திங்கட்கிழமைக்காக நன்றி
திங்கட்கிழமை என்றாலே நான் பயப்படுவேன். நான் முன்பு வேலை செய்த இடத்திற்கு செல்ல ரயிலிலிருந்து இறங்கும்போது, என் அலுவலகக் கட்டிடத்தை அடைவதற்கு முன் வேண்டுமென்றே தாமதப்படுத்துவேன். குறித்த நேரத்திற்கு வேலையை முடிக்காவிட்டால் எரிச்சலடையும் முதலாளிகளை சந்திப்பது எனக்கு சவாலாய் தோன்றியது.
நம்மில் சிலருக்கு, ஒரு புதிய வாரத்தை துவக்குவது மிகவும் கடினமாக இருக்கும். நம் வேலை ஸ்தலத்தில் நாம் முக்கியத்துவம் வாய்ந்தவர்களாகவோ அல்லது கனப்படுத்தப்படாதவர்களாகவோ இருக்கலாம். சாலெமோன் ராஜா எழுதும்போது, பிரயாசத்தின் பலனை விவரிக்கிறார்: “மனுஷன் சூரியனுக்குக்கீழே படுகிற எல்லாப் பிரயாசத்தினாலும் அவனுடைய இருதயத்தின் எண்ணங்களினாலும் அவனுக்குப் பலன் என்ன? அவன் நாட்களெல்லாம் அலுப்புள்ளது, அவன் வேலைகள் வருத்தமுள்ளது” (பிரசங்கி 2:22-23).
ஞானமுள்ள ராஜா, வேலையின் மன அழுத்தத்தைக் குறைப்பதற்கோ அல்லது அதை பலனுள்ள வகையில் மாற்றுவதற்கான ஆலோசனையை நமக்குக் கொடுக்கவில்லை. ஆனால் அதை பார்க்கும் கண்ணோட்டத்தை நமக்குக் கற்றுக்கொடுக்கிறார். நம்முடைய வேலை எவ்வளவு கடினமாக இருந்தாலும், தேவனின் உதவியோடு அதில் “திருப்தியடைய” அவர் நம்மை ஊக்குவிக்கிறார் (வச. 24). கிறிஸ்துவின் சுபாவங்களை நம்மில் பிரதிபலிக்க பரிசுத்த ஆவியானவர் நம்மை ஊக்குவிக்கும்போது, அந்த திருப்தியை நாம் அடையலாம். அல்லது நம்மால் உதவிபெற்ற ஒருவருடைய வார்த்தைகளை நாம் கேட்கும்போது திருப்தியடையலாம். அல்லது, கடினமான சூழ்நிலைகளை சமாளிக்க தேவன் கொடுத்த ஞானத்தை பிரயோகிக்கும்போது நாம் திருப்தியடையலாம். நம்முடைய வேலைகள் கடினமானதாய் இருந்தாலும், தேவன் நம்மோடு இருக்கிறார். அவருடைய பிரசன்னமும் வல்லமையும் சிக்கலான தருணங்களில் நமக்கு ஒளிகொடுக்கும். அவருடைய துணையோடு, திங்கட்கிழமைகளை நாம் சமாளிப்போம்.

ஹின்னோமிலிருந்து நம்பிக்கை
1979 ஆம் ஆண்டில், தொல்பொருள் ஆராய்ச்சியாளர் கேப்ரியல் பார்கே இரண்டு சிறிய வெள்ளி சுருள்களைக் கண்டுபிடித்தார். அந்த உலோகச் சுருளை நுணுக்கமாக அவிழ்க்க பல ஆண்டுகள் ஆனது. அதில் ஒவ்வொரு சுருள்களிலும், எண்ணாகமம் 6:24-26லிருந்து ஆசீர்வாதம் எபிரெய மொழியில் பொறிக்கப்பட்டிருந்தது. “கர்த்தர் உன்னை ஆசீர்வதித்து, உன்னைக் காக்கக்கடவர். கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரகாசிக்கப்பண்ணி, உன்மேல் கிருபையாயிருக்கக்கடவர். கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரசன்னமாக்கி, உனக்குச் சமாதானம் கட்டளையிடக்கடவர் என்பதே.” அச்சுருள்கள் கி.மு. 7ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று நிபுணர்கள் கணிக்கின்றனர். அதுவே கண்டெடுக்கப்பட்ட மிக பழமையான வேதாகம ஆதாரங்களில் ஒன்று.
