வகை  |  odb

ராஜாவின் பந்தியில்

“அதின் கால்கள் துண்டிக்கப்படவேண்டும், ஆனால் அது உயிர் வாழும்” என்று விலங்கியல் மருத்துவர் சொன்னார். தன் காரில் அடிபட்ட ஒரு தெரு நாயினை என் நண்பர் மருத்துவரிடத்தில் கொண்டுவந்து சேர்த்தார்.இதின் மருத்துவக் கட்டணத்தை செலுத்தவேண்டும், அத்துடன் அதை தொடர்ந்து பராமரிக்கவேண்டும், நீங்கள் தான் அதின் உரிமையாளரா? என்று மருத்துவர் கேட்டார். “இப்போதிலிருந்து நான் தான்” என்று என் நண்பர் பதிலளித்தார். அவருடைய கரிசணை, ஓர் அழகான வீட்டில் அந்த நாய்க்கு அடைக்கலம் கொடுத்தது.

மற்றவர்களின் கரிசனைக்கு தான் பாத்திரவான் அல்ல என்று தன்னை ஒரு செத்த நாயாக மேவிபோசேத் எண்ணியிருந்தான் (2 சாமுவேல் 9:8). விபத்தில் முடவனான இவன், பாதுகாப்பிற்காகவும் தேவைக்காகவும் மற்றவர்களை சார்ந்து வாழவேண்டியிருந்தது (4:4). இவனுடைய தாத்தாவாகிய சவுலின் மரணத்திற்கு பின்பு தோன்றிய புதிய ராஜாவாகிய தாவீதுக்கு இவன் பயந்திருந்தான். ராஜ்யத்திற்கு எதிரானவர்களை கொன்றுபோடும் வழக்கம் அந்நாட்களில் இருந்தபடியால் தாவீது தன்னைக் கொன்றுவிடுவானோ என பயந்தான். 

எனினும் தன் சிநேகிதனான யோனத்தானின் மீதிருந்த அன்பினிமித்தம் அவனுடைய மகனான இந்த மேவிபோசேத்தை தன்னுடைய மகனாகக் கருதி அவனுடைய பாதுகாப்பை உறுதியளித்தான் (9:7). அதேபோன்று ஒரு காலத்தில் தேவனுடைய பகைஞர்களாய் மரணத்திற்கு பாத்திரவான்களாயிருந்த நம்மை இயேசு இரட்சித்து, அவரோடு பரலோகத்தில் நித்தியமாய் இருக்கும்படி செய்தார். இதையேதான் தேவனுடைய ராஜ்யத்தின் பந்தியில் பங்கேற்பது என்று லூக்கா தன்னுடைய சுவிசேஷத்தில் குறிப்பிடுகிறார் (லூக்கா 14:15). இங்கே நாம் ராஜா வீட்டுப் பிள்ளைகள்! என்னே விலையேறப்பெற்ற சிலாக்கியம் நமக்கு கொடுக்கப்பட்டுள்ளது! நன்றியோடும் மகிழ்ச்சியோடும் அவரை கிட்டிச் சேருவோம்.

மற்றவர்களுக்காக...

கோவிட் 19 பெருந்தொற்றின்போது, பாதிக்கப்படாமல் இருப்பதற்காக சிங்கப்பூரைச் சேர்ந்த பலர் வீட்டினுள்ளேயே தங்கினர். ஆனால் நான், நீச்சல் அடிப்பது நல்லது என்பதினால் அதை மட்டும் விடாமல் செய்துவந்தேன். 

ஆனால் பொதுவான நீச்சல் குளத்திலிருந்து நான் தொற்றை,தன்னுடைய பெலீனமான தாயாருக்கு பரப்பிவிடுவேனோ என்று என் மனைவி அஞ்சினாள். “எனக்காக தயவுசெய்து உங்களுடைய நீச்சல் பயிற்சியை சில காலம் ஒதுக்கி வைக்க முடியுமா?” என்று என் மனைவி என்னிடத்தில் வற்புறுத்திக் கேட்டுக்கொண்டாள். 

