உதவும் கரம்
இடாகோ என்ற இடத்தில் குளிர்காலத்தில், எங்கள் வீட்டின் பின்புறம் அமைந்துள்ள பனிசறுக்கு தளத்தில் விளையாடுவதை என்னுடைய குழந்தைகள் அநுபவித்து மகிழ்வர். அவர்கள் சிறுவர்களாக இருந்தபோது பனிச்சறுக்கலைக் கற்றுக் கொள்வது அவர்களுக்குச் சவாலாக இருந்தது. அவர்களை மனமிணங்கச் செய்து, அவர்களுடைய கால்களை அந்த கடினமான குளிர் தளத்தில் பதியவைப்பது மிகவும் கடினமாக இருந்தது. ஏனெனில், கீழே விழுந்தால் அது எத்தனை வலியைத் தருமென அவர்கள் அறிந்திருந்தனர். ஒவ்வொரு முறையும் அவர்கள் கால் வழுக்கி கீழே விழ ஏதுவாகும் போது நான் அல்லது என்னுடைய கணவர் அவர்களைத் தாங்கி பிடித்து மீண்டும் அவர்கள் தங்கள் கால்களில் உறுதியாக நிற்கும்படியும் அவர்கள் தங்களின் சட்டத்தை நிலையாக பிடித்துக் கொள்ளும்படியும் உதவுவோம்.
நாம் கீழே விழும்போது யாரோ ஒருவரின் உதவும் கரங்கள் அங்குவந்து தாங்கிக் கொள்ளுவதை குறித்து பிரசங்கி புத்தகம் வெளிப்படுத்துகின்றது. பிறரோடு இணைந்து வேலை செய்வது நமக்கு இனிமையாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும் (4:9). ஒருவர் வாழ்வில், உற்சாகத்தைக் கொண்டு வருபவன் அவருடைய நண்பன். நாம் சவால்களைக் சந்திக்கும் போது யாரேனும் நம்மருகிலிருந்து, நம்முடைய செயலுக்கும் மனதிற்கும் உறுதுணையாக இருந்தால் அது நன்மைபயக்கும். இத்தகைய உறவுகள் நமக்கு பெலனையும், ஒரு நோக்கத்தையும் ஆறுதலையும் தரும்.
நம் வாழ்வின் கடினமான பனிபோன்ற சோதனைகளில் நாம் விழுந்து கிடக்கும்போது, அருகில் உதவும்படி யாரேனும் இருப்பார்களா? அப்படியிருந்தால் அது தேவனி;டமிருந்து வரும் உதவி, அல்லது யாருக்காயினும் நண்பனின் உதவி தேவையாயிருந்தால், தேவன் அனுப்பும் நண்பனாக நாம் அவர்களைத் தூக்கி விடுவோமா? நம்முடைய துணையாளராக எப்போதும் நம்மோடிருப்பவர் தேவன் ஒருவரே. ஒருவேளை நம்மைத் தூக்கி நிறுத்த நம்மருகில் யாருமேயில்லையென உணரும்போது, தேவன் நமக்கு உதவும்படி எப்பொழுதும் நம்மோடிருக்கிறார் என்பது எத்தனை ஆறுதலைத் தருவதாகவுள்ளது (சங். 46:1). நாம் அவரை நோக்கிக் கூப்பிடும் போது நம்மைத் தூக்கி நிலை நிறுத்த, அவருடைய கரம் நம்மை உறுதியாகப் பற்றுகிறது.
