Archives: டிசம்பர் 2021

கிறிஸ்மஸ்க்கு ஒருநாள் நெருக்கத்தில்

“கிறிஸ்மஸ் முடிந்து விட்டது என்பதை என்னால் நம்பமுடியவில்லை” என்று என்னுடைய மகள் மனமுடைந்து கூறினாள். 

அவள் எப்படி உணருகிறாள் என்பதை என்னால் புரிந்துகொள்ளமுடிகிறது: கிறிஸ்மஸ்க்கு பின்பு மந்தமான ஒரு உணர்வு ஏற்படுகிறது. பரிசுகள் எல்லாம் பிரித்துப் பார்க்கப்படும். வண்ண விளக்குகள் அனைத்தும் அணைக்கப்படும். விடுமுறையற்ற ஜனவரி மாதம் வந்துவிடும். பல எதிர்பார்ப்புகளுடன் வரும் அடுத்த கிறிஸ்மஸ் வெகு தூரத்தில் இருக்கிறது. 

சில வருடங்களுக்கு முன்பு, கிறிஸ்மஸ் ஏற்பாடுகளை நாங்கள் செய்துகொண்டிருந்தபோது, “காலண்டர் என்ன தேதி வேண்டுமானாலும் காட்டட்டும். ஆனால் நாங்கள் எப்போதுமே கிறிஸ்மஸ்க்கு ஒரு நாள் நெருக்கத்தில் இருக்கிறோம்” என்பதை உணர்ந்தேன். அதை நான் அடிக்கடி சொல்ல பழகிக்கொண்டேன். 

காலத்திற்கு உட்பட்ட நம்முடைய சரீரப் பிரகாரமான கொண்டாட்டத்திற்கு பின் இருக்கும் ஆவிக்குரிய யதார்த்தம் மிகவும் முக்கியமானது: இயேசு இந்த உலகத்திற்கு கொண்டு வந்த இரட்சிப்பு மற்றும் அவர் மீண்டும் வருவார் என்னும் நம்பிக்கை. இயேசுவின் இரண்டாம் வருகையை எதிர்பார்த்து காத்திருங்கள் என்று வேதம் அடிக்கடி உற்சாகப்படுத்துகிறது. பிலிப்பியர் 3:15-21ல் சொல்லுவது எனக்கு பிடித்தமானது. பூமிக்கடுத்தவைகளைச் சிந்திக்கிற (வச. 19) உலகத்தின் வாழ்க்கைமுறையும் இயேசுவின் வருகையை எதிர்நோக்கியிருக்கும் நம்பிக்கையில் வடிவமைக்கப்பட்ட வாழ்க்கைமுறையும் முரண்படுத்தப்படுகிறது: “நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது, அங்கேயிருந்து கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்து என்னும் இரட்சகர் வர எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்” (வச. 20).

பரலோகத்திலிருக்கிற நம்முடைய குடியிருப்பானது நாம் என்ன நம்புகிறோம் என்பதையும், எப்படி வாழுகிறோம் என்று எல்லாவற்றையும் மாற்றுகிறது. இயேசுவின் வருகைக்கு ஒரு நாள் நெருக்கத்தில் நாம் இருக்கிறோம் என்கிற உணர்வு, நம்முடைய நம்பிக்கையை உறுதியாக்குகிறது. 

பொன்னிலும் சிறந்தது

அமெரிக்காவின் பெரிய தங்கவேட்டை நடந்த நாட்களில், கலிபோர்னியாவில் தங்க வேட்டையில் ஈடுபட்ட எட்வர்ட் ஜாக்சன், மே 20ம் தேதி 1849இல் தன்னுடைய டைரி குறிப்பில், வியாதினாலும் மரணத்தினாலும் குறிக்கப்பட்ட அந்த கொடுமையான வேகன் பயணத்தைக் குறித்து புலம்பியிருக்கிறார். “என்னுடைய எலும்புகளை இங்கு விட்டுச்செல்லாதீர்கள்; முடிந்தால் அவற்றை வீட்டிற்கு கொண்டுசெல்லுங்கள்” என்று அவர் எழுதியிருக்கிறார். தங்கவேட்டையில் ஈடுபட்ட ஜாண் வாக்கர் என்னும் வேறொரு நபர், “நீங்கள் கற்பனை செய்யும் அளவிற்கு இங்கு பொக்கி~ங்கள் இருக்கிறது... ஆனால் யாரும் இங்கே வரவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியிருக்கிறார். 

