எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

ஜேம்ஸ் பேங்க்ஸ்கட்டுரைகள்

இயேசுவின் அதிகாரம்

பல வருடங்களாக போதைப்பொருள் அடிமைத்தனத்திலிருந்த என் மகன் ஜியோப்பை இயேசு விடுவித்த பிறகும், எனக்கு இன்னும் சில கவலைகள் இருந்தது. நாங்கள் ஒன்றாக இருந்தாலும், அவனுடைய எதிர்காலத்தைவிட அவனுடைய கடினமான கடந்த காலத்தைக் குறித்து நான் அதிக கவலைப்பட்டேன். போதை பழக்கத்திற்கு அடிமையானவர்களின் பெற்றோர்கள் அவர்களை மீண்டும் மீண்டும் சரிசெய்யவேண்டிய அவலம் ஏற்படுகிறது. ஓர் குடும்பக் கூடுகையில் நான் ஜியோப்பை பிடித்து இழுத்து, அவனிடம், “நமக்கு ஒரு எதிரி இருக்கிறான். அவன் மிகவும் வலிமையானவன் என்பதை புரிந்துகொள்” என்றேன். அவனும் “எனக்கு தெரியும் அப்பா, அவனுக்கு வலிமை இருக்கிறது ஆனால் அதிகாரம் இல்லை” என்று பதிலளித்தான். 

அந்த தருணத்தில், நம்முடைய பாவங்களிலிருந்து நம்மை மீட்டு, அவரை நாடுகிறவர்களின் வாழ்க்கையை மறுரூபமாக்குகிற இயேசுவை நான் நினைவுகூர்ந்தேன். அவர் பரமேறி செல்வதற்கு முன்பு தன்னுடைய சீஷர்களைப் பார்த்து, “வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய்...” (மத்தேயு 28:18-19) என்று கொடுக்கப்பட்ட கட்டளையையும் நான் நினைவுகூர நேரிட்டது. 

சிலுவையில் அறையப்பட்டு உயிர்த்தெழுந்த இயேசு, நமது கடந்தகாலம் எப்படிப்பட்டதாக இருந்தாலும் நாம் அவரிடத்தில் வருவதற்கு வழி செய்துள்ளார். அவர் நமது கடந்த காலத்தையும் எதிர்காலத்தையும் தன் கையில் வைத்திருக்கிறார். அவர் எப்பொழுதும் நம்முடன் இருப்பார் என்று வாக்களிக்கப்பட்டிருப்பதால் (வச. 20), அவர் தம்முடைய நோக்கங்களை நிறைவேற்றுவார் என்றும், நம்முடைய ஜீவியம் அவரது பலத்த கரங்களில் உள்ளது என்றும் நாம் உறுதியாக நம்பலாம். நாம் பெற்றுக்கொள்ள முடியாத ஒரு நல்ல நம்பிக்கையை இயேசு நமக்கு தருகிறார். பிசாசும் உலகமும் தற்காலிகமான இவ்வுலகத்தில் சில வல்லமைகளைக் கொண்டு செயலாற்றலாம். ஆனால் “சகல அதிகாரமும்” என்றென்றும் இயேசுவுக்கே சொந்தமானது. 

 

துதியின் பள்ளத்தாக்கு

கவிஞர் வில்லியம் கௌபர் தனது வாழ்நாளின் பெரும்பகுதியினை மன அழுத்தத்துடனே போராடினார். தற்கொலை முயற்சிக்குப் பிறகு, அவர் ஓர் புகலிடத்திற்கு அனுப்பப்பட்டார். ஆனால் ஓர் கிறிஸ்தவ மருத்துவரின் கனிவான கவனிப்பின் மூலம், இயேசுவின் மீது ஆழமான ஒரு விசுவாசத்தை நடைமுறைப்படுத்தினார். அதன் விளைவாக கௌபர் போதகருடனும் பாடலாசிரியர் ஜான் நியூட்டனுடன் பழக்கம் ஏற்பட்டு, தங்கள் திருச்சபையில் பாடப்பெறுகிற பாடல்களை எழுதுவதற்கு அவரை ஊக்குவித்தனர். அவர் எழுதிய பாடல்களில் ஒன்று, “தேவன் ஆச்சரியமான வழிகளில் கிரியை செய்கிறார்” என்ற பிரபல ஆங்கில பாடல். அதில், “பக்தியுள்ள புனிதர்களே, புதிய தைரியத்தை எடுங்கள். நீங்கள் அஞ்சி நடுங்கும் மேகங்கள் கருணையால் நிறைந்தவை, அவை உங்கள் சிரசில் ஆசீர்வாதத்தை பெய்யப்பண்ணும்" என்பதே. 