நம்மிடம் இருப்பது
ஒரு பண்டிகைக் கால விடுமுறையைக் கொண்டாட தன்னுடைய குடும்ப உறுப்பினர்களையும், நண்பர்களையும் தன் வீட்டுக்கு அழைக்க என்னுடைய தோழி ஆர்வமாக இருந்தாள். விருந்தினர்களும் ஒன்றுகூடுவதை ஆர்வமாக எதிர்பார்த்தார்கள். அதிக பேருக்கு உணவளிக்க வேண்டும் என்பதால் உணவுக்கு தங்கள் பங்களிப்பைச் செலுத்த விரும்பினார்கள். சிலர் ரொட்டி கொண்டுவந்தார்கள். சிலர் சாலட்டுக்கான பச்சைக் காய்கனிகளையும், கூட்டு வகைகளையும் இனிப்பு கொண்டுவந்தார்கள். ஆனால், ஒரு விருந்தினருக்கு அதிக பணத்தட்டுப்பாடு இருந்ததால் அவளால் எந்த உணவுப் பொருளும் வாங்கி வர முடியவில்லை. எனவே தன் பங்களிப்பாக என் தோழியின் வீட்டை சுத்தம் செய்ய முன்வந்தாள்.
அவள் எந்த உணவுப் பதார்த்தமும் கொண்டு வரவில்லை என்றாலும், அவளுக்கு பந்தியில் சமமான இடமே கிடைத்திருக்கும். ஆனாலும் தன்னால் முடிந்த தன் நேரத்தையும், தன் திறமையையும் கொடுக்க விரும்பினாள். தன் பங்களிப்பை முழுமனதோடு செய்தாள். 2 கொரிந்தியர் 8ல் உள்ள பவுலின் வார்த்தைகளின் சாராம்சமும் இதுவே. உடன் விசுவாசிகளுக்குக் கொடுத்து உதவ அவர்கள் ஆர்வமாக இருந்தார்கள். அவர்கள் முயற்சியில் நிலைத்திருக்கும்படி பவுல் அவர்களுக்கு வலியுறுத்தினார். கொடுப்பதற்கு அவர்களுக்கு இருந்த ஆர்வத்தையும், மன விருப்பத்தையும் பாராட்டினார். கொடுப்பதற்கு அவர்களுக்கு இருந்த ஊக்கமே, வெகுமதி எந்த அளவானத், தொகையாக இருந்தாலும் ஏற்புடையதாக்கும் என்று கூறினார் (வச. 12).
அனேக முறை நாம் கொடுப்பதை மற்றவர்கள் கொடுப்பதோடு நாம் ஒப்பிட்டுப் பார்க்கிறோம். குறிப்பாக நாம் கொடுக்க நினைக்கும் அளவிற்கு நம்முடைய நிதி நிலை இடமளிக்காதபோது ஒப்பிடுகிறோம். ஆனால் நாம் கொடுப்பதைத் தேவன் வேறு விதமாகப் பார்க்கிறார். நமக்கு இருப்பதில் நாம் மனம் உவந்து கொடுப்பதை அவர் விரும்புகிறார்.
ஊக்குவிப்பதற்காக கட்டப்படுதல்
ஸ்டீவன் தாம்ஸன் நினைவு சென்டிபீட் என்பது திறந்தவெளியில் நடைபெறும் ஓட்டப்பந்தயம் மற்ற ஓட்டப் பந்தயங்களில் இருந்து மாறுபட்டது. ஏழு நபர்களைக் கொண்ட ஒவ்வொரு குழுவும், மூன்று மைல் பந்தயத்தின் முதல் இரண்டு மைல் தொலைவிற்கு ஒரு கயிற்றைப் பிடித்தபடி ஓடவேண்டும். இரண்டு மைல் ஓடிய பிறகு, கயிற்றை விட்டுவிட்டு, ஒவ்வொரு நபரும் தனித்தனியாக ஓடவேண்டும். எனவே குழுவின் வேகமும், தனிநபர் வேகமும் சேர்ந்ததே ஒரு நபரின் வேகம்.
இந்த வருடம் என் மகளின் குழு நான் இதுவரை கண்டிராத ஒரு புதிய உத்தியைக் கையாண்டது. வேகமாக ஒடக்கூடிய பெண்ணை முதலில் ஓடவிட்டு, இருப்பதிலேயே மெதுவாக ஓடும் பெண்ணை அவளுக்குப் பின்னால் ஓடவிட்டார்கள். அதிக வேகமாக ஓடும் பெண் மெதுவாக ஓடும் பெண்ணின் அருகிலேயே ஓடுவதால், அவளை ஊக்குவிக்கும் வார்த்தைகளைப் பேசிக்கொண்டே வரவேண்டும் என்பது அவர்களது திட்டம்.
