Archives: ஆகஸ்ட் 2020

வேலையாள் செவிகொடுக்கின்றான்

கம்பியில்லா ரேடியோ தொடர்பு சாதனம் இயங்கும் நிலையில்  இருந்திருந்தால், அவர்கள் டைட்டானிக் கப்பல் மூழ்கிக் கொண்டிருக்கின்றது என்பதை அறிந்திருப்பார்கள். மற்றொரு கப்பலில் இருந்த ரேடியோ இயக்குபவர் சிரில் இவான்ஸ் என்பவர், டைட்டானிக் கப்பலின் ரேடியோ இயக்குபவர் ஜாக் பிலிப்ஸ் என்பவருக்கு, அவர்களின் கப்பல் ஒரு பனிப்பாறையை நோக்கி சென்று கொண்டிருப்பதாக, ஒரு செய்தியை அனுப்பினார். ஆனால் அந்த ரேடியோ இயக்குபவர், பிரயாணிகளின் செய்திகளை அனுப்புவதில் தீவிரமாக இருந்ததால், கோபத்தில் அமைதியாக இருக்குமாறு செய்தி அனுப்பினார். இதனால் வருத்தமடைந்த அந்த ரேடியோ இயக்குபவர் தன்னுடைய ரேடியோ சாதனத்தை மூடி விட்டு தூங்கச் சென்று விட்டார். 10 நிமிடங்கள் கழித்து டைட்டானிக் கப்பல் பனிப்பாறையில் மோதியது. அவர்களின் துயரக் குரல் பதிலளிக்கப் படாமல்போய் விட்டது, அதனை யாருமே கவனிக்கவில்லை, கேட்கவில்லை.

 இஸ்ரவேலின் ஆசாரியர்கள் பரிதானத்துக்கு அடிமைப் பட்டு, தங்களின் ஆவிக்குரிய வாழ்வை இழந்ததையும், தேசம் ஆபத்தை நோக்கி இழுக்கப்படுவதையும் குறித்து 1 சாமுவேல் புத்தகத்தில் வாசிக்கின்றோம். “அந்நாட்களில் கர்த்தருடைய வசனம் அபூர்வமாயிருந்தது; பிரத்தியட்சமான தரிசனம் இருந்ததில்லை” (1 சாமு. 3:1) என்பதாகக் காண்கின்றோம். ஆனாலும் தேவன் அவருடைய ஜனங்களைக் கைவிடவில்லை. அவர், கர்த்தருடைய ஆசாரியனின் வீட்டில் வளர்க்கப்பட்ட ,சாமுவேல் என்ற ஒரு சிறுவனிடம் பேசுகின்றார். சாமுவேல் என்ற பெயருக்கு “தேவன் செவிகொடுக்கின்றார்” என்று அர்த்தம். அவனுடைய தாயாரின் ஜெபத்திற்கு தேவன் பதிலளித்தார் என்பதின் நினைவாக அப்பெயரிடப் பட்டான். தேவனுக்குச் செவிகொடுக்க சாமுவேல் கற்றுக் கொள்ள வேண்டும்.

“சொல்லும்; அடியேன் கேட்கிறேன்” (வ.10). இங்கு வேலையாள் கேட்கிறான். வேதாகமத்தின் மூலம் வெளிப்படுத்தப்படும் காரியங்களுக்கு செவிகொடுக்கவும் கீழ்ப்படியவும் நாம் தெரிந்து கொள்வோம். நம்முடைய வாழ்வை அவருக்கு ஒப்புக் கொடுப்போம். தங்களின் “ரேடியோக்களை” இயங்கும் நிலையில் வைத்திருக்கும்- தாழ்மையுள்ள அடிமையின் ரூபத்தை நாம் தரித்துக் கொள்வோம்.

