Archives: ஜூலை 2019

நாம் யார்?

என் வருங்கால மனைவியை என் குடும்பத்தினரிடம் அறிமுகம் செய்வதற்காக அழைத்துச் சென்றேன். என்னோடு பிறந்த, எனக்கு மூத்தவர்களான இருவர், கண்களில் மிளிர்ச்சியுடன், “இவனிடம் உனக்கு எது பிடித்திருந்தது?” என்று கேட்டார்கள். தனக்குப் பிடித்தளவுக்கு ஒரு நல்ல மனிதனாக தேவனுடைய கிருபையால் நான் வளர்ந்திருப்பதாக சிரித்தவாறே பதிலளித்தாள்.

அது ஒரு புத்திசாலித்தனமான பதில். நம்முடைய கடந்தகாலத்தைக் கடந்து, தேவன் எவ்வாறு நம்மைப் பார்க்கிறார் என்பதை அந்தப் பதில் மிகசரியாகப் பிரதிபலிக்கிறது. தேவனுடைய சபையை உபத்திரவப்படுத்தி வந்த சவுல் கிறிஸ்துவின் பிரசன்னத்தால் குருடாகிறார், அவரைக் குணப்படுத்தும்படி அனனியாவிடம் கிறிஸ்து சொல்கிறார் (அப். 9). அனனியாவுக்கு நம்பமுடியவில்லை, இயேசுவை விசுவாசித்தவர்களை உபத்திரவப்படுத்தி, மரணத்தண்டனைக்கு ஒப்புக்கொடுத்த சவுலையா தான் குணமாக்கவேண்டுமெனக் கேட்கிறார். சவுல் எப்படியிருந்தான் என்று பார்க்காமல், அவன் எப்படி மாறியிருக்கிறான் என்று பார்க்குமாறு அனனியாவிடம் தேவன் சொல்லுகிறார். புறஜாதியார் (யூதர் அல்லாதவர்கள்), ராஜாக்கள் உட்பட (வச. 15) அப்போது அறியப்பட்டிருந்த தேசங்கள் முழுவதிற்கும் நற்செய்தியைக் கொண்டுசெல்கிற சுவிசேஷகனாக மாறியிருந்தார். சவுலை அனனியா ஒரு பரிசேயனாகவும் உபத்திரவக்காரனாகவும் பார்த்தார், ஆனால் தேவன் அவரை அப்போஸ்தலனாகவும் சுவிசேஷகனாகவும் பார்த்தார்.

நான் இருக்கிற நிலை இதுதானே என்று சிலசமயங்களில் நம்மைபற்றி நாம் நினைக்கலாம். நம் தோல்விகளும் குறைகளுமே நம் கண்களுக்குத் தெரியலாம். ஆனால் நம்மைப் புதுச்சிருஷ்டிகளாக தேவன் பார்க்கிறார். நாம் எப்படி இருந்தோம் என்பதை அல்ல, இயேசுவுக்குள் நாம் எப்படி இருக்கிறோம், பரிசுத்த ஆவியானவரின் வல்லமையால் நாம் எப்படிப்பட்டவர்களாக மாறி வருகிறோம் என்று பார்க்கிறார். தேவனே, இப்படியே நாங்கள் எங்களையும் மற்றவர்களையும் பார்ப்பதற்கு எங்களுக்கு உதவிசெய்யும்!

புதுப்பிக்க ஆயத்தமாக இருக்கிறார்

நான் ஜெர்மனி நாட்டில் இராணுவத்தில் பணிபுரிந்தபோது, புத்தம்புதிய 1969 வோக்ஸ்வேகன் பீட்ல் கார் ஒன்றை வாங்கினேன். அருமையான கார்! அதன் வெளிப்புற அடர் பச்சை நிறத்தையும், உட்புற லெதர் அலங்காரத்தையும் பார்ப்பதற்கு அட்டகாசமாக இருக்கும். வருடங்கள் உருண்டோடின, வண்டியும் பழசாகியது. அதுபோதாதென்று ஒரு விபத்து வேறு. அதனால் காரின் பக்கவாட்டில் இருக்கும் கால்மிதி பகுதி சேதமடைந்தது. காரின் கதவுகளில் ஒன்று உடைந்துபோனது. “மீண்டும் புதுப்பிப்பதற்கு இந்தக் கார் முற்றிலும் தகுதியானதுதான்” என்று என் கற்பனையில் உதித்திருக்கலாம். அதிக பண செலவில் அதைப் புதுப்பித்திருக்கலாம். ஆனால் அப்படியெல்லாம் நான் செய்யவில்லை.

