வகை  |  odb

எப்பொழுதும் நம்மோடிருக்கும் அவருடைய பிரசன்னம்

2018 ஆம் ஆண்டு, உலக கோப்பையின் போது, கொலம்பியாவின் முன்னோடி வீரரான ரடாமேல் ஃபால்கா, எழுபதாவது நிமிடத்தில் போலந்துக்கு எதிராக கோல் அடித்து, வெற்றியைப் பிடித்தார். சர்வ தேச விளையாட்டுப் போட்டிகளில், ஃபால்காவின் கோல், முப்பதாவது கோலாகும். சர்வ தேச  போட்டிகளில் பங்கு பெற்ற கொலம்பியா வீரர்களில், அதிக கோல் போட்டவர் என்ற பெயரையும் வாங்கித்தந்தது.

ஃபால்கா, கால் பந்து மைதானத்தில் இருக்கும் போது, தனது ஒவ்வொரு வெற்றியின் போதும் தன்னுடைய விசுவாசத்தை வெளிப்படுத்தினார். ஒவ்வொரு கோலுக்குப் பின்னரும் தன்னுடைய மேல் சட்டையை உயர்த்திக் காட்டுவார், உள்சட்டையில், “இயேசு உன்னோடு இருக்கும் போது, நீ தனியாயிருப்பதில்லை” என்ற வார்த்தை இருக்கும்.

ஃபால்காவின் வார்த்தைகள் நம்மையும் தேவன் தருகின்ற உறுதியளிக்கும் வாக்குத்தத்தத்திற்கு நேராக வழிநடத்துகிறது. “உலகத்தின் முடிவு பரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனே கூட இருக்கிறேன்” (மத். 28:20) என்றார். அவர் பரலோகத்திற்குச் செல்வதற்கு முன்பாக, தன்னுடைய சீஷர்களிடம், அவருடைய ஆவியின் மூலமாக, அவருடைய பிரசன்னம் எப்பொழுதும் அவர்களுடனே இருக்கும் என உறுதியளிக்கிறார்  (வ.20, யோவா.14:16-18). கிறிஸ்துவின் ஆவியானவர் அவர்களோடிருந்து, அவர்கள் இயேசு கிறிஸ்துவைக்குறித்த செய்தியை அருகிலும், தூரத்திலும் உள்ள பட்டணங்களுக்கு எடுத்துச் செல்லும் போது, அவர்களை வழிநடத்தி, பாதுகாத்து, பெலப்படுத்தினார். அவர்கள் அறியாத இடங்களுக்குச் செல்லும் போது, அவர்கள் தனிமையை உணர்ந்த போதும், கிறிஸ்துவின் வார்த்தைகள் அவர்களின் செவிகளில் எதிரொலித்தன, தேவன் அவர்களோடு இருக்கிறார் என்பதை நினைவு படுத்தியது.

நாம் எவ்விடத்திற்குச் சென்றாலும் சரி, வீட்டிற்கு அருகிலோ, வெகு தொலைவிற்கோ அல்லது இயேசுவை அறியாதவர்களின் மத்தியில் இருந்தாலும், இயேசுவைப் பின்பற்றுகிறவர்களாகிய நாம், இந்த வார்த்தையை உறுதியாகப் பற்றிக்கொள்வோம். நாம் தனிமையாயிருப்பது போல உணர்ந்தாலும், நாம் இயேசுவிடம் ஜெபிக்கும் போது, அவர் நம்மோடிருக்கிறார் என்ற ஆறுதலைப் பெற்றுக்கொள்வோம்.

அன்பிலே பிரிவினையா

சிங்கப்பூரின், ஒரு சர்ச்சைக்குரிய சட்டத்தைக்குறித்து, பொதுமக்களிடையே கருத்து பரிமாற்றங்கள் ஏற்பட்ட போது, அது, வெவ்வேறு கருத்துடைய விசுவாசிகளையும் பிரித்தது. சிலர் மற்றவர்களைக்குறித்து “குறுகிய மனமுடையவர்கள்” என்றனர், தங்கள் விசுவாசத்தை விட்டுக் கொடுக்கின்றனர் என்றனர்.