கௌபரைப் போலவே, யூதாவின் ஜனங்களும் எதிர்பாராத விதமாக தேவனுடைய கிருபையை சாட்சியிட நேரிட்டது. எதிரி தேசம் அவர்களின்மீது படையெடுத்ததால், யோசபாத் ராஜா ஜெபம் செய்வதற்கு மக்களுக்கு அழைப்புவிடுக்கிறார். யூதாவின் இராணுவப்படை யுத்தத்திற்கு சென்றபோது, அதின் முன்வரிசையில் அணிவகுத்துச் சென்றவர்கள் தேவனை துதித்துக்கொண்டே சென்றனர் (2 நாளாகமம் 20:21). படையெடுக்கும் படைகளில், “ஒருவரும் தப்பவில்லை. அவர்கள் கண்ட ஏராளமான பொருள்களும்... மூன்றுநாளாய்க் கொள்ளையிட்டார்கள்; அது அவ்வளவு மிகுதியாயிருந்தது” (வச. 24-25).

நான்காம் நாளில், தேவனுடைய ஜனத்திற்கு விரோதமாக கலகம்பண்ணுவதற்கு என்று ஒரு எதிரி படை கூடும் இடமே பெராக்கா பள்ளத்தாக்கு (வச. 26) என்று அழைக்கப்பட்டது. அதாவது, “துதியின் பள்ளத்தாக்கு” அல்லது “ஆசீர்வாதம்” என்று பொருள். என்னே மாற்றம்! நம்முடைய கடினமான பள்ளத்தாக்குகளைக்கூட நாம் அவரிடம் ஒப்படைப்போமாகில் அவர் அதை துதியின் ஸ்தலங்களாய் மாற்றுவார். 

 

எஜமானனா அல்லது ஊழியனா

"நான் எஜமானனா அல்லது ஊழியனா?", பல பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள ஒரு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தனது குடும்பத்திற்கு எது சிறந்தது என்று ஆராயும்போது இந்தக் கேள்வியை தனக்குத்தானே கேட்டுக் கொண்டார். திரளான செல்வத்தால் வரக்கூடிய சோதனைகளைப் பற்றி நன்கு அறிந்த அவர், அந்த சவாலை தனது வாரிசுகளும் எதிர்கொள்ள விரும்பவில்லை. எனவே அவர் தனது நிறுவனத்தின் உரிமையை கைவிட்டு, தனது அதிகார பங்குகளில் 100 சதவீதத்தையும் ஒரு அறக்கட்டளைக்கு கையளித்தார். தனக்குச் சொந்தமான அனைத்தும் தேவனுக்கே சொந்தமானது என்பதை அவர் புரிந்துகொண்டது, தனது குடும்பம் வேலை செய்து சம்பாதிக்கும்படி தீர்மானிக்க அவருக்கு உதவியது. அதே நேரத்தில் வருங்கால லாபத்தை தேவனின் ஊழியத்திற்கு நிதியளிப்பதற்காக பயன்படுத்தவும் உதவியது.

சங்கீதம் 50:10 இல் தேவன் தனது ஜனங்களிடம், "சகல காட்டுஜீவன்களும், பர்வதங்களில் ஆயிரமாயிரமாய்த் திரிகிற மிருகங்களும் என்னுடையவைகள்" என்கிறார். சர்வத்தையும் சிருஷ்டித்தவரான அவருக்கு நம்மிடம் ஒன்றும் தேவையுமில்லை, அவர் யாரிடமும் கடன்பட்டவருமல்ல. "உன் வீட்டிலிருந்து காளைகளையும், உன் தொழுவங்களிலிருந்து ஆட்டுக்கடாக்களையும் நான் வாங்கிக்கொள்வதில்லை" (வ.9) என்கிறார். நமக்குள்ளவற்றையும், நாம் பயன்படுத்தும் அனைத்தையும் அவர் தாராளமாக வழங்குகிறார். மேலும் வேலை செய்ய பெலனையும் திறனையும் அளிக்கிறார். இப்படியிருக்க, சங்கீதம் சொல்வதுபோல அவரே நமது மனமார்ந்த ஆராதனைக்கு பாத்திரர்.

தேவனே அனைத்துக்கும் சொந்தக்காரர். ஆனால் அவருடைய நற்குணத்தின் காரணமாக, அவர் தன்னைத் தானே கொடுக்கத் தெரிந்துகொண்டார். தம்மிடம் வரும் எவருடனும் உறவை ஏற்படுத்துகிறார். இயேசு "ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ்செய்யுவும், அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக்கொடுக்கவும் வந்தார்" (மாற்கு 10:45). ஈவுகளை காட்டிலும் ஈந்தவரை நாம் மதித்து ஈவுகளைக் கொண்டு அவருக்கு ஊழியஞ்செய்கையில், அவருக்குள் என்றென்றும் களிகூரும் பாக்கியமடைவோம்.

