Archives: டிசம்பர் 2017

விசுவாசத்தைக் கட்டும் நினைவலைகள்

இசையால் நிறைந்திருந்த பரிசுத்த ஸ்தலத்தில் நான் நுழைந்தபோது, புது வருஷத்தைக் கொண்டாட புத்தாண்டிற்கு முந்தையநாள் அங்கு வந்திருந்தவர்களைச் சுற்றிப் பார்த்தேன். கடந்த ஆண்டு நாங்கள் ஏறெடுத்த ஜெபங்களை நான் நினைத்த பொழுது சந்தோஷம் என் இருதயத்தை நம்பிக்கையால் துள்ளப்பண்ணிற்று. சபையாக நாங்கள், வழிதவறிப்போன பிள்ளைகள், அருமையானவர்களின் மரணம், வேலையிழப்பு, முறிந்த உறவுகள் ஆகிய வற்றால் துக்கப்படுகிறவர்களுக்காக ஜெபித்தோம். தேவனுடைய கிருபையால் மனந்திரும்பினவர்கள், உறவுகள் மறுபடியும் சீராக்கப்பெற்றவர்கள்… போன்றவர்களையும் நினைத்தோம். வெற்றிகள், திருமணங்கள், பட்டம்பெற்றது, தேவசபையில் இணைக்கும் ஞானஸ்நானங்கள் ஆகியவற்றையும் நாங்கள் கொண்டாடினோம். தத்தெடுக்கப்பட்ட மற்றும் பிறந்த குழந்தைகள் அர்பணிக்கப்பட்ட குழநதைகளை வரவேற்றோம். இன்னும் இது போன்ற பல காரியங்களை எண்ணி நன்றி கூறினோம்.

எரேமியா தன் சிறுமையையும், தவிப்பையும் (புல. 3:19) நினைத்ததுபோல, நாங்களும் எங்கள் சக குடும்பத்தினர் சந்தித்த பாடுகளின் வரலாற்றை நினைவுகூர்ந்தோம். “நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை” (புல. 3:22) என்பதை நான் விசுவாசித்தேன். தீர்கதரிசி, கடந்தகாலத்தில் தேவனுடைய உண்மையை நினைத்து “தமக்குக் காத்திருக்கிறவர்களுக்கும் தம்மைத்தேடுகிற ஆத்துமாவுக்கும் கர்த்தர் நல்லவர்” (வச. 25) என்ற வார்த்தையினால் தன்னைத் தேற்றிக்கொண்டது, அது என்னையுயம் ஆறுதல்படுத்தினது.

அந்த இரவில், எங்கள் சபையிலுள்ள ஒவ்வொருவரும் வாழ்வை மறுரூபமாக்கும் தேவனுடைய அன்பிற்கு அடையாளமாயிருந்தனர். கிறிஸ்துவின் சரீரமாகிய சபையின் உறுப்பினர்கள் யாவரும், வரப்போகிற ஆண்டுகளில் எதை சந்திக்க நேர்ந்தாலும், அவரையே சார்ந்திருக்க முடியும். நாம் ஒருவரையொருவர் தாங்கி, தொடர்ந்து தேவனைத் தேடும்பொழுது, எரேமியாவைப் போல நாமும் விசுவாசத்தைக் கட்டும் நினைவுகளால் பெலப்பட்டு, தேவனுடைய மாறாத்தன்மைiயும் நம்முடைய நம்பிக்கையையும் அவர் மீது சார்ந்திருக்கச் செய்வார்.

நிறைவேற்றின காலங்கள்

வருடத்தின் முடிவில் நாம் செய்து முடிக்காத காரியங்களின் பாரம் நம்மை சோர்வுக்குள்ளாக்கலாம். குடும்பப் பொறுப்புகளும் வேலைகளும் ஒருநாளும் ஓயாது என்பது போல தோன்றலாம். இன்று முடியாத வேலைகள் நாளைய வேலைகளுடன் சேர்ந்து கொள்ளுகிறது. ஆனால், நம் விசுவாச பயணத்தில், நாம் நிறைவேற்றின பணிகளுக்காகவும், தேவனுடைய உண்மைக்காகவும் நாம், நின்று, கொண்டாடும் நேரங்கள் இருத்தல் வேண்டும்.

