வகை  |  odb

அன்பிற்கு அர்பணம்

மதம் மாறி இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொண்ட நபீல் குரேஷி, தான் விட்டு வந்த மதத்திலுள்ள, தன்னுடைய ஜனங்களை, வாசகர்கள் புரிந்து கொள்ளும்படியாக அநேகப் புத்தகங்களை எழுதியுள்ளார். அவருடைய எண்ணம் மதிக்கத்தகுந்தது. குரேஷியின் உள்ளம் எப்பொழுதும் அவருடைய மக்கள் மீதுள்ள அன்பினை வெளிப்படுத்திக் கொண்டேயிருக்கும்.

இன்னும் இயேசுவின் மீது தன் நம்பிக்கையை வைத்திராத தன்னுடைய அன்பு சகோதரிக்கு, குரேஷி தன்னுடைய ஒரு புத்தகத்தை அர்ப்பணித்தார். அந்த அர்ப்பணம் சுருக்கமாயிருந்தபோதிலும் வல்லமையுள்ளதாயிருந்தது. அதில், “நாங்கள் அனைவரும் இணைந்து இயேசுவை ஆராதிக்கும் நாளைத் தருமாறு தேவனிடம் நான் கெஞ்சுகின்றேன்” என எழுதியிருந்தார்.

ரோமாபுரியிலுள்ள சபைகளுக்குப் பவுல் எழுதிய கடிதத்தை வாசிக்கும் போதும், நாம் இதேப் போன்ற ஓர் உணர்வைக் காண முடிகிறது. “எனக்கு மிகுந்த துக்கமும், இடைவிடாத மன வேதனையும் உண்டாயிருக்கிறது” மேலும், “ மாம்சத்தின்படி என் இனத்தாராகிய என் சகோதரருக்குப் பதிலாக நானே கிறிஸ்துவை விட்டுச் சபிக்கப்பட்டவனாக வேண்டுமென்று விரும்புவேனே” (ரோம. 9:1,3) என பவுல் எழுதுகின்றார்.

பவுல் யூத ஜனங்களை மிகவும் நேசித்தார். அவருடைய ஜனங்கள் இயேசுகிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளும்படி தான் தேவனை விட்டு பிரிக்கப்படுவதையும் தேர்ந்து கொள்ளத் தயாராக இருப்பதாகக் கூறுகின்றார். அவருடைய ஜனங்கள் இயேசுவைத் தள்ளினதின் மூலம் உண்மையான தேவனைத் தள்ளினார்கள் எனத் தெரிந்து கொண்டார். இதன் மூலம் பவுல் தன்னுடைய வாசகர்கள் இயேசுவைப் பற்றிய நற்செய்தியை யாவரோடும் பகிர்ந்துகொள்ளும்படி ஊக்குவிக்கின்றார் (10:14-15).

நமக்கு மிகவும் நெருக்கமானவர்களின் மீதுள்ள அன்பின் நிமித்தம், நாம் படும் வேதனைக்காக நாம் ஜெபத்தில் நம்மை அர்ப்பணிப்போம்.

அடித்தளம் அகன்ற போது

1997ம் ஆண்டில் ஆசியாவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் போது, சொற்ப வேலைகளே இருந்த நிலையில் அநேகர் வேலை தேடிக் கொண்டிருந்தனர். அப்படி வேலை தேடியவாகளில் நானும் ஒருவன். ஓன்பது மாதங்கள் எதிர்பார்ப்பிற்குப் பின், எழுத்தராக ஒரு கம்பெனியில் சேர்ந்தேன். அந்த கம்பெனியும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டதால் மீண்டும் வேலையை இழந்தேன்.

நீ இத்தகைய சூழலிலிருந்திருக்கின்றாயா? மோசமான நேரம் முடிந்தது என எண்ணிய போது, திடீரென நிலை தடுமாறியது போலிருந்தது. சாறிபாத் விதவையின் நிலையைப் போன்றிருந்தது (1 இரா. 17:12). ஒரு பஞ்சத்தின் போது, அவள் தனக்கும் தன் மகனுக்கும் கடைசி உணவைத் தயாரிக்கும் போது, எலியா தீர்க்கதரிசி தனக்குக் கொஞ்சம் அப்பம் தரும்படி கேட்கின்றார். அவள் மனமில்லாமல் சம்மதிக்கின்றாள். தேவன் அவளுக்குத் தொடர்ந்து மாவையும், எண்ணெயையும் கொடுக்கின்றார் (வச. 10-16).

