வகை  |  odb

தப்பிப்பதா அல்லது சமாதானமா?

“தப்பித்தல் (ESCAPE)” என்று பெயரிடப்பட்ட சுடுதண்ணீர் தொட்டி விற்கும் கடையின் விளம்பர பலகையை பார்த்தோம். என் மனைவியும் நானும் ஒரு நாள் அந்த தொட்டியை வாங்க வேண்டும் என்று பேசிக்கொண்டோம். அதை வீட்டின் கொல்லைப் புறத்திலே வைத்துக்கொண்டால் விடுமுறை கொண்டாடுவது போல் இருக்கும் என்று யோசித்தோம். ஆனால் அதை அவ்வப்போது சுத்தம் செய்யவேண்டும், அதற்கான மின் கட்டணத்தை செலுத்தவேண்டும். அதை நான் யோசித்துக்கொண்டிருக்கும்போது, “தப்பித்தல்” என்ற கடையின் பெயரானது, நான் சில காரியங்களிலிருந்து தப்பித்துக்கொள்ள வேண்டும் என்று எண்ணத் தூண்டியது. அந்த வார்த்தை நமக்குத் தேவையான நிவாரணம், ஆறுதல், பாதுகாப்பு மற்றும் தப்பித்தல் ஆகியவற்றை வாக்களிக்கிறது. ஓய்வெடுப்பதிலேயோ அல்லது அழகான இடத்தை சுற்றிப்பார்ப்பதிலேயோ எந்த தவறும் இல்லை. ஆனால் வாழ்க்கையின் கடினங்களில் இருந்து தப்பிப்பதற்கும் அவற்றின் மத்தியில் தேவனைச் சார்ந்து வாழ்வதற்கும் வித்தியாசம் உண்டு.

யோவான் 16ல், இயேசு தன் சீஷர்களிடம் அவர்களின் வாழ்க்கையில் விசுவாசப் போராட்டங்கள் உண்டு என்கிறார், “உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள் நான் உலகத்தை ஜெயித்தேன்” (வச. 33) என்ற வாக்குறுதியையும் கொடுத்துள்ளார். தம்முடைய சீஷர்கள் சோர்ந்துபோவதை இயேசு விரும்பவில்லை. அதற்கு பதிலாக சீஷர்கள் தம் மீது விசுவாசம் வைக்குமாறும், “என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும் பொருட்டு இவைகளை உங்களுக்கு சொன்னேன்," என்கிற இளைப்பாறுதலை அறிய வேண்டும் என்றும் அவர் விரும்பினார் (வச. 33). இயேசு வேதனையில்லா வாழ்வை வாக்களிக்கவில்லை. நாம் அவர் மேல் விசுவாசம் வைத்து இளைப்பாறுதலை அனுபவிக்கும்போது, இந்த உலகம் விற்கும் “தப்பிக்கும்” வழிகளை விட நாம் திருப்தியான சமாதானத்தைப் பெறமுடியும் என்று வாக்களிக்கிறார்.

வெண்மையாக்கும் மன்னிப்பு

அந்த சிறிய சிவப்பு மாயாஜால செவ்வகப் பெட்டி அற்புதமான ஒன்று. என் சிறுவயதில் அதை வைத்துக்கொண்டு மணிக்கணக்காய் விளையாடுவேன். ஒரு குமிழைத் திருகினால், அதின் திரையில் நேர்க்கோடு தோன்றும். அடுத்த குமிழைத்திருகினால் செங்குத்தான கோட்டை வரைய முடியும். இரு குமிழ்களையும் சேர்த்துத் திருகினால் வரிகள், வட்டங்கள், அழகான மற்ற வடிவங்களை உருவாக்கமுடியும். ஆனால் அந்த மாயாஜால சிவப்புப் பெட்டியை தலைகீழாய் திருப்பி, மேலும் கீழுமாய் அசைக்கும்போதே நிஜமான மாயாஜாலம் தோன்றியது. ஒரு வெற்றுத்திரை தோன்றி, ஒரு புதிய படைப்பை உருவாக்க எனக்கு சந்தர்ப்பம் அளித்தது.

