செப்டம்பர், 2022 | நமது அனுதின மன்னா Tamil Our Daily Bread

Archives: செப்டம்பர் 2022

எங்கே திரும்புவது?

அந்தப் பள்ளியில் அஷோக்கின் விளையாட்டு திறமையையும், எளிதில் உணர்ச்சி வசப்படாத அமைதியையும் பாராட்டாதவரே இல்லை. விளையாட்டு மைதானத்தில் அவனுக்கு அலாதி சந்தோஷம்.

தன் வீட்டினருகே இருந்த ஒரு சபைக்குச் சென்றதால் அவன் இயேசுவைப் பின்பற்ற முடிவுசெய்தான். அதுவரைக்கும், அவன் அநேக குடும்ப நெருக்கடிகளைச் சந்தித்தான், அதற்கு ஆறுதலாகப் போதைப் பொருட்களையும் பழகிக்கொண்டான். அவனுடைய மனமாற்றத்திற்குப்பின் சிலகாலம் எல்லாமே நன்றாகத்தான் இருந்தது, ஆனால் சிலவருடங்கள் கழிந்து மீண்டும் போதைப் பொருட்களைப் பயன்படுத்தத் துவங்கினான். முறையான ஆலோசனையும், சிகிச்சையும் இல்லாத காரணத்தால், போதைப் பழக்கம் எல்லை தாண்டவே அவன் மரித்தான்.

நெருக்கடியின்போது நாம் பழைய பாவத்திற்குத் திரும்புவது சுலபம். இஸ்ரவேலர்கள் தங்களை நோக்கி வந்துகொண்டிருந்த அசீரியர்களின் தாக்குதலுக்குத் தப்பிக்க, உதவிக்காக தங்கள் பழைய எஜமானர்களான எகிப்தியர்களிடம் திரும்பினர் (ஏசாயா 30:1–5). இது அழிவுக்கேதுவானது என்று தேவன் முன்னறிவித்திருந்தாலும், இஸ்ரவேலரின் கீழ்ப்படியாமையின் மத்தியிலும், அவர்களுக்காகத் தொடர்ந்து அக்கறை கொள்கிறார். தேவனின் இதயத்தை ஏசாயா, "உங்களுக்கு இரங்கும்படி கர்த்தர் காத்திருப்பார், உங்கள்மேல் மனதுருகும்படி எழுந்திருப்பார்" (வ.18). என்று வெளிப்படுத்தினார்.

நமது வேதனைக்கு வேறெங்கிலும் ஆறுதலைத் தேட நாம் முயலுகையில், தேவன் இப்படியே நம்மையும் அணுகுகிறார். நமக்கு உதவ விரும்புகிறார். நம்மை அடிமைப்படுத்தும் பழக்கங்களால் நம்மை நாமே காயப்படுத்துவதை அவர் விரும்பவில்லை. சில பொருட்களும், பழக்கங்களும் நமக்கு உடனடி தீர்வை தருமென்று நாம் ஈர்க்கப்படலாம். ஆனால் தம்மோடு நெருக்கமாக நடக்கையில் உண்டாகும், அதிகாரப்பூர்வமான நிரந்தர தீர்வை நமக்குத் தரவே, தேவன் விரும்புகிறார்.

காபிக்கொட்டை கிண்ணம்

நான் காபி பிரியனில்லை, ஆனால் காபிக்கொட்டையின் வாசனை எனக்கு ஆறுதலையும், ஆசையையும் உண்டாக்கியது. எனது வாலிபமகள் மெலிசா தன் படுக்கை அறையை அலங்கரிக்கையில், ஒரு கிண்ணத்தில் காபிக்கொட்டைகளை நிரப்பி அதின் இதமான வாசனை அறையெங்கும் வீசும்படி செய்வாள்.

அவள் பதினேழு வயதில் ஒரு சாலை விபத்தில் மரித்து, சுமார் இருபது ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் இன்னமும் அந்த காபிக்கொட்டை கிண்ணம் எங்களிடம் உள்ளது. எங்களுடன் மெலிசாவின் வாழ்க்கையை நினைவூட்டும் நறுமணமாக இன்றும் தொடர்கிறது.

