“கிறிஸ்மஸ் முடிந்து விட்டது என்பதை என்னால் நம்பமுடியவில்லை” என்று என்னுடைய மகள் மனமுடைந்து கூறினாள். 

அவள் எப்படி உணருகிறாள் என்பதை என்னால் புரிந்துகொள்ளமுடிகிறது: கிறிஸ்மஸ்க்கு பின்பு மந்தமான ஒரு உணர்வு ஏற்படுகிறது. பரிசுகள் எல்லாம் பிரித்துப் பார்க்கப்படும். வண்ண விளக்குகள் அனைத்தும் அணைக்கப்படும். விடுமுறையற்ற ஜனவரி மாதம் வந்துவிடும். பல எதிர்பார்ப்புகளுடன் வரும் அடுத்த கிறிஸ்மஸ் வெகு தூரத்தில் இருக்கிறது. 

சில வருடங்களுக்கு முன்பு, கிறிஸ்மஸ் ஏற்பாடுகளை நாங்கள் செய்துகொண்டிருந்தபோது, “காலண்டர் என்ன தேதி வேண்டுமானாலும் காட்டட்டும். ஆனால் நாங்கள் எப்போதுமே கிறிஸ்மஸ்க்கு ஒரு நாள் நெருக்கத்தில் இருக்கிறோம்” என்பதை உணர்ந்தேன். அதை நான் அடிக்கடி சொல்ல பழகிக்கொண்டேன். 

காலத்திற்கு உட்பட்ட நம்முடைய சரீரப் பிரகாரமான கொண்டாட்டத்திற்கு பின் இருக்கும் ஆவிக்குரிய யதார்த்தம் மிகவும் முக்கியமானது: இயேசு இந்த உலகத்திற்கு கொண்டு வந்த இரட்சிப்பு மற்றும் அவர் மீண்டும் வருவார் என்னும் நம்பிக்கை. இயேசுவின் இரண்டாம் வருகையை எதிர்பார்த்து காத்திருங்கள் என்று வேதம் அடிக்கடி உற்சாகப்படுத்துகிறது. பிலிப்பியர் 3:15-21ல் சொல்லுவது எனக்கு பிடித்தமானது. பூமிக்கடுத்தவைகளைச் சிந்திக்கிற (வச. 19) உலகத்தின் வாழ்க்கைமுறையும் இயேசுவின் வருகையை எதிர்நோக்கியிருக்கும் நம்பிக்கையில் வடிவமைக்கப்பட்ட வாழ்க்கைமுறையும் முரண்படுத்தப்படுகிறது: “நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது, அங்கேயிருந்து கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்து என்னும் இரட்சகர் வர எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்” (வச. 20).

பரலோகத்திலிருக்கிற நம்முடைய குடியிருப்பானது நாம் என்ன நம்புகிறோம் என்பதையும், எப்படி வாழுகிறோம் என்று எல்லாவற்றையும் மாற்றுகிறது. இயேசுவின் வருகைக்கு ஒரு நாள் நெருக்கத்தில் நாம் இருக்கிறோம் என்கிற உணர்வு, நம்முடைய நம்பிக்கையை உறுதியாக்குகிறது.