எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

கட்டுரைகள்

நெருக்கத்தின் குரல்

நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த இடிபாடுகளின் இரண்டு தளங்களுக்கு அடியில் சிக்கியிருந்த சிரியா நாட்டுச் சிறுமியான ஐந்து வயது ஜினான், தனது சிறிய சகோதரனைச் சுற்றியுள்ள இடிபாடுகளில் இருந்து காப்பாற்றியபோது மீட்புப் பணியாளர்களை அழைத்தார். "என்னை இங்கிருந்து வெளியே கூட்டிச்செல்லுங்கள்; நான் உங்களுக்காக எதையும் செய்வேன், நான் உங்கள் வேலைக்காரியாகவும் இருப்பேன்” என்று அவள் நொறுங்கிய உள்ளத்தோடு அழைத்தாள்.

நெருக்கத்திலிருந்து அழைப்பது என்பது சங்கீதம் முழுதும் உள்ளது, "நெருக்கத்திலிருந்து கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன், கர்த்தர் என்னைக் கேட்டருளி விசாலத்திலே வைத்தார்" (118:5). பூகம்பத்தால் இடிந்து விழுந்த கட்டிடங்களின் எடையை நாம் அனுபவிக்கவில்லை என்றாலும், சவாலான உடல்நிலை, பொருளாதாரக் கஷ்டம், எதிர்காலத்தைப் பற்றிய நிச்சயமற்ற தன்மை அல்லது உறவுமுறை இழப்பு போன்றவற்றின் நெருக்குதலை நாம் அனைவரும் அனுபவிக்கிறோம்.

அந்த தருணங்களில் நாம் விடுதலைக்காக தேவனிடம் பேரம் பேசலாம். ஆனால் உதவிக்காக தேவனை வற்புறுத்த வேண்டியதில்லை. அவர் பதிலளிப்பதாக உறுதியளிக்கிறார், அது நமது சூழ்நிலையிலிருந்து விடுவிக்கவில்லை என்றாலும், அவர் நம்முடனும் நம் அருகிலும் இருப்பார். மரணம் உட்பட வேறு எந்த ஆபத்துக்கும் நாம் பயப்படத் தேவையில்லை. சங்கீதக்காரனோடு நாமும், "எனக்கு அநுகூலம் பண்ணுகிறவர்கள் நடுவில் கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார்; என் சத்துருக்களில் சரிக்கட்டுதலைக் காண்பேன்" (வ.7) எனலாம்.

ஜினானும் அவளது தம்பியும் பெற்றுக்கொண்டதை போல வியத்தகு மீட்பு நமக்கு வாக்களிக்கப்படவில்லை, ஆனால் சங்கீதக்காரனை "விசாலத்திலே" (வ. 5) கொண்டு வந்த நமது உண்மையுள்ள தேவனை நாம் நம்பலாம். அவர் நம் நிலைமையை அறிந்திருக்கிறார், மரணத்திலும் அவர் நம்மை கைவிடமாட்டார்.

எளிமையான அழைப்பு

“நீ உறங்குவதற்கு முன்பு, முன் அறையை சுத்தம்செய்துவிடு” என்று என்னுடைய ஒரு மகளிடத்தில் நான் சொன்னேன். உடனே அவள், “ஏன் இதை அவள் செய்யக்கூடாது?” என்று கேட்டாள்.

இதுபோன்ற இலகுவான எதிர்ப்புகள், என்னுடைய மகள்கள் சிறியவர்களாய் இருக்கும்காலத்தில் எங்கள் வீட்டில் சாதாரணமாய் நிகழும். அவ்வாறு நிகழும்போது “உன் சகோதரிகளைக் குறித்து நீ கவலைப்படவேண்டாம், நான் உன்னை தான் செய்யச்சொன்னேன்” என்று நான் அவர்களுக்கு எப்போதும் பதில்கொடுப்பதுண்டு. 

யோவான் 21ஆம் அதிகாரத்தில், சீஷர்களுக்குள்ளும் இவ்விதமான சிந்தை இருந்ததை நாம் பார்க்கக்கூடும். பேதுரு இயேசுவை மூன்று முறை மறுதலித்த பின்னர், இயேசு அவனை மீண்டும் மீட்டெத்தார் (யோவான் 18:15-18, 25-27). இயேசு பேதுருவைப் பார்த்து, “என்னைப் பின்பற்றி வா” (21:19) என்று எளிய மற்றும் கடினமான ஒரு கட்டளையைக் கொடுக்கிறார். பேதுரு அவரை மரணபரியந்தம் பின்பற்றுவான் என்பதை இயேசு விவரிக்கிறார் (வச. 18-19). ஆனால் பேதுரு இயேசு சொன்னதை நிதானிப்பதற்குள், அவர்களுக்கு பின்னாக நின்றுகொண்டிருந்த, சீஷனைக் குறித்து “ஆண்டவரே, இவன் காரியம் என்ன?” (வச. 21) என்று இயேசுவிடத்தில் கேட்கிறான். இயேசு அவனுக்கு பிரதியுத்தரமாக, “நான் வருமளவும் இவனிருக்க எனக்குச் சித்தமானால், உனக்கென்ன, நீ என்னைப் பின்பற்றிவா” (யோவான் 21:22) சொல்லுகிறார். 

