ஒரு பழைய மண் பானை
நான் பல ஆண்டுகளாக அநேக பழைய பானைகளைச் சேகரித்துள்ளேன். அதில், ஆபிராகாம் வாழ்ந்த காலத்தில் உள்ள ஒரு பகுதியிலிருந்து தோண்டி எடுக்கப்பட்ட ஒரு பானை, எனக்கு மிகவும் பிடித்தமானது. எங்கள் வீட்டிலுள்ள பானைகளில் குறைந்தது ஒன்றாகிலும் என்னுடைய வயதைக் காட்டிலும் அதிகமானதாக இருக்கும்! அதில் பார்க்கக் கூடியதாக ஒன்றுமிராது, அவை கறை பிடித்ததும், கீரல் விழுந்ததும், உடைந்ததுமாக இருக்கும். அவைகளை நன்கு தேய்த்து எடுக்க வேண்டும். நானும் மண்ணினாலேயே உருவாக்கப்பட்டேன் என்பதை நினைத்துக் கொள்ளவே அவற்றை வைத்துள்ளேன். நான் உடையக் கூடியதும், பெலவீனமான பானையாக இருந்த போதும், எனக்குள் விலையேறப் பெற்ற செல்வமாகிய இயேசுவைச் சுமக்கிறேன். “இ ந்த பொக்கிஷத்தை (இயேசுவை) மண்பாண்டங்களில் பெற்றிருக்கிறோம்” 2 கொரி.4:7)
மேலும் பவுல், “நாங்கள் எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும் ஒடுங்கிப் போகிறதில்லை; கலக்கமடைந்தும் மன முறிவடைகிறதில்லை; துன்பப்படுத்தப்பட்டும் கைவிடப்படுகிறதில்லை; கீழே தள்ளப்பட்டும் மடிந்து போகிறதில்லை” (வ.8-9). என்கின்றார். நெருக்கப்படல், கலக்கமடைதல், துன்புறுத்தப்படல், கீழே தள்ளப்படல் ஆகிய இந்த அழுத்தங்களை அந்தப் பானை தாங்க வேண்டும். ஒடுங்குவதில்லை, மனமுறிவதில்லை, கைவிடப்படுவதில்லை, மடிந்து போவதில்லை என்பன, நமக்குள்ளேயிருக்கும் இயேசு இவற்றிற்கெதிராக நம்மை பெலப்படுத்தும் விளைவுகளாகும்.
“இயேசுவின் மரணத்தை எப்பொழுதும் எங்கள் சரீரத்தில் சுமந்து திரிகிறோம்” (வ.10) இது, இயேசு நமக்காக அனுதினமும் மரித்தார் என்ற பண்பைக் காட்டுகின்றது. நம்முடைய சுய முயற்சியை மனப்பூர்வமாக சாகடிக்க வேண்டும், நமக்குள்ளே வாசம் பண்ணுகின்றவரை முற்றிலும் போதுமானவராக நம்ப வேண்டும் என்கின்ற பண்பை நமதாக்கிக் கொள்ளவேண்டும்.
அப்படியானால், “கர்த்தராகிய இயேசுவினுடைய ஜீவனும் எங்கள் சரீரத்திலே விளங்கும்” (வ.!0). அதன் விளைவு என்னவெனின், ஒரு பழைய மண்பானையில், இயேசுவின் அழகு காணப்படும்.

நண்பர்களின் இருக்கை
ஜிம்பாபே என்ற ஆப்பிரிக்க தேசத்தின் மக்கள், யுத்தத்தின் விளைவாலும், அதிக வேலையில்லா திண்டாட்டத்தினாலும் விரக்தியடைந்துள்ளனர். அவர்களுக்கு நம்பிக்கைத் தரும் ஒரே இடம் “நண்பர்கள் இருக்கை” என்ற அமைப்பு. நம்பிக்கையிழந்த மக்கள் அவ்விடத்திற்குச் சென்று, பயிற்சி பெற்ற “பாட்டியம்மா” க்களிடம் பேசலாம். இந்த மூத்த பெண்கள், மன அழுத்தத்தால் போராடிக் கொண்டிருக்கிறவர்களின் பேச்சை கவனித்துக் கேட்க கற்றுக் கொண்டவர்கள். அவர்களின் தேச மொழியாகிய ஷோனா மொழியிலே, மன அழுத்தம் என்பது kufungisisa எனப்படும், அதாவது “அதிகமாகச் சிந்தித்தல்” என்பதாகும்.
