ஆகஸ்ட், 2017 | நமது அனுதின மன்னா Tamil Our Daily Bread

Archives: ஆகஸ்ட் 2017

தேவனது பிரகாசிக்கும் அழகு!

ஆஸ்திரேலியா நாட்டின் கிழக்குக் கடற்கரைக்கு அப்பாலுள்ள லார்ட் ஹோவே தீவு வெண்மை நிறமணலும் தெளிந்த தண்ணீரும் உள்ள ஒரு சிறிய அழகிய இடம். அத்தீவின் அழகு என்னை மிகவும் கவர்ந்தது. இத்தீவில் மிகவும் சாதாரணமாக நீங்கள் கடல் ஆமைகளோடும் மீன்களோடும் பயமின்றி நீந்தலாம். உங்களருகே பெரிய எலும்பையுடைய மூன் இராஸே மீன்கள் தங்களது ஒளிரும் வண்ணங்களை வெளிப்படுத்தி விளம்பரப் பலகைகளை போலத் தோற்றமளிக்கும். அந்தக் கடலில் காயல் பகுதிகளில் பவளப்பாறைகளை நான் கண்டுபிடித்தேன். அங்கே சிவப்பு நிற க்ளவுன் மீன்களையும் மஞ்சள் கட்டங்கள் நிறைந்த வண்ணத்துப்பூச்சி மீன்களையும் என் கைகளால் தொட்டுப் பார்த்தேன். அவ்வாறான இயற்கை மேன்மையினால் உள்ளம் கிளர்ந்தெழுந்து தேவனை ஆராதிக்காமல் இருக்க முடியவில்லை.

எனது இவ்வித உணர்ச்சியின் எழுச்சிக்கு அப்போஸ்தலனாகிய பவுல் காரணம் கூறுகிறார். மிகவும் உன்னதமான படைப்புகள் தேவனுடைய சுபாவத்தை சற்று நமக்கு வெளிப்படுத்துகின்றன (ரோம. 1:20) லார்ட் ஹோவே தீவின் அற்புதங்கள் தேவனுடைய வல்லமையையும் அழகையும் வெளிப்படுத்தின.

தீர்க்கதரிசியாகிய எசேக்கியேல் தேவனை தரிசித்தபோது, நீலரத்தினம் போல விளங்கும் ஒரு சிங்காசனத்தில் மகிமையான வண்ணங்களால் சூழப்பட்ட ஒருவர் அவருக்குக் காணப்பட்டார் (எசே. 1:25-28). அப்போஸ்தலனாகிய யோவான் இது போன்ற ஒரு காட்சியைக் கண்டார். மரகதம் போன்ற வானவில்லால் சூழப்பட்ட விலையேறப் பெற்ற கற்களைப் போல ஜொலிக்கும் தேவனை அவர் கண்டார் (வெளி. 4:2-3). தேவன் தம்மை வெளிப்படுத்தும்போது அவர் நல்லவராகவும் வல்லமை மிக்கவராகவும் மட்டுமல்ல, அழகானவராகவும் வெளிப்படுகிறார். ஒரு சிற்பமானது அதை செய்தவரை பிரதிபலிப்பதைப்போல, சிருஷ்டியானது தேவனின் இந்த அழகை எடுத்துரைக்கிறது.      

தேவனுக்குப் பதிலாக இயற்கையை பல இடங்களில் மனிதர் தொழுதுகொள்ளுகிறார்கள் (ரோம. 1:25). இது மிகவும் துக்ககரமானது! பூமியின் தெளிவான தண்ணீர்களும் மினுமினுக்கும் உயிரினங்களும் அவற்றுக்குப் பின்னாலுள்ள கடவுளை நமக்கு சுட்டிக் காட்டுகின்றன. இந்த உலகிலுள்ள எல்லாவற்றையும்விட அதிக வல்லமையுள்ளவர், அதிக அழகுள்ளவர் அவர் மட்டுமே!

சுத்தமாக்கப்பட்டோம்!