சர்ச்சைகள், தேவனுடைய குடும்பங்களில் பிரிவினைகளையும், மனக்காயங்களையும், மக்களிடையே மனச்சோர்வையும் கொண்டுவரும். நான், என்னுடைய சொந்த தீர்ப்புகளைக் கொடுப்பதற்கு முன்பு, வேதாகமப் போதனைகளை என்னுடைய வாழ்வில் பயன்படுத்தும்படி உணர்ந்தேன். நான் ஏற்றுக்கொள்ளாதவர்களைக் குறித்து அதிகமாக விமர்சனம் செய்த தவற்றை உணர்ந்தேன்.

நாம் ஏற்றுக்கொள்ளாத கருத்துக்கள் எவை அல்லது அவற்றை நாம் எவ்வாறு வெளிப்படுத்துகிறோம் என்பது பிரச்சனையல்ல, நாம் அவற்றை வெளிப்படுத்தும் போது நம்முடைய இருதயம் எவ்வாறு இருக்கிறது என்பதுதான் பிரச்சனை. நாம் கருத்துக்களை மட்டும்தான் ஏற்றுக் கொள்ளவில்லையா அல்லது அக்கருத்துக்குப் பின்னால் இருக்கும் மக்களையும் கிழித்தெறிய நினைக்கிறோமா?

சில வேளைகளில் தவறான போதனைகளுக்கு எதிர்த்து பேசவேண்டிய நேரம் வரும்.  நம்முடைய உறுதியான கருத்துகளைக் குறித்து விளக்க வேண்டிய சந்தர்ப்பம் ஏற்படலாம். எபேசியர் 4:2-6 வரையுள்ள வசனங்கள் நம்மை மிகுந்த மனத்தாழ்மையோடும், சாந்தத்தோடும், நீடிய பொறுமையோடும், அன்போடும் ஒருவரையோருவர் தாங்கி, “ஆவியின் ஒருமையைக் காத்துக்கொள்ளுவதற்கு” ஜாக்கிரதையாய் இருக்கும்படியும் வலியுறுத்துகிறது (வச. 3).

சில சர்ச்சைக்குரிய கருத்துகள் தீர்க்கப்படாமல் இருக்கலாம். ஆனால் நம்முடைய இலக்கு மக்களின் விசுவாசத்தைக் கட்டுவதேயொழிய, அவற்றைக் கிழித்தெறிவதல்ல (வ.29). நம்முடைய விவாதத்தில் மற்றவர்களை கீழேத்தள்ளி, நாம் வெற்றிபெற நினைக்கிறோமா? அல்லது நாம் தேவனுடைய உண்மையை, அவருடைய நேரத்தில், அவருடைய வழியில், புரிந்துகொள்ள தேவன் உதவும் மட்டும்  காத்திருக்கப் போகிறோமா? ஒரே கர்த்தரையும், ஒரே விசுவாசத்தையும் தான் பகிர்ந்து கொள்கிறோம் (வச. 4-6) என்பதை மறவாதிருப்போம்.

உறுமும் சுண்டெலி

அநேக ஆண்டுகளுக்கு முன்பு, நானும் என்னுடைய மகன்களும் வடக்கு இடாகோவிலுள்ள, செல்வே பிட்டர்ரூட் என்ற காட்டுப்பகுதிக்குச் சென்று சில நாட்கள் அங்கு தங்கியிருந்தோம். அது கிரிஸ்லி கரடிகள் வாழும் இடம், எனவே நாங்கள், எங்களோடு கரடியை ஓட்டும் தெளிப்பான்களைக் கொண்டு வந்திருந்தோம். நாங்கள் தங்கியிருந்த இடத்தைச் சுற்றி சுத்தமாக வைத்துக்கொண்டோம். எனவே எந்த கிரிஸ்லி கரடியையும் சந்திக்க நேரிடாது என எண்ணினோம்.

ஒரு நாள், நடு இரவில் என்னுடைய மகன் ராண்டி உருண்டு கொண்டு, தன்னுடைய படுக்கும் உறையை விட்டு வெளியேற முயற்சித்துக்கொண்டிருந்தான். நான் உடனடியாக என்னுடைய டார்ச்லைட்டை அடித்து, அவன் ஏதோ ஒரு கோபமுள்ள கரடியின் பிடியில் சிக்கிக்கொண்டானோ என எதிர்பார்த்தேன்.

