Archives: மார்ச் 2023

உறுதியான இளைப்பாறுதல் தேவனில்

சீனாவின் புஜியனில் உள்ள ஆராய்ச்சியாளர்கள், தீவிர சிகிச்சை பிரிவு நோயாளிகள் மிகவும் நன்றாகத் தூங்க உதவ விரும்பினர். அவர்கள் ஒரு உருவகப்படுத்தப்பட்ட தீவிர சிகிச்சைப் பிரிவு சூழலில், சோதனை பொருட்களின் மீதான தூக்க விளைவுகளை அளந்தனர். பிரகாசமான, மருத்துவமனை தர விளக்குகள் மற்றும் இயந்திரங்களின் சத்தங்கள் மற்றும் செவிலியர்கள் பேசும் ஆடியோ பதிவுகளுடன் முழுமையான சோதனை அது. தூக்கக் கவசங்கள் மற்றும் காது செருகிகள் போன்ற கருவிகள் சோதனை பொருட்களின் ஓய்வை மேம்படுத்துவதாக அவர்களின் ஆராய்ச்சி காட்டுகிறது. ஆனால் உண்மையான தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள உண்மையிலேயே நோய்வாய்ப்பட்ட நோயாளிகளுக்கு, அமைதியான தூக்கம் இன்னும் கடினமாக இருக்கும் என்பதை அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

நம் உலகம் நிலைகுலைகையில், நாம் எப்படி ஓய்வெடுப்பது? வேதம் தெளிவாகக் கூறுகிறது: தேவனை நம்புபவர்களுக்கு அவர்களின் சூழ்நிலைக்கு அப்பாற்பட்ட சமாதானம் இருக்கிறது. ஏசாயா தீர்க்கதரிசி, பூர்வ இஸ்ரவேலர்ககளின் துன்பங்களுக்குப் பிறகு மீட்கப்படும் எதிர்காலத்தைப் பற்றி எழுதினார். அவர்கள் தங்கள் பட்டணத்தில் பாதுகாப்பாக வாழ்வார்கள், ஏனென்றால் அதைக் தேவன் காப்பாற்றினார் என்பதை அறிந்திருந்தார்கள் (ஏசாயா 26:1). அவர்களைச் சுற்றியுள்ள சூழலில் நன்மையைக் கொண்டுவர அவர் ஆற்றலுடன் இயங்குவதை அவர்கள் நம்புவார்கள். "அவர் உயரத்திலே வாசமாயிருக்கிறவர்களையும் கீழே தள்ளுகிறார்”, ஒடுக்கப்பட்டவர்களை உயர்த்துகிறார், நீதியைக் கொண்டுவருகிறார் (வவ. 5-6). "கர்த்தர்தாமே நித்தியமான கன்மலை" என்பதை அவர்கள் அறிவார்கள், மேலும் அவர்கள் அவரை என்றென்றும் நம்பலாம் (வ. 4).

ஏசாயா எழுதினார்: “உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர்.” (வச. 3). இன்றும் தேவன் நமக்கு அமைதியையும் இளைப்பாறுதலையும் வழங்க முடியும். நம்மைச் சுற்றி என்ன நடந்தாலும் அவருடைய அன்பு மற்றும் வல்லமையின் உறுதியில் நாம் இளைப்பாறலாம்.

செய்ய அல்லது செய்யக்கூடாதவை

நான் சிறுவனாக இருந்தபோது, இரண்டாம் உலகப் போரில் செயலிழக்கச் செய்யப்பட்ட ஒரு பீரங்கி என் வீட்டிற்கு அருகில் உள்ள பூங்காவில் காட்சிக்கு வைக்கப்பட்டது. அவ்வாகனத்தின் மீது ஏறுவதிலுள்ள ஆபத்து குறித்துப் பல எச்சரிப்பு குறிகள் இருந்தன. ஆனால் எனது நண்பர்கள் இருவரும் உடனடியாக துடிப்போடு ஏறினர். எங்களில் சிலர் சற்று தயக்கம் காட்டினாலும், இறுதியில் நாங்களும் அவ்வாறே செய்தோம். ஒரு சிறுவன் பதிவிடப்பட்ட எச்சரிப்புகளைக் காட்டி மறுத்துவிட்டான். ஒரு பெரியவர் நெருங்கியதும், இன்னொருவன் வேகமாகக் கீழே குதித்தான். விதிகளைப் பின்பற்றுவதற்கான எங்கள் விருப்பத்தை விட விளையாடும் ஆசை அதிகமாக இருந்தது.

