ஜூன், 2017 | நமது அனுதின மன்னா Tamil Our Daily Bread

Archives: ஜூன் 2017

தழைத்தோங்கும் தருணம்

எங்கள் பின் வாசல் பக்கம் உள்ள ரோஜாச் செடியை வெட்டிவிட வேண்டுமென கடந்த இளவேனிற் காலத்திலேயே தீர்மானித்தேன். நாங்கள் இந்த வீட்டில் வாழ்ந்த இம்மூன்று வருடங்களிலும், அச்செடி பூக்கள் பூக்கவே இல்லை. பூக்களற்ற அசிங்கமான அதன் கிளைகள் எல்லா திசைகளிலும் இப்பொழுது படர்ந்துள்ளது.

என் வாழ்க்கை மிகுந்த பரபரப்பாக செயல்பட ஆரம்பித்துவிட்டதால், என் தோட்டத்தைக் குறித்த திட்டங்கள் தாமதமாயிற்று. அதன் பின் சில வாரங்களில், அந்த ரோஜா செடி திடீரென பூத்து குலுங்கியது. அப்படியொரு காட்சியை நான் இதற்கு முன் கண்டதே இல்லை. நறுமணம் வீசும் நூற்றுக்கும் அதிகமான வெள்ளைப்பூக்கள் பின்வாசற் கதவில் படர்ந்து தொங்கிக் கொண்டிருந்தன. மேலும் அவை முற்றம் வரையிலும் கூட படர்ந்து அத்தரை பகுதியை அழகான இதழ்களால் மூடின.

எங்கள் ரோஜா செடியின் மறுமலர்ச்சி, இயேசு கூறிய அத்திமர உவமையை எனக்கு நினைவூட்டியது (லூ:13:6-9). அத்திமரம் காய்ப்பதற்கு மூன்றாண்டு கால அவகாசம் கொடுப்பது இஸ்ரவேல் தேசத்திலே வழக்கம். ஆனால், அவை மூன்று ஆண்டுகளில் காய்க்கவில்லை என்றால் அந்நிலத்தை வேறு விதத்தில் பிரயோஜனப்படுத்தும்படி அம்மரத்தை வெட்டிவிடுவார்கள். இயேசு கூறிய உவமையிலே, ஓர் தோட்டக்காரன் ஒரு மரத்திற்காக தன் எஜமானிடம் இன்னும் ஓர் ஆண்டுகால அவகாசம் கேட்பான். இந்த முழு உவமையின் பொருள் என்னவெனில், ‘தாங்கள் வாழ வேண்டிய விதத்திலே இஸ்ரவேலர் வாழவில்லை. ஆகையால் தேவனால் நீதியாய் அவர்களை நியாயந்தீர்க்க முடியும்.’ ஆனால் இரக்கமுள்ள தேவன், அவர்கள் மனந்திரும்பி மன்னிப்புபெற்று பூத்து குலுங்கும்படி அவர்களுக்கு இரக்கம் பாராட்டி, கூடுதல் கால அவகாசம் அளித்துள்ளார்.

நாம் அனைவரும் தழைத்தோங்க வேண்டுமென தேவன் விரும்புவதால், நம் அனைவருக்கும் கூடுதல் கால அவகாசம் அளித்துள்ளார். நாம் விசுவாசத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தாலும் சரி, இரட்சிக்கப்படாத உற்றார் உறவினர்களுக்காக ஜெபித்துக் கொண்டிருந்தாலும் சரி, அவர் மிகுந்த இரக்கம் உள்ளவர் என்பது நம் அனைவருக்கும் நற்செய்தி அல்லவோ!