தேவனின் மன்னிப்பு இந்த பெட்டி போன்றது தான். தேவன் நம் பாவங்களை நீக்கி வெண்மையாக மாற்றுகிறார். நாம் செய்த தவறுகளை நாம் நினைவுகூர்ந்தாலும், தேவன் அவற்றை நினைவுகூர்வதில்லை. அவர் நம் பாவங்களை முற்றிலுமாய் கழுவி, அப்புறப்படுத்துகிறார். அவர் நம்முடைய பாவங்களுக்குத் தக்கதாக நமக்குச் செய்யாமல் (சங்கீதம் 103:10), கிருபையாக நம்மை மன்னிக்கிறார். நாம் முற்றிலும் தூய்மையாக்கப்பட்ட ஒரு வெற்றுப்பலகை. அவரிடம் மன்னிப்பைத் தேடும்போது, நமக்காய் ஒரு புது வாழ்வு காத்திருக்கிறது. 

மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ அவ்வளவு தூரமாய் நம்முடைய பாவங்களை நம்மை விட்டு விலக்கினார் (வச. 12) என்று சங்கீதக்காரன் நமக்கு நினைவுபடுத்துகிறார். தேவனுடைய கண்களில் நம் பாவங்கள் கருஞ்சிவப்பான எழுத்தாகவோ அல்லது ஒரு மோசமான ஓவியமாகவோ தென்படுவதில்லை. அவற்றை நமக்கு எட்டாத தூரத்திற்கு அனுப்பிவிடுகிறார். அதுதான் நம்முடைய மகிழ்ச்சிக்கான காரணம். அவருடைய அற்புதமான கிருபைக்காகவும் இரக்கத்திற்காகவும் நன்றி செலுத்த நாம் கடமைப்பட்டுள்ளோம்.

கழுவப்பட்டது

ஹரிஷ் தன் நண்பரான டேவ் என்பவரிடம் அவர் தேவனை விட்டு பிரிந்து வெகு நாட்கள் ஆகிவிட்டது என்பதைக் குறித்து விவரித்தான். அதன் பின்பு ஒருநாள் மீண்டும் டேவை சந்தித்து, தேவனுடைய அன்பு நம்மை இரட்சிக்கும் வழியைக் குறித்து விளக்கினான். டேவ் இயேசுவின் விசுவாசி ஆனார். அவர் கண்ணீருடன் தன் பாவத்திற்கு மனவருத்தப்பட்டு தன் வாழ்வை கிறிஸ்துவுக்கு ஒப்புக் கொடுத்தார். பிறகு ஹரிஷ் டேவிடம் எப்படி உணர்கிறீர்கள் என்று கேட்டதற்கு, கண்ணீரைத் துடைத்துக்கொண்டு “கழுவப்பட்டேன்” என்று சுருக்கமாகக் கூறினாராம். 

ஆச்சரியமான பதில்! நமக்காகச் சிலுவையில் இயேசு பலியானதை விசுவாசிப்பது நம் இரட்சிப்பின் சாரமாகும். 1 கொரிந்தியர் 6ல் பவுல் தேவனுக்கு எதிரான கீழ்ப்படியாமை தான் நம்மைத் தேவனிடமிருந்து பிரித்தது என்கிறார். “உங்களில் சிலர் இப்படிப்பட்டவர்களாயிருந்தீர்கள்; ஆயினும் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலும், நமது தேவனுடைய ஆவியினாலும் கழுவப்பட்டீர்கள், பரிசுத்தமாக்கப்பட்டீர்கள், நீதிமான்களாக்கப்பட்டீர்கள்” (வச. 11). “கழுவப்பட்டீர்கள்,” “பரிசுத்தமாக்கப்பட்டீர்கள்,” “நீதிமான்களாக்கப்பட்டீர்கள்” ஆகிய வார்த்தைகள் விசுவாசிகள் மன்னிக்கப்பட்டு தேவனிடத்தில் ஒப்புரவாக்கப்பட்டதை வலியுறுத்துகிறது. 

