Archives: ஜூலை 2018

நம்மைப் போன்ற பாவிகள்

என்னுடைய சிநேகிதியின் பெயர் ஈடித். அவர் தான் இயேசுவைப் பின்பற்ற தீர்மானம் செய்த நாளைக் குறித்து எனக்குச் சொன்னாள்.

ஈடித் தேவனைப் பற்றி எந்த அக்கறையும் கொண்டவளல்ல. ஒரு நாள் தன் ஆன்மாவில் ஏற்பட்ட விரக்தியோடு, அந்த ஞாயிறு காலை, தன் வீட்டின் அருகிலுள்ள ஆலயத்தினுள் சென்றாள். அன்றைய தினம் போதகர் வேதாகமத்திலிருந்து வாசித்த பகுதி லூக்கா 15:1-2 “சகல ஆயக்காரரும் பாவிகளும அவருடைய வசனங்களைக் கேட்கும்படி அவரிடத்தில் வந்து சேர்ந்தார்கள். அப்பொழுது பரிசேயரும், வேதபாரகரும் முறுமுறுத்து, அவர் பாவிகளை ஏற்றுக் கொண்டு அவர்களோடே சாப்பிடுகிறார் என்றார்கள்” என்பதாக வாசிக்கப்பட்டது. ஆனால், அது ஈடித்தின் காதில் “இவர் பாவிகளை ஏற்றுக் கொண்டு அவர்களோடு ஈடித்தையும் ஏற்றுக் கொண்டார்” என்பதாக விழுந்தது. உடனே அவள் தன் இருக்கையில் நிமிர்ந்து உட்கார்ந்தாள். சற்று நேரத்தில் தான் தவறாகப் புரிந்து கொண்டதை உணர்ந்து கொண்டாள். ஆனால். இயேசு பாவிகளை ஏற்றுக் கொண்டார் என்ற எண்ணமும் அதில் ஈடித்தும் அடங்குவாள் என்ற எண்ணமும் அவளில் தங்கி விட்டது. அன்று மாலை அவள் இயேசுவை நெருங்கி வரத் தீர்மானித்தாள். அவரின் வார்த்தைக்குச் செவி கொடுத்தாள். சுவிசேஷங்களை வாசிக்க ஆரம்பித்தாள். தன்னுடைய நம்பிக்கையை இயேசுவின் மீது வைத்து அவரைப் பின் தொடர்ந்தாள்.

இயேசுவின் நாட்களில் இருந்த வேதபாரகர்கள், இயேசு பாவிகளோடு உணவருந்தினார், அநியாயக்காரரோடு சாப்பிட்டார் என்ற உண்மையை அவதூறான செய்தியாகப் பரப்பினர். அவர்களுடைய சட்டம் அவர்களை அத்தகைய ஜனங்களோடு பழகுவதைத் தடுத்தது. ஆனால், இயேசு அவர்கள் உருவாக்கிக் கொண்ட சட்டத்திற்கு எந்த கவனமும் செலுத்தவில்லை அவர் புறக்கணிக்கப்பட்டவர்களையும், தள்ளப்பட்டவர்களையும், அவர்கள் எவ்வளவு தூரம் விலகியிருந்தாலும் தன்னோடு சேர்த்துக் கொண்டார்.

இப்பொழுதும் இது உண்மை. இயேசு பாவிகளை ஏற்றுக் கொள்கின்றார்;. உன்னையும் ஏற்றுக் கொள்கின்றார்.

சவால்களை மேற்கொள்ளல்

நாங்கள் ஒவ்வொரு மாதமும், ஒவ்வொருவரும் தங்களின் தனிப்பட்ட இலக்கினை அடைந்தனரா என்பதைக் குறித்த கணக்கைக் கொடுக்கும்படி ஒன்று கூடுவதுண்டு. என்னுடைய சிநேகிதி மேரி தன்னுடைய சாப்பாட்டு அறையின் நாற்காலிகளின் இருக்கைகளை அந்த ஆண்டு இறுதிக்குள் புதுப்பிக்க விரும்பினாள். எங்களுடைய நவம்பர் மாதக் கூடுதையில், அக்டோபர் மாதத்திலிருந்து தன் வேலையின் முன்னேற்றத்தை அவர் வேடிக்கையாகத் தெரிவித்தாள். “என்னுடைய நாற்காலிகளைப் புதிப்பிப்பதற்குப் பத்து மாதங்களும் இரண்டு மணி நேரமும் ஆனது” என்றாள். பல மாதங்களாக அந்த வேலைக்கான பொருட்கள் கிடைக்கவில்லை, சரியான நேரம் அமையவில்லை, தன்னுடைய குழந்தைகளின் தேவைகளைப் பார்க்க வேண்டியிருந்தது எனப் பல காரணங்கள் அவ்வேலையைத் தடுத்தன. ஆனால், அந்த வேலைக்கென இரண்டு மணி நேரம் மட்டுமே செலவழித்து, முடிக்க முடிந்தது, என்றாள்.