நறுமணத்தை ஞாபகக்குறியாக வேதமும் பயன்படுத்துகிறது. உன்னதப்பாட்டில், ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையேயான அன்பைக் குறிக்க நறுமணம் அடையாளமாய் உள்ளது (பார்க்கவும் 1:3; 4:11, 16). ஓசியாவின் புத்தகத்தில், இஸ்ரவேலை தேவன் மன்னிப்பது, "லீபனோனுடைய வாசனையைப்போலவும் இருக்கும்" (ஓசியா 14:6) என்றுள்ளது. இயேசுவின் பாதத்தை மரியாள் நளதத்தால் பூசுகையில், மரியாளும் அவள் உடன்பிறந்தவர்களும் வாழ்ந்த அந்த வீடு முழுவதும் "தைலத்தின் பரிமளத்தினால் நிறைந்தது" (யோவான் 12:3), இது இயேசுவை அடக்கம்பண்ணுதலுக்கு ஏதுவாய் இருந்தது (பார்க்கவும். வ.7)

பரிமளவாசனை நம்மைச் சுற்றிலும் உள்ளவர்களிடம் நமக்கிருக்கும் சாட்சியை நினைப்பூட்டுகிறது. இதைப் பவுல், "இரட்சிக்கப்படுகிறவர்களுக்குள்ளேயும், கெட்டுப்போகிறவர்களுக்குள்ளேயும், நாங்கள் தேவனுக்குக் கிறிஸ்துவின் நற்கந்தமாயிருக்கிறோம்" (2 கொரிந்தியர் 2:15) என்று நமக்கு விளக்குகிறார்.

காபிக்கொட்டையின் வாசனை எனக்கு மெலிசாவை நினைப்பூட்டுவதுபோல, இயேசுவையும் அவரது அன்பையும் நமது வாழ்க்கை வெளிப்படுத்தி, அனைவருக்கும் அவர் தேவை என்பதைப் பிறருக்கு நினைப்பூட்டும்படி வாழ்வோம்.

மனதிலிருந்து

“செயல்படும் நோவா பேழை” என்ற பெயர் விலங்குப் பிரியர்களுக்கு விளையாட்டாய்த் தோன்றியது. பெரும் சத்தம் மற்றும் துர்நாற்றம் ஒரு அறையிலிருந்து வந்தது என்ற புகாரின் அடிப்படையில், அமெரிக்க விலங்குகள் நலச்சங்கத்தினர் வந்து பார்வையிட்ட போது, அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஏனென்றால் “செயல்படும் நோவா பேழை” குழுவினர்  புறக்கணிக்கப்பட்ட விலங்குகளை எல்லாம் ஓரிடத்தில் சேர்த்து வைத்திருந்தனர் (பின்னர் வெளியேற்றப்பட்டது). புறக்கணிக்கப்பட்ட சுமார் நானூறுக்கும் மேற்பட்ட விலங்குகளைக் கண்டு மீட்டனர்.

துர்நாற்றம் வீசும் நூற்றுக்கணக்கான விலங்குகள் நம்மிடம் இல்லாமலிருக்கலாம், ஆனால் நம் மனதில் பாவம் நிறைந்த எண்ணங்களும், செய்கைகளும் பேணி வளர்க்கப் படாமல், அவற்றைக் களைந்தெறிய வேண்டும் என இயேசு கூறினார்.

ஒரு மனிதனைச் சுத்தமுள்ளவனாகவும் தீட்டுள்ளவனாகவும் மாற்றுவதைக் குறித்து இயேசு தம் சீஷர்களிடம் போதிக்கையில், அழுக்கான கரங்களோ அல்லது "வாய்க்குள்ளே போகிறதோ" மனிதனை தீட்டுப்படுத்தாது, மாறாகத் தீய இதயமே அவனைத் தீட்டுப்படுத்தும் (மத்தேயு 15:17–19) என்றார். நமது மனதிலிருந்து வீசும் துர்நாற்றத்திற்குக் காரணம், நமது வாழ்க்கையே. பின்னர் இயேசு, நம் மனதிலிருந்து வெளியேறும் தீய எண்ணங்களுக்கும் செயல்களுக்கும் பல உதாரணங்களைச் சொல்கிறார் (வ.19). வெளிப்பிரகாரமாக நாம் எவ்வளவுதான் சமய சடங்குகளையும், மதம்சார்ந்த செயல்களையும் செய்தாலும் நம் மனதை அவை சுத்தப்படுத்தாது. நம் இதயம் மாற நமக்குத் தேவனே தேவை.

