ஸ்டீவன் தாம்ஸன் நினைவு சென்டிபீட் என்பது திறந்தவெளியில் நடைபெறும் ஓட்டப்பந்தயம் மற்ற ஓட்டப் பந்தயங்களில் இருந்து மாறுபட்டது. ஏழு நபர்களைக் கொண்ட ஒவ்வொரு குழுவும், மூன்று மைல் பந்தயத்தின் முதல் இரண்டு மைல் தொலைவிற்கு ஒரு கயிற்றைப் பிடித்தபடி ஓடவேண்டும். இரண்டு மைல் ஓடிய பிறகு, கயிற்றை விட்டுவிட்டு, ஒவ்வொரு நபரும் தனித்தனியாக ஓடவேண்டும். எனவே குழுவின் வேகமும், தனிநபர் வேகமும் சேர்ந்ததே ஒரு நபரின் வேகம்.

இந்த வருடம் என் மகளின் குழு நான் இதுவரை கண்டிராத ஒரு புதிய உத்தியைக் கையாண்டது. வேகமாக ஒடக்கூடிய பெண்ணை முதலில் ஓடவிட்டு, இருப்பதிலேயே மெதுவாக ஓடும் பெண்ணை அவளுக்குப் பின்னால் ஓடவிட்டார்கள். அதிக வேகமாக ஓடும் பெண் மெதுவாக ஓடும் பெண்ணின் அருகிலேயே ஓடுவதால், அவளை ஊக்குவிக்கும் வார்த்தைகளைப் பேசிக்கொண்டே வரவேண்டும் என்பது அவர்களது திட்டம்.

அவர்களது திட்டம் எபிரேயரில் உள்ள ஒரு பத்தியை எனக்கு நினைவுபடுத்தியது. “அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் நாம் ஒருவரையொருவர் ஏவும்போது” (வச. 24) “நம்முடைய நம்பிக்கையை அறிக்கையிடுகிறதில் அசைவில்லாமல் உறுதியாயிருக்கக்கடவோம்” என்று பவுல் எழுதுகிறார். இதை செய்வதற்கு பல வழிகள் இருந்தாலும், அவர் ஒன்றை முன்னிலைப்படுத்துகிறார். “சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்தி சொல்லக்கடவோம்” என்கிறார் (வச. 25). மற்ற விசுவாசிகளோடு ஒன்றுகூடுதல் விசுவாச வாழ்க்கையின் முக்கிய அம்சமாகும்.

சில சமயங்களில் வாழ்க்கை ஓட்டம் நம்மால் கையாள முடியாததாகத் தோன்றலாம். தன்னம்பிக்கை இழந்து, கயிற்றை விட்டுவிடும் அளவிற்கு நம் உறுதியை இழக்கலாம்.  நாம் சேர்ந்து ஓடும்போது, திடமாக ஓட ஒருவரை ஒருவர் ஊக்குவிப்போமாக!