வகை  |  odb

நிலைத்திருக்கும் ஜெபங்கள்

“ஜெபங்கள் சாவில்லாதவை” என்பவை இ.எம். பவுண்ட்ஸ் (1835-1913) என்பவர் ஜெபத்தை குறித்து எழுதிய தனிச்சிறப்பு வாய்ந்த, பல தலைமுறையினரின் கவனத்தையீர்த்த வார்த்தைகள். என்றும் நிலைத்திருக்கும் வல்லமை பெற்ற நம்முடைய ஜெபங்களைப் பற்றி அவர், “ ஜெபத்தை உச்சரித்த உதடுகளும் சாவில் மூடப்பட்டு விடலாம், ஜெபத்தை உணர்ந்த இருதயமும் துடிப்பை நிறுத்தி விடலாம், ஆனால், ஜெபங்கள் தேவனுக்கு முன்பாக ஜீவனுள்ளவைகளாய் நிற்கின்றன. அவை தேவனுடைய இருதயத்தில் இடம் பெறுகின்றன. ஜெபங்கள் அவற்றை உச்சரித்தவர்களின் வாழ் நாட்களையும், அவர்களின் தலைமுறையையும், ஒரு யுகத்தையும், இந்த உலகையும் விட தாண்டி வாழ்பவை” என்று எழுதியுள்ளார்.

உன்னுடைய துன்பங்கள், வேதனைகள், துயரங்களின் மத்தியில் நீ ஏறெடுத்த ஜெபங்கள் தேவனை அடைந்தனவா என்று எப்பொழுதாகிலும் நினைத்ததுண்டா? பவுண்ட்ஸ்ஸின் வார்த்தைகளின் உட்கருத்தும், வெளிப்படுத்தல் 8:1-5ல் கூறப்பட்டுள்ள வார்த்தைகளும் நம்முடைய ஜெபங்களின் முக்கியத்துவத்தை நினைப்பூட்டுகின்றன. பரலோகத்தில் தேவன் வீற்றிருக்கும் சிங்காசனம், (7:17) உள்ளது, அந்த இடம் தான் இவ்வுலகத்தை கட்டுப்படுத்தும் அறை. தேவனுக்கு முன்பாக அவருக்கு பணி செய்யும் தூதர்கள் நிற்கின்றார்கள் (வச. 2) ஒரு தூதன் பழைய ஏற்பாட்டு ஆசாரியரைப் போன்று, தூபம் காட்டும் பொற்கலசத்தைப் பிடித்துக்கொண்டு, சகல பரிசுத்தவான்களின் ஜெபங்களோடு தூபவர்க்கத்தை செலுத்துகின்றான்.(வச. 3,4) புவியில் நாம் ஏறெடுக்கும் ஜெபங்கள் பரலோகத்தின் தேவனிடம் கொடுக்கப்படுகின்ற இக்காட்சி, நம் கண்களைத் திறந்து, நமக்கு ஊக்கத்தை தருகிறதல்லவா? நம்முடைய ஜெபங்கள் வழியில் தொலைந்திருக்கலாம் அல்லது மறக்கப்பட்டிருக்கலாம் என்று நாம் நினைக்கலாம். ஆனால் நாம் இங்கே பார்க்கும் காட்சி நமக்கு ஆறுதலாகவும், நாம் ஜெபத்தில் உறுதியாய் இருக்கவும் நம்மை கட்டாயப்படுத்துகின்றது. நம்முடைய ஜெபங்கள் தேவனுக்கு விலையேறப் பெற்றவை!

அது அற்புதமானது!