நாம் எத்தனை நேரங்களில் பேதுவைப்போல் இருக்கிறோம்! மற்றவர்களுடைய விசுவாசப்பாதையை தெரிந்துகொள்ள ஆர்வம் காண்பிக்கிறோம். தேவன் நம்மைக்கொண்டு செய்வதை பொருட்படுத்துவதில்லை. அவனுடைய வாழ்நாட்களின் இறுதியில், யோவான் 21இல் இயேசு முன்னறிவித்திருந்த மரணத்தின் விளிம்பில் பேதுரு நிற்கும்போது, இயேசுவின் அந்த எளிமையான கட்டளையை பேதுரு விவரிக்கிறான்: “நீங்கள் முன்னே உங்கள் அறியாமையினாலே கொண்டிருந்த இச்சைகளின்படியே இனி நடவாமல், கீழ்ப்படிகிற பிள்ளைகளாயிருந்து, உங்களை அழைத்தவர் பரிசுத்தராகியிருக்கிறதுபோல, நீங்களும் உங்கள் நடக்கைகளெல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள்” (1 பேதுரு 1:14-15). அந்த சிந்தையே, நம்மை சுற்றிலும் இருக்கிற அனைத்து காரியங்களிலிருந்து நம்முடைய பார்வையை விலக்கி, கிறிஸ்துவை நோக்கி செயல்பட நம்மை ஊக்குவிக்கிறது. 

தேவனில் சாய்ந்துகொள்!

சில நண்பர்களுடன் நாங்கள் தண்ணீர் பூங்காவில் விளையாடிக்கொண்டிருந்தபோது, காற்றடைக்கப்பட்ட தளங்களால் செய்யப்பட்ட மிதக்கும் தடைப் பாதையில் நடக்க முயற்சித்தோம். துள்ளலான, வழுக்கும் தளங்கள் மீது நேராக நடந்துசெல்வது என்பது சாத்தியமற்றது. சரிவுகள், பாறைகள் மற்றும் பாலங்கள் வழியாக நாங்கள் தள்ளாடியபோது, நாங்கள் எதிர்பாராதவிதமாக தண்ணீரில் விழுந்து கூச்சலிட நேரிட்டது. என் தோழிகளில் ஒருத்தி, முற்றிலும் களைத்துப்போய், மூச்சு விடுவதற்காக “கோபுரம்” ஒன்றில் சாய்ந்து இளைப்பாறினாள். அவளுடைய உடல் எடை தாங்க முடியாமல், மீண்டும் வழுக்கிக்கொண்டு வந்து தண்ணீரில் விழுந்தாள்.

தண்ணீர் பூங்காக்களில் காணப்படும் இதுபோன்ற பெலனில்லாத கோபுரம் போலில்லாமல், வேதாகம காலகட்டங்களில் ஒரு கோபுரம் மிகவும் பாதுகாப்பானதாக திகழ்ந்தது. நியாயாதிபதிகள் 9:50-51, தேபேஸ் மக்கள் தங்கள் நகரத்தின் மீது அபிமெலக்கின் தாக்குதலிலிருந்து மறைந்து கொள்ள “பலத்த துருக்கத்திற்கு” எவ்வாறு விரைந்து ஓடினர் என்பதை விவரிக்கிறது. நீதிமொழிகள் 18:10இல், ஆசிரியர் தன்னை நம்புகிறவர்களை விடுவிக்கும் தேவனை பலத்த துருக்கமாய் உருவகப்படுத்துகிறார்.

இருப்பினும், சில சமயங்களில், நாம் சோர்வாக இருக்கும்போது அல்லது காயப்படும்போது தேவனுடைய பலத்த துருக்கத்தின் மீது சாய்வதற்குப் பதிலாக, பாதுகாப்பு மற்றும் ஆதரவிற்காக - தொழில், உறவுகள் அல்லது உடல் வசதிகளுக்காக வேறு விஷயங்களைத் தேட நேரிடுகிறது. செல்வத்தில் பலம் தேடும் ஐசுவரியவான்களிடமிருந்து நாம் வேறுபட்டவர்கள் அல்ல (வச. 11). ஆனால் காற்றடைக்கப்பட்ட கோபுரம் எனது சிநேகிதியை தாங்க முடியாதது போல், இந்த விஷயங்கள் நமக்கு உண்மையில் தேவையானதை கொடுக்க முடியாது. ஆனால் சர்வ வல்லமையுள்ள, சகலத்தையும் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் தேவன் நமக்கு மெய்யான ஆறுதலையும் பாதுகாப்பையும் தருகிறார்.