செயல்படும் விசுவாசம்

ஒரு நாள் என் தோழி காரை ஓட்டிக்கொண்டு மளிகைப் பொருட்கள் வாங்க கடைக்குச் சென்றாள். அப்பொழுது சாலை ஓரத்திலே நடந்துகொண்டிருந்த ஒரு பெண்மணியை அவள் கண்டபோது, காரை நிறுத்தி அப்பெண்ணை காரில் ஏற்றிக்கொள்ள வேண்டும் என அவளுக்கு தோன்றியது. ஆகவே அப்பெண்ணை காரில் ஏற்றிக்கொண்டாள். பிறகு, அவளுடைய நிலைமையை கேட்டறிந்தபோது என் தோழிக்கு மிகுந்த துக்கமாயிற்று. ஏனென்றால் அப்பெண் பஸ்ஸில் பயணம் செய்ய தன்னிடம் பணம் இல்லாததால், பல மைல் தூரத்திலிருக்கும் தன்னுடைய வீட்டிற்கு இவ்வுஷ்ணமான வேளையிலும் நடந்து சென்றுகொண்டிருந்தாள். அதுமட்டுமின்றி காலையிலே வேலைக்கு வருவதற்கும் அதிகாலை 4 மணிக்கே வீட்டைவிட்டு பல மணிநேரம் நடந்தே வந்துள்ளாள்.

அப்பெண்ணை காரிலே அழைத்து சென்றதின் மூலம், கிறிஸ்தவர்களாகிய நாம், நம்முடைய விசுவாசத்தை கிரியைகளிலே காண்பிக்க வேண்டும் என்னும் யாக்கோபின் அறிவுரைகளை, என் தோழி இந்நவீன காலக்கட்டத்திலும் நடைமுறைப்படுத்தியுள்ளால். “விசுவாசம் கிரியை களில்லாதிருந்தால் தன்னிலேதானே செத்ததாயிருக்கும்,” என யாக்கோபு கூறியுள்ளார் (2:17). சபையானது விதவைகளையும், திக்கற்ற பிள்ளைகளையும் காக்க வேண்டுமென்றார் (1:27). மேலும், வீண்வார்த்தைகளை சாராமல், அன்பின் கிரியைகளினாலே விசுவாசத்தை செயல் படுத்தி காட்டும்படி ஏவினார்.

நாம் விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டுள்ளோம்; கிரியைகளினாலல்ல. ஆனால், தேவைகளோடு இருப்பவர்களை நேசித்து அவர்களுக்கு உதவி செய்யும்பொழுது, நம்முடைய விசுவாசத்திலே நாம் ஜீவிக்கவும் செயல்படவும் செய்கிறோம். இந்த வாழ்க்கைப் பயணத்திலே நாம் இணைந்து பயணிக்கும்போது, நம் கண்களை எப்பொழுதும் திறந்துவைத்து, காரில் அழைத்துச் சென்ற என் தோழியைப்போல, தேவையோடு இருப்பவர்களைக் கண்டு உதவிடுவோமாக.

முற்றுப்பெறாத பணிகள்

மிகச் சிறந்த கலைஞராகிய மைக்கெலேஞ்ச (Michelangelo) இறந்தபொழது, அநேக நிறைவு பெறாத பணிகளை விட்டுச்சென்றார். ஆயினும், அவற்றில் நான்கு சிற்பங்கள் நிறைவு செய்யும் நோக்கத்தில் செதுக்கப்படவில்லை. ‘த பியர்டட் ஸ்லேவ்’ (The Bearded Slave – தாடி வைத்த அடிமை), ‘த அட்லஸ் ஸ்லேவ்’ (The Atlas Slave – பூமியை தோளில் சுமக்கும் அடிமை), ‘த அவேக்கனிங் ஸ்லேவ்’ (The Awakening Slave – விழித்தெழ முயலும் அடிமை), மற்றும் ‘த யங் ஸ்லேவ்’ (The Young Slave – இளம் அடிமை) ஆகிய சிற்பங்கள் நிறைவுபெறாதது போல காட்சியளித்தாலும், அவை அப்படிதான் இருக்கவேண்டுமென மைக்கெலேஞ்ச எண்ணினார். ஏனெனில் என்றென்றும் அடிமைப்பட்டிருப்பவனின் உணர்வுகளை அவர் வெளிக்காட்ட விரும்பினார்.

