Archives: ஆகஸ்ட் 2019

இறுக்கமான வட்டங்கள்

என்னுடைய வகுப்புத்தோழன் ஒருவன் எங்கள் குடும்பத்திற்கு, ஒரு சடைநிறைந்த வயதான நாயைப் பரிசளித்தார். அது குட்டிகள் போடமுடியாத அளவிற்கு வயதானதாக இருந்தது. ஆனால், வெகுவிரைவில் நாங்கள் கண்டுபிடித்த உண்மை என்னவெனில், அந்த நாயானது, ஒரு கூண்டுக்குள்ளேயே தன் வாழ்வின் பெரும்பகுதியைக் கழித்தது என்பதேயாகும். அது தன்னுடைய இறுக்கமான வட்டங்களுக்குள்ளே மட்டும் தான் நடக்கும். அது நீளமான பாதையில் ஓடமுடியாது. ஒரு பெரிய விளையாட்டு ஸ்தலத்தில்கூட அது தன்னை வேலியடைத்ததாகவே நினைத்துக்கொள்ளும்.

ஆதிக்கிறிஸ்தவர்களில் பல யூதர்கள் மோசேயின் நியாயப்பிரமானங்களினாலே வேலியடிக்கப்பட்டிருந்தனர். நியாயப்பிரமானமானது நல்லதாக இருந்தாலும், பாவத்திலிருந்து அவர்களை உணர்வடையச்செய்து இயேசுவுக்கு நேராகத் திருப்புவதாக இருந்தாலும் (கலா. 3:19-25), இப்பொழுது அவர்கள் கிறிஸ்துவின் சுயாதீனத்தினாலும், கர்த்தருடைய கிருபையினாலும் உண்டான புதிய விசுவாசத்தின்படியே வாழவேண்டிய அவசியத்தில் இருந்தார்கள். அவர்கள் தயங்கினார்கள். இந்த எல்லா நேரங்களிலும் அவர்கள் உண்மையாகவே விடுதலையாக்கப்பட்டிருந்தனரா?

நமக்கும் இவ்விதமான பிரச்சனை இருக்கலாம். ஒருவேளை நாம் கடுமையான சட்டத்திட்டங்களுள்ள திருச்சபையில் வளர்ந்து இருக்கலாம். அல்லது நாம் கடுமையான ஒழுக்கமுள்ள வீடுகளில் வளர்க்கப்பட்டு இருக்கலாம். எப்படியிருந்தாலும், இப்பொழுது நாம் கிறிஸ்துவினால் நமக்குக் கொடுக்கப்படுகிற சுதந்திரத்தை தழுவிக்கொள்ளவேண்டிய நேரமாகும் (கலா. 5:1). இயேசுவானர் நம்மை விடுதலையாக்கி, அவருக்கு நாம் அன்பினாலே கீழ்ப்படிய வேண்டுமென விரும்புகிறார் (யோவா. 14:21). மற்றவர்களுக்கு அன்பினாலே சேவை செய்ய வேண்டுமென விரும்புகிறார் (கலா. 5:13). மிகப்பெரிய சந்தோஷமும், அன்பும், 'குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே நீங்கள் விடுதலையாவீர்கள்" (யோவா. 8:36) என்ற உண்மையை உணர்ந்தவர்களுக்கு மட்டுமே கொடுக்கப்படும்.

மாபெரும் காரியங்கள்!

நவம்பர் 9, 1989ஆம் ஆண்டு உலகமானது பெர்லின் சுவர் இடிந்து போனது என்ற செய்தியைக்கேட்டு ஸ்தம்பித்துப்போனது. பெர்லினையும், ஜெர்மனியையும் இரண்டாகப்பிரித்த அந்த சுவரானது உடைந்துபோய் 28 ஆண்டுகளாகப் பிரிக்கப்பட்டு இருந்த அந்த பட்டணமானது மீண்டும் ஒன்று சேர்க்கப்பட்டது. மகிழ்ச்சியின் மையம் ஜெர்மனியாக இருந்தாலும், அதைப் பார்க்கும் உலகமும் அந்த சந்தோஷத்தில் பங்கேற்றது. மாபெரும் காரியம் ஒன்று அங்கே நடந்தது.

