Archives: பிப்ரவரி 2019

பெரிய செய்தி!

எங்களுடைய உள்ளுர் செய்தித்தாளில் வந்த ஒரு செய்தி குறுகியதாயிருந்தாலும் இருதயத்திற்கு இதமாய் இருந்தது. விசுவாசத்தை அடிப்படையாகக் கொண்டு, உறுதியான குடும்ப பிணைப்பை ஏற்படுத்தும்படி நடத்தப்பட்ட ஒரு நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர், சிறைச்சாலையில் வாழும் ஒரு குழுவினருக்கு ஓர் அரிய வாய்ப்பளிக்கப்பட்டது. அவர்கள் தங்கள் குடும்பத்தினரை வெளிப்படையாகச் சந்திக்கலாம் என்பதே அந்த வாய்ப்பு. சிலர் தங்கள் குழந்தைகளை பல ஆண்டுகளாகப் பார்த்ததேயில்லை. ஒரு கண்ணாடித் தகட்டின் வழியே பேசிக்கொள்வதற்குப் பதிலாக அவர்கள் தாங்கள் நேசிக்கும் நபரைத் தொட்டு பிடித்துக் கொள்ளலாம். அந்த குடும்பங்கள் நெருக்கமாக வந்த போது, அவர்களின் கண்களில் கண்ணீர் வழிந்தது. அவர்களுடைய உள்காயங்கள் ஆற ஆரம்பித்தன.

அநேக வாசகர்களுக்கு இது வெறும் கதையாக இருந்திருக்கலாம். ஆனால், அந்த குடும்பங்களுக்கு, அது ஒரு வாழ்வை மாற்றும் நிகழ்வு. சிலருக்கு அது மன்னிப்பதற்கும் மனம் பொருந்தலுக்கும் ஆரம்பமாயிருந்தது.

தேவன் நம்முடைய பாவங்களை மன்னித்ததும், நம்மோடு ஒப்புரவை ஏற்படுத்திக் கொண்டதும் அவருடைய குமாரன் மூலமாகவே நடைபெற்றது. இது கிறிஸ்தவ நம்பிக்கைக்கு அப்பாற்பட்ட, மேம்பட்ட ஓர் உண்மை. அந்த செய்தித் தாளில் வெளியான மனம் பொருந்துதலின் செய்தி, இயேசுவின் தியாகத்தின் மூலம் இவ்வுலகிற்கு மட்டுமல்ல, உனக்கும் எனக்கும் கொடுத்துள்ள ஒப்புரவாகுதலின் மிகப் பெரிய செய்தியை நமக்கு நினைப்பூட்டுகின்றது.

நாம் நடப்பித்த ஏதோ ஒரு பாவச் செயலின் குற்ற உணர்வினால், நாம் மேற்கொள்ளப்பட்டவர்களாயிருக்கும் நேரத்தில் நாம் பற்றிக்கொள்ள வேண்டிய செய்தி அது தேவனுடைய அளவற்ற இரக்கம் நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது என்ற உண்மையே அந்த செய்தி. நம்முடைய மீறுதல்களினிமித்தம் இயேசு மரித்தார். எனவே நாம் நம்முடைய பாவங்கள் கழுவப்பட்டவர்களாகத் தந்தையிடம் வருவோம். இயேசு நம்மை, 'உறைந்த மழையிலும் வெண்மையாய்" (சங். 51:7) நம்மைக் கழுவுகின்றார். நாம் தேவனுடைய இரக்கத்தைப் பெற தகுதியற்றவர்களென நினைக்கும் நேரங்களில் நாம் சார்ந்திருக்கக் கூடிய ஒரே காரியத்தை நாம் பற்றிக் கொள்வோம். அது தேவனுடைய கிருபையும், மாறாத மிகுந்த இரக்கமுமே (வச. 1).

