இது உனக்கு நல்லது
2016 ஆம் ஆண்டு, உலகெங்குமுள்ள மக்கள் ஏறத்தாள 9800 கோடி ரூபாய்களை சாக்லேட்டுகளுக்காகச் செலவிட்டுள்ளனர் என்று கணக்கிடப்பட்டது. இத்தனை பெரும் தொகை அதிர்ச்சியைத் தருவதாக இருந்தாலும், ஆச்சரியப்படவேண்டாம். சாக்லேட் ஒரு சுவை மிகுந்த பொருள், அதனை நாம் மகிழ்ச்சியோடு சாப்பிடுகிறோம். அதன் இனிமையை உலகம் முழுமையும் அநுபவித்துள்ளது. இந்த இனிப்பிற்கு, குறிப்பிடத்தக்க சுகாதார நன்மைகளும் உள்ளன. சாக்லேட்டுகளில் ஃபிளாவனாய்டு என்ற பொருள் உள்ளது. இது, உடல் வயதாகுவதைத் தடுக்கிறது, இருதய நோய்களில் இருந்தும் பாதுகாக்கிறது. ஆனால் இதனை மருந்தாக பயன் படுத்தியதாக எங்குமே கேட்டதில்லை. (சிறிதளவு கூட!)
நாம் முதலீடு செய்வதற்கு தகுதி பெற்ற மற்றொரு இனிப்பைக் குறித்து சாலமோன் கூறுகின்றார். அது, ஞானம். அவர் தன்னுடைய மகனிடம், “தேனைச் சாப்பிடு, அது நல்லது.” (நீதி 24:13) என்கின்றார். அதனுடைய இனிமையை ஞானத்திற்கு ஒப்பிடுகின்றார். வேத வாக்கியங்களாகிய ஞானத்தை ஒருவன் உட்கொள்ளும் போது, அது அவனுடைய ஆன்மாவிற்கு இனிமையைத் தருவதோடு, உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும் பயன் படுவதோடு, “எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும்” ஆக்க உதவுகிறது. அதை நம் வாழ்வில் எப்படியாகிலும் அடைந்து விட வேண்டும். (2 தீமோ 3:16-17)
ஞானம், நம்மை சரியான தீர்மானங்கள் எடுக்க வழிநடத்துவதோடு, நம்மைச் சுற்றியுள்ள உலகைப் புரிந்து கொள்ளவும் உதவுகிறது. இதனை நாம் கண்டடையும்படி, நம் முழு முயற்சியையும் செலவளிக்கத் தகுதியானது. சாலமோன் தன்னுடைய மகனுக்கு கூறுவதைப் போன்று, நாம் நேசிப்பவர்களோடு பகிர்ந்து கொள்ளவும் உகந்தது. ஞானம் நிறைந்த வேத வார்த்தைகளை நாம் உட்கொள்ளும் போது, நமக்கு மகிழ்ச்சியைத் தருகின்றது, நம் இருதயத்திற்குத் தெவிட்டாத இனிய விருந்தாக இருக்கிறது, உண்மையில், அது நமக்கு உற்சாகமளிக்கிறது! தேவனே, உம்முடைய வேதம் தரும் இனிமைக்காக உமக்கு நன்றி கூறுகின்றேன்.

ஜெபிக்கும்படி தூண்டப்படல்
“அநேக ஆண்டுகளுக்கு முன்பு, உனக்காக ஜெபிக்கும் படி, நான் அடிக்கடி தூண்டப்பட்டேன். ஏன் என்று தெரியாமல் ஆச்சரியப்பட்டேன்.” இந்தச் செய்தியின் வார்த்தைகள், என்னுடைய ஒரு பழைய சிநேகிதியிடமிருந்து வ ந்தது. அத்தோடு, அவளுடைய வேதாகமத்தில் வைத்துள்ள ஒருஜெபக்குறிப்பின் புகைப்படத்தையும் அனுப்பியிருந்தாள். “ஜேம்ஸ்ஸுக்காக ஜெபி, அவனுடைய மனது, எண்ணங்கள், வார்த்தைகளுக்காக ஜெபி.” என்றிருந்தது. என்னுடைய பெயருக்கு அருகில், அவள் மூன்று தனித் தனியான வருடங்களைக் குறிப்பிட்டிருந்தாள்.
