Archives: பிப்ரவரி 2019

பெரிய செய்தி!

எங்களுடைய உள்ளுர் செய்தித்தாளில் வந்த ஒரு செய்தி குறுகியதாயிருந்தாலும் இருதயத்திற்கு இதமாய் இருந்தது. விசுவாசத்தை அடிப்படையாகக் கொண்டு, உறுதியான குடும்ப பிணைப்பை ஏற்படுத்தும்படி நடத்தப்பட்ட ஒரு நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர், சிறைச்சாலையில் வாழும் ஒரு குழுவினருக்கு ஓர் அரிய வாய்ப்பளிக்கப்பட்டது. அவர்கள் தங்கள் குடும்பத்தினரை வெளிப்படையாகச் சந்திக்கலாம் என்பதே அந்த வாய்ப்பு. சிலர் தங்கள் குழந்தைகளை பல ஆண்டுகளாகப் பார்த்ததேயில்லை. ஒரு கண்ணாடித் தகட்டின் வழியே பேசிக்கொள்வதற்குப் பதிலாக அவர்கள் தாங்கள் நேசிக்கும் நபரைத் தொட்டு பிடித்துக் கொள்ளலாம். அந்த குடும்பங்கள் நெருக்கமாக வந்த போது, அவர்களின் கண்களில் கண்ணீர் வழிந்தது. அவர்களுடைய உள்காயங்கள் ஆற ஆரம்பித்தன.

அநேக வாசகர்களுக்கு இது வெறும் கதையாக இருந்திருக்கலாம். ஆனால், அந்த குடும்பங்களுக்கு, அது ஒரு வாழ்வை மாற்றும் நிகழ்வு. சிலருக்கு அது மன்னிப்பதற்கும் மனம் பொருந்தலுக்கும் ஆரம்பமாயிருந்தது.

தேவன் நம்முடைய பாவங்களை மன்னித்ததும், நம்மோடு ஒப்புரவை ஏற்படுத்திக் கொண்டதும் அவருடைய குமாரன் மூலமாகவே நடைபெற்றது. இது கிறிஸ்தவ நம்பிக்கைக்கு அப்பாற்பட்ட, மேம்பட்ட ஓர் உண்மை. அந்த செய்தித் தாளில் வெளியான மனம் பொருந்துதலின் செய்தி, இயேசுவின் தியாகத்தின் மூலம் இவ்வுலகிற்கு மட்டுமல்ல, உனக்கும் எனக்கும் கொடுத்துள்ள ஒப்புரவாகுதலின் மிகப் பெரிய செய்தியை நமக்கு நினைப்பூட்டுகின்றது.

நாம் நடப்பித்த ஏதோ ஒரு பாவச் செயலின் குற்ற உணர்வினால், நாம் மேற்கொள்ளப்பட்டவர்களாயிருக்கும் நேரத்தில் நாம் பற்றிக்கொள்ள வேண்டிய செய்தி அது தேவனுடைய அளவற்ற இரக்கம் நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது என்ற உண்மையே அந்த செய்தி. நம்முடைய மீறுதல்களினிமித்தம் இயேசு மரித்தார். எனவே நாம் நம்முடைய பாவங்கள் கழுவப்பட்டவர்களாகத் தந்தையிடம் வருவோம். இயேசு நம்மை, 'உறைந்த மழையிலும் வெண்மையாய்" (சங். 51:7) நம்மைக் கழுவுகின்றார். நாம் தேவனுடைய இரக்கத்தைப் பெற தகுதியற்றவர்களென நினைக்கும் நேரங்களில் நாம் சார்ந்திருக்கக் கூடிய ஒரே காரியத்தை நாம் பற்றிக் கொள்வோம். அது தேவனுடைய கிருபையும், மாறாத மிகுந்த இரக்கமுமே (வச. 1).

