Archives: நவம்பர் 2019

கவனமாக செய்யப்பட்டது

நியுயார்க்கில், கோஷன் என்ற இடத்திலுள்ள, ஆலன் கிலெஸ்டோஃப் என்ற பாலாடைக் கட்டி(சீஸ்) உற்பத்தி செய்யும் விவசாயி, பாலாடைக் கட்டிகளை, அதன் தன்மையும், மணமும் மாறாமல் நீண்ட நாட்களுக்கு வைத்திருக்க, அவர் கையாளும் முறையை யு டியுப் காணொளி காட்சியில் விளக்கினார். அவற்றை சந்தைக்கு அனுப்புவதற்கு முன்பு, அவை பூமிக்கு அடியிலுள்ள குகையில் ஆறு முதல் பன்னிரண்டு மாதங்கள் வரை அடுக்கி வைக்கப்படும். அங்குள்ள ஈரப்பதமான சூழலில், அவை கவனமாக பதப்படுத்தப்படும். “’நாங்கள் அவற்றிற்கு சரியான சுற்றுச் சூழலைக் கொடுத்து, அதனுடைய முழு தன்மையையும் பெற்றுக்கொள்ள, உதவுகின்றோம்” என்று கிலெஸ்டோஃப் விளக்கினார்.

பாலாடைக் கட்டி அதன் முழு தன்மையையும் பெற்றுக்கொள்ள கிலெஸ்டோஃப் கொண்டுள்ள பேராவலைப் போன்று, நம்முடைய தேவனும் தம்முடைய பிள்ளைகள் உண்மையான ஆற்றலைப் பெற்றவர்களாக, முதிர்ச்சியடைந்து, கனிகளைத் தருபவர்களாக உருவாக ஆவல் கொண்டுள்ளார். இப்படிப்பட்டவர்களை உருவாக்குவதற்கு, தேவன் சிலரை அப்போஸ்தலர்களாகவும், சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும், சிலரைச் சுவிசேஷகராகவும், சிலரை மேய்ப்பராகவும், போதகராகவும் தெரிந்து கொண்டார் (எபே. 4:11) இந்த வரங்களைப் பெற்ற மக்கள், ஒவ்வொரு விசுவாசியும் வளர்ச்சியடையவும், சுவிசேஷப் பணியைச் செய்யவும் ஊக்குவிக்கின்றார்கள் (வச. 12). இதன் இலக்கு என்னவெனின்” தலையாகிய கிறிஸ்துவுக்குள் நாம் எல்லாவற்றிலேயும் வளருகிறவர்களாயிருக்கும்படி” (வச. 15), அப்படிச் செய்தார்.

தேவன் நம்மை முதிர்ந்தவர்ளாக்கும்படி உருவாக்கம் படி, நம்மை அவரிடம் முழுமையாக ஒப்புக்கொடுப்போமாகில், பரிசுத்த ஆவியானவர் நம்மில் கிரியை செய்து ஆவிக்குரிய வளர்ச்சியைத் தருகின்றார். நம்மை வழிநடத்தும்படி, நம் வாழ்வில், அவர் காட்டும் மக்களின் வழி நடத்துதலை நாம் பின்பற்றினால், நாம் அவருக்குப் பணிசெய்ய போகும் இடங்களில் அது நமக்கு பயன் தருவதாக இருக்கும்.

அபாயகரமான பொருட்கள்

அபாயச் சங்கு ஒலி, என் காதுகளை பிளக்கும் அளவுக்கு அதிகரித்துக் கொண்டேயிருந்த போது, அவசர கால வண்டி ஒன்று வேகமாக, என்னுடைய காரை முந்திக் கொண்டு சென்றது. அதன் பிரகாசமான ஒளி, என்னுடைய காரின் முன் பக்க கண்ணாடி வழியே வந்த போது, அந்த வாகனத்தின் பக்கங்களில் எழுதியிருந்த ”அபாயகரமான பொருட்கள்” என்ற வாசகம் ஒளிர்ந்து, என் கண்களுக்குத் தெரிந்தது. அந்த வாகனம், ஒரு அறிவியல் ஆய்வகத்திற்கு அவசர வேலைக்காக சென்றது. அங்கு, 400 காலன் கந்தக அமிலம் சேமிப்பு கிடங்கில் கசிவு ஏற்பட்டிருந்ததால், அப்பொருளை அகற்றச் சென்றது என்பதை பின்னர் தெரிந்து கொண்டேன். கந்தக அமிலம் தொடுகின்ற யாவற்றையும் அரித்து விடுவதால், அதனை உடனே அகற்ற வேண்டும்.