ஆனால் தேவனுக்கு நாம் நன்றி சொல்லவேண்டும். அவர் மிகச்சரியாகப் பார்க்கக்கூடியவர், அளவில்லா வளங்களைப் பெற்றிருப்பவர். வாழ்க்கையில் அடிபட்டு, உடைந்துபோனவர்களை அவர் கைவிடுவதில்லை. மீண்டும் புதுப்பிக்கப்படத் தகுதியானவர்கள் யார் என்பதுபற்றியும் புதுப்பிக்க வல்லவரான தேவனைப்  பற்றியும் சங்கீதம் 85 சொல்லுகிறது. தேவனுக்கு எதிராக கலகம் செய்ததின் விளைவாக இஸ்ரவேலர் நாடு கடத்தப்பட்டார்கள், பிறகு எழுபது வருடங்கள் கழித்து அந்தச் சிறையிருப்பிலிருந்து திரும்பிவந்தார்கள், அதை மனதில் வைத்தே இந்தச் சங்கீதம் எழுதப்பட்டிருக்கவேண்டும். தேவன் தங்கள் பாவங்களை மன்னித்து, தங்கள்மேல் தயவுகாட்டியதை எண்ணிப்பார்த்தார்கள் (வச. 1-3). உடனே தேவனிடம் உதவி கேட்கவும் (வச. 4-7), அவரிடமிருந்து நன்மைகளை எதிர்பார்க்கவும் (8-13) ஊக்கம் பெற்றார்கள். 

அடிபட்டு, நொந்து, உடைந்துபோகிற அனுபவம் யாருக்குத்தான் உண்டாவதில்லை? இவ்வாறு நேரிடுவதற்கு சிலசமயங்களில் நாமேகூட காரணமாக இருக்கலாம். ஆனால், நம்முடைய தேவன் புதுப்பித்தலின் தேவன், பாவமன்னிப்பின் தேவன். தாழ்மையோடு அவரிடம் செல்கிற எவருக்கும் நம்பிக்கை உண்டு. தம்மிடம் வருகிறவர்களை இருகரம் நீட்டி அவர் வரவேற்கிறார்; அவ்வாறு வருகிறவர்கள் அவர்களுடைய கரங்களில் தஞ்சம் புகலாம்.

எல்லாம் எதற்கும் பிரயோஜனமில்லை

ஹெராயின் போதை வஸ்துக்கு அடிமைப்படுவது வருத்தகரமானது, துயர்தரக்கூடியது. ஹெராயினின் அளவுக்கேற்ப உடலும் பழகிவிடுவதால், அதேயளவு போதை கிடைப்பதற்கு ஹெராயினின் அளவை அதிகரிக்கவேண்டிய அவசியம் உண்டாகிவிடுகிறது. ஓரளவுக்கு மேல் அதிகமாக உட்கொள்ளும்போது, அது உயிரைப் பறித்துவிடுகிறது. அளவுக்கதிகமாக ஹெராயின் உட்கொண்டு யாராவது மரித்துவிட்டதாக ஹெராயின் அடிமைகள் கேள்விப்படும்போது, உடனே அவர்களுக்கு பயம் உண்டாவதில்லை; மாறாக “அது எங்கே கிடைக்கிறது?” என்று விசாரிப்பார்கள்.