பாலகர் வாயினால்

பத்து வயது நிரம்பிய வயோலா ஒரு மரக் கொப்பை மைக்ரோபோன் போல பாவித்து, ஒரு போதகரைப் போன்று பிரசங்கம் செய்து கொண்டிருந்ததை கவனித்த மிச்சேல், கிராம ஊழியத்தின் போது வயோலாவிற்கு பிரசங்கம் செய்ய ஒரு வாய்ப்பளிக்கத் தீர்மானித்தாள். வயோலாவும் அதற்குச் சம்மதித்தாள். மிச்சேல், தெற்கு சூடானில் ஊழியம் செய்யும் ஒரு மிஷனரி. 'அந்தக் கூட்டம் அதிக மகிழ்ச்சியினால் நிரப்பப்பட்டது... கைவிடப்பட்ட ஒரு சிறு பெண் அந்தக் கூட்டத்தினருக்கு முன்பாக ராஜாதி ராஜாவின் மகளாக அதிகாரத்தோடு நிற்கின்றாள். தேவனுடைய இராஜ்யத்தின் உண்மையை வல்லமையாக, அவர்களோடு பகிர்ந்து கொள்கின்றாள். பாதி கூட்டத்தினர் இயேசுவை தங்களுடைய சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ள முன் வந்தனர்" என்று மிச்சேல் தன்னுடைய 'அன்பிற்கு ஒரு முகமுண்டு" என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளாள். அந்தக் கூட்டத்தினர். அன்று ஒரு குழந்தையின் வாயினால் சுவிசேஷம் பிரசங்கிக்கப்படும் என எதிர்பார்க்கவில்லை. இந்த நிகழ்வு என்னுடைய மனதில் சங்கீதம் 8ல் காணப்படுகின்ற 'குழந்தைகள், பாலகர் வாயினால்" என்ற சொற்றொடரை நினைவிற்குக் கொண்டு வந்தது. தாவீது 'உம்முடைய சத்துருக்களினிமித்தம் குழந்தைகள், பாலகர் வாயினால் பெலன் உண்டுபண்ணினீர்" என எழுதுகின்றார் (8:2). இதனையே இயேசு மத்தேயு 21:16ல் குறிப்பிடுகின்றார். தேவாலயத்தில் ஆர்ப்பரிக்கின்ற பிள்ளைகளை பிரதான ஆசாரியரும், வேதபாரகரும் கண்டு கோபமடைந்தபோது இயேசு இந்த வசனத்தை அவர்களுக்குச் சுட்டிக் காட்டுகின்றார். அந்த தலைவர்களுக்கு குழந்தைகள் இடறுதலாகக் காணப்பட்டனர். ஆனால், இயேசு அவர்களுக்கு வேத வாக்கியத்தைச் சுட்டிக் காண்பித்து, தேவன் குழந்தைகளின் துதியைப் பெரிதாகக் கருதுவதாகக் கூறுகின்றார். அந்தத் தலைவர்கள் செய்வதற்கு மறுத்த ஒன்றை குழந்தைகள் நிறைவேற்றினர். தாங்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த மேசியாவை குழந்தைகள் மகிமைப்படுத்தினர்.

வயோலாவும் தேவாலயத்தில் இருந்த குழந்தைகளும் காண்பித்தது போல, தேவன் ஒரு சிறு குழந்தையைக் கூட தனக்கு மகிமையுண்டாக பயன்படுத்த முடியும். குழந்தைகளின் உள்ளத்திலிருந்து மனமார்ந்த துதி வெள்ளம் போல வந்தது.

தவறான தகவல்களைச் செயல்படுத்தாதே

சமீபத்தில் நான் நியூயார்க் பட்டணத்திற்குச் சென்றிருந்தபோது, என் மனைவியும் நானும் ஒரு பனிபொழிவின் சாயங்காலத்தில், தைரியமாக அதனூடே செல்ல விரும்பினோம். எனவே நாங்கள் எங்கள் விடுதியிலிருந்து கியூபன் சிற்றுண்டியகம் வரையிலும் மூன்று மைல் பயணத்திற்கு ஒரு வாடகை கார் ஒன்றினை எடுத்தோம். வாடகைக் கார் சேவை பதிவில் விளக்கங்களைப் பார்த்த போது, நான் அதிர்ச்சியடைந்தேன். ஒரு சிறிய தொலைவு பயணத்திற்கு 1547.26 டாலர்கள் என குறிப்பிட்டிருந்தனர். அந்த அதிர்ச்சியிலிருந்து மீண்டு, மேலும் பார்த்த போது தான், நான் தவறுதலாக எங்கள் வீட்டிற்கு திரும்புவதற்கு எனப் பதித்திருந்ததைக் கவனித்தேன். அது பல நூறு மைல்களுக்கு அப்பாலுள்ள இடம்!