தற்பரிசோதனை

சமீபத்தில், இரண்டாம் உலகப் போரின் போது, என்னுடைய   தந்தை என்னுடைய தாயாருக்கு அனுப்பி வைத்த கடிதங்களைப்  படித்தேன். அவர் வட ஆப்ரிக்காவில் இருந்தார், என் தாயார் அமெரிக்காவில் இருந்தார். என்னுடைய தந்தை, அமெரிக்க இராணுவத்தில் இளம் நிலை அதிகாரியாக இருந்தார், இராணுவ வீரர்களின் கடிதங்களை தணிக்கை செய்யும் பொறுப்பைப்    பெற்றிருந்தார். மிக முக்கியமான செய்திகள் எதிரிகளைச் சேராதபடி காப்பதற்காக இதனைச் செய்தார். அக்கடிதங்களைப் பார்ப்பதற்கு சற்று வேடிக்கையாகவே இருந்தது.  தன் மனைவிக்கு எழுதிய அக்கடிதத்தின் வெளிப்பக்கத்தில், “இரண்டாம் நிலை அதிகாரி ஜாண் பிரானன் (என்னுடைய தந்தையின் பெயர்) அவர்களால் தணிக்கை செய்யப்பட்டது” என்று முத்திரையிடப்பட்டிருந்தது. தன்னுடைய  சொந்த கடிதத்திலேயே சில வரிகளை அடித்திருந்தார்!

சுய தணிக்கை என்பது, நம் அனைவருக்குமே நன்மையானது. வேதாகமத்தில் அநேக இடங்களில் அதை எழுதியவர்கள், நம்மிடத்தில் சரியில்லாதவை எவை, தேவனுக்கு மகிமையைத் தராதவை எவை என நம்மை நாமே சோதிப்பதின் முக்கியத்துவத்தைக் குறிப்பிடுகின்றனர். சங்கீதக்காரன், “தேவனே, என்னை ஆராய்ந்து என் இருதயத்தை அறிந்து கொள்ளும் ……..வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பாரும்” (சங்.139:23-24) என்கின்றான். எரேமியா அதனை இவ்வாறு கூறுகின்றார். “நாம் நம்முடைய வழிகளைச் சோதித்து, ஆராய்ந்து, கர்த்தரிடத்தில் திரும்பக் கடவோம்” (புல.3:40) என்கின்றார். திரு விருந்தில் பங்கேற்கும் முன்பு, “எந்த மனுஷனும் தன்னைத்தானே சோதித்து அறிந்து கொள்ள வேண்டும்” (1 கொரி.11:28) என்று பவுல் நம்முடைய இருதயத்தைக் குறித்துக் கூறுகின்றார்.

தேவனுக்குப் பிரியமில்லாத எந்தச் செயலையும், எந்த மனப்பான்மையையும் விட்டு திரும்புவதற்கு பரிசுத்த ஆவியானவர் உதவிசெய்வார். எனவே நாம் இந்த உலகத்தினுள் நுழைவதற்கு முன்பாக, நாம் நின்று ஆவியானவரின் உதவியோடு சுய சோதனை செய்வோம், அதன் மூலம் நாம் அவரோடு ஐக்கியமாகும்படி, “தேவனிடம் திரும்புவோம்”.

மிகச் சிறந்த அலை

“அலையை” ஏற்படுத்த மக்கள் விரும்புவர்.  உலகெங்கும் நடைபெறும் விளையாட்டு நிகழ்ச்சிகளிலும், இசைக் கச்சேரிகளிலும் ஒரு சில மக்கள் எழுந்து நின்று, தங்கள் கைகளை உயர்த்தி அசைக்கின்றனர், இதுவே ஆரம்பம், சில நொடிகளில், அவர்களின் அருகில் அமர்ந்திருப்பவர்களும் எழுந்து அதனையே செய்கின்றனர். இலக்கு என்னவெனில், ஓர் அசைவு தொடர்ச்சியாகப் பரவி, முழு அரங்கையும் அசையச் செய்வதேயாகும். அது அரங்கத்தின் கடைசி முனையை எட்டியதும், அதனைத் தொடங்கியவர் சிரித்து ஆர்ப்பரிக்கின்றார், தொடர்ந்து அசைவுகளை போய்க் கொண்டிருக்கச் செய்கின்றார்.

