செப்டம்பர், 2019 | நமது அனுதின மன்னா Tamil Our Daily Bread

Archives: செப்டம்பர் 2019

உடனடி பரிகாரம்

அந்த வன வழிகாட்டியைப் பின் தொடர்ந்து சென்று, மிகவும் பழமை வாய்ந்த, பஹாமியன் காட்டிலுள்ள தாவரங்களைக் குறித்து, அவர்  கொடுக்கும் குறிப்புகளை வேகமாக எழுதிக் கொண்டேன். சில மரங்களின் அருகில் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றார். அந்தக் காட்டிலுள்ள ஒரு நச்சு மரம் கருமையான, ஒரு வகை திரவத்தை வெளியிடும். அது நம்மேல் பட்டால் வலியையும், ஊறலையும், தடிப்பையும் கொண்டு வரும். ஆனால் அதனைக் குறித்து கவலை கொள்ள வேண்டாம், ஏனெனில், இதற்கான மாற்று மருந்து அம்மரத்தின் அருகிலேயே கிடைக்கும். “எலீமி மரத்தின் சிவந்த பட்டையை சற்று வெட்டினால், அவ்விடத்தில் ஒரு வகை பிசின் சுரக்கும். அதை ஊறல் உள்ள இடத்தில் தடவினால், ஊறல் உடனே மறைந்து விடும்” என்றார்.

நான் ஆச்சரியத்தில் திகைத்து நின்றேன். நான் இத்தகைய ஒரு மீட்பின் செய்தியை இந்தக் காட்டினுள் எதிர்பார்க்கவேயில்லை. எலிமி மரப்பிசினில் நான் இயேசுவைக் கண்டேன். பாவமாகிய நச்சு நம்மைத் தீண்டும் போது, பரிகாரியாகிய இயேசு நம்மண்டை ஆயத்தமாக இருக்கின்றார். அந்த மரத்தின் பட்டையைப் போன்று, இயேசுவின் இரத்தம் நமக்கு சுகத்தைத் தருகின்றது.

மனித குலம் சுகத்தைப் பெற்றுக்கொள்ள ஏங்கி நிற்பதை ஏசாயா தீர்க்கதரிசி புரிந்து கொண்டார். பாவத்தின் விளைவு நம்மை வியாதிக்கு உட்படுத்தியது. நம்முடைய பாடுகளை தன்மீது ஏற்றுக்கொண்ட தேவக் குமாரனின் துன்பத்தின் வழியாக நமக்குத் தேவையான சுகம் வருகிறது என ஏசாயா தீர்க்கன் வாக்களிக்கின்றார் (ஏசா. 53:4). அந்த தேவக் குமாரன் தான் இயேசு கிறிஸ்து. நம்முடைய மீறுதல்களின் நிமித்தம் அவர் காயப்பட்டார், நாம் அவர் மீது நம்பிக்கை வைக்கும் போது, நம்முடைய பாவத்தின் ஆக்கினையிலிருந்து மீட்கப்பட்டு, சுகம் பெறுவோம் (வச. 5) நம்முடைய பாவங்களை கண்டுணர்ந்து, அவற்றை தள்ளி விட்டு, நமக்குத் தரப்பட்டுள்ள புதிய அடையாளத்தை பெற்றுக் கொண்டவர்களாய், பாவ வாழ்க்கையிலிருந்து விடுதலை பெற்றவர்களாய் வாழ, நம் வாழ்நாளெல்லாம் செலவிட்டாலும், அது இயேசுவிடமிருந்து மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும்.

நான் யார் ?

டேவ், தன்னுடைய வேலையை ஆர்வத்தோடு செய்து கொண்டிருந்தான். ஆனால், நீண்ட காலமாக அவன் ஏதோவொன்றை நோக்கி இழுக்கப்  படுவதை உணர்ந்தான். இப்பொழுது ,அவன் தன் கனவினை நனவாக்க, தேவபணி செய்யும் படி காலெடுத்து வைத்துள்ளான். ஆனால் அவனுக்குள் அநேக சந்தேகங்கள் தோன்றிக் கொண்டேயிருந்தன.

அவன் தன் நண்பனிடம்,” நான் இந்த பணிக்குத் தகுதியானவன் அல்ல” என்றான். “இந்தப் பணிக் குழு என்னுடைய உண்மையான குணத்தை அறிந்திருக்கவில்லை. நான் நல்லவனல்ல” என்று கூறினான்.