பாலகர் வாயினால்

பத்து வயது நிரம்பிய வயோலா ஒரு மரக் கொப்பை மைக்ரோபோன் போல பாவித்து, ஒரு போதகரைப் போன்று பிரசங்கம் செய்து கொண்டிருந்ததை கவனித்த மிச்சேல், கிராம ஊழியத்தின் போது வயோலாவிற்கு பிரசங்கம் செய்ய ஒரு வாய்ப்பளிக்கத் தீர்மானித்தாள். வயோலாவும் அதற்குச் சம்மதித்தாள். மிச்சேல், தெற்கு சூடானில் ஊழியம் செய்யும் ஒரு மிஷனரி. 'அந்தக் கூட்டம் அதிக மகிழ்ச்சியினால் நிரப்பப்பட்டது... கைவிடப்பட்ட ஒரு சிறு பெண் அந்தக் கூட்டத்தினருக்கு முன்பாக ராஜாதி ராஜாவின் மகளாக அதிகாரத்தோடு நிற்கின்றாள். தேவனுடைய இராஜ்யத்தின் உண்மையை வல்லமையாக, அவர்களோடு பகிர்ந்து கொள்கின்றாள். பாதி கூட்டத்தினர் இயேசுவை தங்களுடைய சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ள முன் வந்தனர்" என்று மிச்சேல் தன்னுடைய 'அன்பிற்கு ஒரு முகமுண்டு" என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளாள். அந்தக் கூட்டத்தினர். அன்று ஒரு குழந்தையின் வாயினால் சுவிசேஷம் பிரசங்கிக்கப்படும் என எதிர்பார்க்கவில்லை. இந்த நிகழ்வு என்னுடைய மனதில் சங்கீதம் 8ல் காணப்படுகின்ற 'குழந்தைகள், பாலகர் வாயினால்" என்ற சொற்றொடரை நினைவிற்குக் கொண்டு வந்தது. தாவீது 'உம்முடைய சத்துருக்களினிமித்தம் குழந்தைகள், பாலகர் வாயினால் பெலன் உண்டுபண்ணினீர்" என எழுதுகின்றார் (8:2). இதனையே இயேசு மத்தேயு 21:16ல் குறிப்பிடுகின்றார். தேவாலயத்தில் ஆர்ப்பரிக்கின்ற பிள்ளைகளை பிரதான ஆசாரியரும், வேதபாரகரும் கண்டு கோபமடைந்தபோது இயேசு இந்த வசனத்தை அவர்களுக்குச் சுட்டிக் காட்டுகின்றார். அந்த தலைவர்களுக்கு குழந்தைகள் இடறுதலாகக் காணப்பட்டனர். ஆனால், இயேசு அவர்களுக்கு வேத வாக்கியத்தைச் சுட்டிக் காண்பித்து, தேவன் குழந்தைகளின் துதியைப் பெரிதாகக் கருதுவதாகக் கூறுகின்றார். அந்தத் தலைவர்கள் செய்வதற்கு மறுத்த ஒன்றை குழந்தைகள் நிறைவேற்றினர். தாங்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த மேசியாவை குழந்தைகள் மகிமைப்படுத்தினர்.

வயோலாவும் தேவாலயத்தில் இருந்த குழந்தைகளும் காண்பித்தது போல, தேவன் ஒரு சிறு குழந்தையைக் கூட தனக்கு மகிமையுண்டாக பயன்படுத்த முடியும். குழந்தைகளின் உள்ளத்திலிருந்து மனமார்ந்த துதி வெள்ளம் போல வந்தது.