தங்களது முதல் மிஷனரி பயணத்தில் நிறைவேற்றின கிரியைகளுக்காக, பவுலும் பர்னபாவும் தேவனுடைய கிருபைக்கு ஒப்புவிக்கப்பட்டுப் புறப்பட்டு அந்தியோகியாவுக்கு வந்து சேர்ந்தார்கள் (அப். 14:26). இயேசுவை அறிவிக்கும் பணி நெருக்கினாலும், நாங்கள் நிறைவேற்றின கிரியைகளுக்காகத் தேவனுக்கு நன்றி சொல்ல நேரம் ஒதுக்கினார்கள்.” அவர்கள் அங்கே சேர்ந்தபொழுது, சபையைக் கூடிவரச்செய்து தேவன் தங்களைக்கொண்டு செய்தவைகளையும், அவர் புறஜாதிகளுக்கு விசுவாசத்தின் கதவைத் திறந்ததையும் அறிவித்தார்கள் (வச. 27).

கடந்த வருடத்தில் தேவன் உங்கள் மூலமாகச் செய்தது என்ன? நன்கு அறிந்து நேசிக்கிற ஒருவருக்கு தேவன் விசுவாசக் கதவை எவ்வாறு திறந்தார்? நம்மால் நினைத்துக்கூடப் பார்க்கமுடியாத வழியில், முற்றுப்பெறாததாய் அல்லது அற்பமாய்த் தோன்றுகிற காரியங்களில், தேவன் நம்மூலமாக செயல்பட்டுக்கொண்டே இருக்கிறார்.

தேவன் நம்மூலமாகச் செய்த காரியம் முடிவடையாததை நினைத்து வேதனைப்படும் பொழுது, அவர் நம்மூலமாக செயல்பட்ட வழிகளுக்காய், மறக்காமல் நன்றி சொல்லுவோம். தேவன் கிருபையாய் செய்தவைகளை நினைத்து களிகூறுவதே வரப்போகும் அடுத்த கட்டத்திற்கு அஸ்திபாரமாகும்.

கண்களில் நிலை நிற்பவை எது?

ஹம்மிங் பறவையின் பெயர் (HUMMING BIRD) இதன் இறக்கைகள் வேகமாக அடிப்பதால் ஏற்படும் ரீங்கார ஓசையினால் இதற்கு இந்தப் .பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. போர்த்துக்கீசிய மொழியில் “பூக்களை முத்தமிடும் பறவை” (FLOWER KISSER) என்றழைக்கப்படுகிறது. ஸ்பானிய மொழியில் “பறக்கும் ரத்தினம்” (FLYING JEWELS) எனப்படும். எனக்குப் பிடித்த பெயர்களில், மெக்சிகன் ஒன்று. சப்போடெக் மொழியில் பியுலூ என்பதே. இதன் அர்த்தம் “கண்களில் நிலைநிற்பது” என்பதாகும் அதாவது இந்த ஹம்மிங் பறவையை ஒரு முறை பார்த்துவிட்டால் மறக்கவே முடியாது!

ஜீ. கே. செஸ்டர்ட்டன் “உலகில் அதிசயங்கள் ஒழிந்துபோவதேயில்லை. ஆச்சரியப்படுபவர்கள் இல்லாததுதான் குறை;” என்றார். இந்த ஹம்மிங் பறவை அப்படியொரு அற்புதம். இந்த சின்னக் குருவியில் என்ன அற்புதம் இருக்கிறது? அவைகளின் சிறிய உருவம் கிட்டத்தட்ட ஒரு விரல் நீளம் (2-3) இருப்பதாலோ அல்லது ஒரு வினாடிக்கு 50 முதல் 200 தடவை இறக்கைகளை அடிப்பதாகவோ இருக்கலாம்.

104ம் சங்கீதத்தை எழுதியது யார் என்று திட்டமாகத் தெரியவில்லை. ஆனால் அவர் இயற்கையின் அழகினால் நிச்சயம் கவரப்பட்டிருந்தார். சிருஷ்டிப்பின் பல அதிசயங்களை, உதாரணமாக லீபனோனின் கேதுரு மரங்கள், காட்டுக் கழுதைகள் போன்றவற்றை வர்ணித்தபின், “கர்த்தர் தம்முடைய கிரியைகளிலே மகிழுவார்” (வச. 3) என்று பாடினார். அதன்பின் “நான் அவரைத் தியானிக்கும் தியானம் இனிமையாயிருக்கும் என்று ஜெபித்தார் (வச. 340).

