Archives: மே 2026

இரவு உணவின் மூலம் இரக்கம்

என் திருச்சபை தலைவர் ஹரோல்ட் மற்றும் அவரது மனைவி பாம் ஆகியோரின் இரவு உணவிற்கான அழைப்பு என் மனதிற்கு இதமாயிருந்தது. ஆனால் அந்த அழைப்பு என்னை பதட்டப்படுத்தியது. ஏனென்றால், வேதாகமத்தின் போதனைகளுக்கு முரணான கருத்துக்களைக் கற்பிக்கும் கல்லூரி வேதாகமப் படிப்புக் குழுவில் நான் சேர்ந்தேன். அவர்கள் அதைப் பற்றி ஒருவேளை என்னிடம் பேசுவார்களோ? என்று அஞ்சினேன்.

இரவு உணவை உட்கொண்டவாறே, அவர்கள் தங்கள் குடும்பத்தைப் பற்றி பகிர்ந்துகொண்டனர் மற்றும் என்னுடைய குடும்பத்தையம் விசாரித்து அறிந்தனர். நான் என்னுடைய வீட்டுப்பாடம் எழுதுவது குறித்தும், என் நாய் மற்றும் நான் நேசிக்கும் நபரைக் குறித்தும் அவா்களுடன் இயல்பாய் பேசினேன். அதன் பிறகுதான் நான் கலந்துகொண்ட குழுவைப் பற்றி மெதுவாக எச்சரித்து, அதன் போதனைகளில் என்ன தவறு என்று விளக்கினார்கள்.

அவர்களின் எச்சரிக்கை வேதாகம படிப்பில் வழங்கப்பட்ட பொய்களிலிருந்து என்னை விலக்கி, வேதத்தின் உண்மைகளுக்கு நெருக்கமாக அழைத்துச் சென்றது. யூதா தனது நிருபத்தில், தவறான போதகர்களைப் பற்றி வலுவான மொழியைப் பயன்படுத்துகிறார். “விசுவாசத்திற்காக நீங்கள் தைரியமாய்ப் போராடவேண்டுமென்று” (யூதா 1:3) அவர்களை எச்சரிக்கிறார். கடைசிகாலத்திலே பரியாசக்காரர் இருப்பார்கள் என்பதை அவர்களுக்கு நினைவுபடுத்தி, அவர்கள் ஆவியில்லாத ஜென்மசுபாவக்காரர்கள் என்றும் குறிப்பிடுகிறார் (வச. 18-19). இருப்பினும் யூதா, விசுவாசிகளை “சிலருக்கு இரக்கம் பாராட்டுங்கள்” (வச. 22) என்று அவர்களோடு சத்தியத்தை சமரசம் செய்யாமல் அவர்களுக்கு இரக்கத்தைக் காண்பிக்கும்படி சொல்லுகிறார்.

ஹரோல்டும் அவரது மனைவி பாமும் நான் என் நம்பிக்கையில் உறுதியாக இல்லை என்பதை திருச்சபை அறிந்திருந்தது. ஆனால் அவர்கள் என்னை நியாயந்தீர்ப்பதற்குப் பதிலாக, அவர்கள் முதலில் தங்கள் நட்பை வழங்கினர். பின்னர் தங்கள் ஞானத்தை வழங்கினர். குழப்பத்தில் உள்ளவர்களுடன் பழகும்போது, ஞானத்தையும் இரக்கத்தையும் பயன்படுத்த, இதே அன்பையும் பொறுமையையும் தேவன் நமக்குத் தந்தருளுவாராக. 

வார்த்தைகள் இருதயத்தைப் பிரதிபலிக்கிறது

கெட்டவார்த்தை உபபோகிப்பதை எவ்வாறு அகற்றுவது? ஓர் உயர்நிலைப் பள்ளி “கெட்ட வார்த்தை பேசுவதில்லை” என்று உறுதிமொழியை எடுத்தது. அந்த பள்ளியின் மாணவர்கள் “நாங்கள் பள்ளி வளாகத்திற்குள்ளும் அதின் சுவர்களிலும் எந்தவிதமான கெட்ட வார்த்தைகளையோ தவறான கருத்துக்களை கிறுக்கவோ பேசவோ மாட்டோம்” என்று உறுதிமொழியேற்றனர். இது ஓர் உன்னத முயற்சி. ஆனால், இயேசுவின் கூற்றுப்படி, எந்த விதிமுறைகளும் உறுதிமொழிகளும் ஒருபோதும் தவறான பேச்சின் வாசனையை மறைக்க முடியாது.