பிற்பாடு, அவளுடைய மகன் சுகவீனப்படுகின்றான். அவனுடைய சுவாசம் போகுமட்டும் அவனுடைய வியாதி அதிகரித்துக் கொண்டேயிருந்தது. அப்பொழுது அந்த விதவை எலியாவை நோக்கி. “தேவனுடைய மனுஷனே, எனக்கும் உமக்கும் என்ன? என் அக்கிரமத்தை நினைக்கப் பண்ணவும் என் குமாரனைச் சாகப் பண்ணவுமா என்னிடத்தில் வந்தீர்?” என்றாள் (வச. 18).

சில வேளைகளில் நாமும் இந்த விதவையைப் போன்று செயல்படுவோம். தேவன் ஏன் நம்மைத் தண்டிக்கின்றார் என வியந்ததுண்டு. இந்தப் பாவ உலகில் தீமையானவைகளும் நடக்கும் என்பதை நாம் மறந்து விடுகின்றோம்.

எலியா இந்தத் தேவையை தேவனிடம் எடுத்துச் செல்கின்றார். உண்மையாய், முழுமனதோடு தேவனிடம் அந்தப் பையனுக்காக ஜெபிக்கின்றார். தேவன் அவனை உயிரோடு எழுப்புகின்றார் (வச. 20-22) எலியாவைப் போன்று நாமும், நாம் நம்பியிருக்கிறவர் ஒரு போதும் நம்மைக் கைவிடுவதில்லை என உணர்ந்து கொள்வோம். தேவனுடைய திட்டத்தின் மீது சார்ந்திருந்து, அதைப் புரிந்து கொள்ளும்படி தேவனிடம் ஜெபிப்போம்.

கொடுப்பதில் மகிழ்ச்சி

அது ஒரு சோர்வுக்குள்ளான வாரம். நான் எதிலும் ஆர்வமில்லாதவனாகவும், சலித்தும் காணப்பட்டேன். அது ஏனென்றும் எனக்குத் தெரியவில்லை.

அந்த வாரக் கடைசியில் என்னுடைய அத்தை ஒருவருக்கு சிறு நீரகம் செயலிழந்துவிட்டதாகக் கேள்விப்பட்டேன். நான் அவர்களைப் போய் பார்க்க வேண்டும், ஆனால், நான் அதனைத் தள்ளிப்போட நினைத்தேன். ஆயினும் நான் என்னைத் திடப்படுத்திக் கொண்டு, ஒரு நாள் அவர்களுடைய இடத்துக்குச் சென்று, அவர்களோடு உணவருந்தி, பேசிக் கொண்டிருந்துவிட்டு, இணைந்து ஜெபித்துவிட்டு, ஒரு மணி நேரத்திற்குப்பின் வந்தேன். பல நாட்களாக இருந்த சோர்வு நீங்கியவனாக அவர்கள் வீட்டை விட்டு வெளியேறினேன். என்னையே நான் பார்த்துக் கொண்டிருப்பதை விட்டு விட்டு, பிறர் மீது கவனம் செலுத்திய போது என்னுடைய உள்ளத்தின் சோர்வு அகன்றது.

பிறருக்குக் கொடுக்கும் போது, அதைப் பெற்றுக் கொள்பவரின் நன்றியுணர்வைக் காணும்போது, கொடுப்பவரின் மனதிற்கு, அது நிருப்தியைக் கொடுக்கும் என உளவியலாளர் கூறுகின்றனர். மனிதர்கள் தாராளமாய் கொடுப்பதில் சிறந்தவர்கள் என சில வல்லுனர்கள் நம்புகின்றனர்.