இந்த நண்பர்களின் இருக்கை, என்ற திட்டம் இன்னும் அநேக இடங்களிலும் நிறுவப்பட்டுள்ளது. சான்சிபார், லண்டன் மற்றும் நியூயார்க் ஆகிய பட்டணங்களிலும் இவை உண்டு. “அதன் விளைவுகளைக் கண்டு மெய் சிலிர்த்துப் போனோம்” என்கின்றார், லண்டனைச் சேர்ந்த ஓர் ஆராய்ச்சியாளர். நியூயார்க்கைச் சேர்ந்த ஓர் ஆலோசகர், “ நீ அத்தகைய ஒரு நண்பர்களின் இருக்கையில் அமர்ந்திருக்கின்றாய் என்பதை அறியும் முன்பே, உன் மீது கரிசனை கொண்ட ஒருவருடன், நீ ஒரு அன்பின் உரையாடலில் இருப்பாய்” என்றார்.
இந்தச் செயல் திட்டத்தின் மூலம், சர்வ வல்ல தேவனிடம் உறவாடும் அற்புதத்தையும், மகிழ்ச்சியையும் கொண்டுவர முடிகிறது. மோசே தேவனோடு உறவாடுவதற்கு இருக்கைகளை பயன் படுத்தவில்லை, மாறாக ஒரு கூடாரம் அமைத்தான். அதற்கு ஆசரிப்புக் கூடாரம் என்று பேரிட்டான். “ஒருவன் தன் சிநேகிதனோடே பேசுவது போல, கர்த்தர் மோசேயோடே முகமுகமாய்ப் பேசினார்” (யாத். 33:11) அவனுடைய பணிவிடைக் காரனாகிய யோசுவா, ஆசரிப்புக் கூடாரத்தை விட்டுப் பிரியாதிருந்தான். அவன் தேவனோடு செலவிடும் நேரத்தை மிகவும் விலையேறப் பெற்றதாகக் கருதியிருக்க வேண்டும் (வ.11).
இப்பொழுது நமக்கு ஓர் ஆசரிப்புக் கூடாரம் தேவையில்லை, இயேசு, பிதாவை நம்மருகிலேயே கொண்டுவந்துவிட்டார். அவர் தம் சீடர்களிடம், “நான் உங்களைச் சிநேகிதர் என்றேன், ஏனெனில் என் பிதாவினிடத்தில் நான் கேள்விப்பட்ட எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தேன்” (யோவா.15:15). ஆம், நம் தேவன் நமக்காகக் காத்திருக்கின்றார், அவர் நம்முடைய இருதயத்திற்கு ஏற்ற ஞானமுள்ள உதவியாளர், நம்மைப் புரிந்து கொள்ளும் நல்ல நண்பர். இப்பொழுதே அவரிடம் பேசு.

குழந்தைகளை தேவனிடம் வழி நடத்துதல்
பெற்றோர் தங்களுடைய குழ ந்தைகளுக்கு, தங்களுடைய மதத்தை உண்மையானது என்று கற்றுக் கொடுப்பது அறநெறியாகாது எனவும், பெற்றோர் தங்களின் நம்பிக்கையை தங்களுடைய குழந்தைகளுக்கும் கொடுப்பது குழந்தைகளை தவறான வழியில் நடத்துவதற்குச் சமம் எனவும் வெளிப்படையாக பேசக்கூடிய நாத்திகன் ஒருவன் கூறினான். இவை தீவிரவாத கருத்துக்களாக இருந்தபடியால், நான் சில பெற்றோரை அணுகி, அவர்களிடம் கருத்து கேட்டேன். அவர்கள் தங்களின் நம்பிக்கையை தங்களின் குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு தயக்கம் காட்டுகின்றனர். ஆனால் நம்மில் அநேகர் நம்முடைய குழந்தைகளின் மீது, அரசியல், ஊட்டச்சத்து மற்றும் விளையாட்டு பற்றிய நம்முடைய கருத்துகளை திணிக்கின்றோம், ஏனெனில் நம்மில் சிலர், ஏதோ காரணங்களுக்காகத் தேவனைப் பற்றிய நம்பிக்கையை வேறு விதமாகத் திரிக்கின்றார்கள்.