கிறிஸ்துவின் அடிச்சுவடில்

மன்னர் குடும்பம் அணியும் விலைமிக்க காலணிகளை அணிந்தால் எப்படி இருக்கும்? கப்பல் பணியாளர் மற்றும் செவிலியரின் மகளான ஏஞ்சலா கெல்லி அதை அறிவாள். மறைந்த மகாராணி எலிசபெத்திற்குக் கடந்த இரண்டு தசாப்தங்களாக அதிகாரப்பூர்வ ஆடை வடிவமைப்பாளராகவும் கெல்லி இருந்தார். வயதான மகாராணியின் புதிய காலணிகளை பழக்குவிப்பதற்காக, அதை அணிந்து அரண்மனை மைதானத்தைச் சுற்றி நடப்பது அவளது பொறுப்புகளில் ஒன்றாகும். அதற்குக் காரணம் இருந்தது; அவர்கள் ஒரே காலணி அளவை உடையவர்கள், மகாராணி சில நேரங்களில் அரண்மனை விழாக்களில் நீண்ட நேரம் நிற்க வேண்டியது இருக்கும், கெல்லிக்கு வயதான மகாராணியின் மீதுள்ள இரக்கத்தால் இந்த அசௌகரியத்திற்கு உதவ முடிந்தது.

எலிசபெத் மகாராணிக்குத் தனிப்பட்ட முறையில் கெல்லி செய்யும் இந்தக் காரியம், கொலோசேயா் (இக்கால துருக்கியின் ஒரு பகுதி) சபைக்கு பவுல் எழுதின, " . . .இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக்கொண்டு " (கொலோசெயர் 3:12) என்ற ஊக்கமான வார்த்தைகளைச் சிந்திக்கச் செய்கிறது. நம் வாழ்க்கை "அவர்மேல் கட்டப்பட்ட(தாக)" (2:6) இருக்கையில், நாம் "தேவனால் தெரிந்துகொள்ளப் பட்ட பரிசுத்தரும் பிரியருமாய்" இருப்போம் (3:12). நம்முடைய "பழைய மனுஷனை" களைந்துபோட்டு, "புதிய மனுஷனை"த் தரித்துக்கொள்ள (வ. 9-10) அவர் நமக்கு உதவுகிறார். எனவே தேவன் நம்மை நேசித்து மன்னித்ததால், மற்றவர்களை நேசிப்பவர்கள் மற்றும் மன்னிப்பவர்களாக வாழலாம் (வ.13-14).

தங்கள் அனுதின போராட்டங்களில் இரக்கம் வேண்டி, தங்களைப் புரிந்து தங்கள் "காலணிகளை" நாம் அணியும்படி தேவையிலுள்ளவர்கள் நம்மைச் சுற்றிலும் உண்டு. நாம் அவ்வாறு செய்கையில், நமக்காக எப்போதும் இரக்கத்துடன் இருக்கும் ராஜாவாம் இயேசுவின் கால்சுவடுகளில் நடக்கிறோம்.

எண்ணிமுடியாத அன்பு

“நான் உன்னை எப்படி நேசிப்பது? அதற்கான வழிகளை யோசிக்கிறேன்.” போர்;ச்சுகீசிய மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கப்பட்ட எலிசபெத் பாரெட் பிரவுனிங்கினின் அந்த வார்த்தைகள் ஆங்கில மொழியில் மிகவும் பிரபலமான கவிதைகளில் ஒன்றாகும். அவர்கள் திருமணத்திற்கு முன்பு ராபர்ட் பிரவுனிங்கிற்கு அவ்வாறு கவிதை எழுதினாராம். அக்கவிதையைப் பார்த்து ராபர்ட் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு, அந்த முழு கவிதைத் தொகுப்பையும் பிரசுரிக்குமாறு ஊக்குவித்தாராம். அக்கவிதை தொகுப்பின் மொழியானது மிகவும் மென்மையாக இருப்பதினாலும் தனிப்பட்ட ரீதியில் இருப்பதினாலும், பாரெட் அவற்றை போர்;ச்சுகீசிய எழுத்தாளரின் எழுத்துக்களைப் போல அவற்றை வெளியிட்டாராம். 