அவர்களது திட்டம் எபிரேயரில் உள்ள ஒரு பத்தியை எனக்கு நினைவுபடுத்தியது. “அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் நாம் ஒருவரையொருவர் ஏவும்போது” (வச. 24) “நம்முடைய நம்பிக்கையை அறிக்கையிடுகிறதில் அசைவில்லாமல் உறுதியாயிருக்கக்கடவோம்” என்று பவுல் எழுதுகிறார். இதை செய்வதற்கு பல வழிகள் இருந்தாலும், அவர் ஒன்றை முன்னிலைப்படுத்துகிறார். “சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்தி சொல்லக்கடவோம்” என்கிறார் (வச. 25). மற்ற விசுவாசிகளோடு ஒன்றுகூடுதல் விசுவாச வாழ்க்கையின் முக்கிய அம்சமாகும்.
சில சமயங்களில் வாழ்க்கை ஓட்டம் நம்மால் கையாள முடியாததாகத் தோன்றலாம். தன்னம்பிக்கை இழந்து, கயிற்றை விட்டுவிடும் அளவிற்கு நம் உறுதியை இழக்கலாம். நாம் சேர்ந்து ஓடும்போது, திடமாக ஓட ஒருவரை ஒருவர் ஊக்குவிப்போமாக!
பூசணிக்காய்க்குள் பொக்கிஷம்
ஒரு புதிய, இளம் தாயாக, என்னுடைய மகளின் முதல் ஆண்டை ஆவணப்படுத்த வேண்டும் என்ற உறுதியோடு இருந்தேன். அவள் எப்படி மாறி இருக்கிறாள், எப்படி வளர்ந்திருக்கிறாள் என்பதைத் தெரிந்துகொள்ளும்விதமாக, ஒவ்வொரு மாதமும் அவளைப் புகைப்படம் எடுத்தேன். எனக்கு மிகவும் பிடித்த ஒரு புகைப்படத்தில், உள்ளூர் விவசாயிடம் வாங்கிய பூசணிக்காயைக் குடைந்து, அதற்குள் அவள் சந்தோஷமாக உட்கார்ந்திருப்பாள். என் மனதுக்கினிய என் மகள், பெரிதாக வளர்ந்த ஒரு பூசணிக்காய்க்குள் இருந்தாள். சில வாரங்களில் பூசணிக்காய் காய்ந்துபோனது, ஆனால் என் மகளோ தொடர்ந்து வளர்ந்தாள்.
இயேசு யார் என்பதை உணர்ந்த பவுல் அதை விவரிப்பதை இந்த புகைப்படம் எனக்கு நினைவுபடுத்தியது. இயேசுவைக்குறித்து நம் இருதயத்தில் இருக்கும் அறிவை, மண்பாண்டத்துக்குள் உள்ள பொக்கிஷத்துக்கு ஒப்பிடுகிறார். “எல்லா பக்கங்களிலும் நெருக்கப்பட்டாலும்” (2 கொரிந்தியர் 4:8), இயேசு நமக்காக செய்தவற்றை நினைப்பது, போராட்டங்கள் மத்தியில் நிலைத்திருக்க நமக்கு உதவுகிறது. கடவுளின் வல்லமை நம்முடைய வாழ்க்கையில் செயல்படுவதால், “கீழே தள்ளப்பட்டும் மடிந்துபோகாமல்”, நாம் இயேசுவின் வாழ்க்கையை வெளிப்படுத்துகிறோம் (வச. 9).
காய்ந்துபோன பூசணிக்காயைப்போல, நம்முடைய சோதனைகளால் நாம் சோர்ந்துபோகலாம். ஆனால் அந்த கடினமான சவால்களுக்கு மத்தியில், இயேசு தரும் சந்தோஷம் நம்மில் பெருக முடியும். நம்முடைய வாழ்க்கையில் செயல்படும் அவரது வல்லமை பற்றிய நமது புரிந்துகொள்ளுதல்தான் பலவீன மண்பாண்டங்களாகிய நம்முடைய உடலில் சேர்த்து வைக்கப்பட்டிருக்கும் பொக்கிஷம். நம்மில் அவர் வல்லமை செயல்படுவதால், கஷ்டங்கள் மத்தியில் நாம் செழித்து வளரமுடியும்.