எனவே தான், தெசலோனிகேயர் சபையின் விசுவாசக் குடும்பத்தினரைப் பவுல், “பலவீனரைத் தாங்குங்கள்” (1 தெச. 5:14) என ஊக்குவிக்கின்றார். முன்னதாக இயேசுவின் வார்த்தைகளான, “ வாங்குகிறதைப் பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம்” (அப். 20:35) என்பதையும் பவுல் குறிப்பிடுகின்றார். ஒரு வேளை இது பொருளுதவி செய்வதைப் பற்றி குறிப்பிடப்பட்டிருந்தாலும், நம்முடைய நேரத்தையும் ஆற்றலையும் கொடுப்பதையும் இது குறிக்கும்.

நாம் கொடுக்கும் போது, தேவன் அதை எவ்வாறு கருதுவார் என்பதை நம்மால் உணரமுடியும். ஏன் தேவன் நம்மீது இத்தனை அன்பைக் கொடுப்பதில் மகிழ்ச்சியடைகின்றார் என்பதையும் நம்மால் புரிந்துகொள்ள முடியும். அவருடைய மகிழ்ச்சியிலும், அவர் நம்மை ஆசீர்வதிப்பதால் அடையும் திருப்தியிலும் நாமும் பங்கு பெறுகின்றோம். நான் என்னுடைய அத்தையை மீண்டும் சீக்கிரத்தில் போய் பார்ப்பேன்.

கடினமான புதிர்கள்

நானும் என்னுடைய சிநேகிதியும் நடைபயிற்சி செய்தபோது, நாங்கள் வேதத்தின் மீது வைத்துள்ள அன்பைக் குறித்துப் பேசிக் கொண்டாம். அப்பொழுது அவள், “ஓ, நான் பழைய ஏற்பாட்டை அதிகம் விரும்புவதில்லை, அதிலுள்ள கடினமான காரியங்களும் பழிவாங்கலும் - நான் விரும்பவில்லை!” – இயேசுவே வேண்டும் எனக் கூறியது எனக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது.

நாகூம் போன்ற புத்தகங்களைப் படிக்கும் போது, நாமும் என் சிநேகிதியின் கருத்தை ஒத்துக் கொள்வோம். “கர்த்தர் நீதியைச் சரிகட்டுகிறவர், உக்கிர கோபமுள்ளவர்;” (நாகூம் 1:2) என்ற வார்த்தை நம்மைத் கலங்கச் செய்கிறது. ஆயினும் இதற்கு அடுத்த வார்த்தை நம்மை நம்பிக்கையால் நிரப்புகிறது. “கர்த்தர் நீடிய சாந்தமும், மிகுந்த வல்லமையுமுள்ளவர்” (வச. 3). தேவனுடைய கோபத்தைக் குறித்து இன்னும் சற்று ஆழமாக ஆராய்வோமாயின், அவர் தமது கோபத்தைச் செயல்படுத்துவது, தன்னுடைய ஜனங்களைப் பாதுகாக்கவும், அவருடைய பெயரை நிலைநிறுத்தவுமே என்பதைப் புரிந்து கொள்வோம். தேவன் நம்மீது அளவற்ற அன்பு வைத்திருப்பதால், நாம் செய்த தவறுகளுக்கு நியாயத்தைச் செய்யவும், தம்மை விட்டுத் திரும்பிச் சென்றவர்களை மீட்கும் பொருட்டாகவும் தம்முடைய கோபத்தைக் காண்பிக்கின்றார். அவரைவிட்டுச் சென்றவர்களை மீண்டும் அவரிடம் அழைக்கும் நிகழ்வுகளை நாம் பழைய ஏற்பாட்டில் மட்டுமல்ல, புதிய ஏற்பாட்லும் காண்கின்றோம். எப்படியெனில், நம்முடைய பாவங்களுக்கு பலியாக அவர் தமது சொந்த குமாரனையே அனுப்புகின்றார்.

தேவனுடைய இந்தப் புதிரான குணத்தை நம்மால் புரிந்துகொள்ள முடியாது. அவர் நியாயத்தைச் செயல்படுத்துபவர் மட்டுமல்ல, அவரே அன்பின் ஊற்று என்பதையும் நாம் ஏற்றுக்கொள்வோம். அவருக்கு நாம் பயப்படத்தேவையில்லை, ஏனெனில், “கர்த்தர் நல்லவர், இக்கட்டு நாளிலே அரணான கோட்டை; தம்மை நம்புகிறவர்களை அவர் அறிந்திருக்கிறார்”
(வச. 7).