வாக்கர் பின்நாட்களில் வீடு திரும்பி, விவசாயத்தில் ஈடுபட்டு, கடைசியில் மாநில தேர்தலில் வெற்றிபெற்றார். வாக்கரின் பழைய கடிதங்களை அவருடைய வீட்டார், “ஆன்டிக்ஸ் ரோட்ஷோ” என்னும் அமெரிக்காவின் தொலைகாட்சி நிகழ்ச்சிக்கு கொண்டுபோனபோது, அவைகள் அங்கு பல மில்லியன் டாலர்களுக்கு விலைபோனது. அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர், “அவர் தங்க வேட்டையைக் காட்டிலும் விலைமதிக்கமுடியாத கடிதங்களை அங்கிருந்து எடுத்துள்ளார்” என்று கூறினாராம். 

வாக்கரும் ஜாக்சனும் அந்த தங்க வேட்டையிலிருந்து ஞானத்தைக் கற்றுக்கொண்டு வீடு திரும்பி, நடைமுறை வாழ்க்கை வாழ கற்றுக்கொண்டனர். “ஞானத்தைக் கண்டடைகிற மனு~ன்... பாக்கியவான்... அது தன்னை அடைந்தவர்களுக்கு ஜீவவிருட்சம்” (நீதிமொழிகள் 3:13,18) என்று ஞானத்தைக் குறித்த சாலமோனின் வார்த்தைகளை பார்க்கிறோம். “அதின் வர்த்தகம் வெள்ளி வர்த்தகத்திலும், அதின் ஆதாயம் பசும்பொன்னிலும் உத்தமமானது” (வச. 14) என்று பூமியின் அனைத்து காரியங்களைக் காட்டிலும் ஞானம் விலையேறப்பெற்றதாய் முன்வைக்கப்படுகிறது (வச. 15).

“அதின் வலதுகையில் தீர்க்காயுசும், ... அதின் பாதைகளெல்லாம் சமாதானம்” (வச. 16-17). கண்ணைப் பறிக்கும் காரியங்களை விட்டுவிட்டு ஞானத்தை தெரிந்துகொள்வதே நம்முடைய சவால். இதுவே தேவனுடைய ஆசீர்வாதமான பாதை. 

சிங்கம், ஆடு, இரட்சகர்!

நியூயார்க் பொது நூலகத்தின் வாயிலை கவனிப்பதுபோன்று இரண்டு கல்லால் ஆன சிங்கங்கள் நிறுத்தப்பட்டிருக்கும். மார்பிள் கற்களால் செதுக்கப்பட்ட அந்த சிங்கங்கள், 1911ஆம் ஆண்டு நூலகம் நிறுவப்பட்டதிலிருந்து அங்கிருக்கிறது. அந்த நூலகத்தின் ஸ்தாபகர்களை கனப்படுத்தும் விதத்தில், துவக்கத்தில் அந்த சிங்கங்களுக்கு லியோ லெனாக்ஸ் என்றும் லியோ அஸ்டர் என்று பெயரிடப்பட்டது. ஆனால் நியூயார்க்கின் கடினமான ஒரு காலகட்டத்தில், அதின் மேயர் ப்யோரெல்லா லகார்டியா, அந்த சிங்கங்களுக்கு வலிமை மற்றும் பொறுமை என்று பெயர் மாற்றினார். நியூயார்க் மக்களுக்கு அவை இரண்டு அந்த சவாலான தருணத்தில் அவசியம் என்று கருதினார். அந்த சிங்கங்கள் இன்னும் வலிமை மற்றும் பொறுமை என்றே அழைக்கப்படுகிறது. 

