
ஒற்றுமை
1722ஆம் ஆண்டு செக்கஸ்லோவேக்கியாவில் வாழ்ந்த ஒரு சிறு கூட்டமான மொரேவியன் கிறிஸ்தவர்கள் துன்புறுத்தலுக்குத் தப்பி, தயாளகுணம் படைத்த ஒரு ஜெர்மானிய சீமானை அடைந்தனர். நான்கு ஆண்டிற்குள் மேலும் 300 பேர் வந்து சேர்ந்தனர். உபத்திரவப் பட்ட இந்த அகதிகள், ஒரே குழுவாகத் தங்கியிருப்பதற்குப் பதிலாக தங்களுக்குள் பல்வேறு பிரிவினைகளை ஏற்படுத்தினர். கிறிஸ்தவத்தை வெவ்வேறு கண்ணோட்டத்துடன் பார்த்து பிரிவுகளை ஏற்படுத்திக் கொண்டனர். அப்பொழுது அவர்களுக்கு ஒரு சிறிய வாய்ப்பளிக்கப் பட்டது. அது அவர்களுக்குள் ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்தது. அவர்களனைவரும் எதை ஏற்றுக் கொள்ளவில்லையோ அதை விட்டு விட்டு, எதை ஏற்றுக் கொள்கின்றனரோ அதை மட்டுமே முக்கியப் படுத்த ஆரம்பித்தனர். அதன் விளைவாக ஒற்றுமை ஏற்பட்டது.
எபேசு சபை விசுவாசிகளை ஒற்றுமையாக வாழும்படி அப்போஸ்தலனாகிய பவுல் ஊக்கப் படுத்துகின்றார். பாவம், எப்பொழுதும் பிரச்சனைகளையும், தன்னலத்தையும், உறவுகளில் விரிசலையும் கொண்டு வரும். கிறிஸ்துவினால் புதிய வாழ்வைப் பெற்றுக் கொண்ட எபேசு சபையினர் தாங்கள் பெற்றுக் கொண்ட புதிய அடையாளத்தை, செயலில் காட்டி வாழும்படி சொல்கின்றார். (எபேசியர் 5:2) எல்லாவற்றிற்கும் மேலாக “சமாதானக் கட்டினால் ஆவியின் ஒருமையைக் காத்துக் கொள்வதற்கு ஜாக்கிரதையாயிருங்கள்” (4:3) என்கிறார்.
இந்த சமாதானமும் ஒற்றுமையும் மனிதரின் திறமையால் கொண்டு வரக்கூடிய நட்புறவுகள் அல்ல. நாம், “மிகுந்த மனத் தாழ்மையும், சாந்தமும், நீடிய பொறுமையும் உடையவர்களால் அன்பினால் ஒருவரையொருவர் தாங்க வேண்டும் (வச. 2) இது மனிதனால் கூடாதது. நம்முடைய சொந்த முயற்சியால் நாம் ஒற்றுமையைக் கொண்டு வர முடியாது. “மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியை செய்கிற தேவ வல்லமையின் படியே” இது கூடும் (3:20).

எவ்வளவு விலையானாலும்
கிறிஸ்துவின் அப்போஸ்தலனாகிய பவுலைப் பற்றிய திரைப்படம், ஆரம்ப நாட்களில் சபைகளில் ஏற்பட்ட துன்பங்களை அப்படியே காட்டுகின்றது. அந்த திரைப்படத்தில் வருகின்ற சிறிய கதாப்பாத்திரங்கள் கூட இயேசுவைப் பின்பற்றுவது மிகவும் ஆபத்தானது என வெளிப்படுத்துகின்றன. அப்படத்தில் வரும் கதாபாத்திரங்களான அடிபடும் ஒரு பெண், அடிக்கப் படும் ஒரு ஆண் இன்னும் தங்கள் உயிரையேயிழந்த நபர்கள் 1, 2, 3 எனக் காணும் போது, இவ்வாறு சிந்திக்கத் தோன்றும்.
கிறிஸ்துவோடு நம்மை ஐக்கியப் படுத்துவது என்பது மிகவும் விலையேறப் பெற்றது. உலகின் பல பகுதிகளில் நடைபெறும் காரியங்கள் இயேசுவைப் பின்பற்றுவது மிக ஆபத்தானது எனக் காட்டுகின்றது. இன்றும் அநேக ஆலயங்கள் இத்தகைய துன்பங்களைச் சந்திக்கின்றன. நம்மில் சிலர் தங்களுடைய விசுவாசத்தினிமித்தம் இழிவாக நடத்தப் படலாம், அல்லது தங்களுக்கு வர வேண்டிய பதவி உயர்வு அவர்களின் விசுவாசத்தினிமித்தம் கொடுக்கப் படாமல் தடுக்கப் பட்டிருக்கலாம்.