தேவனுக்கு விலையேறப்பெற்றது

சிறுவனாக இருந்தபோது, ஜீவன் தனது தந்தையை மிகவும் கடுமையானவராகவும் தூரமாகவும் கண்டான். ஜீவன் உடல்நிலை சரியில்லாமல், குழந்தை மருத்துவரைப் பார்க்க நேரிட்டபோதும், அவனுடைய அப்பா, தொந்தரவாய் கருதி முணுமுணுத்தார். ஒருமுறை அவனுடைய பெற்றோர் சண்டையிடும்போது, அவனை கருக்கலைப்பு செய்ய தீர்மானித்ததை அவன் தகப்பன் சொல்ல கேட்டான். அவன் ஒதுக்கப்பட்ட குழந்தை என்னும் உணர்வு அவன் வளர்ந்த பிறகும் அவனை நெருக்கியது. ஜீவன் இயேசுவை தன் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டபோது, தேவனை தகப்பனாய் அடையாளப்படுத்துவதற்கு அவனுக்கு கடினமாகவே இருந்தது. 

ஜீவனைப் போல, நம்முடைய மாம்ச தகப்பனை நாம் நேசிக்காவிடில், தேவனுடனான நம்முடைய உறவில் நமக்கு அவ்வப்போது சந்தேகங்கள் எழக்கூடும். நான் அவருக்கு பாரமாயிருக்கிறேனா? அவர் என்னைப் பற்றி கவலைப்படுகிறாரா? என்று ஒருவேளை நாம் ஆச்சரியப்படலாம். ஆனால் நமது பூமிக்குரிய தகப்பன்மார்கள் மௌனமாகவும் தூரமாகவும் இருந்திருக்கையில், பரலோகத் தகப்பனாகிய தேவன் நம் அருகில் வந்து, “நானும் உன்னைச் சிநேகித்தேன்” (ஏசாயா 43:4) என்று கூறுகிறார்.

ஏசாயா 43இல், தேவன் நம்முடைய சிருஷ்டிகராகவும் தந்தையாகவும் பேசுகிறார். அவருடைய குடும்பத்தின் அங்கத்தினராய் நீங்கள் வாழவேண்டும் என்று அவர் விரும்புவாரோ என்று நீங்கள் ஆச்சரியப்பட்டால், அவர் தன்னுடைய ஜனங்களைப் பார்த்து என்ன சொல்கிறார் என்பதைக் கேளுங்கள்: “தூரத்திலிருந்து என் குமாரரையும், பூமியின் கடையாந்தரத்திலிருந்து என் குமாரத்திகளையும்... கொண்டுவா என்பேன்.” எந்த விதத்தில் அவருடைய அழைப்பிற்கு நாம் தகுதியானவர்கள் என்று நீங்கள் ஆச்சரியப்பட்டால், அவருடைய உறுதிமொழியைக் கேளுங்கள்: “நீ என் பார்வைக்கு அருமையானபடியினால் கனம்பெற்றாய்” (ஏசாயா 43:4). 

தேவன் நம்மை அதிகமாய் நேசித்தபடியினால், அவருடைய குமாரனாகிய இயேசுவை நமக்காக மரிக்க ஒப்புக்கொடுத்து, அவரை விசுவாசிக்கிற நாம் என்றென்றும் அவருடையவர்களாய் வாழ தயை செய்தார் (யோவான் 3:16). அவர் சொன்னதையும் அவர் நமக்காய் செய்ததையும் வைத்து, அவர் நம்மை விரும்பகிறார் என்று நாம் உறுதியாய் நம்பமுடியும்.

இணைக்கும் ஈட்டிகள்

இராணுவத்தில் ஒரு வீரர் எதிரிகளல்லாத தனது சொந்த படைகளால் எதிர்பாராதவிதமாகத் தாக்கப்படுவதை "நண்பர்களின் தாக்குதல்" என்றழைப்பர். ராணுவத்தில் இது எதிர்பாராதவிதமாக நடக்கலாம், ஆனால் நமது சொந்த வாழ்வில் சிலசமயம் "நண்பர்களின் தாக்குதல்கள்" திட்டமிட்டே நிகழ்கின்றன. மற்ற கிறிஸ்தவ சகோதர சகோதரிகள் நம்மைக்குறித்து கடினமான, பொய்யான காரியங்களைக் கூறுகையில்; நம்முடைய இருதயம் ஈட்டிகளாலும், அம்புகளாலும் பிளக்கப்பட்டதைப்போல உணருகிறோம்.