நீ தவறான செய்தியின் மீது செயல்பட்டுக் கொண்டிருந்தால் அதன் முடிவு எப்பொழுதும் அழிவுக்கு நேராகத்தானிருக்கும். எனவேதான் நீதிமொழிகள், 'உன் இருதயத்தை புத்திமதிக்கும், உன் செவிகளை அறிவின் வார்த்தைகளுக்கும் சாய்ப்பாயாக" என வலியுறுத்துகின்றது (நீதி. 23:12). அறிவிலிகளிடமும், தங்களுக்கு அதிகம் தெரியுமென நடிப்பவர்களிடமும், தேவனுக்கு தங்கள் முதுகைக் காட்டுபவர்களிடமும் ஆலோசனையைத் தேடுவாயானால், நிச்சயமாகப் பிரச்சனைகளையே சந்திக்க நேரிடும். 'மூடன்... உன் வார்த்தைகளின் ஞானத்தை அசட்டை பண்ணுவான்" (வச. 9) அவர்கள் நம்மை வழிவிலகிப்போகப் பண்ணுவார்கள், உதவமாட்டார்கள், தவறாக வழிகாட்டுவார்கள், இன்னும் அழிவுக்குள்ளாக்கும் ஆலோசனைகளையே தருவர்.

ஆனால், உன் செவியை 'அறிவின் வார்த்தைகளுக்குச் சாய்ப்பாயாக" (வச. 12) நம்முடைய இருதயத்தை தேவனுடைய விடுதலை தரும் ஆலோசனைகளுக்கும் தெளிந்த நம்பிக்கையின் வார்த்தைகளுக்கும் திறபப்பாயாக. தேவனுடைய ஆழமான வழியைக் கண்டுபிடித்தவர்களுக்கு செவி கொடுப்போமாகில் அவர்கள் நம்மை தேவ ஞானத்தைப் பெறவும், அதனைப் பின்பற்றவும் உதவுவர். தேவ ஞானம் ஒரு போதும் நம்மை பாதை தவற விடாது. ஆனால், அது நம்மை ஜீவனுக்கு நேராகச் செல்ல ஊக்கப்படுத்தி, முடிவுபரியந்தம் வழிநடத்தும்.

ஃபீக்காவின் உற்சாகம்

எங்கள் பட்டணத்தில், என் வீட்டினருகிலுள்ள காப்பியகத்தின் பெயர் 'பீக்கா" இது ஸ்வீடன் வார்த்தை. இதற்கு குடும்பத்தினரோடும் உடன் பணிபுரிபவர்களோடும் அல்லது நண்பர்களோடும் உடன் பணிபுரிபவர்களோடும் அல்லது நண்பர்களோடும் ஒர் இடைவெளியில் காப்பியும், சிற்றுண்டியும் எடுத்துக் கொள்ளலாம் என அர்த்தம், நான் ஸ்வீடன் நாட்டினன் அல்ல. ஆனாலும் ஃபீக்காவின் உற்சாகம், நாம் இயேசுவைப் பற்றி நேசிக்கும் ஒரு காரியத்தை எனக்கு விளக்கியது. இயேசுவும் பிறரோடு உணவருந்தவும்,  இளைப்பாறவும் ஓர் இடைவெளியை எடுத்துக் கொண்டார்.