கி. மு 538ல் இஸ்ரவேல் 70 வருட சிறையிருப்பிலிருந்து தன் தாயகத்திற்குத் திரும்பி வந்தபோது, அது நினைவிற்கொள்ள வேண்டிய சம்பவமாக மாறியது. இஸ்ரவேலின் சரித்திரத்தில் கிடைத்த மிகப்பெரிய சந்தோஷத்தை ஆரம்பமாகக் கொண்டு சங்கீதம் 126 தொடங்கியது. இந்த அனுபவமானது, நகைப்பதினாலும் மகிழ்ச்சியோடு பாடுவதினாலும் வெளிப்படுத்தப்பட்டு, தேவன் தம் பிள்ளைகளின் மத்தியில் பெரிய காரியத்தைச் செய்தார் என்கின்ற ஒரு சர்வ தேச அங்கீகரிப்பைக் காட்டுகிறது (வச. 2). அந்த இரக்கத்தைப் பெற்றவர்கள், அதற்கு எவ்வாறு பதிலளித்தார்கள்? கர்த்தரிடத்திலிருந்து வந்த மாபெரும் காரியமானது, மாபெரும் சந்தோஷத்தைக் கொண்டு வந்தது (வச. 3). கடந்த காலங்களில் அவருடைய கிரியையானது, நிகழ்காலம் மற்றும் எதிர்கால நம்பிக்கைக்குரிய ஜெபத்தினை அடிப்படையாகக் கொண்டு இருந்தது (வச. 4-6).

நீங்களும், நானும் நம்முடைய அனுபவங்களில் தேவனால் உண்டான உதாரணங்களை மிக அதிகமான தூரத்திற்கு சென்று காணவேண்டிய அவசியம் இல்லை, விசேஷமாக, தேவனை அவருடைய குமாரனாகிய இயேசுவின் மூலமாக விசுவாசிக்கும் பொழுது காண்கிறோம். பத்தொன்பதாம் நூற்றாண்டின் சிறந்த பாடலாசிரியரான ஃபேன்னி கிரோஸ்பி இந்த சத்தியத்தினை உணர்ந்தவர்களாய், 'சிறந்த காரியத்தை அவர் நமக்குப் போதித்தார், சிறந்த காரியத்தை அவர் செய்தார், குமாரனாகிய இயேசுவின் மூலமாய் நாம் மிகுந்த சந்தோஷமடைகிறோம்" என எழுதினார். ஆம், சகல கனம் மகிமை நம் ஆண்டவருக்கே! அவர் நம்மிடம் பெரிய காரியங்களைச் செய்தார்!

உங்கள் குரலை உபயோகியுங்கள்

உலகப் பிரசித்திப்பெற்ற ஒரு பியானோ வித்துவானைச் சந்திக்கும்படி நான் அழைக்கப்பட்டேன். நான் வயலின், பியானோ ஆகியவைகளை இசைக்கும் ஒரு சூழ்நிலையில் வளர்ந்ததாலும், திருச்சபைகளில், மற்றும் பல நிகழ்வுகளில் தனிப்பாடல்களைப் பாடும் வரம் பெற்றிருந்தபடியாலும் இவ்வாய்ப்பானது, எனக்கு அதிக உற்சாகமளிக்கக் கூடியதாக இருந்தது.