தவறான தகவல்களைச் செயல்படுத்தாதே

சமீபத்தில் நான் நியூயார்க் பட்டணத்திற்குச் சென்றிருந்தபோது, என் மனைவியும் நானும் ஒரு பனிபொழிவின் சாயங்காலத்தில், தைரியமாக அதனூடே செல்ல விரும்பினோம். எனவே நாங்கள் எங்கள் விடுதியிலிருந்து கியூபன் சிற்றுண்டியகம் வரையிலும் மூன்று மைல் பயணத்திற்கு ஒரு வாடகை கார் ஒன்றினை எடுத்தோம். வாடகைக் கார் சேவை பதிவில் விளக்கங்களைப் பார்த்த போது, நான் அதிர்ச்சியடைந்தேன். ஒரு சிறிய தொலைவு பயணத்திற்கு 1547.26 டாலர்கள் என குறிப்பிட்டிருந்தனர். அந்த அதிர்ச்சியிலிருந்து மீண்டு, மேலும் பார்த்த போது தான், நான் தவறுதலாக எங்கள் வீட்டிற்கு திரும்புவதற்கு எனப் பதித்திருந்ததைக் கவனித்தேன். அது பல நூறு மைல்களுக்கு அப்பாலுள்ள இடம்!

நீ தவறான செய்தியின் மீது செயல்பட்டுக் கொண்டிருந்தால் அதன் முடிவு எப்பொழுதும் அழிவுக்கு நேராகத்தானிருக்கும். எனவேதான் நீதிமொழிகள், 'உன் இருதயத்தை புத்திமதிக்கும், உன் செவிகளை அறிவின் வார்த்தைகளுக்கும் சாய்ப்பாயாக" என வலியுறுத்துகின்றது (நீதி. 23:12). அறிவிலிகளிடமும், தங்களுக்கு அதிகம் தெரியுமென நடிப்பவர்களிடமும், தேவனுக்கு தங்கள் முதுகைக் காட்டுபவர்களிடமும் ஆலோசனையைத் தேடுவாயானால், நிச்சயமாகப் பிரச்சனைகளையே சந்திக்க நேரிடும். 'மூடன்... உன் வார்த்தைகளின் ஞானத்தை அசட்டை பண்ணுவான்" (வச. 9) அவர்கள் நம்மை வழிவிலகிப்போகப் பண்ணுவார்கள், உதவமாட்டார்கள், தவறாக வழிகாட்டுவார்கள், இன்னும் அழிவுக்குள்ளாக்கும் ஆலோசனைகளையே தருவர்.

ஆனால், உன் செவியை 'அறிவின் வார்த்தைகளுக்குச் சாய்ப்பாயாக" (வச. 12) நம்முடைய இருதயத்தை தேவனுடைய விடுதலை தரும் ஆலோசனைகளுக்கும் தெளிந்த நம்பிக்கையின் வார்த்தைகளுக்கும் திறபப்பாயாக. தேவனுடைய ஆழமான வழியைக் கண்டுபிடித்தவர்களுக்கு செவி கொடுப்போமாகில் அவர்கள் நம்மை தேவ ஞானத்தைப் பெறவும், அதனைப் பின்பற்றவும் உதவுவர். தேவ ஞானம் ஒரு போதும் நம்மை பாதை தவற விடாது. ஆனால், அது நம்மை ஜீவனுக்கு நேராகச் செல்ல ஊக்கப்படுத்தி, முடிவுபரியந்தம் வழிநடத்தும்.

ஃபீக்காவின் உற்சாகம்

எங்கள் பட்டணத்தில், என் வீட்டினருகிலுள்ள காப்பியகத்தின் பெயர் 'பீக்கா" இது ஸ்வீடன் வார்த்தை. இதற்கு குடும்பத்தினரோடும் உடன் பணிபுரிபவர்களோடும் அல்லது நண்பர்களோடும் உடன் பணிபுரிபவர்களோடும் அல்லது நண்பர்களோடும் ஒர் இடைவெளியில் காப்பியும், சிற்றுண்டியும் எடுத்துக் கொள்ளலாம் என அர்த்தம், நான் ஸ்வீடன் நாட்டினன் அல்ல. ஆனாலும் ஃபீக்காவின் உற்சாகம், நாம் இயேசுவைப் பற்றி நேசிக்கும் ஒரு காரியத்தை எனக்கு விளக்கியது. இயேசுவும் பிறரோடு உணவருந்தவும்,  இளைப்பாறவும் ஓர் இடைவெளியை எடுத்துக் கொண்டார்.