இயேசுவும் பிறரோடு சேர்ந்து உணவருந்தியதும் தற்செயலாய் நடைபெற்றவையல்லவென வேத வல்லுனர்கள் சொல்கின்றனர். வேதவல்லுனர் மாற்கு கிளான்வில் அவற்றை, பழைய ஏற்பாட்டில் குறிப்பிட்டுள்ள இஸ்ரவேலரின் விருந்தினையும் பண்டிகையும் போன்ற ஒரு 'மகிழ்ச்சியான இரண்டாம் விருந்து" என அழைக்கின்றார். 'முழு உலகிற்கும் மகிழ்ச்சி, கொண்டாட்டம் மற்றும் நீதியின் மையமாக" இஸ்ரவேலரை தேவன் வைத்திருந்ததைப் போன்று இயேசுவும் விருந்தின் மையமாகத் திகழ்ந்தார்.

5000 பேரை போஷித்தது முதல் கடைசி ராப்போஜனம் மற்றும் உயிர்த்தெழுந்த பின்னர் இரண்டு சீடர்களோடு உணவருந்தியது வரையில் (லூக். 24:30) இயேசுவின் போஜன ஊழியம், நம்மையும் நம்முடைய தொடர் போராட்டங்களிலிருந்து விடுபட்டு சிறிது நின்று அவரோடு சில நேரம் செலவிட அழைக்கின்றது. அந்த இரண்டு சீடர்களும் இயேசுவோடு உணவருந்தும் மட்டும் இயேசுவை உயிர்த்தெழுந்த கிறிஸ்துவாக கண்டுபிடிக்க முடியவில்லை. 'அவர்களோடு அவர் பந்தியிருக்கையில் அவர் அப்பத்தை எடுத்து, ஆசீர்வதித்து, அதைப் பிட்டு அவர்களுக்குக் கொடுத்தார். அப்பொழுது அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டு அவரை அறிந்தார்கள்" 9வச. 30-31) அவரே உயிர்த்தெழுந்த கிறிஸ்து எனக் கண்டுகொண்டனர்.

சமீபத்தில் என்னுடைய நண்பனோடு அந்த ஃபீக்காவில் அமர்ந்திருந்து சூடான சாக்லேட் பானமும், சுருள்களும் சாப்பிட்டபோது, நாங்கள் இயேசுவைக் குறித்துப் பேசிக் கொண்டிருந்தோம். அவரே நம் வாழ்வில் ஜீவ அப்பம் நாமும் அவரோடு போஜனபந்தியில் நேரம் செலவிட்டு அவரைக் குறித்து இன்னும் தெரிந்து கொள்வோம்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

இது மதிப்புக்குரியது

ஜார்ஜ் ஸ்மித், வில்லியம் கேரி: ஷூமேக்கர் அண்ட் மிஷனெரி என்ற தனது புத்தகத்தில், கேரியால் ஞானஸ்நானம் பெற்ற முதல் விசுவாசியான கிருஷ்ணா பால் ஞானஸ்நானம் பெற்ற முக்கியமான தருணத்தைப் பற்றி எழுதுகிறார். கிருஷ்ணா பால் கங்கையின் சேற்று நீரிலிருந்து எழுந்த சமயம், இந்திய திருப்பணிகளில் ஒரு மைல்கல்லாக இருந்திருக்க வேண்டிய விஷயம், கேரியின் சூழ்நிலைகளால் சிதைக்கப்பட்டது. கேரியின் மனைவி மற்றும் அவரது ஊழியத்தின் கூட்டாளி ஜான் தாமஸ் இருவரும் மனநலம் பாதிக்கப்பட்டனர். ஆயினும் அவர்களது அலறல்களுக்கும், அலைக்கழிப்புகளுக்கும் மத்தியில், கேரி மகிழ்ச்சியுடன் கொண்டாட்டத்தில் இனைந்து ஒரு வங்காளப் பாடலைப் பாடினார் - காணாமல்போன ஆத்துமா வீடு வந்ததே.