நான் அந்த பியானோ வித்துவான் இருக்குமிடத்தை அடைந்தபோது, அவர் கொஞ்சம் தான் ஆங்கிலத்தில் உரையாடுவார் என்பதைக் கண்டு கொண்டேன். அவர், நான் இதுவரை தொட்டேபார்க்காத ஸெல்கோ ஒரு இசைக்கருவியை என்னிடத்தில் கொடுத்து வாசிக்கச் சொன்னார். அது எனக்கு மிகுந்த ஆச்சரியத்தைக் கொடுத்தது. அவர் என்னை வாசிக்கச் செய்து தானும் என்னோடு இணைந்து வாசிப்பதாக கூறினார். நான் சில இசைகளை வாசிக்க முயற்சி செய்தேன். என்னுடைய வயலின் பயிற்சியினை பயன்படுத்தி முயற்சித்தேன். ஆனால் இறுதியில் நான் தோற்றுப்போனேன்.

திடீரென நான் விழித்தபோது, இவைகளெல்லாம் ஒரு கனவாகத் தெரிந்தது. இந்த இசைப்பின்னணி என் கனவில் வந்தது உண்மையாகவே நடந்தது போலிருந்தாலும், என் மனமானது ஒரு வாக்கியத்தை மட்டும் திரும்பத்திரும்ப யோசித்துக்கொண்டே இருந்தது. 'உனக்கு பாடத்தெரியும் என்று நீ ஏன் அவரிடம் சொல்லவில்லை?".

ஆவிக்குரிய வரங்களையும், இயற்கையாக நம்மிடம் உள்ள தாலந்துகளையும் தேவன் நம்முடைய வாழ்வில் அதிகமாக்கி அதை மற்றவர்களுக்கு பிரயோஜனப்படும்படி செய்கிறார் (1 கொரி. 12:7). நம்மிடத்திலுள்ள தனித்தன்மை வாய்ந்த ஆவிக்குரிய வரங்களை, தேவனுடைய வார்த்தையினாலும், மற்றவர்களுடைய ஞானமான ஆலோசனையின் வாயிலாகவும் நாம் அறிந்து கொள்ளலாம். அவருடைய தீர்மானத்தின்படி (வச. 11) பரிசுத்த ஆவியானவர் கொடுத்திருக்கிறார் என்பதை உணர்ந்து அதை எவ்வாறு பயன்படுத்தவேண்டும் என சிந்தித்து, பவுல் அப்போஸ்தலன் சொன்னதை ஞாபகத்தில் வைத்து செயல்படவேண்டும்.

மற்ற விசுவாசிகளுக்கு இயேசுவின் மூலம் பயன் உண்டாகவும் தேவனுடைய நாம மகிமைக்காகவும் நமது குரல் வளத்தினை பயன்படுத்தவேண்டும்.

வாழு, ஜெபி, நேசி

இயேசுவின்மேல் தன் பெற்றோர் கொண்ட ஆழமான விசுவாச வாழ்க்கையின் பலனாக, விளையாட்டு வீரரான ஜெஸ்ஸி ஓவன்ஸ் சிறந்த ஒரு விசுவாச வீரராக வளர்ந்தார். 1936ல் பெர்லினில் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டுகளில், ஆப்பிரிக்க அமெரிக்க ஓவன்ஸ் அமெரிக்க அணியிலிருந்து விளையாடி தங்கள் இனத்திற்கு எதிரிகளான நாசிகளுக்கும், அவர்களின் தலைவனான ஹிட்லருக்கும் முன்பாக நான்கு தங்கப்பதக்கங்களை பெற்றார். அவர் தன்னோடு விளையாடிய விளையாட்டு வீரரான லஸ்லாங்க் என்ற ஜெர்மானியரை நண்பராக்கிக்கொண்டார். நாசிக்களின் பிரச்சாரங்களில் மூழ்கிப்போயிருந்த லஸ்லாங்க், ஓவனின் விசுவாச வாழ்க்கையினாலே பிற்காலத்தில் தொடப்பட்டார். இந்த லஸ்லாங்க் பிற்காலத்தில் ஓவன்ஸிற்கு இவ்வாறு எழுதினார், பெர்லினில் நான் முதன்முதலில் உங்களை சந்தித்து பேசும்பொழுது உங்கள் முழங்கால்கள் தரையில் முடங்கியிருந்தன. நீங்கள் ஜெபத்தில் இருந்தீர்களென நான் அறிந்தேன். நானும் அந்த தேவனை விசுவாசிக்க விரும்புகிறேன்.