இப்போது இதைக் கற்பனை செய்துபாருங்கள். நீங்கள் இயேசுவின் கரங்களில் இருக்கிறீர்கள், ஒரு தகப்பன் தன் பிள்ளையைச் சுமப்பதுபோல அவர் உங்களை ஏந்தி, தமது இருதயத்தினருகே உங்களை வைத்துக்கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இருக்கும் உங்கள்மீது யாராயினும் அம்பு எய்யவோ அல்லது ஈட்டியால் துளைக்கவோ முயன்றால் (வேதாகம நாட்களில் நடப்பதுபோல) உங்கள் இதயத்தில் பாயும் அம்புகளும் ஈட்டிகளும், அவருடைய இதயத்திலும் பாயுமல்லவா? அந்த அநீதியாலும் வேதனையாலும், உங்கள் இதயத்தைத் துளைத்த ஈட்டிகளையும், அம்புகளையும் பிடுங்கியெடுத்து, எதிர்த்தாக்குதல் நடத்த நீங்கள் விழையலாம். ஆனால் அதை நீங்கள் செய்ய மறுக்கையில், உங்கள் இதயத்தையும் இயேசுவின் இதயத்தையும் துளைத்த அதே அம்போ, ஈட்டியோ உங்கள் இதயத்தை அவரோடே இணைக்கிறது. உங்கள் பிணைப்பு ஆழமாகிறது.

எனவே அடுத்தமுறை உங்களை யாராவது தவறாக, இழிவாக அல்லது அவதூறாகப் பேசினால், அதற்காகத் தேவனுக்கு நன்றி சொல்லுங்கள். ஏனெனில் இயேசுவின் இருதயத்தோடு நீங்கள் நெருங்கும் வாய்ப்பு அது. மேலும் உங்களைக் காயப்படுத்தி வேதனைப்படுத்துபவருக்காக ஜெபியுங்கள்.

பாவிகளுக்கான மருத்துவமனை

காத்மாண்டுவில் உள்ள எனது நண்பனின் சபைக்குச் சென்றிருந்தேன், ஆலயவாசலில் அவன் வைத்திருந்த குறிப்பைக் கண்டேன். அதிலே, "சபையென்பது பாவிகளுக்கு மருத்துவமனையேயன்றி, பரிசுத்தவான்களின் அருங்காட்சியகமல்ல" என்றிருந்தது. அருங்காட்சியகம் என்ற சொல்லாடல் எனக்கு விகற்பமாயிருப்பினும், மருத்துவமனை என்ற மேற்கோள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதுவே சரி என்பது என் தனிப்பட்ட கருத்து.

மருத்துவர்கள், செவிலியர்கள், நிர்வாக ஊழியர்கள். நோயாளிகள் எனப் பலரைக் கொண்டதுதான் மருத்துவமனை. ஒரு மருத்துவமனையில், நாம் அறிந்த அனைத்து வகையான உணர்ச்சிகளையும் காணலாம். மருத்துவர்களும், செவிலியர்களும் நோயாளிகளின் பேரில் நாட்டமுடையவர்களாக, அவர்களுடைய மனப்பான்மைக்கேற்றவாறு மாறுகிறார்கள். அநேகர் இப்படி சேவை செய்கிறார்கள்.

சி.எஸ்.லூயிஸ், "நீங்களிருக்கும் அதே மருத்துவமனையில் நான் உங்கள் சகநோயாளி என்றெண்ணிக்கொள்ளுங்கள், நான் உங்களுக்கு சற்றுமுன்னரே அனுமதிக்கப்பட்டேன். ஆகையால் உங்களுக்கு ஆலோசனை சொல்கிறேன்" என்றார். "எனக்கு நோயில்லை, இனிமேலும் நோய்வாய்ப்படமாட்டேன்" என்பதுபோல அந்த பரிசேயன் சுயநீதியின் ஆணவத்தால் மேட்டிமையின் பீடத்தில் பேசினது போலல்லாமல்,  தன்னை சகநோயாளியாக பாவித்து, எந்த வகையிலும் தான் சிறந்தவனல்ல என்பதுபோல சொன்னார்.

எந்தவொரு பாவமும் அறியாத இயேசு பாவிகளுக்கும்  ஆயக்காரர்களுக்கும்

சிநேகிதரானார். அவருடைய இரக்கமும் கிருபையும் தேவைப்படும் பாவிகளுக்கு நாம் சிநேகிதரா? என்பதே கேள்வி.