வேதாகமம் ஜீவனுள்ள, வலிமையான, கடினமான தருணங்களில் உற்சாகத்தை கொடுக்கும் சிங்கத்தைப் பற்றி நமக்கு அறிவிக்கிறது. அந்த சிங்கம் பல நாமங்களால் அறியப்பட்டுள்ளது. தன்னுடைய பரலோக தரிசனத்தில் அப்போஸ்தலர் யோவான், தேவனுடைய நியாயத்தீர்ப்பையும் மீட்பையும் கொண்டுள்ள யாராலும் திறக்ககூடாத ஒரு முத்திரை புஸ்தகத்தைப் பார்க்கிறார். அப்போது, “நீ அழவேண்டாம்; இதோ, யூதா கோத்திரத்துச் சிங்கமும் தாவீதின் வேருமானவர் புஸ்தகத்தைத் திறக்கவும் அதின் ஏழு முத்திரைகளையும் உடைக்கவும் ஜெயங்கொண்டிருக்கிறார்” என்று யோவானுக்கு சொல்லுகிறார் (வெளி. 5:5). 

அடுத்த வசனத்தில் யோவான் புதிதான ஒன்றை காண்கிறார்: “இதோ, அடிக்கப்பட்ட வண்ணமாயிருக்கிற ஒரு ஆட்டுக்குட்டி சிங்காசனத்திற்கு... மத்தியிலே நிற்கக்கண்டேன்” (வச. 6). சிங்கமும் ஆட்டுக்குட்டியும் ஒரே நபர்: இயேசு. அவரே வெற்றிசிறக்கும் ராஜா. அவரே “உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி!” (யோவான் 1:29). அவருடைய பெலத்தினாலும் சிலுவையினாலும் நாம் இரக்கத்தையும் மன்னிப்பையும் பெற்றுக்கொள்கிறோம். எனவே அவர் நித்தியமானவர் என்னும் மகிழ்ச்சியிலும் ஆச்சரியத்திலும் நாம் வாழலாம்.

சிறந்த ஞானமும் ஆயிரம் கண்களும்

“ஆத்துமாவின் நிலையை அனைத்து கோணங்களிலும் அலசுவதற்கு, ஒரு மேய்ப்பனுக்கு தேவனுடைய ஞானமும் ஆயிரம் கண்களும் தேவை” என்று திருச்சபை தலைவரான ஜாண் கிறிஸாஸ்டம் எழுதுகிறார். ஆவிக்குரிய ரீதியில் மற்றவர்களை நன்கு பராமரித்தல் எப்படி என்பது குறித்த விவாதத்தில் கிறிஸாஸ்டம் இப்படியாக பேசுகிறார். ஒருவரைக் கட்டாயப்படுத்தி குணமாக்குவது என்பது சாத்தியமில்லை என்பதினால், அவர்களை கரிசணையோடும் இரக்கத்தோடும் அவர்களின் இருதயத்தை அணுகுவதை அவர் வலியுறுத்துகிறார். 

அதற்காக வலியே இல்லாமல் அதை மேற்கொள்ள முடியும் என்று அர்த்தமல்ல என்றும் கிறிஸாஸ்டம் எச்சரிக்கிறார். ஏனெனில் “ஆழ்ந்த அறுவை சிகிச்சை செய்யப்படவேண்டிய ஒரு நபரிடம் நீங்கள் மென்மையாய் நடந்துகொண்டு, அவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்யத் தவறினால் அவர்களை புற்றுநோயிலிருந்து காப்பாற்ற முடியாது. ஆனால் விரக்தியிலிருக்கும் அவரது உடம்பில் நீங்கள் இரக்கமின்றி கீறல் ஏற்படுத்தி சிகிச்சை செய்தால்... அவர் எல்லாவற்றையும் மறந்து, உச்சகட்ட மகிழ்ச்சியை அனுபவிப்பார்.”

கள்ள போதகர்களால் துன்மார்க்கத்திற்குள் தள்ளப்பட்டவர்களின் நடத்தையை விவரிக்கும் யூதாவும் அதே பிரச்சனையை சந்திக்கிறார் (1:12-13, 18-19). அந்த வகையான மரண அச்சுறுத்தல்களின்போதும், யூதா கோபப்படாமல் கையாளுவதற்கே அறிவுறுத்துகிறார்.

அதற்கு பதிலாக, விசுவாசிகள் அச்சுறுத்தல்களை சந்திக்க தேவனுடைய அன்பில் இன்னும் அதிகமாய் வேரூன்றவேண்டும் என்று போதிக்கிறார் (வச. 20-21). நாம் தேவனுடைய அன்பில் ஆழமாய் வேரூன்றும்போதே, சரியான நேரம், தாழ்மை மற்றும் இரக்கத்தோடு மற்றவர்களுக்கு உதவிசெய்யும் ஞானத்தை தேவனிடத்திலிருந்து பெறக்கூடும் (வச. 22-23). இந்த பாதையே, மற்றவர்களுக்கு சுகத்தை அடையச்செய்து, தேவனுடைய அன்பின் மகத்துவத்தில் இளைப்பாறச் செய்கிறது. 