நம் வாயிலிருந்து வரும் வார்த்தைகளின் துர்நாற்றத்தை நீக்குவது நம் இதயத்தை புதுப்பிப்பதில் இருந்து தொடங்குகிறது. பழங்களைக் கொண்டு மரத்தின் வகையை மக்கள் அடையாளம் காண்பது போல் (லூக்கா 6:43-44), நம்முடைய பேச்சு, நம் இருதயம் அவரோடும் அவருடைய வழிகளோடும் ஒத்துப்போகிறதா இல்லையா என்பதை உறுதிப்படுத்தும் அடையாள சின்னமாய் இருக்கிறது என்று இயேசு கூறுகிறார். பழம் என்பது ஓர் நபரின் பேச்சைக் குறிக்கிறது. “இருதயத்தின் நிறைவினால் அவனவன் வாய் பேசும்” (வச. 45). நம் வாயிலிருந்து வெளிவருவதை நாம் உண்மையில் மாற்ற விரும்பினால், முதலில் நம் இருதயத்தின் நினைவுகளை மாற்றுவதில் கவனம் செலுத்தவேண்டும் என்று கிறிஸ்து சுட்டிக்காட்டுகிறார்.

மறுரூபமாக்கப்படாத இருதயத்திலிருந்து வெளிவரும் தவறான வார்த்தைகளைக் கட்டுப்படுத்த வெளிப்புற வாக்குறுதிகள் பயனற்றவை. முதலில் இயேசுவை (1 கொரிந்தியர் 12:3) விசுவாசித்து, பிறகு நம்மை நிரப்ப பரிசுத்த ஆவியானவரை அழைப்பதன் மூலம் மட்டுமே தவறான பேச்சை நாம் அகற்ற முடியும் (எபேசியர் 5:18). தொடர்ந்து தேவனுக்கு நன்றி செலுத்துவதற்கும் (வச. 20) ஊக்கமளிக்கும் வார்த்தைகளை மற்றவர்களிடம் பேசுவதற்கும் (4:15, 29; கொலோசெயர் 4:6) மற்றவர்களுக்கு உதவிசெய்வதற்கும் அவர் நமக்குள் செயல்படுகிறார். 

ஓர் மூத்தவரின் ஆலோசனை

“நான் எதற்கு வருத்தப்படவேண்டும்?” நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையின் பிரபல எழுத்தாளர் ஜார்ஜ் சாண்டர்ஸ் 2013ஆம் ஆண்டு சைராகுஸ் பல்கலைக்கழகத்தில் தனது தொடக்க உரையில் பதிலளித்த கேள்வி இதுவாகும். ஓர் வயதான நபராய் (சாண்டர்ஸ்) தன்னுடைய வாழ்க்கையில் தான் வருந்தும் காரியங்களிலிருந்து இளைஞர்கள் ஏதாகிலும் கற்றுக்கொள்வார்கள் என்று எண்ணி, அவர் வாழ்க்கையின் ஒருசில அனுபவங்களை அவர்களுடன் (பட்டதாரிகளுடன்) பகிர்ந்துகொண்டார். அவர் வருத்தங்களில், ஏழையாக இருப்பது, கடின வேலைகள் செய்வது போன்ற சில விஷயங்கள் இருக்கும் என்று எதிர்பார்த்தனர். ஆனால், சாண்டர்ஸ் உண்மையில் அவைகளுக்காக வருத்தப்படவில்லை என்றார். மாறாக, தான் கருணை காண்பிக்கவேண்டிய ஓர் நபரிடத்தில் கருணை காண்பிக்க தவறிவிட்டதாக வருத்தப்பட்டார்.

