Archives: செப்டம்பர் 2019

உடனடி பரிகாரம்

அந்த வன வழிகாட்டியைப் பின் தொடர்ந்து சென்று, மிகவும் பழமை வாய்ந்த, பஹாமியன் காட்டிலுள்ள தாவரங்களைக் குறித்து, அவர்  கொடுக்கும் குறிப்புகளை வேகமாக எழுதிக் கொண்டேன். சில மரங்களின் அருகில் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றார். அந்தக் காட்டிலுள்ள ஒரு நச்சு மரம் கருமையான, ஒரு வகை திரவத்தை வெளியிடும். அது நம்மேல் பட்டால் வலியையும், ஊறலையும், தடிப்பையும் கொண்டு வரும். ஆனால் அதனைக் குறித்து கவலை கொள்ள வேண்டாம், ஏனெனில், இதற்கான மாற்று மருந்து அம்மரத்தின் அருகிலேயே கிடைக்கும். “எலீமி மரத்தின் சிவந்த பட்டையை சற்று வெட்டினால், அவ்விடத்தில் ஒரு வகை பிசின் சுரக்கும். அதை ஊறல் உள்ள இடத்தில் தடவினால், ஊறல் உடனே மறைந்து விடும்” என்றார்.

நான் ஆச்சரியத்தில் திகைத்து நின்றேன். நான் இத்தகைய ஒரு மீட்பின் செய்தியை இந்தக் காட்டினுள் எதிர்பார்க்கவேயில்லை. எலிமி மரப்பிசினில் நான் இயேசுவைக் கண்டேன். பாவமாகிய நச்சு நம்மைத் தீண்டும் போது, பரிகாரியாகிய இயேசு நம்மண்டை ஆயத்தமாக இருக்கின்றார். அந்த மரத்தின் பட்டையைப் போன்று, இயேசுவின் இரத்தம் நமக்கு சுகத்தைத் தருகின்றது.

மனித குலம் சுகத்தைப் பெற்றுக்கொள்ள ஏங்கி நிற்பதை ஏசாயா தீர்க்கதரிசி புரிந்து கொண்டார். பாவத்தின் விளைவு நம்மை வியாதிக்கு உட்படுத்தியது. நம்முடைய பாடுகளை தன்மீது ஏற்றுக்கொண்ட தேவக் குமாரனின் துன்பத்தின் வழியாக நமக்குத் தேவையான சுகம் வருகிறது என ஏசாயா தீர்க்கன் வாக்களிக்கின்றார் (ஏசா. 53:4). அந்த தேவக் குமாரன் தான் இயேசு கிறிஸ்து. நம்முடைய மீறுதல்களின் நிமித்தம் அவர் காயப்பட்டார், நாம் அவர் மீது நம்பிக்கை வைக்கும் போது, நம்முடைய பாவத்தின் ஆக்கினையிலிருந்து மீட்கப்பட்டு, சுகம் பெறுவோம் (வச. 5) நம்முடைய பாவங்களை கண்டுணர்ந்து, அவற்றை தள்ளி விட்டு, நமக்குத் தரப்பட்டுள்ள புதிய அடையாளத்தை பெற்றுக் கொண்டவர்களாய், பாவ வாழ்க்கையிலிருந்து விடுதலை பெற்றவர்களாய் வாழ, நம் வாழ்நாளெல்லாம் செலவிட்டாலும், அது இயேசுவிடமிருந்து மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும்.

நான் யார் ?

டேவ், தன்னுடைய வேலையை ஆர்வத்தோடு செய்து கொண்டிருந்தான். ஆனால், நீண்ட காலமாக அவன் ஏதோவொன்றை நோக்கி இழுக்கப்  படுவதை உணர்ந்தான். இப்பொழுது ,அவன் தன் கனவினை நனவாக்க, தேவபணி செய்யும் படி காலெடுத்து வைத்துள்ளான். ஆனால் அவனுக்குள் அநேக சந்தேகங்கள் தோன்றிக் கொண்டேயிருந்தன.

அவன் தன் நண்பனிடம்,” நான் இந்த பணிக்குத் தகுதியானவன் அல்ல” என்றான். “இந்தப் பணிக் குழு என்னுடைய உண்மையான குணத்தை அறிந்திருக்கவில்லை. நான் நல்லவனல்ல” என்று கூறினான்.