அங்கு, தன்பின்னங்கால்களில், நிமிர்ந்து அமர்ந்துகொண்டு, முன்கால்களின் பாதங்களை அசைத்தவாறு ஒரு வயல் எலி அமர்ந்திருந்தது, அதன் பற்களால் ராண்டியின் தொப்பியை இறுகப்பற்றிக் கொண்டிருந்தது, அது அத்தொப்பியை இழுத்து, இழுத்து ராண்டியின் தலையிலிருந்து கழற்றியது. இதனைப்பார்த்த நான் சிரித்து விட்டேன், உடனே அந்த எலி அதனைப் போட்டு விட்டு ஓடிவிட்டது. நாங்களும் எங்களுடைய தூங்கும் உறைக்குள் புகுந்தோம். நான் பதட்டத்தோடு, வஞ்சிக்கிற பிசாசுகளைக் குறித்து எண்ண ஆரம்பித்ததால், என்னால் மீண்டும் தூங்க முடியவில்லை.

பிசாசு, இயேசு கிறிஸ்துவை சோதித்ததைக் குறித்து சற்று சிந்தித்துப் பார்ப்போம் (மத். 4:1-11). அவர் தம்முடைய சோதனைகளை வேத வசனங்களைக் கொண்டு மேற்கொண்டார். ஒவ்வொரு முறை அவர் பதிலளித்தபோதும், தேவன் இவற்றைக்குறித்து என்ன கூறியிருக்கிறார் என்பதை நினைத்துப் பார்க்கிறார், அதனால் அவரால் கீழ்ப்படிய முடிந்தது. சாத்தானும் ஓடிப்போய் விடுகிறான்.

சாத்தான் நம்மை விழுங்கும்படி வகை தேடினாலும், அவனும் அந்தச் சிறிய எலியைப் போன்றே படைக்கப்பட்டவன். எனவே தான் யோவான்,  “உலகத்திலிருக்கிறவனிலும் உங்களில் (நம்மில்) இருக்கிறவர் பெரியவர் (1 யோவா. 4:4) என்கிறார்.

வாழ்வு கடினமாகும் போது

உடல், மனம், உணர்வு அத்தனையிலும் சோர்வடைந்தவனாய் என்னுடைய சாய்வு நாற்காலியில் சுருண்டு கிடந்தேன். தேவனுடைய வழிநடத்துதலைத் தொடர்ந்து, எங்களுடைய குடும்பத்தோடு கலிபோர்னியாவிலிருந்து விஸ்கான்சின்னுக்கு குடிபெயர்ந்தோம். நாங்கள் அங்கு வந்து சேர்ந்த போது, எங்களுடைய கார் பழுதடைந்ததால், இரண்டு மாதங்கள் கார் இல்லாமல் கஷ்டப்பட்டோம். இதனிடையே, என்னுடைய கணவனுக்கு முதுகில் நடந்த அறுவைசிகிச்சைக்குப் பின்னர், அவரால் சிறிதளவே நடமாட முடிந்தது. எனக்குள்ள வலியும் அதிகமானதால், எங்களுடைய சாமான்களை அடுக்குவதிலும் சிரமம் ஏற்பட்டது. எங்களுடைய பழைய வீட்டை விட்டு, இங்கு வந்த பின்பு அதிகமான பிரச்சனைகளை எதிர் நோக்கினோம். எங்களுடைய மூத்த நாயும் சுகவீனமானது. எங்களுடைய புதிய நாய் குட்டி, எங்களுக்கு அதிக மகிழ்ச்சியைக் கொடுத்த போதிலும், அதிக ரோமமுள்ள நாய்க் குட்டியை வளர்ப்பதிலும், எதிர்பார்த்ததைவிட அதிக வேலையினால் கஷ்டப்பட்டோம். எனக்குள் கசப்பு ஏற்பட்டது. என்னுடைய வாழ்வு கரடுமுரடான பாதை வழியே செல்லும்போது, எப்படி என்னுடைய நம்பிக்கை அசைக்கப்படாமல் இருக்க முடியும்?