மற்றவர்களிடம் அன்பை வெளிப்படையாக வெளிப்படுத்தும்போது சில சமயங்களில் நாம் சங்கடமாக உணரலாம். ஆனால் வேதாகமம், தேவனுடைய அன்பை பிரபல்யப்படுத்துவதில் சற்றும் தயங்கவில்லை. எரேமியா தீர்க்கதரிசி, “அநாதி சிநேகத்தால் உன்னைச் சிநேகித்தேன்; ஆதலால் காருணியத்தால் உன்னை இழுத்துக்கொள்ளுகிறேன்” (எரேமியா 31:3) என்று தேவன் தன் ஜனத்தின் மீது வைத்திருக்கும் மென்மையான அன்பை விளங்கப்பண்ணுகிறார். ஜனங்கள் தேவனை விட்டு திரும்பினாலும், தேவன் அவர்களை மீண்டும் தன்னிடமாய் சேர்த்துக்கொள்ளுகிறார். “இஸ்ரவேலுக்கு இளைப்பாறுதலைக் கட்டளையிடப்போகிறேன்” (வச. 2) என்று தேவன் வாக்குப்பண்ணுகிறார். 

இயேசு, தேவனுடைய மறுசீரமைக்கும் அன்பின் இறுதி வெளிப்பாடாக இருக்கிறார். அவரிடம் திரும்பும் அனைவருக்கும் சமாதானத்தையும் இளைப்பாறுதலையும் அருளுகிறார். தொழுவத்திலிருந்து சிலுவை வரை, வெறுமையான கல்லறை வரை, வழிதப்பிப் போன உலகத்தை தம்மிடமாய் சேர்க்கும் தேவனுடைய சித்தத்தின் திருவுருவமாய் இயேசு திகழ்கிறார். வேதத்தை முழுவதுமாய் படியுங்கள், அப்போது தேவனுடைய அன்பை எண்ணுவதற்கான அநேக வழிகளை தெரிந்துகொள்வீர்கள். அவைகள் நித்தியமானவைகள் என்பதினால், அவற்றை நம்மாய் எண்ணி முடியாது.

கிறிஸ்துவில் புது அங்கீகாரம்

“நான் ஒரு காலத்தில் இருந்தவன் அல்ல. நான் ஒரு புதிய நபர்." தன் பள்ளிக் கூடுகையில் என்னும் மகன் சொன்ன அந்த எளிய வார்த்தைகள், தேவன் அவனுடைய வாழ்க்கையில் செய்த நன்மைகளை விவரித்தது. ஹெராயின் என்னும் போதை வஸ்துக்கு அடிமையாயிருந்த ஜெஃப்ரி, அதே பாவ கண்ணோட்டத்தோடே தன்னுடைய வாழ்க்கையை பார்க்க நேரிட்டது. ஆனால் தற்போது அவன் தன்னை தேவனுடைய பிள்ளையாய் பார்க்க ஆரம்பித்துவிட்டான். 

வேதாகமம் இந்த வாக்குறுதியுடன் நம்மை ஊக்குவிக்கிறது: “இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின” (2 கொரிந்தியர் 5:17). நம்முடைய கடந்தகாலத்தில் நாம் யாராக இருந்தோம், நாம் என்ன செய்துகொண்டிருந்தோம் என்பது முக்கியமில்லை, ஆனால் நாம் இயேசுவை விசுவாசித்து, அவருடைய சிலுவை கொடுக்கும் பாவமன்னிப்பை பெற்றுக்கொண்ட பின்பு நாம் புது சிருஷ்டியாய் மாறிவிடுகிறோம். ஏதேன் தோட்டத்தில் நாம் பாவத்தால் தேவனிடத்திலிருந்து பிரிக்கப்பட்டோம். ஆனால் “தேவன் உலகத்தாருடைய பாவங்களை எண்ணாமல், கிறிஸ்துவுக்குள் அவர்களைத் தமக்கு ஒப்புரவாக்கினார்” (வச. 18-19). நாம் அவரால் சுத்திகரிக்கப்பட்டு, அவருடைய குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருக்கத்தக்க அவருடைய அன்பான பிள்ளைகளாயிருக்கிறோம். 

இயேசு நம்மை பாவத்திலிருந்தும் அதன் ஆதிக்க வல்லமையிலிருந்தும் விடுவித்து, தேவனுடன் ஒரு புதிய உறவை மீட்டெடுக்கிறார். ஆகையால் நாம் இனி நமக்காக வாழாமல், “தங்களுக்காக மரித்து எழுந்தவருக்கென்று பிழைத்திருக்கும்படி” வாழுவோம் (2 கொரிந்தியர் 5:15). இந்த புத்தாண்டு தினத்தில், அவருடைய மறுரூபமாக்கும் அன்பு நம்மை புதிய அடையாளத்துடனும் நோக்கத்துடனும் வாழத் தூண்டுகிறது என்பதை நினைவில் கொள்வோம். இது மற்றவர்களை நம் இரட்சகரிடம் வழிநடத்த உதவுகிறது. அவர்களும் புதிய சிருஷ்டிகளாக மாற முடியும்!