தேவன் நெகேமியாவை ஒரு பெரிய வேலைக்கென்று அழைக்கின்றார். எருசலேமின் அலங்கம் இடிக்கப்பட்டு பல ஆண்டுகளாக பாழடைந்து கிடக்கின்றது. அதனைக் கட்டி எழுப்ப நெகேமியாவை அழைக்கின்றார் (நெகே. 2:3-5,12).

அவர் ஜனங்களை இந்த வேலையில் வழிநடத்தும்போது, ஜனங்கள் பிறரின் கேலிப் பேச்சையும், தாக்குதலையும், கவனச் சிதறலையும் பாவச் சோதனைகளையும் சந்திக்க நேர்ந்தது (4:3,8; 6:10-12)). ஆனாலும், தேவன் அவர்கள் தங்கள் வேலையில் உறுதியாகவும், தீர்மானத்தோடு முயற்சி செய்யவும், சோர்ந்து போகாமல் தங்கள் வேலையை ஐம்பத்திரண்டு நாட்களில் முடிக்க பெலனளித்தார்.

இத்தகைய சவால்களை மேற்கொள்ள ஒரு தனிப்பட்ட ஆர்வமும் இலக்கையும் விட இன்னும் அதிகமாக ஒன்று தேவை. இந்த வேலை தேவனால் கொடுக்கப்பட்டது என்ற புரிந்து கொள்ளலே நெகேமியாவிற்கு இந்த வேலையை முடிப்பதற்குத் தேவையான ஆற்றலைத் தந்தது. தேவனுடைய திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற உணர்வு, அவருடைய ஜனங்களுக்கு எதிர்ப்பையும் மேற்கொண்டு அவருடைய தலைமையின் கீழ் வேலை செய்ய பெலனீந்தது. தேவன் நம்முடைய ஒரு செயலைச் செய்து முடிக்கும்படி பணிக்கும்போது, ஓர் உறவைச் சரிசெய்யும்படி அல்லது அவர் செய்த நன்மைகளை பிறரோடு பகிர்ந்துகொள்ள அழைக்கும் போது, அவர் நமக்குத் தேவையான திறமையையும், பெலத்தையும் கொடுத்து அவர் சொன்னதை நிறைவேற்றி முடிக்கச் செய்கின்றார். நம் பாதையில் நாம் எத்தனை சவால்களைச் சந்திக்க நேரிட்டாலும் அவர் சொன்னதை நிறைவேற்றுவார்.

துக்கத்தில் நம்பிக்கை

நான் பத்தொன்பது வயதாயிருந்த போது என்னுடைய நெருங்கிய சிநேகிதி ஒரு கார் விபத்தில் மரித்துக் போனாள். அதன் பின்னர் வாரங்கள், மாதங்களாக ஒவ்வொரு நாளும் நான் துக்கத்தின் பாதையில் நடந்தேன். ஓர் அற்புதமான சிநேகிதியை இளம் வயதில் இழந்ததினால் ஏற்பட்ட வேதனை என் பார்வையை மறைத்தது. நான் சில வேளைகளில் என்னைச் சுற்றிலும் என்ன நடக்கிறது என்பதையே உணராதிருந்தேன். துக்கமும், வேதனையும் என் கண்களைக் குருடாக்கி, தேவனைக் காணக் கூடாதவாறு செய்தன.

லூக்கா 24ல், இயேசுவின் மரணத்திற்கு பின் இரு சீடர்கள் குழப்பமடைந்தவர்களாய், இருதயம் நொறுங்குண்டவர்களாய் நடந்து செல்கையில், தாங்கள் உயிர்த்தெழுந்த இயேசுவோடு நடந்து செல்கின்றோம் என்பதையே உணராதிருந்தனர். இயேசு அவர்களுக்கு வேதாகமத்திலிருந்து அவர்களுடைய இரட்சகர் ஏன் மரிக்க வேண்டும், உயிர்த்தெழ வேண்டும் என்பதை அவர்களுக்கு விளக்கிக் காண்பித்தார். பின்னர் அவர் அப்பத்தை எடுத்துப் பிட்ட போதுதான் அவர் இயேசு என்று தெரிந்து கொண்டனர் (வச. 30-31). இயேசு கிறிஸ்துவின் பாடுகளையும், மரணத்தையும் நேரடியாகப் பார்த்த இயேசுவின் சீடர்களுக்கு இயேசு தன்னை மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தவராகக் காண்பித்து அவர்கள் மீண்டும் நம்பிக்கை பெறச் செய்தார்.