தீவிர மாற்றந்தரும் அன்பு

அவளுக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த திருமண தேதிக்கு ஒரு வாரத்திற்கு முன்பு சாராவின் நிச்சயதார்த்தம் முறிந்து விட்டது. அவளுடைய கவலை, ஏமாற்றம் இவைகளின் மத்தியில், அவள் தன்னுடைய திருமண வைபவத்திற்காக வாங்கியிருந்த உணவு வகைகளை வீணாக்கக் கூடாது எனத் தீர்மானம் செய்து, அந்தக் கொண்டாட்டத்தை வேறு வகையில் திட்டமிட்டாள். தன்னுடைய விருந்தினர் பட்டியலை மாற்றியமைத்து, அருகிலுள்ள வீடற்றோர் காப்பகத்தில் தங்கியுள்ளவர்களை விருந்திற்கு அழைத்தாள்.

இயேசுவும் இத்தகைய உறவினர் அல்லாதோரிடம் காட்டும் கருணையை விரும்புகின்றார். அவர் பரிசேயரிடம் பேசிய போது, “நீ விருந்துபண்ணும்போது ஏழைகளையும், ஊனரையும், சப்பாணிகளையும், குருடரையும் அழைப்பாயாக. அப்பொழுது நீ பாக்கியவானாயிருப்பாய்” (லூக். 14:13-14) என்றார். அத்தோடு அவர்கள் உனக்கு பதில் செய்யமாட்டார்கள். ஆனால், உனக்கு தேவனிடமிருந்து ஆசீர்வாதம் வரும் என்றும் கூறினார். தங்களால் எந்த நன்கொடையும் கொடுக்க முடியாத, கவர்ச்சிகரமான உரையாடல் செய்ய முடியாத, அல்லது எந்த சமுதாயத் தொடர்பும் அற்ற மக்களுக்கு உதவுவதையே இயேசுவும் அங்கிகரிக்கின்றார்.

பரிசேயன் ஒருவன் இயேசுவை விருந்துக்கு அழைத்திருந்த போது, இயேசு இந்த வார்த்தைகளைப் பேசினார். அவருடைய செய்தி இருதயத்தை ஊடுருவுவதாகவும், ஆழமானதாயுமிருந்தது. உண்மையான அன்பு ஆழமானது. அன்பு என்பது எந்த பிரதிபலனையும் எதிர்பாராமல் பிறரின் தேவைகளைச் சந்தித்தலாகும். இப்படியே இயேசுவும் நம் ஒவ்வொருவரையும் நேசிக்கின்றார். நம்முடைய உள்ளான ஏழ்மையை அவர் காண்கின்றார். அவருடைய வாழ்வையே நமக்காகக் கொடுத்து அவருடைய அன்பை வெளிப்படுத்தினார்.

இயேசு கிறிஸ்துவை நாம் ஒவ்வொருவரும் அறிந்து கொண்டோமென்பது, அவருடைய முடிவில்லாத அன்பிற்குள் பயணித்தலாகும். “கிறிஸ்துவினுடைய அன்பின் அகலமும், நீளமும், ஆழமும், உயரமும்  இன்னதென்று உணர்ந்து (எபே. 3:18) கண்டறிந்து கொள்ள நம்மனைவரையும் அழைக்கின்றார்.

என்னுடைய பிரியமான நண்பனுக்கு

அப்போஸ்தலனாகிய யோவான் அவனுடைய நண்பன் காயுவுக்கு முதலாம் நூற்றாண்டில் செய்தது, இப்பொழுது இந்த இருபத்தொன்றாம் நூற்றாண்டில் மரித்துக் கொண்டிருக்கின்ற ஒரு செயலாகும். யோவான் அவனுக்கு கடிதம் எழுதுகின்றார்.