பூர்வ நிலை

சமீபத்தில் எனது கணினி பழுதடைந்ததால், அதை நானே சரிசெய்ய முயன்றேன். சில காணொளிகளின்மூலம் அதைக் கற்றுக்கொள்ள முயன்றேன். ஆனால் அவை பலனளிக்காமல் போகவே, என்னுடைய சில நண்பர்களை உதவிக்கு அணுகினேன். அம்முயற்சிகளும் வீணாய்ப்போனபின், இறுதியாக வேறுவழியின்றி அருகிலிருந்த ஒரு சேவை மையத்தை அணுகினேன். நன்றி கூறும் வண்ணமாக, எனது கணினிக்குச் சேவை உத்தரவாதம் இருந்தது.

பழுதை ஆய்வுசெய்த தொழில்நுட்பர், "வேறு வழியேயில்லை, கணினியின் வன்தட்டை (hard drive) மாற்றியாக வேண்டும். அப்படிச் செய்வது கணினியை பூர்வ நிலைக்குத் திருப்பிவிடும்" என்றார். அதாவது, நான் சேமித்த வைத்த அநேக தகவல்களை நான் இழக்க நேரிட்டாலும், அது புத்தம்புதியதைப் போன்று வேலைசெய்யும் என்பதாகும். வெளிப்புறமாக பழையதாயிருந்தாலும், உள்ளே அது புதுப்பிக்கப்பட்டிருந்தது.

தேவனின் மன்னிப்பும் கிட்டத்தட்ட இதைப்போலத்தான். நாம் பாவம் செய்து நமது விருப்பப்படி வாழ்ந்தோம். ஆனால், நமது இயலாமையையும் குறைவையும் அறிக்கை செய்கையில் அவர் நம்மை "நமது பூர்வ நிலைக்கு" திருப்புகிறார். அவர் நமக்குப் புதிய துவக்கத்தையும், புதிய மனதையும், இரண்டாம் வாய்ப்பையும் அருளுகிறார். நமது சரீரங்கள் முதுமையடைந்து பழையதாகலாம், ஆனால் நமது உள்ளங்களோ, அவை சிருஷ்டிக்கப்பட்ட நாளிலிருந்தது போலவே புதியதாய் அதின் பூர்வ இயல்பிற்குத் திரும்பும். "உங்களுக்கு நவமான இருதயத்தைக் கொடுத்து, உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியைக் கட்டளையிட்டு, கல்லான இருதயத்தை உங்கள் மாம்சத்திலிருந்து எடுத்துப்போட்டு, சதையான இருதயத்தை உங்களுக்குக் கொடுப்பேன்" (எசேக்கியேல் 36:26) என்று அவர் வாக்குரைத்தபடியே நடக்கும்.

அவர் அறிவார்

யமுனா தன் செவிலியர் பணியை மும்பையில் துவங்கவிருந்தாள். வேலைவாய்ப்பு குறைவாயிருந்த தன் கிராமத்தைக் காட்டிலும் தன் குடும்பத்தைப் பராமரிக்க இது அவளுக்கு ஏதுவாயிருந்தது. அவள் புறப்படுவதற்கு முந்தின நாள் இரவில், தன் ஐந்து வயது மகளைப் பராமரிக்கும் தன்னுடைய சகோதரிக்கு சில ஆலோசனைகளைக் கொடுத்தாள். “ஒரு ஸ்பூன் சர்க்கரைக் கொடுத்தால்தான் அவள் மருந்து சாப்பிடுவாள்; அவள் கொஞ்சம் கூச்சப்படுவாள்; தன் நண்பர்களுடன் சகஜமாய் விளையாடுவாள்; ஆனால் அவளுக்கு இருட்டைக் கண்டால் பயம்...”
மறுநாள் ரயிலின் ஜன்னலோரத்தில் அமர்ந்து, யமுனா தேவனை நோக்கி, "ஆண்டவரே, என்னைப் போல் என் மகளை யாரும் புரிந்துகொள்ள முடியாது. நான் அவளோடு இருக்க முடியவில்லை. நீர் அவளோடு கூட இரும்” என்று ஜெபித்தாள்.
நாம் நேசிக்கும் மக்களை நாம் நன்கு அறிவோம். அவர்கள் நமக்கு அதிகம் பிடித்தவர்கள் என்பதினால் அவர்களைக் குறித்த அனைத்தையும் நாம் அறிந்திருப்பது இயல்பு. தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் நாம் அவர்களோடு இருக்கமுடியாவிட்டால், அவர்களுக்கு ஏதேனும் ஆபத்து நேருமோவென்று நாம் கவலைப்படுகிறோம,காரணம் அவர்களை நம்மைப்போல யாரும் புரிந்துகொள்ளமாட்டார்கள்.
சங்கீதம் 139இல், எல்லோரைக் காட்டிலும் நம்மை தேவன் நன்கு அறிவார் என்று தாவீது உணர்த்துகிறார். நம் அன்புக்குரியவர்களையும் அவர் ஆழமாக அறிந்திருக்கிறார் (வச. 1-4). அவரே அவர்களையும் உண்டாக்கினார் (வச. 13-15), ஆகவே அவர்கள் தேவையையும் நன்கு அறிந்திருக்கிறார். அவர்கள் வாழ்வின் அன்றாட நிகழ்வை அவர் அறிந்திருக்கிறார் (வச. 16). அவர்களோடே கூட இருக்கிறார், அவர்களைக் கைவிடமாட்டார் (வச. 5, 7-10).
மற்றவர்களுக்காய் நீங்கள் கவலைப்படும்போது அவர்களை நன்றாய் அறிந்திருக்கிற, ஆழமாய் நேசிக்கிற தேவனுடைய பொறுப்பில் ஒப்படைத்துவிடுங்கள்.

