வகை  |  odb

தேவனே, ஏன் என்னை?

ஜிம் ஒரு வருடத்திற்கும் மேலாக ஒருவகையான இயக்க நரம்பணு நோயுடன் போராடி வருகிறார். அவரது தசைகளில் உள்ள நரம்பணுக்கள் சிதைவதால் அவரது தசைகள் வீணாகின்றன. அவர் தனது சிறந்த இயக்க திறன்களை இழந்துவிட்டார் மற்றும் அவரது கைகால்களைக் கட்டுப்படுத்தும் திறனை இழந்துவிட்டார். அவரால் இனி சட்டை பொத்தான் போடவோ அல்லது காலணி அணியவோ முடியாது. மேலும் கைகளால் கரண்டியைப் பிடிப்பதும்  சாத்தியமற்றதாகிவிட்டது. ஜிம் தனது சூழ்நிலையோடு போராடி, தேவன் ஏன் இப்படி நடக்க அனுமதிக்கிறார்? ஏன் எனக்கு? எனக் கேட்கிறார்.

தேவனிடம் தங்கள் கேள்விகளைக் கொண்டு வந்த இயேசுவின் பல விசுவாசிகளின் கூட்டத்தில் இவரும் ஒருவர். சங்கீதம் 13 இல், “கர்த்தாவே, எதுவரைக்கும் என்னை மறந்திருப்பீர், எதுவரைக்கும் உம்முடைய முகத்தை எனக்கு மறைப்பீர்? என் இருதயத்திலே சஞ்சலத்தை நித்தம் நித்தம் வைத்து, எதுவரைக்கும் என் ஆத்துமாவிலே ஆலோசனைபண்ணிக்கொண்டிருப்பேன்” (வ.1-2) என்று தாவீது கூக்குரலிடுகிறார்.

நாமும் நம் குழப்பங்களையும் கேள்விகளையும் தேவனிடம் எடுத்துச் செல்லலாம். “எவ்வளவு காலம்?” என்றும் "ஏன்?" என்றும்  நாம் அழும்போது அவருக்குப் புரியும். அவருடைய ஆகச்சிறந்த பதில் இயேசுவிலும், பாவம் மற்றும் மரணத்தின் மீதான அவரது வெற்றியிலும் நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.

நாம் சிலுவையையும் காலியான கல்லறையையும் பார்க்கும்போது, ​​தேவனின் "கிருபையின்மேல்" நம்பிக்கை வைத்து, அவருடைய இரட்சிப்பில் களிகூர (வ. 5) நாம் தன்னம்பிக்கை பெறுகிறோம். வாழ்வின் இருண்ட நேரங்களிலும், நாம் "கர்த்தர் எனக்கு நன்மைசெய்தபடியால் அவரைப் பாடுவேன்" (வ. 6) எனலாம். கிறிஸ்துவில் நாம் கொண்டுள்ள விசுவாசத்தின் மூலம், அவர் நம்முடைய பாவங்களை மன்னித்து, நம்மை அவருடைய பிள்ளைகளாக ஏற்றுக்கொண்டார், மேலும் அவருடைய நித்தியமான நல்ல நோக்கத்தை நம் வாழ்வில் நிறைவேற்றுகிறார்.

நிலைத்திருக்கும் கட்டிடம்

நான் ஓஹியோவில் சிறுவனாக இருந்தபோது, ​​எங்கள் வீட்டருகே பல கட்டுமானப் பகுதிகள் இருந்தன. அவைகளால் ஈர்க்கப்பட்டு, மீந்த பொருட்களைக் கொண்டு நானும் எனது நண்பர்களும் ஒரு கோட்டை கட்ட எத்தனித்தோம். எங்கள் பெற்றோரிடமிருந்து கருவிகளைக் கடன் வாங்கி, நாங்கள் மரத்தை அறுத்து, எங்களைப் பொருட்களால் எங்கள் நோக்கத்தை நிறைவேற்றப் பல நாட்கள் முயன்றோம். அது வேடிக்கையாக இருந்தது, ஆனால் எங்கள் முயற்சிகள் எங்களைச் சுற்றி நன்கு கட்டப்பட்ட கட்டிடங்களின் மோசமான பிரதிபலிப்பாக இருந்தன. அவை நீண்ட காலம் நீடிக்கவில்லை.