அதில் பிரச்சனை ஒன்றுமில்லை என்று நானும் ஆரம்பத்தில் விவாதிக்கத் துவங்கினேன். ஆனால் பின்பாக, அது அவளுடைய உணர்வைக் காயப்படுத்தும் என்று எண்ணினேன். இது முக்கியமான ஒன்று என்று எனக்கு தோன்றினாலும், அது என் மனைவியை உணர்வு ரீதியாய் காயப்படுத்துமென்றால் அதை ஏன் நான் செய்யவேண்டும்? 

ரோமர் 14இல், கிறிஸ்துவுக்குள் இருக்கும் விசுவாசிகள், குறிப்பிட்ட சில ஆகாரங்களைப் புசிக்கலாமா, குறிப்பிட்ட சில பண்டிகைகளை ஆசரிக்கலாமா என்பது போன்ற சில காரியங்களை பவுல் விவாதிக்கிறார். சிலர் தங்களுடைய கருத்துக்களை மக்கள் மீது திணிக்கிறார்கள் என்று பவுல் வருந்துகிறார். 

சூழ்நிலையை வித்தியாசமாய் கையாளும்படிக்கு பவுல், ரோமத் திருச்சபைக்கும் நமக்கும் ஆலோசனைக் கொடுக்கிறார். நம்முடைய சிந்தனைகளையும் பழக்கவழக்கங்களையும் பாதிக்கும் பல்வேறு பின்னணியத்திலிருந்து நாம் வந்துள்ளோம். “இப்படியிருக்க, நாம் இனிமேல் ஒருவரையொருவர் குற்றவாளிகளென்று தீர்க்காதிருப்போமாக. ஒருவனும் தன் சகோதரனுக்கு முன்பாகத் தடுக்கலையும் இடறலையும் போடலாகாதென்றே தீர்மானித்துக்கொள்ளுங்கள்” (வச.13) என்று பவுல் குறிப்பிடுகிறார். 

தேவனுடைய அன்பை சக விசுவாசிகளிடத்தில் பிரதிபலிக்கும் மேலான சுதந்திரத்தை தேவ கிருபையினால் நாம் பெற்றிருக்கிறோம். ஆயினும் அந்த சுதந்திரத்தை நாம் விரும்பியபடி பிரயோகிக்கிறவர்களாயிராமல், சுவிசேஷத்தின் சத்தியத்தில் மற்றவர்களுக்கு இடறல் ஏற்படாத வகையில் அவைகளை பிரயோகப்படுத்தவேண்டும் (வச. 20). 

தேவையானது ஞானமே

அப்பா இல்லாமல் வளர்ந்ததால், ஒரு தகப்பன் தன் பிள்ளைக்கு கொடுக்கவேண்டிய நடைமுறை ஞானத்தை ராப் பெற்றுக்கொள்ள முடியாமல் போனது. அதுபோன்ற வாழ்க்கையின் அத்தியாவசியமான ஞானத்தை எவரும் இழந்துவிடக்கூடாது என்ற நல்லெண்ணத்தில், “இதை எப்படி செய்வது, அப்பா!” என்ற பெயரில் அலமாரியை ஒழுங்குசெய்வதிலிருந்து வாகன சக்கரத்தை மாற்றுவது வரைக்கும் அனைத்தையும் காணொலிகளாய் வெளியிட்டார். அவருடைய மென்மையான அணுகுமுறையினால் யூடியூப் வட்டாரத்தில் லட்சக்கணக்கான வாசகர்களை சேகரித்தார்.

