Archives: ஆகஸ்ட் 2025

தெரியாத வழி

நான் பிரையனுடன் ஓட்டத்தில் சேர ஒப்புக்கொண்டிருக்கக்கூடாது. அப்போது நான் வெளிநாட்டில் இருந்தேன். இந்த பாதை எங்கு செல்லும், எவ்வளவு தூரம் செல்வோம், நிலப்பரப்பு எப்படி இருக்கும் என்று எனக்குத் தெரியாது. மேலும் அவர் ஒரு வேக ஓட்டப்பந்தய வீரராக இருந்தார். அவருடன் ஓடும்போது, திரும்பிவந்துவிடலாமா? பிரையனுக்கு மட்டுமே வழி தெரிந்திருந்ததால், இப்போதைக்கு அவரை நம்புவதைத் தவிர நான் என்ன செய்ய முடியும்? நாங்கள் ஓட்டத்தை ஆரம்பித்தவுடன், நான் இன்னும் அதிகமாக கவலைப்பட்டேன். சீரற்ற நிலத்தில் அடர்ந்த காடு வழியாகச் செல்லும் பாதை கடினமானதாக இருந்தது. அதிர்ஷ்டவசமாக, பிரையன் என்னை அவ்வப்போது திரும்பிப்பார்த்து, வரவிருக்கும் கடினமான திட்டுகள் குறித்து எச்சரித்தார்.

இதுபோன்ற அறிமுகமில்லாத பிரதேசத்திற்குள் நுழையும்போது வேதாகம காலங்களில் சிலருக்கு இப்படித்தான் இருந்திருக்கக்கூடும்—கானானில் ஆபிரகாம், வனாந்தரத்தில் இஸ்ரவேலர்கள், நற்செய்தியைப் பகிர்ந்துகொள்ளும் பணியில் இயேசுவின் சீஷர்கள். நிச்சயமாக அது கடினமாக இருக்கும் என்பதைத் தவிர, பயணம் எப்படி இருக்கும் என்பது அவர்களுக்குத் தெரியாது. ஆனால் முன்னோக்கி செல்லும் வழியை அறிந்த ஒருவர் அவர்களை வழிநடத்தினார். அதை மேற்கொள்வதற்கான பெலனை தேவன் தங்களுக்கு அருளுவார் என்றும் அவர்களை தேவன் பாதுகாத்துக்கொள்வார் என்றும் அவர்கள் நம்பியிருந்தனர். முன்பாக என்ன இருக்கிறது என்பதை அறிந்த தேவன் அவர் என்பதினால், அவர்களால் அவரை நம்பிக்கையோடு பின்தொடரமுடியும்.

இந்த உறுதி தாவீது தப்பியோடியபோது ஆறுதலளித்தது. அவர் நிச்சயமற்ற ஒரு சூழ்நிலையிலிருந்தபோதிலும், தேவனைப் பார்த்து “என் ஆவி என்னில் தியங்கும்போது, நீர் என் பாதையை அறிந்திருக்கிறீர்” (சங்கீதம் 142:3) என்று சொல்லுகிறார். வாழ்க்கையில் நமக்கு முன்பாக என்ன இருக்குமோ என்று அஞ்சும் நேரங்கள் உண்டு. ஆனால் நம்மோடு நடக்கும் ஆண்டவர் நம்முடைய வழியை அறிந்திருக்கிறார் என்பதை நாம் அறிவோம்.

பாதையில் சுதந்திரம்

பார்வையற்ற விளையாட்டு வீரர்கள் விளையாடும் “பீப்” ஓசையிடும் பேஸ்பாலில், அதின் சத்தத்தைக் கேட்டு என்ன செய்யவேண்டும் என்பதையும் எங்கு செல்லவேண்டும் என்பதையும் தீர்மானிக்கின்றனர். கண்கள் மூடப்பட்ட பந்தை அடிக்கும் நபரும், அதைத் தடுக்கும் பார்வையுள்ள நபரும் ஒரே அணியில் இடம்பெற்றிருப்பர். ஒரு நபர் மட்டையை சுழற்றி, பீப் பந்தை அடிக்கும்போது, அவர்கள் சலசலக்கும் தளத்தை நோக்கி ஓடுவார்கள். அவர் ஓடிவருவதற்கும் அந்த பந்தை யாரேனும் பிடித்துவிட்டால், பந்தை அடித்தவர் தோற்றுவிடுவார். இல்லையெனில், அவருக்கு ரன் கொடுக்கப்படும். “தெளிவான ஓடுபாதையும் திசையும் இருக்கிறது என்பதை அறிந்திருப்பதால், “ஓடுவதில் ஒரு பெரிய சுதந்திரம்” அவர்களுக்கு இருக்கிறது என்று ஒரு விளையாட்டு வீரர் குறிப்பிடுகிறார்.