நான் அந்த வருடங்களைப் பார்த்த போது, திகைத்துப் போனேன். நான் மீண்டும் அவளிடம், எந்த மாதத்திலிருந்து ஜெபிக்கத் துவங்கினாள் எனக் கேட்டேன். அவள், “ஏறத்தாள ஜுலை மாதத்திலிருந்து,” என பதிலளித்தாள்.
அந்த மாதத்திலிருந்து தான், நான் உயர் கல்விக்காக, வெளிநாட்டிற்குச் செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருந்தேன். அங்கு, நான் அறிமுகமில்லாத கலாச்சாரத்தையும், மொழியையும் சந்திக்க வேண்டும். எப்பொழுதும் இல்லாத அளவுக்கு, என்னுடைய விசுவாசத்தில் மிகவும் சோர்ந்து போயிருந்தேன். நான் அந்த ஜெபக் குறிப்பை பார்த்தபோது, விலையேறப்பெற்ற ஈவாகிய ஜெபத்தைப் பெற்றுள்ளேன் என்பதை உணர்ந்தேன்.
என்னுடைய சிநேகிதியின் கரிசனை, மற்றும் ஒருவர் ஜெபிக்கத் “தூண்டுவதை,” எனக்கு நினைப்பூட்டியது. இளம் ஊழியரும் நண்பருமான தீமோத்தேயுவுக்கு பவுல் ஆலோசனை கூறும் போது,” நான் பிரதானமாய்ச் சொல்லுகிற புத்தியென்னவெனின், எல்லா மனுஷருக்காகவும் விண்ணப்பங்களையும், ஜெபங்களையும்,வேண்டுதல்களையும், ஸ்தோத்திரங்களையும் பண்ணவேண்டும்.”(1 தீமோ 2:1).இதில் “பிரதானமாய்” என்ற சொல், மிக முக்கியமானது என்பதைக் காட்டுகிறது. “எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறியும் அறிவை அடையவும், தேவன் சித்தமுள்ளவராயிருக்கிறார்.”(வ.4) என பவுல் இயேசுவைக் குறித்து விளக்குவதால், நம்முடைய ஜெபங்கள் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவை எனத் தெரிகின்றது.
விசுவாசமுள்ள ஜெபத்தின் மூலம், தேவன் எண்ணற்ற வழிகளில் பிறரைச் சந்தித்து, உற்சாகப்படுத்தி, அவர்களைத் தம்மண்டை இழுத்துக்கொள்கின்றார். சிலரைக் குறித்து நினைவு வரும் போது, அவர்கள் எத்தகைய சூழ்நிலையில் இருக்கிறார்கள் என்பதை நாம் அறியோம், ஆனால் தேவன் அறிவார். நாம் அவர்களுக்காக ஜெபிக்கும் போது, தேவன் அந்த நபருக்கு உதவி செய்வார்!

அழகிய கனி
மலர்களின் பட்டணம் என்ற நிறுவனம் உருவாவதற்கு காரணமாயிருந்த ரெபேக்கா லெமோஸ் ஓடெரோ என்பவர், “குழந்தைகளே, நீங்கள் ஒரு விதையைத் தோட்டத்தில் எங்கேயாகிலும், நீங்கள் விரும்பும் இடத்தில் எறியுங்கள், பின்னர், அதிலிருந்து என்ன வெளியாகிறது என்று பாருங்கள்” என்றார். இது சரியான தோட்டக் கலையல்ல, எனினும், ஒவ்வொரு விதைக்குள்ளும் ஒரு ஜீவனை உருவாக்கக்கூடிய ஆற்றல் பொதிந்துள்ளது என்ற உண்மையை, அது வெளிப்படுத்தியது. 2004ஆம் ஆண்டிலிருந்து மலர்களின் பட்டணம் என்ற நிறுவனம், பள்ளிகளிலும், குறைந்த வருமானம் உள்ள பகுதிகளிலும் தோட்டங்களை உருவாக்கியது. குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துக்களைப் பற்றி கற்றுக் கொடுக்கப்பட்டது. அவர்களுக்குத் தோட்ட வேலைக்கான திறன்கள் கற்றுக்கொடுக்கப்பட்டன. “பட்டணங்களில் பசுமை நிறைந்த இடங்களை உருவாக்குவதன் மூலம், குழந்தைகள் சுற்றுப்புறங்களிலுள்ள அழகிய இடங்களில் பயன் தரும் காரியங்களைச் செய்வதற்கு வாய்ப்பளிக்கப்படுகின்றது” என்றார், ரெபேக்கா.