நம் அனைவருக்குள்ளும் குழந்தைத்தனமான முரட்டாட்ட சுபாவம் இருக்கிறது. என்ன செய்ய வேண்டும் அல்லது செய்யக்கூடாது என்று கூறப்பட்டால் நமக்குப் பிடிக்காது. ஆயினும் எது சரியானது என்பதை அறிந்து அதைச் செய்யாவிடில் அது பாவம் (4:17) என்று யாக்கோபில் வாசிக்கிறோம். ரோமரில், அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: “ஆதலால் நான் விரும்புகிற நன்மையைச் செய்யாமல், விரும்பாத தீமையையே செய்கிறேன். அந்தப்படி நான் விரும்பாததை நான் செய்தால், நான் அல்ல, எனக்குள்ளே வாசமாயிருக்கிற பாவமே அப்படிச் செய்கிறது" (7:19-20).

இயேசுவின் விசுவாசிகளாக, நாம் பாவத்துடன் போராடுவது புதிராக இருக்கலாம். ஆனால் பெரும்பாலும் நாம் சரியானதைச் செய்வதற்கு நம் சொந்த பலத்தை மட்டுமே சார்ந்திருக்கிறோம். ஒரு நாள், இந்த வாழ்க்கை முடிவடையும் போது, நாம் உண்மையிலேயே பாவத் தூண்டுதல்களுக்கு மரித்திருப்போம். எவ்வாறாயினும் அதுவரை, தனது மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் மூலம் பாவத்தின் மீதான வெற்றியை வென்றவரின் வல்லமையை நாம் நம்பலாம்.

தேவனுக்கு வேறு திட்டங்கள் இருந்தன

அவர்களின் துல்லியமான வயது தெரியவில்லை. தேவாலயத்தின் படிகளில் ஒருத்தி கண்டெடுக்கப்பட்டாள்; மற்றவளுக்கோ அவள் கன்னியாஸ்திரீகளால் வளர்க்கப்பட்டவள் என்பது மட்டுமே தெரியும். இரண்டாம் உலகப் போரின்போது போலந்தில் பிறந்து, ஏறக்குறைய எண்பது ஆண்டுகளாக ஹலினா அல்லது கிறிஸ்டினா ஒருவரையொருவர் பற்றி அறிந்திருக்கவில்லை. பின்னர் மரபணு பரிசோதனை முடிவுகள் அவர்கள் சகோதரிகள் என்பதை வெளிப்படுத்தியது, மற்றும் மகிழ்ச்சியுடன் மீண்டும் இணைவதற்கு வழிவகுத்தது. இது அவர்களின் யூத பாரம்பரியத்தையும் வெளிப்படுத்தியது அவர்கள் ஏன் கைவிடப்பட்டனர் என்பதை விளக்குகிறது. தீயவர்கள் சிறுமிகளை அவர்களின் அடையாளத்தின் காரணமாகக் கொல்ல முயன்றிருந்தனர்..

பயந்துபோன ஒரு தாய், சாகப்போகும் தன் குழந்தைகளை அவர்கள் மீட்கப்படக்கூடிய இடத்தில் விட்டுவிடுவது என்பதைக் கற்பனை செய்தால், மோசேயின் கதையை நினைவுபடுத்துகிறது. ஒரு எபிரேய ஆண் குழந்தையாக, அவர் இனப்படுகொலைக்காகக் குறிக்கப்பட்டார் (யாத்திராகமம் 1:22 ஐப் பார்க்கவும்). அவரது தாயார் தந்திரமாக அவரை நைல் நதியில் விட்டுவிட்டார் (2:3), அவருக்கு உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பைக் கொடுத்தார். மோசேயின் மூலம் தம்முடைய மக்களை மீட்பதற்கு அவள் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத ஒரு திட்டத்தைத் தேவன் வைத்திருந்தார்.