அந்த சீடர்களைப் போன்று நாமும் குழப்பத்தாலோ, கவலையினாலோ சோர்ந்து காணப்படலாம். ஆனால். இயேசுகிறிஸ்து உயிரோடிருக்கிறார். இவ்வுலகிலும், நம்மிலும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் என்ற உண்மை நமக்கு நம்பிக்கையையும் ஆறுதலையும் தருகிறது. நாம் இன்னமும் இருதய வேதனையையும் வலியையும் சந்தித்துக் கொண்டிருக்கும் போது நாம் இயேசுவை நம்மோடு நம்முடைய வேதனையின் பாதையில் நடந்து வரும்படி அழைப்போம். இயேசு உலகிற்கு ஒளியாயிருக்கிறார் (யோவா. 8:12). அவரே நம் பாதையை மறைக்கும் பனிமூட்டத்தினூடே நம்பிக்கையின் ஒளியைத் தருபவர்.

தேனீக்களும், பாம்புகளும்

சில பிரச்சனைகள் என்றால் தந்தையின் பெயர் அங்கு எழுதப்பட்டிருக்கும். எடுத்துக்காட்டாக, சமீபத்தில் என்னுடைய குழந்தைகள் எங்கள் வீட்டின் முன் தாழ்வாரத்தின் பகுதியில், சுவரில் ஏற்பட்ட விரிசலில் தேனீக்கள் இருப்பதைக் கண்டுபிடித்தனர். எனவே நான் பூச்சி விரட்டும் மருந்தோடு, தேனீக்களோடு போராட சென்றேன். ஐந்து முறை தேனீக்களால் கொட்டப்பட்டேன்.

பூச்சிகளால் கொட்டப்படுதல் எனக்கு விருப்பமில்லாத செயல்தான். ஆனால், என் பிள்ளைகளையோ, மனைவியையோ அவை கடிப்பதைவிட என்னைக் கடிப்பதே மேல். என் குடும்பத்தினரின் நல்வாழ்வுதான் என்னுடைய வேலையின் பிரதான நோக்கமாயிருக்கும். என் குழந்தைகளுக்கு ஒரு தேவையிருந்தால், அவர்கள் என்னைக் கொண்டே செய்யவிரும்புவார்கள். அவர்கள் பயப்படும் காரியங்களில் அவர்களைப் பாதுகாக்க அவர்கள் என்னை நம்பினார்கள்.

மத்தேயு 7ல், இயேசு நமக்குப் போதிப்பது என்னவெனின், நம்முடைய தேவைகளைக் குறித்து தேவனிடம் நம்பிக்கையோடு வேண்டிக் கொள்ள வேண்டும். இதனைப் புரிந்து கொள்ள இயேசு ஒரு விளக்கத்தைத் தருகின்றார். “உங்களில் எந்த மனுஷனானாலும் தன்னிடத்தில் அப்பத்தைக் கேட்கிற தன் மகனுக்குக் கல்லைக் கொடுப்பானா? மீனைக் கேட்டால் அவனுக்குப் பாம்பைக் கொடுப்பானா?” (வச. 9-10) ஓர் அன்பு பெற்றோர் எதைக் கொடுப்பார் என நாம் அறிந்திருக்கின்றோம். ஆனால், இயேசு நம் பிதாவின் தயாள குணத்தின் மீதுள்ள நம்பிக்கையை விட்டுவிடக் கூடாதென்பதற்காக “ஆகையால் பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும் போது பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக் கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா?” (வச. 11) என்றார்.

நான் என்னுடைய குழந்தைகளை இதையும் விட அதிகமாக நேசிக்க முடியாதென நினைக்கின்றேன். ஆனால், தேவன் நம்மீது வைத்திருக்கும் அன்பில் மறைந்து போகும் என இயேசு கூறுகின்றார்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