நாம் தேவனை நம்புகிறோம்

வினிதாவுக்கு குழந்தை பிறக்க இன்னும் ஆறு வாரங்கள் இருந்தபோது, கர்ப்பகாலத்தில் ஏற்படக்கூடிய கொலஸ்டாஸிஸ் என்ற கல்லீரல் நோய் பிரச்சினை அவருக்கு இருந்தது கண்டறியப்பட்டது. வினிதாவை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனர். அவளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, இன்னும் 24 மணி நேரத்தில் குழந்தை வெளியே வந்துவிடும் என்று மருத்துவர்கள் அறிவித்தனர். அதேவேளையில், மருத்துவமனையின் மறுபக்கத்தில் கோவிட்-19 சிகிச்சைக்கு தேவையான வென்டிலேட்டர் மற்றும் தேவையான உபகரணங்களை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தனர். அதனால் வினிதாவை பராமரிக்கமுடியாமல் வீட்டுக்கு திருப்பி அனுப்பிவிட்டனர். அவள் தேவன் மீதும் அவருடைய திட்டங்கள் மீதும் நம்பிக்கை வைக்க முடிவு செய்தாள். சில நாட்களுக்குப் பிறகு ஓர் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுத்தாள்.

வேதம் நம்மில் வேரூன்றும்போது நாம் சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் வழிகளை அது முற்றிலும் மாற்றுகிறது. எரேமியாவின் நாட்களில், மக்கள் மனிதர்களையும் விக்கிரகங்களையும் நம்பி வாழ்ந்தனர். தீர்க்கதரிசி இருவேறு மனிதர்களைப் பற்றிய வித்தியாசத்தை எடுத்துரைக்கிறார். “மனுஷன் மேல் நம்பிக்கை வைத்து, மாம்சமானதைத் தன் புயபலமாக்கிக் கொண்டு, கர்த்தரை விட்டு விலகுகிற இருதயமுள்ள மனுஷன் சபிக்கப்பட்டவன்” என்று கர்த்தர் சொல்லுகிறார் (எரேமியா 17:5). “கர்த்தர்மேல் நம்பிக்கைவைத்து, கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான். அவன் தண்ணீரண்டையிலே நாட்டப்பட்டதும், கால்வாய் ஓரமாகத்தன் வேர்களை விடுகிறதும், உஷ்ணம் வருகிறதைக் காணாமல் இலை பச்சையாயிருக்கிறதும்... மரத்தைப் போலிருப்பான்” (வச. 7-8). 

நம்முடைய பிரச்சனைகளுக்கான தீர்வுக்காய் நாம் அவரை விசுவாசத்தில் சார்ந்திருக்க அழைக்கப்பட்டிருக்கிறோம். அவர் நமக்குத் தேவையான பெலத்தைத் தருகிறார்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

ஓர் தனிக் குரல்

முதலாம் உலகப் போரை முடிவுக்குக் கொண்டுவந்த பாரிஸ் அமைதி மாநாட்டிற்குப் பிறகு, பிரெஞ்சு மார்ஷல் ஃபெர்டினாண்ட் ஃபோச் கசப்புடன், “இது சமாதானம் அல்ல. இது இருபது வருட தற்காலிக போர் நிறுத்தம்” என்றார். “அனைத்து போர்களையும் முடிவுக்குக் கொண்டுவரும் போரானது” பயங்கர மோதலாக இருக்கும் என்ற பிரபலமான கருத்துக்கு ஃபோச்சின் கருத்து முரண்பட்டது. இருபது ஆண்டுகள் இரண்டு மாதங்களுக்குப் பிறகு, இரண்டாம் உலகப் போர் வெடித்தது. ஃபோச் சொன்னது சரிதான்.