இந்தக் கீழ்த்தரமான போக்குபற்றி ஸ்குரூடேப் லெட்டர்ஸ் எனும் புத்தகத்தில் சி.எஸ்.லூயிஸ்  எச்சரித்திருக் கிறார். பாவச்சோதனையை சாமர்த்தியமாகக் கொடுப்பது எப்படியென ஒரு பிசாசு விளக்கம் கொடுப்பதுபோல அந்தப் புத்தகத்தில் கற்பனைசெய்து எழுதியிருப்பார். இன்பம் தருகிற ஏதாவது விஷயத்தில் முதலில் ஈடுபட வேண்டும், தேவன் அனுமதித்திருக்கிற நல்ல இன்பங்களாக இருந்தாலும் பரவாயில்லை. ஆனால் தேவன் தடைசெய்திருக்கும் விதத்தில் அதை அனுபவிக்கும்படித் தூண்டவேண்டும். தூண்டுதலுக்கு மனிதன் இணங்கினதுமே, அந்த இன்பம் அவனுக்குக் கிடைக்காமல் செய்து, அதற்காக அவன் அதிகம் ஏங்கும்படி அவனை வசியப்படுத்தவேண்டும். “அந்த இன்பத்தை கொஞ்சம்கொஞ்சமாகக் குறைத்து, அதைப் பெறுவதற்கான ஆசையை அதிகரித்துக் கொண்டே இருக்கவேண்டும். இறுதியில், “அந்த மனிதனின் ஆத்துமாவைச் சிறைப்படுத்தி, அவனுக்கு எதுவுமே கிடைக்காமல் செய்யவேண்டும்” என்று அந்தப் பிசாசு சொல்லுவதாக எழுதியிருப்பார்.

 இந்த நாசகரமான சுழற்சியை பாலின்ப பாவச்சோதனையை வைத்து நீதிமொழிகள் 7 விவரிக்கிறது. பாலுணர்வு என்பது தேவன் தந்திருக்கிற நல்லதொரு ஈவு. ஆனால் பாலுணர்வு நுகர்வை திருமண பந்தத்திற்கு வெளியே அனுபவிக்க முயலும்போது, ‘ஒரு மாடு அடிக்கப்படும்படி செல்வது’ போலாகும்
(வச. 22). நம்மைவிட பலசாலிகளான மனிதர்கள் எல்லாம் தீங்கான விஷயங்களை அனுபவிக்க முயன்று, தங்களையே அழித்திருக்கிறார்கள். எனவே, “செவிகொடுங்கள்,” “உன் இருதயம் (தவறான) வழியிலே சாயவேண்டாம்” (வச. 24-25). பாவம் நம்மை மயக்கலாம், அடிமைப்படுத்தலாம், ஆனால் எப்படியானாலும் முடிவு மரணம்தான். வசனம் 27. தேவனுடைய பெலத்தால், பாவச்சோதனையை மேற்கொள்ளும்போது, அவருக்குள் மெய்யான சந்தோஷத்தையும் மனதிருப்தியையும் பெற்றுக்கொள்ளலாம்.

தேவனுக்காகப் பிரயாசப்படுதல்

இங்கிலாந்தில் ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் வில்லியம் கேரி. பின்னாளில் அவர் என்ன சாதிக்கப்போகிறார் என்று அவர் காலத்தில் (1761-1834), அவருடைய கிராமத்தில் வாழ்ந்த யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால் நவீனக்கால ஊழியப் பணிகளின் தந்தை என்று அவர் இன்று அழைக்கப்படுகிறார். அவருடைய பெற்றோர் நெசவு தொழிலாளர்கள். வில்லியம் கேரியும்கூட ஆசிரியராகவும், செருப்புத் தைப்பவராகவும் வேலை செய்தார்; ஆனால் அதில் அவர் பெரிதாக ஜொலிக்கவில்லை. கிரேக்கம், எபிரெயம், லத்தீன் போன்ற மொழிகளைக் கற்றுக் கொண்டார். இந்தியாவில் நற்செய்தியை அறிவிக்கவேண்டும் என்பது அவருடைய கனவு. பல வருடங்களுக்கு பிறகு அந்தக் கனவு நிஜமாகியது. ஆனால் அவர் பட்ட கஷ்டங்கள் கொஞ்சமல்ல. அவருடைய குழந்தை மரித்துப்போனது, மனைவி மனநோய்க்கு ஆளானார், அவர் யார் மத்தியில் ஊழியம் செய்தாரோ அவர்களிலும்கூட பல வருடங்களாக எந்த மாற்றமுமே காணப்படவில்லை.