இந்த புதிய கதையை நான் கேள்விப்பட்ட போது, எனக்குள்ளாக ஒரு எண்ணம் தோன்றியது. என்னுடைய வாயிலிருந்து வெளிவரும் ஒவ்வொரு கடுமையான வார்த்தைகளையும் ஒரு சங்கின் வழியாக ஒலித்தால் எப்படியிருக்கும் என்று கற்பனை செய்து பார்த்தேன். பரிதாபம், என் வீட்டைச் சுற்றிலும் தாங்கொணா சத்தமாயிருக்கும். 

ஏசாயா தீர்க்கன் இத்தகைய ஒரு விழிப்பை, தன்னுடைய பாவத்தைக் குறித்து உணர்கின்றார். அவர், தேவனுடைய மகிமையை ஒரு தரிசனத்தில் பார்த்த போது, தன்னுடைய தகுதியின்மையை உணர்கின்றார். அவர் தன்னைக் குறித்து,” அசுத்த உதடுகளுள்ள மனுஷன்” என்கின்றார், மேலும் அத்தகைய மனுஷர்களின் மத்தியில் வாசம் பண்ணுகின்றேன், (ஏசா. 6:5) எனவும் கூறுகின்றார். உடனே, ஒரு தேவ தூதன் அவனுடைய உதட்டை ஒரு நெருப்புத் தழலால் தொடுகின்றான். அத்தோடு, “இதோ, இது உன் உதடுகளைத் தொட்டதினால் உன் அக்கிரமம் நீங்கி, உன் பாவம் நிவிர்த்தியானது” என்றான் (வச. 7).

ஒவ்வொரு கணத்திலும், நாம் வார்த்தைகளை தேர்ந்தெடுத்து, பேச்சின் மூலமாகவோ அல்லது எழுத்தின் மூலமாகவோ வெளிப்படுத்துவதற்கு அநேக வாய்ப்புகள் உள்ளன. அவை “அபாயகரமான” வார்த்தைகளா? அல்லது தேவனுடைய மகிமை, நம்மை உணர்த்தி, அவருடைய கிருபை, நம்மை சுகப்படுத்தி, நாம் வெளிப்படுத்தும் எல்லா காரியங்களும் அவரை கனப்படுத்த அமைய, நாம், நம்மை ஒப்புக்கொடுப்போமா?

உண்மையான நன்றி

சேவியர், தன்னுடைய முதல் வேலைக்கான நேர்முகத்தேர்வுக்கு, தன்னை ஆயத்தம் செய்துகொண்டிருக்கும் போது. என்னுடைய கணவன் ஆலன், ஒரு கட்டு நன்றி அட்டைகளை அவனிடம் கொடுத்து, வேலையினிமித்தம் அவன் சந்திக்கும் எஜமானர்களுக்கு இந்த நன்றி அட்டையை அனுப்புமாறு சொன்னார். மேலும் தன்னுடைய பல ஆண்டுகள், மேலாளர் அநுபவத்தை பயன் படுத்தி, அவனுக்கு ஒரு மாதிரி நேர்முகத் தேர்வாளர் போன்று செயல் பட்டு, அவனிடம் பல கேள்விகளைக் கேட்டார். இந்த மாதிரி தேர்வு முடிந்ததும், ஆலன் தன்னுடைய தற்குறிப்பின் பல பிரதிகளை எடுத்துக் கொண்டு, புறப்பட்டான். ஆலன் அவனிடம், நன்றி அட்டையை நினைவு படுத்திய போது, “எனக்குத் தெரியும், ஒரு உண்மையான நன்றி குறிப்பு, என்னை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டும்” என்றான்.