அவைகள் கண்டெடுக்கப்பட்ட இடமும் சுவாரஸ்யமானது. ஹின்னோம் பள்ளத்தாக்கிலிருந்த ஒரு குகையில் பார்கே அதை தோண்டிக் கண்டுபிடித்தார். அதே இடத்தில்தான், தங்கள் பிள்ளைகளை நரபலியிட்டால் தேவன் உங்களை அழித்துவிடுவார் என்று எரேமியா தீர்க்கதரிசி மக்களை எச்சரித்தார் (எரேமியா 19:4-6). அதுபோன்ற அக்கிரமங்கள் நடந்தேறிய பள்ளத்தாக்கு அது என்பதினால், இயேசு அதை “கெஹென்னா” ("ஹின்னோம் பள்ளத்தாக்கு" என்ற எபிரேய பெயரின் கிரேக்க வடிவம்) என்ற வார்த்தையை நரகத்தைக் குறிக்க பயன்படுத்தினார் (மத்தேயு 23:33).
இந்த இடத்தில், எரேமியா தனது தேசத்தின் மீதான தேவனுடைய நியாயத்தீர்ப்பை அறிவிக்கும் தருணத்தில், யாரோ ஒருவர் தனது எதிர்கால ஆசீர்வாதத்தை வெள்ளி சுருள்களில் பொறித்திருக்கிறார். இது அவர்களின் வாழ்நாட்களுக்குள் நடக்காது. ஆனால் பாபிலோனிய சிறையிருப்பைக் கடந்து, தேவன் அவர்கள் பக்கமாய் தம்முடைய முகத்தைத் திருப்பி, அவர்களுக்கு இளைப்பாறுதலைக் கட்டளையிடுவார்.
நமக்கு போதிக்கப்படுகிற பாடம் தெளிவாக உள்ளது. நமக்கு சம்பவிக்கப்போகிறவைகளுக்கு நாம் பாத்திரவான்களாய் இருந்தாலும், நாம் தேவனுடைய வாக்குத்தத்தத்தை உறுதியாய் பற்றிக்கொள்வோம். தேவனுடைய இருதயம் அவருடைய ஜனங்களுக்காய் எப்போதும் ஏங்குகிறது.

பந்தயத்தில் ஓடுதல்
தனது மனைவி, மகன் மற்றும் மகளை இழந்த தொடர் சோகங்களுக்குப் பிறகு, தனது 89ஆம் வயதில் ஃபாஜா சிங் தன்னுடைய ஆர்வமான ஓட்டப்பந்தயத்தில் கவனம் செலுத்த முடிவு செய்தார். பஞ்சாபி-இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இந்த சிங், டொராண்டோ வாட்டர்ஃபிரண்ட் மாரத்தான் ஓட்டப்பந்தயத்தினை நிறைவு செய்த முதல் 100 வயது நபர் என்னும் சாதனையை நிகழ்த்தினார். அவரது ஆரோக்கியமான உணவு, உடல் வலிமை, மன ஒழுக்கம் போன்றவைகள் அவரது சாதனைக்கு உதவியிருக்கலாம். ஆனால் அவர் தன்னுடைய 5 வயது வரை நடக்கமுடியாமல் இருந்தவராம். அதினால் அவரை எல்லோரும் “குச்சி” என்ற கிண்டல் செய்வார்களாம். ஆனால் தற்போது அவருடைய சாதனையைக் கண்டவர்கள் அவரை “முண்டாசிட்ட புயல்காற்று” என்று அழைக்கின்றனர்.