ஆயினும் சமுதாய அந்தஸ்தை தியாகம் செய்வதற்கும், தங்களுடைய வாழ்வையே தியாகம் செய்வதற்கும் மிகப் பெரிய வேறுபாடுள்ளது. உண்மையில் தன்னார்வம், பொருளாதார நிலைப்பாடு, சமுதாய அந்தஸ்து ஆகியவை எப்பொழுதும் மனிதனை ஈர்த்துக் கொள்ளுபவை. இத்தகைய செயல்களை இயேசுவின் காலத்தில் அவரைப் பின்பற்றியவர்களிடமும் காண்கிறோம். இயேசு சிலுவையில் அறையப் படுவதற்குச் சில நாட்களுக்கு முன்பு வரை அநேக இஸ்ரவேலர் இயேசுவைப் புறக்கணித்த போதும் (யோவா. 12:37) அதிகாரிகளிலும் அநேகர் அவரிடத்தில் விசுவாசம் வைத்தார்கள். (வச. 42) என யோவான் எழுதுகின்றார். ஆனாலும் அவர்கள் தங்கள் விசுவாசத்தை அறிக்கை பண்ணாதிருந்தார்கள். ஏனெனில் அவர்கள் தேவனுடைய பாராட்டுதலை விட மனிதனின் புகழ்ச்சியையே அதிகம் விரும்பினார்கள் (வ42-43)
இன்றைக்கும் சமுதாயச் சூழல்கள், கிறிஸ்துவின் மீது நாம் வைத்துள்ள விசுவாசத்தை மறைத்துக் கொள்ளச் செய்கின்றது. ஆனால் என்ன விளைவைச் சந்திக்க நேர்ந்தாலும், நாம் அனைவரும் மனிதனின் புகழ்ச்சியை நாடாமல் தேவனுடைய பார்வைக்கு நலமானதைச் செய்ய ஒன்றுபட்டு நிற்போம்.

நாம் எதைச் செய்தாலும்
சி.எஸ். லூயிஸ் என்பவர் தான் எழுதிய “எதிர் பாராத சந்தோஷம்” (Surprised by Joy) என்ற புத்தகத்தில் தனது 33வது வயதில் எப்படி கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டார் என்று எழுதியுள்ளார். “எதிர்ப்பைத் தெரிவித்தும், போராடியும், வெறுப்பைக் காண்பித்தும், ஏதாவது ஒரு வழியில் தப்பித்துக் கொள்ள வகை தேடியும்” முடியாமல் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டதாக தன்னுடைய புத்தகத்தில் எழுதியுள்ளார். லூயிஸின் தனிப்பட்ட எதிர்ப்புகள், குறைபாடுகள் மற்றும் தடைகளின் மத்தியிலும், தேவன் அவரை ஒரு தைரியமான விசுவாச வீரனாக மாற்றினார். கிறிஸ்துவின் உண்மை, அன்பு ஆகியவற்றை லூயிஸ் தன்னுடைய வல்லமையான கதைகளாலும், கட்டுரைகளாலும் வெளிக் காட்டினார். அவர் மரித்த பின்னரும் ஐம்பத்தைந்து ஆண்டுகளாக அவை வாசிக்கப்பட்டும், பிறரோடு பகிர்ந்து கொள்ளப்பட்டும் வருகின்றன. அவருடைய வாழ்வு அவருடைய நம்பிக்கையை வெளிப் படுத்தியது. “ஒரு மனிதன் மற்றொரு இலக்கினை நிர்ணயிக்க அல்லது ஒரு புதிய கனவினைக் காண வயது ஒரு வரம்பல்ல” என்பதை அவருடைய வாழ்வு காட்டியது.
நாம். நமக்குத் திட்டங்களை ஏற்படுத்தி, கனவுகளைக் காணும் போது, தேவன் நம்முடைய திட்டங்களைத் தூய்மைப் படுத்தி, நாம் தேவனுக்காகச் செய்யும் காரியங்களை முழு அர்ப்பணத்தோடு செய்யும்படி நம்மை பெலப் படுத்துகின்றார் (நீதி. 16:1-3). சாதாரணப் பணியிலிருந்து மிகப் பெரிய சாதனை வரை அனைத்திலும் நம்மைப் படைத்த சர்வ வல்ல தேவனுக்கு மகிமையுண்டாகும்படி நம்மால் வாழ முடியும். ஏனெனில், நம்முடைய நடைகளை உறுதிப் படுத்துகின்றவர் கர்த்தர் (வச. 4,9). நம்முடைய ஒவ்வொரு செயலையும், ஒவ்வொரு வார்த்தையையும் தேவனே கவனித்துக் கொள்வதால் (வச. 7) அவை தேவனை கனப்படுத்துவதாக இருக்கின்றன.