கிறிஸ்மஸ் நட்சத்திரம்

“நீ அந்த நட்சத்திரத்தைக் கண்டுபிடித்துவிட்டால், வீட்டிற்கு வரும் வழியை நீ கண்டுபிடித்துவிடலாம்.” சிறுவயதில் வடக்கு நட்சத்திரத்தை எப்படிக் கண்டுபிடிப்பது என்று என் தந்தை எனக்குக் கற்றுக் கொடுத்தபோது சொன்ன வார்த்தைகள் இது. என்னுடைய அப்பா போர்க்காலத்தில் ஆயுதப் படைகளில் பணிபுரிந்தார். அவரது வாழ்க்கை பெரும்பாலும் இரவு நேர பயணங்களாய் இருந்த தருணங்கள் அவைகள். அதனால் பல விண்மீன்களின் பெயர்கள் மற்றும் இருப்பிடங்கள் ஆகியவற்றை எனக்கு கற்றுக்கொடுத்து, அதை நான் சரியாய் தெரிந்திருக்கிறேனா என்பதை அவ்வப்போது உறுதிசெய்துகொள்வார். ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக பொலாரிஸ் நட்சத்திரத்தைக் எங்களால் கண்டுபிடிக்க முடிந்தது. அந்த நட்சத்திரத்தின் இருப்பிடத்தை அறிந்தால், நான் எங்கிருந்தாலும் திசையின் உணர்வைப் பெற முடியும்; நான் இருக்க வேண்டிய இடத்தைக் கண்டுபிடிக்க முடியும்.

முக்கியமான மற்றொரு நட்சத்திரத்தைப் பற்றி வேதம் கூறுகிறது. “கிழக்கிலிருந்து சாஸ்திரிகள்” (இன்று ஈரான் மற்றும் ஈராக்கைச் சூழ்ந்துள்ள ஒரு பகுதியிலிருந்து) ராஜாவாகப் பிறந்திருக்கிறவரின் பிறப்புக்கான அறிகுறிகளை வானத்தில் பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்கள் எருசலேமுக்கு வந்து, “யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்துகொள்ள வந்தோம் என்றார்கள்” (மத்தேயு 2:1-2).

பெத்லகேமின் நட்சத்திரம் தோன்றுவதற்கு என்ன காரணம் என்று வான சாஸ்திரிகளுக்குத் தெரியாது. ஆனால் இயேசுவை உலகத்திற்கு விடிவெள்ளி நட்சத்திரமாய் சுட்டிக்காட்ட தேவன் அதை உண்டாக்கினார் என்று வேதம் சொல்லுகிறது (வெளிப்படுத்துதல் 22:16). கிறிஸ்து நம் பாவங்களிலிருந்து நம்மைக் காப்பாற்றவும், நம்மை மீண்டும் தேவனிடம் வழிநடத்தவும் வந்தார். அவரைப் பின்தொடர்வதே நம் வீட்டிற்கு செல்லும் ஒரே வழி.

பாரபட்சமும் தேவசிநேகமும்

“நான் எதிர்பார்த்தது நீ இல்லை. நான் உன்னை வெறுக்கிறேன் என்று நினைத்தேன், ஆனால் அப்படியில்லை.” அந்த இளைஞனின் வார்த்தைகள் கடுமையாகத் தெரிந்தது. ஆனால் அவை உண்மையில் கருணை காட்டுவதற்கான முயற்சியாக இருந்தது. நான் அவர் வசிக்கும் நாட்டில் படித்துக்கொண்டிருந்தேன். அவருடைய அந்த தேசம் பல தசாப்தங்களுக்கு முன்னர் என்னுடைய தேசத்தோடு யுத்தம் செய்தது. நாங்கள் ஒன்றாக வகுப்பில் ஒரு குழு விவாதத்தில் கலந்துகொண்டோம். அவர் தொலைவில் இருப்பதை நான் கவனித்தேன். நான் அவரை ஏதாகிலும் புண்படுத்திவிட்டேனா என்று நான் கேட்டபோது, அவர், “இல்லை . . . . அதுதான் விஷயம். என் தாத்தா அந்தப் போரில் கொல்லப்பட்டார், அதற்காக நான் உங்கள் மக்களையும் உங்கள் நாட்டையும் வெறுத்தேன். ஆனால் இப்போது நமக்குள் எந்த அளவிற்கு ஒத்துப்போகிறது என்பதைக் கண்டு நான் ஆச்சரியப்படுகிறேன். நாம் ஏன் நண்பர்களாக இருக்க முடியாது!” என்று பதிலளித்தார்.

