Archives: நவம்பர் 2024

ஒரு நன்றியுளள்ள மறுமொழி

தீமோத்தேயு என்ற ஆஸ்திரேலிய மாலுமி பச்சையான மீன் மற்றும் மழைநீர் இவற்றைக் கொண்டே மூன்று மாதங்கள் உயிர் வாழ்ந்தார். பசிபிக் பெருங்கடலில், நிலத்திலிருந்து 1,200 மைல் தொலைவில், புயலால் உருக்குலைந்த தனது கட்டுமரத்தோடு ஒரு தீவில் தனியாகச் சிக்கிக்கொண்டார். ஆனால், மெக்சிகன் நாட்டு டுனா படகின் ஊழியர்கள், மோசமாகச் சேதமடைந்திருந்த  அவரது படகைக் கண்டு, அவரை மீட்டனர். பின்னர், மோசமான வானிலையால் பாதிக்கப்பட்டு மெலிந்திருந்த அவர், "என் உயிரைக் காப்பாற்றிய கப்பல் தலைவருக்கும் மீன்பிடி நிறுவனத்திற்கும்  நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்!" என்றார்.

தனது மிகவும் விரும்பத்தகாத அனுபவத்திற்குப் பின்னர் தீமோத்தேயு நன்றி கூறினார். ஆனால் தீர்க்கதரிசி தானியேல், ஒரு நெருக்கடிக்கு முன்னும், பின்னும், அதின் மத்தியிலும் தனது நன்றியுள்ளத்தை வெளிக்காட்டினார். மற்ற யூதர்களுடன் யூதாவிலிருந்து பாபிலோனுக்கு சிறைப்பட்டுப்போன (தானியேல் 1:1-6) தானியேல் மேலான அதிகாரத்திற்கு உயர்ந்தார். ஆனாலும் அவரைக் கொல்ல விரும்பும் மற்ற தலைவர்களின்  அச்சுறுத்தல் இருந்தது (6:1-7). அவருடைய எதிரிகள், பாபிலோன் ராஜாவிடம் சென்று, "ராஜாவாகிய உம்மைத்தவிர எந்த தேவனையானாலும்" நோக்கி எவன் விண்ணப்பம்பண்ணினாலும் , "அவன் சிங்கங்களின் கெபியிலே போடப்பட" (வ. 7) ஆணையில் கையெழுத்திடச் செய்தனர். ஒன்றான மெய்தேவனை நேசித்து, சேவித்த மனிதனாகிய தானியேல் என்ன செய்வார்? அவர் “முன் செய்துவந்தபடியே , . . . தன் தேவனுக்கு முன்பாக முழங்காற்படியிட்டு ஜெபம்பண்ணி, ஸ்தோத்திரம் செலுத்தினான்” (வ. 10). அவர் நன்றி செலுத்தினார், மேலும் தேவன் அவரது உயிரைக் காப்பாற்றி, அவருக்கு கனத்தைக் கொடுத்து (வ. 26-28) அவரது நன்றியுள்ள உள்ளத்திற்கு வெகுமதி அளித்தார்.

அப்போஸ்தலன் பவுல் எழுதியது போல், "எஎல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்(ய)யுங்கள்" (1 தெசலோனிக்கேயர் 5:18) தேவன் நமக்கு உதவுவாராக. நாம் ஒரு நெருக்கடியை எதிர்கொள்கிறோமோ அல்லது அதிலிருந்த மீண்டு வந்தோமோ, நன்றியுடன் கூடிய பிரதிபலன் அவரைக் கனப்படுத்துகிறது, மற்றும் நம் விசுவாசம் நிலைக்க உதவுகிறது.

தடை உத்தரவு

நீதிமன்றத்தில், ஒரு நபர் தேவனுக்கு எதிரான தடை உத்தரவிற்காக மனுத்  தாக்கல் செய்தார். தேவன் தன்னிடம் குறிப்பாக இரக்கமற்றவராகவும், கடுமையான எதிர்மறையான அணுகுமுறையை கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார். தலைமை நீதிபதி, இவ்வழக்கைத் தள்ளுபடி செய்தார். அந்த நபருக்கு நீதிமன்றத்தின் உதவி அல்ல, மாறாக அவருக்கு மனநல உதவி தேவை என்று கூறினார். இது ஒரு நகைச்சுவையான உண்மைக் கதை, ஆனால் சோகம் நிறைந்தது.