பாத்திரம் கழுவும் மெஷினை நான் திறந்தபோது என்ன நடந்ததென்றே தெரியவில்லை. பளபளக்கும் பாத்திரங்களைக் காண்பதற்குப் பதிலாக, சாக்பீஸ் பொடி போன்ற ஒன்றால் மூடப்பட்ட பாத்திரங்களையும் கோப்பைகளையும் நான் அங்கிருந்து அகற்றினேன். எங்கள் பகுதியிலுள்ள கடின நீர் இப்படி கேடு விளைவித்தோ அல்லது அந்த இயந்திரம் பழுதாகி விட்டதா என திகைத்தேன்.

அந்தக் கெட்டுப்போன பாத்திரம் கழுவும் இயந்திரத்தைப் போலல்லாது, தேவன் நமது அனைத்து அசுத்தங்களையும் சுத்திகரிக்கிறார். எசேக்கியேல் தேவனுடைய அன்பு மற்றும் மன்னிக்கும் செய்தியைப் பகிர்ந்து கொண்டபோது, தேவன் தமது மக்களைத் திரும்பவும் தம்மிடம் வரவழைப்பதை எசேக்கியேலின் புத்தகத்தில் காண்கிறோம். தங்களது ஐக்கியத்தை மற்ற தேவர்களோடும் பிற நாடுகளோடும் பிரகடனப்படுத்திய இஸ்ரவேலர் இப்படி தேவனுக்கு விரோதமாகப் பாவஞ்செய்தனர். என்றபோதிலும், அவர்களைத் தம்மிடம் வரவழைப்பதில் தேவன் கிருபையாய் இருந்தார். அவர், “உங்களுடைய எல்லா அசுத்தங்களையும்… எல்லா நரகலான விக்கிரகங்களையும் நீக்கி, உங்களைச் சுத்தமாக்குவேன்” (36:25) என வாக்குத்தத்தம் செய்தார். அவர்கள் உள்ளத்திலே அவர் தமது ஆவியானவரை வைத்தார் (வச. 27). அவர்களைப் பஞ்ச நாட்டிற்கல்ல, செழிப்பான தேசத்துக்கு அவர் கொண்டுவருவார் (வச. 30).

எசேக்கியேலின் காலத்தைப் போலவே, நாம் வழி தப்பிப் போயிருப்போமானால் நம்மைத் திரும்பவும் தம்மண்டைக்கு அவர் வரவேற்கிறார். அவரது வழிகளுக்கும் அவரது சித்தத்திற்கும் நம்மை ஒப்புக்கொடுக்கும்போது, நமது பாவங்களிலிருந்து நம்மை அவர் கழுவி நம்மை மறுரூபப்படுத்துகிறார். நமக்குள் வாசம் செய்யும் பரிசுத்த ஆவியானவர் மூலம், ஒவ்வொரு நாளும் அவரைப் பின்பற்ற அவர் நமக்கு உதவி செய்கிறார்.

நிரம்பி வழியும் கனி!

இளவேனிற்காலம் மற்றும் கோடையில் எங்களது அண்டைவீட்டுக்காரரின் பின்புறத் தோட்டத்தில் பழங்கள் வளர்வதை நான் ஆர்வத்தோடு பாப்பதுண்டு. அங்கு பயிரிடப்பட்ட திராட்சையின் கொடிகள் எங்களிருவரது வீடுகளுக்கிடையிலான பொது வேலியில் படர்ந்து, திராட்சக்குலைகள் அதில் தொங்கும். நாங்கள் பறிக்கின்ற உயரத்தில், பெரிய செழுமையான பிளம் பழங்களும், ஆரஞ்சுகளும் கிளைகளில் கொத்தாக தொங்கும்.