நியூயார்க் டைம்ஸ் என்ற பத்திரிக்கையின் ஆசிரியர்களில் ஒருவரான கேத்தரின் பீல்ட் என்பவர், “கடிதம் எழுதுவது பழைய கால கலைகளில் ஒன்றாகிவிட்டது. கடிதங்களைப் பற்றி எண்ணும் போது, தர்ஷீசு பட்டணத்தானாகிய பவுல் நம் மனதில் வருகின்றார்” என எடுத்துக்காட்டாகக் கூறினார். அவரோடு நாம் அப்போஸ்தலனாகிய யோவானையும் சேர்த்துக் கொள்ளலாம்.

அப்போஸ்தலனாகிய யோவான் காயுவுக்கு எழுதிய கடிதத்தில் “உன் ஆத்துமா வாழ்கிறதுபோல நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கும்படி வேண்டுகிறேன்’ என நம்பிக்கையைக் கொடுக்கின்றார். காயுவின் உண்மையைக் குறித்து ஊக்கம் தரும் வார்த்தைகளையும் சபையின் மீது அவன் வைத்திருக்கின்ற அன்பையும் குறித்து எழுதுகின்றார். சபையிலுள்ள ஒரு பிரச்சனையைக் குறித்தும் யோவான் குறிப்பிடுகின்றார். ஆனால், அதனைப்பற்றி பின்னர் தனித்தனியாக எழுதுவதாக வாக்களித்துள்ளார். தேவ நாம மகிமைக்காக நல்லவற்றைச் செய்வதின் கனத்தையும் பற்றி எழுதுகின்றார் எல்லாவற்றிற்கும் மேலாக இது தன் நண்பனை ஊக்கப்படுத்தும்படி சவாலாக எழுதப்பட்ட ஒரு கடிதம்.

மின்னணு தொடர்பு சாதனம் வந்த பின்பு கடிதம் எழுதும் பண்பாடு மறைந்து கொண்டிருக்கிறது. ஆனால், இது நாம் பிறரை ஊக்கப்படுத்துவதிலிருந்து நம்மைத் தடுத்துவிடக்கூடாது. பவுல் ஊக்கமளிக்கும் கடிதங்களை தோல் சுருள்களில் எழுதினார். நாமும் பிறரை வேறுபல வகைகளில் ஊக்கப்படுத்தலாம். இதன் உள்ளான கருத்து, நாம் எவ்வகையில் பிறரை ஊக்கப்படுத்துகிறோம் என்பதல்ல, ஆனால், பிறரை ஊக்கப்படுத்தும்படி ஒரு சிறிய நேரத்தைக் கொடுத்து, இயேசுவின் நாமத்தினால் அவர்கள் மீது நாம் அக்கறை கொள்கிறோம் என்பதைத் தைரியப்படுத்துவதாகும்.

யோவானின் கடிதத்தைத் திறந்த காயு அநுபவித்த ஊக்கத்தை நினைத்துப் பாருங்கள். நாமும் ஊக்கத்தை கொடுக்கும்படி ஒரு தொலைபேசித் தொடர்பு மூலமாகவோ அல்லது சிந்திக்கச் செய்யும் ஓர் எழுத்தின் மூலமாகவோ தேவனுடைய அன்பை நம்முடைய நண்பர்கள் மீது பிரகாசிக்கச் செய்வோமா?

சுகம் தரும் வெள்ளம்

இடியோடு கூடிய மழையென்றால் எனக்கு மிகவும் விருப்பம். மிகப் பெரிய புயல், இடி முழக்கத்தோடு தண்ணீரைக் கொட்டிக் கொண்டிருக்கும் போதெல்லாம், சிறுமியாக இருந்த நான், எனது உடன் பிறப்புகளுடன், எங்கள் வீட்டின் வெளியே அங்கும் இங்குமாக ஓடி, வழுக்கி விழுந்து, சறுக்கி விளையாடி மகிழ்வேன். நாங்கள் வீட்டிற்குத் திரும்பும் போது எங்கள் எலும்புவரை நனைந்ததைப் போன்றிருப்போம்.

அந்த சில நிமிடங்கள் நாங்கள் மிகவும் உற்சாகமாகவும், மிகவும் வலிமையான ஒன்றினுள் மூழ்கியிருப்பதைப் போன்றும் உணர்வோம். அது ஒரு விளையாட்டா அல்லது பயங்கரமானதாவென நாங்கள் அறியோம்.

