Archives: நவம்பர் 2016

உங்களுடைய மதிப்பு என்ன?

கி.மு. 75ல் ஜூலியஸ் சீஸர் என்ற இளம் ரோம பிரபுவை கடற்கொள்ளையர்கள் பணத்திற்காகக் கடத்திச் சென்றதாக ஒரு கதை சொல்வார்கள். அவனை விடுவிக்க பணமாக 20 தாலந்து வெள்ளியைக் கேட்டனர். (இன்றைய மதிப்பு 6,00,000 அமெரிக்கா டாலர்களாகும்). இந்த தொகையை கேட்டபொழுது சீஸர் நகைத்து மீட்பு பணத்தை 50 தாலந்துகளாக உயர்த்தும்படிக் கூறினான். ஏனெனில் அவன் 20 தாலந்துகளுக்கு மேலாக விலையேறப்பட்டவன் என்பதை அவன் நன்கு உணர்ந்திருந்தான். அவர்களோ அவன் யார் என்பதை அறிந்திருக்கவில்லை.

சீஸர் கர்வத்துடன் தன் மதிப்பை பணத்தினால் நிர்ணயித்து கொண்டதற்கும், தேவன் நம் ஒவ்வொருவர் மேலும் வைத்துள்ள மதிப்பிற்கும் எத்தனை பெரிய வித்தியாசம்! நம்முடைய மதிப்பை பணத்தினால் அளந்து விட முடியாது. நமது பரம பிதா நமக்காக என்ன செய்தார் என்பதே நமது மதிப்பை காட்டுகின்றது.

என்ன விலைக் கிரயம் செலுத்தி நம்மை இரட்சித்தார்? தம்முடைய ஒரே பேறான குமாரனை சிலுவையில் ஜீவ பலியாக ஒப்புக்கொடுத்தார். பாவங்களில் இருந்து மீட்க பிதாவாகிய தேவன் விலைக்கிரயம் செலுத்தினார். “உங்கள் முன்னோர்களால் பாரம்பரியமாய் நீங்கள் அநுசரித்துவந்த வீணான நடத்தையினின்று அழிவுள்ள வஸ்துக்களாகிய வெள்ளியினாலும் பொன்னினாலும் மீட்கப்படாமல், குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே” (1 பேது. 1:18-19).

தேவன் நம்மேல் வைத்த அளவற்ற அன்பினால் தம்முடைய ஒரே குமாரனை சிலுவை மரணத்திற்கு ஒப்புக் கொடுத்துக் குமாரனின் இரத்தத்தையே நமக்கு விலைக் கிரயமாக செலுத்தி நம்மை மீட்டுக் கொண்டு, மரணத்தை மேற்கொண்டு உயிர்த்தெழுந்தார். அந்த அளவிற்கு நீங்கள் அவரில் விலையேறப் பெற்றவர்கள்.

நான் ஐசுவரியவான்!

நீங்கள் இந்தக் காட்சியை டிவி விளம்பரத்தில் பார்த்திருக்கலாம். கதவு தட்டும் சத்தம் கேட்டு ஒருவர் கதவை திறப்பார். வெளியில் இருந்து ஓர் மனிதர் உள்ளே வந்து, மிகப் பெரிய தொகை எழுதப்பட்டிருக்கும் ஓர் காசோலையை கொடுப்பார். அதைப் பெற்றுக்கொண்ட மனிதர் ஆடிப்பாடி, குதித்து, மகிழ்ந்து காண்பவர் எல்லோரையும் கட்டி அணைப்பார். “நான் வெற்றி பெற்றுவிட்டேன்! நான் பணக்காரனாகிவிட்டேன்! என்னால் இதை நம்பமுடியவில்லை. என் கஷ்டமெல்லாம் தீர்ந்துவிட்டது!” என்று குதூகலிப்பார். திடீரென செல்வம் நம்மை தேடி வந்தால் நாம் இப்படித் தான் கட்டுக்கடங்கா உணர்ச்சிகளை வெளிப்படுத்துவோம்.