ஏசாயா தீர்க்கதரிசன புத்தகம், “மகா நீதிபரராகிய நீர் நீதிமானுடைய பாதையைச் செம்மைப்படுத்துகிறீர்” (26:7) என்று தேவனைக் குறித்து அறிவிக்கிறது. இந்த வாக்கியம் உரைக்கப்பட்டபோது, இஸ்ரவேலர்களின் பாதை செம்மையாயிருந்தது. ஆனால் அவர்களின் கீழ்ப்படியாமையினிமித்தம் அவர்கள் தெய்வீக நியாயத்தீர்ப்பை அனுபவிக்க நேரிட்டது. “உமது நாமமும், உம்மை நினைக்கும் நினைவும்” (வச. 8) அவர்களின் இருதயத்தின் நோக்கங்களாய் இருந்துள்ளது என்று சொல்லுகிறார்.

கிறிஸ்தவர்களாகிய நாம் அவருக்கு கீழ்ப்படிந்து அவருடைய வழிகளில் நடக்கும்போது, தேவனைக் குறித்து அறிகிற அறிவில் தேறவும் அவருடைய சுபாவங்களின் மீது நம்பிக்கையை வளர்த்துக்கொள்ளவும் செய்கிறோம். நம்முடைய வாழ்க்கைப் பாதையின் வழிகள் எப்போதும் செம்மையானதாய் தெரியாது. ஆனால் நாம் தேவனை நம்பும்போது, தேவன் நம்மோடு நடந்துவந்து நமக்கு வழியை உண்டுபண்ணுவார். நாமும் தேவனுக்கு கீழ்ப்படிந்து, சுதந்திரமாய் அவருடைய சிறந்த பாதையில் நடப்போம்.

நீங்கள் சோர்ந்திருக்கும்வேளையில்

நான் ஒரு நாளின் வேலை முடிகிற தருவாயில் என் மடிக்கணினி முன்பாக அமர்ந்திருந்தேன். அன்று நான் செய்துமுடித்த வேலையைப் பற்றி நான் மகிழ்ச்சியடைந்திருக்க வேண்டும். ஆனால் நான் மகிழ்ச்சியாக இல்லை. நான் களைப்படைந்திருந்தேன். வேலையில் ஒரு பிரச்சனையால் என் தோள்கள் கவலையின் சுமையால் வலித்தன. மேலும் ஒரு பிரச்சனையான உறவைப் பற்றி என் மனம் யோசித்துக்கொண்டிருந்தது. அவைகள் அனைத்திலிருந்தும் விடுபட எண்ணி, அன்றிரவு டிவி பார்ப்பதில் என் கவனத்தை செலுத்தினேன்.  
நான் என் கண்களை மூடினேன். “அண்டவரே” என்று அழைத்தேன். அதைக்காட்டிலும் வேறெதையும் சொல்லமுடியாத அளவிற்கு நான் சோர்வுற்றிருந்தேன். அந்த ஒரு வார்த்தையில் என் மொத்த களைப்பையும் உள்ளடக்கினேன். ஆனால் அந்த வார்த்தைக்குள் தான் களைப்புகள் புகும் என்பதை நான் உடனே அறிந்துகொண்டேன்.  
வருத்தப்பட்டு பாரஞ்சுமக்கிறவர்களைப் பார்த்து இயேசு, “நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்” (மத்தேயு 11:28) என்று வாக்குப்பண்ணுகிறார். ஒரு நல்ல தூக்கத்தில் கிடைக்கும் இளைப்பாறுதல் இல்லை.  தொலைக்காட்சி வாக்குறுதியில் கிடைக்கும் இளைப்பாறுதல் இல்லை. ஒரு பிரச்சனை தீர்ந்தவுடன் கிடைக்கும் இளைப்பாறுதல் இல்லை. இவைகள் இளைப்பாறுதலுக்கான நல்ல ஆதாரங்களாக இருந்தாலும், அவை வழங்கும் ஓய்வு குறுகிய காலமே. மேலும் அவைகள் நமது சூழ்நிலைகளைச் சார்ந்தது. 
அதற்கு மாறாக, இயேசு கொடுக்கும் இளைப்பாறுதலானது, அவருடைய மாறாத சுபாவத்தில் ஊன்றியிருக்கும் நித்திய இளைப்பாறுதல். அவர் எப்போதும் நல்லவராகவேயிருக்கிறார். அனைத்தும் அவருடைய கட்டுப்பாட்டிற்குள் இருப்பதால், பாடுகளின் மத்தியிலும் அவர் நமக்கு மெய்யான இளைப்பாறுதலை அளிக்கிறார். அவரால் மட்டுமே கொடுக்க முடிந்த பெலத்தையும் மீட்பையும் பெற்றுக்கொள்ள அவரையே நம்பி சார்ந்துகொள்வோம்.  
“என்னிடத்தில் வாருங்கள்” என்று இயேசு சொல்கிறார். “என்னிடத்தில் வாருங்கள்.” 