நீண்ட காலத்திற்கு முன்பு, தேவனுடைய உண்மையான தீர்க்கதரிசியான மிகாயா, இஸ்ரேலுக்கு கடுமையான இராணுவ முடிவுகளைத் தொடர்ந்து தீர்க்கதரிசனமாய் உரைத்தார் (2 நாளாகமம் 18:7). இதற்கு நேர்மாறாக, ஆகாபின் நானூறு பொய் தீர்க்கதரிசிகள் அவர்களுக்கு யுத்தத்தில் வெற்றியை முன்னறிவித்தனர். ஆகாபின் அரண்மனையைச் சேர்நத ஒருவன் மிகாயாவிடம், “இதோ, தீர்க்கதரிசிகளின் வார்த்தைகள் ஏகவாக்காய் ராஜாவுக்கு நன்மையாயிருக்கிறது; உம்முடைய வார்த்தையும் அவர்களில் ஒருவர் வார்த்தையைப்போல இருக்கும்படிக்கு நன்மையாகச் சொல்லும் என்றான்” (வச. 12). 

அதற்கு மிகாயா, “என் தேவன் சொல்வதையே சொல்வேன் என்று”..(வச. 13), “இஸ்ரவேலர் எல்லாரும் மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போல மலைகளில் சிதறப்பட்டதைக் கண்டேன்” (வச. 16) என்று சொல்லுகிறான். மிகாயா சொன்னது சரிதான். அராமியர்கள் ஆகாபை யுத்தத்தில் கொன்றனர் (வச. 33-34; 1 இராஜாக்கள் 22:35-36).

மிகாயாவைப் போலவே, இயேசுவைப் பின்பற்றும் நாமும் பிரபலமான மக்களின் நம்பிக்கைகளுக்கு முரணாகவே போதிக்கிறோம். இயேசு, “என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்” (யோவான் 14:6) என்று சொல்லுகிறார். இந்த செய்தி முரண்பாடாய் தெரிவதினால் அநேகர் அதை விரும்புவதில்லை. ஆனாலும் கிறிஸ்து ஓர்ஆறுதலான செய்தியைக் கொண்டு வருகிறார். தம்மிடம் வருகிற யாவரையும் அவர் வரவேற்கிறார்.

 

ஆவிக்குரிய சுவடை விட்டுச்செல்லுதல்

பதின்ம வயதினர்களாக, எங்களுடைய அம்மா இயேசுவை ஏற்றுக்கொள்ள தீர்மானித்த முடிவை எங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால் அவருக்குள் நாங்கள் கண்ட மாற்றங்களை எங்களால் மறுக்க முடியவில்லை. அவரிடத்தில் அதிக மனநிறைவும் மகிழ்ச்சியும் காணப்பட்டது. திருச்சபையிலும் உண்மையாய் ஊழியம்செய்ய ஆரம்பித்தார். வேதத்தைக் கற்றுக்கொள்ளும் ஆர்வம் அவருக்கு அதிகம் இருந்ததினால் வேதாகமக் கல்லூரியில் படித்து பட்டம் பெற்றார். சில வருடங்களுக்குப் பிறகு, என் சகோதரி கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு அவருக்கு ஊழியம் செய்ய ஆரம்பித்தாள். அதன் பிறகு சில வருடங்கள் கழித்து நானும் இயேசுவை ஏற்றுக்கொண்டு அவருக்கு ஊழியம் செய்ய ஆரம்பித்தேன். பல ஆண்டுகளுக்குப் பிறகு, என் தந்தையும் எங்களுடன் சேர்ந்தார். கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளும் என் அம்மாவின் தீர்மானம் எங்களுடைய குடும்பத்தின் ஒவ்வொரு அங்கத்தினரையும் படிப்படியாய் பாதித்தது. 

அப்போஸ்தலனாகிய பவுல் தீமோத்தேயுவுக்கு தனது கடைசி நிருபத்தை எழுதி, இயேசுவின் மீதான விசுவாசத்தில் நிலைத்திருக்க ஊக்குவித்தபோது, தீமோத்தேயுவின் ஆவிக்குரிய பாரம்பரியத்தைக் குறித்து குறிப்பிடுகிறார். “அந்த விசுவாசம் முந்தி உன் பாட்டியாகிய லோவிசாளுக்குள்ளும் உன் தாயாகிய ஐனிக்கேயாளுக்குள்ளும் நிலைத்திருந்தது; அது உனக்குள்ளும் நிலைத்திருக்கிறதென்று நிச்சயித்திருக்கிறேன்” (2 தீமோத்தேயு 1:5). 