டேவ்வைப் போன்ற ஒருவரான மோசேயை நினைத்துப் பார்ப்போம். அவருடைய தலைமைத்துவ பண்பும், பெலனும், பத்து கட்டளைகளுமே நம் நினைவிற்கு வருகின்றன. ஆனால் மோசே, ஒரு மனிதனைக் கொன்று விட்டு வனாந்திரத்திற்கு ஓடிப்போனதை நாம் மறந்து விடுகிறோம். அவருடைய முன் கோபத்தையும், தேவன் அழைத்த போது உடனே சரியெனக் கூறத் தயங்கியதையும் நாம் பெரியதாக நினைப்பதில்லை.

  தேவன் புறப்படும் படி கட்டளை கொடுத்த போது (யாத். 3:1-10), மோசே தனக்கு போதிய தகுதி இல்லையென தட்டிக் கழிக்கின்றான். அவன் தேவனோடு நீண்ட வாக்கு வாதங்களைச் செய்கின்றான். தேவனிடம், “நான் எம்மாத்திரம் ?” (வச. 11) எனக் கேட்கின்றான். தேவன் அவனிடம் “நான் இருக்கிறவராக இருக்கிறேன்” (வச. 14) என்கின்றார். இந்த மர்மப்பெயரை நம்மால் விளக்க முடியாது. நம்முடைய விளக்கங்களுக்கு அப்பாற்பட்ட தேவன் தன்னுடைய முடிவில்லாத தன்மையை மோசேக்கு விளக்குகின்றார்.

நம்மை பெலவீனனாக  காட்டும் உணர்வு நமக்குள் வலுவாக உள்ளது. தேவன் நம்மை பயன்படுத்துவதற்குத் தடையாக நாம் இதனை பயன்படுத்துவோமாயின் நாம் அவரை துக்கப்படுத்துகின்றோம். நம்முடைய பெலவீனங்களைப் பெரிதாக்கி, அவருடைய பணியைச் செய்ய மறுக்கும் போது, தேவன் நமக்குப் போதுமானவராக இல்லை என கூறுகின்றோம்.

நான் யார்? என்பது கேள்வியல்ல, இருக்கிறவராக இருக்கிறேன் என்றவர் யார் என்பதே கேள்வி.

அதுவே அலுவலகமும் கூட

வடக்கு இங்கிலாந்தில் அமைந்துள்ள லங்காஷயரைக் கடந்து சென்ற போது, என் கண்கள் பசுமையான மலைத் தொடர்களையும், அதன் அடிவாரத்தில் கல்வேலிகளில் அடைக்கப்பட்டிருந்த ஆட்டு மந்தைகளையும் பார்த்தன. திரண்ட மேகங்கள் பிரகாசமான வானத்தில் நகர்ந்து கொண்டிருந்தன. இக்காட்சி என் மனதில் பதிந்துவிட்டது. நான் காணச் சென்ற தியான மையத்தில் பணிபுரியும் பெண்ணிடம் இக்காட்சியைக் குறித்து சொன்ன போது, அவள்,” என்னுடைய விருந்தாளிகள் இவற்றைக் குறித்துச் சொல்லும் போதேயன்றி, மற்றபடி நான் அவற்றை கவனிப்பதேயில்லை, ஏனெனில் நாங்கள் இப்பகுதி யிலேயே அநேக ஆண்டுகளாக வசிக்கின்றோம். நாங்கள் விவசாயிகளாக இருந்த போது, இக்காட்சிகள் தான் எங்கள் அலுவலகமும் கூட !” என்றாள்.

நம் கண்களுக்கு எதிரே இருக்கின்ற அழகினை- அதுவே நம் வாழ்வின் ஒரு பகுதியாக அமைந்து விடும் போது, நாம் அதைக் காணத் தவறி விடுகின்றோம். இயேசுவின் விசுவாசிகளான நாம், நம்முடைய ஆன்மீக கண்களைத் திறக்கும் படி ஆவியானவரைக் கேட்கும் போது, தேவன் நம்மில் செயல்படுகின்ற விதங்களை புரிந்து கொள்ள முடியும். இதனையே பவுலும் எபேசு சபை விசுவாசிகளுக்கு எழுதுகின்றார். இயேசு கிறிஸ்துவின் தேவனும் மகிமையின் பிதாவுமானவர்,  தம்மை அறிந்து கொள்வதற்கான ஞானத்தையும், தெளிவையும்  தருகின்ற ஆவியை அவர்களுகளுக்கு கொடுக்க வேண்டுமென கேட்கின்றார் (எபே. 1:17). மேலும், நமக்கு உண்டாயிருக்கிற சுதந்திரத்தினுடைய ஐசுவரியம் இன்னதென்றும், தம்முடைய வல்லமையின் மகா மேன்மையான மகத்துவம் இன்னதென்றும் அறியும்படிக்கு தேவன் நமக்கு பிரகாசமுள்ள மனக்கண்களைக் கொடுக்க வேண்டுமென வேண்டிக் கொள்கின்றார் (வ.18-19).