இயேசு கிறிஸ்து, விதை விதைப்பதைக் குறித்து ஒரு கதையைக் கூறினார். இந்த விதைகள் நூறு மடங்கு விளைச்சலைத் தந்தன (லூக்கா 8:8) இங்கு, தேவனுடைய வார்த்தைகளாகிய விதைகள் நல்ல நிலத்தில் விதைக்கப் படுகின்றது. “நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக் கேட்டு, அதை உண்மையும், நன்மையுமான இருதயத்திலே காத்துப் பொறுமையுடனே பலன் கொடுக்கிறவர்களாயிருக்கிறார்கள்.” என்பதாக விளக்குகின்றார் (வச. 15).
நாம் மிகுந்த கனிகளைக் கொடுப்பதற்கான ஒரேவழி கிறிஸ்துவில் நிலைத்திருப்பதேயாகும் (யோவா. 15:4). கிறிஸ்து நமக்கு கற்பித்ததைப் போன்று, நாம் அவரைப் பற்றிக் கொண்டால், ஆவியானவர் நம்மில் அவருடைய கனிகளாகிய அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்” (கலா. 5:22-23), ஆகிய இவற்றை நம்மில் காணச்செய்வார். நம்மில் உருவாக்கிய இந்தக் கனிகளின் மூலம், மற்றவர்களின் வாழ்வைச் சந்திக்கச் செய்வார், அவர்களின் வாழ்வும் கனிதரும் வாழ்வாக மாற்றப் படும். இது ஓர் அழகிய வாழ்வை உருவாக்கும்.

உருவாக்கப்பட்ட குறைபாடு
எருசலேம் நகரத்தின் கிழக்குப் பக்கத்தில், இயற்கையில் அமைந்த ஒரு நீரூற்று உள்ளது. அந்தக் காலத்தில், அப்பட்டணத்திற்குத் தண்ணீர் தரக்கூடிய ஒரே ஊற்று அதுதான். ஆனால், அது பட்டணத்தின் அலங்கத்திற்கு வெளியே அமைந்துள்ளது. எருசலேம் நகரத்தைப் பிடிப்பதற்கு உகந்த இடம் இதுதான். ஊடுருவ முடியாத இப்பட்டணத்தை, எதிரிகள் வளைந்து கொண்டு, இந்த நீரூற்றை வேறு திசைக்குத் திருப்பவோ, அல்லது அதன் நீரைத் தடுத்து நிறுத்தவோ செய்தால், அப்பட்டணத்தாருக்குச் சரணடைவதை விட வேறு வழியில்லை.
இந்த பெலவீனத்தையறிந்த எசேக்கியா ராஜா, கடினமான மலை வழியே 1750 அடி நீளமுள்ள கால்வாயை வெட்டி, அதன் வழியே தண்ணீரை பட்டணத்துக்குள் உள்ள குளத்திற்குக் கொண்டு வந்தான் (2 இரா. 20:20, 2 நாளா. 32:2-4). இவை எல்லாவற்றிலும், அதைச் செய்தவரை, அவர் நோக்காமலும், அதை ஏற்படுத்தி, தூரத்திலிருந்து வரும்படி திட்டம் பண்ணினவரைக் கவனியாமலும் போகிறீர்கள், என்று எசேக்கியாவைக் குறித்து கூறுகின்றார் (ஏசா. 22:11) எதைத் திட்டம் பண்ணினார்?
எருசலேம் பட்டணத்திற்குத் தண்ணீர் தரும் ஊற்றை, பட்டணத்திற்கு வெளியே இருக்குமாறு திட்டமிட்டவர் தேவன் தாமே. அந்தப் பட்டணத்தினுள் வாசம் பண்ணுவோர், தங்களுடைய இரட்சிப்புக்கு தேவனாகிய கர்த்தரையே சார்ந்திருக்கும்படி அவர்களுக்கு தொடர்ந்து நினைப்பூட்டவே, அந்த நீரூற்றை பட்டணத்திற்கு வெளியே அமைத்தார்.
