Archives: ஜனவரி 2020

போகிறது, போகிறது, போயேவிட்டது

நகைச் சுவை மிக்க ஓவியர் பாங்க்ஸி, மற்றுமொரு குறும்புதனத்தை வெளிப்படுத்தினார். ஒரு சிறுபெண் பலூன் ஒன்றினை வைத்திருப்பது போன்று, அவர் வரைந்த படம், லண்டனிலுள்ள சோத்பை என்ற, ஏலம் விடப்படும் இடத்தில், ஒரு மில்லியன் பவுண்டுகளுக்கு ஏலம் போனது. ஏலம் விடுபவர் “விடப்பட்டது” என்று சத்தமாகக் கூறிய மறு வினாடியில், ஓர் எச்சரிக்கை மணி அடித்தது, சட்டத்தில் இணைக்கப் பட்டிருந்த அ ந்த படம், துண்டுகளாக வெட்டும் கருவியின் வழியே நழுவி கீழே இறங்கியது. ஏலம் எடுக்க வந்திருந்தவர்களின் மத்தியில் இருந்த பாங்க்ஸி, தன்னுடைய மிகச் சிறந்த படம் அழிகிறதே என, “போகிறது, போகிறது, போயேவிட்டது” என்று கத்தினார்.

பாங்க்ஸி தன்னுடைய குறும்புதனத்தை செல்வந்தர்களிடம் காண்பித்து மகிழ்ந்தார். அதற்காக அவர் வருத்தப்படவுமில்லை. செல்வத்துக்குள்ளும் அநேக குறும்புத்தனங்கள் நிறைந்துள்ளன. தேவன், “இல்லாமற்போகும் பொருள்மேல் உன் கண்களைப் பறக்கவிடுவானேன்? அது கழுகைப்போல சிறகுகளைத் தனக்கு உண்டுபண்ணிக்கொண்டு, ஆகாயமார்க்கமாய்ப் பறந்துபோம்” (வ.4-5) என்கின்றார்.

உலகப் பொருட்கள் பணத்தைப் போன்று அழிந்து போகக் கூடியன. அவற்றைச் சம்பாதிக்க, நாம் கடினமாக உழைக்க வேண்டியுள்ளது. ஆனாலும் அவற்றை இழக்க அநேக வழிகள் உள்ளன. தவறான முதலீடுகள், பணமதிப்பு குறைகிறது, நாம் செலவழித்ததைக்  கட்டவேண்டியுள்ளது, திருடர்கள் திருடுகின்றார்கள், நெருப்பும், வெள்ளமும் அழித்து விடுகின்றது, இவற்றையெல்லாம் தாண்டி பணத்தைச் சேமித்து வைத்திருந்தால், தொடர்ந்து செலவுகள் வந்து கொண்டேயிருக்கிறது.. கண் மூடி விழிப்பதற்குள் உன்னுடைய வாழ்வு போய்க்கொண்டேயிருக்கிறது, இன்னும் போய் கொண்டேயிருக்கிறது, போயே விட்டது. 

என்ன செய்வது? தேவன் மேலும் சில வார்த்தைகளைச் சொல்கின்றார். “நீ நாடோறும் கர்த்தரைப் பற்றும் பயத்தோடிரு, நிச்சயமாகவே முடிவு உண்டு; உன் நம்பிக்கை வீண் போகாது” (வ.17-18). உன் வாழ்வை இயேசுவின் மேல் கட்டு, அவரே உன்னை என்றென்றும் காக்க வல்லவர்.