அது, எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான திறந்த வெளி ஓட்டப் பந்தயம். ஆனால் அவளுக்கு அதில் பங்கு பெற விருப்பம் இல்லை. அவள், அந்த நிகழ்ச்சிக்காக தயாரித்துக் கொண்டிருந்த போதும், தான் மோசமாக செய்து விடக் கூடும் என பயந்தாள். இருப்பினும், எல்லாரோடும் சேர்ந்து ஓட்டத்தை ஆரம்பித்தாள். அந்த இரண்டு மைல் ஓட்டத்தை ஒவ்வொரு நபராக முடிக்க ஆரம்பித்தனர். ஒருசில ஆர்வமற்ற நபர்கள் மட்டுமே ஓடிக் கொண்டிருந்தனர். தன்னுடைய மகள் ஓட்டத்தை முடிப்பதைக் காண வந்திருந்த அவளுடைய தாயார், தொலைவில் அவள் ஓடி வருவதைக் கண்டார். உடனே அவள் ஓட்டத்தை முடிக்கும் கோட்டிற்குச் சென்றாள், அவமானப்படும் படி, முடிக்கும் தன் மகளைத் தேற்றும்படி தயாராக நின்றாள் ஆனால் அந்த இளம்பெண், தன்னுடைய தாயாரைப் பார்த்ததும் “அது மிக அற்புதமானது!” என்றாள்.

கடைசியாக முடித்தது எப்படி அற்புதமாயிருக்க முடியும்? அதை முடித்ததாலேயே அந்தப் பெண், தனக்கு கடினமாயிருந்த ஒன்றை நிறைவேற்றி முடித்தாள்! கடின உழைப்பையும், தனக்கு கொடுக்கப்பட்டதில் ஜாக்கிரதையாய் இருப்பதையும் வேதாகமம் பாராட்டுகிறது. விளையாட்டு போட்டிகளும், இசைப்பயிற்சியும் மற்றும் சில காரியங்களிலிருந்தும் இந்த விடாப்பிடியான முயற்சியைக் கற்றுக்கொள்ளலாம் 

நீதிமொழிகள் 12:24ல், “ஜாக்கிரதையுள்ளவர்களுடைய கை ஆளுகைசெய்யும்; சோம்பேறியோ பகுதி கட்டுவான்.” எனவும்,”சகல பிரயாசத்தினாலும் பிரயோஜனமுண்டு; உதடுகளின் பேச்சோ வறுமையை மாத்திரம் தரும்.” (14:23) என்றும் காண்கிறோம். இந்த ஞானமுள்ள யோசனைகளே—வாக்குத்தத்தங்களல்ல நாம் தேவனுக்கு இன்னும் நன்கு பணி செய்ய, நமக்கு உதவும். 

தேவன் நமக்கு வைத்திருக்கும் திட்டங்களில், வேலையும் அடங்கும். ஆதாமின் வீழ்ச்சிக்கு முன்பு, தேவன் அவனை, “ஏதேன் தோட்டத்தை பண்படுத்தவும், காக்கவும் வைத்தார்” (ஆதி. 2:15). எனவே எதைச் செய்தாலும் அதை… மனப்பூர்வமாய் செய்யுங்கள்” (கொலோ. 3:24) தேவன் தரும் பெலத்தோடு நம் வேலையைச் செய்வோம், அதற்கான பலனை அவர் தருவார்.

“உன்னை நேசிக்கின்றேன்—முழு உலகளவிற்கு”

என்னுடைய உறவினளான, மூன்று வயது ஜென்னா வெளிப்படுத்தும் ஒரு காரியம் என் மனதை விட்டு அகல்வதேயில்லை. ஒரு வாழைப்பழ கிரீம் பை, டிராம்பொலின் விளையாட்டு அல்லது ஃப்ரிஸ்பீ விளையாட்டு, ஏதோ ஒன்றை அவள் மிகவும் நேசித்தால், அதை வெளிப்படுத்த “உலகளவுக்கு உன்னை நேசிக்கின்றேன்” என்று தன் கரங்களை விரித்து அசைத்து தெரிவிப்பாள்.

இந்த அளவுக்கு நான் எதையாகிலும் நேசித்திருக்கின்றேனா என்று நான் நினைத்துப் பார்த்ததுண்டு. அப்படி ஒன்றும் நினைவிலில்லை.

