோடு பற்றிகொள்ளும் யாவருக்கும் தேவன் உதவிசெய்ய வல்லவராயிருக்கிறார். நமக்கு உதவும் நம் இரட்சகராகிய இயேசுவில், தேவன் வெளிப்பட்டார். சுவிசேஷங்கள், கிறிஸ்துவிடத்திலிருந்து தேவன்மீது விசுவாசம் வைப்பதை நமக்கு போதிக்கிறது. உதவிக்காக தேவனை அண்டிய யாவருக்கும் தேவன் தன் அக்கறையையும் இரக்கத்தையும் வெளிப்படுத்துகிறார். எபிரெய நிருப ஆசிரியர் “கர்த்தர் எனக்குச் சகாயர், நான் பயப்படேன்” (எபிரெயர் 13:6) என்று அறிக்கையிடுகிறார். இளைஞரோ அல்லது வயதானவரோ, பலவீனமானவரோ அல்லது பலவானோ, கட்டுண்டவரோ அல்லது சுதந்திரவாளியோ, வேகமாக ஓடுகிறவரோ அல்லது முடவனோ, யாராக இருந்தாலும் இன்று அவருடைய உதவியைக் கேட்பதிலிருந்து நம்மைத் தடுப்பது எது?

 

கிறிஸ்துவில் ஐக்கிய பன்முகத்தன்மை

பேராசிரியர் டேனியல் போமன் ஜூனியர் தனது “சர்வீஸ் அன் தி ஸ்பெக்ட்ரம்” என்ற கட்டுரையில், ஓர் மனஇறுக்கம் கொண்ட நபராக தனது தேவாலயத்திற்கு எவ்வாறு சேவைசெய்வது என்பது குறித்த முடிவுகளை மேற்கொள்வதில் உள்ள சிரமத்தைப் பற்றி எழுதுகிறார். அவர் குறிப்பிடும்போது “இதுபோன்ற மனஇறுக்கம் கொண்ட மக்கள் ஒவ்வொரு முறையும் முன்னோக்கி செல்ல ஓர் புதிய பாதையை உருவாக்கவேண்டும். அவை ஓர் தனித்துவமான பாதையை அமைக்கிறது... மன, உணர்ச்சி மற்றும் உடல் ஆற்றல்... தனிமை/புத்துணர்வூட்டும் தருணங்கள்; உணர்வு உள்ளீடுகள் மற்றும் ஆறுதல் நிலை...அன்றைய நாள்பொழுது; நாம் நமது பெலனானவைகளுக்காக மதிக்கப்படுகிறோமா மற்றும் உணரப்பட்ட குறைபாடுகளுக்காக ஒதுக்கப்படாமல் நமது தேவைகளுக்கு இடமளிக்கப்படுகிறோமா இல்லையா என்று சிந்தித்தல்...; இன்னும் பற்பல காரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.” அதுபோன்ற தீர்மானங்கள் “மக்களின் நேரத்தையும் ஆற்றலையும் மாற்றியமைக்கும்போது, அவை மற்றவர்களையும் நம்மையும் மறுசீரமைக்க உதவும்” என்று போமன் எழுதுகிறார். 

1 கொரிந்தியர் 12இல் பவுல் விவரிக்கும் பரஸ்பர பார்வை ஓர் குணப்படுத்தும் தீர்வாக இருக்கும் என்று போமன் நம்புகிறார். அதில் 4-6 வசனங்களில், தேவன் தன் ஜனங்கள் ஒவ்வொருவருக்கும் வரங்களை “அவனவனுடைய பிரயோஜனத்திற்கென்று அளிக்கப்பட்டிருக்கிறது” (வச. 7) என்று குறிப்பிடுகிறார். ஒவ்வொருவரும் கிறிஸ்துவின் சரீரத்தில் இன்றியமையாத அவயங்கள் (வச. 22). திருச்சபை அனைவரையும் மாற்றமுடியாத ஒரே பாதையில் பயன்படுத்தாமல், அவரவருக்கு தேவன் கொடுத்த வரங்களின் அடிப்படையில் தேவனுடைய இராஜ்யத்திற்காய் அவற்றை நேர்த்தியாய் பிரயோகிக்க அனுமதிக்கலாம். 

இந்த வழியில், ஒவ்வொரு நபரும் செழிப்பையும் முழுமையையும் காண்பதோடு, கிறிஸ்துவின் சரீரத்தில் தங்கள் மதிப்புமிக்க இடத்தில் பாதுகாப்பாக இருக்க முடியும் (வச. 26).