நாம் என்ன விதிவிலக்கானவர்களா? நமக்கும் சில சமயங்களில், "எனக்கு போதும் தேவனே, தயவாய் நிறுத்தும்" என்று சொல்லத் தோன்றுகிறதல்லவா? இதையே யோபு செய்தார். அவர் தேவனை வழக்கிற்குட்படுத்தினார். சொல்லொண்ணா துயரங்களைத் தனிப்பட்ட முறையில் சகித்த பிறகு, யோபு, "தேவனோடே நியாயத்திற்காக வழக்காட விரும்புவேன்" (யோபு 13:3) என்கிறார், தேவனோடு நீதிமன்றத்தில் வழக்காடுவதைக் கற்பனை செய்கிறார் (9:3). "உம்முடைய கையை என்னைவிட்டுத் தூரப்படுத்தும்; உம்முடைய பயங்கரம் என்னைக் கலங்கப்பண்ணாதிருப்பதாக" (13:21) என்று அவர் ஒரு தடை உத்தரவையும் போடுகிறார். தான் குற்றமற்றவர் என்பது மட்டும் யோபின் வழக்கு வாதம் அல்ல, ஆனால்,"நீர் என்னை ஒடுக்கி.. பார்க்கிறது நமக்கு நன்றாயிருக்குமோ?" (10:3) என்று தேவன் தன்னிடம் நியாயமற்ற கடுமையோடு இருப்பதாகப் பார்த்தார்.

சில சமயங்களில் தேவன் நியாயமற்றவர் என்பதுபோல உணர்கிறோம். உண்மையில், யோபின் கதை சிக்கலானது, எளிதான பதில்கள் அதிலில்லை. இறுதியில் தேவன் யோபுக்குண்டான அனைத்தையும் மீட்டெடுக்கிறார், ஆனால் அது எப்போதும் நமக்கான அவரது திட்டம் அல்ல. யோபுவின் இறுதி ஒப்புதலில் சில தீர்ப்பை நாம் காணலாம்: "ஆகையால் நான் எனக்குத் தெரியாததையும், என் புத்திக்கு எட்டாததையும், நான் அறியாததையும் அலப்பினேன்" (42:3). கருப்பொருள் யாதெனில், நாம் அறியவே முடியாத காரணங்கள் தேவனிடம் உள்ளன, அதில் அற்புதமான நம்பிக்கை இருக்கிறது.

தேவனால் மன்னிக்கப்படுதல்

தேசிய விடுமுறையான நன்றிசெலுத்தும் நாளையொட்டி, அமெரிக்க ஜனாதிபதி கருணை மன்னிப்பு வழங்கும் முன், இரண்டு வான்கோழிகளை வெள்ளை மாளிகைக்கு வரவேற்கிறார். நன்றியறிதல் நாளுக்கான பாரம்பரிய உணவில் பிரதானமாக வழங்கப்படுவதற்குப் பதிலாக, அவை தங்கள் ஆயுளெல்லாம் பாதுகாப்பாக ஒரு பண்ணையில் வளர்கின்றன. வான்கோழிகளால் தங்களுக்கு வழங்கப்பட்ட சுதந்திரத்தைப் புரிந்து கொள்ள முடியாவிட்டாலும், வித்தியாசமான இந்த வருடாந்திர பாரம்பரியமானது, மன்னிப்பிலுள்ள ஜீவனளிக்கும் வல்லமையை எடுத்துக்காட்டுகிறது.

எருசலேமில் மீந்திருந்த இஸ்ரவேலர்களுக்கு ஒரு வலுவான எச்சரிக்கையை எழுதியபோது, ​​மன்னிப்பின் முக்கியத்துவத்தைத் தீர்க்கதரிசி மீகா புரிந்துகொண்டார். தீமையை விரும்பி; பேராசை, அநீதி மற்றும் கொடுமையில் ஈடுபட்டதற்காக (6:10-15) ஒரு சட்டப்பூர்வமான புகாரைப் போலவே,தேவன்  தேசத்திற்கு எதிராக சாட்சியமளிப்பதை மீகா பதிவு செய்தார் (மீகா 1:2).

இத்தகைய கலகங்கள் மத்தியிலும், தேவன் என்றென்றைக்கும் கோபமாக இரார், மாறாக "அக்கிரமத்தைப் பொறுத்து, மீறுதலை மன்னி(ப்பார்)க்கிற" (7:18) என்ற வாக்கில் வேரூன்றிய நம்பிக்கையுடன் மீகா முடிக்கிறார். சர்வத்திற்கும் சிருஷ்டிகரும் நியாயாதிபதியுமாக, ஆபிரகாமுக்கு அவர் அளித்த வாக்கின் பொருட்டு (வ. 20) நமக்கு எதிரிடையாக நம்முடைய செயல்களை அவர் கணக்கிட மாட்டார் என்று அதிகாரப்பூர்வமாக அவராலேயே அறிவிக்க முடியும். இறுதியில், இயேசுவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலில் இது நிறைவேற்றப்பட்டது.