ஆனாலும் அவர் முழு வேதாகமத்தையும் ஆறு மொழிகளில் மொழிபெயர்த்திருக்கிறார்; வேதாகமத்தின் சில பகுதிகளை இருபத்தொன்பது மொழிகளில் மொழிபெயர்த்திருக்கிறார். பல கஷ்டங்களின் மத்தியிலும் அவரால் எவ்வாறு தொடர்ந்து சேவைபுரிய முடிந்தது? “என்னால் கடுமையாகப் பிரயாசப்படமுடியும். குறிப்பிட்ட இலக்கை அடைய என்னால் விடாமல் முயற்சிசெய்யமுடியும்” என்று அவர் சொன்னார். என்னென்ன சோதனைகள் வந்தாலும் தேவனுக்குச் சேவைசெய்ய தன்னை அர்ப்பணித்திருந்தார்.

இவ்வாறு கிறிஸ்துவுக்கு நம்மை தொடர்ந்து அர்ப்பணிக்க வேண்டியது அவசியமென எபிரெயருக்கு எழுதும்போது பவுல் ஆலோசனை கூறுகிறார். தேவனைக் கனப்படுத்த விரும்பினால் ‘அசதியாயிராமல்’ (எபி. 6:11) “முடிவுபரியந்தம் அப்படியே ஜாக்கிரதையைக் காண்பிக்க வேண்டுமென்று” தன் வாசகர்களுக்கு அறிவுறுத்துகிறார் (வச. 12).

தேவன் தன்னுடைய தேவைகளை எல்லாம் சந்தித்து வந்ததாக பின்னான வருடங்களில் வில்லியம் கேரி சொன்னார். “தேவன் தம்முடைய வாக்குத்தத்தங்களை ஒரு நாளும் நிறைவேற்றத் தவறவில்லை; எனவே அவருடைய பணியை நானும் செய்யாமல் இருக்கமுடியாது” என்று சொன்னார். நாமும்கூட ஒவ்வொரு நாளும் தேவனுக்காகச் சேவைசெய்யும்படி அவர் தாமே நம்மைப் பெலப்படுத்துவாராக.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

இணைந்து இயேசுவுக்கு ஊழியம் செய்தல்

மைக்ரோனேசியாவில் உள்ள ஓர் தீவில் சிக்கித்தவிக்கும் இரண்டு ஆண்களுக்கு உதவ மீட்புப் பணியாளர்கள் பிரயாசப்பட்டனர். அவர்களுக்கு சுகாதார நெருக்கடி ஏற்படுவதற்கு முன்பு அவர்களை விரைந்து காப்பாற்றுவதற்கு குழுவாய் செயல்படவேண்டியது அவசியமாய் தோன்றியது. அவர்களை முதலில் கண்டுபிடித்த விமானி, அவர்களின் அருகாமையிலிருந்த ஆஸ்திரேலிய கப்பலுக்கு செய்தியனுப்பினார். கப்பல், இரண்டு ஹெலிகாப்டர்களை அனுப்பியது, அவை உணவு, தண்ணீர் மற்றும் மருத்துவ சேவைகளை வழங்கின. பின்னர், அமெரிக்க கடலோர காவல்படை அங்கு வந்து ஆட்களை சரிபார்த்து தகவல் அளித்தனர். இறுதியாக, ஓர் மைக்ரோனேசிய ரோந்துப் படகு அவர்களை பத்திரமாக அழைத்துக்கொண்டு வந்துவிட்டது.

நாம் இணைந்து செயல்பட்டால் நிறைய சாதிக்க முடியும். பிலிப்பிய விசுவாசிகள் அப்போஸ்தலர் பவுலை ஆதரிக்க தங்கள் முயற்சிகளை ஒருங்கிணைத்தனர். லீதியாளும் அவரது குடும்பத்தினரும் அவரை தங்கள் வீட்டிற்குள் வரவேற்றனர் (அப்போஸ்தலர் 16:13-15). கிலேமெந்து, எயோதியாள் மற்றும் சிந்திகேயாள் (இவர்கள் ஒத்துப்போகவில்லை) அனைவரும் நற்செய்தியைப் பரப்புவதற்கு அப்போஸ்தலருடன் நேரடியாக வேலை செய்தனர் (பிலிப்பியர் 4:2-3). பின்னர், பவுல் ரோமில் சிறையில் அடைக்கப்பட்டபோது, தேவாலயம் (விசுவாசிகள்) அவரது பராமரிப்புக்குத் தேவைப்படும் பொருளாதாரத்தை சேகரித்து, எப்பாபிராத்து மூலம் (வச. 14-18) விநியோகித்தது. பவுல் அப்போஸ்தலரின் ஊழியத்திற்காக பிலிப்பிய திருச்சபை தொடர்ந்து ஜெபத்தில் தரித்திருந்திருக்கக் கூடும் (1:19).