ஜெபம் முக்கியமானது

“நடக்கவிருக்கும் மூளை ஸ்கேனுக்கான பிரார்த்தனைகள்;” “என் குழந்தைகள் மீண்டும் தேவாலயத்திற்கு வரவேண்டும்;“ “தன் மனைவியை இழந்த டேவின் ஆறுதலுக்காக" இதுபோன்ற ஜெப விண்ணப்பங்களை எங்களின் ஜெப ஊழியக் குழு வாரந்தோறும் பெறுகிறது. நாங்கள் அதற்காக ஜெபித்து, பதில் கடிதத்தையும் அனுப்புவது வழக்கம். ஜெப விண்ணப்ப பட்டியல் பெரிதாய் இருப்பதினால், எங்களுடைய முயற்சி கவனிக்கப்படாத வகையில் சிலவேளைகளில் இருக்கும். ஆனால் சமீபத்தில் டேவ் என்பவர் இறந்துபோன தன்னுடைய மனைவியின் இரங்கல் செய்தியின் நகலுடன், ஓர் நன்றிக் கடிதத்தையும் வைத்து அனுப்பியிருந்தார். அதைப் பார்த்த பின்பு எங்களுடைய சோர்வான சிந்தை மாறியது. ஜெபம் மிகவும் அவசியம் என்பதை நான் புதிதாக உணர்ந்தேன்.

நாம் ஊக்கமாக, இடைவிடாமல், நம்பிக்கையுடன் ஜெபிக்கவேண்டும் என்று இயேசு முன்மாதிரியாகக் கூறினார். பூமியில் அவருடைய வாழ்ந்த காலம் குறைவாகவே இருந்தது. ஆனால் அவர் ஜெபிப்பதற்காக தனி நேரம் செலவழிப்பதற்கு முக்கியத்துவம் கொடுத்தார் (மாற்கு 1:35; 6:46; 14:32).

நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, இஸ்ரவேலின் ராஜாவான எசேக்கியாவும் இந்தப் பாடத்தைக் கற்றுக்கொண்டார். ஓர் வியாதியின் நிமித்தம் அவர் சீக்கிரம் மரிக்கப்போகிறார் என்று அறிவிக்கப்பட்டது (2 இராஜாக்கள் 20:1). எசேக்கியா வேதனையோடும் வியாகுலத்தோடும், “தன் முகத்தைச் சுவர்ப்புறமாகத் திருப்பிக்கொண்டு” (வச. 2) கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணினார். இந்த விஷயத்தில் தேவன் உடனே பதில்கொடுக்கிறார். தேவன் எசேக்கியாவின் வியாதியை சுகமாக்கி, அவருக்கு பதினைந்து ஆண்டுகள் ஆயுசுநாட்களை பெருகப்பண்ணி, அவருடைய எதிரிகளிடமிருந்து இளைப்பாறுதலையும் வாக்குப்பண்ணுகிறார் (வச. 5-6). எசேக்கியா நல் வாழ்க்கை வாழ்ந்தார் என்பதற்காக தேவன் இந்த கிருபைகளை அவருக்குக் கொடுக்கவில்லை, மாறாக, “என் நிமித்தமும் என் தாசனாகிய தாவீதின் நிமித்தமும்” தேவன் அவருக்கு கிருபையளிப்பதாக கூறுகிறார். நாம் கேட்கிற அனைத்தையும் தேவனிடத்திலிருந்து பெறாமல் இருக்கலாம், ஆனால் தேவன் நம்முடைய அனைத்து ஜெபங்களையும் கேட்டு கிரியை நடப்பிக்கிறவராயிருக்கிறார் என்பதை நாம் உறுதியாக நம்பலாம்.

 

நாம் நம்பத்தகுந்த சிருஷ்டிகர்

மேரி ஷெல்லியின் “ஃபிராங்கண்ஸ்டைன்” என்ற பிரபல நாவலில் உள்ள “அரக்கன்” மிகவும் பரவலாக அறியப்பட்ட இலக்கிய பாத்திரங்களில் ஒன்றாகும். ஆனால் அந்த நாவலை ஆழமாய் படித்தவர்கள், அந்த அரக்கனை தோற்றுவித்த மாயை விஞ்ஞானியான விக்டர் ஃபிராங்கண்ஸ்டைனையே உண்மையான அரக்கனாக ஷெல்லி சித்தரிக்கிறார் என்று அறிவர். புத்திசாலித்தனமான உயிரினத்தை உருவாக்கிய பிறகு, விக்டர் அதற்கு வழிகாட்டுதல், தோழமை அல்லது மகிழ்ச்சியின் நம்பிக்கையை கொடுக்க மறுக்கிறார். அந்த உயிரினம், விரக்தி மற்றும் கோபப்படும் நிலைக்கு தள்ளப்படுகிறது. ஓர் தருணத்தில் அந்த உயிரினம் விக்டரைப் பார்த்து, “என் படைப்பாளியே, நீ என்னை துண்டு துண்டாக கிழித்து வெற்றி பெறும்” என்று கூறுவதைப் பார்க்கமுடியும். 