தேவனுடைய தரத்திற்கேற்ப வாழத் தவறிய எல்லா வழிமுறைகளிலிருந்தும் மன்னிக்கப்படுதல் என்ற பரிசுக்கு நாம் பாத்திரர் அல்லவே, எனினும் இது நமக்கு மகத்தான ஆசீர்வாதங்களைக் கொண்டுவருகிறது. அவருடைய முழுமையான மன்னிப்பின் பலன்களை நாம் மேலும் மேலும் புரிந்து கொண்டு, ​நன்றியறிதலுடன் அவரை துதிப்போமாக.

கிறிஸ்துவின் ஒளி பிரகாசமாக ஒளிர்கிறது

மிச்சிகனில் உள்ள ஹைலேண்ட் பார்க் தெருக்களில் விளக்குகள் அணைந்தபோது, ​​ஒளிக்கு மற்றொரு  மூலமான சூரியன், அங்கு இரவில் ஒளியேற்றியது. மின் பயன்பாட்டு நிறுவனத்திற்குப் பணம் செலுத்த நிதியின்றி அந்நகரம் தவித்தது. மின்வாரியத்தினர் தெருவிளக்குகளை அணைத்து, 1,400 மின்கம்பங்களிலிருந்த மின்விளக்குகளை அகற்றினர். இதனால் நகரவாசிகள் பாதுகாப்பின்றி இருளில் மூழ்கினர். "இங்கே சில குழந்தைகள் பள்ளியிலிருந்து வருகிறார்கள், இங்கே விளக்குகள் இல்லை. அவர்கள் தெருவில் குத்துமதிப்பாகத்தான் நடக்க வேண்டும்" என்று ஒரு நகரவாசி செய்தி குழுவினரிடம் கூறினார்.

நகரத்தில் சூரிய சக்தியில் இயங்கும் தெருவிளக்குகளை நிறுவ ஒரு இலாப நோக்கற்ற குழு அமைக்கப்பட்டபோது, நிலைமை மாறியது. மனிதவள அமைப்பு ஒருங்கிணைந்து பணியாற்றி, எரிசக்தி கட்டணங்களில் நகரத்தின் பணத்தை மிச்சம் பிடித்தும், அதே நேரத்தில் நகரவாசிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவும் ஒளிக்கான ஆதாரத்தையும் பெற்றுத் தந்தது.

கிறிஸ்துவுக்குள்ளான நம் வாழ்வில், நமது நம்பகமான ஒளி ஆதாரம் தேவகுமாரனாகிய இயேசுவே. அப்போஸ்தலன் யோவான் எழுதியது போல், “தேவன் ஒளியாயிருக்கிறார், அவரில் எவ்வளவேனும் இருளில்லை” (1யோவான் 1:5). யோவான், "அவர் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்" (வ.7) என்று குறிப்பிட்டார்.

இயேசுவே தன்னை, "நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான்” (யோவான் 8:12) என்று அறிவித்தார். தேவனின் பரிசுத்த ஆவியானவர் நம் ஒவ்வொரு அடியையும் வழிநடத்துகையில், நாம் ஒருபோதும் இருளில் நடக்க மாட்டோம். அவரது வெளிச்சம் எப்போதும் பிரகாசமாக ஒளிர்கிறது.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

தாழ்மையுள்ள ஜோர்ன்

குத்தகை நிலத்தில் விவசாயம் செய்யும் ஜான் இவ்வளவாய் உயர்வாரென்று எவரும் எதிர்பார்க்கவில்லை. அவரது பார்வை குறைபாடும் இன்னும் பிற உடல் நலக்குறைகள் மத்தியிலும், அவர் நார்வேயில் உள்ள தனது கிராமத்தில் உள்ளவர்களுக்காகத் தன்னை அர்ப்பணித்தார். உடல் வேதனையின் காரணமாக தூங்க முடியாத இரவுகளில், அவர் ஜெபித்தார். ஜெபத்தில் ஒவ்வொரு குடும்பத்தையும் நினைத்து, ஒவ்வொரு நபரையும் பேர் பேராகச் சொல்லி, அவர் இதுவரை சந்திக்காத பிள்ளைகளுக்காகக் கூட ஜெபித்தார். ஜனங்கள் அவருடைய கண்ணியத்தைப் பெரிதும் நேசித்து, அவருடைய புத்தியையும் அறிவுரையையும் பெறுவார்கள். நடைமுறையில் அவர்களுக்கு உதவ இயலாவிட்டாலும், அவருடைய அன்பைப் பெற்று அவர்கள் செல்லுகையில் அவர்கள் இன்னும் ஆசீர்வதிக்கப்பட்டதாக உணருவார்கள். ஜோர்ன் இறந்தபோது, அவருக்கு குடும்பம் இல்லாவிட்டாலும், அந்த வட்டாரத்திலேயே அவரது இறுதிச் சடங்கு வெகு விமர்சையாக இருந்தது. அவர் எண்ணியதைக் காட்டிலும் அவரது ஜெபம் மலர்ந்து மிகுந்த பலனைத் தந்தது.