நம்முடைய தடைகளும், குறுக்கீடுகளும், ஓரிடத்தில் நிலைப்பட்டு விடும் தன்மையும், குறுகிய கனவுகளும் தேவனுடைய செயல்பாட்டிற்குத் தடைகளாகாது. நாம் அவருக்காக வாழ தேர்ந்து கொள்ளும் போது, நம்மை முழுமையாக அர்ப்பணித்து அவரையே சார்ந்து இருப்போமாகில், அவர் நமக்கென்று வைத்திருக்கும் திட்டங்களைச் செயல் படுத்துவார். நாம் எதைச் செய்தாலும் அவரோடும் அவருக்காகவும் அவர் மூலமாகவுமே செய்ய முடியும்.

நாவைக் கட்டுப்படுத்துதல்
எழுத்தாளரான பெரில் மார்க்ஹாம் எழுதிய இரவில் மேற்குத்திசையில் “In west with the night” என்ற புத்தகத்தில் வரும் கதாநாயகிக்கு கம்ஸிஸ்கன் என்ற கம்பீரமான ஆண் குதிரையை பழக்கும் கடினமான பணி அவளுக்குக் கொடுக்கப் பட்டது. அவள் அநேக யுக்திகளைக் கையாண்டும் அவளால் அந்த முரட்டுக் குதிரையை அடக்க முடியவில்லை. எத்தனை முயன்றும் அதனுடைய விடாப்பிடியான குணங்களில் ஒன்றை மட்டுமே அவளால் அடக்க முடிந்தது.
நம்மில் எத்தனை பேர் இதைப் போலவே நம்முடைய நாவை அடக்க போராடிக் கொண்டிருக்கின்றோம்? அப்போஸ்தலனாகிய யாக்கோபு நாவைக் குதிரையின் கடிவாளத்திற்கும், கப்பலின் சுக்கானுக்கும் ஒப்பிடுகின்றார் (யாக். 3:3-5). மேலும், “துதித்தலும் சபித்தலும் ஒரே வாயிலிருந்து புறப்படுகிறது, என் சகோதரரே, இப்படியிருக்கலாகாது” என்று வருந்துகின்றார்.
அப்படியானால் நாவினையடக்க என்ன செய்யலாம்? அப்போஸ்தலனாகிய பவுல் நாவையடக்கும்படி சில ஆலோசனைகளைத் தருகின்றார். முதலாவது உண்மையை மட்டும் பேச வேண்டும் (எபே. 4:25). அதற்காக கடினமான வாழ்க்கைகளை உபயோகிக்க வேண்டாம். மேலும், “கெட்ட வார்த்தை ஒன்றும் உங்கள் வாயிலிருந்து புறப்பட வேண்டாம். பக்திவிருத்திக்கு ஏதுவான நல்ல வார்த்தை உண்டானால் அதையே கேட்கிறவர்களுக்குப் பிரயோஜனமுண்டாகும் படி பேசுங்கள்” (வச. 29) என்கின்றார். நம் பேச்சிலுள்ள வேண்டாத வார்த்தைகளை அகற்றிவிட வேண்டும். “சகல விதமான கசப்பும், கோபமும், மூர்க்கமும் கூக்குரலும் தூஷணமும் மற்ற எந்தத் துர்க்குணமும் உங்களை விட்டு நீங்கக் கடவது.”
(வச. 31) இது எளிதானதா? நம்முடைய சுய முயற்சியினால் இது கூடாததுதான். ஆனால் பரிசுத்த ஆவியானவரை நாம் சார்ந்திருக்கும் போது அவர் நமக்கு உதவி செய்கின்றார்.
கம்சிஸ்கன் என்ற குதிரையோடு போராடும் போது வெற்றி பெறும் வரை தொடர்ந்து முயற்சிக்க வேண்டுமென மார்க்ஹாம் கற்றுக் கொண்டார். இதைப் போன்று நாவையடக்குவதற்கும் தொடர்ந்து முயற்சிக்க வேண்டும்.