அனைத்தையும் இழத்தல்

பொறியியல் பாலங்கள், நினைவுச்சின்னங்கள், மற்றும் பெரிய கட்டிடங்கள் ஆகியவற்றை கட்டிய பிறகு, சீசர் ஒரு புதிய முயற்சியை செயல்படுத்த திட்டமிட்டார். எனவே அவர் தனது முதல் தொழிலை விற்று வங்கியில் பணத்தை சேமித்து, மீண்டும் அதை முதலீடு செய்ய திட்டமிட்டார். ஆனால் அந்த இடைவெளியில் அவரது அரசாங்கம், தனியார் வங்கிக் கணக்குகளில் வைத்திருந்த அனைத்து சொத்துக்களையும் பறிமுதல் செய்தது. சீசரின் வாழ்நாள் சேமிப்பு, ஒரே நொடியில் இல்லாமல் போய்விட்டது.  
தனக்கு நேரிட்ட அந்த அநீதியைக் குறித்து யாரையும் குற்றப்படுத்த முயற்சிக்காமல், தேவனிடத்தில் முன்னேறிச் செல்வதற்கான வழியை சீசர் விண்ணப்பித்தார். அதன் பிறகு, அவர் மீண்டும் எளிமையாய் தன் ஓட்டத்தைத் துவங்க ஆரம்பித்தார்.  
அதேபோன்ற ஒரு முக்கியமான தருணத்தில், யோபு தனக்கு உண்டான எல்லாவற்றையும் இழந்து நின்றான். அவனுடைய குமாரர்களையும் வேலையாட்களையும் இழந்தான் (யோபு 1:13-22). தன் சரீர பெலத்தை இழந்தான் (2:7-8). யோபுவின் பதிலானது, எல்லா காலத்துக்கும் உரிய மாதிரியாய் நமக்கு இருக்கிறது. அவன், “நிர்வாணியாய் என் தாயின் கர்ப்பத்திலிருந்து வந்தேன்; நிர்வாணியாய் அவ்விடத்துக்குத் திரும்புவேன்; கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்தார்; கர்த்தருடைய நாமத்துக்கு ஸ்தோத்திரம்” (1:21) என்று சொல்கிறான். “இவையெல்லாவற்றிலும் யோபு பாவஞ்செய்யவுமில்லை, தேவனைப்பற்றிக் குறைசொல்லவுமில்லை” (வச. 22) என்று நிறைவடைகிறது.  
யோபுவைப் போலவே சீசரும் தேவனை நம்புவதற்கு தெரிந்துகொண்டார். ஒரு சில வருடங்களிலேயே, தன் முந்தின தொழிலைப் பார்க்கிலும் அதிக லாபம் ஈட்டக்கூடிய வெற்றி இலக்கை அடைந்தார். இவருடைய கதையும் யோபுவின் முடிவையே நினைவுபடுத்துகிறது (யோபு 42 பார்க்கவும்). சீசர் பொருளாதார ரீதியாக வளர்ச்சியடையவில்லையென்றாலும், அவருடைய பொக்கிஷம் பூமியில் இல்லை; பரலோகத்தில் இருக்கிறது (மத்தேயு 6:19-20) என்பதை அவர் நன்கு அறிந்திருந்தார். அவர் அப்போதும் தேவனையே நம்பியிருந்திருப்பார். 