அப்போஸ்தலனாகிய பவுலும் தனது நாட்களில் இதேபோன்ற ஒழுக்கத்தை வெளிப்படுத்தும் விளையாட்டு வீரர்களை அங்கீகரித்தார் (1 கொரிந்தியர் 9:24). ஆனால் அவர்கள் எவ்வளவு பயிற்சி செய்தாலும் இறுதியில் அவர்களின் வலிமை குன்றுவதையும் அவர் கண்டார். ஆனால் நித்தியத்தை பாதிக்கும் விதத்தில் இயேசுவுக்காக வாழ நமக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது என்று போதித்தார். தற்காலிகப் பெருமைக்காக பாடுபடும் விளையாட்டு வீரர்கள் மிகவும் கடினமாக உழைக்க முடியும் என்றால், “அழிவில்லாத கிரீடத்தைப் பெறும்படிக்கு" வாழ்பவர்கள் எவ்வளவு அதிகமாக பிரயாசப்படவேண்டும் என்று பவுல் வலியுறுத்துகிறார் (வச. 25).
இரட்சிப்பைப் பெறுவதற்கு நாம் பயிற்சியளிக்கவில்லை. மாறாக, நமது இரட்சிப்பு எவ்வளவு மேன்மையானது என்பதை நாம் உணரும்போது, அது நமது வாழ்வின் முக்கியத்தவத்தை உணர்த்தி நம்முடைய ஓட்டத்தை எவ்வளவு நேர்த்தியாகவும் உண்மையாகவும் நிறைவுசெய்யவேண்டும் என்பதை உணர்த்துகிறது.
வலியிலிருந்து தேவன் நம்மை மீட்கிறார்
ஆலிவ், தனது நண்பர் தனது பல் மருத்துவ உபகரணங்களை அவரது காரில் ஏற்றுவதைப் பார்த்தாள். அவரும் ஒரு பல் மருத்துவர். இவளிடமிருந்த உபகரணங்களை அவர் விலைகொடுத்து வாங்கிச் சென்றார். பல் மருத்துவராய் பணியாற்றும் ஆலிவின் கனவு வெகு நாட்கள் நீடிக்கவில்லை. அவளது மகன் கைல், பெருமூளை வாதத்துடன் பிறந்தபோது, அவனைப் பராமரிக்கும் நோக்கத்துடன் மருத்துவ பணியை அவள் நிறுத்தவேண்டியிருந்தது.
“என்னுடைய வாழ்நாள் ஒரு மில்லியன் ஆண்டுகள் நீடிக்கும் வாய்ப்பிருந்தாலும், நான் அதே வேலையைத்தான் செய்வேன்” என்று என்னுடைய சிநேகிதி ஒருவள் சொல்வாள். பல் மருத்துவ சேவையை விடுவது என்பது கனவு தொலையும் தருணம்.
நாம் புரிந்து கொள்ள முடியாத சிரமங்களை அடிக்கடி சந்திக்கிறோம். ஆலிவைப் பொறுத்தவரை, இது அவளது குழந்தையின் எதிர்பாராத சரீர வியாதி மற்றும் தனது சொந்த லட்சியங்களைத் துறந்தததினால் ஏற்பட்ட இருதய வேதனை. நகோமிக்கோ, தன் முழு குடும்பத்தையும் இழந்த மன வியாகுலம் அது. ரூத் 1:21ல், சர்வவல்லவர் என்னை கிலேசப்படுத்தியிருக்கிறார் என்று புலம்புகிறாள்.
ஆனால் நகோமியின் சம்பவத்தில் அவளால் பார்க்க முடியாத சில காரியங்கள் உண்டு. தேவன் அவளைக் கைவிடவில்லை. ஓபேத் என்ற ஒரு பேரனை அவளுக்கு கொடுப்பதின் மூலம் அவர் அவளுக்கு ஆசீர்வாதத்தை திரும்பத்தந்தார் (ரூத் 4:17). நகோமியின் கணவர் மற்றும் மகனின் பெயரை மட்டும் இந்த ஓபேத் எடுத்துக்கொள்ளுவது மட்டுமன்றி, அவன் இயேசுவின் மூதாதையரான போவாஸின் உறவினன் (மத்தேயு 1:5,16).