அப்போஸ்தலனாகிய பவுல் எபேசுவில் உள்ள விசுவாசிகளுக்கு இந்தக் கேள்விக்குப் பதிலளித்து எழுதுகிறார். கிறிஸ்தவ வாழ்க்கை எப்படி இருக்கிறது? ஓர் குறிப்பிட்ட அரசியல் பார்வையை வைத்திருப்பது, சில புத்தகங்கள் அல்லது திரைப்படங்களைத் தவிர்ப்பது, ஓர் குறிப்பிட்ட விதத்தில் தேவனை ஆராதிப்பது போன்ற நமது பதில்களுடன் விரைந்து செல்ல இது தூண்டுகிறது. ஆனால் பவுல், “கெட்ட வார்த்தை” (எபேசியர் 4:29)மற்றும் “கசப்பும், கோபமும், மூர்க்கமும்” (வச. 31) போன்ற காரியங்களிலிருந்த நம்மை விடுவிப்பதே கிறிஸ்தவ வாழ்க்கை என்று குறிப்பிடுகிறார். அவருடைய பேச்சை முடிக்கும் தருவாயில், எபேசியர்களுக்கும் நமக்கும், “கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்” (வச. 32) என்று ஆலோசனை கூறுகிறார்.

இயேசுவின் வாழ்க்கை இருக்கவேண்டும் என்று நாம் நம்பும் எல்லாவற்றிலும் ஒன்று, நிச்சயமாக, இரக்கமாக இருக்கவேண்டும். 

 

உடனடி பாராட்டு

நடுராத்திரியிலே பவுலும் சீலாவும் ஜெபம்பண்ணி, தேவனைத் துதித்துப்பாடினார்கள். [ அப்போஸ்தலர் 16:25 ]

 

எத்தியோப்பியாவிற்கு ஓர் குறுகிய கால மிஷன் பயணத்தின்போது, எங்கள் குழு ஓர் உள்ளூர் அமைச்சகத்தின் மற்றொரு குழுவுடன் சேர்ந்து, குப்பைக் கிடங்கில் குடிசைகளில் வாழ்ந்து கொண்டிருந்த இளைஞர்கள் கூட்டத்தினைச் சந்திக்கச் சென்றது. அவர்கள் எங்களை சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். நாங்கள் சாட்சிகள், ஊக்கமளிக்கும் வார்த்தைகள் மற்றும் ஜெபங்களை ஒன்றாகப் பகிர்ந்துகொண்டோம். அந்த மாலையில் எனக்கு மிகவும் பிடித்த தருணங்களில் ஒன்று, உள்ளூர் குழு உறுப்பினர் ஒருவர் தனது கிடாா் இசைக்கருவியினை வாசிக்க, நாங்கள் நிலவின் ஒளியில் நின்று தேவனை ஆராதித்தோம். என்ன ஓர் புனிதமான தருணம்! அவர்களின் இக்கட்டான தருணத்திலும், இயேசுவில் மட்டுமே கிடைக்கும் நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் அவர்கள் முழுமையாய் அனுபவித்தனர்.

அப்போஸ்தலர் 16ல், மற்றொரு எதிர்பாராத துதிவேளையைப் பற்றி வாசிக்கிறோம். இது பிலிப்பு பட்டணத்தில் உள்ள சிறைச்சாலையில் நடந்தது. பவுலும் சீலாவும் இயேசுவைச் சேவித்தபோது கைது செய்யப்பட்டு, அடிக்கப்பட்டு, கசையடி பெற்று, சிறையில் அடைக்கப்பட்டனர். விரக்திக்கு ஆளாகாமல், தங்கள் சிறை அறையில் “ஜெபம்பண்ணி, தேவனைத் துதித்துப்பாடினார்கள்.” “சடிதியிலே சிறைச்சாலையின் அஸ்திபாரங்கள் அசையும்படியாகப் பூமி மிகவும் அதிர்ந்தது; உடனே கதவுகளெல்லாம் திறவுண்டது; எல்லாருடைய கட்டுகளும் கழன்றுபோயிற்று” (வச. 25-26).

மயக்கத்திலிருந்து எழுந்த சிறைச்சாலைக்காரன் தற்கொலை செய்துகொள்ள விரைந்தான். ஆனால் கைதிகள் தப்பியோடவில்லை என்பதை உணர்ந்தபோது, அவன் கர்த்தருக்கு பயந்து, குடும்பத்தோடு இரட்சிப்பைப் பெற்றுக்கொண்டான் (வச. 27-34).

தேவன் நம் துதிகளில் பிரியப்படுகிறார். வாழ்க்கையின் உயர்வான மற்றும் தாழ்வான எல்லா தருணங்களிலும் நாம் தேவனை துதிக்கப் பிரயாசப்படுவோம். 

