Archives: ஆகஸ்ட் 2022

அறிவு காயப்படுத்தும்போது

கிராண்ட் கேன்யன் வழியாக, இருபத்தைந்து நாட்கள் மிதவைப் படகு பயணத்திற்கு பிறகு, சாக் எல்டரும் அவரது நண்பர்களும் கரை வந்துசேர்ந்தனர். அவர்களின் படகுகளை மீட்டெடுக்க வந்த நபர் கோவிட்-19 வைரஸ் பற்றி அவர்களிடம் கூறினார். அவர்கள் அதை நம்பவில்லை, அவர் கேலி செய்கிறார் என்று நினைத்தார்கள். ஆனால் அவர்கள் பள்ளத்தாக்கை விட்டு வெளியேறியதும் அவர்களின் தொலைபேசிகள் பெற்றோரின் அவசர செய்திகளுடன் வந்து சேர்ந்தன. சாக்கும் அவனது நண்பர்களும் திகைத்தனர். அவர்கள் மீண்டும் ஆற்று பயணத்திற்கு திரும்பிப்போய் தற்போதைய தொற்று பிரச்சனையிலிருந்து விடுபட எண்ணினர்.

பாவ உலகத்தில், அறிவானது வேதனையை கூட்டக்கூடியதாயிருக்கிறது. பிரசங்கி புத்தகத்தில் ஞானி, “அதிக ஞானத்திலே அதிக சலிப்புண்டு; அறிவுபெருத்தவன் நோவுபெருத்தவன்” (1:18) என்று குறிப்பிடுகிறார். குழந்தையின் அறியாமையைக் கண்டு பொறாமை கொள்ளாதவர் யார்? காரணம் இனவெறி, வன்முறை மற்றும் புற்றுநோய் பற்றி குழந்தைகளுக்கு ஒன்றும் தெரியாது. நாம் வளர்ந்து, நம்முடைய பலவீனங்களையும் தீய எண்ணங்களையும் பகுத்தறிவதற்கு முன்பு மகிழ்ச்சியாக இருக்கவில்லையா?

எங்கள் மாமா ஏன் அதிகமாக குடிக்கிறார் அல்லது எங்கள் பெற்றோரின் விவாகரத்துக்கு என்ன காரணம்? போன்ற குடும்ப இரகசியங்களை அறிவதற்கு முன்பு நாம் மகிழ்ச்சியாய் இருக்கவில்லையா?

அறிவின் வேதனை விரும்பத்தக்கதல்ல. ஆனால் அவற்றை சகித்துக்கொள்ளவும், அதில் வளரவும் நம்மை ஊக்குவிக்கும், ஒரு உயர்ந்த அறிவு இருக்கிறது. இயேசு என்னும் தேவனுடைய வார்த்தையே நம்முடைய

இருளில் பிரகாசிப்பிக்கும் ஒளி (யோவான் 1:1-5). “அவரே தேவனால் நமக்கு ஞானமும் நீதியும் பரிசுத்தமும் மீட்புமானார்” (1 கொரிந்தியர் 1:30). இயேசுவிடம் சரணடைவதற்கு உங்களுடைய வேதனையே ஒரு காரணம். அவர் உங்களை அறிந்திருக்கிறார், உங்களை பாதுகாக்கிறார்.

விளக்கை எரியவிடுங்கள்

ஓட்டல் வணிகத்தின் ஒரு சிறிய கட்டிடம் இருந்தது. அது ஒரு இரவு நேரம். அந்தக் கட்டிடத்தை சுற்றி எதுவும் இல்லை. அந்தக் கட்டிடத்தின் வராந்தா கதவின் அருகில் இருந்த விளக்கிலிருந்து மட்டும் சிறிய வெளிச்சம் வந்தது. பயணிகள் படிகளில் ஏறிச்சென்று கட்டிடத்திற்குள் நுழைவதற்கு அந்த ஒளி போதுமானதாயிருந்தது. அங்கே “உங்களுக்காக நாங்கள் விளக்கை எரிய விடுகிறோம் & quot; என்னும் வாசகம் எழுதப்பட்டிருந்தது. சோர்வோடு வரும் பயணிகள் தங்கி இளைப்பாறுவதற்கு அந்த விளக்கு வரவேற்படையாளமாய் அமைந்தது.