முதல் முதலாக பதிவு செய்யப்பட்ட அலை நிகழ்வு, 1981 ஆம் ஆண்டு, அமெரிக்காவில் நடைபெற்ற ஒரு விளையாட்டு நிகழ்வில் ஏற்படுத்தப் பட்டது. இத்தகைய அலையில் பங்கு பெற நான் விரும்புகின்றேன், ஏனெனில் அது வேடிக்கையாக இருக்கும். இந்த அலையைச் செய்யும் போது, நமக்கு ஏற்படுகின்ற மகிழ்ச்சியும், ஒன்றிணைவதும் சுவிசேஷத்தைப் பிரதிபலிக்கின்றது- இயேசுவில் நாம் பெறுகின்ற இரட்சிப்பு என்கின்ற நற்செய்தி, எங்கும் உள்ள விசுவாசிகள் அனைவரையும் அவரைப் போற்றுவதிலும் நம்பிக்கையிலும் ஒன்றிணைக்கின்றது. இந்த “முழுமையான அலை” இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு எருசலேமில் துவங்கியது. கொலோசே சபை அங்கத்தினர்களுக்கு பவுல் எழுதும் போது, இதனைக் குறித்து, “அந்தச் சுவிசேஷம் உலகமெங்கும் பரம்பிப் பலன் தருகிறது போல, உங்களிடத்திலும் வந்து, நீங்கள் அதைக் கேட்டு, தேவக் கிருபையைச் சத்தியத்தின்படி அறிந்து கொண்ட நாள் முதல், அது உங்களுக்குள்ளும் பலன் தருகிறதாயிருக்கிறது” (கொலோ.1:6) என்கின்றார். இந்த நற்செய்தி தருகின்ற பலன் என்னவெனின், பரலோகத்தில் உங்களுக்காக (நமக்காக) வைத்திருக்கிற நம்பிக்கையினிமித்தம் பெற்றுள்ள, கிறிஸ்து இயேசுவின் மேலுள்ள விசுவாசமும் அன்பும் ஆகும் (வ.3-4).

இயேசுவின் விசுவாசிகளாகிய நாம், சரித்திரத்திலேயே மிகப் பெரிய அலையில் பங்கெடுக்கின்றோம். அதனைத் தொடர்ந்து செய்வோம்! நாம் அனைவரும் அதனை நிறைவேற்றி முடிக்கும் போது, அதைத் துவக்கியவரின் முகத்தில் ஏற்படும் சிரிப்பைக் காண்போம்.

தேவன் நம்மை விடுவிப்பவர்

சைக்கிள், ஓட்டம், நீச்சல் ஆகிய மூன்று நிகழ்வுகளை உள்ளடக்கிய  (டிரையத்லான்) போட்டியில் கலந்து கொள்பவர்களில், பயந்து விடும் நீச்சல் வீரர்களை காப்பாற்றும்படி, மீட்பவர் ஒருவர் கடற்பரப்பில் தன்னுடைய படகில் தயாராக இருந்தாள். “படகின் மையப்பகுதியை பற்றிப் பிடிக்காதீர்கள்!” என்று நீச்சல் வீரர்களிடம் கத்தினாள், ஏனெனில் அத்தகைய ஒரு காரியம் அவளுடைய படகையும் கவிழ்த்திவிடும் என்பதை அவள் அறிந்திருந்தாள். ஆனால், அந்த சோர்வடைந்த வீரர்களை முன்பக்கதிற்கு, அல்லது துடுப்பின் அருகில் வருமாறு வழிகாட்டினாள். அங்கே அவர்கள் ஒரு வளையத்தைப் பற்றிக் கொள்ள முடியும், அவர்களை மீட்பவரும் உதவுவதற்கு வசதியாக இருக்கும்.