துர்நாற்றம் வீசும் வாழ்வின் அழுக்குகளை அவரே சுத்தம் செய்ய நம்மை அனுமதிப்போம். நம் மனதில் புதைந்துள்ளவற்றைக் கிறிஸ்து வெளிக்கொணர்ந்து, நமது வார்த்தைகளும் செயல்களும் அவரது விருப்பத்தின்படி அவர் மாற்றுகையில், அவரைப் பிரியப்படுத்தும் நறுமணமாக நாமும் மாறுவோம்.

நமது எதிர்காலத்திற்கான தேவ உதவி

உளவியலாளர் மெக் ஜேவை பொறுத்தமட்டில், நமக்கு முற்றிலும் அந்நியர்களைப் பற்றி நாம் எப்படிச் சிந்திக்கிறோமோ, அப்படியே நம் மனதும் நம்முடைய எதிர்காலத்தைக் குறித்துச் சிந்திக்குமாம். ஏன்? இதற்குக் காரணம் "அனுதாப இடைவெளி" எனும் உணர்வுதான். அதாவது நமக்குத் தனிப்பட்ட விதத்தில் பரிச்சயமில்லாதவர்களைக் குறித்த அக்கறையோ, கரிசனையோ நமக்கு இல்லாமல் போகும் போது, எதிர்காலத்தில் அவ்வுணர்வே நம்மை நமக்கு அந்நியர்களாக்கிவிடுமாம். இதனைச் சமாளிக்க, ஜே இளைஞர்களுக்குத் தங்கள் வருங்காலத்தில் எப்படியாக அவர்கள் இருக்க விரும்புகிறார்களோ, அதை நிகழ்காலத்தில் கற்பனை செய்து, தங்கள் நடக்கைகளைத் திட்டமிட்டு, அதற்கேற்றாற்போல மாற்றிக்கொள்ளும்படி பயிற்றுவிக்கிறார்.

சங்கீதம் 90 ல் நமது வாழ்வை வெறும் நிகழ்காலமாக மட்டுமில்லாமல் அதை முழுமையாகப் பார்க்க, "நாங்கள் ஞான இருதயமுள்ளவர்களாகும்படி, எங்கள் நாட்களை எண்ணும் அறிவை எங்களுக்குப் போதித்தருளும்." (வ.12) என்று தேவனிடம் உதவி கேட்க அழைக்கப்படுகிறோம். இந்த உலகில் நமது நாட்கள் மிகக்குறுகியது என்பதை நினைவில்கொண்டால் நாம் தேவனைச் சார்ந்துகொள்ளவேண்டிய அவசியத்தை நன்கு உணருவோம். இன்று மட்டுமின்றி, "வாழ்நாளெல்லாம்" (வ.14) நமக்கு மகிழ்ச்சியும் திருப்தியும் உண்டாகத் தேவனின் உதவி நமக்கு வேண்டும். நம்மைக் குறித்து மட்டுமின்றி வருங்கால சந்ததிகளைக் குறித்தும் நாம் சிந்திக்க (வ.16) தேவனின் உதவி நமக்கு அவசியம். மேலும் நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள குறுகிய காலத்தில் அவருக்கு ஊழியம் செய்ய, நமது கைகளின் கிரியை உறுதிப்பட (வ.17) தேவனின் உதவி நமக்கு வேண்டும்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