சங்கீதம் 107ல் கூறப்பட்டுள்ளபடி கர்த்தர் அவாந்தரவெளியைத் தண்ணீர்த்தடாகமாகவும், வறண்ட நிலத்தை “நீரூற்றுகளாகவும்” மாற்றுவார் (வச. 35) என்பதை வாசிக்கும் போது என்னுடைய இளமைப்பருவ இந்நிகழ்வு என் மனதிற்கு வந்தது. இவ்வாறு ஒரு பாலைவனத்தைச், சோலைவனமாக ஒரு மழை மாற்றியதெனில், அது ஒரு சாதாரண மழையல்ல, கொட்டித் தீர்த்த பெரு மழை, வறண்ட நிலத்தின் ஒவ்வொரு வெடிப்பின் வழியேயும் சென்று, அந்நிலத்திற்கு ஒரு புதிய வாழ்வு கொடுத்த மழை.

நாமும் இத்தகைய புதுப்பித்தலுக்காகத் தான் ஏங்கிக் கொண்டிருக்கிறோமல்லவா? நம்முடைய வாழ்வும் பசியோடும், தாகத்தோடும் ஆத்துமா தொய்ந்ததாகவும் வனாந்திரத்திலே அவாந்தரவழியாய் அலைந்து திரிந்தும் தாபரிக்கும் ஊரைக் காணமலிருப்பதைப் போன்றிருக்கின்றதோ? (வச. 4-5). நமக்கு நம்பிக்கைக்கும் மேலான ஒன்று தேவை. நம்மில் வேரூன்றிவிட்ட பாவம் நம்மை அந்தகாரத்திலும் மரண இருளிலும் அழித்திவிட்டதோ? (வச. 10-11). நம்முடைய இருதயத்தில் ஒரு மாற்றம் தேவை.

இத்தகைய மாற்றத்தை நம்முடைய தேவனாலேயே தர முடியும் (வச. 20). நம்முடைய கட்டுகளின் சங்கிலிகளை உடைக்க வல்லவரிடம் நம்முடைய பயங்களையும், அவமானங்களையும் கொண்டு வருவோம். அவர் நம் இருளை அகற்றி ஒளிமயமாக்குவார் (வச. 13-14).

நாம் பயப்படும் பொது ஒரு நங்கூரம்

நீங்கள் கவலைப்படுபவரா? நானும் அப்படித்தான். நான் அநேகமாக எல்லா நாட்களிலும் பதட்டத்தோடு போராடிக் கொண்டிருப்பவன். நான் பெரிய காரியங்களைக் குறித்தும் கவலைப்படுவேன், சிறிய காரியங்களைக் குறித்தும் கவலைப்படுவேன், சிலவேளைகளில் எல்லாவற்றைக் குறித்தும் கவலைப்படுவேன். என்னுடைய வாலிபப்பருவத்தில் ஒருமுறை என்னுடைய பெற்றோர் வர 4 மணி நேரம் தாமதமான போது, நான் காவல்துறையை அழைத்துவிட்டேன்.

வேதாகமம் நம்மை பயப்பட வேண்டாமென அடிக்கடி சொல்லுகிறது. தேவனுடைய நன்மையும், வல்லமையும் நமக்கிருப்பதால், அவர் இயேசுவை நமக்காக பலியாக அனுப்பியதால் பரிசுத்த ஆவியானவரை நமக்கு வழிகாட்டும்படி தந்துள்ளதால், நம்முடைய வாழ்வை பயம் மேற்கொள்ளத் தேவையில்லை. நாம் கடினமான சூழல்களையும் எளிதாக சந்திக்கலாம். தேவன் நம்முடைய சூழ்நிலைகளில் நம்மோடுவருவதாக வாக்களித்துள்ளார்.

நான் மிகவும் பயப்பட்ட நேரங்களில் எனக்கு மிகவும் உதவிய பகுதி ஏசாயா 51:12-16. இப்பகுதியில், மிக அதிகமாக வேதனைகளை அனுபவித்த அவருடைய ஜனங்களிடம் தேவன் இன்னும் அவர்களோடு இருப்பதாக நினைப்பூட்டுகின்றார். நாம் எத்தகைய கடினமான வேளைகளை சந்தித்தாலும் அவருடைய ஆறுதலளிக்கும் பிரசன்னம் நம்மோடிருப்பது உண்மை. “நான் நானே உங்களுக்கு ஆறுதல் செய்கிறவர்” என ஏசாயா தீர்க்கன் மூலமாக உரைக்கின்றார்.