இயேசுவை விசுவாசிக்கிறவர்கள் அந்த வரவேற்பு விளக்கைப் போன்றவர்கள் என்று இயேசு சொல்லுகிறார். அவர் தன்னை பின்பற்றுபவர்களைப் பார்த்து, “நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்; மலையின்மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது” (மத்தேயு 5:14) என்றார். விசுவாசிகளாகிய நாமும் இருள் சூழ்ந்த உலகத்திற்கு ஒளியாக திகழ்கிறோம்.

மேலும் அவர் “மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி” (வச. 16) நம்முடைய வெளிச்சத்தை பிரகாசிக்கும்படிக்கு கூறுகிறார். நம்முடைய விளக்கை அணையாமல் எரியச் செய்தால், நாம் பலரை நம்மிடமாய் வரவேற்று, மெய்யான ஜீவ ஒளியான கிறிஸ்துவை (யோவான் 8:12) அறிந்துகொள்ளும்படி செய்யலாம். சோர்ந்துபோன, இருள் சூழ்ந்த உலகத்தில் அவருடைய விளக்கு அணையாமல் எரிகிறது.

உங்கள் விளக்கு எரிந்துகொண்டிருக்கிறதா? இயேசு உங்கள் மூலமாய் விளக்கை பிரகாசிக்கச்செய்யும்போது, மற்றவர்கள் அதைப் பார்த்து அவ்வெளிச்சத்தைத் தங்களிலும் பிரகாசிக்கச்செய்வார்கள்.

காலத்தின் விதைகள்

1879 ஆம் ஆண்டில் வில்லியம் பீலுடைய செய்கைகள் பார்ப்பவர்களுக்கு முட்டாள்தனமாய் தெரிந்தது. ஏனெனில் தாவரவியல் பேராசிரியரான அவர் இருபது பாட்டில்களில் விதைகளை நிரப்பி, அதை மண்ணில் புதைத்து வைத்தார். ஒரு விதையின் நம்பகத்தன்மையை பரிசோதிக்கும் பீலின் இந்த முயற்சியானது நூற்றாண்டுகள் நீடிக்கக்கூடியது என்பது அவர்களுக்குத் தெரியாது. ஒவ்வொரு இருபது வருடங்களும் ஒரு பாட்டிலை தோண்டியெடுத்து அது முளைத்திருக்கிறதா என்று பரிசோதிக்கவேண்டும்.

விதைக்கிறதைக் குறித்து இயேசு அநேக போதனைகளை செய்திருக்கிறார். விதைக்கிறதை கர்த்தருடைய வார்த்தையை பறைசாற்றுவதோடு ஒப்பிடுகிறார் (மாற்கு 4:15). சில விதைகளை சாத்தான் கெடுத்துப்போடுகிறான்; சில விதைகள் வேரூன்றுவதில்லை; சில விதைகள் முள்ளுகளுக்கிடையே சிக்கி வளராமல் போய்விடுகிறது (வச. 15-19). நாம் சுவிசேஷத்தை பிரசங்கிக்கும் போது, எந்த விதை பலன்  கொடுக்கும் என்பது நமக்குத் தெரியாது. நம்முடைய வேலை விதைப்பது, அதாவது, சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பது: “உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்” (16:15).

2021ஆம் ஆண்டு, பீலின் மற்றுமொரு பாட்டில் தோண்டி எடுக்கப்பட்டது. ஆராய்ச்சியாளர்களால் நடத்தப்பட்ட ஆய்வில், 142 ஆண்டுகளுக்கு மேலாக விதைகள் உயிர்பிழைத்திருக்கிறது கண்டறியப்பட்டது. நம்முடைய விசுவாசத்தை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளும்படிக்கு தேவன் நம் மூலமாய் கிரியை செய்தால், நாம் பகிர்ந்துகொள்ளும் வார்த்தை எப்போது வேரூன்றும் என்று நமக்குத் தெரியாது. ஆனால் நம்முடைய நற்செய்தி விதையானது, ஒரு நாள் நிச்சயமாய் ஏற்றுக்கொள்ளப்பட்டு, “ஒன்று முப்பதும் ஒன்று அறுபதும் ஒன்று நூறுமாக” (4:20) பலன் கொடுக்கும்.