அம்மாக்கள் மற்றும் பாட்டிகளே, உங்கள் முடிவுகள் தலைமுறைகளை பாதிக்கலாம்.

தீமோத்தேயுவின் அம்மாவும் பாட்டியும் எவ்வளவு அழகாக அவருடைய விசுவாசத்தை வளர்க்க உதவினார்கள். அதனால் அவர் தேவனுடைய அழைப்பிற்கு பாத்திரவானாய் மாறினார். 

இந்த அன்னையர் தினத்திலும் இதற்கு பின்னரும், இயேசுவைப் பின்பற்ற முடிவு செய்த தாய்மார்களை கௌரவிப்போம்.

நம் அன்புக்குரியவர்களுக்காக ஆவிக்குரிய சுவடை விட்டுச் செல்வோம்.

 

கிறிஸ்துவோடு நிலைத்திருத்தல்

”தி பெல்லோஷிப் ஆப் த ரிங்” என்ற திரைப்படத்தில் கன்டாஃல்ப் த கிரே, சாருமான் தி வைட்டை எதிர்கொண்டபோது, அவர் மத்திய பூமியை பாதுகாக்க வேண்டிய செயலை செய்ய தவறிவிட்டார் என்பது தெளிவாகிறது. மேலும், சாருமன் சௌரோனுடன் கூட்டணி வைத்தான்! டேல்கியனின் உன்னதமான படைப்பை அடிப்படையாகக் கொண்ட அத்திரைப்படத்தின் இந்தக் காட்சியில், இரண்டு முன்னாள் நண்பர்கள், நன்மைக்கும் தீமைக்குமான போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். சாருமான் மட்டும் தன்னுடைய வழியில் உறுதியாய் நின்று தனக்குத் தெரிந்ததைச் செய்திருந்தால் நன்றாயிருந்திருக்கும். 

சவுல் ராஜாவுக்கும் தன்னுடைய வழியில் உறுதியாய் நிற்பதில் சிக்கல் இருந்தது. அவருடைய ஆட்சியில் ஓர் கட்டத்தில் “அஞ்சனம் பார்க்கிறவர்களையும் குறிசொல்லுகிறவர்களையும் தேசத்தில் இராதபடிக்குத் துரத்தி விட்டான்” (1 சாமுவேல் 28:3). இது ஓர் நல்ல நடவடிக்கை. ஏனென்றால் மாயவித்தை காரியங்களில் ஈடுபடுவது கர்த்தருக்கு அருவருப்பானது (உபாகமம் 18:9-12) என்று ஏற்கனவே தேவன் அறிவித்திருந்தார். ஆனால் அவர் சில தோல்விகளை சந்தித்த பின்பு, பெலிஸ்தியர்களோடு யுத்தம்செய்தால் தேவன் தனக்கு வெற்றியைத் தருவாரா என்ற சவுலின் விண்ணப்பத்திற்கு தேவன் பதிலளிக்காதபோது, “அஞ்சனம்பார்க்கிற ஒரு ஸ்திரீயைத் தேடுங்கள்; நான் அவளிடத்தில் போய் விசாரிப்பேன் என்றான்” (1 சாமுவேல் 28:7). சவுல் செய்யவேண்டியதை தவிர்த்து, முற்றிலும் தலைகீழானதை செய்ய விழைகிறான். 

அதிலிருந்து ஆயிரம் ஆண்டுகள் கழித்து, இயேசு தம் சீஷர்களைப் பார்த்து, “உள்ளதை உள்ளதென்றும், இல்லதை இல்லதென்றும் சொல்லுங்கள்; இதற்கு மிஞ்சினது தீமையினால் உண்டாயிருக்கும்” (மத்தேயு 5:37) என்று சொல்லுகிறார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிவதற்கு நாம் நம்மை அர்ப்பணித்திருந்தால், நம்முடைய சத்தியங்களைக் கடைப்பிடிப்பதும் உண்மையாக இருப்பதும் இன்றியமையாதது. தேவன் நமக்கு கிருபையளிப்பதால் அவற்றை செய்வதில் நாம் உறுதியோடு செயல்படுவோம்.