Archives: மார்ச் 2022

ஜெபத்தின் சாரம்சம்

ஆபிரகாம் லிங்கன் அமெரிக்காவின் ஜனாதிபதியானபோது, அவர் உடைக்கப்பட்டிருந்த தேசத்தை உருவாக்க வேண்டியிருந்தது. லிங்கன், ஒரு புத்திசாலித்தனமான தலைவராகவும், உயர்ந்த நற்குணங்கள் கொண்ட மனிதனாகவும், தன்னுடைய நன்மதிப்பை ஸ்தாபித்திருந்தாலும், அவருடைய மற்றுமொரு தகுதியே அவருடைய எல்லா செயல்களுக்கும் அஸ்திபாரமாய் திகழ்ந்தது. தன்னிடத்தில் ஒப்பிவிக்கப்பட்ட பொறுப்பை செயல்படுத்துவதற்கு அவர் தகுதியுள்ளவர் அல்ல என்னும் அவருடைய நம்பிக்கையே அந்த தகுதி. தன்னுடைய இயலாமைக்கான அவருடைய பதில், லிங்கன் சொல்லுகிறார்: “எனக்கு எங்கும் செல்லுவதற்கு வழியில்லை என்ற நிலைமையினால் நான் பலமுறை முழங்காலில் நிற்க உந்தப்பட்டேன். அந்த குறிப்பிட்ட நாளை சந்திப்பதற்கு என்னுடைய ஞானம் போதுமானதாக இல்லை.” 

வாழ்க்கையின் மிகப்பெரிய சவாலான சூழ்நிலைகளை சந்திக்க நேரிடும்போது, நம்முடைய குறைவான ஞானத்தையும், அறிவையும், பெலத்தையும் கொண்டு லிங்கனைப் போன்று எதிர்த்து போராட முனையாமல், வரையறையில்லாத கிறிஸ்துவை பூரணமாய் சார்ந்துகொள்ள முற்படுவோம். “அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்” (1 பேதுரு 5:7) என்று பேதுரு இந்த சார்ந்துகொள்ளுதலை நினைவுபடுத்துகிறார். 

தன்னுடைய பிள்ளைகளின் மீது தேவன் வைத்திருக்கிற அன்போடு, அவருடைய வல்லமையும் இணைந்து, நம்முடைய பெலவீனங்களில் அவரை சார்ந்துகொள்வதற்கு ஏற்ற ஒரு நபராய் அவரை நம்முன் நிறுத்துகிறது. அதுவே ஜெபத்தின் சாரம்சம். நம் இயலாமையை உணர்ந்தும், அவரே நித்தியத்திற்கும் போதுமானவர் என்பதையும் அறிக்கையிட்டு இயேசுவிடம் சேருவோம்.. “எங்கு போவதென்று தெரியவில்லை” என்று லிங்கன் சொன்னார். ஆனால், தேவன் நம்மீது மிகுந்த அக்கறையுள்ளவராயிருக்கிறார் என்று தெரிந்துகொள்வதே நற்செய்தி. அவரிடத்திற்கு நாம் போகலாம்! 

நேர்மையான வாழ்க்கை

ஆபேல் முத்தாய் என்னும் கென்யா நாட்டைச் சேர்ந்த ஓட்டப்பந்தய வீரர், ஒருமுறை சர்வதேச அளவிலான திறந்தவெளி ஓட்டப்பந்தயத்தில் ஓடுகையில், வெற்றிக் கோட்டை மிகஅருகில் நெருங்கிவிட்டார். ஆனால், வெற்றிக் கோட்டை தான் கடந்துவிட்டதாக எண்ணி, அதற்கு முன்னமே தன்னுடைய ஓட்டத்தை நிறுத்திவிட்டார். அவருக்கு பின்னாக இரண்டாவது இடத்தில் ஓடிவந்த ஸ்பானிய ஓட்டபந்தய வீரர் இவான் பெர்னான்டஸ் அனயா தனக்கு முன்னாக ஓட்டத்தை நிறுத்திவிட்ட முத்தாயின் தவறைப் புரிந்துகொண்டார். அந்த சூழ்நிலையை தனக்கு சாதகமாய் பயன்படுத்தி முந்திக்கொண்டு ஓடாமல், முத்தாயை தன்னுடைய தோள்மீது சாய்த்து, அவரை முன்னாக ஓடவிட்டு தங்கப் பதக்கத்தை அவர் பெறும்படி செய்தார். ஏன் வெற்றிவாய்ப்பை தவறவிட்டீர்கள் என்று நிருபர்கள் அனயாவிடம் கேட்டபோது, முத்தாய்தான் ஜெயிக்க வேண்டும்; நானல்ல என்று பதிலளித்தாராம். “என்னுடைய வெற்றிக்கான மதிப்பு என்ன? பதக்கத்தின் மதிப்பு என்னவாகும்? என்னுடைய தாயார் என்னைப் பற்றி என்ன நினைப்பார்கள்?” என்றார். ஒரு பத்திரிக்கையில் “அனயா, வெற்றிக்கு பதிலாக நேர்மையை தேர்ந்தெடுத்தார்” என்று பிரசுரிக்கப்பட்டது. 