இயேசுவும் பிறரோடு சேர்ந்து உணவருந்தியதும் தற்செயலாய் நடைபெற்றவையல்லவென வேத வல்லுனர்கள் சொல்கின்றனர். வேதவல்லுனர் மாற்கு கிளான்வில் அவற்றை, பழைய ஏற்பாட்டில் குறிப்பிட்டுள்ள இஸ்ரவேலரின் விருந்தினையும் பண்டிகையும் போன்ற ஒரு 'மகிழ்ச்சியான இரண்டாம் விருந்து" என அழைக்கின்றார். 'முழு உலகிற்கும் மகிழ்ச்சி, கொண்டாட்டம் மற்றும் நீதியின் மையமாக" இஸ்ரவேலரை தேவன் வைத்திருந்ததைப் போன்று இயேசுவும் விருந்தின் மையமாகத் திகழ்ந்தார்.

5000 பேரை போஷித்தது முதல் கடைசி ராப்போஜனம் மற்றும் உயிர்த்தெழுந்த பின்னர் இரண்டு சீடர்களோடு உணவருந்தியது வரையில் (லூக். 24:30) இயேசுவின் போஜன ஊழியம், நம்மையும் நம்முடைய தொடர் போராட்டங்களிலிருந்து விடுபட்டு சிறிது நின்று அவரோடு சில நேரம் செலவிட அழைக்கின்றது. அந்த இரண்டு சீடர்களும் இயேசுவோடு உணவருந்தும் மட்டும் இயேசுவை உயிர்த்தெழுந்த கிறிஸ்துவாக கண்டுபிடிக்க முடியவில்லை. 'அவர்களோடு அவர் பந்தியிருக்கையில் அவர் அப்பத்தை எடுத்து, ஆசீர்வதித்து, அதைப் பிட்டு அவர்களுக்குக் கொடுத்தார். அப்பொழுது அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டு அவரை அறிந்தார்கள்" 9வச. 30-31) அவரே உயிர்த்தெழுந்த கிறிஸ்து எனக் கண்டுகொண்டனர்.

சமீபத்தில் என்னுடைய நண்பனோடு அந்த ஃபீக்காவில் அமர்ந்திருந்து சூடான சாக்லேட் பானமும், சுருள்களும் சாப்பிட்டபோது, நாங்கள் இயேசுவைக் குறித்துப் பேசிக் கொண்டிருந்தோம். அவரே நம் வாழ்வில் ஜீவ அப்பம் நாமும் அவரோடு போஜனபந்தியில் நேரம் செலவிட்டு அவரைக் குறித்து இன்னும் தெரிந்து கொள்வோம்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

தேவனால் விரும்பப்படுதலும், நேசிக்கப்படுதலும்

முகநூலில் “பிடித்திருக்கிறது” என்பதற்கு அடையாளமான அந்த விருப்ப குறி பொத்தான் முகநூலின் ஆரம்பத்திலிருந்தே இருப்பது போலத் தோன்றும். ஆனால் அது 2009 இல் தான் நடைமுறைக்கு வந்தது.

இந்த ‘விருப்ப’ பொத்தானை வடிவமைத்த ஜஸ்டின் ரோசன்ஸ்டைன் கூறுகையில், ‘ஒருவரையொருவர் கிழித்து கீழ்த்தள்ளும் உலகத்திற்கு மாறாக, ஊக்கப்படுத்தி உயர்த்தும்’ ஒரு உலகை உருவாக்கத் தான் விரும்பியதாகத் தெரிவித்தார். ஆனால் தனது கண்டுபிடிப்பு, பயனாளர்களை இந்த சமூக ஊடகத்தின் அடிமையாக்கிய விளைவைக் கண்டு ரோசன்ஸ்டைன் வருந்தினார்.