அமைதிக்கான அழுத்தம்

வாழ்க்கையின் மிகப்பெரிய அழுத்தங்களில் ஒன்று வீட்டை மாற்றுவது. நான் எனது முந்தைய வீட்டில் கிட்டத்தட்ட இருபது வருடங்கள் வசித்த பிறகு, எங்கள் தற்போதைய வீட்டிற்குச் சென்றோம். நான் திருமணத்திற்கு முன் எட்டு வருடங்கள் அந்த முதல் வீட்டில் தனியாக வாழ்ந்தேன். பின்னர் என் கணவர் தனது எல்லா பொருட்களுடன் இனைந்தார். பின்னர், ஒரு குழந்தையைப் பெற்றோம், இன்னும் அதிகமான பொருட்கள் சேர்ந்தது.

நாங்கள் புதிய வீட்டிற்கு போன நாளிலும் கூட அமைதியில்லை. வீட்டை மாற்றும் பணியாளர்கள் வருவதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்னும்கூட, நான் இன்னும் புத்தகத்தை எழுதி முடித்துமே கொண்டிருந்தேன். புதிய வீட்டில் பல படிக்கட்டுகள் இருந்தன, எனவே திட்டமிட்டதை விட இரண்டு மடங்கு நேரம் மற்றும் பணியாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டியிருந்தது.

ஆனால் அன்றைய நிகழ்வுகளால் நான் மன அழுத்தத்தை உணரவில்லை. பின்னர் அது என்னைப் பாதித்தது, ஒரு புத்தகத்தை எழுதி முடிக்கப் பல மணிநேரம் செலவழித்தேன். வேதம் மற்றும் வசனங்களின் கருத்துக்கள் நிறைந்த ஒரு புத்தகம். தேவனின் கிருபையால், நான் தக்க நேரத்தில் முடிக்க வேதத்தைப் பார்த்து, ஜெபித்து, எழுதினேன். எனவே, வேதத்திலும் ஜெபத்திலும் நான் மூழ்கியதே காரணம் என்று நான் நம்புகிறேன்.

பவுல் எழுதினார், “நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்” (பிலிப்பியர் 4:6) என்று. நாம் ஜெபித்து, “கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருக்கையில்” (வ. 4). பிரச்சினை மீதிருக்கும் நம் கவனத்தை நம் அருள் நாதரிடம் திருப்புகிறோம். மனவழுத்தத்தைச் சமாளிக்க உதவும்படி நாம் தேவனிடம் கேட்கலாம், ஆனால் நாம் அவருடன் இணைகிறோம், இது " எல்லாப் புத்திக்கும்மேலான தேவசமாதானம்" (வ. 7) அளிக்கும்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

விழித்திருந்து ஜெபியுங்கள்

ஆவிக்குரிய போராட்டங்களில் ஈடுபடும்போது, கிறிஸ்தவ விசுவாசிகள் ஜெபத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். அதை ஞானமற்ற முறையில் செய்தால் எவ்வளவு ஆபத்தானது என்பதை புளோரிடாவைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் கண்டுபிடித்தார். அவர் ஜெபிக்கும்போது கண்களை மூடுவது வழக்கம். அவ்வாறு ஒர்நாள் தன்னுடைய காரை ஓட்டிக்கொண்டு செல்கையில், ஜெபிக்க தன் கண்ணை மூடமுற்பட்டு, ஓர் நிறுத்தத்தில் நிற்கத்தவறி, வேறு பாதை வழியாக குறுக்கிட்டுபோய், ஓர் வீட்டு உரிமையாளரின் முற்றத்தில் தன் காரை நிறுத்தினார். அதிலிருந்து தன்னுடைய காரை பின்பாக எடுக்க முயன்று தோற்றுப்போனார். காயம் ஏற்படவில்லை என்றாலும், கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதற்காகவும், சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததற்காகவும் அவருக்கு போலீஸ் அபராதம் விதித்தது. இந்த ஜெப வீராங்கனை எபேசியர் 6:18-ன் முக்கிய பகுதியை தவறவிட்டுவிட்டார்: “விழித்துக்கொண்டிருங்கள்!”