என்றும் கண்களில் நிலைத்து நிற்கும் அழகும் பூரணமும் கொண்ட அநேகக் காரியங்கள் இயற்கையிலுண்டு. நாம் அவற்றைத் தியானித்து கர்த்தரை எவ்வாறு பிரியப்படுத்தலாம்? நாம் அவற்றைக் கண்டு, ரசித்து, களிகூரும்பொழுது, கர்த்தருடைய கிரியைகளை நினைத்து, ஆச்சரியப்பட்டு, அவருக்கு நன்றி சொல்லலாம்.

ஒவ்வொரு நாளின் மணித்துளிகள்

நான் வாங்கிய பலசரக்குகளைக் காரில் வைத்தபின் கார் நிறுத்தும் இடத்திலிருந்து கவனமாக வெளியே எடுத்தேன். திடீரென்று ஒருவன், நான் வருவதைக் கவனியாமல் என் முன் வேகமாக குறுக்கே வந்துவிட்டான். நல்ல வேளை நான் ‘சடன் பிரேக்’ போட்டு அவன் மேல் மோதாமல் பார்த்துக் கொண்டேன். அவன் திகைத்துப் போய் என்னையே உற்றுப் பார்த்தான். அந்தச் ஷணத்தில், நான் இரண்டில் ஒன்று செய்திருக்கலாம்; கண்களை உருட்டி வெறுப்பைக் காட்டியிருக்கலாம்; அல்லது மன்னிக்கும் புன்னகையைக் காட்டியிருக்கலாம். நான் புன்னகித்தேன்.

அவன் முகத்தில் ஒரு தெளிவு தோன்றி மறைந்தது; அவனும் நன்றியோடு புன்னகித்தான்.

நீதிமொழிகள் 15:13 “மனமகிழ்ச்சி முகமலர்ச்சியைத்தரும்; மனோதுக்கத்தினாலே ஆவி முறிந்துபோம்” என்கிறது. நமது வாழ்வில் வரும் எல்லா இடையூறுகளிலும், ஏமாற்றங்களிலும், தொல்லைகளிலும் நாம் சிரித்த முகத்தோடிருக்க வேண்டுமென்று இதை எழுதியவர் கூறுகின்றாரா?  நிச்சயமாக இல்லை! சில வேளைகளில் நாம் உண்மையிலேயே துக்கப்படுகிறோம், சோர்ந்துபோகிறோம், அநியாயத்திற்குக் கோபப்படுகிறோம். அந்த வினாடியில், ஒரு புன்னகை நமக்குத் தெளிவையும், நம்பிக்கையையும் தொடர்ந்து முன்னேறுவதற்கான கிருபையையும் தர முடியும்.

உள்ளான மன நிலையைப் பொறுத்து, புன்னகை தானாக வரும் என்பதே இந்த நீதிமொழியின் உள்ளான கருத்து. ஒரு சந்தோஷமான இருதயம், சமாதானத்தோடிருக்கும், மனரம்மியமாயிருக்கும், தேவனுடைய சிறந்த நன்மைக்குத் தன்னை அர்ப்பணிக்கும். இப்படி உள்ளத்திலிருந்து சந்தோஷம் பொங்கி வெளிவரும் இருதயமிருந்தால், எந்த சூழ்நிலையையும் புன்னகையோடு எதிர்கொள்ளளலாம்.. தேவனிடத்திலுள்ள நம்பிக்கையையும் சமாதானத்தையும் பெற்று அனுபவிக்க மற்றவர்களையும் அழைக்கலாம்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

நல்ல பிரியாணி

வர்ஷாவின் உணவுக் கடையில் அதிகம் விற்பனையாகும் உணவு அவரது பிரியாணிதான். அவள் வெங்காயத்தை பொன் நிறமாக மாறும் வரை கவனமாக வறுத்தெடுப்பாள். எனவே, வழக்கமான வாடிக்கையாளர் ஒருவர், “உங்கள் பிரியாணி சுவை வித்தியாசமானது. சுவை மேம்பட்டதாக தெரியவில்லை” என்றார்.

வர்ஷாவின் புதிய உதவியாளர், இந்த முறை அதைத் தயாரித்து, அது ஏன் வித்தியாசமானது என்பதை விளக்கினார்: “வழக்கமான முறையில் நான் வெங்காயத்தை வறுக்கவில்லை, ஏனென்றால் நான் அதை வீட்டில் அவ்வாறு செய்வது வழக்கம். மிளகாய் தூளும் அதிகம் சேர்த்தேன். என் கருத்துப்படி, அது நன்றாக சுவைக்கிறது.” செய்முறை வழக்கத்தைப் புறக்கணித்துவிட்டு, அதற்குப் பதிலாக அதை தன்னுடைய பாணியில் அவள் செய்து காண்பித்தாள்.