ரோசன்ஸ்டைனின் இந்த படைப்பு, நமது இணைப்பு மற்றும் அங்கீகாரத்திற்கான அடிப்படைத் தேவையை வெளிப்படுத்துவதாக நான் எண்ணுகிறேன். பிறர் நம்மை அறியவும், கவனிக்கவும், விரும்பவும் வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கிறோம். ‘விருப்ப’ பொத்தான்தான் புதியது, ஆனால் அறிவதற்கும், அறியப்படுவதற்குமான நமது விருப்பம், தேவன் மனிதனை உண்டாக்கிய நாள் தொட்டே உள்ளது.

இன்றும், ‘விருப்ப’ பொத்தான் நமது விருப்பத்தைத் தனிக்கவில்லை. சரிதானே? அதிர்ஷ்டவசமாக மின்னியல் அங்கீகாரத்தை விட, மிக ஆழமாக நேசிக்கும் தேவனை நாம் ஆராதிக்கிறோம். எரேமியா 1:5 ல் தனக்கென்று தீர்க்கதரிசியை அழைக்கையில், அதில் உள்ள ஆழ்ந்த நோக்கத்தையும், பிணைப்பையும் காண்கிறோம். “நான் உன்னைத் தாயின் வயிற்றில் உருவாக்குமுன்னே உன்னை அறிந்தேன்; நீ கர்ப்பத்திலிருந்து வெளிப்படுமுன்னே நான் உன்னைப் பரிசுத்தம்பண்ணி...என்றாா்.கருவுறுதலுக்கு முன்பே தீர்க்கதரிசியைத் தேவன் அறிந்திருந்தார். மேலும் அர்த்தமுள்ள, நோக்கம் நிறைந்த வாழ்க்கைக்காக அவரை வடிவமைத்தார் (வ. 8-10). நம்மை மிகவும் நெருக்கமாக அறிந்த, நேசிக்கும், விரும்பும் இந்த தகப்பனை நாம் அறிகையில், அவர் நம்மையும் ஒரு நோக்கமுள்ள வாழ்க்கைக்கு அழைக்கிறார். 

 

தாகமும், நன்றியுள்ளமும்

நானும் என் இரண்டு நண்பர்களும் ஒரு மலைப்பாதையில் சாகச பயணம் செய்ய விரும்பினோம். அதற்கு முன், எங்கள் நடைப்பயணத்தைத் தொடங்கும் போது போதுமான தண்ணீர் இருக்கிறதா என்று நாங்கள் சந்தேகப்பட்டதுபோலவே, அது வேகமாகத் தீர்ந்தது. விளிம்பை அடைய இன்னும் சில தூரமிருந்த நிலையில் நாங்கள் முற்றிலும் தண்ணீர் இல்லாமல் இருந்தோம். மூச்சுத் திணறி ஜெபத்துடன் சுவாசித்தோம். பிறகு நாங்கள் ஒரு மூலையைச் சுற்றி வருகையில், ஒரு அதிசயம் நடந்தது. மூன்று தண்ணீர் பாட்டில்கள் பாறையில் ஒரு பிளவில் மாட்டி வைக்கப்பட்டிருந்ததைக் கண்டோம், “உங்களுக்கு இது தேவை என்று தெரியும். மகிழுங்கள்!” என்று ஒரு குறிப்புமிருந்தது. நாங்கள் ஒருவரையொருவர் நம்பமுடியாமல் பார்த்துக் கொண்டு, தேவனுக்கு நன்றி சொல்லி, மிகவும் தேவையான நீரைப் பருகி, கடைசிக் கட்டத்திற்குப் பயணித்தோம். நான் என் வாழ்நாளில் இவ்வளவு தாகமாகவும், நன்றியுடனும் இருந்ததில்லை.