இதற்கு மாறாக, பவுல் தீமோத்தேயுவைப்பற்றி எழுதும் போது, “கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினாலே, உன்னை இரட்சிப்புக்கேற்ற ஞானமுள்ளவனாக்கத்தக்க பரிசுத்த வேத எழுத்துக்களை, நீ சிறுவயது முதல் அறிந்தவன்” (2 தீமோ.3:15). தீமோத்தேயு வளர்ந்து வாலிபனான போது, தன்னுடைய சுய முயற்சியினால் கிறிஸ்தவ விசுவாசத்திற்குள் வரவில்லை. அதற்கான சான்றுகளும் இல்லை. ஆனால் அவனுடைய தாயார் அவனுடைய இருதயத்தை தேவனுக்கு நேராகத் திருப்பினார்கள், அவனும் தான் கற்றுக் கொண்டவற்றை, உறுதியாகத் தொடர்ந்தான் (வ.14) தேவனே நம்முடைய வாழ்வும், உண்மையான ஞானத்தின் உறைவிடமாகவும் இருப்பாராயின், நம்முடைய குடும்பங்களில் தேவனுடைய அன்பை மென்மையாக வளரச் செய்வது நமது முக்கிய கடமையாகும்.
நம்முடைய குழந்தைகளின் மீது தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அநேக நம்பிக்கைகள் நம்மைச் சூழ்ந்துள்ளன. டெலிவிஷன் காட்சிகள், திரைப்படங்கள், இசை, ஆசிரியர்கள், நண்பர்கள், ஊடகங்கள் ஆகிய இவைகள், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நம்பிக்கையைக் குறித்த அநேக ஊகங்களைக் கொண்டு வந்து விடுகிறார்கள். அவை நம் குழந்தைகளின் மீது உண்மையாகவே தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. நாம் அமைதியாக இருக்க முடியாது. நாம் அநுபவித்தை அழகிய கிருபை, நம்முடைய குழந்தைகளையும் அந்த தேவனிடம் வழி நடத்தும்படி நம்மைக் கட்டாயப் படுத்துகின்றது.

மிகப்பெரிய மர்மம்
இயேசுவின் பேரில் விசுவாசத்திற்குள் வருவதற்கு முன்பு, நான் சுவிசேஷம் பிரசங்கிக்கப்பட்டதைக் கேட்டிருக்கின்றேன். ஆனால் அவர் யாரென்று அறிய போராடினேன் தேவன் ஒருவரே பாவத்தை மன்னிக்கிறவர் என்று வேதாகமம் கூறுகின்றது. அப்படியிருக்க, எப்படி இயேசுவால் என்னுடைய பாவங்களை மன்னிக்க முடியும்? என்று நம்பத் தடுமாறினேன். ஜெ.ஐ.பாக்கர் எழுதிய “தேவனை அறிந்து கொள்ளல்” (Knowing God) என்ற புத்தகத்தைப் படித்த பின்பு தான், என்னுடைய போராட்டங்களில் நான் மட்டும் தனிமையாக இல்லை என்பதை நான் கண்டுபிடித்தேன். “நசரேயனாகிய இயேசு, மனிதனாகப் பிறந்த தேவன்………..அது உண்மை, ஆனால் அவர் மனிதனாக வாழ்ந்த போது, முழுவதும் தேவத்தன்மையில் தான் இருந்தார் என கூறும் தடுமாற்றமுள்ள கிறிஸ்தவர்களுக்கும்”, அவிசுவாசிகளுக்கும் அவர் எழுதுவது, இதுதான் இரட்சிப்பைப் பெற்றுக்கொள்ள தேவையான உண்மை.
அப்போஸ்தலனாகிய பவுல் இயேசு கிறிஸ்துவை “அதரிசனமான தேவனுடைய தற்சுரூபம்” என்று குறிப்பிடும் போது, அவர் இயேசுவை முற்றிலுமாக, பரிபூரணமான தேவன், படைப்பின் காரணர், பூமியிலும் வானத்திலுமுள்ள சகலத்தையும் தாங்குபவர், ஆனால் பூரண மனிதன் என்கின்றார் கொலோ.1:15-17). இந்த உண்மைதான், இயேசு கிறிஸ்துவின் சாவு மற்றும் உயிர்ப்பின் மூலம், அவர் நம்முடைய பாவத்தின் விளைவுகளைச் சுமந்ததோடு, மனுக்குலம் முழுமையையும் மீட்டார் என்பதைக் காட்டுகின்றது. அனைவரும், அனைத்து படைப்புகளும் மீண்டும் தேவனோடு ஒப்புரவாகும் படிச் செய்தார் என்ற நம்பிக்கையை நமக்குத் தருகின்றது (வ.20-22).