எப்பொழுதெல்லாம் வாழ்வு அல்லது மக்கள் நம்மை கீழே இழுத்துவிடும் அச்சுறுத்தல் கொடுக்கும் போது, இயேசுவின் விசுவாசிகளாகிய நமக்கு மீட்பர் ஒருவர் இருக்கின்றார் என்பதை நினைவில் கொள்ளுவோம். “கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் நானே என் ஆடுகளை விசாரித்து, அவைகளைத் தேடிப்பார்ப்பேன்………………… அவைகள் சிதறுண்டுபோன எல்லா இடங்களிலுமிருந்து அவைகளைத் தப்பி வரப்பண்ணுவேன்” (எசே.34:11-12) என்கின்றார்.

சிறைப் பட்டுப் போன தேவனுடைய ஜனங்களுக்கு எசேக்கியேல் தீர்க்கதரிசி தரும் உறுதிப்பாடு இதுவே. அவர்களுடைய தலைவர்கள் அவர்களைத் தள்ளி, ஏமாற்றினார்கள், அவர்களுடைய வாழ்க்கையை கொள்ளையிட்டு, மேய்ப்பர்கள் (தேவனுடைய) மந்தையை மேய்க்காமல், “தங்களையே மேய்த்தார்கள்” (வ.8). அதன் விளைவாக,  “பூமியின் மீதெங்கும் என் ஆடுகள் சிதறித்திரிகிறது; விசாரிக்கிறவனுமில்லை, தேடுகிறவனுமில்லை” என்று தன்னுடைய ஜனங்களைக் குறித்து தேவன் கூறுகின்றார் (வ.6).

“என் ஆடுகளை நான் மேய்த்து, அவைகளை நான் மடக்குவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்” (வ.15), அவருடைய இந்த வாக்கு இன்றைக்கும் நமக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

நாம் செய்ய வேண்டியது என்ன? சர்வ வல்ல தேவனையும், அவருடைய வாக்குத்தத்தத்தையும் உறுதியாகப் பற்றிக்கொள்ள வேண்டும். “நான் நானே என் ஆடுகளை விசாரித்து, அவைகளைத் தேடிப்பார்ப்பேன்” (வ.11) என்பதாக அவர் கூறுகின்றார். இதுவே ஊறுதியாகப் பற்றிக் கொள்ளத் தகுந்த மீட்பளிக்கும் வாக்கு.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

கிறிஸ்துவின் தன்மையை பிரதிபலித்தல்

மேஜையில் இரண்டு முகங்கள் தனித்து நின்றன. ஒன்று கசப்பான கோபத்தால் சுருங்கி, மற்றொன்று உணர்ச்சி வலியில் முறுக்கி இருந்தது. பழைய நண்பர்களின் சந்திப்பு இப்போது கோபத்தின் கூச்சலானது, ஒருத்தி தன் நம்பிக்கைகளுக்காக மற்றொருத்தியைத் திட்டினாள். முதல் பெண் உணவகத்தை விட்டு வெளியேறும் வரை தகராறு தொடர்ந்தது, இது மற்றவளை அவமானத்தால் நிலைகுலைத்தது.

கருத்து வேறுபாட்டைச் சகித்துக்கொள்ள முடியாத காலத்தில் நாம் உண்மையில் வாழ்கிறோமா? இரண்டு பேர் ஒத்துப்போக முடியாது என்பதால் ஏதோவொன்று தீயது என்று அர்த்தம் இல்லை. கடுமையான அல்லது அடிபணியாத பேச்சு ஒருபோதும் ஏற்புடையதல்ல, மேலும் வலுவான நம்பிக்கைகள் கண்ணியத்தையும் இரக்கத்தையும் மிஞ்சக்கூடாது.