சங்கீதக்காரனுக்கு மலையேறிய அனுபவம் இல்லை. ஆனால் ஒரு மானுக்குத் தாகமெடுக்கையில் எவ்வாறு செயல்படும் என்பதை அவர் அறிந்திருந்தார். (சங்கீதம் 42:1) தாகத்தாலும், பசியாலும், மானானது உயிர் பிழைப்பதற்காக நீரோடையை வாஞ்சித்துக் கதறுகிறது போல , “என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது” (வ.1) என தேவனுக்கான அவனது விருப்பத்தை அவன் வெளிப்படுத்துகிறான்.

மிகவும் தேவையான நீரைப் போலவே, தேவன் நமக்கு எப்போதும் இருக்கும் உதவியாளர். நாம் அவருக்காக ஏங்குகிறோம், ஏனெனில் அவர் நமது சோர்ந்துபோன வாழ்க்கைக்குப் புதுப்பிக்கப்பட்ட பெலனையும், புத்துணர்ச்சியையும் தருகிறார், அனுதின பயணத்தில் எதுவாயிருந்தாலும் நம்மை ஆயத்தப்படுத்துகிறார்.

 

கிறிஸ்துவால் சுத்திகரிக்கப்பட்டது

எனது முதல் குறுகிய கால மிஷனரி பயணமாக, ஆற்றங்கரையில் சபையைக் கட்ட உதவுவதற்காக, ஒரிசாவில் உள்ள காட்டிற்குச் சென்றேன். ஒரு நாள் மதியம், அந்த பகுதியில் தண்ணீர் வடிகட்டி இருக்கும் சில வீடுகளில் ஒன்றிற்குச் சென்றோம். எங்களை ஏற்றுக்கொண்டவர், கலங்கியிருந்த கிணற்று நீரை வடிகட்டியின் மேல் ஊற்றியபோது, சில நிமிடங்களில் அனைத்து அசுத்தங்களும் அகற்றப்பட்டு சுத்தமான, தெளிவான குடிநீர் தோன்றியது. அந்த மனிதனின் வசிப்பிடத்தில், கிறிஸ்துவால் சுத்திகரிக்கப்படுவதன் அர்த்தம் என்ன என்பதை நான் பார்த்தேன்.

நாம் முதலில் நம் குற்ற உணர்ச்சியோடும், அவமானத்தோடும் இயேசுவிடம் வந்து, நம்மை மன்னிக்கும்படி கேட்கும்போதும், அவரை நம் இரட்சகராக ஏற்கும்போதும், அவர் நம் பாவங்களிலிருந்து நம்மைச் சுத்திகரித்து, நம்மைப் புதிதாக்குகிறார். கலங்கியிருந்த நீரைச் சுத்தமான குடிநீராக மாற்றியது போல் நாம் சுத்திகரிக்கப்படுகிறோம். இயேசுவின் பலியால், நாம் தேவனுடைய நீதியாகிறோம் (2 கொரிந்தியர் 5:21) என்பதையும், மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மை விட்டு விலக்கினார் (சங்கீதம் 103:12) என்பதையும் அறிவது எவ்வளவு மகிழ்ச்சி!

ஆனால் நாம் இனி ஒருபோதும் பாவம் செய்ய மாட்டோம் என்று அர்த்தம் இல்லை என்பதை அப்போஸ்தலன் யோவான் நமக்கு நினைவூட்டுகிறார். நாம் பாவம் செய்யும்போது, இந்த வடிகட்டியின் உருவகத்தைக் கொண்டு உறுதியடைவோம், “நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.” (1 யோவான் 1:9) என்றறிந்து ஆறுதலடைவோம்.

நாம் தொடர்ந்து கிறிஸ்துவால் சுத்திகரிக்கப்படுகிறோம் என்பதை அறிந்து நம்பிக்கையுடன் வாழ்வோம்.