இது நம்முடைய குறைபாடுகளும், நம்முடைய நலனுக்காகவே கொடுக்கப்பட்டிருக்கலாம் அல்லவா? அப்போஸ்தலனாகிய பவுலும், தனக்கிருந்த குறைகளைக் குறித்துக் கூறும் போது, “ஆகையால் கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக் குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மை பாராட்டுவேன்” (2 கொரி. 12:9) என்கின்றார். எனவே, நாமும் நமக்கிருக்கின்ற குறைகளை, தேவனுடைய பெலன் நம்மில் வெளிப்படும் படி, கொடுக்கப்பட்ட ஈவுகளாகக் கருதுவோமா?

அன்பில் கழுவப்படல்
தெற்கு கலிஃபோர்னியாவிலுள்ள ஓர் ஆலயத்தின் விசுவாசிகள், தேவனுடைய அன்பை செயல் முறையில் காண்பிக்க விரும்பினர். அவர்கள் அருகிலுள்ள, இயந்திரம் மூலம் துணி துவைக்கும் இடத்தில் கூடி, தங்களின் சமுதாயத்தில் தேவையுள்ளோருக்கு, துணிகளைத் துவைத்து, மடித்து, அவற்றோடு, சூடான உணவையும், மளிகை சாமான்கள் அடங்கிய பைகளையும் சேர்த்து வழங்கினர்.
இவ்வாறு செய்யும் போது, ஒரு தன்னார்வத் தொண்டர் கண்டுபிடித்தது என்னவெனில், “அம்மக்களோடு தொடர்பு கொள்ள வாய்ப்பு கிடைப்பதாகவும், அவர்களுடைய கதைகளைக் கேட்க முடிந்ததாகவும்” கூறினார். அவர்கள் இயேசுவோடு சரியான உறவை வைத்திருப்பதால், தங்களுடைய விசுவாசத்தை வாழ்வில் காட்ட விரும்பினர், அன்பான வார்த்தையாலும், அன்பின் செய்கையாலும் மற்றவர்களுக்கு உதவி, அவர்களோடு உண்மையான உறவை ஏற்படுத்திக் கொள்ள விரும்பினர்.
ஒவ்வொரு விசுவாசியினுடைய உண்மையான விசுவாசத்தின் விளைவை, அவர்களுடைய அன்பின் கிரியைகளில் காணலாம் என அப்போஸ்தலனாகிய யாக்கோபு கூறுகின்றார். “அப்படியே விசுவாசமும் கிரியைகளில்லாதிருந்தால் தன்னிலேதானே செத்ததாயிருக்கும்” (யாக். 2:17) என்று சொல்கின்றார். நாம் தேவனை விசுவாசிக்கிறோம் என்று அறிக்கையிடும் போது, அவருடைய பிள்ளைகளாகின்றோம், நாம் மற்றவர்களுக்குப் பணிசெய்வதன் மூலம் தேவனுக்கு ஊழியம் செய்யும் போது, இயேசுவின் மீது நம்பிக்கை வைத்து, அவரைப் பின்பற்றுகிறவர்களாகிறோம் (வச. 24) ஆவியும், சரீரமும் ஒன்றையொன்று சார்ந்திருப்பதைப் போல, விசுவாசமும், ஊழியமும் ஒன்றையொன்று சார்ந்துள்ளன (வச. 26) என கிறிஸ்துவின் வல்லமை நம் மூலமாக, நம்மில் வெளிப்படுவதை அழகாகக் காட்டுகின்றார்.
தேவன் சிலுவையில் வெளிப்படுத்தின தியாகத்தை நாம் ஏற்றுக்கொண்டு, அவருடைய அன்பினால் முற்றிலும் கழுவப்படும் போது, நம்முடைய உண்மையான விசுவாசம், நாம் முழுமனதோடு பிறருக்குச் செய்யும் அநேகக் கிரியைகளினால் விளங்கும்.