ரோம சாம்ராஜ்ஜியத்தால் கிறிஸ்தவர்கள் பெரும் துன்புறுத்தலை எதிர்கொண்ட நேரத்தில், பவுல் ரோமாபுரியின் சபையினருக்கு எழுதினார். பவுல் முன்வைத்த சுவிசேஷத்தை நடைமுறைப்படுத்துவது எளிதல்ல. அதற்கு பெரும் தியாகம் தேவைப்பட்டது. ஏறக்குறைய தனது மூன்றாவது மிஷனரி பயணத்தின் முடிவில், மற்றும் நினைத்துப்பார்க்கக்கூடிய ஒவ்வொரு கஷ்டத்தையும் தாங்கிய பிறகு, பவுல் "இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே" (வ.37) என்று கூறினார். அவர் , துன்பம், பசி, நிர்வாணம், நாசமோசம் (வ.35) என்றனைத்தையும் மகிழ்ச்சியுடன் தாங்கினார், ஏனெனில் அவரை நம்பி ஒப்படைக்கப்பட்ட பிரதான பணியே காரணம். மிஷனெரி பணிகளில் முன்னோடியாக, ரோமாபுரியின் விசுவாசிகளை அவர்களின் உபத்திரவங்களைச் சகித்திட அவர் ஊக்குவிக்கிறார், ஏனெனில் கிறிஸ்துவின் விவரிக்கமுடியாத அன்பு அதற்கு "பாத்திரமானது" (வ.38-39).

வில்லியம் கேரி மற்றும் அப்போஸ்தலன் பவுல் ஆகியோரின் தியாகங்களை "மதிப்பானவையாய்" செய்த இந்த அன்பு, நமக்கும் வழங்கப்படும் அதே அன்புதான். குறிப்பாக நம்முடைய விசுவாசத்தின் நிமித்தம் பாடுகள் வரும்போது, நாம் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்பதை நினைவில் கொள்வோம் (மத்தேயு 5:10). பின்வாங்கி, சமரசம் செய்து கொள்ளாமல், கிறிஸ்துவின் அன்பு எப்போதும் "தகுதியானது" என்பதை அறிந்து நமது பாடுகளை எதிர்கொள்வோம். 

 கிறிஸ்துவுடன் ஆழமான நட்பு

இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜில் உள்ள க்ரைஸ்ட் கல்லூரியின் சிற்றாலயத்தில் உள்ள நினைவுச்சின்னம், 17ம் நூற்றாண்டைச் சேர்ந்த “இணைபிரியா நண்பர்களாகிய" ஜான் ஃபின்ச் மற்றும் தாமஸ் பெயின்ஸ் என்ற மருத்துவர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டதாகும். இருவரும் மருத்துவ ஆராய்ச்சியில் ஒன்றாக பணியாற்றியவர்கள் மற்றும் அரசாங்க பயணங்களில் ஒன்றாக பயணித்தவர்கள். 1680 இல் பெயின்ஸ் இறந்தபோது, ஃபின்ச் 36 காலமாக “ஈருடல் ஓருயிராக” இருந்த அவர்களின் நட்புக்காக வருந்தினார். அவர்களுடைய நட்பில் அன்பு, உண்மை, அர்ப்பணிப்பு இருந்தது. 

இப்படிப்பட்ட நெருக்கமான நட்பு தாவீது ராஜாவுக்கும் யோனத்தானுக்கும் இருந்தது. அவர்கள் உள்ளத்தின் ஆழத்திலிருந்து ஒருவரையொருவர் நேசித்தனர் (1 சாமுவேல் 20:41), மேலும் ஒருவருக்கொருவர் உடன்படிக்கையும் செய்தனர் (வ.8–17, 42). அவர்களின் நட்பில் உண்மையாக இருந்தனர் (1 சாமுவேல் 19:1–2; 20:13). தாவீது ராஜாவாவதற்காக, யோனத்தான் தனது உரிமையைத் தியாகம் செய்தார் (20:30-31; பார்க்க 23:15-18). யோனத்தான் மரித்தபோது, அவன் தன்மேல் வைத்திருந்த அன்பு " ஸ்தீரீகளின் சிநேகத்தைப்பார்க்கிலும் அதிகமாயிருந்தது" என்று தாவீது புலம்பினார் (2 சாமுவேல் 1:26). 