இந்த பண்டைய திருச்சபை விசுவாசிகள் ஒன்றாக இணைந்து ஊழியம் செய்ததற்கான எடுத்துக்காட்டுகள் இன்று நம்மை ஊக்குவிக்கும். தேவன் நம்மை வழிநடத்தி, நமக்கு அதிகாரம் கொடுத்ததால், ஜெபிக்கவும் மற்றவர்களுக்கு ஊழியம்செய்யவும், சக விசுவாசிகளுடன் ஒத்துழைக்கவும், நம்மால் இயன்றதைவிட அதிகமாக செய்யமுடிகிறது. “தனித்து வேலை செய்தால் நாம் ஒரு துளி, ஆனால் இணைந்து வேலை செய்தால் நாம் சமுத்திரம்.”

 

தேவனே என் துணையாளர்

என் நண்பர் ராலே தனது எண்பத்தைந்தாவது பிறந்தநாளை நோக்கி விரைகிறார்! அவரை நான் முதன்முதலில் சந்தித்ததிலிருந்து முப்பத்தைந்து வருடங்களுக்கும் மேலாக எனக்கு ஊக்கமளிக்கக்கூடிய ஆதாராமாக அவர் இருந்துள்ளார். பணி ஓய்வு பெற்ற பிறகு, அவர் ஓர் புத்தகம் எழுதும் பணியை நிறைவுசெய்துவிட்டு, வேறொரு வேலையை செய்வதாக என்னிடம் கூறினார். அவற்றைக் கேட்க எனக்கு ஆர்வமாயிருந்தது ஆனால் ஆச்சரியப்படவில்லை. 

தனது எண்பத்தைந்து வயதில், வேதாகமத்தில் இடம்பெற்றுள்ள காலேப் தன் ஓட்டத்தை நிறுத்த தயாராக இல்லை. தேவன் இஸ்ரவேலுக்கு வாக்களித்த கானான் தேசத்தை சுதந்தரிப்பதற்காக பல சகாப்தங்களாக வனாந்தர வாழ்க்கை மற்றும் யுத்தங்கள் ஆகியவற்றின் மத்தியிலும், தேவபக்தியும் விசுவாசமும் அவரை தாங்கியது. அவர், “மோசே என்னை அனுப்புகிற நாளில், எனக்கு இருந்த அந்தப் பெலன் இந்நாள்வரைக்கும் எனக்கு இருக்கிறது; யுத்தத்திற்குப் போக்கும் வரத்துமாயிருக்கிறதற்கு அப்போது எனக்கு இருந்த பெலன் இப்போதும் எனக்கு இருக்கிறது” (யோசுவா 14:11) என்று உரைக்கிறார். அவர் எந்த வழிகளில் ஜெயங்கொள்வார்? “கர்த்தர் என்னோடிருப்பாரானால், கர்த்தர் சொன்னபடி, அவர்களைத் துரத்திவிடுவேன்” (வச. 12) என்று காலேப் பதிலளிக்கிறார். 