டேவ்வைப் போன்ற ஒருவரான மோசேயை நினைத்துப் பார்ப்போம். அவருடைய தலைமைத்துவ பண்பும், பெலனும், பத்து கட்டளைகளுமே நம் நினைவிற்கு வருகின்றன. ஆனால் மோசே, ஒரு மனிதனைக் கொன்று விட்டு வனாந்திரத்திற்கு ஓடிப்போனதை நாம் மறந்து விடுகிறோம். அவருடைய முன் கோபத்தையும், தேவன் அழைத்த போது உடனே சரியெனக் கூறத் தயங்கியதையும் நாம் பெரியதாக நினைப்பதில்லை.

  தேவன் புறப்படும் படி கட்டளை கொடுத்த போது (யாத். 3:1-10), மோசே தனக்கு போதிய தகுதி இல்லையென தட்டிக் கழிக்கின்றான். அவன் தேவனோடு நீண்ட வாக்கு வாதங்களைச் செய்கின்றான். தேவனிடம், “நான் எம்மாத்திரம் ?” (வச. 11) எனக் கேட்கின்றான். தேவன் அவனிடம் “நான் இருக்கிறவராக இருக்கிறேன்” (வச. 14) என்கின்றார். இந்த மர்மப்பெயரை நம்மால் விளக்க முடியாது. நம்முடைய விளக்கங்களுக்கு அப்பாற்பட்ட தேவன் தன்னுடைய முடிவில்லாத தன்மையை மோசேக்கு விளக்குகின்றார்.

நம்மை பெலவீனனாக  காட்டும் உணர்வு நமக்குள் வலுவாக உள்ளது. தேவன் நம்மை பயன்படுத்துவதற்குத் தடையாக நாம் இதனை பயன்படுத்துவோமாயின் நாம் அவரை துக்கப்படுத்துகின்றோம். நம்முடைய பெலவீனங்களைப் பெரிதாக்கி, அவருடைய பணியைச் செய்ய மறுக்கும் போது, தேவன் நமக்குப் போதுமானவராக இல்லை என கூறுகின்றோம்.

நான் யார்? என்பது கேள்வியல்ல, இருக்கிறவராக இருக்கிறேன் என்றவர் யார் என்பதே கேள்வி.

அதுவே அலுவலகமும் கூட

வடக்கு இங்கிலாந்தில் அமைந்துள்ள லங்காஷயரைக் கடந்து சென்ற போது, என் கண்கள் பசுமையான மலைத் தொடர்களையும், அதன் அடிவாரத்தில் கல்வேலிகளில் அடைக்கப்பட்டிருந்த ஆட்டு மந்தைகளையும் பார்த்தன. திரண்ட மேகங்கள் பிரகாசமான வானத்தில் நகர்ந்து கொண்டிருந்தன. இக்காட்சி என் மனதில் பதிந்துவிட்டது. நான் காணச் சென்ற தியான மையத்தில் பணிபுரியும் பெண்ணிடம் இக்காட்சியைக் குறித்து சொன்ன போது, அவள்,” என்னுடைய விருந்தாளிகள் இவற்றைக் குறித்துச் சொல்லும் போதேயன்றி, மற்றபடி நான் அவற்றை கவனிப்பதேயில்லை, ஏனெனில் நாங்கள் இப்பகுதி யிலேயே அநேக ஆண்டுகளாக வசிக்கின்றோம். நாங்கள் விவசாயிகளாக இருந்த போது, இக்காட்சிகள் தான் எங்கள் அலுவலகமும் கூட !” என்றாள்.

நம் கண்களுக்கு எதிரே இருக்கின்ற அழகினை- அதுவே நம் வாழ்வின் ஒரு பகுதியாக அமைந்து விடும் போது, நாம் அதைக் காணத் தவறி விடுகின்றோம். இயேசுவின் விசுவாசிகளான நாம், நம்முடைய ஆன்மீக கண்களைத் திறக்கும் படி ஆவியானவரைக் கேட்கும் போது, தேவன் நம்மில் செயல்படுகின்ற விதங்களை புரிந்து கொள்ள முடியும். இதனையே பவுலும் எபேசு சபை விசுவாசிகளுக்கு எழுதுகின்றார். இயேசு கிறிஸ்துவின் தேவனும் மகிமையின் பிதாவுமானவர்,  தம்மை அறிந்து கொள்வதற்கான ஞானத்தையும், தெளிவையும்  தருகின்ற ஆவியை அவர்களுகளுக்கு கொடுக்க வேண்டுமென கேட்கின்றார் (எபே. 1:17). மேலும், நமக்கு உண்டாயிருக்கிற சுதந்திரத்தினுடைய ஐசுவரியம் இன்னதென்றும், தம்முடைய வல்லமையின் மகா மேன்மையான மகத்துவம் இன்னதென்றும் அறியும்படிக்கு தேவன் நமக்கு பிரகாசமுள்ள மனக்கண்களைக் கொடுக்க வேண்டுமென வேண்டிக் கொள்கின்றார் (வ.18-19).