மன்னித்து மறபோம்

மனம் பொருந்துதல் பற்றி ஒரு வட்ட மேசை விவாதத்தை ஆரம்பித்தபோது, ஒரு பங்காளர், “மக்கள் குற்றங்களை காலத்தில் உறையச் செய்யாதீர்கள்” என ஞானமாய் கூறினார். நாம் மக்கள் செய்யும் தவறுகளை நினைவில் வைத்துக் கொள்கிறோம். ஆனால், அவர்கள் மாற்றமடைய வாய்ப்பு கொடுப்பதில்லை என அவர் கூறினார்.

பேதுருவின் வாழ்க்கையில் எத்தனையோ வேளைகளில் தேவன் அவரைப் “புறக்கணித்திருக்கலாம்.” ஆனால், தேவன் அவ்வாறு செய்யவில்லை. துடிப்பான சீடனான பேதுரு இயேசுவைத் “திருத்துகின்றான்”, விளைவாக இயேசுவிடமிருந்து வன்மையான கடிந்து கொள்ளலைச் சந்திக்கின்றான். (மத். 16:21-23). அவன் யாவருமறிய இயேசுவை மறுதலிக்கின்றான் (யோவா. 18:25-27). பின்னர், மனம்வருந்தி மீண்டெழுகிறான் (21:15-19). ஒரு முறை சபையில் ஜாதிபிரிவினைக்குக் காரணமாகிறான்.

கேபா என்றழைக்கப்படும் பேதுரு தன்னை புறஜாதியாரிடமிருந்து பிரித்து, விலக்கிக் கொண்டபோது இந்தக் காரியம் நிகழ்ந்தது (கலா. 2:11-12). சமீபத்தில் அவன் புறஜாதியாரோடே தன்னை ஐக்கியப்படுத்தியிருந்தான். ஆனால், சில யூதர்கள் வந்து, கிறிஸ்துவைப் பின்பற்றும் விசுவாசிகளுக்கும் விருத்தசேதனம் அவசியம் என்று போதித்த போது, விருத்தசேதனமில்லாத புறஜாதியாரை பேதுரு தவிர்த்தான். இது மோசேயின் நியாயப்பிரமாணத்தை நோக்கி, அவரது அபாயகரமானத் திரும்புதலைக் குறிக்கிறது. போதுருவின் இந்த நிலையை “மாய்மாலம்” என பவுல் குறிப்பிடுகின்றார் (வச. 13). பவுல் தைரியமாக எதிர்த்ததால், இந்தக் காரியம் தீர்க்கப்பட்டது. தேவன் நமக்களித்துள்ள அழகிய ஒரு மனதின் ஆவியைக் பெற்றவனாகப் பேதுரு தேவப் பணியைத் தொடர்ந்தான்.