நாங்கள் நிலத்தைக் கொத்தி, விதைத்து, களை எடுத்து தண்ணீர் பாய்ச்சாவிட்டாலும் எங்களது அண்டை வீட்டுக்காரர் விளைச்சலில் ஒரு பங்கை எங்கலோடு பகிர்ந்து கொள்ளுகின்றார். பயிரை வளர்க்கும் பொறுப்பை அவர்கள் எடுத்துக் கொண்டு அறுவடையில் ஒரு பாகத்தில் நாங்கள் களிக்க எங்களை அனுமதிக்கின்றனர்.

எங்களது வேலிக்கு அந்தப் புறத்திலுள்ள மரங்கள் மற்றும் செடிகளின் விளைச்சலானது, தேவன் என் வாழ்க்கையில் வைக்கும் இன்னொரு அறுவடையை நினைவுபடுத்துகிறது. அது எனக்கும் என் வாழ்க்கையில் தேவன் கொண்டுவரும் மக்களுக்கும் பயனளிக்கிறது. அது ஆவியின் கனி மற்றும் அறுவடை!

பரிசுத்த ஆவியானவரின் வல்லமையால் வாழ்கின்ற வாழ்வில் பயன்களை சுதந்தரிக்கும்படி கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்கள் பணிக்கப்பட்டுள்ளனர். நமது இதயங்களில் தேவனுடைய உண்மையின் விதைகள் செழிப்பாக வளருகையில், அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம் இச்சையடக்கம் போன்றவற்றை வெளிப்படுவதில் நமது திராணியைப் பெருக்கும் ஆற்றலை ஆவியானவர் உருவாக்குகிறார் (கலா. 5:22-23).

நமது வாழ்வை இயேசுவானவருக்கு அர்ப்பணிக்கும்போது, இனி ஒருபோதும் நமது சுயம் சார்ந்த மாம்ச இச்சைகளால் நாம் கட்டுப்படுத்தப்படுவதில்லை (வச. 24). காலப்போக்கில் பரிசுத்த ஆவியானவர் நமது சிந்தனையையும், நமது நடவடிக்கைகளையும் நமது செயல்களையும் மாற்றுவார். கிறிஸ்துவில் நாம் வளர்ந்து முதிர்ச்சியடையும்போது, அவரது தாராளமான விளைச்சலின் பலனை நமது அண்டை அயலகத்தாரோடு பகிர்ந்துகொள்ளும் சந்தோஷத்தை நாம் பெற்றுக்கொள்ளுவோம்.

கவனத்தில் கொள்தல்!

ஜான் நியூட்டன் இவ்வாறு எழுதினார், “நான் வீட்டிற்கு போகும் வழியில் 50 காசை தொலைத்துவிட்ட ஒரு பிள்ளையை சந்திக்கிறேன். இன்னொரு 50 காசு நாணயத்தை அப்பிள்ளையிடம் கொடுப்பதன் மூலம் அதன் கண்ணீரை நான் துடைக்கக் கூடுமானால் நான் ஒரு நன்மை செய்துவிட்டதாக உணருகிறேன். பெரிய காரியங்களைச் செய்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். ஆயினும் இது போன்ற சிறிய காரியங்களை நான் அசட்டை செய்யக்கூடாது!”

இன்றைய உலகில் ஆறுதலைத் தேடி அலைவோர் எங்கும் உள்ளனர்: ஒரு பலசரக்குக் கடையின் காசாளர் தனது குடும்பப் பொருளாதார நெருக்கடியினிமித்தம் இரண்டாம் வேலையைச் செய்ய வேண்டியுள்ளது; சொந்த வீட்டிற்குத் திரும்ப வாஞ்சிக்கும் ஒரு அகதி; வாழ்வில் நம்பிக்கையை முற்றிலும் இழந்து கவலைப்படும் ஒரு கணவனற்ற தாய்; தான் பயனற்றவனாய் வாழ்கிறேனா என அஞ்சிடும் ஒரு தனிமையான முதியவர்.