பாரபட்சம் என்னும் உணர்வு மனித இனத்தைப் போலவே மிகவும் பழமையானது. இரண்டாயிரமாண்டுகளுக்கு முன்பு, இயேசு நாசரேத்தில் வாழ்ந்ததைப் பற்றி நாத்தான்வேல் முதன்முதலில் கேள்விப்பட்டபோது, அவனுடைய பாரபட்சம் தெளிவாகத் தெரிந்தது: “நாசரேத்திலிருந்து யாதொரு நன்மை உண்டாகக்கூடுமா?” (யோவான் 1:46) என்று சொல்கிறார். நாத்தான்வேல் இயேசுவைப் போலவே கலிலேயா பகுதியில் வாழ்ந்தவர். தேவனுடைய மேசியா வேறொரு இடத்திலிருந்து வருவார் என்று அவர் ஒருவேளை நினைத்திருக்கக்கூடும். மற்ற கலிலேயர்களும் நாசரேத்தை இழிவாகப் பார்த்தனர். ஏனென்றால் அது ஒரு சிறிய அடையாளமில்லாத ஊராக இருந்தது.

இது மிகவும் தெளிவாக உள்ளது. நாத்தான்வேலின் பதில், இயேசு அவனை நேசிப்பதற்கு தடையாக இருக்கவில்லை. மேலும் அவன் மறுரூபமாக்கப்பட்டு இயேசுவின் சீஷனாக மாறுகிறான். நாத்தான்வேல் பின்பாக, “நீர் தேவனுடைய குமாரன்” (வச. 49) என்று இயேசுவின் மகத்துவத்தை சாட்சியிடுகிறான். தேவனுடைய மறுரூபமாக்கும் அன்பிற்கு எதிராக நிற்கக்கூடிய எந்த பாரபட்சமும் இல்லை.

தடைகள் உடைந்தது

“குஞ்சு பறவைகள் நாளை பறக்கும்!” எங்கள் முன் வராந்தாவில் தொங்கும் கூடையில் சிட்டுக்குருவிகள் குடும்பம் செய்து வரும் முன்னேற்றம் குறித்து என் மனைவி காரி மகிழ்ச்சியடைந்தாள். அவள் தினமும் அவற்றைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அம்மா குருவி கூட்டிற்கு உணவைக் கொண்டு வருவதைப் புகைப்படம் எடுத்தாள்.

காரி மறுநாள் அதிகாலையில் எழுந்து அவைகளைப் பார்க்க முயற்சித்தாள். அதற்கு அவள் கூட்டை மூடியிருந்த சில பசுமையை ஒதுக்கி நகர்த்தினாள். ஆனால் குஞ்சு பறவைகளைப் பார்ப்பதற்குப் பதிலாக, ஒரு பாம்பின் குறுகிய கண்கள் அவளை சந்தித்தன. ஒரு பாம்பு செங்குத்தான சுவற்றின் மீது ஏறி, கூட்டிற்குள் நுழைந்து, குஞ்சுகள் அனைத்தையும் விழுங்கியது.

காரி மனம் உடைந்து, கோபமடைந்தார். நான் அப்போது வெளியூருக்கு சென்றிருந்தபடியால், பாம்பை அகற்ற அவளுடைய தோழியின் உதவியை நாடினாள். ஆனால் அதற்குள் எல்லாம் முடிந்துவிட்டது. 

தன் பாதையில் அழிவை விட்டுச் சென்ற மற்றொரு பாம்பைப் பற்றி வேதம் கூறுகிறது. ஏதேன் தோட்டத்தில் இருந்த பாம்பு ஏவாளை ஏமாற்றியது: “அப்பொழுது சர்ப்பம் ஸ்திரீயை நோக்கி: நீங்கள் சாகவே சாவதில்லை; நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார் என்றது” (ஆதியாகமம் 3:4-5). 

ஏவாள் மற்றும் ஆதாமின் கீழ்ப்படியாமையின் விளைவாக “பிசாசென்றும் சாத்தானென்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய” வலுசர்ப்பத்தினால் (வெளிப்படுத்தல் 20:2) பாவமும் மரணமும் உலகில் நுழைந்தன. ஆனால் “பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார்” (1 யோவான் 3:8). அவர் மூலமாகவே தேவனுடனான நம்முடைய உறவு புதுப்பிக்கப்படுகிறது. அவர் ஒரு நாளில் சகலத்தையும் புதிதாக்குவார் (வெளிப்படுத்தல் 21:5).