இந்த தாழ்மையுள்ள மனிதர் அப்போஸ்தலன் பவுலின் முன்மாதிரியைப் பின்பற்றினார். அவர் தனது சிறையிருப்பிலும் தன் மூலம் தேவனிடம் திரும்பினவர்களை நேசித்தார், அவர்களுக்காக ஜெபித்தார். அவர் ரோமாபுரியின் சிறையிலிருந்தபோது, எபேசுவில் உள்ளவர்களுக்குத் தேவன் “ஞானத்தையும் தெளிவையும் அளிக்கிற ஆவியை” தரும்படிக்கும், அவர்களுக்குப் பிரகாசமுள்ள மனக்கண்களைக் கொடுக்கவேண்டுமென்றும் (எபேசியர் 1:17-19) ஜெபித்தார். அவர்கள் இயேசுவை அறிந்து, ஆவியின் வல்லமையால் அன்புடனும் ஒற்றுமையுடனும் வாழ வேண்டும் என்று ஏங்கினார்.

ஜானும் அப்போஸ்தலனாகிய பவுலும் தேவனிடம் தங்களை ஊற்றி, தாங்கள் நேசித்தவர்களுக்காக தங்களை அர்ப்பணித்து, ஜெபத்தில் தேவனுக்கு ஊழியம் செய்தனர். இன்று, நாம் பிறரை எவ்வாறு நேசிக்கிறோம், எப்படிச் சேவை செய்கிறோம் என்பதில் அவர்களுடைய உதாரணங்களைச் சிந்திப்போம். 

 

தேவனை குறித்த பிரமிப்பு

ஃபோபியா என்பது சில காரியங்கள் அல்லது சூழ்நிலைகளின் “எதேச்சையான பயம்” என வரையறுக்கப்படுகிறது. அராக்னோஃபோபியா என்பது சிலந்திகள் பற்றிய பயம் (இது பயப்படுவதற்கு முற்றிலும் சாதாரணமான பொதுவான விஷயம் என்று சிலர் சொல்லலாம்). பின்னர் குளோபோஃபோபியா (பலூன்கள் குறித்த பயம்) மற்றும் ஷாக்லெட்டோஃபோபியா (சாக்லேட் குறித்த பயம்) உள்ளது. இதுபோல சில நானூறு பயங்கள் உண்மையானவை மற்றும் ஆவணப்படுத்தப்பட்டவை. எதற்கு வேண்டுமானாலும் நாம் பயப்படக்கூடும் என்றே தோன்றுகிறது.

பத்து கட்டளைகளை பெற்றபின்னர், இஸ்ரவேலர்களின் பயம் குறித்து வேதாகமம் கூறுகிறது, “இடிமுழக்கங்களையும் மின்னல்களையும் எக்காளச் சத்தத்தையும் மலை புகைகிறதையும் கண்டார்கள்; அதைக் கண்டு, ஜனங்கள் பின்வாங்கி, தூரத்திலே நின்று” (யாத்திராகமம் 20:18). மோசேயோ அவர்களை இந்த சுவாரஸ்யமான வாக்கியங்களால் தேற்றினார்: “பயப்படாதிருங்கள்; உங்களைச் சோதிப்பதற்காகவும், நீங்கள் பாவம்செய்யாதபடிக்குத் தம்மைப் பற்றும் பயம் உங்கள் முகத்திற்கு முன்பாக இருப்பதற்காகவும், தேவன் எழுந்தருளினார்” (வ. 20). “பயப்படாதிருங்கள் ஆனால் பயந்திருங்கள்” என்று சொன்னதில் மோசே தனக்குத்தானே முரண்படுகிறார். உண்மையில், “பயம்” என்பதற்கு எபிரேய பாஷையில் குறைந்தபட்சம் இரண்டு அர்த்தங்கள் உள்ளன.எதைக் குறித்தாகிலும் நடுக்கமுண்டாகும் பயம் மற்றுதேவன் மீதுள்ள பயபக்தியான வியப்பு.