நான் ஜெபிக்க அமர்ந்த போது, சங்கீதக்காரன், தன்னுடைய சூழ்நிலை எப்படியிருந்த போதிலும், தேவனைத் துதிப்பதை எனக்குக் காட்டினார். தாவீது பாதிக்கப்பட்ட போதெல்லாம், தன்னுடைய உணர்வுகளை தேவனிடம் ஊற்றுகிறார், அவருடைய சமுகத்தில் அடைக்கலம் தேடுகிறார் (சங். 16:1). தேவனே அவருடைய தேவைகளெல்லாவற்றையும் தருபவர், பாதுகாப்பவர் (வச. 5-6) என்கின்றார். அவருக்கு ஆலோசனைத் தந்த கர்த்தரைத் துதிக்கிறார் (வச. 7). “நான் அசைக்கப்படுவதில்லை” என்று உறுதியாகக் கூறுகின்றார், ஏனெனில் அவருடைய கண்கள் எப்பொழுதும் கர்த்தரையே நோக்கியிருக்கிறது (வச. 8). ஆகையால் அவருடைய இருதயம் பூரித்தது, தேவனுடைய சமுகத்தின் பரிபூரண ஆனந்தத்தைப் பெற்றுக்கொள்கிறார், அவருடைய மாம்சம் தேவனுடைய சமுகத்தில் நம்பிக்கையோடு தங்கியிருக்கும் (வச. 9-11).நாம் பெற்றுள்ள சமாதானம், தற்சமயம் எப்படி இருக்கிறோம் என்பதைப் பொறுத்ததல்ல என்பதால் மகிழ்ச்சியடைவோம், நேற்றும் இன்றும் என்றும் மாறாத தேவனுக்கு நாம் நன்றிகூறுவோம், அவருடைய பிரசன்னம் நம்முடைய உறுதியான நம்பிக்கைக்கு வழிவகுக்கின்றது.

கூண்டிலிருந்து விடுவிக்கப்பட்டோம்

எழுத்தாளரான மார்டின் லேய்ர்ட் வெளியில் நடை பயிற்சி செய்யும் போது, ஒரு மனிதன் நான்கு கெரி நீல டெரியர் வகை நாய்களைக் கொண்டு வருவதை அடிக்கடி பார்ப்பார். அவற்றில் மூன்று நாய்கள் திறந்த வெளியில் ஓடிவிடும். ஆனால் ஒன்று மட்டும் அதன் எஜமானனைச் சுற்றி சுற்றியே வருவதையும் கண்டார். ஒரு நாள் லேய்ர்ட் அதன் எஜமானனிடம், அந்த நாயின் வினோத நடத்தையின் காரணத்தைக் கேட்டார். அவர், அது பாதுகாப்பிற்காக பயிற்றுவிக்கப்பட்ட நாய், அது தன்னுடைய வாழ் நாளில் அநேக நாட்களை கூண்டிற்குள்ளேயே கழித்தது. இப்பொழுது டெரியர் கூண்டிற்குள் இருப்பதைப் போன்று எண்ணிக்கொண்டு தொடர்ந்து சுற்றி சுற்றியே வருகிறது என்றார்.

 தேவன் நம்மை மீட்டுக்கொள்ளும் மட்டும் நாம் நம்பிக்கையற்றவர்களாய், பாவத்தில் சிக்கிக் கிடந்தோம் என வேதாகமம் குறிப்பிடுகிறது. சங்கீதக்காரன் எதிரிகளால் சூழப்பட்டப்போது, “மரணக் கண்ணிகள்” என்மேல் விழுந்தது, “மரணக் கட்டுகள் என்னைச் சுற்றிக்கொண்டது” என்கிறார் (சங். 18:4-5). எதிரிகளால் சூழப்பட்டவராக, நெருக்கப்பட்டவராக, உதவிக்கேட்டு கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகின்றார் (வச. 6). பூமியை அதிரச் செய்யும் வல்லமையோடு, “உயரத்திலிருந்து அவர் கைநீட்டி, என்னைப் பிடித்து, ஜலப்பிரவாகத்திலிருக்கிற என்னைத் தூக்கி விட்டார் (வச. 16).

இக்காரியங்களை தேவன் நமக்கும் செய்கிறார். அவர் சங்கிலிகளை உடைத்து நம்மை அடைத்து வைத்திருக்கும் கூண்டிலிருந்து விடுவிக்கிறார். அவர்  விடுவித்து, சுமந்து, “விசாலமான இடத்திலே என்னைக்கொண்டு வந்து” (வச. 19) நிறுத்துகிறார். அப்படியானால், நாம் இன்னமும் சிறைக்குள் அடைபட்டுள்ளோம் என்ற எண்ணத்தோடு, சிறிய வட்டத்திற்குள்ளாகவே  ஓடிக்கொண்டிருப்பது எத்தனை வருந்தக்கூடியது. அவருடைய வல்லமை நம்முடைய பயம், அவமானம், அடிமைத்தனத்தின் கட்டுகளை முறிக்கிறது. அந்த மரணக் கட்டுகளிலிருந்து தேவன் நம்மை விடுவித்தார், நாம் விடுதலையோடு ஓடுவோம்.