பெலவீனரைப் பெலப்படுத்தல்

1967 ல், அமெரிக்க பாடகரான, டோட்டி ராம்போ எழுதிய “அவர், நான் செய்யும்  தவறுகளையெல்லாம் தாண்டி, என்னுடைய தேவைகளைப் பார்க்கிறார்” (He Looked Beyond My Fault and Saw My Need) என்ற பாடலை நான் சிறுவனாக இருந்த போது கேட்டிருக்கின்றேன். ஆனால், அப்பொழுது, நான் அந்தப் பாடலின் ஆழ்ந்த அர்த்தத்தைப் புரிந்து கொள்ளவில்லை. பின்னர் தான் உண்மையைத் தெரிந்து கொண்டேன். டோட்டியின் சகோதரன் எடி, அநேகத் தவறுகளைச் செய்தபடியால், தன்னை யாரும் நேசிக்க மாட்டார்கள் என அவன் கருதினான், ஆனால் தேவனுடைய நிபந்தனையற்ற அன்பு அவனுக்குண்டு. தேவன் அவனுடைய பெலவீனங்களை அறிவார், ஆனாலும் அவனை நேசிக்கிறார் என்பதை டோட்டி, இப்பாடலின் மூலம், அவனிடம் உறுதியாகக் கூறினாள். 

இஸ்ரவேலரும், யூதா ஜனங்களும் பெலவீனத்தை உணர்ந்த அநேக நேரங்களில் தேவனுடைய நிபந்தனையற்ற அன்பு அவர்களுக்குக் காட்டப்பட்டதைக் காண்கின்றோம். தேவன், ஏசாயா போன்ற தீர்க்கதரிசிகளை, நிலையற்ற அந்த ஜனங்களிடம் அனுப்பி, செய்திகளைக் கொடுக்கின்றார். ஏசாயா 35 ல், தீர்க்கதரிசி, தேவன் அவர்களை மீட்டுக்கொள்வார் என்ற நம்பிக்கையைக் கொடுக்கிறார். அவர்கள் நம்பிக்கையைத் தழுவிக்கொள்ளும் பொழுது, உற்சாகத்தைப் பெற்றுக்கொள்வார்கள் என்கின்றார். “தளர்ந்த கைகளைத் திடப்படுத்தி, தள்ளாடுகிற முழங்கால்களைப் பலப்படுத்துங்கள்” (வ.3) என்கின்றார். உற்சாகத்தைப் பெற்றுக்கொண்ட தேவனுடைய ஜனங்கள், மற்றவர்களையும் திடப்படுத்தும்படி அழைக்கின்றார், இதைத் தான் ஏசாயா, வசனம் 4 ல், ”மனம் பதறுகிறவர்களைப் பார்த்து, நீங்கள் பயப்படாதிருங்கள்; திடன் கொள்ளுங்கள்” என்று தைரியப்படுத்துங்கள்” என்று கூறுகிறார்.

நீயும் பெலவீனமாக இருக்கிறாயா? உன்னுடைய பரலோகத்தந்தையிடம் பேசு. அவர் பெலவீனரைத் தமது வேத வார்த்தையாலும், தமது வல்லமையுள்ள பிரசன்னத்தாலும் பெலப்படுத்துகின்றார். அப்படியானால் நீயும் மற்றவர்களை உற்சாகப்படுத்த முடியும்.

முழுமையான ஜீவன்

1918 ஆம் ஆண்டு, முதலாம் உலகப் போர் முடிவுறும் நிலையில், புகைப்படநிபுணர் எரிக் என்ஸ்ட்ராம், தான் எடுத்துக்கொண்ட அனைத்துப் படங்களையும் கோர்வையில் அடுக்கிக் கொண்டிருந்தார். அந்நேரத்தில் ஒரு முழுமையை வெளிப்படுத்திய ஒரு படத்தை, அவர் அதனோடு சேர்க்க விரும்பினார், ஆனால், அநேகர் அப்படத்தில் வெறுமையை உணர்ந்தனர். அவர் மிகவும் நேசித்த அப்படத்தில், தாடியுடன் ஒரு முதியவர், தலைகவிழ்ந்தவராய் ஒரு மேசையின் அருகில் அமர்ந்திருக்கின்றார், அவருடைய கரங்களைக் குவித்து ஜெபித்துக் கொண்டிருக்கிறார். அ ந்த மேசையில் அவரின் எதிரே ஒரு புத்தகமும், மூக்கு கண்ணாடியும், ஒரு கோப்பை கஞ்சும், ஒரு துண்டு ரொட்டியும், ஒரு கத்தியும் உள்ளன. இதை விட ஒன்றும் கூடுதலாகவும் இல்லை, குறைவாகவும் இல்லை.