குளோபோஃபோபியா, ஷாக்லெட்டோஃபோபியா போன்ற பயங்கள் நமக்கு சிரிப்புண்டாக்கலாம். ஃபோபியாஸ் பற்றிய மிகவும் கவலைக்கிடமான அடிப்படை என்னவெனில், எல்லா வகையான விஷயங்களுக்கும் நாம் பயப்படக்கூடும். சிலந்திகளைப் போல நம் வாழ்வில் அச்சங்கள் ஊடுருவி, உலகம் ஒரு பயங்கரமான இடமாகத் தோன்றலாம். பயங்கள் மற்றும் அச்சங்களுடன் நாம் போராடும்போது, நம் தேவன் ஒரு வியத்தகு தேவன் என்பதை நினைவூட்டுவது நல்லது, இருளின் மத்தியில் இக்காலத்திற்கேற்ற அவருடைய ஆறுதலை நமக்களிக்கிறார். 

 

வேலையில் மனநிறைவு

தங்கள் பணி அர்த்தமுள்ளதாக மருத்துவர்கள் உணருகிறார்களா என்பதை அறிந்துகொள்ள, வேலூரில் உள்ள கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் இரண்டு ஆய்வுகளை மேற்கொண்டனர். இரண்டு ஆய்வுகளும் பெரும்பாலான மருத்துவர்கள் தங்கள் பணியில் மன அழுத்தம் இருந்தாலும் அது அர்த்தமுள்ளதாகவே கருதுவதைக் கண்டறிந்துள்ளனர். அவர்களின் பணி திருப்திக்கான காரணத்தைக் கேட்டபோது, அவர்கள் நிரந்தரமான வேலை, பொறுப்புணர்வு, சுதந்திரம், வீட்டுவசதி, சக ஊழியர்கள் அவர்களை உணர்ந்த விதம் மற்றும் அவர்களின் திறன்களைப் பயன்படுத்துவதற்கும், கற்பிப்பதற்கும், புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதற்கும் கிடைத்த வாய்ப்புகள் போன்ற காரணங்களைச் சொன்னார்கள்.

பிரசங்கியின் ஆசிரியரும் வேலையின் அர்த்தத்தைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்தார். அவர், "மனுஷன் சூரியனுக்குக் கீழே இருக்கிற எல்லாப் பிரயாசத்தினாலும் அவனுடைய இருதயத்தின் எண்ணங்களினாலும் அவனுக்குப் பலன் என்ன?" (வ.22) என்று கேட்கிறார். நாம் நாள் முழுவதும் "அலுப்புடனும்" "துக்கத்துடனும்" வேலை செய்கிறோம், பின்னர் இரவிலும் நம் "மனதுக்கு இளைப்பாறுதலில்லை" (வ.23). வேலை "மாயையே" என்று அவர் முடிக்கிறார் (வ.23). இருப்பினும், மனுஷன் புசித்துக் குடித்து, தன்பிரயாசத்தின் பலனை அநுபவிப்பதைப்பார்க்திலும். அவனுக்கு ஒரு நன்மையுமில்லை இதுவும் தேவனுடைய கரத்திலிருந்து வருகிறது (வ.24) என்பதை உணர்கிறார். அவர் இல்லாமல் யாரால் உண்ண முடியும் அல்லது இன்பம் காண முடியும்? (வ.25). வீட்டிலோ அல்லது வெளியிலோ உடல் உழைப்பு அல்லது மன முயற்சியுடன் வேலை செய்வது ஒரு கெளரவம். நம்மில் பெரும்பாலோர் வேலை நாளின் முடிவில் திருப்தியைத் தேடுகிறோம். சிலர் இந்த திருப்தியைச் சேவை, பண ஆதாயம் அல்லது நட்பின் மூலம் கண்டடைய முயலலாம், இன்னும் பலர் வேலையைத் தேவன் கொடுத்த பாக்கியமென்று உணருமட்டும் வருத்தத்தோடு பிரயாசப்படுவார்கள் (ஆதியாகமம் 2:15). நாம் அதிருப்தி கொள்ளுகையில், நாம் தேவனிடம் செல்லலாம். ஏனெனில், எந்த வேலையும் நமக்கு முழு மனநிறைவை அளிக்காது என்பதுதான் உண்மை, ஆனால் நாம் செய்யும் வேலையில் மெய்யான அர்த்தத்தைக் கண்டறியத் தேவன் உதவுவார். ஆன் ஹரிகீர்த்தன்