ரோமர்12, “ஒருவரையொருவர் கனம்பண்ணுகிறது” மற்றும் பிறருடன் “ஏகசிந்தையுள்ள வர்களாயிருப்பது” (வ.10, 16) எப்படி என்பதற்கு ஒரு சிறந்த வழிகாட்டியாக உள்ளது. தம்மை விசுவாசிக்கிறவர்களுக்கான அடையாளமான பண்பு, நாம் ஒருவர்மீது ஒருவர் கொண்டுள்ள அன்பே என்று இயேசு சுட்டிக்காட்டினார் (யோவான் 13:35). பெருமையும் கோபமும் நம்மை எளிதில் தடம் புரளச் செய்யும் அதே வேளையில், நாம் பிறரிடம் காட்ட வேண்டும் என்று தேவன் விரும்பும் அன்பிற்கு நேர் மாறாகவும் இருக்கிறது.

நம் உணர்ச்சிகள் மீதான கட்டுப்பாட்டை இழக்கையில், பிறரைக் குறை கூறாமல் இருப்பது ஒரு சவால்தான், ஆனால் “கூடுமானால் உங்களாலானமட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள்” (ரோமர் 12:18) என்ற வார்த்தைகள் கிறிஸ்துவின் தன்மையைப் பிரதிபலிக்கும் ஒரு வாழ்க்கையை வாழ வேண்டிய பொறுப்பை வேறு யார் மீதும் சுமத்த முடியாது என்பதைக் காட்டுகிறது. அது அவருடைய நாமம் தரிக்கப்பட்ட நம் ஒவ்வொருவர் மீதும் உள்ளது. 

 

நான் ஓட்டுநர் மட்டுமே

“அப்பா, நான் என் தோழியுடன் இரவு தங்கலாமா?” பயிற்சி முடிந்து காரில் ஏறிக் கொண்டே என் மகள் கேட்டாள். “கண்ணே, உனக்கே பதில் தெரியும். நான் ஓட்டுநர் மட்டும்தான். முடிவை நான் அறியேன், அம்மாவிடம் கேட்கலாம்” என்றேன்.

“நான் ஓட்டுநர் மட்டுமே” என்றது எங்கள் வீட்டில் நகைச்சுவையாகிவிட்டது. தினமும், நான் எங்கே இருக்க வேண்டும்? எப்போது, யாரை எங்கு அழைத்துச் செல்லவேண்டும்? என்று ஒழுங்கமைக்கும் எனது மனைவியிடம் கேட்கிறேன். மூன்று யுவதிகளுடன், ஒரு “வாகன ஓட்டுநராக” இரவில் வாகனம் ஓடுவதை இரண்டாவது வேலையாகவே உணர்கிறேன். பெரும்பாலும், நான் அறியாதவை எனக்குத் தெரியாமலேயே இருக்கும். எனவே, எல்லாவற்றையும் தீர்மானிக்கும் எசமானியுடன் நான் சரிபார்க்க வேண்டும்.

மத்தேயு 8 இல், இயேசு ஒருவரைச் சந்தித்தார், அவர் கட்டளைகளைப் பின்பற்றுதல் மற்றும் அளித்தல் குறித்து அறிந்திருந்தார். ஒரு ரோமானிய நூற்றுக்கு அதிபதியாக, அவனுக்கு கீழ்ப்பட்டவர்களுக்குக் கட்டளையிட அதிகாரம் இருப்பதைப் போலவே, இயேசுவுக்குக் குணமாக்கும் அதிகாரம் உண்டு என்பதை அவன் புரிந்துகொண்டான். “ஒரு வார்த்தை மாத்திரம் சொல்லும், அப்பொழுது என் வேலைக்காரன் சொஸ்தமாவான். நான் அதிகாரத்துக்குக் கீழ்ப்பட்டிருந்தும், எனக்குக் கீழ்ப்படிகிற சேவகருமுண்டு;” (வ. 8-9). கிறிஸ்து அவனுடைய விசுவாசத்தைப் பாராட்டினார் (வவ. 10,13), அவருடைய அதிகாரம் எவ்வாறு செயல்பாட்டில் இருக்கிறது என்பதை அவன் புரிந்துகொண்டதைக் கண்டு ஆச்சரியப்பட்டார்.