தேவனிடம் கட்டுப்பாட்டை ஒப்படைத்தல்

சமையலறை மேடையில் பொருந்தக்கூடிய அளவிற்கு ஒரு ஆலமரத்தை கற்பனை செய்து பாருங்கள். போன்சாய் என்ற மரம் அப்படித்தான், காட்டில் நீங்கள் பார்க்கும் பெரிய ஆலமரத்தின் மிகச்சிறிய உருவமே இந்த போன்சாய் மரம். பெரிய மரத்திற்கும் இந்த போன்சாய் மரத்திற்கும் இடையே எந்த மரபணு வித்தியாசமும் கிடையாது. அதை நட்டு வைத்திருக்கிற தொட்டியின் அளவினாலும், அதின் வேர் அடிக்கடி  சுத்திகரிக்கப்படுவதினாலும் அதின் வளர்ச்சி கட்டுப்படுத்தப்பட்டு சிறியதாகவே இருக்கிறது.

இந்த போன்சாய் மரங்கள் அழகாய் அலங்காரமாய் தெரிந்தாலும், அது கட்டுப்பாட்டை உருவகப்படுத்துகிறது. மரங்கள் அதின் சுற்றுப்புற சூழலுக்கு ஏற்றவாறு வளர்ச்சியடைந்தாலும், அவற்றை வளரச் செய்வது தேவனே.

தேவன் எசேக்கியேல் தீர்க்கதரிசியிடத்தில், “கர்த்தராகிய நான் உயர்ந்த விருட்சத்தைத் தாழ்த்தி, தாழ்ந்த விருட்சத்தை உயர்த்தினேன்” (எசேக்கியேல் 17:24) என்று பேசுகிறார். பாபிலோனிய சிறையிருப்பை அனுமதிப்பதின் மூலம் இஸ்ரவேல் தேசத்தை “வேறோடு பிடுங்கும்” எதிர்காலத்தைக் குறித்து தேவன் முன்னறிவிக்கிறார். ஆகிலும் தேவன் இஸ்ரவேலில் கனி தரக்கூடிய ஒரு புதிய விருட்சத்தை ஓங்கி வளரச்செய்வார்; அதின் நிழலில் “சகலவிதப்பட்சி ஜாதிகளும்” வந்து அடைக்கலம் தேடும் (வச. 23).

சம்பவிக்கப்போகிற நிகழ்வுகள் அனைத்தும் கட்டுப்பாட்டை மீறியதாக தென்பட்டாலும், தேவன் அதை கட்டுக்குள் வைத்திருந்தார். இந்த உலகம், நம்முடைய சூழ்நிலைகளால், கடின உழைப்பின் மூலம் நாமே கட்டுப்படுத்த முடியும் என சொல்லுகிறது. ஆனால் வளரச்செய்யும் தேவனுடைய கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்போதே, மெய்யான சமாதானத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

இணைந்து இயேசுவுக்கு ஊழியம் செய்தல்

மைக்ரோனேசியாவில் உள்ள ஓர் தீவில் சிக்கித்தவிக்கும் இரண்டு ஆண்களுக்கு உதவ மீட்புப் பணியாளர்கள் பிரயாசப்பட்டனர். அவர்களுக்கு சுகாதார நெருக்கடி ஏற்படுவதற்கு முன்பு அவர்களை விரைந்து காப்பாற்றுவதற்கு குழுவாய் செயல்படவேண்டியது அவசியமாய் தோன்றியது. அவர்களை முதலில் கண்டுபிடித்த விமானி, அவர்களின் அருகாமையிலிருந்த ஆஸ்திரேலிய கப்பலுக்கு செய்தியனுப்பினார். கப்பல், இரண்டு ஹெலிகாப்டர்களை அனுப்பியது, அவை உணவு, தண்ணீர் மற்றும் மருத்துவ சேவைகளை வழங்கின. பின்னர், அமெரிக்க கடலோர காவல்படை அங்கு வந்து ஆட்களை சரிபார்த்து தகவல் அளித்தனர். இறுதியாக, ஓர் மைக்ரோனேசிய ரோந்துப் படகு அவர்களை பத்திரமாக அழைத்துக்கொண்டு வந்துவிட்டது.