ஆதியாகமம் 11ல், ஒரு பெரிய கட்டுமான திட்டத்தை நாம் வாசிக்கிறோம். "வானத்தை அளாவும் சிகரமுள்ள ஒரு கோபுரத்தையும் கட்டி" (வ. 4) என்று ஜனங்கள் சொன்னார்கள். இந்த முயற்சியிலிருந்த ஒரு பெரிய பிரச்சனை என்னவென்றால், "நமக்குப் பேர் உண்டாக" (வ. 4) ஜனங்கள் அதைச் செய்தார்கள்.

இது மனிதர்களுக்கு ஒரு தொடர் பிரச்சினையாக இருந்து வருகிறது; நமக்கும் நமது சாதனைகளுக்கும் நினைவுச்சின்னங்களை உருவாக்குகிறோம். பின்னர் வேதாகம நடையில், இந்தக் கதை தேவனின் ஆலயத்தைக் கட்டுவதற்கான சாலொமோனின் நோக்கத்துடன் முற்றிலுமாக முரண்படுகிறது: "என் தேவனாகிய கர்த்தரின் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டவேண்டும் என்று இருக்கிறேன்" (1 இராஜாக்கள் 5:5).

தான் கட்டுகிறவை தன்னை அல்ல தேவனையே சுட்டிக் காட்ட வேண்டும் என்பதை சாலொமோன் புரிந்துகொண்டார். இதைப் பற்றி அவர் ஒரு சங்கீதம் கூட எழுதும் அளவிற்கு இது ஒரு முக்கியமான பாடமாக இருந்தது. "கர்த்தர் வீட்டைக் கட்டாராகில், அதைக் கட்டுகிறவர்களின் பிரயாசம் விருதா" (வ. 1) என்று சங்கீதம் 127 தொடங்குகிறது. என்னுடைய சிறுவயதுக் கோட்டைக் கட்டுவது போல், நாம் கட்டுவதெல்லாம் நிலைக்காது, ஆனால் தேவனின் நாமமும், அவருக்காக நாம் செய்வதும் நிலையான முக்கியத்துவம் வாய்ந்தது.

விசுவாச படிகள்

ஜான் தனது வேலையை இழந்ததால் நிலைகுலைந்து போனார். ஆரம்ப நாட்களைக் காட்டிலும், வேலையிலிருந்து ஓய்வு பெரும் காலகட்டத்தில் புதிதாக எங்காவது வேலைக்குச் சேருவது கடினம் என்பதை அவர் அறிந்திருந்தார். சரியான வேலைக்காக ஜெபிக்க ஆரம்பித்தார். பின்னர் ஜான் வேலைக்கான தனது தற்குறிப்பைப் புதுப்பித்து, நேர்காணல் பயிற்சி குறிப்புகளையும் படித்தார், மேலும் தொலைப்பேசியில் நிறையப் பேரிடம் பேசினார். விண்ணப்பித்த பல வாரங்களுக்குப் பிறகு, அவர் ஒரு சிறந்த பனி நேரம் மற்றும் எளிதான பயணத்துடன் புதிய வேலையை ஏற்றுக்கொண்டார். அவருடைய உண்மையுள்ள கீழ்ப்படிதலும் தேவனின் போஷிப்பும் சரியான நேரத்தில் சந்தித்தன.

எகிப்தில் இஸ்ரவேலர் அடிமைப்பட்டிருந்த காலத்தில் யோகெபேத் (யாத்திராகமம் 6:20)  மற்றும் அவரது குடும்பத்தினர் இதைவிட வியத்தகு நிகழ்வைச் சந்தித்தனர். புதிதாகப் பிறந்த அனைத்து எபிரேய மகன்களும் நைல் நதியில் போடப்பட வேண்டும் என்று பார்வோன் கட்டளையிட்டபோது (1:22), யோகெபெத் பயந்திருக்க வேண்டும். அவளால் சட்டத்தை மாற்ற முடியவில்லை, ஆனால் தேவனுக்குக் கீழ்ப்படிந்து தன் மகனைக் காப்பாற்ற முயலும்படி அவள் சில படிகளை எடுக்கலாம். விசுவாசத்தால், அவள் அவனை எகிப்தியர்களிடமிருந்து மறைத்தாள். " ஒரு நாணற்பெட்டியை எடுத்து, அதற்குப் பிசினும் கீலும் பூசி, அதிலே பிள்ளையை வளர்த்தி நதியோரமாய் நாணலுக்குள்ளே வைத்தாள்" (2:3). தேவன் அவனுடைய உயிரை அற்புதமாகப் பாதுகாக்க அடியெடுத்து வைத்தார் (வவ. 5-10) பின்னர் இஸ்ரவேலர் அனைவரையும் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்க அவனைப் பயன்படுத்தினார் (3:10).