சங்கிலிகளால் கட்டப்பட்டிருப்பது போன்ற உருவங்களை செதுக்குவதற்கு பதில், பளிங்கு கற்களில் வெளிவர முடியாதபடி பதிந்து மாட்டிக்கொண்டிருக்கும் உருவங்களை செதுக்கினார். அப்பாறைகளிளிருந்து உடல்கள் வெளிவர முயல்வது போலவும், ஆனால் முழுமையாக வர இயலாதது போலவும் அவை செதுக்கப்பட்டுள்ளது. தசைகளெல்லாம் வளைந்தும் நெளிந்தும் மடங்கியும் காணப்பட்டாலும் அவ்வுருவங்களால் தங்களைத் தாங்களே ஒருபோதும் விடுவித்துக் கொள்ள இயலாது.

அந்த ‘அடிமைச்’ சிற்பங்களை கண்டபோது, அவற்றின் மீது எனக்கு அனுதாபம் உண்டாயிற்று. ஏனெனில், பாவத்தோடு எனக்கிருக்கும் போராட்டத்திற்கும், அவர்களுடைய அவலநிலைக்கும் எவ்வித வித்தியாசமில்லை. அச்சிற்பங்களைப் போலவே என்னை நானே விடுவித்துக்கொள்ள முடியாதபடி மாட்டிக்கொண்டுள்ளேன். அதாவது, “என் அவயவங்களில் உண்டாயிருக்கிற பாவ பிரமாணத்திற்கு [நான்] சிறையா[கினேன்]” (ரோ. 7:23). நான் எவ்வளவுதான் முயற்சித்தாலும் என்னால் என்னை மாற்ற இயலவில்லை. ஆனாலும் தேவனுக்கு நன்றி செலுத்துவோமாக. ஏனெனில் நீங்களும் நானும் ஒருபோதும் முற்றுப்பெறாத கிரியை போல இருக்க மாட்டோம். நாம் பரலோகம் செல்லும் வரை முழுமையடையாவிட்டாலும் பரிசுத்த ஆவியானவரை வரவேற்போமாக. ஏனென்றால் அவர் நம்மை மாற்றுவார். நம்மில் நற்கிரியை தொடங்கின தேவன் தாமே அதை செய்து முடிப்பாரென அவரே வாக்குப்பண்ணியுள்ளார் (பிலி. 1:5).

ஐவிரல் ஜெபங்கள்!

நாம் தேவனோடு உரையாடுவதே ஜெபம். அது ஒரு சூத்திரம் அல்ல. ஆனாலும், சில சமயம் நமது ஜெபவேளைகளை புத்துணர்வூட்டும் பொருட்டு, ஒரு ‘முறைமையை’ கடைப் பிடிப்பது நன்று. அதாவது, தாவீதின் சங்கீதங்களைக் கொண்டும் ஜெபிக்கலாம் அல்லது வேறு வேதபகுதிகளைக் (பரமண்டல ஜெபம்) கொண்டும் ஜெபிக்கலாம். இல்லையெனில், ‘ஆராதனை, அறிக்கை, நன்றிசெலுத்துதல், விண்ணப்பித்தல்’ என்கிற வரிசை முறைமையிலும் கூட ஜெபிக்கலாம். சமீபத்தில், பிறருக்காக ஜெபிக்க உதவும் ‘ஐவிரல் ஜெபங்கள்’ என்கிற முறையைக் குறித்து அறிந்தேன்.

 ·        நீங்கள் கைகளைக் கூப்பும்பொழுது, உங்கள் பெருவிரல்தான் உங்களுக்கு மிக அருகில் உள்ளது. ஆகவே, முதலாவது உங்களுக்கு நெருக்கமானவர்களுக்காக, அதாவது உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்காக ஜெபியுங்கள் (பிலிப். 1:3–5).