தேவன் நம்மிலும், நம் மூலமாகவும் செயல்படுவதை நாம் காணும் படி தேவனுடைய ஈவாகிய கிறிஸ்துவின் ஆவியானவர் நம்மை விழிப்புள்ள வர்களாக்குகின்றார். முன்னொரு நாள் அலுவலகமாக காட்சியளித்த்தை, இப்பொழுது தேவனுடைய ஒளியையும், மகிமையையும் வெளிப்படுத்தும் இடமாக உணர்த்துகின்றார்.

இயேசுவின் வருகையை எதிர்பார்த்து வாழ்

பாடகர் டிம் மெக்ரா எழுதிய “நீ மரித்துக் கொண்டிருக்கின்றாய் என்ற எண்ணத்தோடு வாழ்” என்ற பாடல் என்னை மிகவும் கவர்ந்தது. ஒரு மனிதன் தன்னுடைய சாவு நெருங்கி விட்டது எனத் தெரிந்து கொண்ட போது, அவன் செய்த நீண்ட வரிசையான காரியங்களை அப்பாடல் விளக்குகிறது. அவன் பிறரை எளிதாக நேசிக்கவும், மன்னிக்கவும் தெரிந்து கொண்டான், பிறரிடம் கனிவாகப் பேசக்கற்றுக் கொண்டான். நம்முடைய வாழ்வும் சீக்கிரத்தில் முடிந்து விடும் என்று தெரிந்து கொண்டு வாழ்ந்தால் நாமும் நன்றாக வாழ முடியும் என்பதை அப்பாடல் விவரிக்கின்றது.

நம்முடைய காலம் மிகவும் குறுகியது என்பதை இப்பாடல்  நமக்கு நினைப்பூட்டுகிறது. இன்றைக்கு செய்யக் கூடியவற்றை, நாளை என்று தள்ளி  போடாமல் இன்றே செய்வது அவசியம், ஏனெனில்  நாளை நமக்கு கிடைக்காமல் போகலாமே. இயேசுவின் வருகை எந்நேரமும் இருக்கலாம் என நாம் விசுவாசிக்கின்றோம்.(ஒரு வேளை இந்த வரிகளை வாசித்துக் கொண்டிருக்கும் போது கூட) மணவாளன் வரும் போது ஆயத்தமில்லாமலிருந்த ஐந்து “புத்தியில்லாத” கன்னிகைகளைப் போன்று அல்லாமல் எப்பொழுதும் ஆயத்தமாயிருக்கும் படி தேவன் நம்மைத் தூண்டு கின்றார் (மத்தேயு 25;6-10)

மெக்ராவின் பாடல் முழுமையான கதையை நமக்கு வெளிப்படுத்த வில்லை. இயேசுவை நேசிப்பவர்களாகிய நாம் நாளை நமக்கு கிடைக்கவில்லையேயெனத் தவிப்பவர்கள் அல்ல. “நானே உயிர்த்தெழுதலும், ஜீவனுமாயிருக்கிறேன். என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்; உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிற எவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்” (யோவா. 11:25-26) என இயேசு கூறியுள்ளார். அவருக்குள் நம்முடைய வாழ்வு ஒருபோதும் முடிவதில்லை.