அப்படியானால் நாம் எப்படி இருக்கிறோம்? இயேசுவிடமிருந்து நமது அன்றாடப் பணிகளைப் பெற்று, அவர்மீதே நம்பிக்கை கொள்வது எவ்வாறு இருக்கும்? ஏனென்றால், நாம் “வெறும் ஓட்டுநர்” என்று நினைத்தாலும், ஒவ்வொரு பணிக்கும் ராஜ்ய அர்த்தமும் நோக்கமும் உள்ளது. 

 

கிறிஸ்துவில் முடிப்பவர்களாக இருத்தல்

கலாவதி தனது கொள்ளுப்பேரனான ராஜேஷுக்காக பின்னிக்கொண்டிருந்த கம்பளிச்சட்டையை முடிப்பதற்குள் இறந்துவிட்டார். அதை நிறைவுசெய்ய மற்றொரு ஆர்வமுள்ள பின்னல்காரரின் கைகளில் ஒப்படைக்கப்பட்டது. “நிறைவு செய்பவர்கள்” எனப்பட்ட தன்னார்வ கைவினைஞர்களையும், தங்கள் பணிகளை முடிப்பதற்கு முன்னரே இந்த வாழ்க்கையை விட்டு வெளியேறினவர்களின் அன்புக்குரியவர்களையும் இணைக்கும் ஒரு நிறுவனத்திற்கு நன்றி. “நிறைவு செய்பவர்கள்” துக்கப்படுபவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் ஒரு பணியை முடிக்க தங்கள் நேரத்தையும் திறமையையும் அன்புடன் செலவிடுகின்றனர்.

தேவன் எலியாவின் பணிக்காகவும்கூட ஒரு “நிறைவு செய்பவரை” நியமித்தார். இஸ்ரவேலர்கள் தேவனின் உடன்படிக்கையை நிராகரித்து தீர்க்கதரிசிகளைக் கொல்வதைக் கண்டு அந்தத் தீர்க்கதரிசி தனிமையாகவும் மனச்சோர்வுடனும் இருந்தார். அதற்குப் பதிலளிக்கும் விதமாக, தேவன் எலியாவிடம் “எலிசாவை உன் ஸ்தானத்திலே தீர்க்கதரிசியாக அபிஷேகம்பண்ணு” (1 இராஜாக்கள் 19:16) என அறிவுறுத்தினார். தேவனுடைய சத்தியத்தைப் பிரகடனப்படுத்துவதற்கான பணியானது எலியாவின் மரணத்திற்குப் பின்னரும் தொடரும் என்பதை இது உறுதி செய்தது.

எலியாவுக்குப் பின் தேவனின் தீர்க்கதரிசியாகத் தொடரும்படி தேவன் அவரை அழைத்தார் என்று எலிசாவுக்கு காண்பிக்க, எலியா “அவன்மேல் தன் சால்வையைப் போட்டான்” (வ. 19). தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட அதிகாரப்பூர்வமான தேவசெய்தியை அறிவிப்பவா் ஒருவரின் அதிகாரத்தைக் குறிக்க ஒரு தீர்க்கதரிசியின் சால்வை பயன்படுத்தப்பட்டதால் (பார்க்க 2 இராஜாக்கள் 2:8), இந்த செயல் எலிசாவின் தீர்க்கதரிசிக்கான அழைப்பைத் தெளிவாக்கியது. இயேசுவை விசுவாசிக்கிறவர்களாக, தேவனின் அன்பைப் பிறருடன் பகிரவும், “[அவருடைய] புண்ணியங்களை அறிவிக்கும்படிக்கு” (1 பேதுரு 2:9) அழைக்கப்பட்டிருக்கிறோம். இப்பணியானது நம் ஆயுளை விட அதிகமாக இருப்பினும், அவர் இப்பணியை ஆதரிப்பார் என்றும், அவரை அறிவிக்கும் உன்னதமான வேலைக்கு பிற “நிறைவு செய்பவர்களை” தொடர்ந்து அழைப்பார் என்றும் நாம் நிச்சயம் நம்பலாம்.