ஓவன்ஸ், பவுலின், 'தீமையை வெறுக்கின்ற" அனுபவத்தை எவ்வாறு வெளிப்படுத்திக்காட்டுவது என்பதை நன்றாக அறிந்திருந்தார். 'அன்பினாலே ஒருவருக்கொருவர் ஊழியம் செய்யுங்கள்" என்கின்ற பவுலின் அறிவுரைகளையும் (ரோம. 12:9-10) அறிந்திருந்தார். அவர் தன்னைச் சுற்றியுள்ள தீமைகளுக்கு தீமை செய்ய வாய்ப்பிருந்தும், ஓவன்ஸ் தன்னுடைய விசுவாசத்தையும் அன்பையும் காட்டுவதை தெரிந்துகொண்டு, தன் நண்பனிடத்தில் அதைக்காட்டினபடியால், அவர் (லஸ்) பிற்காலத்தில் ஒரு பெரிய விசுவாசியாக மாறினார்.

தேவனுடைய பிள்ளைகள் ஜெபத்திற்கு தங்களை ஒப்புக்கொடுக்கும்போது (வச. 12) அவர் நம்மை 'மற்றவர்களோடு ஐக்கியமாய்" வாழ வல்லமையளிக்கிறார் (வச. 16). நாம் ஜெபத்தினை சார்ந்திருக்கும்பொழுது, நாம் நம்மை விசுவாசத்திற்கும், தேவசாயலில் உருவாக்கப்பட்ட எல்லாரையும் நேசிப்பதற்கும் ஒப்புக்கொடுத்து வாழ முடியும். நாம் கர்த்தரிடத்தில் கதறி அழும்போது, எல்லாத்தடைகளையும் உடைத்து, நம்முடைய அயலகத்தாரிடமும் சமாதான பாலத்தை அமைத்து அவர்களை நேசிக்க தேவன் நம்மை பெலப்படுத்துவார்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

உதவிக்கான அழுகை

டேவிட் வில்லிஸ், வாட்டர்ஸ்டோன்ஸ் புத்தகக் கடையின் மாடியிலிருந்து கீழே இறங்கி வந்து பார்த்த பொழுது, விளக்குகள் அணைக்கப்பட்டு கதவுகள் பூட்டப்பட்டிருப்பதைக் கண்டார். கடைக்குள் சிக்கிக் கொண்டார்! வேறு என்ன செய்வது என்று தெரியாமல், அவர் கீச்சகத்தில் இவ்வாறு பதிவிட்டார். "ஹாய்@வாட்டர்ஸ்டோன்ஸ். உங்கள் ட்ரஃபல்கர் ஸ்கொயர் புத்தகக் கடையில் நான் இப்போது 2 மணி நேரமாக பூட்டப்பட்டிருக்கிறேன். தயவுசெய்து என்னை வெளியே விடுங்கள்”. அவர் பதிவிட்ட சிறிது நேரத்திலேயே அவர் மீட்கப்பட்டார். 
  