எனவே, நீ மரித்துக் கொண்டிருக்கின்றாய் என்ற எண்ணத்தோடு வாழாதே. ஏனெனில் நம்முடைய வாழ்வு முடிவதில்லை. ஆனால் இயேசுவின் வருகையை எதிர் நோக்கி வாழ். அவர் சீக்கிரம் வருகின்றார்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

துதியின் பள்ளத்தாக்கு

கவிஞர் வில்லியம் கௌபர் தனது வாழ்நாளின் பெரும்பகுதியினை மன அழுத்தத்துடனே போராடினார். தற்கொலை முயற்சிக்குப் பிறகு, அவர் ஓர் புகலிடத்திற்கு அனுப்பப்பட்டார். ஆனால் ஓர் கிறிஸ்தவ மருத்துவரின் கனிவான கவனிப்பின் மூலம், இயேசுவின் மீது ஆழமான ஒரு விசுவாசத்தை நடைமுறைப்படுத்தினார். அதன் விளைவாக கௌபர் போதகருடனும் பாடலாசிரியர் ஜான் நியூட்டனுடன் பழக்கம் ஏற்பட்டு, தங்கள் திருச்சபையில் பாடப்பெறுகிற பாடல்களை எழுதுவதற்கு அவரை ஊக்குவித்தனர். அவர் எழுதிய பாடல்களில் ஒன்று, “தேவன் ஆச்சரியமான வழிகளில் கிரியை செய்கிறார்” என்ற பிரபல ஆங்கில பாடல். அதில், “பக்தியுள்ள புனிதர்களே, புதிய தைரியத்தை எடுங்கள். நீங்கள் அஞ்சி நடுங்கும் மேகங்கள் கருணையால் நிறைந்தவை, அவை உங்கள் சிரசில் ஆசீர்வாதத்தை பெய்யப்பண்ணும்" என்பதே. 

கௌபரைப் போலவே, யூதாவின் ஜனங்களும் எதிர்பாராத விதமாக தேவனுடைய கிருபையை சாட்சியிட நேரிட்டது. எதிரி தேசம் அவர்களின்மீது படையெடுத்ததால், யோசபாத் ராஜா ஜெபம் செய்வதற்கு மக்களுக்கு அழைப்புவிடுக்கிறார். யூதாவின் இராணுவப்படை யுத்தத்திற்கு சென்றபோது, அதின் முன்வரிசையில் அணிவகுத்துச் சென்றவர்கள் தேவனை துதித்துக்கொண்டே சென்றனர் (2 நாளாகமம் 20:21). படையெடுக்கும் படைகளில், “ஒருவரும் தப்பவில்லை. அவர்கள் கண்ட ஏராளமான பொருள்களும்... மூன்றுநாளாய்க் கொள்ளையிட்டார்கள்; அது அவ்வளவு மிகுதியாயிருந்தது” (வச. 24-25).

நான்காம் நாளில், தேவனுடைய ஜனத்திற்கு விரோதமாக கலகம்பண்ணுவதற்கு என்று ஒரு எதிரி படை கூடும் இடமே பெராக்கா பள்ளத்தாக்கு (வச. 26) என்று அழைக்கப்பட்டது. அதாவது, “துதியின் பள்ளத்தாக்கு” அல்லது “ஆசீர்வாதம்” என்று பொருள். என்னே மாற்றம்! நம்முடைய கடினமான பள்ளத்தாக்குகளைக்கூட நாம் அவரிடம் ஒப்படைப்போமாகில் அவர் அதை துதியின் ஸ்தலங்களாய் மாற்றுவார். 

 

தேவனின் மென்மையான அன்பு

2017ஆம் ஆண்டு, தடுப்பூசி போடப்படும் ஓர் குழந்தையை அதின் தந்தை அணைத்து தேற்றுவதுபோன்ற ஓர் காணொலி சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்தது. செவிலியர் தடுப்பூசிகளை போட்ட பிறகு, தந்தை தனது மகனை அவரது கன்னத்தில் அணைத்து நெருக்கமாக வைத்திருந்தார். குழந்தை சில நொடிகளில் அழுவதை நிறுத்தியது. அன்பான பெற்றோரின் கனிவான கவனிப்பைக் காட்டிலும் உறுதியளிக்கும் விஷயம் வேறு எதுவும் இல்லை.

வேதாகமத்தில், தேவனை தன் பிள்ளைகளை அதிகமாய் நேசிக்கக்கூடிய பெற்றோராய் சித்தரிக்கும் விளக்கங்கள் இடம்பெற்றுள்ளது. பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசியான ஓசியா, பிளவுபட்ட இஸ்ரவேல் ராஜ்யத்தின் காலத்தில், வடக்கு இராஜ்யத்தில் வாழ்ந்த இஸ்ரவேலர்களுக்கு உரைப்பதற்காக ஓர் செய்தியை பெற்றுக்கொள்கிறார். தேவனுடனான உறவுக்குத் திரும்பும்படி அவர்களுக்கு அழைப்பு விடுத்தார். ஓசியா இஸ்ரவேலர்களுக்கு, “இஸ்ரவேல் இளைஞனாயிருந்தபோது நான் அவனை நேசித்தேன்” (ஓசியா 11:1) என்றும் “அவர்கள் கழுத்துகளின்மேல் இருந்த நுகத்தடியை எடுத்துப் போடுகிறவரைப்போல்” (வச. 4) இருந்தேன் என்றும் குறிப்பிடுகிறார். 