தொடர்புடைய தலைப்புகள்

> odb

விசுவாசத்தின் ஜெயம்

நான்கு வயது சிறுவனான கால்வினின் வழக்கமான சரீர ஆரோக்கிய சோதனையில் அவனது உடலில் சில எதிர்பாராத புள்ளிகள் கண்டறியப்பட்டன. அவனுக்கு சில மருந்துகள் பரிந்துரைக்கப்பட்டு, ஊசி போடப்பட்டு, அந்த இடத்தை கட்டுகட்டி அனுப்பினர். அந்த கட்டை அகற்றும் நாளில், அவனுடைய தந்தை கட்டை பிரிக்க முயன்றபோது, கால்வின் பயத்துடன் சிணுங்கினான். மகனுக்கு ஆறுதல் கூற முயன்று, அவனது தந்தை, “கால்வின், உன்னைக் காயப்படுத்தும் எதையும் நான் ஒருபோதும் செய்யமாட்டேன் என்று உனக்குத் தெரியும்!" என்று சொன்னார். கட்டை அகற்றும் பயத்தைவிட, தன் மகன் தன்னை நம்பவேண்டும் என்று அவனது தந்தை விரும்பினார்.

அசௌகரியத்தினால் நான்கு வயது குழந்தைகள் மட்டும் பயம் அடைவதில்லை. அறுவைசிகிச்சைகள், அன்புக்குரியவர்களிடமிருந்து பிரிதல், மன அல்லது உளவியல் சவால்கள் மற்றும் பலவிதமான பயங்கள், பெருமூச்சுகள், அழுகைகள் மற்றும் கூக்குரல்களை சந்திக்கும் அனைத்து தரப்பினர்களும் பயத்தினால் சூழப்படுகின்றனர். 

தாவீது, தன்மீது பொறாமைகொண்டு தன்னை கொல்ல வகைதேடிய சவுலிடமிருந்து தப்பித்து பெலிஸ்திய தேசத்திற்கு ஓடியபோதிலும், அங்கு அவர் கண்டுபிடிக்கப்பட்ட தருணம், வாழ்க்கையின் பயம் மிகுந்த ஓர் தருணமாயிருந்துள்ளது. அவர் அடையாளம் காணப்பட்டபோது, அவருக்கு என்ன நேரிடும் என்று கவலைப்பட்டார். (1 சாமுவேல் 21:10-11): “தாவீது... காத்தின் ராஜாவாகிய ஆகீசுக்கு மிகவும் பயப்பட்டான்.” இந்த சங்கடமான சூழ்நிலையைப் பற்றி யோசித்து, தாவீது “நான் பயப்படுகிற நாளில் உம்மை நம்புவேன்… தேவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்படேன்” (சங்கீதம் 56:3-4) என்று எழுதுகிறார். 

வாழ்க்கையின் அசௌகரியங்கள் நமக்கு அச்சத்தைத் தூண்டும்போது நாம் என்ன செய்வோம்? நம்முடைய பரலோகத் தகப்பன்மீது நம்பிக்கை வைக்கலாம்.

 

ஜெபம் முக்கியமானது

“நடக்கவிருக்கும் மூளை ஸ்கேனுக்கான பிரார்த்தனைகள்;” “என் குழந்தைகள் மீண்டும் தேவாலயத்திற்கு வரவேண்டும்;“ “தன் மனைவியை இழந்த டேவின் ஆறுதலுக்காக" இதுபோன்ற ஜெப விண்ணப்பங்களை எங்களின் ஜெப ஊழியக் குழு வாரந்தோறும் பெறுகிறது. நாங்கள் அதற்காக ஜெபித்து, பதில் கடிதத்தையும் அனுப்புவது வழக்கம். ஜெப விண்ணப்ப பட்டியல் பெரிதாய் இருப்பதினால், எங்களுடைய முயற்சி கவனிக்கப்படாத வகையில் சிலவேளைகளில் இருக்கும். ஆனால் சமீபத்தில் டேவ் என்பவர் இறந்துபோன தன்னுடைய மனைவியின் இரங்கல் செய்தியின் நகலுடன், ஓர் நன்றிக் கடிதத்தையும் வைத்து அனுப்பியிருந்தார். அதைப் பார்த்த பின்பு எங்களுடைய சோர்வான சிந்தை மாறியது. ஜெபம் மிகவும் அவசியம் என்பதை நான் புதிதாக உணர்ந்தேன்.

நாம் ஊக்கமாக, இடைவிடாமல், நம்பிக்கையுடன் ஜெபிக்கவேண்டும் என்று இயேசு முன்மாதிரியாகக் கூறினார். பூமியில் அவருடைய வாழ்ந்த காலம் குறைவாகவே இருந்தது. ஆனால் அவர் ஜெபிப்பதற்காக தனி நேரம் செலவழிப்பதற்கு முக்கியத்துவம் கொடுத்தார் (மாற்கு 1:35; 6:46; 14:32).

நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, இஸ்ரவேலின் ராஜாவான எசேக்கியாவும் இந்தப் பாடத்தைக் கற்றுக்கொண்டார். ஓர் வியாதியின் நிமித்தம் அவர் சீக்கிரம் மரிக்கப்போகிறார் என்று அறிவிக்கப்பட்டது (2 இராஜாக்கள் 20:1). எசேக்கியா வேதனையோடும் வியாகுலத்தோடும், “தன் முகத்தைச் சுவர்ப்புறமாகத் திருப்பிக்கொண்டு” (வச. 2) கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணினார். இந்த விஷயத்தில் தேவன் உடனே பதில்கொடுக்கிறார். தேவன் எசேக்கியாவின் வியாதியை சுகமாக்கி, அவருக்கு பதினைந்து ஆண்டுகள் ஆயுசுநாட்களை பெருகப்பண்ணி, அவருடைய எதிரிகளிடமிருந்து இளைப்பாறுதலையும் வாக்குப்பண்ணுகிறார் (வச. 5-6). எசேக்கியா நல் வாழ்க்கை வாழ்ந்தார் என்பதற்காக தேவன் இந்த கிருபைகளை அவருக்குக் கொடுக்கவில்லை, மாறாக, “என் நிமித்தமும் என் தாசனாகிய தாவீதின் நிமித்தமும்” தேவன் அவருக்கு கிருபையளிப்பதாக கூறுகிறார். நாம் கேட்கிற அனைத்தையும் தேவனிடத்திலிருந்து பெறாமல் இருக்கலாம், ஆனால் தேவன் நம்முடைய அனைத்து ஜெபங்களையும் கேட்டு கிரியை நடப்பிக்கிறவராயிருக்கிறார் என்பதை நாம் உறுதியாக நம்பலாம்.

 

நாம் நம்பத்தகுந்த சிருஷ்டிகர்

மேரி ஷெல்லியின் “ஃபிராங்கண்ஸ்டைன்” என்ற பிரபல நாவலில் உள்ள “அரக்கன்” மிகவும் பரவலாக அறியப்பட்ட இலக்கிய பாத்திரங்களில் ஒன்றாகும். ஆனால் அந்த நாவலை ஆழமாய் படித்தவர்கள், அந்த அரக்கனை தோற்றுவித்த மாயை விஞ்ஞானியான விக்டர் ஃபிராங்கண்ஸ்டைனையே உண்மையான அரக்கனாக ஷெல்லி சித்தரிக்கிறார் என்று அறிவர். புத்திசாலித்தனமான உயிரினத்தை உருவாக்கிய பிறகு, விக்டர் அதற்கு வழிகாட்டுதல், தோழமை அல்லது மகிழ்ச்சியின் நம்பிக்கையை கொடுக்க மறுக்கிறார். அந்த உயிரினம், விரக்தி மற்றும் கோபப்படும் நிலைக்கு தள்ளப்படுகிறது. ஓர் தருணத்தில் அந்த உயிரினம் விக்டரைப் பார்த்து, “என் படைப்பாளியே, நீ என்னை துண்டு துண்டாக கிழித்து வெற்றி பெறும்” என்று கூறுவதைப் பார்க்கமுடியும். 

ஆனால் தன் படைப்புகள் மது தீராத அன்புகொண்ட மெய்யான சிருஷ்டிகர் எப்பேற்பட்டவர் என்பதை வேதம் வெளிப்படுத்துகிறது. ஏதோ சிருஷக்கவேண்டும் என்பதற்காக தேவன் உலகத்தை படைக்கவில்லை, மாறாக, அதை அழகாகவும் நேர்த்தியாகவும் படைத்திருக்கிறார் (ஆதியாகமம் 1:31). ஆனால் கொடூரமான தீமையைத் தேர்ந்தெடுக்க மனிதகுலம் அவரிடமிருந்து திசைமாறியபோதும், மனிதகுலத்திற்கான தேவனுடைய அர்ப்பணிப்பும் அன்பும் மாறவில்லை.

நிக்கோதேமுக்கு இயேசு விளக்கியதுபோல், தன்னுடைய ஒரே பேறான குமாரனை இந்த உலகத்திற்காய் பலியாய் கொடுக்குமளவிற்கு இந்த உலகத்தின்மீதான தேவனுடைய அன்பு விலையேறப்பெற்றது (யோவான் 3:16). இயேசு தம்மையே பலியாய் ஒப்புக்கொடுத்து, நம்முடைய பாவத்தின் விளைவுகளைச் சுமந்துகொண்டு, “தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு” (வச. 15) நம்மை உயர்த்துகிறார். 

நாம் மனப்பூர்வமாய் நம்பக்கூடிய ஓர் சிருஷ்டிகர் நமக்கு இருக்கிறார்.