நீதிமொழிகள், நேர்மையாய் வாழத் தீர்மானிக்கிறவர்கள் தங்களுடைய வாழ்க்கையில் பொருத்தமானதை விட உண்மையைத் தேர்ந்தெடுப்பார்கள் என்று சொல்லுகிறது. “செம்மையானவர்களுடைய உத்தமம் அவர்களை நடத்தும்” (நீதிமொழிகள் 11:3). நேர்மையாய் வாழ்வது என்பது சரியான வாழ்க்கை பாதை மட்டுமல்ல, மேன்மையான ஒரு வாழ்க்கையை நமக்கு வழங்குகிறது. “துரோகிகளின் மாறுபாடோ அவர்களைப் பாழாக்கும்” (வச.3) என்று நீதிமொழிகள் தொடர்கிறது. நீண்ட வாழ்க்கை ஓட்டத்தில் நேர்மையில்லாமை பலனளிக்காது.

நம்முடைய நேர்மையைத கைவிட்டால், தற்காலிக வெற்றி நிஜத்தில் தோல்வியே. ஆனால் விசுவாசமும், உண்மையும், தேவ வல்லமையில் நம்மை உருவாக்குகையில், நல்ல வாழ்க்கையை நேர்மையாய் வாழும் நற்குணசாலிகளாய் உருவாகுவோம்.

தேவன் எங்கே?

வால்டோ எங்கே?’ (Where’s Waldo?) என்னும் பிரபல சிறுவர் தொடர் புத்தகத்தில், நாம் கண்டுபிடிக்கவேண்டிய கதாபாத்திரம், சிவப்பு மற்றும் வெள்ளை கோடிட்ட சட்டை, தொப்பி, நீலநிற ஜீன்ஸ், பழுப்பு பூட்ஸ் மற்றும் கண்ணாடி அணிந்திருக்கும். அந்த விளையாட்டை வடிவமைத்தவர், உலகின் பல்வேறு இடங்களில், கூட்டநெரிசலாலான மற்ற கதாபாத்திரங்களுக்கு நடுவில் இந்த வால்டோவை திறமையாய் ஒளித்து வைத்திருப்பார். வால்டோவைக் கண்டிபிடிப்பது அவ்வளவு சுலபமல்ல; ஆனால் வாசகர்கள் அவரை நிச்சயமாய் கண்டுபிடிக்க முடியும் என்று அதை உருவாக்கியவர் உறுதியளிக்கிறார். தேவனைக் கண்டுபிடிப்பது இந்த புதிர்புத்தகத்தில் வால்டோவைக் கண்டுபிடிப்பது போலில்லை என்றாலும், அவரை நாம் கண்டுபிடிக்க முடியும் என்று நம்முடைய சிருஷ்டிகரும் வாக்களித்துள்ளார். 

சிறையிருப்பில், அந்நியர்களாய் வாழ்வது எப்படி என்பதை எரேமியா தீர்க்கதரிசியின் மூலம் தேவன் அறிவுறுத்தினார் (எரேமியா 29:4-9). அவருடைய திட்டத்தின்படி, அவர்களை மீட்கும் காலமட்டும் அவர்களை பாதுகாப்பதாக தேவன் வாக்களித்திருக்கிறார் (வச.10-11). அவருடைய வாக்கை நிறைவேற்றுவதின் மூலம், ஜெபத்தில் இஸ்ரவேலர்களுடைய அர்ப்பணிப்பு ஆழமாகும் என தேவன் உறுதியளிக்கிறார் (வச.12).

கிறிஸ்துவின் ஆவியின் மூலம் இன்று தேவன் தன்னை வெளிப்படுத்தினாலும், உலகத்தின் பரபரப்பான சூழ்நிலையில் நம்முடைய கவனம் எளிதாய் சிதற நேரிடுகிறது. சிலவேளைகளில் தேவன் எங்கே? என்று கூட கேட்க நேரிடுகிறது. ஆனால் சிருஷ்டிகரும், பராமரிக்கிறவுமாகிய தேவனை முழு இருதயத்தோடு தேடுகிறவர்கள் அவரைக் கண்டடைவார்கள் என்று தேவனே அறிவிக்கிறார். 

மற்ற ஏழுபேர்

ஜனவரி 2020இல் லாஸ் ஏஞ்சலஸில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் ஒன்பது பேர் பலியாயினர். “பிரபல கூடைப்பந்து விளையாட்டு வீரர் கோபே பிரயண்ட்டும், அவருடைய மகள் ஜியானாவும் (கிகி) மற்றும் ஏழுபேர் இந்த விபத்தில் பலியாயினர்” என்று அநேக செய்திகள் இவ்வாறே வெளிவந்தன.