இயேசுவிடம் ஓடுதல்

 பாரீஸ_க்கு ஒரு பயணத்தில், பென்னும் அவனது நண்பர்களும் நகரத்தில் உள்ள புகழ்பெற்ற அருங்காட்சியகம் ஒன்றிற்கு சென்றிருந்தனர். அவன் ஓவியக்கலை மாணவனாய் இல்லாதபோதிலும், யூஜின் பர்னாண்ட் வரைந்த “உயிர்த்தெழுந்த நாளின் அதிகாலையில் கல்லறைக்கு ஓடிய பேதுருவும் யோவானும்” என்று தலைப்பிடப்பட்ட அந்த ஓவியத்தைக் கண்டு ஆச்சரியத்தில் வியந்தான். வார்த்தைகளை பகிராத அந்த ஓவியத்தில் இடம்பெற்றிருந்த பேதுரு மற்றும் யோவானின் முகங்கள் எண்ணற்ற உணர்வுகளை பகிருகின்றது. பார்வையாளர்களை அவர்களின் உணர்வுக்குள் நிறுத்தி, அவர்களை ஆச்சரியத்துக்குள்ளாக்குகிறது.  
யோவான் 20:1-10இன் பிரகாரம், அந்த ஓவியமானது இயேசுவின் வெறுமையான கல்லறைக்கு நேராய் ஓடிய இரண்டுபேரை காண்பிக்கிறது (வச. 4). அந்த பிரம்மாண்ட ஓவியம் உணர்ச்சிபொங்கிய இரண்டு சீஷர்களின் உணர்வுகளை படம்பிடித்திருக்கிறது. அந்த கட்டத்தில் அவர்களுடைய விசுவாசம் இன்னும் முழுமைபெறவில்லையெனினும், அவர்கள் சரியான திசையை நோக்கி ஓடினார்கள். உயிர்த்தெழுந்த இயேசுவும் அவர்களுக்கு தன்னை வெளிப்படுத்திக் காண்பித்தார் (வச. 19-29). அவர்களுடைய இந்த தேடுதல், நூற்றாண்டுகளாய் இயேசுவைத் தேடுவோரின் தேடலுக்கு ஒத்தது. இயேசுவின் கல்லறை அருகே அக்காலகட்டத்தில் நாம் இல்லாதிருந்தாலும், அந்த அழகான ஓவியத்தை நாம் பார்த்திராவிடினும், நற்செய்தியை நம்மால் தெளிவாய் பார்க்கமுடியும். நமக்கு சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் குழப்பங்கள் இருந்தாலும், இயேசுவும் அவருடைய அன்பும் இருக்கும் திசை நோக்கி ஓடுவதற்கு வேதம் நம்மை உற்சாகப்படுத்துகிறது. நாளைக்கு உயிர்தெழுதலின் ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடும்போது, “உங்கள் முழு இருதயத்தோடும் என்னைத் தேடினீர்களானால், என்னைத் தேடுகையில் கண்டுபிடிப்பீர்கள்” (எரேமியா 29:13) என்னும் வார்த்தையை நினைவுகூருங்கள்.  

செந்நீர்

ஸ்காட்டிஷ் தேசிய ஓவிய கண்காட்சி வழியாக நடந்து செல்லும்போது, டச்சு ஓவியர் வின்சென்ட் வான் கோக் வரைந்த பல ஒலிவ மர ஓவியங்களில் ஒன்றின் அழகு என்னை வெகுவாய் ஈர்த்தது. பல வரலாற்று நிபுணர்கள், இந்த வேலைப்பாடு ஒலிவ மலையில் உள்ள கெத்செமனே தோட்டத்தில் இயேசுவுக்கு உண்டான அனுபவத்தால் ஈர்க்கப்பட்டதாக நம்புகிறார்கள். அந்த ஓவியத்தில் என்னை அதிகமாய் ஈர்த்தது என்னவென்றால், அந்த பழைய ஒலிவ மரங்களின் மீது சில சிறிய சிவப்பு தீற்றல்கள்.  
ஒலிவ மலையில் ஒலிவ மரங்கள் அதிகம் இடம்பெற்றிருக்கும் என்பதை அறிந்திருந்த இயேசு, அந்த இரவில் ஜெபிப்பதற்காய் அங்கு கடந்த சென்றார். தன் சீஷர்களில் ஒருவனான யூதாஸ் தன்னை காட்டிக்கொடுப்பான் என்பதையும் முன்னறிவித்தார். அந்த காட்டிக்கொடுக்கப்படுதல் சிலுவையில் அறையப்படுதலுக்கு வழிவகுக்கும் என்பதை அறிந்த இயேசு கவலையினால் நிரப்பப்பட்டார். அவர் ஜெபிக்கும்போது, “அவருடைய வேர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாய்த் தரையிலே விழுந்தது” (லூக்கா 22:44). அந்த குறிப்பிட்ட வெள்ளிக்கிழமையில், தன்னுடைய அடிக்கப்படுதலுக்கும் பாடுகளுக்கும் இயேசு ஆயத்தமாயிருந்தார் என்பதற்கு அவருடைய அந்த கெத்சமெனே ஜெபமே ஆதாரமாயிருக்கிறது.  
வான் கோக் வரைந்த ஓவியத்தில் சிதறியிருந்த அந்த இரத்தத் துளிகள், “மனுஷகுமாரன் பல பாடுகள்பட்டு... ஆகாதவனென்று தள்ளப்பட்டு” (மாற்கு 8:31) உபத்திரவத்தை அனுபவிப்பார் என்பதை நமக்கு நினைவூட்டுகிறது. உபத்திரவம் அவருடைய பாதையில் அனுமதிக்கப்பட்டாலும், அது அவருடைய வாழ்க்கையை மேற்கொள்ளவில்லை. மரணத்தின் மீது இயேசு கொண்ட ஜெயமானது, நம்முடைய உபத்திரவத்தை மேற்கொள்ளச் செய்து, தேவன் நமக்கு ஆயத்தப்படுத்தியிருக்கும் அழகான வாழ்க்கைக்கு நம்மை தகுதிப்படுத்துகிறது.