வேதாகமத்தில் மிகவும் நீளமான அதிகாரமாகிய சங்கீதம் 119ல் ஓர் அற்புதமான வசனத்தை காணலாம். “திரளான செல்வத்தில் களிகூருவதுபோல, நான் உமது சாட்சிகளின் வழியில் களிகூருகிறேன்” (வச. 14). என்ன அருமையான ஒரு ஒப்பிடுதல்! பெரும் அதிர்ஷ்டத்தை பெற்றுக் கொள்ளும் பொழுது, நாம் குதூகலிப்பது போல் தேவனுடைய வார்த்தைகளுக்கு கீழ்ப்படிந்து நாம் வாழும் பொழுதும் ஆனந்தக் களிப்படைய முடியும்! 16ஆம் வசனத்திலும் இதையே திருப்பி சொல்கிறார். கர்த்தர் கொடுத்த கட்டளைகளுக்காய் நன்றியுள்ள இருதயத்துடன் தன் மகிழ்ச்சியை தெரிவிக்கிறார் சங்கீதக்காரன். “உமது பிரமாணங்களில் மனமகிழ்ச்சியாயிருக்கிறேன்; உமது வசனத்தை மறவேன்”.

ஆனால், பொக்கிஷத்தைப் பெற்றுக்கொள்ளும்போது ஏற்படும் சந்தோஷத்தைப் போல, தேவனுடைய கட்டளைகளை பெற்றுக்கொள்ளும்பொழுதும் அதே உணர்வுடன் நாம் இல்லாவிட்டால்? தேவனுடைய கட்டளைகள் பொக்கிஷத்தைப் போல எப்படி சந்தோஷப்படுத்தும்? அது யாவும் நன்றியுள்ள இருதயத்தில் தான் தொடங்கும். அப்படிப்பட்ட குணாதிசயத்தை நாம்தான் தீர்மானிக்க வேண்டும். நாம் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ அதன்மேல் தான் நாம் கவனம் செலுத்துவோம். எப்பொழுது தேவனுடைய ஈவுகளுக்காய் நன்றி செலுத்த ஆரம்பிக்கிறோமோ, அப்பொழுதே நம் ஆத்துமாக்கள் பெலனடைய ஆரம்பித்து விடும். அவரது ஜீவ வார்த்தையாகிய களஞ்சியத்தலிருந்து ஞானம், அறிவு மற்றும் சமாதானத்தை காண வேண்டிக்கொள்வோம்.

ஒவ்வொரு நாளும், நாம் இயேசுவை அதிகமாக நேசிக்கும் பொழுது, நிச்சயமாக நாம் ஐஸ்வரியவான்கள் தான்.

அழகானது

இரண்டு வாலிபப் பெண்களை உங்கள் மனதில் நினைத்துக் கொள்ளுங்கள். முதல் பெண் நல்ல பெலத்தோடும், ஆரோக்கியத்தோடும் இருக்கிறாள். மற்றொரு பெண்ணோ சக்கர நாற்காலியில் அமர்ந்து சுதந்திரமாக சுற்றித் திரிந்து செயல் பட முடியாத நிலையில் கட்டுண்டிருக்கிறாள். அந்த சக்கர நாற்காலியில் இருப்பதால் பல மனப் போராட்டங்களையும் உடலில் வலிகளையும், வேதனைகளையும் அடைகிறாள்.

ஆனால் அந்த அழகான இரு பெண்களும் சேர்ந்து இருக்கும் பொழுது ஆனந்தமாக சிரித்து மகிழ்ந்து ஒருவரில் ஒருவர் அன்புகூர்ந்து அவர்களுக்குள் அமைந்த விலையேறப்பெற்ற நட்பை பார்த்தனர்.