உங்கள் படகுகளைக் கொண்டு வாருங்கள்
ஹார்வி என்ற சூறாவளிப்புயல் 2017ல் வந்தபோது, பெரும் அழிவை ஏற்படுத்தக்கூடிய வெள்ளம் கிழக்கு டெக்சஸைச் சூழ்ந்தது. தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக, பலர் வெள்ளத்தில் இருந்து வெளியேற முடியாமல், தங்கள் வீட்டிற்குள்ளேயே இருக்கும் நிலை ஏற்பட்டது. அந்த மாகாணத்திலிருந்தும், நாட்டின் பிற பகுதிகளில் இருந்தும் பலரும் தனிப்பட்ட முறையில் தங்கள் படகுகளில் வந்து வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை வெளியேற்ற உதவினர். இவர்களை மக்கள் “டெக்சஸ் கப்பற்படை” என்று அழைத்தனர்.
தைரியம் மற்றும் தயாள குணம் கொண்ட இந்த ஆண்கள் மற்றும் பெண்களின் செயல்கள், நீதிமொழிகள் 3:27 ல், முடிந்த வரை மற்றவர்களுக்கு உதவும்படி நாம் அறிவுறுத்தப்படுவதை நினைவுக்குக் கொண்டுவருகிறது. தங்கள் படகுகளைக் கொண்டுவந்து மற்றவர்களுக்கு உதவ அவர்களுக்கு செயல்திறன் இருந்தது. அதை அவர்கள் பயன்படுத்தினார்கள். தங்களிடம் இருந்த சாதனங்களையும், செயல்திறன்களையும் மற்றவர்களின் நலனுக்காக உபயோகிக்கும் மனோபாவத்தை அவர்கள் செயல்கள் வெளிப்படுத்துகின்றன.
சில சமயங்களில் நாம் செய்ய வேண்டிய வேலைகளை செய்வதற்கு நமக்கு போதிய சாமர்த்தியம் இல்லை என்று நாம் நினைக்கலாம். மற்றவர்களுக்கு உதவ நமக்கு திறமை, சாமர்த்தியம், அனுபவம், அல்லது நேரம் இல்லை என்று நினைத்து நாம் பயப்படுகிறோம். இதுபோன்ற சமயங்களில் நம்மை நாமே தனிமைப்படுத்திக்கொண்டு, மற்றவர்களுக்கு எந்த வகையில் நாம் உதவ முடியும் என்று கவனிக்கத் தவறுகிறோம். டெக்சஸ் கப்பற்படையினால் வெள்ளம் அதிகரிப்பதைத் தடுக்க முடியவில்லை. அரசு உதவி செய்யவேண்டும் என்று சட்டம் இயற்ற முடியவில்லை. ஆனால் சக மனிதர்களைக் காப்பாற்ற, தங்களிடம் இருந்த ஒன்றை உபயோகித்தனர் – அவை படகுகள்! மேலான இடத்திற்கு மக்களை அழைத்துச் செல்ல நம்மிடம் இருக்கும் “படகுகளை” – அது எதுவாக இருந்தாலும் – உபயோகிப்போமாக..
சரியான நேரம்
என் முதல் பிள்ளையை கல்லூரிக்கு அனுப்புவதற்காக நேற்று நான் விமான டிக்கெட் வாங்கினேன். விமானத்தைத் தேர்வு செய்வதற்குள் நான் சிந்திய கண்ணீரால் அதிகம் நனைந்தாலும், என் கணினியின் விசைப்பலகை (keyboard) வேலை செய்வது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. பதினெட்டு ஆண்டுகளாக அனுதின வாழ்க்கையை அவளோடு அனுபவித்ததை நினைக்கும்போது, அவள் என்னை விட்டு கல்லூரிக்குச் செல்வது அதிகக் கவலையைத் தருகிறது. ஆனாலும், அவள் பிரிவு கஷ்டமாக இருக்கும் என்கிற காரணத்துக்காக அவளுக்குக் கிடைக்கவிருக்கும் வாய்ப்புகளை இழக்கச் செய்யமாட்டேன். அவளது வாழ்வின் இந்தத் தருணத்தில், அவள் தன் பயணத்தைத் தொடங்கி, புதிய அனுபவங்களைப் பெற்றுக்கொள்வதும், இந்த தேசத்தின் மற்றொரு பகுதியை அறிந்துகொள்வதும் மிகச் சரியான விஷயமாகும்.