அந்த மேலாளர் சேவியரை வேலைக்கு தேர்ந்தெடுத்த போது, அவர், தன்னுடைய பல ஆண்டு அநுபவத்தில், தான் பெற்ற, முதல், கையால் எழுதப்பட்ட நன்றி குறிப்புக்காக நன்றி தெரிவித்தார். நன்றி சொல்வது, என்றும் நிலைத்திருக்கும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். சங்கீதகாரனின் உள்ளம் நிறைந்த ஜெபங்களும், நன்றி ஆராதனைகளும் சங்கீதங்களின் புத்தகங்களில் பாதுகாக்கப்பட்டுள்ளன .நூற்றைம்பது சங்கீதங்களிலும், இந்த இரு வசனங்களுமே நன்றியைக் குறிக்கும் செய்தியை வெளிப்படுத்துகின்றது. ”கர்த்தாவே, என் முழு இருதயத்தோடும் உம்மைத் துதிப்பேன்; உம்முடைய அதிசயங்களையெல்லாம் விவரிப்பேன். உம்மில் மகிழ்ந்து களிகூருவேன்; உன்னதமானவரே, உமது நாமத்தைக் கீர்த்தனம் பண்ணுவேன்” (சங். 9:1-2)

தேவன் நமக்குச் செய்துள்ள அதிசயமான கிரியைகளுக்காக, நாம் நன்றியை வெளிப்படுத்துவோமாயின், அதற்கு முடிவே இருக்காது. ஆனாலும், ஜெபத்தின் மூலம் நம்முடைய உண்மையான நன்றியைத் தெரிவிக்கத் தொடங்குவோம். தேவன் நம் வாழ்வில் செய்துள்ள எல்லா நன்மைகளுக்காகவும், அவர் செய்வேன் என்று நமக்கு தந்துள்ள வாக்குத் தத்தங்களுக்காகவும், அவரைப் போற்றி, நன்றியோடு அவரை ஆராதிக்கும் வாழ்வை நாம் உருவாக்கிக் கொள்வோம்.

பேராசையுள்ள பிடி

சிறுவனும் கொட்டைகளும் என்ற, பழங்கால நீதிக் கதையில், ஒரு சிறு பையன் கொட்டைகள் வைக்கப்பட்டிருந்த ஜாடியினுள் கையைவிட்டு, கை நிறைய கொட்டைகளை அள்ளிக் கொண்டு, கையை வெளியே எடுக்க முயற்சிக்கிறான். கொட்டைகளோடு கையை வெளியே எடுக்க முடியவில்லை. தான் அள்ளிக் கொண்டதில், ஒன்றையும் விட தயாராக இல்லாத அச்சிறுவன் அழ ஆரம்பிக்கின்றான், சில கொட்டைகளை விட்டு விட்டு, கையை வெளியே எடுக்க ஆலோசனை கொடுக்கப்படுகிறது. பேராசை என்பது கடினமான எஜமானன்.

இந்தக் கதை தரும் நீதியை, பிரசங்கியின் ஞான ஆசிரியர் நமக்கும் கூறுகின்றார். அவர் சோம்பேறி, பேராசைக்காரன் ஆகிய இருவரின் ஒற்றுமை, வேற்றுமைகளைக் குறிப்பிடுகிறார். “மூடன் தன் கைகளைக் கட்டிக் கொண்டு, தன் சதையையே தின்கிறான். வருத்தத்தோடும், மனச்சஞ்சலத்தோடும் இரண்டு கைப்பிடியும் கொண்டிருப்பதைப் பார்க்கிலும், அமைச்சலோடு ஒரு கைப்பிடி நிறையக் கொண்டிருப்பதே நலம்.”(4:5-6). என்கின்றார். சோம்பேறி, தான் அழிந்து போகும் மட்டும் காரியங்களைத் தள்ளி போட்டுக் கொண்டேயிருப்பான், செல்வத்தைச் சேகரிப்பவனும், ஒரு நாள் , தன்னுடைய “பிரயாசம் யாவும் வீண், வருந்தத் தக்க வேலையை செய்தேனே “என்பான் (வச. 8)

பேராசையோடு பொருளைச் சேகரிக்க கஷ்டப்படுவதை விட்டு விட்டு, இருப்பதில் திருப்தியடைந்தவர்களாய் வாழ வேண்டும் என்பதே ஆசிரியரின் விருப்பம். நமக்கென்று தேவன் கொடுத்திருப்பது எப்பொழுதும் இருக்கும். இயேசு நமக்குச் சொல்வது,”மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக் கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன?’ (மாற். 8:36)

தொடர்புடைய தலைப்புகள்

> odb

கசக்கும் திருடப்பட்ட இனிப்பு

ஜெர்மானிய தேசத்தில் இருபது டன்களுக்கும் அதிகமான சாக்லேட் நிரப்பப்பட்ட டிரக்கின் குளிரூட்டப்பட்ட டிரெய்லரை திருடர்கள் திருடிச் சென்றனர். திருடப்பட்ட இனிப்பின் மதிப்பிடப்பட்ட தொகை 80,000 டாலர்கள் (சுமார் 66 லட்சம்). வழக்கத்திற்கு மாறாக யாராவது அதிகப்படியான சாக்லேட்டுகளை விநியோகிப்பது தெரிந்தால், உடனடியாக அதைப் புகாரளிக்க உள்ளுர் காவல்துறையினா் கேட்டுக்கொண்டனர். பெரிய அளவிலான இனிப்புகளைத் திருடியவர்கள் பிடிபட்டு வழக்குத் தொடரப்பட்டால் அவர்கள் கசப்பான மற்றும் திருப்தியற்ற விளைவுகளைச் சந்திக்க நேரிடும்!