ஒருவரும் தங்களுடைய மோசமான நேரங்களால் புறக்கணிக்கப்படுவதில்லை. தேவ கிருபையால் நாம் ஒருவரையொருவர் தழுவி, ஒருவரிடமிருந்து ஒருவர் கற்றுக் கொண்டு, தேவைப்படும் இடங்களில் ஒருவரையொருவர் எதிர்த்து தேவ அன்பில் இணைந்து வளர்வோம்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

நம்மைக் காத்துக்கொள்ள முயற்சித்தல்

பல ஆண்டுகளுக்கு முன்பு, நியூயார்க் நகரம் “பாதுகாப்பாக இருங்கள், ஸ்டே புட்” என்ற விளம்பரப் பிரச்சாரம், மின்தூக்கியில் சிக்கிக்கொள்பவர்களின் அறிவூட்டலுக்காக ஏறெடுக்கப்பட்டது. அவ்வாறு சிக்கிக்கொண்ட பயணிகள் பயத்தில் மின்தூக்கியின் கதவை திறக்கமுயன்றபோதும், வேறு வழிகளில் வெளியேற முயன்றபோதும் உயிரிழக்க நேரிட்டுள்ளது என்று நிபுணர்கள் தெரிவித்தனர். உதவிக்கு அழைப்பதற்கும், அவசரகால பதிலளிப்பவர்கள் வரும் வரை காத்திருப்பதற்கும் அலாரம் பொத்தானைப் பயன்படுத்துவதே அத்தருணத்தில் சிறந்த செயல்திட்டமாகும்.

அப்போஸ்தலனாகிய பவுல் மிகவும் வித்தியாசமான மீட்புத் திட்டத்தை விவரித்தார். பாவத்தினால் பின்னாக இழுக்கப்படுபவர்களுக்கு உதவும் வகையில் இத்திட்டம் அமைந்தது. அவர் எபேசியர்களுக்கு “அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாயிருந்த உங்களை உயிர்ப்பித்தார்” (எபேசியர் 2:1) என்று அவர்களுடைய முழுமையான ஆவிக்குரிய உதவியற்ற தன்மையை பவுல் அவர்களுக்கு நினைவுபடுத்தினார். அவர்களும் பிசாசுக்கு கீழ்படிந்து அந்த வலையிலே சிக்கியிருந்தனர் (வச. 2). இதன் விளைவாக அவர்கள் தேவனுடைய கோபாக்கினைக்கு ஆளாகினர். ஆனால் அவர் அவர்களை ஆவிக்குரிய இருளில் சிக்கவைக்கவில்லை. அந்தகார இருளில் இருந்த  நீங்கள் “கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்” (வச. 5,8) என்று பவுல் எழுதுகிறார். தேவனுடைய மீட்பு நம்முடைய விசுவாசத்தில் பிரதிபலிக்கப்படுகிறது. விசுவாசம் என்றால் நம்மை நாமே மீட்டுக்கொள்ள முடியாது என்று தேவனிடத்தில் உதவிகோருவது என்ற அர்த்தம். 

தேவனுடைய கிருபையால், பாவத்தின் வலையில் இருந்து மீட்கப்படுவது நம்மிடம் இருந்து உருவானது அல்ல. இது இயேசுவின் மூலமாக நமக்கருளப்பட்ட “தேவனுடைய ஈவு” (வச. 8). 

 

பூத்து குலுங்கும் பாலைவனம்

ஒரு நூற்றாண்டுக்கு முன்பு, எத்தியோப்பியாவில் சுமார் 40 சதவிகிதம் பசுமையான காடுகள் இருந்தது. ஆனால் தற்போது அது 4 சதவிகிதமாக மாறியுள்ளது. மரங்களைப் பாதுகாக்கத் தவறிய நிலையில், பயிர்களுக்கான பரப்பளவை அகற்றுவது சுற்றுச்சூழல் நெருக்கடிக்கு வழிவகுத்தது. மீதமுள்ள பச்சை நிறத்தில் உள்ள பெரும்பாலான பகுதிகள் திருச்சபைகளினால் பாதுகாக்கப்படுகின்றன. பல நூற்றாண்டுகளாக, உள்ளூர் எத்தியோப்பியன் ஆர்த்தடாக்ஸ் டெவாஹிடோ திருச்சபைகள் தரிசு பாலைவனத்தின் மத்தியில் இந்த சோலைகளை வளர்த்து வருகின்றன. நீங்கள் வான்வழிப் படங்களைப் பார்த்தால், பழுப்பு நிற மணலால் சூழப்பட்ட பசுமையான தீவுகளைக் காணலாம். திருச்சபை தலைவர்கள் தேவனுடைய படைப்பான மரங்களைப் பராமரிப்பது தேவனுக்கு கீழ்படிதலின் பிரதிபலிப்பு என்று தங்களை உக்கிராணக்காரர்களாய் கருதுகின்றனர். 