ஜானும், யோகெபேத்தும் மிகவும் வித்தியாசமான அடியெடுத்தனர், ஆனால் இரண்டு சம்பவங்களும் விசுவாசம் நிறைந்த செயல்களால் அடையாளப் படுத்தப்படுகின்றன. பயம் நம்மை முடக்கிவிடும். நாம் நினைத்தது அல்லது எதிர்பார்த்தது போன்ற பலன் இல்லாவிட்டாலும், அதன் விளைவைப் பொருட்படுத்தாமல் தேவனின் நற்குணத்தில் நம்பிக்கை வைக்க விசுவாசம் நமக்குப் பெலன் அளிக்கிறது.

கிருபையின் செயல்பாடுகள்

அபௌட் கிரேஸ் என்ற நாவலில், டேவிட் விங்க்லர் தன்னை பிரிந்த மகளைக் கண்டுபிடிக்க ஏங்குகிறார், அவருக்கு உதவக்கூடிய ஒரே நபர் ஹெர்மன் ஷீலர் மட்டுமே. ஆனால் ஒரு தடை உள்ளது. ஹெர்மனின் மனைவியுடனான தவறான தொடர்பில்தான் டேவிட்டின் மகள் பிறந்தாள், மேலும் அவர்களை மீண்டும் தொடர்பு கொள்ள வேண்டாம் என்று ஹெர்மன் எச்சரித்திருந்தார்.

பல ஆண்டுகள் கழித்து டேவிட், ஹெர்மனிடம் மன்னிப்பு கோரி கடிதம் எழுதினார். மேலும் அவர், "என் வாழ்க்கையில் ஒரு வெறுமை உண்டு, காரணம் என் மகளைப் பற்றி எனக்கு அதிகம் தெரியாது" என்று அவளைப் பற்றிய தகவல்களைக் கேட்கிறார். ஹெர்மன் தனக்கு உதவுவாரா என்று காத்திருக்கிறார்.

நமக்கு அநீதி இழைத்தவர்களை எப்படி நடத்த வேண்டும்? தனது எதிரிகள் அற்புதமாக அவரது கைகளில் ஒப்படைக்கப்பட்ட பிறகு, இஸ்ரவேலின் ராஜா இந்த கேள்வியை எதிர்கொண்டார் (2 இராஜாக்கள் 6:8-20). "நான் அவர்களை வெட்டிப் போடலாமா" என்று எலிசா தீர்க்கதரிசியிடம் கேட்கிறார். இல்லை, எலிசா கூறுகிறார். "இவர்கள் புசித்துக் குடித்து, தங்கள் ஆண்டவனிடத்துக்குப் போகும்படிக்கு, அப்பமும் தண்ணீரும் அவர்களுக்கெதிரில் வையும் என்றான்" (வ. 21-22). இந்த கிருபையின் செயல்  மூலம், இஸ்ரவேல் தனது எதிரிகளுடன் சமாதானம் காண்கிறது (வ. 23).

டேவிட்டின் கடிதத்திற்கு ஹெர்மன் பதிலளித்து, அவரை தனது வீட்டிற்கு அழைத்து உணவும் வழங்குகிறார். “ஆண்டவராகிய இயேசு, இத்தனை வருடங்களாக என்னையும் டேவிட்டையும் பராமரித்ததற்காக உமக்கு நன்றி” என்று அவர்கள் சாப்பிடுவதற்கு முன் ஜெபிக்கிறார். டேவிட் தனது மகளைக் கண்டுபிடிக்க உதவுகிறார், பின்னர் டேவிட் ஹெர்மனின் உயிரைக் காப்பாற்றுகிறார். தேவனின் கரங்களில், நமக்கு அநீதி இழைத்தவர்களிடம் நாம் காட்டும் கிருபையின் செயல்கள் பெரும்பாலும் நமக்கு ஆசீர்வாதமாக விளைகின்றன.