நீதிமொழிகள் இந்தக் கொள்கையை உறுதிப்படுத்துகின்றன: “வஞ்சனையினால் வந்த போஜனம் மனுஷனுக்கு இன்பமாயிருக்கும்; பின்போ அவனுடைய வாய் பருக்கைக் கற்களால் நிரப்பப்படும்” (20:17). வஞ்சகமாகவோ அல்லது தவறாகவோ நாம் பெற்றுக்கொண்ட விஷயங்கள் முதலில் தற்காலிக இன்பத்தையளிக்கும் வகையில் இனிமையாகத் தோன்றலாம். ஆனால் சுவையானது இறுதியில் மாறிவிடும். மேலும் நம்முடைய தவறான செய்கை நம்மை சிக்கலில் கொண்டுபோய் விட்டுவிடும். குற்ற உணர்வு, பயம், பாவம் ஆகியவற்றின் கசப்பான விளைவுகள், நம் வாழ்க்கையையும் நற்பெயரையும் அழித்துவிடும். “பிள்ளையானாலும், அதின் செய்கை சுத்தமோ செம்மையோ என்பது, அதின் நடக்கையினால் விளங்கும்” (வச. 11). நம்முடைய வார்த்தை மற்றும் செயல்கள் நமது சுயநல ஆசைகளை வெளிப்படுத்தாமல், தூய்மையான தேவனுடையஇருதயத்தை பிரதிபலிக்கட்டும்.

நாம் சோதிக்கப்படும்போது, அவருக்கு உண்மையாய் செயல்படுவதற்கு தேவன் நம்மை பெலப்படுத்துபடிக்கு அவரிடத்தில் விண்ணப்பிக்கலாம். நம்முடைய தற்காலிக இன்பத்திற்கு நம்மை அடிபணியச் செய்யாமல், நிரந்திர மகிமைக்கு நம்மை நடத்திச்செல்லும்படிக்கு அவரிடத்தில் நாம் விண்ணப்பிக்கலாம். 

குடும்பம் மிகவும் முக்கியமானது

பக்கவாதத்தில் பாதிக்கப்பட்டிருந்த எங்கள் தொண்ணூறு வயது பாட்டியையும் பார்ப்பதற்காய், வெவ்வேறு மாகாணங்களில் வசித்த நான், எனது அக்கா மற்றும் தம்பியுடன் சேர்ந்து விமானத்தின் மூலமாய் வந்தோம். அவர் பக்கவாதத்தால் முடங்கி, பேசும் திறனை இழந்துவிட்டார். அவர் வலது கையை மட்டுமே பயன்படுத்தினார். நாங்கள் அவர்களது படுக்கையைச் சுற்றி நின்றபோது, அவர் அந்தக் கையை நீட்டி எங்களின் ஒவ்வொரு கைகளையும் எடுத்து, ஒன்றன்மேல் ஒன்றாக அவர்களது இதயத்தின்மீது வைத்து, அவற்றைத் தட்டிக்கொடுத்தார். இந்த வார்த்தைகளற்ற சைகையால், உடைபட்டு பிரிந்திருக்கும் எங்களது உடன்பிறப்பு உறவைக் குறித்து அவர் எங்களோடு தொடர்புகொண்டார். “குடும்பம் மிகவும் முக்கியமானது.”