தேவன் நகோமியின் வேதனையை மாற்றினார். நரம்பியல் பிரச்சனைகள் உள்ள குழந்தைகளுக்கு மத்தியில் ஊழியத்தைத் தொடங்கியதின் மூலம் ஆலிவின் வியாகுலத்தையும் அவர் மாற்றினார். நாம் மனவேதனையை அனுபவித்துக்கொண்டிருக்கலாம், ஆனால் நாம் தேவனுக்குக் கீழ்ப்படிந்து அவரைப் பின்பற்றும்போது, அவர் நம் வேதனையை மாற்ற முடியும் என்று நம்பலாம். அவருடைய அன்பினாலும் ஞானத்தினாலும், அவற்றிலிருந்து நன்மையை கொண்டுவர அவரால் கூடும்.


குழப்பத்திற்கு அல்ல, கிறிஸ்துவுக்கு செவி கொடுத்தல்
ஒவ்வொரு நாளும் பல மணிநேரம் தொலைக்காட்சி செய்திகளைப் பார்த்த அந்த முதியவர் அதிக வேதனைப்பட்டார். உலகம் அழிந்துகொண்டிருப்பது மட்டுமின்றி, அது தன்னையும் அதற்கு நேராய் இழுத்துக்கொண்டுபோகிறது என்று வேதனைப்பட்டார். “தயவுசெய்து அதை நிறுத்துங்கள்,” என்று அவரது மூத்த மகள் அவரிடம் கெஞ்சினாள். “அதைக் கேட்பதை நிறுத்துங்கள்.” ஆனால் அவரோ தொடர்ந்து சமூக ஊடகங்கள் மற்றும் பிற செய்திகளை கேட்பதில் அதிக நேரத்தை செலவிட்டார்.
நமக்கு முக்கியமாய் தோன்றுகிற காரியங்களில் நாம் ஈடுபாடு செலுத்துகிறோம். இயேசு பொந்தியு பிலாத்துவை சந்திக்கும் சந்திப்பில் இதைக் காண்கிறோம். மார்க்கத் தலைவர்கள் இயேசுவின் மீது சுமத்திய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் வகையில் பிலாத்து அவரை அழைத்து, “நீ யூதருடைய ராஜாவா?” என்று கேட்டான் (யோவான் 18:33). அதற்கு இயேசு, “நீராய் இப்படிச் சொல்லுகிறீரோ? அல்லது மற்றவர்கள் என்னைக்குறித்து இப்படி உமக்குச் சொன்னார்களோ?” (வச. 34) என்று அதிர்ச்சியூட்டும் கேள்வியை பதிலாக்குகிறார்.
அதே கேள்வி இன்றும் நம்மிடமும் எழுப்பப்படுகிறது. பரபரப்பான இந்த உலகத்தில் நாம் குழப்பத்திற்கு செவிகொடுக்கிறோமா அல்லது கிறிஸ்துவுக்கு செவிகொடுக்கிறோமா? “என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது” என்றும் “நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப் பின்செல்லுகிறது” (யோவான் 10:27) என்றும் இயேசு சொல்லுகிறார். அவரை சந்தேகிக்கும் மார்க்கத் தலைவர்களுக்கு தன்னை வெளிப்படுத்தும் விதமாய் இயேசு அந்த உருவகத்தைப் பயன்படுத்துகிறார் (வச. 6). ஒரு நல்ல மேய்ப்பனாக இயேசு, “அவன் தன்னுடைய ஆடுகளை வெளியே விட்டபின்பு, அவைகளுக்கு முன்பாக நடந்துபோகிறான், ஆடுகள் அவன் சத்தத்தை அறிந்திருக்கிறபடியினால் அவனுக்குப் பின்செல்லுகிறது. அந்நியருடைய சத்தத்தை அறியாதபடியினால் அவைகள் அந்நியனுக்குப் பின்செல்லாமல், அவனை விட்டோடிப்போம்” (வச. 4-5) என்றார்.
நம்முடைய நல்ல மேய்ப்பராக, எல்லாவற்றிற்கும் மேலாக அவருடைய சத்தத்தைக் கேட்டும்படிக்கு இயேசு நமக்கு கட்டளையிடுகிறார். அவருடைய சத்தத்திற்கு செவிகொடுத்து இளைப்பாறுதலை சுதந்தரிப்போம்.