இயேசுவும் கூட சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்கும் அந்த பெண்ணை போன்ற மனிதர்கள் மேல் அதிக கவனத்தையும், நேரத்தையும் செலவிட்டார். வாழ்நாள் முழுவதும் உடற் சுகவீனத்தால் கஷ்டப்படுவர் மீதும், உடல் குறைபாடுகள் உள்ளவர் மீதும், சமுதாயத்தின் ஒடுக்கப்பட்ட மக்கள் மீதும் இயேசு அதிக கவனம் செலுத்தினார். மதத் தலைவர்களால் அலட்சியம் செய்யப்பட்ட ஒரு பெண் அவர் மீது எண்ணெய் பூசிய பொழுது அதை அங்கீகரித்து வரவேற்றார் (லூக்:7:39). மற்றொரு சமயத்தில், வேறொரு பெண் அதைப் போலவே செய்த பொழுது அவளது செயலை பலரும் இகழ்ந்து பேசி விமர்சித்தனர். அப்பொழுது இயேசு, “அவளை விட்டுவிடுங்கள்.......... என்னிடத்தில் நற்கிரியையைச் செய்திருக்கிறாள்” (மாற். 14:6) என்றார்.

தேவன் எல்லோரையும் சமமாக மதிப்பிடுகிறார். அவரது கண்களில் ஏற்றதாழ்வுகள் இல்லை. உண்மையில் நமக்கெல்லாம் கிறிஸ்துவின் அன்பும், மன்னிப்பும் தேவை. நம் மீது இருக்கும் எல்லையற்ற அன்பினால் சிலுவை மரணத்தை ஏற்றுக்கொண்டார்.

எல்லோரையும் தேவசாயலில் படைக்கப்பட்டவராகவும், அவரது அன்பிற்கு பாத்திரவான்களாகவும் இயேசு பார்ப்பது போல நாம் அனைவரையும் பார்க்கக் கடவோம். ஆகவே நாம் கிறிஸ்துவைப் போல் எல்லோரையும் சமமாக பாவித்து அவரைப் போலவே பிறரது அழகைக் காண அறிந்து கொள்ள வேண்டும்.

சிவப்பு தூண்டில்

சில வருடங்களுக்கு முன்பதாக ஏதேச்சையாக இரண்டாம் நாற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க எழுத்தாளரான ஏலியனின் (Aelian) மீன் பிடிக்கும் கதையை வாசிக்க நேர்ந்தது. அது ஓர் மீனவ நாட்டுப்புற கதையாகும். “பொரோக்காவிற்கும் தெசலோனிக்காவிற்கும் இடையே ஓர் ஆறு உள்ளது. அதன் பெயர் ஆஸ்ட்ரகஸ். அதில் நிறைய புள்ளிகளுள்ள ட்ரவுட் (Trout) மீன்கள் உள்ளன”. மேலும் அவற்றை எப்படி அந்த மக்கள் பிடிப்பார் என்பதை விவரித்திருந்தார். “ஒவ்வொரு மீனுக்கும் ஒரு பொறியைத் தயாரித்து, கருஞ்சிவப்பு நிற கம்பளி நூலை ஓர் கொக்கியில் மாட்டி, அதில் இரண்டு பறவையின் இறகுகளையும் சேர்த்து, பின் அந்த பொறியை தண்ணீரில் தூக்கி வீசுவர். சிவப்பு வண்ணத்தினால் கவரப்பட்ட மீன் அருகில் வந்து, தீனியை தின்பதற்கு அதைக் கவ்வும்” (On the Nature of Animals).

இதே தந்திரத்தை தான் மீனவர் இன்றும் பயன்படுத்துகின்றனர். இதற்கு பேர் தான் ரெட் ஆக்கிள் (சிவப்பு தூண்டில்). முதன் முதலில் 2200 ஆண்டுகளுக்கு முன்னர் இதை பயன்படுத்தினர். இன்றும் கூட நேர்த்தியாய் மீன்களைப் பிடிக்க இந்த தூண்டில்கள் உதவுகின்றன.