வயது, வாழ்க்கையின் நிலை அல்லது சூழ்நிலை ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல், தேவனை முழுமனதோடு பற்றிகொள்ளும் யாவருக்கும் தேவன் உதவிசெய்ய வல்லவராயிருக்கிறார். நமக்கு உதவும் நம் இரட்சகராகிய இயேசுவில், தேவன் வெளிப்பட்டார். சுவிசேஷங்கள், கிறிஸ்துவிடத்திலிருந்து தேவன்மீது விசுவாசம் வைப்பதை நமக்கு போதிக்கிறது. உதவிக்காக தேவனை அண்டிய யாவருக்கும் தேவன் தன் அக்கறையையும் இரக்கத்தையும் வெளிப்படுத்துகிறார். எபிரெய நிருப ஆசிரியர் “கர்த்தர் எனக்குச் சகாயர், நான் பயப்படேன்” (எபிரெயர் 13:6) என்று அறிக்கையிடுகிறார். இளைஞரோ அல்லது வயதானவரோ, பலவீனமானவரோ அல்லது பலவானோ, கட்டுண்டவரோ அல்லது சுதந்திரவாளியோ, வேகமாக ஓடுகிறவரோ அல்லது முடவனோ, யாராக இருந்தாலும் இன்று அவருடைய உதவியைக் கேட்பதிலிருந்து நம்மைத் தடுப்பது எது?

 

கிறிஸ்துவில் ஐக்கிய பன்முகத்தன்மை

பேராசிரியர் டேனியல் போமன் ஜூனியர் தனது “சர்வீஸ் அன் தி ஸ்பெக்ட்ரம்” என்ற கட்டுரையில், ஓர் மனஇறுக்கம் கொண்ட நபராக தனது தேவாலயத்திற்கு எவ்வாறு சேவைசெய்வது என்பது குறித்த முடிவுகளை மேற்கொள்வதில் உள்ள சிரமத்தைப் பற்றி எழுதுகிறார். அவர் குறிப்பிடும்போது “இதுபோன்ற மனஇறுக்கம் கொண்ட மக்கள் ஒவ்வொரு முறையும் முன்னோக்கி செல்ல ஓர் புதிய பாதையை உருவாக்கவேண்டும். அவை ஓர் தனித்துவமான பாதையை அமைக்கிறது... மன, உணர்ச்சி மற்றும் உடல் ஆற்றல்... தனிமை/புத்துணர்வூட்டும் தருணங்கள்; உணர்வு உள்ளீடுகள் மற்றும் ஆறுதல் நிலை...அன்றைய நாள்பொழுது; நாம் நமது பெலனானவைகளுக்காக மதிக்கப்படுகிறோமா மற்றும் உணரப்பட்ட குறைபாடுகளுக்காக ஒதுக்கப்படாமல் நமது தேவைகளுக்கு இடமளிக்கப்படுகிறோமா இல்லையா என்று சிந்தித்தல்...; இன்னும் பற்பல காரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.” அதுபோன்ற தீர்மானங்கள் “மக்களின் நேரத்தையும் ஆற்றலையும் மாற்றியமைக்கும்போது, அவை மற்றவர்களையும் நம்மையும் மறுசீரமைக்க உதவும்” என்று போமன் எழுதுகிறார். 

1 கொரிந்தியர் 12இல் பவுல் விவரிக்கும் பரஸ்பர பார்வை ஓர் குணப்படுத்தும் தீர்வாக இருக்கும் என்று போமன் நம்புகிறார். அதில் 4-6 வசனங்களில், தேவன் தன் ஜனங்கள் ஒவ்வொருவருக்கும் வரங்களை “அவனவனுடைய பிரயோஜனத்திற்கென்று அளிக்கப்பட்டிருக்கிறது” (வச. 7) என்று குறிப்பிடுகிறார். ஒவ்வொருவரும் கிறிஸ்துவின் சரீரத்தில் இன்றியமையாத அவயங்கள் (வச. 22). திருச்சபை அனைவரையும் மாற்றமுடியாத ஒரே பாதையில் பயன்படுத்தாமல், அவரவருக்கு தேவன் கொடுத்த வரங்களின் அடிப்படையில் தேவனுடைய இராஜ்யத்திற்காய் அவற்றை நேர்த்தியாய் பிரயோகிக்க அனுமதிக்கலாம். 

இந்த வழியில், ஒவ்வொரு நபரும் செழிப்பையும் முழுமையையும் காண்பதோடு, கிறிஸ்துவின் சரீரத்தில் தங்கள் மதிப்புமிக்க இடத்தில் பாதுகாப்பாக இருக்க முடியும் (வச. 26).