தொடர்புடைய தலைப்புகள்

> odb

தேவனால் விரும்பப்படுதலும், நேசிக்கப்படுதலும்

முகநூலில் “பிடித்திருக்கிறது” என்பதற்கு அடையாளமான அந்த விருப்ப குறி பொத்தான் முகநூலின் ஆரம்பத்திலிருந்தே இருப்பது போலத் தோன்றும். ஆனால் அது 2009 இல் தான் நடைமுறைக்கு வந்தது.

இந்த ‘விருப்ப’ பொத்தானை வடிவமைத்த ஜஸ்டின் ரோசன்ஸ்டைன் கூறுகையில், ‘ஒருவரையொருவர் கிழித்து கீழ்த்தள்ளும் உலகத்திற்கு மாறாக, ஊக்கப்படுத்தி உயர்த்தும்’ ஒரு உலகை உருவாக்கத் தான் விரும்பியதாகத் தெரிவித்தார். ஆனால் தனது கண்டுபிடிப்பு, பயனாளர்களை இந்த சமூக ஊடகத்தின் அடிமையாக்கிய விளைவைக் கண்டு ரோசன்ஸ்டைன் வருந்தினார்.

ரோசன்ஸ்டைனின் இந்த படைப்பு, நமது இணைப்பு மற்றும் அங்கீகாரத்திற்கான அடிப்படைத் தேவையை வெளிப்படுத்துவதாக நான் எண்ணுகிறேன். பிறர் நம்மை அறியவும், கவனிக்கவும், விரும்பவும் வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கிறோம். ‘விருப்ப’ பொத்தான்தான் புதியது, ஆனால் அறிவதற்கும், அறியப்படுவதற்குமான நமது விருப்பம், தேவன் மனிதனை உண்டாக்கிய நாள் தொட்டே உள்ளது.

இன்றும், ‘விருப்ப’ பொத்தான் நமது விருப்பத்தைத் தனிக்கவில்லை. சரிதானே? அதிர்ஷ்டவசமாக மின்னியல் அங்கீகாரத்தை விட, மிக ஆழமாக நேசிக்கும் தேவனை நாம் ஆராதிக்கிறோம். எரேமியா 1:5 ல் தனக்கென்று தீர்க்கதரிசியை அழைக்கையில், அதில் உள்ள ஆழ்ந்த நோக்கத்தையும், பிணைப்பையும் காண்கிறோம். “நான் உன்னைத் தாயின் வயிற்றில் உருவாக்குமுன்னே உன்னை அறிந்தேன்; நீ கர்ப்பத்திலிருந்து வெளிப்படுமுன்னே நான் உன்னைப் பரிசுத்தம்பண்ணி...என்றாா்.கருவுறுதலுக்கு முன்பே தீர்க்கதரிசியைத் தேவன் அறிந்திருந்தார். மேலும் அர்த்தமுள்ள, நோக்கம் நிறைந்த வாழ்க்கைக்காக அவரை வடிவமைத்தார் (வ. 8-10). நம்மை மிகவும் நெருக்கமாக அறிந்த, நேசிக்கும், விரும்பும் இந்த தகப்பனை நாம் அறிகையில், அவர் நம்மையும் ஒரு நோக்கமுள்ள வாழ்க்கைக்கு அழைக்கிறார். 

 

தாகமும், நன்றியுள்ளமும்

நானும் என் இரண்டு நண்பர்களும் ஒரு மலைப்பாதையில் சாகச பயணம் செய்ய விரும்பினோம். அதற்கு முன், எங்கள் நடைப்பயணத்தைத் தொடங்கும் போது போதுமான தண்ணீர் இருக்கிறதா என்று நாங்கள் சந்தேகப்பட்டதுபோலவே, அது வேகமாகத் தீர்ந்தது. விளிம்பை அடைய இன்னும் சில தூரமிருந்த நிலையில் நாங்கள் முற்றிலும் தண்ணீர் இல்லாமல் இருந்தோம். மூச்சுத் திணறி ஜெபத்துடன் சுவாசித்தோம். பிறகு நாங்கள் ஒரு மூலையைச் சுற்றி வருகையில், ஒரு அதிசயம் நடந்தது. மூன்று தண்ணீர் பாட்டில்கள் பாறையில் ஒரு பிளவில் மாட்டி வைக்கப்பட்டிருந்ததைக் கண்டோம், “உங்களுக்கு இது தேவை என்று தெரியும். மகிழுங்கள்!” என்று ஒரு குறிப்புமிருந்தது. நாங்கள் ஒருவரையொருவர் நம்பமுடியாமல் பார்த்துக் கொண்டு, தேவனுக்கு நன்றி சொல்லி, மிகவும் தேவையான நீரைப் பருகி, கடைசிக் கட்டத்திற்குப் பயணித்தோம். நான் என் வாழ்நாளில் இவ்வளவு தாகமாகவும், நன்றியுடனும் இருந்ததில்லை.