·        இரண்டாவது, ஆள்காட்டி விரல். இது சுட்டிக்காட்ட பயன்படும். இப்பொழுது போதிப்பவர் களுக்காக ஜெபியுங்கள். அதாவது வேதாகம ஆசிரியர்கள், போதகர்கள் மற்றும் சிறு பிள்ளைகளுக்கு போதிப்பவர்கள். (1 தெச. 5:25)

·        அடுத்த விரல் மற்ற விரல்களை விட பெரியது. அதிகாரத்தில் இருக்கிற தேசத் தலைவர்களுக்காகவும், உங்கள் வேலை ஸ்தலத்தில் இருக்கும் அதிகாரிகளுக்காகவும் ஜெபிக்க இவ்விரல் நினைவூட்டும் (1 தீமோ. 2:1-2)

·        நான்காம் விரல், பொதுவாக மற்ற விரல்களை விட பெலவீனமானது. ஆகவே, இப்பொழுது துயரத்தில் இருப்பவர்களுக்காகவும் துன்பப்படுகிறவர்களுக்காகவும் வேண்டுதல் செய்யவும். (யாக்:5:13-16)

·        கடைசியாக உங்கள் சுண்டுவிரல். தேவனுடைய மகத்துவத்தோடு நம்மை ஒப்பிட்டால் நாம் எவ்வளவு சிறியவர்கள் என்பதை இவ்விரல் நமக்கு நினைவூட்டும். ஆகவே இப்பொழுது நம்முடைய தேவைகள் சந்திக்கப்பட ஜெபிக்கவும் (பிலி. 4:6,19)

 நீங்கள் எந்த முறைமையை வேண்டுமானாலும் உபயோகிக்கலாம், ஆனால், பிதாவோடு நீங்கள் உரையாடுங்கள். உங்கள் இருதயத்தில் உள்ளதை அவர் கேட்க விரும்புகிறார்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

களவுபோன தெய்வங்கள்

மரத்தால் செய்யப்பட்ட ஒரு குலதெய்வ விக்கிரகத்தைக் காணவில்லை என்று ஒரு பெண் அதிகாரிகளிடம் புகார் அளித்தாள். அவர்கள் அந்த விக்கிரகத்தைக் கண்டுபிடித்துவிட்டதாக எண்ணி, அடையாளம் காண்பிப்பதற்காக அவளை வரச்சொன்னார்கள். இது உங்களுடைய குலதெய்வமா? என்று அவளைக் கேட்க, அவள் வருத்தத்துடன் “இல்லை, என்னுடைய தெய்வம் இதைக்காட்டிலும் பெரியதும் அழகானதுமாய் இருக்கும்” என்று பதிலளித்தாளாம்.  
மக்கள் அவர்களுடைய கரங்களால் செய்யப்படும் தெய்வங்கள் அவர்களை பாதுகாக்கும் என்று நம்பி அவர்கள் விரும்பின வடிவத்தை அதற்கு கொடுக்கிறார்கள். அதினால் தான் யாக்கோபின் மனைவி ராகேல், லாபானிடத்திலிருந்து மறைமுகமாய் புறப்பட்டபோது “தன் தகப்பனுடைய சுரூபங்களைத் திருடிக்கொண்டாள்” (ஆதியாகமம் 31:19) என்று வேதம் சொல்லுகிறது. ஆனாலும் அந்த சுரூபங்களுக்கு மத்தியில் தேவன் யாக்கோபை பாதுகாத்தார் (வச. 34).  
யாக்கோபுடைய பயணத்தில் யாக்கோபு இரவு முழுவதும் ஒரு மனிதனோடு போராடுகிறான் (32:24). அந்த மனிதன் சாதாரண மனுஷீகத்திற்கு உட்பட்டவன் இல்லை என்பதை யாக்கோபு அறிந்ததினால் தான் “நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மைப் போகவிடேன்” (வச. 26) என்று சொல்லுகிறான். அந்த மனிதன் இவனுடைய பெயரை இஸ்ரவேல் (“தேவன் யுத்தம்செய்கிறார்”) என்று மாற்றி ஆசீர்வதிக்கிறார் (வச. 28-29). “நான் தேவனை முகமுகமாய்க் கண்டேன், உயிர் தப்பிப் பிழைத்தேன் என்று சொல்லி, அந்த ஸ்தலத்துக்கு பெனியேல்” (வச. 30) என்று யாக்கோபு பேரிட்டான். 
இந்த தேவனே ஒருவரால் கற்பனை செய்து பார்க்கமுடியாத அளவிற்கு பெரியவரும் அழகானவருமாகிய தேவன். அவரை செதுக்கவோ, திருடவோ, மறைக்கவோ முடியாது. ஆனாலும், அன்றிரவு யாக்கோபு கற்றுக்கொண்டபடி, நாம் அந்த தேவனை அணுகலாம்! இந்த தேவனை “பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே” என்று அழைக்க இயேசு தம் சீஷர்களுக்குக் கற்றுக் கொடுத்தார் (மத்தேயு 6:9). 