நாம் சிக்கலில் இருக்கும்போது உதவி பெற ஒரு வழி இருப்பது நல்லது. நாமே உருவாக்கிக் கொள்ளும் பிரச்சனையில் நாம் சிக்கிக் கொள்ளும்போது, நம் அழுகைக்குப் பதிலளிக்க ஒருவர் இருக்கிறார். என்று ஏசாயா கூறுகிறார். ஏசாயா தீர்க்கதரிசி எழுதும் போது, தம் மக்கள் தேவபக்தியைப் பொறுப்பற்ற நிலையில் கடைபிடிக்கிறார்கள் என தேவன் குற்றம் சாட்டியதாக எழுதுகிறார். மதம் சார்ந்த செயல்களில் ஈடுபட்டு, ஏழைகள் மீதான தங்கள் அடக்குமுறையை மறைத்து வெறுமையான சுய சேவையில் ஈடுபடுகின்றனர் (ஏசாயா 58:1-7). இச்செயல்களை தேவன் அங்கீகரிக்கவில்லை. "என் கண்களை உங்களைவிட்டு மறைக்கிறேன்; நீங்கள் மிகுதியாய் ஜெபம்பண்ணினாலும் கேளேன்" (1:15) என்றார். தேவன் அவர்களை மனந்திரும்பவும், மற்றவர்களுக்காக கரிசனை கொள்ளும் வெளிப்புறச் செயல்களைக் காட்டவும் கூறினார் (58:6-7). அவர்கள் அப்படிச் செய்தால், அவர் அவர்களிடம், "அப்பொழுது நீ கூப்பிடுவாய், கர்த்தர் மறுஉத்தரவு கொடுப்பார்; நீ சத்தமிடுவாய்: இதோ, நான் இருக்கிறேன் என்று சொல்லுவார். நுகத்தடியையும், விரல் நீட்டுதலையும், நிபச்சொல்லையும், நீ உன் நடுவிலிருந்து அகற்றி" (வ.9) என்றார். 
  
"நான் இங்கே இருக்கிறேன்" என்று சொல்லி, ஏழைகளிடம் நெருங்கிப் பழகுவோம். ஏனென்றால், உதவிக்காக நாம் இடும் கூக்குரல்களைக் கேட்டு, "நான் இங்கே இருக்கிறேன்" என்று தேவன் கூறுவதால். 
  

  

ஆவியில் விடுதலை

ஆர்வில்லுக்கோ, வில்பர்ரைட்டுக்கோ விமான ஓட்டிக்கான உரிமம் இல்லை. இருவரும் கல்லூரிக்கும் செல்லவில்லை. அவர்கள் பறக்க வேண்டுமென்ற லட்சியமும்,தைரியமும் கொண்ட மிதிவண்டி பழுதுபார்ப்பவர்கள். டிசம்பர் 17, 1903ல், அவர்கள் "ரைட் ஃப்ளையர்" என்ற பறக்கும் இயந்திரத்தை நான்கு முறை மாறி மாறி பறக்க செய்தனர். அவற்றில் நீண்ட பயணம் ஒரு நிமிடமே நீடித்தது, ஆனால் அது நமது உலகையே மாற்றிவிட்டது. 
  
பேதுருவுக்கும், யோவானுக்கும் பிரசிங்கிக்கும் உரிமம் இல்லை. இருவரும் வேதாகமக் கல்லூரிக்கு சென்றதும் இல்லை. அவர்கள் மீனவர்கள், இயேசுவின் ஆவியால் நிரப்பப்பட்டு, தைரியமாக நற்செய்தியை அறிவித்தனர். "அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என்றான்." (அப்போஸ்தலர் 4:12). 
  
ரைட் சகோதரர்களின் சுற்றத்தார் உடனடியாக அவர்களின் சாதனையைப் பாராட்டவில்லை, அவர்களின் சொந்த ஊர் செய்தித்தாள் அவர்களின் கதையை நம்பவில்லை; உண்மையாக இருந்தாலும், அவர்கள் பறந்தது குறுகிய தூரமாக தான் இருக்க முடியும் எனக் கூறியது. பலமுறை அவ்வாறு பறந்து சாதனை புரிந்த பின்னரே அவர்கள் உண்மையிலேயே என்ன செய்தார்கள் என பொதுமக்கள் அடையாளம் கண்டு கொண்டனர். மதத் தலைவர்களுக்கு பேதுருவையும், யோவானையும் பிடிக்கவில்லை, மேலும் இயேசுவைப் பற்றி மற்றவர்களிடம் சொல்வதை நிறுத்தும்படி கட்டளையிட்டார்கள். பேதுரு, "முடியவே முடியாது" என்றான். "நாங்கள் கண்டவைகளையும் கேட்டவைகளையும் பேசாமலிருக்கக்கூடாதே என்றார்கள்" (வ.20). 
  