இரட்சிப்பு என்னும் அற்புதமான காரியத்தைக் குறித்து தீத்து 3:4-5 நமக்கு அறிவிக்கிறது. “நம்முடைய இரட்சகராகிய தேவனுடைய தயையும் மனுஷர்மேலுள்ள அன்பும் பிரசன்னமானபோது, நாம் செய்த நீதியின் கிரியைகளினிமித்தம் அவர் நம்மை இரட்சியாமல், தமது இரக்கத்தின்படியே, மறுஜென்ம முழுக்கினாலும், பரிசுத்த ஆவியினுடைய புதிதாக்குதலினாலும் நம்மை இரட்சித்தார்.” நம் பாவம் தேவனிடமிருந்து நம்மை பிரித்தது; ஆனால் இயேசுவின் மேல் வைக்கும் விசுவாசத்தால் நம் பாவத்தின் தண்டனை கழுவப்பட்டது. நாம் புது சிருஷ்டியாக்கப்பட்டு (2 கொரிந்தியர் 5:17), பிதாவிடத்தில் சேரும் பாக்கியத்தை பெற்றிருக்கிறோம் (எபேசியர் 2:18). மேலும் நாம் சுத்திகரிக்கப்பட்டிருக்கிறோம் (1 யோவான் 1:7). நாம் கழுவப்படுவதற்கு தேவையானதை அவரால் மட்டுமே கொடுக்கமுடியும்.

நெருக்கமாகிறோம்

கொரோனா வைரஸ் வந்த பிறகு வங்கியில் உள்ள பாதுகாப்புப் பெட்டகத்திலிருந்து ஒன்றை எடுக்க முன்பைவிட அநேக விதிமுறைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளது. வங்கி பெட்டகத்திற்குள் நுழைவதற்கு முன்னால், ஏற்கனவே முன் அனுமதி வாங்கி, என்னுடைய அடையாள அட்டை மற்றும் கையெழுத்தை பரிசோதித்து, வங்கி ஊழியர் ஒருவர் காவலுக்கு வந்து பெட்டகத்திற்கு அழைத்துச் செல்லும் வரை நான் காத்திருக்க வேண்டியுள்ளது. உள்ளே நுழைந்ததும், எனக்குத் தேவையானவற்றை என் பெட்டகத்திலிருந்து நான் எடுக்கும் வரைக்கும் அந்த உறுதியான கதவுகள் பூட்டியிருக்கும். இந்த ஒழுங்கை நான் சரியாகப் பின்பற்றினால் மட்டுமே என்னால் வங்கியில் நுழைய முடியும். 

பழைய ஏற்பாட்டில் தேவன், உடன்படிக்கைப் பெட்டி வைத்திருக்கும் மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள்ளே நுழைய சில ஒழுங்குமுறைகளை வைத்திருந்தார் (யாத்திராகமம் 26:33). பரிசுத்த ஸ்தலத்திற்கும், மகா பரிசுத்த ஸ்தலத்திற்கும் பிரிவை உண்டாக்கும் அந்த சிறப்பான திரைக்குப் பின்னே பிரதான ஆசாரியன் மாத்திரம் வருஷத்துக்கு ஒரு தரம் பிரவேசிக்க அனுமதிக்கப்படுவார் (எபிரெயர் 9:7). ஆரோனும் பிரதான ஆசாரியர்களும் ஜலத்திலே ஸ்நானம் பண்ணி, பரிசுத்த வஸ்திரங்களைத் தரித்துக் கொண்டு பலிகளுடன் உட்பிரவேசிக்க வேண்டும் (லேவியராகமம் 16:3-4). தேவனுடைய கட்டளைகள் உடல் ஆரோக்கியத்திற்கும் பாதுகாப்பிற்குமான வழிமுறைகள் அல்ல; மாறாக, நம்முடைய பாவ மன்னிப்பின் தேவையுடன் பரிசுத்த தேவனை எவ்வாறு நெருங்குவது என்பதை வலியுறுத்துவதற்காக கொடுக்கப்பட்டது.  

இயேசுவின் மரணம் அந்த திரைச்சீலையை இரண்டாகக் கிழியச் செய்தது (மத்தேயு 27-51), இயேசுவின் சிலுவை மரணத்தின் மூலம் பாவங்கள் மன்னிக்கப்படும் என விசுவாசிக்கிறவர்கள் எவரும் தேவனுடைய பிரசன்னத்திற்குள் நுழையலாம் என்பதை அது வெளிப்படுத்தியது. உடன்படிக்கைப் பெட்டியின் திரைச்சீலை இரண்டாகக் கிழிந்த அந்த நிகழ்வு நம்முடைய நித்திய மகிழ்ச்சிக்கு காரணமாகியது. நான் எப்போது வேண்டுமானாலும் தேவனிடத்தில் நெருங்கலாம் என்பதை இயேசு சாத்தியமாக்கினார்.