இந்த வியத்தகு அன்பின் செயல் வெளிப்பட்ட நாளில் இருந்து, தேவனாகிய பரிசுத்த ஆவியானவரின் வல்லமையினாலும், குமாரனாகிய இயேசுவின் வாழ்வின் மூலமாகவும் எழுதப்பட்ட வேதவார்த்தையின் மூலம், பிதாவாகிய தேவன் தம்மை வெளிப்படுத்தினார். இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிறவர்கள் இரட்சிக்கப்படுகிறார்கள், ஏனெனில் அவர் இம்மானுவேல்-
தேவன் நம்மோடிருக்கிறார். அல்லேலூயா!

அன்பினைப்பெற வரிசையில் காத்திருக்கத் தேவையில்லை
சிலவேளைகளில் என்னுடைய நாய், என்னுடைய கவனத்தை ஈர்ப்பதற்காக, எனக்குச் சொந்தமான எதையாகிலும், தன்னுடைய வாயில் கவ்விக்கொண்டு, எனக்கு முன்பாக நடந்துவரும். ஒரு நாள், நான் என்னுடைய அறையில் எழுதிக் கொண்டிருந்த போது, எனக்குப் பின் புறமாக வந்த மாக்ஸ் என்ற என்னுடைய நாய், என்னுடைய பணப்பையை கவ்விக் கொண்டு வெளியேறியது. ஆனால் நான் அந்தக் காரியத்தை கவனிக்கவில்லை என்று மாக்ஸ் தெரிந்து கொண்டபோது, அது, பணப்பையைக் கவ்வியபடியே திரும்பி வந்து தன் மூக்கினால் என்னைத்தொட்டது, உற்சாகத்தில் அதன் கண்கள் உருண்டன, வாலை ஆட்டியது, அதனோடு விளையாட வரும்படி என்னைக் கடிந்து கொண்டது.
மாக்ஸின் இந்தச் செயல் எனக்கு சிரிப்பை உண்டாக்கினாலும், எல்லா நேரங்களிலும், முக்கியமாக நான் மற்றவர்களோடு நேரம் செலவிடும் போது, அது அவ்வாறு இருப்பதில்லை. நான் அதிக நேரத்தை என்னுடைய குடும்பத்தினரோடும், நண்பர்களோடும் செலவிட வேண்டுமென விரும்புவதாலும், மற்றும் சிலவேலைகள் என்னுடைய மனதில் இடம் பிடித்திருப்பதாலும், எப்படியாகிலும் அந்த நாள் முடிவதற்குள் என்னுடைய அன்பு நாயிடம் சிறிது நேரம் செலவிட வேண்டும் என்ற விழிப்புணர்வு எனக்குள் இருந்து கொண்டேயிருக்கும்.
நம்முடைய பரலோகத் தந்தை, சர்வ வல்லவர், நம் ஒவ்வொருவரையும் மிக நெருக்கமாகச் சந்தித்து வருகின்றார். நம்முடைய நுரையீரலுக்குள் செல்லும் ஒவ்வொரு மூச்சையும், நம்முடைய வாழ் நாள் முடியும் மட்டும் தாங்கிப் பிடிக்கின்றார் என்பதைத் தெரிந்து கொள்ளும் போது, எத்தனை ஆறுதலாகவுள்ளது. அவர் தம் பிள்ளைகளுக்கு, “உங்கள் முதிர்வயதுவரைக்கும் நான் அப்படிச் செய்வேன்; நரைவயது மட்டும் நான் உங்களைத் தாங்குவேன்; நான் அப்படிச் செய்து வந்தேன்; இனிமேலும் நான் ஏந்துவேன், சுமப்பேன், தப்புவிப்பேன்” (ஏசா.46:4) என்று வாக்களிக்கின்றார்.
தேவன் நமக்கென்று எப்பொழுதும் நேரம் செலவிடுகின்றார். நம்முடைய ஒவ்வொரு சூழ்நிலைகளையும் அவர் புரி ந்துகொள்கின்றார். அது எத்தனை கடினமானதாயினும், சிக்கலானதாயினும், நாம் ஜெபத்தில் கூப்பிடும் போது அவர் அங்கேயிருக்கிறார். நமது இரட்சகரின் எல்லையில்லா அன்பினைப்பெற நாம் வரிசையில் காத்திருக்க அவசியமில்லை.