ஆனால், நாம் செய்ய வேண்டியது என்ன? சிறுமைப்பட்டவன் மேல் சிந்தையுள்ளவன் பாக்கியவான்” என்று தாவீது எழுதினார் (சங். 41:1) நாம் வாழ்வில் சந்திக்கின்றவர்களின் வறுமையை ஒழிக்க நம்மால் கூடாததென்றாலும், நாம் அவர்களைக் குறித்து கரிசனை கொள்ளலாம். “கவனம் செலுத்துங்கல்” நாம் மனிதர் மேல் அக்கறை கொள்வதை அவர்கள் அறிந்திடச் செய்யலாம். தேவையிலிருப்போரை சமாளிப்பது கடினமென்றாலும் அவர்களைப் பட்சமாகவும் மரியாதையாகவும் நாம் நடத்தலாம். அவர்களது வாழ்வின் கதைகளை ஆர்வத்தோடு கேட்கலாம். அவர்களுக்காக, அவர்களோடு சேர்ந்து நாம் ஜெபிக்கலாம். அதுவே எல்லாவற்றைக் காட்டிலும் மேலான உதவியானது, குணமாக்க வல்லது.

இயேசுவானவரின் அந்தப் புராதனமான முரண்பாடாய்த் தோன்றும் வார்த்தைகளை நினைவு கூருங்கள்: “வாங்குகிறதைப் பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம்” (அப். 20:35) பிறரது தேவைகளைக் கவனத்தில் கொள்ளுவது பலனளிக்கவல்லது, ஏனென்றால் மற்றவர்களுக்காக நாம் செயல்படும்போது அது நமக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொண்டுவருகிறது. ஏழைகளின் மேல் சிந்தை கொள்ளுவோமாக!

தொடர்புடைய தலைப்புகள்

> odb

தேவன் பார்க்கிறார், புரிந்துகொள்கிறார், பாதுகாக்கிறார்

சில நேரங்களில், நாள்பட்ட வலி மற்றும் சோர்வுடன் வாழ்வது என்பது வீட்டில் தனிமைபடுத்தப்பட்டு தனக்கு யாருமில்லை என்ற உணர்வை ஏற்படுத்திவிடுகிறது. தேவனோ அல்லது மற்றவர்களோ என்னை பார்க்கவில்லை என்பதை நான் உணர்ந்தேன். எனது நாயுடன் அதிகாலையில் நான் ஜெபநடை ஏறெடுக்கும்போது, இதுபோன்ற உணர்வுகள் என்னை வெகுவாய் பாதித்தது. தூரத்தில் காற்று நிரப்பப்பட்ட பெரிய பலூன் பறந்து சென்றுகொண்டிருந்ததைப் பார்த்தேன். அதில் பயணம் செய்யும் நபர்கள் பூமியை உயரத்திலிருந்து பார்த்து ரசிக்கமுடியும். நான் என் அயலவர்களின் வீடுகளை நடந்து கடந்தபோது, பெருமூச்சு விட்டேன். அந்த மூடிய கதவுகளுக்குப் பின்னால் எத்தனை பேர் கண்ணுக்குத் தெரியாதவர்களாகவும் முக்கியமற்றவர்களாகவும் உணர்கிறார்கள்? நான் என் நடைப்பயணத்தை முடித்தவுடன், நான் அவர்களைப் பார்க்கிறேன், அவர்களைக் கவனித்துக்கொள்கிறேன் என்பதை என் அண்டை வீட்டாருக்குத் தெரியப்படுத்த எனக்கு வாய்ப்புகளைத் தரும்படி தேவனிடம் கேட்டேன். அவரும் அப்படித்தான். 
தேவன் எத்தனை நட்சத்திரங்களைப் படைத்தார் என்னும் தொகை அவருக்கு தெரியும். ஒவ்வொரு நட்சத்திரங்களையும் அவர் பேர்சொல்லி அழைப்பது (சங்கீதம் 147:5), சிறு விஷயங்களுக்கும் அவர் கொடுக்கும் முக்கியத்துவத்தைக் காண்பிக்கிறது. அவருடைய வல்லமை, ஞானம், பகுத்தறிவு ஆகியவைகள் காலவரம்பற்றவைகள் (வச. 5). 
தேவன் ஒவ்வொரு அவிசுவாசத்தின் அழுகையையும் கேட்கிறார்; ஒவ்வொரு அமைதியான கண்ணீரையும் அவர் தெளிவாகக் காண்கிறார். ஒவ்வொரு திருப்தி பெருமூச்சையும் அவர் அறிந்திருக்கிறார். நாம் எப்போது தடுமாறுகிறோம், எப்போது வெற்றிபெறுகிறோம் என்பதை அவர் பார்க்கிறார். நம்முடைய ஆழ்ந்த அச்சங்களையும், நமது உள்ளார்ந்த எண்ணங்களையும், நம்முடைய பயங்கரமான கனவுகளையும் அவர் புரிந்துகொள்கிறார். நாம் எங்கு இருந்தோம், எங்கு செல்கிறோம் என்பது அவருக்குத் தெரியும். நம் அண்டை வீட்டாரைப் பார்க்கவும், கேட்கவும், நேசிக்கவும் தேவன் நமக்கு உதவுவதால், நம்மைப் பார்க்கவும், புரிந்து கொள்ளவும், கவனித்துக் கொள்ளவும் அவரை முழுமையாய் நம்பலாம். 