நான் இந்த வாக்குத்தத்தத்தை நேசிக்கின்றேன், இந்த வார்த்தைகள் என் ஆன்மாவையும், உணர்வுகளையும் வலுப்படுத்துகின்ற நங்கூரம், என்னுடைய பயம் என் மேல் விழுந்து என்னை அமுக்குகையில், என் வாழ்வின் துயரங்கள் என்னை மேற்கொள்ள முயற்சிக்கும் போது, நான் இந்த வாக்கைப் பற்றிக்கொள்வேன் (வச. 13). இந்தப் பகுதியின் மூலம் நாம் நம்பிக்கையோடு அவரைச் சார்ந்து “வானங்களை விரித்தவரை”, நம்மை ஆறுதல் செய்கிறவரை, நோக்கி நம் கண்களை உயர்த்திப் பார்க்கும்படி நம்மையழைக்கின்றார் (வச. 13).

எல்லையில்லா அன்பு

ஒரு புத்திசாலியான நண்பன் என்னிடம் “நீ எப்பொழுதும்” அல்லது “நீ ஒரு போதும்” என்ற வார்த்தைகளை என்னுடைய சம்பாஷணைகளில் தவிர்த்துவிடுமாறும், முக்கியமாக என்னுடைய குடும்பத்தினரோடு பேசும் போதும் தவிர்க்கும்படியும் கூறினான். நாம் நேசிப்பவர்களிடம் கூட அன்பற்ற வார்த்தைகளைக் கூறி அவர்களை எளிதாக விமர்சனம் செய்துவிடுகின்றோம். ஆனால், நம்முடைய தேவன் நம்மீது வைத்திருக்கும் எல்லையில்லா அன்பில் ஒருபோதும் மாற்றமேயில்லை.

சங்கீதம் 145ல் “யாவரும்”, “எல்லாம்” “எல்லாரும்” என்ற வார்த்தைகள் அதிகம் உள்ளன. “கர்த்தர் எல்லார்மேலும் தயவுள்ளவர்; அவர் இரக்கங்கள் அவருடைய எல்லாக் கிரியைகளின் மேலுமுள்ளது” (வச. 9) “கர்த்தர் விழுகிற யாவரையும் தாங்கி, மடங்கடிக்கப்பட்ட யாவரையும் தூக்கிவிடுகிறார்” (வச. 14) “கர்த்தர் தமது வழிகளிலெல்லாம் நீதியுள்ளவரும், தமது கிரியைகளிலெல்லாம் கிருபையுள்ளவருமாயிருக்கிறார்” (வச. 17). “கர்த்தர் தம்மில் அன்புகூருகிற யாவரையும் காப்பாற்றி, துன்மார்க்கர் யாவரையும் அழிப்பார்” (வச. 20).

இந்த சங்கீதம், தேவனுடைய அன்பு எல்லையில்லாதது, அவர் பாரபட்சமில்லாமல் எல்லார் மேலும் அன்பு கூருகின்றார் என அநேகமுறை கூறுகின்றது. புதிய ஏற்பாட்டில் இந்த அன்பின் வெளிப்பாட்டை இயேசு கிறிஸ்துவில் காண்கின்றோம். “தேவன் தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு அவரைத் தந்தருளி இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்” (யோவா. 3:16).

சங்கீதம் 145ல், “தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும் கர்த்தர் சமீபமாயிருக்கிறார். அவர் தமக்குப் பயந்தவர்களுடைய விருப்பத்தின்படி செய்து, அவர்கள் கூப்பிடுதலைக் கேட்டு, அவர்களை இரட்சிக்கிறார்” (வச. 18-19) எனக் காண்கின்றோம்.

தேவன் நம்மீது வைத்திருக்கின்ற அன்பு என்றும் நிலையானது, அது ஒருபோதும் ஒழியாது.