தேவனால் அறியப்படுதல்

தத்தெடுப்பின் மூலம் பிரிந்த இரட்டைக் குழந்தைகள் இருபது ஆண்களுக்குப் பின் இணைவதற்கு மரபணு பரிசோதனை உதவியது. அதில் ஒருவனான கீரோன் வின்சென்ட்டுக்கு குறுஞ்செய்தி அனுப்பியபோது, அவன் “இது யார் புதிய நபராய் இருக்கிறதே?” என்று யோசித்தான். அவன் பிறக்கும்போது அவனுக்கு வைத்த பெயர் என்ன என்று கீரோன் கேட்டபோது, வின்சென்ட் “டைலர்” என்று பதிலளித்தான். அப்போது அவர்கள் இருவரும் சகோதரர்கள் என்பதை அறிந்துகொண்டனர். அவன் தன்னுடைய பெயரினால் அறியப்பட்டான்! 
உயிர்த்தெழுதல் சம்பவத்தில் பெயர் எவ்வளவு முக்கிய பங்காற்றுகிறது என்பதை பாருங்கள். மகதலேனா மரியாள் கல்லறையினிடத்திற்கு வந்து, இயேசுவின் சரீரத்தைக் காணாமல் அழுகிறாள். “ஸ்திரீயே, ஏன் அழுகிறாய்?” (யோவான் 20:15) என்று இயேசு கேட்கிறார். தன்னை கேள்வி கேட்பது யார் என்பதை அவர் “மரியாளே” என்று அழைக்கும் வரைக்கும் மரியாள் அறியாதிருந்தாள் (வச. 16).    
அவர் சொல்லுவதைக் கேட்ட மாத்திரத்தில் அவள் கண்ணீர் சிந்தி, “ரபூனி” (ஆசிரியர் என்று அர்த்தம்) என்று அரமாயிக் மொழியில் அழைத்தாள் (வச. 16). நம் உயிர்த்தெழுந்த கிறிஸ்து அனைவருக்காகவும் மரணத்தை வென்று, நம் ஒவ்வொருவரையும் அவருடைய பிள்ளைகளாக ஏற்றுக்கொண்டதை உணர்ந்து, உயிர்த்தெழுதல் பண்டிகையில் கிறிஸ்தவர்கள் வெளிப்படுத்தும் மகிழ்ச்சிக்கு ஒப்பாக அவளுடைய மகிழ்ச்சி இருந்தது. அவர் மரியாளிடத்தில், “நான் என் பிதாவினிடத்திற்கும் உங்கள் பிதாவினிடத்திற்கும், என் தேவனிடத்திற்கும் உங்கள் தேவனிடத்திற்கும் ஏறிப்போகிறேன்” (வச. 17) என்று சொல்லுகிறார்.  
ஜியார்ஜியாவில் இரண்டு சகோதரர்கள் தங்கள் பெயர்களின் மூலம் மீண்டும் ஒன்று சேர்ந்து ஒரு புதிய உறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டுசெல்ல தீர்மானித்தனர். உயிர்த்தெழுதல் நாளின்போது, இயேசுவால் அறியப்பட்டவர்களுக்கு அவருடைய தியாகமான அன்பை காண்பிக்கும்பொருட்டு அவர் மேற்கொண்ட பெரிய முயற்சிக்காய் அவரை நாம் மகிமைப்படுத்துகிறோம். அந்த தியாயம் உனக்காகவும் எனக்காகவும் செய்யப்பட்டது. அவர் உயிரோடிருக்கிறார்.  