குழந்தை வளர்ப்பின் ஒரு பகுதி முடியும் இந்த சமயத்தில், இன்னொரு பகுதி தொடங்குகிறது. அதுவும் புதிய சவால்களும், புதிய சந்தோஷங்களும் நிறைந்ததாக இருக்கும். இஸ்ரவேலின் மூன்றாவது இராஜாவான சாலொமோன் “ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு காலமுண்டு; வானத்தின் கீழிருக்கிற ஒவ்வொரு காரியத்துக்கும் ஒவ்வொரு சமயமுண்டு” (பிரசங்கி 3:1) என்று கர்த்தர் ஒவ்வொன்றிற்கும் ஒரு காலத்தைக் குறித்திருப்பதைச் சொல்கிறார். நம் வாழ்வில் நேரிடும் சம்பவங்கள் – அவை நமக்கு சாதகமாக இருந்தாலும், இல்லாவிட்டாலும், மனிதராகிய நமக்கு அவற்றின் மேல் எந்த கட்டுப்பாடும் கிடையாது. ஆனால் தன் மிகுந்த வல்லமையால், கர்த்தர் “சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாய்ச் செய்கிறார்” (வச. 11).
மனதுக்கு சஞ்சலமான சமயங்களில், அதிலிருந்து நன்மையைத் தருவார் என்று நாம் கர்த்தரை நம்பலாம். நமது வசதிகளும், நமது சந்தோஷங்களும் மாறி மாறி வரலாம். ஆனால் தேவன் செய்வது “என்றைக்கும் நிலைக்கும்” (வச. 14). சில பருவங்களை நாம் ரசிக்க முடியாமல் இருக்கலாம். சில, மிகுந்த வேதனை அளிப்பவையாக இருக்கலாம். ஆனாலும் அவற்றையும் தேவன் அழகுபெறச் செய்ய முடியும்.
சுய பெலத்தால்
ஆண் அழகர் போட்டியில் பங்கேற்பவர்கள், மிகக் கடுமையான பயிற்சிகளைச் செய்வார்கள். முதல் சில மாதங்களுக்கு உடல் அளவையும், வலிமையையும் அதிகரிக்க முக்கியத்துவம் கொடுப்பார்கள். போட்டி நெருங்கும் சமயத்தில், தசைகளை மறைக்கும் கொழுப்பைக் கரைப்பதற்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். போட்டிக்கு சில நாட்கள் முன்பு, தசை நன்கு தெரியவேண்டும் என்பதற்காக, எப்போதும் குடிப்பதைவிட குறைவான அளவு தண்ணீர் குடிப்பார்கள். ஊட்டச்சத்து உணவுகள் சாப்பிடுவதைக் குறைப்பதால், பார்ப்பதற்கு வலிமையாகத் தெரிந்தாலும், போட்டி தினத்தன்றுதான் மிக பலவீனமாக இருப்பார்கள்.