தேவன் நம்மிலும், நம் மூலமாகவும் செயல்படுவதை நாம் காணும் படி தேவனுடைய ஈவாகிய கிறிஸ்துவின் ஆவியானவர் நம்மை விழிப்புள்ள வர்களாக்குகின்றார். முன்னொரு நாள் அலுவலகமாக காட்சியளித்த்தை, இப்பொழுது தேவனுடைய ஒளியையும், மகிமையையும் வெளிப்படுத்தும் இடமாக உணர்த்துகின்றார்.

இயேசுவின் வருகையை எதிர்பார்த்து வாழ்

பாடகர் டிம் மெக்ரா எழுதிய “நீ மரித்துக் கொண்டிருக்கின்றாய் என்ற எண்ணத்தோடு வாழ்” என்ற பாடல் என்னை மிகவும் கவர்ந்தது. ஒரு மனிதன் தன்னுடைய சாவு நெருங்கி விட்டது எனத் தெரிந்து கொண்ட போது, அவன் செய்த நீண்ட வரிசையான காரியங்களை அப்பாடல் விளக்குகிறது. அவன் பிறரை எளிதாக நேசிக்கவும், மன்னிக்கவும் தெரிந்து கொண்டான், பிறரிடம் கனிவாகப் பேசக்கற்றுக் கொண்டான். நம்முடைய வாழ்வும் சீக்கிரத்தில் முடிந்து விடும் என்று தெரிந்து கொண்டு வாழ்ந்தால் நாமும் நன்றாக வாழ முடியும் என்பதை அப்பாடல் விவரிக்கின்றது.

நம்முடைய காலம் மிகவும் குறுகியது என்பதை இப்பாடல்  நமக்கு நினைப்பூட்டுகிறது. இன்றைக்கு செய்யக் கூடியவற்றை, நாளை என்று தள்ளி  போடாமல் இன்றே செய்வது அவசியம், ஏனெனில்  நாளை நமக்கு கிடைக்காமல் போகலாமே. இயேசுவின் வருகை எந்நேரமும் இருக்கலாம் என நாம் விசுவாசிக்கின்றோம்.(ஒரு வேளை இந்த வரிகளை வாசித்துக் கொண்டிருக்கும் போது கூட) மணவாளன் வரும் போது ஆயத்தமில்லாமலிருந்த ஐந்து “புத்தியில்லாத” கன்னிகைகளைப் போன்று அல்லாமல் எப்பொழுதும் ஆயத்தமாயிருக்கும் படி தேவன் நம்மைத் தூண்டு கின்றார் (மத்தேயு 25;6-10)

மெக்ராவின் பாடல் முழுமையான கதையை நமக்கு வெளிப்படுத்த வில்லை. இயேசுவை நேசிப்பவர்களாகிய நாம் நாளை நமக்கு கிடைக்கவில்லையேயெனத் தவிப்பவர்கள் அல்ல. “நானே உயிர்த்தெழுதலும், ஜீவனுமாயிருக்கிறேன். என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்; உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிற எவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்” (யோவா. 11:25-26) என இயேசு கூறியுள்ளார். அவருக்குள் நம்முடைய வாழ்வு ஒருபோதும் முடிவதில்லை.

எனவே, நீ மரித்துக் கொண்டிருக்கின்றாய் என்ற எண்ணத்தோடு வாழாதே. ஏனெனில் நம்முடைய வாழ்வு முடிவதில்லை. ஆனால் இயேசுவின் வருகையை எதிர் நோக்கி வாழ். அவர் சீக்கிரம் வருகின்றார்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