நீங்களும் அங்கீகரிக்கப்பட்ட பட்டியலில் இல்லாமல் இருக்கலாம். ஒருவேளை நீங்கள் மற்றவர்களால் தூற்றப்பட்டிருக்கலாம். பரவாயில்லை. இயேசுவின் ஆவி உங்களிடம் இருந்தால், அவருக்காக தைரியமாக வாழ விடுதலையுடன் நீங்கள் இருக்கிறீர்கள்! 
  

  

சாக்லேட் பனி துகள்கள்

சுவிட்சர்லாந்தின் ஓல்டன் நகரில் வசிப்பவர்கள், நகரம் முழுவதும் சாக்லேட் சீவல் மழை பெய்ததால் ஆச்சரியமடைந்தனர். அருகிலுள்ள சாக்லேட் தொழிற்சாலையில் காற்றோட்ட அமைப்பு பழுதடைந்ததால், கோகோவைக் காற்றில் பரப்பியது. சாக்லேட் நன்மையால் அப்பகுதி நிறைந்தது. சாக்லேட் விரும்பிகளின் கனவு நனவாகியது. 
  
சாக்லேட் ஒருவரின் ஊட்டச்சத்துக்கு தேவையான சக்தியைத் தராது, ஆனால் தேவனோ இஸ்ரவேலருக்கு தேவையான ஊட்டச்சத்தான பரலோக மழையை அளித்தார். அவர்கள் பாலைவனத்தின் வழியாகப் பயணிக்கும்போது, எகிப்தில் விட்டுச் சென்ற பலவகையான உணவைப் பற்றி முணுமுணுக்கத் தொடங்கினர். அதனால் தேவன் அவர்களை நிலைநிறுத்த, "நான் உங்களுக்கு வானத்திலிருந்து அப்பம் வருஷிக்கப்பண்ணுவேன்” (யாத்திராகமம் 16:4) என்றார். ஒவ்வொரு நாளும் 
காலைப் பனி வற்றியபோது, ஒரு மெல்லிய துளி உணவு எஞ்சியிருந்தது. ஏறக்குறைய இரண்டு மில்லியன் இஸ்ரவேலர்கள் அன்றைய தினம் தங்களுக்கு எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு சேகரித்துக்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டனர். நாற்பது வருஷங்கள் பாலைவனத்தில் அலைந்து திரிந்த அவர்கள், தேவனின் இயற்கைக்கு அப்பாற்பட்ட உதவியாகிய மன்னாவால் போஷிக்கப்பட்டனர். 
  
மன்னாவைப் பற்றி அதிகக் குறிப்புகள் கொடுக்கப்படவில்லை. ஆனாலும், "அது கொத்துமல்லி அளவாயும் வெண்மைநிறமாயும் இருந்தது, அதின் ருசி தேனிட்ட பணிகாரத்திற்கு ஒப்பாயிருந்தது” (வ.31). மன்னா என்பது சாக்லேட்டை போல சீரான ருசிகரமான உணவாக இல்லாமல் இருந்தாலும் தனது ஜனங்கள் மீதான தேவனின் முன்னேற்பாடு அப்பட்டமாக தெரிந்தது. மன்னா என்பது தன்னை "ஜீவ அப்பம்" (யோவான் 6:48) என வெளிப்படுத்திய இயேசுவை நமக்குச் சுட்டிக் காட்டுகிறது, "நானே வானத்திலிருந்திறங்கின ஜீவ அப்பம்; இந்த அப்பத்தைப் புசிக்கிறவன் என்றென்றைக்கும் பிழைப்பான்” (வ. 51).