இந்தப் பழங்கதையை படித்தவுடன் ஓர் எண்ணம் தோன்றியது. பழைய காரியங்கள் எல்லாம் காலம் கடந்து விட்ட, ஒன்றுக்கும் உதவாத, கட்டுக்கதைகள் அல்ல – முக்கியமாக மனிதர்கள். முதுமையில் மன நிறைவுடனும், சந்தோஷத்துடனும் வலம் வந்து, நாம் தேவனை ஆழமாக அறியும் அறிவையும், நிறைவையும் எடுத்துரைத்து வாழ்ந்து வந்தால், நமது முதுமையிலும் நாம் பலருக்கு மிகவும் பயனுள்ளவராய் இருப்போம். முதுமைக் காலத்தில் குறையும் ஆரோக்கியத்தையும் கடந்த காலத்தையும் பற்றி கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. அது அமைதியும், மகிழ்ச்சியும், தைரியமும் கனிவும் நிறைந்த அற்புத கால கட்டமாக இருக்கலாம்; தேவனோடு நடந்து, வாழ்ந்து, வளர்ந்தவர்கள் தங்கள் கனிகளை பிறர் சுவைக்க வெளிப்படுத்தும் அழகிய காலம் அது.

கர்த்தருடைய ஆலயத்திலே நாட்டப்பட்டவர்கள் எங்கள் தேவனுடைய பிராகாரங்களில் செழித்திருப்பார்கள்... அவர்கள் முதிர்வயதிலும் கனி தந்து, புஷ்டியும் பசுமையுமாயிருப்பார்கள்
(சங். 92:13-15).

தொடர்புடைய தலைப்புகள்

> odb

பூத்து குலுங்கும் பாலைவனம்

ஒரு நூற்றாண்டுக்கு முன்பு, எத்தியோப்பியாவில் சுமார் 40 சதவிகிதம் பசுமையான காடுகள் இருந்தது. ஆனால் தற்போது அது 4 சதவிகிதமாக மாறியுள்ளது. மரங்களைப் பாதுகாக்கத் தவறிய நிலையில், பயிர்களுக்கான பரப்பளவை அகற்றுவது சுற்றுச்சூழல் நெருக்கடிக்கு வழிவகுத்தது. மீதமுள்ள பச்சை நிறத்தில் உள்ள பெரும்பாலான பகுதிகள் திருச்சபைகளினால் பாதுகாக்கப்படுகின்றன. பல நூற்றாண்டுகளாக, உள்ளூர் எத்தியோப்பியன் ஆர்த்தடாக்ஸ் டெவாஹிடோ திருச்சபைகள் தரிசு பாலைவனத்தின் மத்தியில் இந்த சோலைகளை வளர்த்து வருகின்றன. நீங்கள் வான்வழிப் படங்களைப் பார்த்தால், பழுப்பு நிற மணலால் சூழப்பட்ட பசுமையான தீவுகளைக் காணலாம். திருச்சபை தலைவர்கள் தேவனுடைய படைப்பான மரங்களைப் பராமரிப்பது தேவனுக்கு கீழ்படிதலின் பிரதிபலிப்பு என்று தங்களை உக்கிராணக்காரர்களாய் கருதுகின்றனர். 