சத்தமாய் சிரித்தல்

அமெரிக்க நகைச்சுவை நடிகரும் எழுத்தாளருமான ஜான் பிரான்யன், “நாம் சிரிப்பதைக் குறித்து யோசிக்கவில்லை; அது நம்முடைய எண்ணமே இல்லை. அது வாழ்க்கை முழுவதும் நமக்கு தேவைப்படும் என்பதை அறிந்த தேவனே அதை நமக்குக் கொடுத்திருக்கிறார். நாம் போராட்டங்களை சந்திக்கப்போகிறோம் என்பதையும் உபத்திரவங்களை மேற்கொள்ளப்போகிறோம் என்பதையும் அவர் அறிந்திருக்கிறார். சிரிப்பு என்பது ஒரு வரம்” என்கிறார். 
தேவன் படைத்த சில உயிரினங்களை பார்த்த மாத்திரத்தில் நமக்கு சிரிப்பு வரலாம். அவற்றின் விநோதமான உருவ அமைப்பும், அவைகள் செய்யும் குறும்புத்தனமும் நம்முடைய சிரிப்பிற்கு காரணமாகலாம். கடலில் வாழும் பாலூட்டிகளையும், பறக்க முடியாத நீண்ட கால்கள் கொண்ட பறவைகளையும் தேவன் படைத்தார். தேவன் இயல்பில் நகைச்சுவை உணர்வு கொண்டவர்; நாம் அவருடைய சாயலில் படைக்கப்பட்டிருப்பதால், நமக்கும் நகைச்சுவை உணர்வு இயல்பானது.  
வேதாகமத்தில் நகைப்பு என்னும் வார்த்தையை ஆபிரகாம் மற்றும் சாராள் சம்பவத்தில் தான் முதன்முறையாகப் பார்க்கிறோம். இந்த வயதான தம்பதியருக்கு தேவன், “உன் கர்ப்பப்பிறப்பாயிருப்பவனே உனக்குச் சுதந்தரவாளியாவான்” (ஆதியாகமம் 15:4) என்று வாக்குப்பண்ணுகிறார். மேலும், “நீ வானத்தை அண்ணாந்துபார், நட்சத்திரங்களை எண்ண உன்னாலே கூடுமானால், அவைகளை எண்ணு... உன் சந்ததி இவ்வண்ணமாய் இருக்கும்” (வச. 5) என்றும் தேவன் சொன்னார். இறுதியில் தன்னுடைய தொன்னூறாம் வயதில் சாராள் பிள்ளை பெற்றபோது, ஆபிரகாம் “நகைப்பு” என்று அர்த்தம்கொள்ளும் ஈசாக்கு என்னும் பெயரை அக்குழந்தைக்கு வைக்கிறான். சாராளும் ஆச்சரியத்தில், “தேவன் என்னை நகைக்கப்பண்ணினார்; இதைக் கேட்கிற யாவரும் என்னோடேகூட நகைப்பார்கள்” (21:6) என்று கூறுகிறாள். அந்த பருவத்தில் ஒரு குழந்தையை வளர்ப்பது குறித்து அவள் வியப்பாகிறாள். அவளுக்கு பிள்ளை பிறக்கும் என்று தேவன் முதலில் சொன்னபோது, சந்தேகத்தில் சிரித்த அவளுடைய சிரிப்பை (18:2) ஆச்சரியமான சிரிப்பாய் தேவன் மாற்றுகிறார்.  
சிரிப்பு என்னும் வரத்திற்காய் உமக்கு நன்றி ஆண்டவரே! 