களவுபோன தெய்வங்கள்

மரத்தால் செய்யப்பட்ட ஒரு குலதெய்வ விக்கிரகத்தைக் காணவில்லை என்று ஒரு பெண் அதிகாரிகளிடம் புகார் அளித்தாள். அவர்கள் அந்த விக்கிரகத்தைக் கண்டுபிடித்துவிட்டதாக எண்ணி, அடையாளம் காண்பிப்பதற்காக அவளை வரச்சொன்னார்கள். இது உங்களுடைய குலதெய்வமா? என்று அவளைக் கேட்க, அவள் வருத்தத்துடன் “இல்லை, என்னுடைய தெய்வம் இதைக்காட்டிலும் பெரியதும் அழகானதுமாய் இருக்கும்” என்று பதிலளித்தாளாம்.  
மக்கள் அவர்களுடைய கரங்களால் செய்யப்படும் தெய்வங்கள் அவர்களை பாதுகாக்கும் என்று நம்பி அவர்கள் விரும்பின வடிவத்தை அதற்கு கொடுக்கிறார்கள். அதினால் தான் யாக்கோபின் மனைவி ராகேல், லாபானிடத்திலிருந்து மறைமுகமாய் புறப்பட்டபோது “தன் தகப்பனுடைய சுரூபங்களைத் திருடிக்கொண்டாள்” (ஆதியாகமம் 31:19) என்று வேதம் சொல்லுகிறது. ஆனாலும் அந்த சுரூபங்களுக்கு மத்தியில் தேவன் யாக்கோபை பாதுகாத்தார் (வச. 34).  
யாக்கோபுடைய பயணத்தில் யாக்கோபு இரவு முழுவதும் ஒரு மனிதனோடு போராடுகிறான் (32:24). அந்த மனிதன் சாதாரண மனுஷீகத்திற்கு உட்பட்டவன் இல்லை என்பதை யாக்கோபு அறிந்ததினால் தான் “நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மைப் போகவிடேன்” (வச. 26) என்று சொல்லுகிறான். அந்த மனிதன் இவனுடைய பெயரை இஸ்ரவேல் (“தேவன் யுத்தம்செய்கிறார்”) என்று மாற்றி ஆசீர்வதிக்கிறார் (வச. 28-29). “நான் தேவனை முகமுகமாய்க் கண்டேன், உயிர் தப்பிப் பிழைத்தேன் என்று சொல்லி, அந்த ஸ்தலத்துக்கு பெனியேல்” (வச. 30) என்று யாக்கோபு பேரிட்டான். 
இந்த தேவனே ஒருவரால் கற்பனை செய்து பார்க்கமுடியாத அளவிற்கு பெரியவரும் அழகானவருமாகிய தேவன். அவரை செதுக்கவோ, திருடவோ, மறைக்கவோ முடியாது. ஆனாலும், அன்றிரவு யாக்கோபு கற்றுக்கொண்டபடி, நாம் அந்த தேவனை அணுகலாம்! இந்த தேவனை “பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே” என்று அழைக்க இயேசு தம் சீஷர்களுக்குக் கற்றுக் கொடுத்தார் (மத்தேயு 6:9). 