சிலர் இப்படம் பற்றாக்குறையைக் காட்டுகின்றது என்றனர். ஆனால், என்ஸ்ட்ராமின் கருத்து முற்றிலும் எதிராக இருந்தது. இங்கே வாழ்வு நிரம்பியுள்ளது, ஒருவர் நன்றியோடு வாழ்கின்றார், நாம் வாழும் சூழ்நிலைகளைத் தாண்டி, நீயும் நானும் அனுபவிக்க வேண்டிய நன்றியைக் காட்டுகின்றார், என்றார். யோவான் 10 ஆம் அதிகாரத்தில் இயேசு ஒரு நற்செய்தியைக் கூறுகின்றார். “வாழ்வு …….பரிபூரணப்படவும் வந்தேன்” (வ.10) என்கின்றார் .பரிபூரண வாழ்வு என்பதை, அநேகப் பொருட்களால் நிறைந்த வாழ்வு என்று கருதுவோமாயின், நாம் இந்த நற்செய்தியை இழிவு படுத்துகின்றோம். இயேசு குறிப்பிடும் பரிபூரணம் என்பது இவ்வுலகத்தின் செல்வம் அல்லது நிலபுலங்களால் வருவதில்லை. மாறாக, “ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற” (வ.11), நம்மைப் பாதுகாக்கிற, நம் அனுதினத் தேவைகளை பூர்த்திசெய்கிற, அந்த நல்மேய்ப்பனுக்கு நம் இருதயமும், மனதும், ஆன்மாவும்  நம் முழு பெலத்தோடும், நன்றியால் நிறைந்து  வழிய வேண்டும். இதுவே வாழ்வின் பரிபூரணம், தேவனோடுள்ள உறவில் மகிழ்ந்து வாழ்வதே பரிபூரணம். இது நம் ஒவ்வொருவருக்கும் கிடைக்கக்கூடியது.

ஒரு பழைய மண் பானை

நான் பல ஆண்டுகளாக அநேக பழைய பானைகளைச் சேகரித்துள்ளேன். அதில், ஆபிராகாம் வாழ்ந்த காலத்தில் உள்ள ஒரு பகுதியிலிருந்து தோண்டி எடுக்கப்பட்ட ஒரு பானை, எனக்கு மிகவும் பிடித்தமானது. எங்கள் வீட்டிலுள்ள பானைகளில் குறைந்தது ஒன்றாகிலும் என்னுடைய வயதைக் காட்டிலும் அதிகமானதாக இருக்கும்! அதில் பார்க்கக் கூடியதாக ஒன்றுமிராது, அவை கறை பிடித்ததும், கீரல் விழுந்ததும், உடைந்ததுமாக இருக்கும். அவைகளை நன்கு தேய்த்து எடுக்க வேண்டும். நானும் மண்ணினாலேயே உருவாக்கப்பட்டேன் என்பதை நினைத்துக் கொள்ளவே அவற்றை வைத்துள்ளேன். நான் உடையக் கூடியதும், பெலவீனமான பானையாக இருந்த போதும், எனக்குள் விலையேறப் பெற்ற செல்வமாகிய இயேசுவைச் சுமக்கிறேன். “இ ந்த பொக்கிஷத்தை (இயேசுவை) மண்பாண்டங்களில் பெற்றிருக்கிறோம்” 2 கொரி.4:7)

மேலும் பவுல், “நாங்கள் எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும் ஒடுங்கிப் போகிறதில்லை; கலக்கமடைந்தும் மன முறிவடைகிறதில்லை; துன்பப்படுத்தப்பட்டும் கைவிடப்படுகிறதில்லை; கீழே தள்ளப்பட்டும் மடிந்து போகிறதில்லை” (வ.8-9). என்கின்றார். நெருக்கப்படல், கலக்கமடைதல், துன்புறுத்தப்படல், கீழே தள்ளப்படல் ஆகிய இந்த அழுத்தங்களை அந்தப் பானை தாங்க வேண்டும். ஒடுங்குவதில்லை, மனமுறிவதில்லை, கைவிடப்படுவதில்லை, மடிந்து போவதில்லை என்பன, நமக்குள்ளேயிருக்கும் இயேசு  இவற்றிற்கெதிராக நம்மை பெலப்படுத்தும் விளைவுகளாகும்.