களைகளுக்கு நீர்ப்பாசனம்

இந்த வசந்த காலத்தில், எங்கள் வீட்டு கொல்லைப் புறத்தை களைகள் காடுபோல் வளர்ந்திருந்தது. அதில் பெரிதாய் வளர்ந்திருந்த ஒரு களையை நான் பிடுங்க முயற்சித்தபோது, அது என்னை காயப்படுத்தும் என்று நான் அஞ்சினேன். அதை வெட்டுவதற்கு நான் ஒரு மண்வெட்டியைத் தேடிக்கொண்டிருந்தவேளையில், ஒன்றைக் கவனிக்க முற்பட்டேன். என்னுடைய மகள் அந்த களைகளுக்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தாள். “நீ ஏன் களைகளுக்கு தண்ணீர் பாய்ச்சுகிறாய்?” என்று நான் அதிர்ச்சியில் கேட்டேன். அவள் ஒரு கசப்பான புன்னகையோடு, “அது எவ்வளவு பெரிதாய் வளருகிறது என்று பார்க்க விரும்புகிறேன்” என்று பதிலளித்தாள்.  
களைகள் நாம் விரும்பி வளர்க்கிற ஒன்றல்ல. ஆனால் சிலவேளைகளில் நம்முடைய ஆவிக்குரிய வளர்ச்சியை தடைபண்ணுகிற நம்முடைய சுய விருப்பங்கள் என்னும் களைகளுக்கு நாமே தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருக்கிறோம். 
பவுல், கலாத்தியர் 5:13-26இல் இதைக் குறித்து எழுதுகிறார். அதில் மாம்சீக வாழ்க்கையையும் ஆவிக்குரிய வாழ்க்கையையும் ஒப்பிடுகிறார். அவர் சொல்லும்போது, நியாயப்பிரமாணங்களுக்கு கீழ்ப்படிந்தால் மட்டும் நாம் எதிர்பார்க்கும் களைகள்-இல்லா வாழ்க்கையை சுதந்தரித்துவிடமுடியாது என்கிறார். களைகளுக்கு தண்ணீர் பாய்ச்சுவதை நிறுத்துவதற்கு “ஆவிக்கேற்படி நடந்துகொள்ளுங்கள்” என்று ஆலோசனை சொல்லுகிறார். மேலும் தேவனோடு நடக்கும்போது “மாம்ச இச்சையை நிறைவேற்றாதிருப்பீர்கள்” (வச. 16) என்றும் அறிவுறுத்துகிறார்.  
பவுலின் போதனைகளை முழுவதுமாய் அறிந்துகொள்வது என்பது வாழ்நாள் முழுவதும் தொடரும் ஒரு முயற்சி. அவரின் எளிமையான வழிநடத்துதலை நான் நேசிக்கிறேன். நம்முடைய சுய இச்சைகளையும் சுயவிருப்பங்களையும் நாம் நீர்பாய்ச்சி வளர்ப்பதற்கு பதிலாக, தேவனோடு உறவுகொள்வதின் மூலம் நாம் கனிகொடுத்து, தேவ பக்தியின் அறுவடையை ஏறெடுக்கமுடியும் (வச. 22-25).   

உறுதியும் நன்மையுமான

அந்த இளம் கேம்பஸ் அலுவலர் என்னுடைய கேள்வியைக் கண்டு கலக்கமடைந்தார். “தேவனுடைய நடத்துதலுக்கும் உதவிக்காகவும் நீங்கள் ஜெபிக்கிறீர்களா?” என்று நான் கேட்டதற்கு அவர் முகநாடி வேறுபட்டது. “இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள்” என்று பவுல் வலியுறுத்துகிறார். என் கேள்விக்கு பதிலாக, அந்த இளைஞன், “எனக்கு ஜெபத்தில் கொஞ்சமும் நம்பிக்கை இல்லை” என்று கூறினான். “தேவன் நம்முடைய ஜெபத்தைக் கேட்கிறார் என்றும் எனக்கு தோன்றவில்லை” என்று தன் முகத்தை சுருக்கினான். அந்த இளம் அலுவலர் தன்னுடைய சுயபெலத்தில் ஒரு துறைசார்ந்த சாதனையை நிகழ்த்த முற்பட்டு தோற்றுப் போனார். ஏன்? அவர் தேவனை மறுதலித்ததால்.  
சபையின் மூலைக்கல்லாகிய கிறிஸ்து தன் சொந்த ஜனத்தினாலேயே எப்போதும் புறக்கணிக்கப்படுகிறவராய் இருக்கிறார் (யோவான் 1:11). பலர் இன்றும் அவரை நிராகரிக்கிறார்கள். தங்கள் வாழ்க்கையை, வேலைகளை, உறுதியாய் ஸ்தாபிக்கப்படாத தேவாலயங்களின் மூலமாகவும், தங்கள் சொந்த திட்டங்கள், கனவுகள் மற்றும் பிற நம்பகத்தன்மையற்ற தளங்களில் தங்களுடைய ஜீவியத்தைக் கட்டியெழுப்ப போராடுகிறார்கள். ஆனாலும், நம்முடைய நல்ல இரட்சகர் ஒருவரே நம்முடைய “பெலனும், என் கீதமுமானவர்” (சங்கீதம் 118:14). நிஜத்தில், “வீடுகட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே, மூலைக்குத் தலைக்கல்லாயிற்று” (வச. 22).  
நம்முடைய வாழ்க்கையின் மூலையில், அவரை விசுவாசிப்பவர்கள் எவ்விதம் வனையப்படவேண்டும் என்ற திசையை தேவன் தீர்மானிக்கிறார். எனவே அவரை நோக்கி “கர்த்தாவே, இரட்சியும்; கர்த்தாவே, காரியத்தை வாய்க்கப்பண்ணும்” (வச. 25) என்று நாம் ஜெபிக்கிறோம். அதின் விளைவு? “கர்த்தருடைய நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்” (வச. 26). அவர் உறுதியான மற்றும் நல்ல தேவனாய் இருப்பதால் அவருக்கு நன்றி செலுத்தக்கடவோம்.