ஏசாயா தீர்க்கதரிசி, ஒரு வறண்ட பாலைவனத்தில் கொடூரமான வறட்சியினால் பாதிக்கப்பட்ட இஸ்ரவேல் மக்களுக்கு எழுதுகிறார். மேலும் ஏசாயா, “வனாந்தரமும் வறண்ட நிலமும் மகிழ்ந்து, கடுவெளி களித்து, புஷ்பத்தைப்போலச் செழிக்கும்” (ஏசாயா 35:1) என்று தேவன் அவர்களுக்காய் முன்குறித்திருக்கிற எதிர்காலத்தை உரைக்கிறார். தேவன் தன்னுடைய ஜனத்தை சுகமாக்க விரும்புகிறார். அவர் பூமியையும் சுகமாக்க விரும்புகிறார். தேவன், “புதிய வானத்தையும் புதிய பூமியையும்” (ஏசாயா 65:17) உண்டாக்குவார். தேவனுடைய புதுப்பிக்கப்பட்ட உலகத்தில், வனாந்திரம் “மிகுதியாய்ச் செழித்துப் பூரித்து ஆனந்தக்களிப்புடன் பாடும்” (35:2). 

தேவனுடைய படைப்பின் மீதும் மக்களின் மீதும் அவர் காண்பிக்கும் அக்கறையானது நம்மையும் அவ்வாறு செய்வதற்கு தூண்டுகிறது. அவருடைய படைப்புகளை பராமரிப்பதின் மூலம் முழு உலகத்தையும் குணமாக்கும் அவருடைய பிரதான திட்டத்தின் அங்கத்தினர்களாய் நாம் மாறக்கூடும். அனைத்து வனாந்திரங்களையும் பூத்துக் குலுங்கச்செய்யும் தேவனுடைய திட்டத்தில் நாமும் பங்காளர்களாய் மாறலாம். 

 

பார்ப்பதற்கு கண்கள்

பல ஆண்டுகளாக குடிப்பழக்கம் மற்றும் மனநலப் பிரச்னைகளால் போராடி வந்த தன் உறவினர் சாண்டிக்காக ஜாய் கவலைப்பட்டாள். அவள் சாண்டியின் அபார்ட்மெண்டிற்குச் சென்றபோது, கதவுகள் பூட்டப்பட்டிருந்தன. அது காலியாகத் தெரிந்தது. அவளும் மற்றவர்களும் சாண்டியைத் தேடத் திட்டமிட்டபோது, “தேவனே, நான் பார்க்காததைக் காண எனக்கு உதவுங்கள்” என்று ஜாய் ஜெபித்தாள். அவர்கள் அந்த வீட்டைவிட்டு வெளியேறும்போது, ஜாய் சாண்டியின் வீட்டைத் திரும்பிப் பார்த்தாள். அங்கிருந்த திரைச்சீலை அசைந்ததை அவள் பார்க்க நேரிட்டது. அந்த நேரத்தில், சாண்டி உயிருடன் இருப்பதை அவள் அறிந்தாள். அவளை அடைய அவசர உதவி தேவைப்பட்டாலும், இவ்விதமான ஜெபத்தை ஏறெடுத்ததற்காய் ஜாய் மகிழ்ச்சியடைந்தாள்.

எலிசா தீர்க்கதரிசி, தேவன் தன்னுடைய பராக்கிரமத்தை அவருக்கு வெளிப்படுத்திக் காண்பிக்கும்பொருட்டு விண்ணப்பிக்கிறார். சீரிய இராணுவம் அவர்களுடைய பட்டணத்தைச் சுற்றி வளைத்தபோது, எலிசாவின் வேலைக்காரன் பயத்தில் நடுங்கினான். இருப்பினும், அவன் தேவனுடைய மனுஷனாய் இல்லாதபோதிலும், தேவனுடைய உதவியினால் காணக்கூடாததை அவன் கண்டான். எலிசா தன்னுடைய வேலைக்காரன் காணவேண்டும் என்று ஜெபிக்க, “இதோ, எலிசாவைச்சுற்றிலும் அக்கினிமயமான குதிரைகளாலும் இரதங்களாலும் அந்த மலை நிறைந்திருக்கிறதை அவன் கண்டான்” (2 இராஜாக்கள் 6:17).