 “இயேசுவின் மரணத்தை எப்பொழுதும் எங்கள் சரீரத்தில் சுமந்து திரிகிறோம்” (வ.10) இது, இயேசு நமக்காக அனுதினமும் மரித்தார் என்ற பண்பைக் காட்டுகின்றது. நம்முடைய சுய முயற்சியை மனப்பூர்வமாக சாகடிக்க வேண்டும், நமக்குள்ளே வாசம் பண்ணுகின்றவரை முற்றிலும் போதுமானவராக நம்ப வேண்டும் என்கின்ற பண்பை நமதாக்கிக் கொள்ளவேண்டும்.

அப்படியானால், “கர்த்தராகிய இயேசுவினுடைய ஜீவனும் எங்கள் சரீரத்திலே விளங்கும்” (வ.!0). அதன் விளைவு என்னவெனின், ஒரு பழைய மண்பானையில், இயேசுவின் அழகு காணப்படும்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

கிறிஸ்துவில் ஐக்கிய பன்முகத்தன்மை

பேராசிரியர் டேனியல் போமன் ஜூனியர் தனது “சர்வீஸ் அன் தி ஸ்பெக்ட்ரம்” என்ற கட்டுரையில், ஓர் மனஇறுக்கம் கொண்ட நபராக தனது தேவாலயத்திற்கு எவ்வாறு சேவைசெய்வது என்பது குறித்த முடிவுகளை மேற்கொள்வதில் உள்ள சிரமத்தைப் பற்றி எழுதுகிறார். அவர் குறிப்பிடும்போது “இதுபோன்ற மனஇறுக்கம் கொண்ட மக்கள் ஒவ்வொரு முறையும் முன்னோக்கி செல்ல ஓர் புதிய பாதையை உருவாக்கவேண்டும். அவை ஓர் தனித்துவமான பாதையை அமைக்கிறது... மன, உணர்ச்சி மற்றும் உடல் ஆற்றல்... தனிமை/புத்துணர்வூட்டும் தருணங்கள்; உணர்வு உள்ளீடுகள் மற்றும் ஆறுதல் நிலை...அன்றைய நாள்பொழுது; நாம் நமது பெலனானவைகளுக்காக மதிக்கப்படுகிறோமா மற்றும் உணரப்பட்ட குறைபாடுகளுக்காக ஒதுக்கப்படாமல் நமது தேவைகளுக்கு இடமளிக்கப்படுகிறோமா இல்லையா என்று சிந்தித்தல்...; இன்னும் பற்பல காரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.” அதுபோன்ற தீர்மானங்கள் “மக்களின் நேரத்தையும் ஆற்றலையும் மாற்றியமைக்கும்போது, அவை மற்றவர்களையும் நம்மையும் மறுசீரமைக்க உதவும்” என்று போமன் எழுதுகிறார்.

1 கொரிந்தியர் 12இல் பவுல் விவரிக்கும் பரஸ்பர பார்வை ஓர் குணப்படுத்தும் தீர்வாக இருக்கும் என்று போமன் நம்புகிறார். அதில் 4-6 வசனங்களில், தேவன் தன் ஜனங்கள் ஒவ்வொருவருக்கும் வரங்களை “அவனவனுடைய பிரயோஜனத்திற்கென்று அளிக்கப்பட்டிருக்கிறது” (வச. 7) என்று குறிப்பிடுகிறார். ஒவ்வொருவரும் கிறிஸ்துவின் சரீரத்தில் இன்றியமையாத அவயங்கள் (வச. 22). திருச்சபை அனைவரையும் மாற்றமுடியாத ஒரே பாதையில் பயன்படுத்தாமல், அவரவருக்கு தேவன் கொடுத்த வரங்களின் அடிப்படையில் தேவனுடைய இராஜ்யத்திற்காய் அவற்றை நேர்த்தியாய் பிரயோகிக்க அனுமதிக்கலாம்.