சத்தியம் தேடுவோர்

ஒரு பெண் ஒருமுறை என்னிடம் ஒரு கருத்து வேறுபாடு தன் தேவாலயத்தை இரண்டாய் கிழித்தது என்று சொன்னாள். “எதில் கருத்து வேறுபாடு?” என்று நான் கேட்டேன். “பூமி தட்டையாக இருக்கிறதா?” என்னும் விவாதத்தினால் என்று பதிலளித்தாள். சில மாதங்களுக்குப் பிறகு, ஒரு உணவகத்தின் பின் அறையில் குழந்தைகள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதாக கூறி ஒரு மனிதன் தன் கையில் ஆயுதம் எந்தி உள்ளே வந்தார் என்னும் செய்தியைப் படித்தேன். ஆனால் அந்த உணவகத்திற்கு பின்பு எந்த அறையும் இல்லை. ஆகையால் அந்த மனிதனை கைது செய்தனர். இந்த இரண்டு சம்பவத்திலும், மக்கள் இணையதளத்தில் இடம்பெறக்கூடிய சர்ச்சைக்குரிய காரியங்களைப் பார்த்துவிட்டு இப்படிப்பட்ட தகாத செயல்களில் ஈடுபடுகின்றனர்.  
கிறிஸ்தவர்கள் மெய்யான குடிமக்கள்களாய் வாழ்வதற்காய் அழைக்கப்படுகின்றனர் (ரோமர் 13:1-7). நல்ல குடிமகன்கள் தவறான செய்திகளைப் பரப்புவதில்லை. லூக்காவின் நாட்களில் இயேசுவைக் குறித்து பல கதைகள் உலாவந்தன. அவற்றுள் சிலவைகள் உண்மையற்றவைகள் (லூக்கா 1:1). தான் கேட்ட அனைத்து செய்திகளையும் அப்படியே தொடர்புகொள்ளாமல், லூக்கா அவற்றை தீர்க்கமாய் ஆராய்ச்சி செய்து, சாட்சியங்களோடு பேசி (வச. 2), “ஆதிமுதல் எல்லாவற்றையும் திட்டமாய் விசாரித்தறிந்து” (வச. 3), அவருடைய சுவிசேஷத்தில் அவற்றை பெயர்கள், மேற்கோள்கள், சரித்திரதன்மை ஆகியவற்றின் அடிப்படையில் பதிவுசெய்துள்ளார்.  
 
நாமும் அப்படியே செய்யமுடியும். தவறான செய்திகள் திருச்சபைகளை பிளவுபடுத்தி ஆத்துமாக்களை ஆபத்தில் ஆழ்த்தக்கூடும் என்பதினால் உண்மைகளைச் சரிபார்ப்பது அவர்களை நேசிப்பதற்கான ஒரு அடையாளமாகும் (10:27). ஒரு பரபரப்பான சம்வத்தை நாம் கேள்விப்படும்போது, அது உண்மையா என்று அறிந்து சரிபார்த்து, நிபுணர்களின் உதவியை நாடுவது நல்லது. அவ்வாறு செய்து நல்ல தரமான செய்திகளை நாம் பரப்புவது என்பது சுவிசேஷத்திற்கான நம்பகத்தன்மையை பிரதிபலிக்கிறது. அவ்வாறு செய்வதின் மூலம் “சத்தியத்தினால் நிரைந்தவரை” (யோவான் 1:14) நான் சேவிக்கமுடியும்.