எலிசாவுக்கும் அவனுடைய வேலைக்காரனுக்கும், ஆவிக்குரிய மற்றும் மாம்ச வாழ்க்கைக்கு இடையே இருந்த திரையை தேவன் விலக்கிவிட்டார். திரைச்சீலையின் சிறிய மின்னலைக் காண தேவன் ஜாய்க்கு கிருபையளித்தார் என்று அவளும் நம்புகிறாள். நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்வதற்கான ஆவிக்குரிய தரிசனத்தைக் கொடுக்கும்படி நாமும் அவரிடம் விண்ணப்பிக்கலாம். நம் அன்புக்குரியவர்களுடனோ அல்லது நமது சமூகங்களிலோ, நாமும் அவருடைய அன்பு, உண்மை மற்றும் இரக்கத்தின் பிரதிநிதிகளாக திகழமுடியும்.

 

தேவன் கொடுத்த சுபாவம் மற்றும் வரங்கள்

பல ஆண்டுகளுக்கு முன்பு, நான் ஓர் கல்லூரி ஓய்வு விடுதிக்குச் சென்றேன், அங்கு எல்லோரும் ஆளுமைத் தேர்வைப் பற்றி பேசினர். சில ஆங்கில குறியீட்டு எண்களைச் சொல்லி, இது தான் தங்களுடைய ஆளுமை என்று சொல்லிக்கொண்டனர். நானும் விளையாட்டிற்காய், வாய்க்கு வந்த சில எழுத்துக்களைச் சொல்லி, இது தான் என்னுடைய ஆளுமை என்று கிண்டலடித்தேன். 

அப்போதிருந்து, மேயர்-பிரிக்ஸ் மதிப்பீடு எனப்படும் ஆளுமைத் தேர்வைப் பற்றி நான் நிறைய கற்றுக்கொண்டேன். அவைகள் நம்மையும் மற்றவர்களையும் புரிந்துகொள்வதற்கு உதவமுடியும் என்பதால், அதை கவர்ச்சிகரமானதாக நான் காண்கிறேன். நாம் அவற்றை அதிகமாய் பயன்படுத்த அவசியம் இல்லை எனினும், அவை நம்மை உருவாக்கி வளர்ப்பதற்கு தேவன் பயன்படுத்தும் ஓர் கருவியாய் நிச்சயமாய் இருக்கக்கூடும். 

நம் ஆளத்துவத்தை கண்டறியும் சோதனைகளை வேதம் வழங்கவில்லை. ஆனால் தேவனுடைய பார்வையில் ஒவ்வொரு நபரின் தனித்துவத்தையும் இது உறுதிப்படுத்துகிறது (சங்கீதம் 139:14-16; எரேமியா 1:5 ஐப் பார்க்கவும்). மேலும் சிறந்த ஆளத்துவத்தையும் வரங்களையும் தேவன் நமக்கு அருளிசெய்து அவருடைய இராஜ்யத்தில் மற்றவர்களுக்கு ஊழியம்செய்ய நம்மை ஊக்குவிக்கிறதையும் இது காண்பிக்கிறது. ரோமர் 12:6ல், பவுல், “நமக்கு அருளப்பட்ட கிருபையின்படியே நாம் வெவ்வேறான வரங்களுள்ளவர்களானபடியினாலே..” என்று இக்கருத்தை ஆமோதிக்கிறார். 

அந்த வரங்கள் நம்முடைய சுய ஆதாயத்திற்காக அல்லவென்றும், கிறிஸ்துவின் சரீரமான திருச்சபைக்கு ஊழியம் செய்யும் நோக்கத்தோடே நமக்கு அருளப்படுகிறது என்று பவுல் வலியுறுத்துகிறார் (வச. 5). இது நமக்குள் உள்ளும் புறம்பும் கிரியை நடப்பிக்கும் அவருடைய கிருபை மற்றும் நன்மையின் வெளிப்பாடாகும். தேவனுடைய ஊழியத்தின் பயன்படும் பாத்திரமாய் திகழுவதற்கு அவை நமக்கு அழைப்புவிடுக்கிறது.