சங்கீதக்காரனுக்கு மலையேறிய அனுபவம் இல்லை. ஆனால் ஒரு மானுக்குத் தாகமெடுக்கையில் எவ்வாறு செயல்படும் என்பதை அவர் அறிந்திருந்தார். (சங்கீதம் 42:1) தாகத்தாலும், பசியாலும், மானானது உயிர் பிழைப்பதற்காக நீரோடையை வாஞ்சித்துக் கதறுகிறது போல , “என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது” (வ.1) என தேவனுக்கான அவனது விருப்பத்தை அவன் வெளிப்படுத்துகிறான்.

மிகவும் தேவையான நீரைப் போலவே, தேவன் நமக்கு எப்போதும் இருக்கும் உதவியாளர். நாம் அவருக்காக ஏங்குகிறோம், ஏனெனில் அவர் நமது சோர்ந்துபோன வாழ்க்கைக்குப் புதுப்பிக்கப்பட்ட பெலனையும், புத்துணர்ச்சியையும் தருகிறார், அனுதின பயணத்தில் எதுவாயிருந்தாலும் நம்மை ஆயத்தப்படுத்துகிறார்.

 

கிறிஸ்துவால் சுத்திகரிக்கப்பட்டது

எனது முதல் குறுகிய கால மிஷனரி பயணமாக, ஆற்றங்கரையில் சபையைக் கட்ட உதவுவதற்காக, ஒரிசாவில் உள்ள காட்டிற்குச் சென்றேன். ஒரு நாள் மதியம், அந்த பகுதியில் தண்ணீர் வடிகட்டி இருக்கும் சில வீடுகளில் ஒன்றிற்குச் சென்றோம். எங்களை ஏற்றுக்கொண்டவர், கலங்கியிருந்த கிணற்று நீரை வடிகட்டியின் மேல் ஊற்றியபோது, சில நிமிடங்களில் அனைத்து அசுத்தங்களும் அகற்றப்பட்டு சுத்தமான, தெளிவான குடிநீர் தோன்றியது. அந்த மனிதனின் வசிப்பிடத்தில், கிறிஸ்துவால் சுத்திகரிக்கப்படுவதன் அர்த்தம் என்ன என்பதை நான் பார்த்தேன்.

நாம் முதலில் நம் குற்ற உணர்ச்சியோடும், அவமானத்தோடும் இயேசுவிடம் வந்து, நம்மை மன்னிக்கும்படி கேட்கும்போதும், அவரை நம் இரட்சகராக ஏற்கும்போதும், அவர் நம் பாவங்களிலிருந்து நம்மைச் சுத்திகரித்து, நம்மைப் புதிதாக்குகிறார். கலங்கியிருந்த நீரைச் சுத்தமான குடிநீராக மாற்றியது போல் நாம் சுத்திகரிக்கப்படுகிறோம். இயேசுவின் பலியால், நாம் தேவனுடைய நீதியாகிறோம் (2 கொரிந்தியர் 5:21) என்பதையும், மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மை விட்டு விலக்கினார் (சங்கீதம் 103:12) என்பதையும் அறிவது எவ்வளவு மகிழ்ச்சி!

ஆனால் நாம் இனி ஒருபோதும் பாவம் செய்ய மாட்டோம் என்று அர்த்தம் இல்லை என்பதை அப்போஸ்தலன் யோவான் நமக்கு நினைவூட்டுகிறார். நாம் பாவம் செய்யும்போது, இந்த வடிகட்டியின் உருவகத்தைக் கொண்டு உறுதியடைவோம், “நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.” (1 யோவான் 1:9) என்றறிந்து ஆறுதலடைவோம்.

நாம் தொடர்ந்து கிறிஸ்துவால் சுத்திகரிக்கப்படுகிறோம் என்பதை அறிந்து நம்பிக்கையுடன் வாழ்வோம்.