ஏசாயா தீர்க்கதரிசி, ஒரு வறண்ட பாலைவனத்தில் கொடூரமான வறட்சியினால் பாதிக்கப்பட்ட இஸ்ரவேல் மக்களுக்கு எழுதுகிறார். மேலும் ஏசாயா, “வனாந்தரமும் வறண்ட நிலமும் மகிழ்ந்து, கடுவெளி களித்து, புஷ்பத்தைப்போலச் செழிக்கும்” (ஏசாயா 35:1) என்று தேவன் அவர்களுக்காய் முன்குறித்திருக்கிற எதிர்காலத்தை உரைக்கிறார். தேவன் தன்னுடைய ஜனத்தை சுகமாக்க விரும்புகிறார். அவர் பூமியையும் சுகமாக்க விரும்புகிறார். தேவன், “புதிய வானத்தையும் புதிய பூமியையும்” (ஏசாயா 65:17) உண்டாக்குவார். தேவனுடைய புதுப்பிக்கப்பட்ட உலகத்தில், வனாந்திரம் “மிகுதியாய்ச் செழித்துப் பூரித்து ஆனந்தக்களிப்புடன் பாடும்” (35:2). 

தேவனுடைய படைப்பின் மீதும் மக்களின் மீதும் அவர் காண்பிக்கும் அக்கறையானது நம்மையும் அவ்வாறு செய்வதற்கு தூண்டுகிறது. அவருடைய படைப்புகளை பராமரிப்பதின் மூலம் முழு உலகத்தையும் குணமாக்கும் அவருடைய பிரதான திட்டத்தின் அங்கத்தினர்களாய் நாம் மாறக்கூடும். அனைத்து வனாந்திரங்களையும் பூத்துக் குலுங்கச்செய்யும் தேவனுடைய திட்டத்தில் நாமும் பங்காளர்களாய் மாறலாம். 

 

பார்ப்பதற்கு கண்கள்

பல ஆண்டுகளாக குடிப்பழக்கம் மற்றும் மனநலப் பிரச்னைகளால் போராடி வந்த தன் உறவினர் சாண்டிக்காக ஜாய் கவலைப்பட்டாள். அவள் சாண்டியின் அபார்ட்மெண்டிற்குச் சென்றபோது, கதவுகள் பூட்டப்பட்டிருந்தன. அது காலியாகத் தெரிந்தது. அவளும் மற்றவர்களும் சாண்டியைத் தேடத் திட்டமிட்டபோது, “தேவனே, நான் பார்க்காததைக் காண எனக்கு உதவுங்கள்” என்று ஜாய் ஜெபித்தாள். அவர்கள் அந்த வீட்டைவிட்டு வெளியேறும்போது, ஜாய் சாண்டியின் வீட்டைத் திரும்பிப் பார்த்தாள். அங்கிருந்த திரைச்சீலை அசைந்ததை அவள் பார்க்க நேரிட்டது. அந்த நேரத்தில், சாண்டி உயிருடன் இருப்பதை அவள் அறிந்தாள். அவளை அடைய அவசர உதவி தேவைப்பட்டாலும், இவ்விதமான ஜெபத்தை ஏறெடுத்ததற்காய் ஜாய் மகிழ்ச்சியடைந்தாள்.

எலிசா தீர்க்கதரிசி, தேவன் தன்னுடைய பராக்கிரமத்தை அவருக்கு வெளிப்படுத்திக் காண்பிக்கும்பொருட்டு விண்ணப்பிக்கிறார். சீரிய இராணுவம் அவர்களுடைய பட்டணத்தைச் சுற்றி வளைத்தபோது, எலிசாவின் வேலைக்காரன் பயத்தில் நடுங்கினான். இருப்பினும், அவன் தேவனுடைய மனுஷனாய் இல்லாதபோதிலும், தேவனுடைய உதவியினால் காணக்கூடாததை அவன் கண்டான். எலிசா தன்னுடைய வேலைக்காரன் காணவேண்டும் என்று ஜெபிக்க, “இதோ, எலிசாவைச்சுற்றிலும் அக்கினிமயமான குதிரைகளாலும் இரதங்களாலும் அந்த மலை நிறைந்திருக்கிறதை அவன் கண்டான்” (2 இராஜாக்கள் 6:17).

எலிசாவுக்கும் அவனுடைய வேலைக்காரனுக்கும், ஆவிக்குரிய மற்றும் மாம்ச வாழ்க்கைக்கு இடையே இருந்த திரையை தேவன் விலக்கிவிட்டார். திரைச்சீலையின் சிறிய மின்னலைக் காண தேவன் ஜாய்க்கு கிருபையளித்தார் என்று அவளும் நம்புகிறாள். நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்வதற்கான ஆவிக்குரிய தரிசனத்தைக் கொடுக்கும்படி நாமும் அவரிடம் விண்ணப்பிக்கலாம். நம் அன்புக்குரியவர்களுடனோ அல்லது நமது சமூகங்களிலோ, நாமும் அவருடைய அன்பு, உண்மை மற்றும் இரக்கத்தின் பிரதிநிதிகளாக திகழமுடியும்.