எபேசியர் 6ல் இடம்பெற்றுள்ள சர்வாயுதவர்கத்தின் பகுதிகளாக, அப்போஸ்தலர் பவுல் இரண்டு இறுதி காரியங்களை உள்ளடக்குகிறார். முதலில், நாம் ஆவிக்குரிய யுத்தங்களை ஜெபத்துடன் செய்யவேண்டும். இதன் பொருள் ஆவியில் ஜெபிப்பது—அவருடைய வல்லமையை நம்புவது. மேலும், அவருடைய வழிகாட்டுதலில் இளைப்பாறுதலடைதல், அவரது தூண்டுதல்களுக்கு பதிலளித்தல், எல்லா சந்தர்ப்பங்களிலும் எல்லா வகையான ஜெபங்களையும் ஜெபித்தல் ஆகியவைகளும் உள்ளடங்கும் (வச. 18). இரண்டாவதாக, “விழித்துக்கொண்டிருங்கள்” என்று பவுல் நம்மை உற்சாகப்படுத்துகிறார். இயேசுவின் வருகைக்கு ஆயத்தமாவதற்கும் (மாற்கு 13:33), சோதனையை ஜெயிப்பதற்கும் (14:38), மற்ற விசுவாசிகளுக்காகப் பரிந்துபேசுவதற்கும் ஆவிக்குரிய விழிப்புணர்வு நமக்கு உதவும் (எபேசியர் 6:18).

நாம் தினமும் ஆவிக்குரிய யுத்தங்களில் ஈடுபடும்போது, தீய சக்திகளை எதிர்த்துப் போரிட்டு, கிறிஸ்துவின் வெளிச்சத்தால் இருளைத் துளைத்து, விழித்திருந்து ஜெபிக்கும் அணுகுமுறையுடன் நம் வாழ்வில் ஜெயம்பெறுவோம்.

 

தூதர் துணை

பரிசோதனைமேல் பரிசோதனை செய்துகொண்டேயிருக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டபடியால், பினு மிகவும் சோர்வாகவும் பாரமாகவும் கருதினாள். அவளுடைய உடம்பில் ஏதாவது புற்றுநோய் கட்டிகள் இருக்கிறதா என்பதை பரிசோதிப்பதாக மருத்துவர்கள் அவளிடம் தெரிவித்தனர். ஒவ்வொரு நாளும் தேவன் தம்முடைய பிரசன்னத்தின் வாக்குறுதிகளாலும், அவள் ஜெபிக்கும்போது அல்லது வேதத்தைப் படிக்கும்போது ஓர் நித்திய சமாதானத்தையும் கொண்டு அவளை ஊக்கப்படுத்தினார். அவள் நிச்சயமற்ற மனநிலையுடன் போராடினாள். மேலும் தேவனிடத்தில், ஒருவேளை “இப்படியிருந்தால்...” என்று தன்னுடைய பயத்தை அதிகமாய் பகிர ஆரம்பித்தாள். தீவிர அறுவை சிகிச்சைக்கு முன் ஒரு நாள் காலை பினு தன்  கண்ணில்பட்ட யாத்திராகமம் 23ல் ஒரு வசனத்தை வாசித்தாள். அது: “வழியில் உன்னைக் காக்கிறதற்கும்... இதோ, நான் ஒரு தூதனை உனக்கு முன்னே அனுப்புகிறேன்” (வச. 20)