பிரபலமான நபர்கள் இதுபோன்ற கொடூரமான சூழ்நிலைகளில் சிக்கிக்கொள்கையில், அவர்களுக்கு தனி முக்கியத்துவம் அளிப்பது இயல்பானதும், புரிந்துகொள்ளக்கூடியதும் தான். கோபே மற்றும் அவரின் பதின்பருவ மகள் கிகி ஆகியோரின் மரணம் நம்மை துயரில் ஆழ்த்துகிறது.   அதேநேரத்தில் விபத்தில் மரித்த மற்ற ஏழுபேர்களின் மரணங்கள் (பேடன், சாரா, கிறிஸ்டினா, அலிசா, ஜாண், கெரி மற்றும் ஆரா) எந்த விதத்திலும் தாழ்ந்ததில்லை. 

ஒவ்வொரு மனிதனும் தேவனுடைய பார்வையில் முக்கியத்துவம் வாய்ந்தவர் என்பதை நாம் சிலவேளைகளில் உணரவேண்டும். பிரபலமானவர்களுக்கும், பணக்காரர்களுக்கும் சமுதாயம் முக்கியத்துவம்  அளிக்கிறது. ஆனால், உங்கள் அண்டை வீட்டாரை காட்டிலும், வீதிகளில் விளையாடும் பிள்ளைகளைக் காட்டிலும், கடினமான சூழ்நிலையில் உள்ளவர்களை காட்டிலும் அல்லது உங்களைக் காட்டிலும் இந்த புகழும், பிரபலமும் ஒருவரையும் முக்கியமானவர்களாய் மாற்றாது. 

எழையோ பணக்காரனோ (நீதிமொழிகள் 22:2), பூமியிலுள்ள எல்லா மனிதர்களும் தேவனுடைய சாயலில் சிருஷ்டிக்கப்பட்டுள்ளனர் (ஆதியாகமம் 1:27). யாரும் தேவனுடைய பார்வையில் அதிக மேன்மையானவர்கள் இல்லை (ரோமர் 2:11). அனைவருக்கும் இரட்சகர் அவசியம் (3:23). 

திருச்சபையிலோ (யாக்கோபு 2:1-4) அல்லது சமுதாயத்திலோ, நாமும் பாரபட்சமில்லாமல் செயல்படும்போது நாம் நம்முடைய தேவனை மகிமைப்படுத்துகிறோம்.    

தேவனின் நல்ல பசை

சமீபத்தில் அமெரிக்க பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் மிகவும் வலிமையான, அதேநேரம் பிரித்தெடுக்கக்கூடிய புதிய வகை பசையை கண்டுபிடித்தனர். வறட்சியான இடங்களில் ஒட்டிக்கொண்டு, ஈரமான இடங்களில் எளிமையாய் விலகிக் கொள்ளும் நத்தையின் திரவமே அவர்கள் வடிவமைப்பிற்கு உந்துதல். நத்தையின் இந்த மாறும் தன்மை ஈரப்பதமான இடங்களிலும் எளிதாக நகரவும், பாதுகாப்பாய் இருக்கவும், நகர்வது ஆபத்தாய் தோன்றும் அபாயமான இடங்களில் உறுதியாய் தன்னை நிறுத்திக் கொள்ளவும் ஏதுவாயிருக்கிறது. 

இயற்கையில் இருக்கும் இந்த ஒட்டும் பசை மாதிரி, விஞ்ஞானி ஜோன்ஸ் கெப்லர் புதிய கண்டுபிடிப்பை கண்டுபிடிக்க உறுதுணையாயிருந்தது. அவர் தேவனுடைய சிருஷ்டிப்புகளை நினைவு கூறுவதாகச் சொல்லுகிறார். வேதம், தேவன் வானத்தையும் பூமியையும் அதிலுள்ள யாவையும் சிருஷ்டித்ததாக சொல்லுகிறது: பூமியின் தாவரங்கள் (ஆதியாகமம் 1:12); சமுத்திரத்திலுள்ள நீர்வாழ் ஜந்துக்கள் மற்றும் ஆகாயத்துப் பறவைகள் (வச. 21); பூமியில் ஊரும் பிராணிகள் (வச.25); தேவசாயலில் உண்டாக்கப்பட்ட மனிதன் (வச.27) என்று தேவனுடைய சிருஷ்டிப்பு பட்டியல் நீளுகிறது. ஒரு தாவரத்தை அல்லது உயிரினங்களின் விசேஷமான சுபாவத்தைக் கண்டு நாம் ஆச்சரியப்பட நேர்ந்தால், தேவன் அதை வடிவமைத்த விதத்தைக் கண்டு நாம் தேவனுடைய படைப்பின் அடுச்சுவடுகளை பின்பற்றுகிறோம் என்று அர்த்தம்.

சிருஷ்டிப்பின் ஒவ்வொரு நாளின் இறுதியிலும், தேவன் தன்னுடைய கரத்தின் கிரியையை பரிசீலனை செய்து அதை “நல்லது” என்று காண்கிறார். தேவனுடைய படைப்புகளைக் குறித்து நாம் கற்றுக்கொள்ளும் போதும், கண்டுபிடிக்கும் போதும், அதின் வியக்கத்தக்க சுபாவங்களைக் கண்டு ஆச்சரியப்பட்டு, அதை பராமரிக்கவும் அதின் மேன்மையை பறை சாற்றவும் செய்யலாம்.