இதற்கு எதிர்மறையான விஷயத்தை 2 நாளாகமம் 20ல் வாசிக்கிறோம் – கர்த்தரின் வலிமையை அனுபவிப்பதற்காக, பலவீனத்தை ஏற்றுக்கொள்வது. “உமக்கு விரோதமாய் ஏராளமான ஜனங்கள் வருகிறார்கள்,” என்று மக்கள் யோசபாத் அரசனிடம் கூறினார்கள். எனவே தனக்கும், தன் ஜனங்களுக்கும் உணவை ஒறுத்து, “யூதாவெங்கும் உபவாசத்தைக் கூறுவித்தான்” (வச. 3). பின்பு தேவனின் உதவியை நாடினார்கள். இறுதியில் தன் படையை தயார்படுத்தியபோது, கர்த்தரைத் துதித்துப்பாடும் பாடகர்களை படைக்கு முன்பாக நிறுத்தினான் (வச. 21). அவர்கள் பாட ஆரம்பித்தபோது, யூதாவுக்கு விரோதமாய் வந்து பதிவிருந்தவர்களை ஒருவருக்கு விரோதமாய் ஒருவரை கர்த்தர் எழுப்பினதால், அவர்கள் தோல்வியடைந்தார்கள் (வச. 22).
யோசபாத்தின் முடிவு கர்த்தர்பேரில் இருந்த திடமான விசுவாசத்தைக் காட்டுகிறது. தன்னுடைய சுய வலிமை மீதும் தன் படை வலிமை மீதும் சாராமல், கர்த்தரைச் சார்ந்திருப்பதைத் தெரிந்துகொண்டான். நாம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை நாமே கஷ்டப்பட்டு நம் சுய பெலத்தால் சரிசெய்ய முயற்சிக்காமல், நாம் கர்த்தரிடம் ஒப்புவித்து, அவரை நம் பெலனாக ஏற்றுக்கொள்வோம்.
நீ என்னை நேசிக்கிறாயா?
நான் வாலிபனாக இருந்தபோது, என் தாயார் என்னை அதிகாரப்படுத்துவதை முற்றிலும் எதிர்ப்பவனாகக் காணப்பட்டேன். நான் பெரியவனாகும் முன்பே என் தந்தை மரித்துப் போனார். எனவே என் தாயார், கொந்தளிக்கும் அலைகளின் ஊடே வாழ்க்கைப் படகை செலுத்தும் பொறுப்பை முழுவதுமாக ஏற்க வேண்டியதாயிற்று.
நான் நினைவுபடுத்திப் பார்க்கும் போது, என் தாயார் என்னை எந்த பொழுதுபோக்கிற்கும் அனுமதித்ததேயில்லை, என்னை நேசித்ததுமில்லையென்றே கருதுவேன். ஏனெனில், நான் எதைக் கேட்டாலும் அவளுடைய பதில் இல்லை என்றேயிருக்கும். அவர்கள் என்னை அதிகம் நேசித்தபடியால், எனக்கு நல்லதல்லவெனக் கருதியவற்றைத்தான் தடுத்திருக்கிறார்களென இப்பொழுது எனக்குப் புரிகிறது.
பாபிலோனுக்கு சிறைபிடிக்கப்பட்டு போன இஸ்ரவேலர், தேவன் அவர்களை எவ்வளவு நேசிக்கிறாரென கேள்வி கேட்கின்றனர். அவர்கள் தொடர்ந்து தேவனுக்கு விரோதமாகக் கலகம் செய்தபடியால், அவர்களைத் திருத்தும்படி, அவர்களைத் தேவன் சிறைப்படுத்தினார். இப்பொழுது தேவன் அவர்களிடம் மல்கியா தீர்க்கதரிசியை அனுப்புகின்றார். அவர் மூலம் தேவன் தரும் முதல் வார்த்தையே, “நான் உங்களைச் சிநேகித்தேன்” என்பது தேவன் தங்களை எப்படிச் சிநேகித்தார் என இஸ்ரவேலர் சந்தேகத்தோடு கேட்கின்றனர். “உண்மையாகவா?” என்கின்றனர். மல்கியாவைக் கொண்டு தேவன் தன்னுடைய அன்பை விளங்கச் செய்கின்றார். தேவன் இஸ்ரவேலரை, ஏதோமியரைக் காட்டிலும் தேர்ந்து கொண்டார் எனச் சொல்கின்றார்.