நம்முடைய வாழ்க்கையின் மதிப்புமிக்க திறமைகளை கற்றுத்தரவும், கடினமான பாதைகளில் நமக்கு ஆலோசனை கூறவும், அனுபவமிக்க பெற்றோரின் உதவியை நாம் அநேக வேளைகளில் எதிர்பார்க்கிறோம். எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலையாகி தங்களை தேசமாய் ஸ்தாபிக்க முயற்சித்த மோசேக்கும் ஞானம் தேவைப்பட்டது. மோசேயின் மாமனாகிய எத்திரோ, மோசேயின் மீது சுமத்தப்பட்ட பாரமான சுமையைப் பார்க்கிறார். எனவே தலைமைத்துவத்தை பகிர்ந்துகொடுக்கும்படிக்கு அவனுக்கு ஆலோசனை கொடுக்கிறார் (யாத்திராகமம் 18:17-23). “மோசே தன் மாமன் சொல்கேட்டு, அவன் சொன்னபடியெல்லாம் செய்தான்” (வச. 24). 

நம் எல்லோருக்கும் ஞானம் தேவை என்பதை தேவன் அறிவார். சிலருக்கு கர்த்தருக்குள் இருக்கிற பெற்றோர்கள் இருப்பதினால் அவர்களின் துணையை நாடலாம். அப்படியில்லையென்றால், கேட்கிற யாவருக்கும் சம்பூரணமாய் கொடுக்கிற தேவனை சார்ந்துகொள்ளலாம் (யாக்கோபு 1:5). அவர் வேதம் முழுவதிலும் ஞானத்தைக் பிரதிபலித்துள்ளார். அதற்கு தாழ்மையோடும் உண்மையோடும் செவிகொடுக்கும்போது, நாமும் ஞானமுள்ளவர்களாய் மாறி (நீதி. 19:20), நம் ஞானத்தை மற்றவர்களோடும் பகிர்ந்துகொள்ள முடியும். 

சாதாரணமானது ஒன்றுமில்லை

தன் 90ஆம் அகவையில் அனிதாவின் உயிர் தூங்கிக்கொண்டிருக்கும்போதே பிரிந்தது. அமைதியான இந்த உயிர் பிரிவு அவர்களின் அமைதியான வாழ்க்கையை பிரதிபலித்தது. ஒரு விதவையாய் தன் பிள்ளைகளையும் பேரன் பேத்திகளையும் பராமரித்த அவர்களுக்கு திருச்சபையில் ஒரு வாலிப சிநேகிதியும் இருந்தாள். 

அனிதா நினைவுகூறும் வகையில் திறமையானவரோ அல்லது சாதனையாளரோ அல்ல. ஆனால் அவருடைய ஆழமான விசுவாசத்தை அவரை அறிந்த யாவரும் அறிவர். என்னுடைய சிநேகிதி ஒருவர் சொல்லும்போது, “ஒரு பிரச்சனையில் நின்று என்ன செய்வதென்று தெரியாமல் நான் திகைக்கும்போது, எந்த ஒரு பிரபல பிரசங்கியாரின் வார்த்தைகளும் எனக்கு நினைவுக்கு வருவதில்லை; அனிதா சொன்ன வார்த்தைகள் தான் எனக்கு நினைவுக்கு வருகிறது” என்று சொன்னாள்.

நம்மில் அநேகர் அனிதாவைப் போன்றே சாதாரணமான மனிதர்களாய் சாதாரணமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கலாம். நம்முடைய பெயர் செய்திகளில் இடம்பெறாமலிருக்கலாம். நம்மை கனப்படுத்தும் வகையில் நினைவு மண்டபம் கட்டப்படாமல் இருக்கலாம். ஆனால் கிறிஸ்துவுக்குள் வாழும் விசுவாச வாழ்க்கை என்பது சாதாரணமான ஒன்று கிடையாது. எபிரெயர் 11ஆம் அதிகாரத்தின் விசவாசப்பட்டியலில் இடம்பெற்றுள்ள சில நபர்களின் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை (வச.35-38). அவர்கள் குழப்பத்தின் பாதையில் கடந்துபோய், இவ்வுலகத்தில் வாக்குப்பண்ணப்பட்ட வெகுமதிகளை இவ்வாழ்க்கையில் பெறவில்லை (வச.39). ஆயினும் அவர்கள் கீழ்ப்படிந்ததினால், அவர்களின் விசுவாசம் வீணாய்ப் போகவில்லை. தேவன் அவர்களின் மதிப்பு குறையாமல் அவர்களின் வாழ்க்கையை அபரிவிதமாய் பயன்படுத்தினார் (வச.40).