“தேவன் அன்பாகவே இருக்கிறார்” (1 யோவா. 4:8,16) என யோவான் திரும்பத் திரும்ப எழுதுகின்றான். நம்முடைய கோபம்,பயம் அல்லது வெட்கம் போல அல்லாமல் உண்மையின் ஆழ்ந்த அடித்தளமாகிய, தேவனுடைய அன்பை, வளர்ந்தவர்களாகிய நமக்கு புரிந்து கொள்வது கடினமாயிருக்கின்றது. எதைக் குறித்து நாம் மிகவும் அஞ்சுகின்றோமோ அதன் அடிப்படையில், இவ்வுலகு நம்மை சில குழுக்களாக பிரித்து வைத்துள்ளது. நாம் எதை உண்மை எனக்கருதுகின்றோமோ அதைக் குறித்து எச்சரிக்கின்ற குரலை நாம் அலட்சியப்படுத்தி, அல்லது குற்றப்படுத்தி விட்டு, நாம் ஏதோ ஒன்றில் இணைந்து விடுகிறோம்.

வஞ்சகங்கள், அதிகார போராட்டங்களின் மத்தியில், தேவனுடைய அன்பு, இருளில் பிரகாசிக்கின்ற ஒளியாக, நம்மை தாழ்மை, நம்பிக்கை, மற்றும் அன்பின் பாதையைக் கற்றுக் கொள்ளும் படி, அழைக்கின்றது. (1:7-9; 3:18) .இந்த ஒளி காட்டும் உண்மைகள் வருத்தத்தை தருவதாக இருந்தாலும், நாம் இன்னும் நேசிக்கப்படுகிறோம் என்பதை தெரிந்து கொள்வோம் (4:10,18; ரோம. 8:1). ஜென்னா என் மீது சாய்ந்து கொண்டு, மென்மையாக என்னுடைய காதுக்குள் “உலகளவுக்கு உன்னை நேசிக்கிறேன்” என்றாள், நானும் “நான் உன்னை உலகளவு நேசிக்கிறேன்” என்றேன். ஒவ்வொரு கணமும் நான் அளவற்ற அன்பிற்குள்ளும், கிருபைக்குள்ளும் இருப்பதை நினைப்பதற்கு கிடைத்த தருணத்திற்காக நன்றி கூறுகிறேன்.

ஒரு போதும் நம்பிக்கையை இழக்காதே

என்னுடைய சிநேகிதியின் மருத்துவ அறிக்கை, அவளுக்கு புற்று நோய் என்று தெரிவித்த போது, அவளுடைய காரியங்களை ஒழுங்கு படுத்தும் படி மருத்துவர் ஆலோசனை கூறினார். தன்னுடைய கணவனையும்,சிறு குழந்தைகளையும் நினைத்து கவலை கொண்டவளாய், அழுகையோடு என்னை அழைத்தாள். நான், அவளுடைய அவசர ஜெபத் தேவையை என்னுடைய மற்ற நண்பர்களுக்கும் தெரிவித்தேன். மற்றொரு மருத்துவர் அவள் நம்பிக்கையை விடாதிருக்குமாறு அவளை ஊக்கப்படுத்தியதோடு, அவருடைய குழுவினர், அவளுக்குத் தேவையான அனைத்து உதவியையும் செய்வதாகவும் வாக்களித்தைக் கேட்டு நாங்கள் மகிழ்ச்சியடைந்தோம். சில நாட்கள் கடினமானதாக இருந்த போதிலும், தனக்கு எதிராக நடந்த காரியங்களை யெல்லாம் தள்ளி விட்டு, தேவனையே நோக்கிப் பார்த்தாள். தன் நம்பிக்கையை விடாதிருந்தாள்.

என்னுடைய சிநேகிதியின் விடாப்பிடியான நம்பிக்கை, லூக்கா 8ஆம் அதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள, மனிதரால் கைவிடப்பட்ட ஒரு பெண்ணை எனக்கு நினைவு படுத்துகின்றது. பன்னிரண்டு ஆண்டுகளாக சகித்து வந்த வேதனையால் சோர்வுற்று, ஏமாற்றமடைந்து, புறக்கணிக்கப்பட்ட அவள், இயேசுவின் பின் பக்கமாக வந்து, தன் கையை நீட்டி, அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்டாள். அவளுடைய விசுவாசத்தினாலும், இயேசுவின் பேரில் கொண்டிருந்த விடாப்பிடியான நம்பிக்கையாலும், மனிதரால் கொடுக்கமுடியாத சுகத்தை, சூழ்நிலைகள் அவளுக்கு எதிராக அமைந்த போதிலும் உடனேப் பெற்றுக் கொண்டாள் (வச. 43-44).