தொடர்புடைய தலைப்புகள்

> odb

கிறிஸ்துவைப் போல் கொடுத்தல்

அமெரிக்க எழுத்தாளர் ஹென்றி தனது பிரியமான 1905 கிறிஸ்மஸ் கதையான “தி கிஃப்ட் ஆஃப் தி மேகி” என்னும் கதையை எழுதியபோது, அவர் தனிப்பட்ட பிரச்சனைகளில் இருந்து மீள போராடிக் கொண்டிருந்தார். இருப்பினும், அவர் ஒரு அழகான, கிறிஸ்துவின் பிரம்மாண்ட குணாதிசயமான தியாகத்தை முக்கியத்துவப்படுத்தும் ஒரு எழுச்சியூட்டும் கதையை எழுதினார். கதையில், ஒரு ஏழை மனைவி கிறிஸ்துமஸ் முன்தினத்தன்று தனது கணவனுக்கு பரிசுக்கொடுக்க அவரிடத்திலிருக்கும் பாக்கெட் கடிகாரத்திற்கு ஒரு அழகான தங்க சங்கிலியை வாங்குவதற்காக தனது அழகான நீண்ட தலைமுடியை விற்றாள். ஆனால் அவளுடைய கணவன், அவளுடைய அழகான கூந்தலுக்கு பரிசுகொடுக்க எண்ணி, ஒரு ஜோடி சீப்புகளை அவளுக்கு பரிசாக வாங்கி வந்திருந்தார்.  
அவர்கள் மற்றவருக்கு கொடுக்க எண்ணிய மிகப்பெரிய பரிசு, தியாகம். அவர்கள் இருவருடைய செயல்களும், அவர்களுக்கு மற்றவர் மீது இருக்கும் அன்பின் ஆழத்தைக் காட்டுகிறது.  
அதே போன்று, இயேசு என்னும் குழந்தை பிறந்த மாத்திரத்தில், அவரைக் காண வந்திருந்த சாஸ்திரிகள், அவருக்கு அன்பான பரிசுகளைக் கொண்டு வந்திருந்ததை இந்த கதை பிரதிபலிக்கிறது (மத்தேயு 2:1,11ஐப் பார்க்கவும்). அந்த பரிசுகளை விட, அந்த குழந்தை இயேசு வளர்ந்து ஒரு நாள் முழு உலகத்திற்காகவும் தனது ஜீவனையே பரிசாகக் கொடுக்கப்போகிறார்.  
நமது அன்றாட வாழ்வில், நம்முடைய நேரத்தையும், பொக்கிஷங்களையும், அன்பைப் பற்றிப் பேசும் குணத்தையும் மற்றவர்களுக்கு வழங்குவதன் மூலம் கிறிஸ்துவின் மாபெரும் பரிசை கிறிஸ்தவர்களாகிய நாம் முன்னிலைப்படுத்த முடியும். அப்போஸ்தலனாகிய பவுல், “அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்” (ரோமர் 12:1) என்று எழுதுகிறார். இயேசுவின் அன்பின் மூலம் மற்றவர்களுக்காக தியாகம் செய்வதை விட சிறந்த பரிசு எதுவும் இல்லை. 

புனிதர் நிக்

செயிண்ட் நிக்கோலஸ் (செயிண்ட் நிக்) என்று நாம் அறியும் நபர், கி.பி 270இல் ஒரு பணக்கார கிரேக்க குடும்பத்தில் பிறந்தார். துரதிர்ஷ்டவசமாக, அவர் சிறுவனாக இருந்தபோது அவரது பெற்றோர் இறந்துவிட்டனர். அவர் தனது மாமாவுடன் வாழ நேரிட்டது. அவர் அவரை நேசித்து, தேவனைப் பின்பற்றவும் கற்றுக்கொடுத்தார். நிக்கோலஸ் இளைஞனாக இருந்தபோது,திருமணத்திற்கு வரதட்சணை இல்லாத மூன்று சகோதரிகளைப் பற்றி அவர் கேள்விப்பட்டதாக புராணக்கதை கூறுகிறது. தேவைப்படுபவர்களுக்குக் கொடுப்பது பற்றிய இயேசுவின் போதனைகளைப் பின்பற்ற விரும்பிய அவர், அவருடைய சொத்தை எடுத்து ஒவ்வொரு சகோதரிக்கும் ஒரு பொற்காசுகளைக் கொடுத்தார். பல ஆண்டுகளாக, நிக்கோலஸ் தனது மீதமுள்ள பணத்தை ஏழைகளுக்கு உணவளிப்பதற்கும் மற்றவர்களைப் பராமரிப்பதற்கும் கொடுத்தார். அடுத்த நூற்றாண்டுகளில், நிக்கோலஸ் அவரது ஆடம்பரமான தாராள மனப்பான்மைக்காக கௌரவிக்கப்பட்டார். மேலும் அவர் சாண்டா கிளாஸ் என்று நாம் அறிந்த கதாபாத்திரத்தை ஊக்கப்படுத்தினார். 
இந்த பண்டிகை நாட்களின் பளிச்சிடும் விளம்பரங்களும் நமது கொண்டாட்டங்களுக்கு அச்சுறுத்தலாக இருந்தாலும், பரிசு வழங்கும் பாரம்பரியம் நிக்கோலஸ{டன் இணைகிறது. மேலும் அவருடைய தாராள மனப்பான்மை இயேசுவிடம் அவர் கொண்டிருந்த பக்தியின் அடிப்படையில் அமைந்தது. கிறிஸ்து கற்பனைக்கு எட்டாத தாராள மனப்பான்மை உடையவர் என்பதை நிக்கோலஸ் அறிந்திருந்தார். அவர் கொண்டுவந்த மிக ஆழமான பரிசு: தேவன். இயேசு என்றால் “தேவன்  நம்முடன் இருக்கிறார்" (மத்தேயு 1:23) என்று அர்த்தம். மேலும் அவர் நமக்கு வாழ்வின் பரிசைக் கொண்டு வந்தார். மரண உலகில், அவர் “தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார்” (வச. 21). 
நாம் இயேசுவை நம்பும்போது, தியாகம் செய்யும் பெருந்தன்மை வெளிப்படுகிறது. நாம் மற்றவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்கிறோம். தேவன் நமக்குக் கொடுப்பதுபோல நாமும் மற்றவர்களுக்கு மகிழ்ச்சியுடன் கொடுக்கிறோம். இது செயிண்ட் நிக்கின் கதை. எல்லாவற்றிற்கும் மேலாக இது தேவனுடைய கதை.  