நான் சில சமயங்களில் தேவனுடைய ஆலோசனைகளுக்கு இப்படித்தான் பதிலளிப்பேன். வேதத்தில் கொடுக்கப்பட்டுள்ள அவருடைய கட்டளைகளை முழுமையாகக் கடைப்பிடிப்பதற்குப் பதிலாக, நான் என் கருத்துக்களுக்கு உட்பட்டு என் வழியில் செல்கிறேன்.

சீரிய இராணுவத்தின் படைத்தளபதியான நாகமானும் இதேபோன்ற தவறை செய்யும் விளிம்பில் இருந்தான். தன் தொழுநோய் குணமாக யோர்தானில் தன்னைக் கழுவும்படி எலிசா தீர்க்கதரிசி மூலம் தேவனுடைய அறிவுறுத்தலைப் பெற்றபோது, பெருமிதம் கொண்ட படைவீரன் கோபமடைந்தான். தேவனுடைய கட்டளையை விட அவனது சுயகருத்து மேலானது என்று நம்பி, தனது தேவையை எவ்வாறு நிவர்த்தி செய்ய வேண்டும் என்பதற்கான தனது சொந்த எதிர்பார்ப்புகளை அவன் பேசினான் (2 இராஜாக்கள் 5:11-12). இருப்பினும், எலிசாவின் வார்த்தைகளுக்கு செவிசாய்க்கும்படி அவனுடைய ஊழியர்கள் அவரை சமாதானப்படுத்தினர் (வச. 13). இதன் விளைவாக, நாகமான் குணமடைந்தான்.

நாம் தேவனுடைய வழியில் விஷயங்களைச் செய்யும்போது, விவரிக்க முடியாத சமாதானத்தை அனுபவிக்கிறோம். அவருடைய நோக்கங்களை நிறைவேற்றுவதில் அவருடன் இணைந்து பணியாற்றுவோம். 

.

இராஜ்ய வடிவில் பணித்தளம்

இங்கிலாந்தின் தொழிற்சாலைகள் இருண்ட இடங்களாக இருந்தன. இறப்புகள் அதிகமாக நிகழ்ந்தன. தொழிலாளர்கள் பெரும்பாலும் வறுமையில் வாழ்ந்தனர். “சேரியில் வசிக்கும் உழைக்கும் வர்க்கம் எவ்வாறு இலட்சியங்களை வளர்த்துக் கொள்ள முடியும்,” என்று எண்ணிய ஜார்ஜ் கேட்பரி, தனது விரிவடையும் சாக்லேட் வணிகத்திற்காக ஒரு புதிய வகையான தொழிற்சாலையை உருவாக்கினார். அது அவரது தொழிலாளர்களுக்கு பெருமளவில் பயனளித்தது. இதன் விளைவாக, முன்னூறுக்கும் மேற்பட்ட வீடுகளைக் கொண்ட போர்ன்வில்லே என்ற அந்த குக்கிராமம், விளையாட்டு மைதானங்கள், பள்ளிகள் மற்றும் கேட்பரியின் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கான தேவாலயங்கள் என்று வடிவமைக்கப்பட்டது. அவர்களுக்கு நல்ல ஊதியமும் மருத்துவ சேவையும் வழங்கப்பட்டது. இவை அனைத்திற்கும் கேட்பரி கிறிஸ்துவின் மீது வைத்த நம்பிக்கையே காரணம்.