இந்த வழியில், ஒவ்வொரு நபரும் செழிப்பையும் முழுமையையும் காண்பதோடு, கிறிஸ்துவின் சரீரத்தில் தங்கள் மதிப்புமிக்க இடத்தில் பாதுகாப்பாக இருக்க முடியும் (வச. 26). 

 

ஒன்றுபட்டு வாழ்வோம்

எனது அமெரிக்கத் தோழி கேரல், 2016 ஆம் ஆண்டு முதல் முறையாக இந்தியா வந்தாள். அவள் வருவதற்கு முன்னர், இதன் பல்வேறு கலாச்சாரங்கள், உணவு வகைகள் மற்றும் மொழிகள் பற்றிக் கேள்விப்பட்டிருந்தாள். இருப்பினும், அவள் பெங்களூருவில் ஒரு கருத்தரங்கில் கலந்துகொண்டபோது, இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் பின்னணிகளைக் கொண்ட மக்கள் ஒரு அன்பான சமூகத்தை உருவாக்குவதைக் கண்டு வியந்தாள். தேவன் எப்படி ஜனங்களை ஒன்றிணைத்தார் என்பதை கேரல் பார்த்தாள்.

ஒரு சமூகமாக ஒற்றுமையாக வாழ்வது என்றால் என்ன என்பதை ஆதி விசுவாசிகள் புரிந்துகொண்டனர். லூக்கா, "அவர்கள் அப்போஸ்தலருடைய உபதேசத்திலும், அந்நியோந்நியத்திலும், அப்பம் பிட்குதலிலும், ஜெபம்பண்ணுதலிலும் உறுதியாய்த் தரித்திருந்தார்கள்" (வ.42) என்றெழுதினார். அவர்கள் வெவ்வேறு ஊர்கள், நகரங்கள் மற்றும் பின்னணியிலிருந்து வந்தவர்கள், எனினும் அவர்கள் ஒன்றாக வாழ்ந்தார்கள். அவர்களின் சமூகத்தை அழகாக்கிய சில விஷயங்களில் ஒன்று அவர்களின் அன்றாட நடவடிக்கைகளாகும். அவர்கள் அப்போஸ்தலரிடமிருந்து கற்றுக்கொள்வதற்கும், ஒருவரோடொருவர் நேரத்தைச் செலவிடுவதற்கும், கர்த்தரின் பந்தியை அனுசரிப்பதற்கும், ஒன்றாக ஜெபிப்பதற்கும் தங்களை அர்ப்பணித்திருந்தனர் (வ.42). அவர்கள் தங்கள் உடைமைகளைப் பகிர்ந்துகொண்டு, "மகிழ்ச்சியோடும் கபடமில்லலாத இருதயத்தோடும் போஜனம்பண்ணி" எப்போதும் தேவனைத் துதித்தனர் (வ.44-46). இதன் விளைவாக, தேவன் ஒவ்வொரு நாளும் புதிய மக்களை அவர்களின் சமூகத்தில் சேர்த்தார் (வ.47).

இயேசுவின் ஆதி சீடர்கள், ஒரு சமூகத்தின் மாதிரியை நமக்கு வழங்குகிறார்கள். வறுமை, துன்புறுத்தல் மற்றும் மரணத்தின் மத்தியிலும் பகிர்ந்து கொள்வதன் மூலம் ஒரு சமூகம் என்றால் என்ன என்பதை அவர்கள் வெளிப்படுத்தினர். சபை ஆராதனைகள் அல்லது ஐக்கிய கூட்டங்களின் போது மட்டுமல்ல, நாம் ஏக கருத்துடையவர்களாய் இருக்கும்போது மட்டுமல்ல, எல்லா நேரங்களிலும் கிறிஸ்துவின் மூலம் ஒன்றுபடுவதற்கு நாமும் அழைக்கப்படுகிறோம். ஏனென்றால், கிறிஸ்துவை மையமாகக் கொண்ட நமது ஒற்றுமையை நாம் உலகிற்கு சாட்சியிடுகையில், தேவன் நம் அன்பின் சமூகத்தில் புதியவர்களைக் கொண்டுவருவார். 