தேவனுடைய அன்பான கவனிப்பைப் பற்றிய இதே உறுதியளிக்கும் வாக்குறுதி நமக்கும் உண்மையாக இருக்கிறது. நம்முடைய வேதனை மற்றும் பாடுகளின் நிமித்தம் அவருடைய அன்பை நிராகரித்து, பின்னர் அவருடைய மென்மையான அரவணைப்பை நாடினாலும் அவர் நம்மை அவருடைய பிள்ளை என்று அழைக்கிறார் (1 யோவான் 3:1). மேலும் அவரது ஆறுதலின் கரங்கள் நம்மை ஏற்றுக்கொள்ள எப்போதும் திறந்திருக்கிறது (2 கொரிந்தியர் 1:3-4).

 

தேர்ந்தெடுப்பு அவசியம்

பாஸ்டர் டாமியனின் தினசரி அலுவல் அட்டவணையில், வெவ்வேறு வாழ்க்கைப் பாதைகளைத் தெரிந்தெடுத்து மரணத்தை நெருங்கும் இரண்டு நபர்களை சந்திக்கும் நிகழ்வும் இடம்பெற்றிருந்த்து. ஓர் மருத்துவமனையில் தன் குடும்பத்தாரால் விரும்பப்படும் ஓர் பெண் இருந்தாள். அவளது தன்னலமற்ற பொதுச்சேவை பலரின் அபிமானத்தை பெற்றதால் மற்ற விசுவாசிகள் அவளது அறையை நிரப்பி, ஆராதனை, பாடல், ஜெபம் என்று செய்தனர். மற்றொரு மருத்துவமனையில், பாஸ்டர் டாமியனின் தேவாலயத்தைச் சேர்ந்த இன்னொரு உறுப்பினரின் உறவினரும் இறக்கும் தருவாயில் இருந்தார். அவரது கடினமான இதயம் கடினமான வாழ்க்கைக்கு வழிவகுத்தது. மேலும் அவரது மோசமான முடிவுகள் மற்றும் தவறான செயல்களின் பின்னணியில் அவரது குடும்பம் வாழ்ந்துவந்தது. இந்த இரண்டு வெவ்வேறான சூழ்நிலைகள், அவர்கள் எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்துள்ளனர் என்பதைப் பிரதிபலித்தது. 

வாழ்க்கையில் தாங்கள் எங்கு செல்கிறோம் என்பதைக் கருத்தில்கொள்ளத் தவறியவர்கள் பெரும்பாலும் சங்கடமான, விரும்பத்தகாத, தனிமையான இடங்களில் சிக்கிக்கொள்கிறார்கள். நீதிமொழிகள் 14:12, “மனுஷனுக்குத் செம்மையாய்த் தோன்றுகிறவழி உண்டு; அதின் முடிவோ மரண வழிகள்” என்று கூறுகிறது. இளைஞர்கள் அல்லது வயதானவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் அல்லது நலமுடையவர்கள், செல்வந்தர்கள் அல்லது வறியவர்கள் என யாராக இருந்தாலும், தங்களுடைய வாழ்க்கைப் பாதையை சரிசெய்வதற்கு இன்னும் அவகாசம் இருக்கிறது. அது நம்மை எங்கே கொண்டு செல்லும்? அது தேவனை கனப்படுத்துமா? அது மற்றவர்களுக்கு உதவக்கூடியதா அல்லது பாதிக்கக்கூடியதா? இயேசுவை விசுவாசிப்பவருக்கு இது சிறந்த பாதையா?

தேர்ந்தெடுப்புகள் மிகவும் முக்கியம். பரலோகத்தின் தேவன் அவருடைய குமாரனாகிய இயேசுவின் மூலமாக, “நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்” (மத்தேயு 11:28) என்று வாக்குப்பண்ணுகிறார்.