அந்த சிறிய சிவப்பு மாயாஜால செவ்வகப் பெட்டி அற்புதமான ஒன்று. என் சிறுவயதில் அதை வைத்துக்கொண்டு மணிக்கணக்காய் விளையாடுவேன். ஒரு குமிழைத் திருகினால், அதின் திரையில் நேர்க்கோடு தோன்றும். அடுத்த குமிழைத்திருகினால் செங்குத்தான கோட்டை வரைய முடியும். இரு குமிழ்களையும் சேர்த்துத் திருகினால் வரிகள், வட்டங்கள், அழகான மற்ற வடிவங்களை உருவாக்கமுடியும். ஆனால் அந்த மாயாஜால சிவப்புப் பெட்டியை தலைகீழாய் திருப்பி, மேலும் கீழுமாய் அசைக்கும்போதே நிஜமான மாயாஜாலம் தோன்றியது. ஒரு வெற்றுத்திரை தோன்றி, ஒரு புதிய படைப்பை உருவாக்க எனக்கு சந்தர்ப்பம் அளித்தது.

தேவனின் மன்னிப்பு இந்த பெட்டி போன்றது தான். தேவன் நம் பாவங்களை நீக்கி வெண்மையாக மாற்றுகிறார். நாம் செய்த தவறுகளை நாம் நினைவுகூர்ந்தாலும், தேவன் அவற்றை நினைவுகூர்வதில்லை. அவர் நம் பாவங்களை முற்றிலுமாய் கழுவி, அப்புறப்படுத்துகிறார். அவர் நம்முடைய பாவங்களுக்குத் தக்கதாக நமக்குச் செய்யாமல் (சங்கீதம் 103:10), கிருபையாக நம்மை மன்னிக்கிறார். நாம் முற்றிலும் தூய்மையாக்கப்பட்ட ஒரு வெற்றுப்பலகை. அவரிடம் மன்னிப்பைத் தேடும்போது, நமக்காய் ஒரு புது வாழ்வு காத்திருக்கிறது. 

மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ அவ்வளவு தூரமாய் நம்முடைய பாவங்களை நம்மை விட்டு விலக்கினார் (வச. 12) என்று சங்கீதக்காரன் நமக்கு நினைவுபடுத்துகிறார். தேவனுடைய கண்களில் நம் பாவங்கள் கருஞ்சிவப்பான எழுத்தாகவோ அல்லது ஒரு மோசமான ஓவியமாகவோ தென்படுவதில்லை. அவற்றை நமக்கு எட்டாத தூரத்திற்கு அனுப்பிவிடுகிறார். அதுதான் நம்முடைய மகிழ்ச்சிக்கான காரணம். அவருடைய அற்புதமான கிருபைக்காகவும் இரக்கத்திற்காகவும் நன்றி செலுத்த நாம் கடமைப்பட்டுள்ளோம்.