சேவை செய்யும் சவால்

பதிமூன்றே வயது நிரம்பிய டேஏவியன் மற்றவர்களுக்கு சேவை செய்யும் சவாலை மேற்கொண்டான். கோடை விடுமுறையின் போது, தன்னுடைய ஐம்பது புல்வெளிகளை இலவசமாக வெட்டும்படி குழந்தைகளுக்கு அழைப்புக் கொடுத்த ஒரு மனிதனைப் பற்றிய கதையை அவனும் அவனது அம்மாவும் கேட்டிருக்கிறார்கள். இராணுவ வீரர்கள், ஒற்றை அம்மாக்கள், ஊனமுற்றவர்கள், அல்லது உதவி தேவைப்படும் எவருக்கும் உதவுவதே அவர்களின் நோக்கம். அந்த புல்வெளிகளின் சொந்தக்காரர், வேலையின் முக்கியத்துவத்தையும் மக்களுக்கு நன்மை செய்வதின் அவசியத்தையும் அவர்களுக்கு விளங்கச்செய்தார். கோடையின் வெயில் சுட்டெரிக்கும் போதும், மற்றவர்களுக்குச் சேவை செய்வதை விரும்பிய டேஏவியன் 
அடிக்கும்போது அந்த சவாலை நேர்த்தியாய் செய்து முடித்தார். மற்றவர்களுக்குச் சேவை செய்யும் சவால் கிறிஸ்தவர்களுக்கும் உண்டு. இயேசு மரிப்பதற்கு முந்தின நாள் இரவில், அவர்சீஷர்களோடு பந்தியிருந்தார் (யோவான் 13:1-2). அவர் கடந்துபோகப்போகிற உபத்திரம் மற்றும் மரணம் என்னும் பாதையைக் குறித்து அவர் நன்கு அறிந்திருந்த போதிலும், அவர் ஒரு துண்டை எடுத்து தன்னுடைய இடுப்பில் கட்டிக்கொண்டு சீஷர்களின் பாதங்களை கழுவினார் (வச. 3-5). மேலும் "ஆண்டவரும் போதகருமாகிய நானே உங்கள் கால்களைக் கழுவினதுண்டானால், நீங்களும் ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள்” என்று அவர்களிடம் வலியுறுத்தினார் 
(໙. 14). நம்முடைய தாழ்மையான மாதிரியாகிய இயேசு மக்களிடம் கரிசனை காண்பித்தார். அவர் குருடருக்குப் பார்வையும், வியாதியஸ்தருக்கு சுகமும் கொடுத்து இராஜ்யத்தின் நற்செய்தியைப் போதித்து, தன் சிநேகிதருக்காகத் தன்னுடைய ஜீவனையும் கொடுத்தார். கிறிஸ்து உங்களை நேசிப்பதால், இந்த வாரத்தில் யாருக்கு சேவை செய்யவேண்டும் என்று அவர்விரும்புகிறார் என்று அவரிடத்தில் கேளுங்கள்.