 

தி இண்டியாமேன்

1950 மற்றும் 60 களில், சர்வதேச பேருந்து பாதை, 'தி ஹிப்பி டிரெயில்' ஐரோப்பாவை ஆசியாவின் முக்கிய தளங்களுடன் இணைத்தது. "பேடி" என்ற புனைபெயர் கொண்ட ஓய்வு பெற்ற ஆங்கிலேய ராணுவ வீரர் ஒருவர், இந்த வழித்தடத்தில் பேருந்து இயக்குவதன் மூலம் அடிக்கடி இந்தியாவிற்கு வரும் பயண வாய்ப்புகளைப் பயன்படுத்த முடிவு செய்தார். ‘தி இண்டியாமேன்’ என்று அழைக்கப்படும் பேருந்து லண்டனிலிருந்து கல்கத்தாவுக்கு வந்து மீண்டும் லண்டனுக்குச் சென்றது. பயணத்தின் தொடக்கத்தில், பயணிகள் ஆர்வத்துடன் பேருந்தில் ஏறினர், ஆனால் 60 நாட்களின் முடிவில் அவர்கள் இறுகிய கழுத்துப்பட்டை மற்றும் மூட்டுவலியுடன் இறங்கினர். முற்றிலும் சோர்ந்துபோனதால், அடுத்த பேருந்தில் வீடு திரும்புவதற்கு அவர்கள் தயாராகவே இருந்தனர்.

எலியா ஒரு உற்சாகமான தீர்க்கதரிசி. அவரது தீர்க்கதரிசன பயணத்தின் தொடக்கத்தில், அவர் மிகவும் உத்வேகத்துடன் இருந்தார். அவர் எந்த நிலையிலும் தேவனுக்குக் கீழ்ப்படிந்தார் மேலும் தீய ராஜாவான ஆகாப் மற்றும் அவனது ராணி யேசபேலை எதிர்க்கத் தயங்கவில்லை. இருப்பினும், சில காலம் கழித்து, எலியாவால் முன்செல்ல முடியவில்லை. எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல யேசபேல் தனது தீர்க்கதரிசிகளைக் கொன்றதற்காக அவரது உயிரைப் பறிக்க வந்தாள் (வ.2). உணர்ச்சி ரீதியாகவும் உடல் ரீதியாகவும் சோர்வடைந்த அவர், "போதும் கர்த்தாவே, என் ஆத்துமாவை எடுத்துக்கொள்ளும்" என்று ஜெபித்தார் (வ.4). அவர் ஒரு மரத்தடியில் களைப்புடனும் சோர்வுடனும் தூங்கியபோது, அவரை ஊக்கப்படுத்தவும் உணவளிக்கவும் தேவன் ஒரு தூதனை அனுப்பினார் (வ.5-7). மீண்டும் ஒருமுறை பலப்படுத்தப்பட்ட எலியா பல நாட்கள் ஓரேபுக்கு நடந்தார் (வ.8). எலியாவும், ‘தி இண்டியாமேன்’ பயணிகளும் அடைந்த சோர்வு உங்களுக்குப் புரிந்திருக்கலாம். ஏமாற்றம், தோல்வி, இழப்பு மற்றும் துக்கம் என்ற திருப்பங்கள் மூலம், நாம் இளைப்படைந்து, சோர்வடைகிறோம். ஆனால் விரக்தியின் ஆழ்ந்த தருணங்களில், நாம் தேவனுக்கு மறைவாயிருக்கவில்லை என்பதை ஒருபோதும் மறந்துவிடக்கூடாது. அவர் நம் தேவைகளை அறிந்திருக்கிறார், புரிந்துகொள்கிறார், அவருடைய உதவி வெகு தொலைவில் இல்லை.