தேவனின் ஆறுதலான அர்ப்பணிப்பு

பல ஆண்டுகளுக்கு முன்பு, எங்கள் குடும்பம் அமெரிக்காவின் நான்கு மாநிலங்கள் சந்திக்கும் புள்ளியில் எங்கள் குடும்பம் ஆளுக்கொரு திசையாய் நின்றோம். என் கணவர் அரிசோனா எனக் குறிக்கப்பட்ட பிரிவில் நின்றார். எங்கள் மூத்த மகன், ஏ.ஜே., யூட்டாவிற்குள் நுழைந்தார். நாங்கள் கொலராடோவிற்குள் நுழைந்தபோது எங்கள் இளைய மகன் சேவியர் என் கையைப் பிடித்தார். நான் நியூ மெக்சிகோவிற்குச் சென்றபோது, சேவியர், “அம்மா, நீங்கள் என்னை கொலராடோவில் விட்டுச் சென்றீர்கள் என்று என்னால் நம்ப முடியவில்லை!” என்று சொன்னான். எங்கள் சிரிப்பு நான்கு வெவ்வேறு மாநிலங்களில் கேட்டதால் நாங்கள் ஒன்றாகவும் பிரிந்தும் இருந்தோம். இப்போது எங்கள் வளர்ந்த மகன்கள் வீட்டை விட்டு வெளியேறிவிட்டதால், அவர்கள் எங்கு சென்றாலும் அவருடைய பிள்ளைகள் அனைவரோடுங்கூட தேவன் இருப்பேன் என்று சொன்ன வாக்குத்தத்தத்தை நான் ஆழமாக நம்புகிறேன்.  
மோசேயின் மரணத்திற்குப் பிறகு, தேவன் யோசுவாவை தலைமைத்துவத்திற்கு அழைத்தார். மேலும் இஸ்ரவேலரின் எல்லையை விரிவுபடுத்தியபோது அவரது பிரசன்னத்தை உறுதிசெய்தார் (யோசுவா 1:1-4). தேவன், “நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன்; நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை” (வச. 5) என்று சொன்னார். யோசுவா தம்முடைய ஜனங்களின் புதிய தலைவராக சந்தேகத்துடனும் பயத்துடனும் போராடுவான் என்பதை அறிந்த தேவன், இந்த வார்த்தைகளில் நம்பிக்கையின் அடித்தளத்தை உருவாக்கினார்: “நான் உனக்குக் கட்டளையிடவில்லையா? பலங்கொண்டு திடமனதாயிரு; திகையாதே, கலங்காதே, நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார்” (வச. 9). 
தேவன் நம்மை அல்லது நம் அன்புக்குரியவர்களை எங்கு அழைத்துச் சென்றாலும், கடினமான காலங்களில் கூட, அவருடைய மிகவும் ஆறுதலான அர்ப்பணிப்பு அவர் எப்போதும் நம்மோடு இருப்பதை உறுதிப்படுத்துகிறது.