நாம் முடிவில்லாத வேதனைகளை அநுபவித்துக் கொண்டிருக்கலாம், சூழ்நிலைகள் நம்மை நம்பிக்கை இழக்கச் செய்யலாம், காத்திருத்தல் தாங்க முடியாததாக இருக்கலாம், நமக்கு எதிரான காரியங்கள் தொடர்ந்து பெரிதாகிக் கொண்டேயிருக்கலாம், நாம் தேவன் மீது நம்பிக்கை வைத்திருந்தும், நாம் ஏங்கிக் கொண்டிருக்கும் சுகத்தை இன்னும் பெறாமலிருக்கலாம். எதுவாயினும், இயேசு நம்மை அவரண்டை வரவும், அவர் மீது விசுவாசமாயிருக்கவும் அழைக்கின்றார். அவராலே கூடும் எனவும், அவர் நம்பத்தகுந்தவர், நம்மருகிலிருக்கிறார் என்பதையும் நம்பும் படியும் அழைக்கின்றார்.

அடுத்த காரியத்தை உடனே செய்

சமீபத்தில், எப்பொழுது பிறருக்கு உதவும் படி உணர்ந்தாய்? அத்தகைய சந்தர்ப்பத்தில் செயல்படாமல் இருந்து விட்டாயா? கிளார் டி கிராஃப் தரும் 10 வினாடி சட்டத்தில், நம்முடைய வாழ்வில் கொடுக்கப்படுகின்ற ஒவ்வொரு சந்தர்ப்பமும், ஆவியில் அவரோடு நெருங்கி வாழவும், அவருடைய அன்பினால் கீழ்படிதலுள்ள வாழ்வுக்கு நம்மை அழைக்கும் தேவனுடைய வழிகள் என குறிப்பிடுகின்றார். மேலும், இந்த 10 வினாடி சட்டம் கூறுவது, ”நீ இதைச் செய்யும் படி இயேசு விரும்புகின்றார் என்பதை திட்டமாக உணரும் போது, அதை உடனே செய், உன்னுடைய மனது மாறுவதற்கு முன்பு செய்து விடு” என்பதாகும்.

 “ நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக் கொள்ளுங்கள்” என்று இயேசு கூறுகின்றார் (யோவா. 14:15) நான் இயேசுவை நேசிக்கிறேன், ஆனால், இது அவருடைய சித்தம், இதனை நான் பின்பற்ற வேண்டும் என்பதனை நான் எப்படி உறுதியாகக் கூற முடியும்? என்று நாம் நினைக்கலாம். வேதாகமத்தில் நாம் காணும் ஞானத்தை நாம் புரிந்து கொண்டு அதன் படி நடக்கத் தேவையான ஞானத்தை இயேசு தருகின்றார். அவர், “நான் பிதாவை வேண்டிக் கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்.” (வச. 16) பரிசுத்த ஆவியானவர் நமக்குள்ளே வாசம் பண்ணி, நமக்குள்ளே இருப்பதால், நாம் இயேசுவுக்கு கீழ்ப்படிய கற்றுக் கொள்கின்றோம், அவருடைய “கற்பனைகளையும் கைக் கொள்வோம்” (வச. 15) பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளன் எல்லாவற்றையும் உங்களுக்கு போதித்து, பிதா கூறிய எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார் (வச. 26).

பிதாவை கனப்படுத்தும் பெரிய காரியங்களையும், சிறிய காரியங்களையும் விசுவாசத்தோடு தைரியமாக செய்யும் படி பரிசுத்த ஆவியானவர் நம்மை ஊக்கப்படுத்துவார், இதன் மூலம் நாம் பிதாவிடமும், மற்றவர்களிடமும் வைத்துள்ள அன்பை வெளிப்படுத்துவோம். (வச. 21).