உங்களுடைய வாழ்க்கை மிகச் சாதாரணமாய் கடந்து போகிறதே என்று நீங்கள் யோசிக்கலாம். ஆனால் விசுவாசத்தில் வருகிற வாழ்க்கைக்கு நித்திய மேன்மை இருக்கிறது என்பதை நினைவில் கொள்வோம். நாம் சாதாரணமானவர்களாய் இருந்தாலும், அசாதாரணமான விசுவாசத்தின் பிரதிநிதிகளாய் நம்மால் மாறமுடியும். 

தற்போதைய யுத்தங்கள்!

இன்று மின்னணு உபயோகப்பொருட்களை மின்சாரத்துடன் இணைக்கும்போது நாம் பயனடைகிறோம். இது 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஏறெடுக்கப்பட்ட கசப்பான முயற்சியின் விளைவு. தாமஸ் ஆல்வா எடிசன் மற்றும் நிகோலா டெஸ்லா ஆகிய இருவரும் ஆண்டுகளாய் போராடி, மின்கலத்திலிருந்து புறப்பட்டு விளக்கை ஒளிரச்செய்யும் நேரடி மின்னோட்டம் மற்றும் மின்கம்பிகளிலிருந்து நாம் பெறும் மாறுதிசை மின்னோட்டம் -நல்ல வகையான மின்சாரத்தைக் கண்டுபிடித்தனர்: 

டெஸ்லாவின் இந்த மாறுதிசை மின்னோட்ட கண்டுபிடிப்பு, வீடுகள், அலுவலகங்கள் என்று உலகத்திற்கே பயன்படும் வகையில் அமைந்தது. இந்த மாறுதிசை மின்னோட்டமே அதிக தூரத்தை எளிதில் கடந்து மின்சாரத்தை பாய்ச்சும் ஞானமான ஒரு கண்டுபிடிப்பு என்று நிரூபிக்கப்பட்டது. 

சிலவேளைகளில் கிறிஸ்தவர்களாகிய நமக்குள் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண நமக்கு ஞானம் தேவைப்படுகிறது (ரோமர் 14:1-2). அதற்கு நாம் தேவனுடைய உதவியை நாடும்படிக்கு பவுல் அறிவுறுத்துகிறார். “எந்தக் காரியத்திலாவது நீங்கள் வேறே சிந்தையாயிருந்தால், அதையும் தேவன் உங்களுக்கு வெளிப்படுத்துவார்” (பிலிப்பியர் 3:15) என்று ஆலோசனை கூறுகிறார். அதற்கு பின்பு, பவுலை வேதனைப்படுத்திய பிரிவினையை உண்டுபண்ணிய இருதரப்பினரைக் குறித்து, “கர்த்தருக்குள் ஒரே சிந்தையாயிருக்க எயோதியாளுக்கும் சிந்திகேயாளுக்கும் புத்திசொல்லுகிறேன்” (4:2) என்று தொடர்ந்து கூறுகிறார். 

நமக்குள் பிரிவினையை ஏற்படுத்தும் முரண்பாடான கருத்துக்கள் தோன்றும்போது, சத்தியம் போதிக்கும் தேவனுடைய கிருபையையும் ஞானத்தையும், மூப்பர்களின் ஆலோசனையையும், ஜெபத்தின் வல்லமையையும் சார்ந்துகொள்ள வேண்டும். அவருக்குள் “ஒரே சிந்தையாயிருக்கக்கடவோம்” (வச. 2).