நாம் இணைந்து செயல்பட்டால் நிறைய சாதிக்க முடியும். பிலிப்பிய விசுவாசிகள் அப்போஸ்தலர் பவுலை ஆதரிக்க தங்கள் முயற்சிகளை ஒருங்கிணைத்தனர். லீதியாளும் அவரது குடும்பத்தினரும் அவரை தங்கள் வீட்டிற்குள் வரவேற்றனர் (அப்போஸ்தலர் 16:13-15). கிலேமெந்து, எயோதியாள் மற்றும் சிந்திகேயாள் (இவர்கள் ஒத்துப்போகவில்லை) அனைவரும் நற்செய்தியைப் பரப்புவதற்கு அப்போஸ்தலருடன் நேரடியாக வேலை செய்தனர் (பிலிப்பியர் 4:2-3). பின்னர், பவுல் ரோமில் சிறையில் அடைக்கப்பட்டபோது, தேவாலயம் (விசுவாசிகள்) அவரது பராமரிப்புக்குத் தேவைப்படும் பொருளாதாரத்தை சேகரித்து, எப்பாபிராத்து மூலம் (வச. 14-18) விநியோகித்தது. பவுல் அப்போஸ்தலரின் ஊழியத்திற்காக பிலிப்பிய திருச்சபை தொடர்ந்து ஜெபத்தில் தரித்திருந்திருக்கக் கூடும் (1:19).

இந்த பண்டைய திருச்சபை விசுவாசிகள் ஒன்றாக இணைந்து ஊழியம் செய்ததற்கான எடுத்துக்காட்டுகள் இன்று நம்மை ஊக்குவிக்கும். தேவன் நம்மை வழிநடத்தி, நமக்கு அதிகாரம் கொடுத்ததால், ஜெபிக்கவும் மற்றவர்களுக்கு ஊழியம்செய்யவும், சக விசுவாசிகளுடன் ஒத்துழைக்கவும், நம்மால் இயன்றதைவிட அதிகமாக செய்யமுடிகிறது. “தனித்து வேலை செய்தால் நாம் ஒரு துளி, ஆனால் இணைந்து வேலை செய்தால் நாம் சமுத்திரம்.”

 

தேவனே என் துணையாளர்

என் நண்பர் ராலே தனது எண்பத்தைந்தாவது பிறந்தநாளை நோக்கி விரைகிறார்! அவரை நான் முதன்முதலில் சந்தித்ததிலிருந்து முப்பத்தைந்து வருடங்களுக்கும் மேலாக எனக்கு ஊக்கமளிக்கக்கூடிய ஆதாராமாக அவர் இருந்துள்ளார். பணி ஓய்வு பெற்ற பிறகு, அவர் ஓர் புத்தகம் எழுதும் பணியை நிறைவுசெய்துவிட்டு, வேறொரு வேலையை செய்வதாக என்னிடம் கூறினார். அவற்றைக் கேட்க எனக்கு ஆர்வமாயிருந்தது ஆனால் ஆச்சரியப்படவில்லை. 

தனது எண்பத்தைந்து வயதில், வேதாகமத்தில் இடம்பெற்றுள்ள காலேப் தன் ஓட்டத்தை நிறுத்த தயாராக இல்லை. தேவன் இஸ்ரவேலுக்கு வாக்களித்த கானான் தேசத்தை சுதந்தரிப்பதற்காக பல சகாப்தங்களாக வனாந்தர வாழ்க்கை மற்றும் யுத்தங்கள் ஆகியவற்றின் மத்தியிலும், தேவபக்தியும் விசுவாசமும் அவரை தாங்கியது. அவர், “மோசே என்னை அனுப்புகிற நாளில், எனக்கு இருந்த அந்தப் பெலன் இந்நாள்வரைக்கும் எனக்கு இருக்கிறது; யுத்தத்திற்குப் போக்கும் வரத்துமாயிருக்கிறதற்கு அப்போது எனக்கு இருந்த பெலன் இப்போதும் எனக்கு இருக்கிறது” (யோசுவா 14:11) என்று உரைக்கிறார். அவர் எந்த வழிகளில் ஜெயங்கொள்வார்? “கர்த்தர் என்னோடிருப்பாரானால், கர்த்தர் சொன்னபடி, அவர்களைத் துரத்திவிடுவேன்” (வச. 12) என்று காலேப் பதிலளிக்கிறார். 