தேவனுடைய சித்தம் “பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோலப் பூமியிலேயும் செய்யப்படுவதாக” என்று இயேசு ஜெபிக்கக் கற்றுக்கொடுக்கிறார் (மத்தேயு 6:10). காட்பரி செய்தது போல், இயேசு கற்றுக்கொடுத்த ஜெபத்தின் அடிப்படையில், நம்முடைய பணியிடங்கள் அன்றன்றுள்ள ஆகாரத்தை சம்பாதிக்கும் இடமாகவும் கடனாளிகளை மன்னிக்கிற இடமாகவும் இருக்கவேண்டும் என்பதை நாம் கற்பனை செய்து பார்க்க உதவுகிறது (வச. 11-12). ஒரு வேலையாளுக்கு, “கிறிஸ்துவைச் சேவிக்கிறதினாலே, சுதந்தரமாகிய பலனைக் கர்த்தராலே பெறுவீர்களென்று அறிந்து” (கொலேசெயர் 3:23) வேலை செய்ய ஊக்குவிக்கிறது. முதலாளிகளாக, ஊழியர்களுக்கு “வேலைக்காரருக்கு நீதியும் செவ்வையுமானதைச் செய்ய” (4:1) ஊக்குவிக்கிறது. நமது பங்கு எதுவாக இருந்தாலும், ஊதியமாக இருந்தாலும் சரி, தன்னார்வமாக இருந்தாலும் சரி, நாம் சேவை செய்பவர்களின் நல்வாழ்வைக் கவனிப்பதைக் குறிக்கிறது.

ஜார்ஜ் கேட்பரியைப் போலவே, தேவன் நம் சுற்றுப்புறங்களுக்கும் பணியிடங்களுக்கும் பொறுப்பாக இருந்தால், விஷயங்கள் எப்படி வித்தியாசமாக இருக்கும் என்று கற்பனை செய்யலாம். ஏனெனில் அவர் இருக்கும் போது மக்கள் செழித்து வளர்கிறார்கள். 

 

மீட்டெடுக்கும் பயிற்சி

நீங்கள் எப்போதாவது ஒரு கதையைச் சொல்லிக்கொண்டிருக்கும்போது, அதை இடையில் நிறுத்திவிட்டு, அது எப்போது நிகழ்ந்தது அல்லது யார் என்று குழம்பி யோசித்திருக்கிறீர்களா? வயதாவதினால் நினைவாற்றல் மங்கிவிடும் என்று நாம் அடிக்கடி நம்புகிறோம். ஆனால் சமீபத்திய ஆய்வுகள் அந்த கருத்தை ஆதரிக்கவில்லை. உண்மையில், அவை நமது நினைவாற்றல் பிரச்சனையல்ல என்பதைக் குறிப்பிடுகின்றன. அந்த நினைவுகளை மீட்டெடுப்பது நமது திறமை என்று கருதுகின்றன. நினைவுகளை சில வழக்கமான ஒத்திகை இல்லாமல் அணுகுவது கடினமாகிவிடும்.

அந்த மீட்டெடுப்பு திறனை மேம்படுத்துவதற்கான வழிகளில் ஒன்று, வழக்கமான திட்டமிடப்பட்ட செயல்கள் அல்லது குறிப்பிட்ட நினைவகத்தை நினைவுபடுத்தும் அனுபவங்கள். நமது சிருஷ்டிக்கர்த்தர் இதை அறிந்திருந்தார். எனவே அவர் இஸ்ரவேல் புத்திரருக்கு வாரத்தில் ஒரு நாளை தேவனை ஆராதிக்கும் ஓய்வுநாளாக ஏற்படுத்தியிருந்தார். அத்தகைய ஓய்வினிமித்தம் நாம் மனப் பயிற்சிக்கான வாய்ப்பைப் பெறுகிறோம். “கர்த்தர் ஆறுநாளைக்குள்ளே வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கி(னார்)” (யாத்திராகமம் 20:11). இது நம்மால் உண்டானது அல்ல; தேவனுடைய திட்டம் என்பதை நாம் அறிந்திருக்கிறோம்.

நம் வாழ்க்கையின் அவசரத்தில், தேவன் நமக்காகவும் மற்றவர்களுக்காகவும் என்ன செய்திருக்கிறார் என்ற நினைவுகளில் சில நேரங்களில் நம் பிடியை நாம் இழக்க நேரிடுகிறது. நம் வாழ்க்கையை யார் உன்னிப்பாகக் கண்காணிக்கிறார்கள் என்பதையும், நாம் அதிகமாகவும் தனிமையாகவும் உணரும்போது அவர் நம்மோடு இருப்பதாக வாக்களித்ததை நாம் மறந்துவிடுகிறோம். நம்முடைய வழக்கமான வாழ்க்கைப் பயணத்திலிருந்து ஒரு நாளை ஓய்வுநாளாய் ஆசரிப்பதின் மூலம் நாம் தேவனையும் “அவர் செய்த சகல உபகாரங்களையும்” (சங்கீதம் 103:2) நினைவுகூர வலியுறுத்தப்படுகிறோம்.