நாம் அனைவருமே வாழ்வில் கஷ்டமான காலங்களைக் கடந்து செல்வோம். அப்படிப்பட்ட காலங்களில் நமக்கும் தேவன் நம்மை நேசிக்கின்றாரா என கேட்கத் தோன்றும். வேறுபட்ட வகைகளில் தேவன் தன்னுடைய மாறாத அன்பை நமக்குக் காட்டியதை நினைத்துப் பர்ப்போம். அவருடைய நன்மைகளை நாம் நினைக்க மறந்த போதும், அவர் நம்மை நேசிக்கின்ற தந்தையாகவேயுள்ளார்.
நீர்ச்சுழிகளில் படகுசவாரி
படகு சவாரி வழிகாட்டி எங்கள் குழுவினரோடு வந்து, நதியின் அக்கரை வரை பாதுகாப்பாய் வழிநடத்தினார். நாங்களனைவரும் உயிர்காப்பு உடைகளைப் போட்டுக் கொள்ளவும் துடுப்புகளை இறுகப் பற்றிக் கொள்ளுமாறும் கூறினார். நாங்கள் படகில் ஏறியதும் படகு சமநிலையில் இருக்கும்படி நாங்கள் ஒவ்வொருவரும் அமர வேண்டிய இடத்தையும் காட்டினார். அது நாங்கள் சுழல்களின் வழியே செல்லும் போது படகிற்கு நிலைப்புத் தன்மையைத் தருமெனக் கூறினார். இந்த நீர் வழிப் பயணத்தில் ஏற்படும் பரபரப்பான சூழல்களை எடுத்துக் கூறி, விரிவான வழிமுறைகளை நாங்கள் கவனமாகக் கேட்கும்படி கூறினார். நாங்கள் அவற்றைச் சரியாகக் கடைபிடித்தால், எங்கள் படகை வெற்றியாக அந்தக் கொந்தளிக்கும் வெண் நீரின் வழியே ஓட்டிச் செல்ல முடியும் என தெரிவித்தார். அத்தோடு நாங்கள் செல்லும் வழியில் பயங்கர வேளைகளையும் சந்திக்க நேரும், ஆனாலும் எங்கள் பயணம் பரவசமூட்டுவதாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும் என உறுதியாகக் கூறினார்.
நம்முடைய வாழ்க்கையும் சில வேளைகளில், கொந்தளிக்கும் வெண் நீர் படகு பயணம் போலவே அமைகிறது. அதுவும் நாம் எதிர்பார்ப்பதையும் விட அதிகமான சுழல் நீரோட்டங்களைக் கொண்டதாக அமைகிறது. நாம் மோசமான விளைவுகளைக் கண்டு பயப்படும் போது, ஏசாயா தீர்க்கன் மூலம் தேவன், இஸ்ரவேலருக்குக் கொடுத்த வாக்குத்தத்தம், நம் உணர்வுகளைக் கட்டுப்படுத்தி நம்மை வழிநடத்த உதவுகிறது. “நீ ஆறுகளைக் கடக்கும்போது. அவைகள் உன்மேல் புரளுவதில்லை” (ஏசா. 43:2) என்பது தேவனுடைய வாக்குத்தத்தம். இஸ்ரவேலர் தங்கள் பாவத்தின் விளைவாக, பிறநாட்டினரால் அடிமைகளாகப் பிடிக்கப்பட்டபோது தேவன் அவர்களைத் தள்ளினார் என்ற பயம் அவர்களை மேற் கொண்டது. ஆனால், தேவன் அவர்களோடு இருப்பதாக வாக்கையும், உறுதியையும் கொடுக்கின்றார். ஏனெனில், தேவன் அவர்களை நேசிக்கின்றார் (வச. 2,4).
கடினமான தண்ணீரைக் கடக்கும்போது தேவன் நம்மைக் கைவிடுவதில்லை. சுழல்களையும், ஆழ்ந்த பயத்தையும், வேதனைதரும் சோதனைகளையும் நாம் கடக்கும் போது, தேவன் நம் வழிகாட்டியாக நம்மோடு வருகிறார் என நம்புவோம், ஏனெனில், அவர் நம்மை நேசிக்கின்றார். நம்மோடிருப்பதாக வாக்களித்துள்ளார்.