திருச்சபை என்னும் தேவனுடைய குடும்பத்தில் நாமும் உடைக்கப்பட்டவர்களாய் பிரிந்து நிற்கக்கூடும். கசப்பு நம்மை பிரிந்திருக்கச் செய்யும். எபிரெயர் நிருபத்தின் ஆசிரியர், ஏசாவை அவனுடைய சகோதரனிடத்திலிருந்து பிரித்த கசப்பைக் குறித்து குறிப்பிடுகிறார் (எபிரெயர் 12:16). மேலும் சகோதர சகோதரிகளாகிய நாம் தேவனுடைய குடும்பத்தில் ஒருவரிலொருவர் ஐக்கியமாய் இருப்பதற்கு நமக்கு சவால் விடுகிறார். “யாவரோடும் சமாதானமாயிருக்கவும்... நாடுங்கள்” (வச. 14). அதாவது, தேவனுடைய குடும்பத்தில் அனைவரோடும் சமாதானமாய் வாழ்வதற்கு எவ்வளவு முடியுமோ அந்த அளவிற்கு பிரயாசப்படுவோம் என்று வலியுறுத்துகிறார். அத்தகைய ஒவ்வொரு முயற்சியும் ஒவ்வொருவரையும் ஊக்கப்படுத்துகிறது, அவ்வாறு வாழ்வதற்கு தூண்டுகிறது.

குடும்பம் மிகவும் முக்கியமானது. அவற்றில் நமது பூமிக்குரிய குடும்பங்கள் மற்றும் தேவனுடைய விசுவாசக் குடும்பங்களும் இணைந்ததே. நாம் அன்போடும் ஐக்கியத்தோடும் இருக்க தேவையான அனைத்து முயற்சிகளையும் ஏறெடுப்போமா? 

 

துதியின் பள்ளத்தாக்கு

கவிஞர் வில்லியம் கௌபர் தனது வாழ்நாளின் பெரும்பகுதியினை மன அழுத்தத்துடனே போராடினார். தற்கொலை முயற்சிக்குப் பிறகு, அவர் ஓர் புகலிடத்திற்கு அனுப்பப்பட்டார். ஆனால் ஓர் கிறிஸ்தவ மருத்துவரின் கனிவான கவனிப்பின் மூலம், இயேசுவின் மீது ஆழமான ஒரு விசுவாசத்தை நடைமுறைப்படுத்தினார். அதன் விளைவாக கௌபர் போதகருடனும் பாடலாசிரியர் ஜான் நியூட்டனுடன் பழக்கம் ஏற்பட்டு, தங்கள் திருச்சபையில் பாடப்பெறுகிற பாடல்களை எழுதுவதற்கு அவரை ஊக்குவித்தனர். அவர் எழுதிய பாடல்களில் ஒன்று, “தேவன் ஆச்சரியமான வழிகளில் கிரியை செய்கிறார்” என்ற பிரபல ஆங்கில பாடல். அதில், “பக்தியுள்ள புனிதர்களே, புதிய தைரியத்தை எடுங்கள். நீங்கள் அஞ்சி நடுங்கும் மேகங்கள் கருணையால் நிறைந்தவை, அவை உங்கள் சிரசில் ஆசீர்வாதத்தை பெய்யப்பண்ணும்” என்பதே.

கௌபரைப் போலவே, யூதாவின் ஜனங்களும் எதிர்பாராத விதமாக தேவனுடைய கிருபையை சாட்சியிட நேரிட்டது. எதிரி தேசம் அவர்களின்மீது படையெடுத்ததால், யோசபாத் ராஜா ஜெபம் செய்வதற்கு மக்களுக்கு அழைப்புவிடுக்கிறார். யூதாவின் இராணுவப்படை யுத்தத்திற்கு சென்றபோது, அதின் முன்வரிசையில் அணிவகுத்துச் சென்றவர்கள் தேவனை துதித்துக்கொண்டே சென்றனர் (2 நாளாகமம் 20:21). படையெடுக்கும் படைகளில், “ஒருவரும் தப்பவில்லை. அவர்கள் கண்ட ஏராளமான பொருள்களும்... மூன்றுநாளாய்க் கொள்ளையிட்டார்கள்; அது அவ்வளவு மிகுதியாயிருந்தது” (வச. 24-25).

நான்காம் நாளில், தேவனுடைய ஜனத்திற்கு விரோதமாக கலகம்பண்ணுவதற்கு என்று ஒரு எதிரி படை கூடும் இடமே பெராக்கா பள்ளத்தாக்கு (வச. 26) என்று அழைக்கப்பட்டது. அதாவது, “துதியின் பள்ளத்தாக்கு” அல்லது “ஆசீர்வாதம்” என்று பொருள். என்னே மாற்றம்! நம்முடைய கடினமான பள்ளத்தாக்குகளைக்கூட நாம் அவரிடம் ஒப்படைப்போமாகில் அவர் அதை துதியின் ஸ்தலங்களாய் மாற்றுவார்.