நட்பைத் திருமணத்துடன் ஒப்பிடுவது இன்று நமக்குக் கடினமாயிருக்கலாம், ஆனால் ஃபின்ச் மற்றும் பெயின்ஸ், தாவீது மற்றும் யோனத்தான் போன்ற நட்புகள், நம் சொந்த வாழ்வில் நட்பை அதிக ஆழப்படுத்த ஊக்குவிக்கிறது. இயேசுவும் தம்முடைய மார்பில் சாய தமது நண்பர்களை ஏற்றுக்கொண்டார் (யோவான் 13:23-25). அவர் காட்டும் உண்மை, நம்பகத்தன்மை மற்றும் அர்ப்பணிப்பு நாம் ஒன்றாக உருவாக்கும் ஆழமான நட்பின் அடித்தளமாக இருக்கட்டும். 

கிறிஸ்துவுக்கு பூரணமாய் சரணடைதல்

1920 ஆம் ஆண்டில், ஒரு சீன போதகரின் ஆறாவது மகனான ஜான் சுங், அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் படிக்க உதவித்தொகை பெற்றார். அவர் உயர்ந்த மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றார். முதுகலை படிப்பை முடித்து, முனைவர் பட்டமும் பெற்றார். ஆனால் அவர் தனது படிப்பைத் தொடரும்போது, தேவனை விட்டு விலகிச் சென்றார். பின்னர், 1927இல் ஒரு இரவு, அவர் தனது வாழ்க்கையை கிறிஸ்துவிடம் ஒப்படைத்தார் மற்றும் ஒரு போதகராகும் அழைப்பைப் பெற்றார்.

பல அதிக ஊதியம் பெறும் வாய்ப்புகள் அவருக்கு சீனாவில் மீண்டும் காத்திருந்தன. ஆனால் அவருடைய இலட்சியங்களை ஒதுக்கி வைக்கும்படிக்கு பரிசுத்த ஆவியானவரால் ஏவப்பட்டார். அவரது அர்ப்பணிப்பின் அடையாளமாக, அவர் தனது பெற்றோருக்கு கனம்செலுத்தும் நோக்கத்தோடு தனது பிஎச்டி சான்றிதழை மட்டும் வைத்துக்கொண்டு, மற்ற அனைத்து விருதுகளையும் கடலில் வீசினார்.

தம்முடைய சீடராக மாறுவது பற்றி இயேசு சொன்னதை ஜான் சங் புரிந்துகொண்டார்: “மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன?” (மாற்கு 8:36). நாம் நம்மையே வெறுத்து, கிறிஸ்துவையும் அவருடைய வழிநடத்துதலையும் பின்பற்றுவதற்காக நமது பழைய வாழ்க்கையை விட்டு மனம்திரும்பும்போது (வச. 34-35), அவரைப் பின்பற்றுவதிலிருந்து நம்மைத் திசைதிருப்பும் தனிப்பட்ட ஆசைகளையும் பொருள் ஆதாயத்தையும் தியாகம் செய்ய அவசியமாகலாம்.

அடுத்த பன்னிரண்டு ஆண்டுகளாக, ஜான் தனது தேவன் கொடுத்த பணியை முழு மனதுடன் நிறைவேற்றினார். சீனா மற்றும் தென்கிழக்கு ஆசியா முழுவதும் ஆயிரக்கணக்கானோருக்கு நற்செய்தியை அறிவித்தார். நாம் எப்படி? நாம் பிரசங்கிகளாகவோ அல்லது மிஷனரிகளாகவோ இருக்க அழைக்கப்படாமல் இருக்கலாம். ஆனால் தேவன் நம்மை எங்கு ஊழியம் செய்ய அழைக்கிறாரோ, அவருடைய ஆவி நம்மில் கிரியை செய்வதால், நாம் அவருக்கு முழுமையாக சரணடைவோமாக. 

- ஜாஸ்மின் கோ