அந்த வார்த்தைகளை தேவன் மோசேயின் மூலம் தம்முடைய மக்களாகிய இஸ்ரவேலருக்குக் கூறினார். தம்முடைய ஜனங்கள் பின்பற்றும்படியாக தேவன் நியாயப்பிரமாணங்களைக் கொடுத்து, அவர்களைப் புதிய தேசத்திற்கு அழைத்துச் சென்றார் (வச. 14-19). ஆனால் அவர்களுடைய பாததையில் அவர்களை பாதுகாப்பதற்காக, “ஒரு தூதனை உனக்கு முன்னே அனுப்புகிறேன்” என்று கூறுகிறார். பினுவின் வாழ்க்கை நிலைமை இதுவாக இல்லாவிட்டாலும், தேவ தூதர்களைக் கொண்டு கர்த்தர் தம்முடைய ஜனத்தை பாதுகாப்பதை மற்ற வேதப்பகுதிகளின் மூலம் அவள் அறிந்தாள். சங்கீதம் 91:11, “உன் வழிகளிலெல்லாம் உன்னைக் காக்கும்படி, உனக்காகத் தம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிடுவார்” என்று சொல்லுகிறது. மேலும் எபிரெயர் 1:14, “இரட்சிப்பைச் சுதந்தரிக்கப்போகிறவர்களினிமித்தமாக ஊழியஞ்செய்யும்படிக்கு அவர்களெல்லாரும் அனுப்பப்படும் பணிவிடை ஆவிகளாயிருக்கிறார்களல்லவா?” என்று குறிப்பிடுகிறது. 

நாம் கிறிஸ்துவை அறிந்திருந்தால், நமக்கும் ஊழியம் செய்ய ஒரு துதன் அனுப்பப்படுகிறார் என்பதை விசுவாசிப்போம்.

 

கவலைகளை களையெடுக்கவும்

எனது வீட்டு முற்றத்தில் உள்ள ஒரு நடவு இயந்திரத்தின் மூலம் சில விதைகளை விதைத்துவிட்டு, அதன் விளைச்சலைப் பார்க்க காத்திருந்தேன். பத்து முதல் பதினான்கு நாட்களுக்குள் விதைகள் முளைக்கும் என்று அறிந்து, நான் அதற்கு நீர் பாய்ச்சி பராமரித்தேன். விரைவில் சில பச்சை இலைகள் மண்ணிலிருந்து வெளியேறுவதைக் கண்டேன். ஆனால் அவை களைகள் என்று எனது கணவர் என்னிடம் சொன்னபோது நான் பதற்றமடைந்தேன். நான் வளர்க்க முயற்சிக்கும் செடிகளை அவை நெரித்துவிடாதபடி விரைவாக அவைகளை வெளியே இழுக்கும்படி எனது கணவர் என்னை ஊக்குவித்தார்.

நம்முடைய ஆவிக்குரிய வளர்ச்சியைத் தடுக்கக்கூடிய ஊடுருவல்காரர்களைக் கையாள்வதன் முக்கியத்துவத்தையும் இயேசு அறிவிக்கிறார். அவர் தனது உவமையின் ஓர் பகுதியை இவ்வாறு விளக்கினார்: விதைப்பவன் ஒருவன் தன்னுடைய விதைகளை விதைத்தபோது, அவற்றுள் “சில விதை முள்ளுள்ள இடங்களில் விழுந்தது; முள் வளர்ந்து அதை நெருக்கிப்போட்டது” (மத்தேயு 13:7). முட்களும் களைகளும் தாவரங்களின் வளர்ச்சியை வெகுவாய் பாதிக்கக்கூடியவைகள் (வச. 22). அதுபோல கவலைகள் நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். வேதத்தை வாசிப்பதும் ஜெபிப்பதும் நமது விசுவாசத்தை வளர்ப்பதற்கான சிறந்த வழிகள். ஆனால் கவலையின் முட்களைக் களையெடுப்பதில் நான் கவனம்செலுத்தவேண்டும் என்பதை உணர்ந்தேன். அவைகள் என்னுள் விதைக்கப்பட்ட நல்ல வசனத்தை நெருக்கி, தவறாய் என்னை திசைதிருப்பக்கூடும். 

வேதத்தில் காணப்படும் ஆவியின் கனிகளானது, அன்பு, சந்தோஷம், சமாதானம் போன்றவற்றை உள்ளடக்கியது (கலாத்தியர் 5:22). ஆனால் நாம் அந்த பலனைக் கொடுப்பதற்கு, தேவனுடைய வல்லமையோடு நம்மைத் திசைதிருப்பக்கூடிய அல்லது நம்முடைய கவனத்தை மாற்றக்கூடிய சந்தேகம் போன்ற கவலையின் களைகளை புறம்பாக்கிட வேண்டும்.