தேவனால் அறியப்படுதல்

தத்தெடுப்பின் மூலம் பிரிந்த இரட்டைக் குழந்தைகள் இருபது ஆண்களுக்குப் பின் இணைவதற்கு மரபணு பரிசோதனை உதவியது. அதில் ஒருவனான கீரோன் வின்சென்ட்டுக்கு குறுஞ்செய்தி அனுப்பியபோது, அவன் “இது யார் புதிய நபராய் இருக்கிறதே?” என்று யோசித்தான். அவன் பிறக்கும்போது அவனுக்கு வைத்த பெயர் என்ன என்று கீரோன் கேட்டபோது, வின்சென்ட் “டைலர்” என்று பதிலளித்தான். அப்போது அவர்கள் இருவரும் சகோதரர்கள் என்பதை அறிந்துகொண்டனர். அவன் தன்னுடைய பெயரினால் அறியப்பட்டான்! 
உயிர்த்தெழுதல் சம்பவத்தில் பெயர் எவ்வளவு முக்கிய பங்காற்றுகிறது என்பதை பாருங்கள். மகதலேனா மரியாள் கல்லறையினிடத்திற்கு வந்து, இயேசுவின் சரீரத்தைக் காணாமல் அழுகிறாள். “ஸ்திரீயே, ஏன் அழுகிறாய்?” (யோவான் 20:15) என்று இயேசு கேட்கிறார். தன்னை கேள்வி கேட்பது யார் என்பதை அவர் “மரியாளே” என்று அழைக்கும் வரைக்கும் மரியாள் அறியாதிருந்தாள் (வச. 16).    
அவர் சொல்லுவதைக் கேட்ட மாத்திரத்தில் அவள் கண்ணீர் சிந்தி, “ரபூனி” (ஆசிரியர் என்று அர்த்தம்) என்று அரமாயிக் மொழியில் அழைத்தாள் (வச. 16). நம் உயிர்த்தெழுந்த கிறிஸ்து அனைவருக்காகவும் மரணத்தை வென்று, நம் ஒவ்வொருவரையும் அவருடைய பிள்ளைகளாக ஏற்றுக்கொண்டதை உணர்ந்து, உயிர்த்தெழுதல் பண்டிகையில் கிறிஸ்தவர்கள் வெளிப்படுத்தும் மகிழ்ச்சிக்கு ஒப்பாக அவளுடைய மகிழ்ச்சி இருந்தது. அவர் மரியாளிடத்தில், “நான் என் பிதாவினிடத்திற்கும் உங்கள் பிதாவினிடத்திற்கும், என் தேவனிடத்திற்கும் உங்கள் தேவனிடத்திற்கும் ஏறிப்போகிறேன்” (வச. 17) என்று சொல்லுகிறார்.  
ஜியார்ஜியாவில் இரண்டு சகோதரர்கள் தங்கள் பெயர்களின் மூலம் மீண்டும் ஒன்று சேர்ந்து ஒரு புதிய உறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டுசெல்ல தீர்மானித்தனர். உயிர்த்தெழுதல் நாளின்போது, இயேசுவால் அறியப்பட்டவர்களுக்கு அவருடைய தியாகமான அன்பை காண்பிக்கும்பொருட்டு அவர் மேற்கொண்ட பெரிய முயற்சிக்காய் அவரை நாம் மகிமைப்படுத்துகிறோம். அந்த தியாயம் உனக்காகவும் எனக்காகவும் செய்யப்பட்டது. அவர் உயிரோடிருக்கிறார்.