வயது, வாழ்க்கையின் நிலை அல்லது சூழ்நிலை ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல், தேவனை முழுமனதோடு பற்றிகொள்ளும் யாவருக்கும் தேவன் உதவிசெய்ய வல்லவராயிருக்கிறார். நமக்கு உதவும் நம் இரட்சகராகிய இயேசுவில், தேவன் வெளிப்பட்டார். சுவிசேஷங்கள், கிறிஸ்துவிடத்திலிருந்து தேவன்மீது விசுவாசம் வைப்பதை நமக்கு போதிக்கிறது. உதவிக்காக தேவனை அண்டிய யாவருக்கும் தேவன் தன் அக்கறையையும் இரக்கத்தையும் வெளிப்படுத்துகிறார். எபிரெய நிருப ஆசிரியர் “கர்த்தர் எனக்குச் சகாயர், நான் பயப்படேன்” (எபிரெயர் 13:6) என்று அறிக்கையிடுகிறார். இளைஞரோ அல்லது வயதானவரோ, பலவீனமானவரோ அல்லது பலவானோ, கட்டுண்டவரோ அல்லது சுதந்திரவாளியோ, வேகமாக ஓடுகிறவரோ அல்லது முடவனோ, யாராக இருந்தாலும் இன்று அவருடைய உதவியைக் கேட்பதிலிருந்து நம்மைத் தடுப்பது எது?

 

கிறிஸ்துவில் ஐக்கிய பன்முகத்தன்மை

பேராசிரியர் டேனியல் போமன் ஜூனியர் தனது “சர்வீஸ் அன் தி ஸ்பெக்ட்ரம்” என்ற கட்டுரையில், ஓர் மனஇறுக்கம் கொண்ட நபராக தனது தேவாலயத்திற்கு எவ்வாறு சேவைசெய்வது என்பது குறித்த முடிவுகளை மேற்கொள்வதில் உள்ள சிரமத்தைப் பற்றி எழுதுகிறார். அவர் குறிப்பிடும்போது “இதுபோன்ற மனஇறுக்கம் கொண்ட மக்கள் ஒவ்வொரு முறையும் முன்னோக்கி செல்ல ஓர் புதிய பாதையை உருவாக்கவேண்டும். அவை ஓர் தனித்துவமான பாதையை அமைக்கிறது... மன, உணர்ச்சி மற்றும் உடல் ஆற்றல்... தனிமை/புத்துணர்வூட்டும் தருணங்கள்; உணர்வு உள்ளீடுகள் மற்றும் ஆறுதல் நிலை...அன்றைய நாள்பொழுது; நாம் நமது பெலனானவைகளுக்காக மதிக்கப்படுகிறோமா மற்றும் உணரப்பட்ட குறைபாடுகளுக்காக ஒதுக்கப்படாமல் நமது தேவைகளுக்கு இடமளிக்கப்படுகிறோமா இல்லையா என்று சிந்தித்தல்...; இன்னும் பற்பல காரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.” அதுபோன்ற தீர்மானங்கள் “மக்களின் நேரத்தையும் ஆற்றலையும் மாற்றியமைக்கும்போது, அவை மற்றவர்களையும் நம்மையும் மறுசீரமைக்க உதவும்” என்று போமன் எழுதுகிறார். 

1 கொரிந்தியர் 12இல் பவுல் விவரிக்கும் பரஸ்பர பார்வை ஓர் குணப்படுத்தும் தீர்வாக இருக்கும் என்று போமன் நம்புகிறார். அதில் 4-6 வசனங்களில், தேவன் தன் ஜனங்கள் ஒவ்வொருவருக்கும் வரங்களை “அவனவனுடைய பிரயோஜனத்திற்கென்று அளிக்கப்பட்டிருக்கிறது” (வச. 7) என்று குறிப்பிடுகிறார். ஒவ்வொருவரும் கிறிஸ்துவின் சரீரத்தில் இன்றியமையாத அவயங்கள் (வச. 22). திருச்சபை அனைவரையும் மாற்றமுடியாத ஒரே பாதையில் பயன்படுத்தாமல், அவரவருக்கு தேவன் கொடுத்த வரங்களின் அடிப்படையில் தேவனுடைய இராஜ்யத்திற்காய் அவற்றை நேர்த்தியாய் பிரயோகிக்க அனுமதிக்கலாம். 

இந்த வழியில், ஒவ்வொரு நபரும் செழிப்பையும் முழுமையையும் காண்பதோடு, கிறிஸ்துவின் சரீரத்தில் தங்கள் மதிப்புமிக்க இடத்தில் பாதுகாப்பாக இருக்க முடியும் (வச. 26).