ஆனால் தன் படைப்புகள் மது தீராத அன்புகொண்ட மெய்யான சிருஷ்டிகர் எப்பேற்பட்டவர் என்பதை வேதம் வெளிப்படுத்துகிறது. ஏதோ சிருஷக்கவேண்டும் என்பதற்காக தேவன் உலகத்தை படைக்கவில்லை, மாறாக, அதை அழகாகவும் நேர்த்தியாகவும் படைத்திருக்கிறார் (ஆதியாகமம் 1:31). ஆனால் கொடூரமான தீமையைத் தேர்ந்தெடுக்க மனிதகுலம் அவரிடமிருந்து திசைமாறியபோதும், மனிதகுலத்திற்கான தேவனுடைய அர்ப்பணிப்பும் அன்பும் மாறவில்லை.

நிக்கோதேமுக்கு இயேசு விளக்கியதுபோல், தன்னுடைய ஒரே பேறான குமாரனை இந்த உலகத்திற்காய் பலியாய் கொடுக்குமளவிற்கு இந்த உலகத்தின்மீதான தேவனுடைய அன்பு விலையேறப்பெற்றது (யோவான் 3:16). இயேசு தம்மையே பலியாய் ஒப்புக்கொடுத்து, நம்முடைய பாவத்தின் விளைவுகளைச் சுமந்துகொண்டு, “தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு” (வச. 15) நம்மை உயர்த்துகிறார். 

நாம் மனப்பூர்வமாய் நம்பக்கூடிய ஓர் சிருஷ்டிகர் நமக்கு இருக்கிறார். 

 

இயேசுவின் அதிகாரம்

பல வருடங்களாக போதைப்பொருள் அடிமைத்தனத்திலிருந்த என் மகன் ஜியோப்பை இயேசு விடுவித்த பிறகும், எனக்கு இன்னும் சில கவலைகள் இருந்தது. நாங்கள் ஒன்றாக இருந்தாலும், அவனுடைய எதிர்காலத்தைவிட அவனுடைய கடினமான கடந்த காலத்தைக் குறித்து நான் அதிக கவலைப்பட்டேன். போதை பழக்கத்திற்கு அடிமையானவர்களின் பெற்றோர்கள் அவர்களை மீண்டும் மீண்டும் சரிசெய்யவேண்டிய அவலம் ஏற்படுகிறது. ஓர் குடும்பக் கூடுகையில் நான் ஜியோப்பை பிடித்து இழுத்து, அவனிடம், “நமக்கு ஒரு எதிரி இருக்கிறான். அவன் மிகவும் வலிமையானவன் என்பதை புரிந்துகொள்” என்றேன். அவனும் “எனக்கு தெரியும் அப்பா, அவனுக்கு வலிமை இருக்கிறது ஆனால் அதிகாரம் இல்லை” என்று பதிலளித்தான். 

அந்த தருணத்தில், நம்முடைய பாவங்களிலிருந்து நம்மை மீட்டு, அவரை நாடுகிறவர்களின் வாழ்க்கையை மறுரூபமாக்குகிற இயேசுவை நான் நினைவுகூர்ந்தேன். அவர் பரமேறி செல்வதற்கு முன்பு தன்னுடைய சீஷர்களைப் பார்த்து, “வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய்...” (மத்தேயு 28:18-19) என்று கொடுக்கப்பட்ட கட்டளையையும் நான் நினைவுகூர நேரிட்டது. 

சிலுவையில் அறையப்பட்டு உயிர்த்தெழுந்த இயேசு, நமது கடந்தகாலம் எப்படிப்பட்டதாக இருந்தாலும் நாம் அவரிடத்தில் வருவதற்கு வழி செய்துள்ளார். அவர் நமது கடந்த காலத்தையும் எதிர்காலத்தையும் தன் கையில் வைத்திருக்கிறார். அவர் எப்பொழுதும் நம்முடன் இருப்பார் என்று வாக்களிக்கப்பட்டிருப்பதால் (வச. 20), அவர் தம்முடைய நோக்கங்களை நிறைவேற்றுவார் என்றும், நம்முடைய ஜீவியம் அவரது பலத்த கரங்களில் உள்ளது என்றும் நாம் உறுதியாக நம்பலாம். நாம் பெற்றுக்கொள்ள முடியாத ஒரு நல்ல நம்பிக்கையை இயேசு நமக்கு தருகிறார். பிசாசும் உலகமும் தற்காலிகமான இவ்வுலகத்தில் சில வல்லமைகளைக் கொண்டு செயலாற்றலாம். ஆனால் “சகல அதிகாரமும்” என்றென்றும் இயேசுவுக்கே சொந்தமானது.