மே, 2017 | நமது அனுதின மன்னா Tamil Our Daily Bread

Archives: மே 2017

நொறுங்குண்ட நிலையின் அழகு!

கின்ட்சூகி (Kintsugi) என்பது உடைந்த மண்பாண்டங்களை சீரமைக்கும் பல நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த ஒரு ஜப்பானிய கலை ஆகும். குங்கிலியம் (Resin) என்னும் ஒரு பிசின் வகையோடு பொன்துகள்களை கலந்து, உடைந்த துண்டுகளை அக்கலவையைக்கொண்டு ஒட்டிவிடுவார்கள். விரிசல்களிலும் இதை நிரப்பிடுவார்கள். விளைவு, மிக உறுதியான ஒரு இணைப்பு. உடைந்து போன மண்பாண்டத்தில் ஏற்பட்ட சேதத்தை வெறுமனே மறைப்பதற்கு பதில் ஒரு அற்புதமான கலையைக் கொண்டு அதை அழகான பாண்டமாக மாற்றிவிடுவார்கள். 

அதைப்போலவே, நாம் செய்த பாவத்திற்காக உண்மையாகவே மனஸ்தாபப்பட்டு மனந்திரும்பும் பொழுது, அந்நொறுங்குண்ட நிலையை தேவன் மிக உயர்வாகக் காண்கிறார் என்று வேதம் கூறுகிறது. தாவீது பத்ஷேபாளோடு விபசாரத்தில் ஈடுபட்டதுமன்றி அவளுடைய கணவனைத் திட்டமிட்டு கொலை செய்தான். இதைக்குறித்து தீர்க்கதரிசியாகிய நாத்தான் தாவீதை எதிர்கொண்டு விசாரித்த பொழுது, தாவீது மனந்திரும்பினான். “பலியை நீர் விரும்புகிறதில்லை, விரும்பினால் செலுத்துவேன்; தகனபலியும் உமக்குப் பிரியமானதல்ல. தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான்; தேவனே, நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர்,” என்று பின்பு தாவீது செய்த ஜெபத்தின் மூலம், நாம் பாவம் செய்வோமானால் தேவன் எதை நம்மிடம் எதிர்பார்க்கிறார் என்பதை நாம் அறிந்துகொள்ளலாம் (சங். 51:16-17). 

பாவத்தினால் நம்முடைய இருதயம் உடைந்து போயிருக்கும்பொழுது, சிலுவையிலே நமது இரட்சகரால் நமக்கு மிக தாராளமாய் அளிக்கப்பட்ட விலையேறப்பெற்ற மன்னிப்பைக் கொண்டு தேவன் நம் இருதயத்தை சீர்ப்படுத்துவார். நாம் அவரிடம் நம்மை தாழ்த்தி அர்ப்பணிக்கும் பொழுது, அன்புடன் நம்மை வரவேற்று கிட்டிச் சேர்த்துக்கொள்வார் 

தேவன் எவ்வளவாய் இரக்கமுள்ளவர்! தாழ்மையுள்ள இருதயத்தையே தேவன் விரும்புவதாலும், அவருடைய இரக்கங்கள் மகாசவுந்தர்யமுள்ளதாய் இருப்பதாலும், “தேவனே, என்னை ஆராய்ந்து, என் இருதயத்தை அறிந்து கொள்ளும்: என்னை சோதித்து, என் சிந்தனைகளை அறிந்துகொள்ளும். வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து, நித்திய வழியிலே என்னை நடத்தும்,” என்னும் இன்னொரு வேதாகம ஜெபம் இன்று நமதாகட்டும் (சங். 139:23-24).

இரக்கத்தை எதிர்பார்த்திடு இரக்கத்தை அளித்திடு!

என் தோழியின் தவறான தீர்மானங்களும் தேர்வுகளும் அவளை பாவத்திற்குள்ளாக மிக அதிகமாய் அழைத்துச் சென்றது மாத்திரமன்றி அவளுடைய செயல்கள் என்னையும் பாதித்தது. இதைக் குறித்து நான் ஒவ்வொரு வாரமும் என்னுடன் சேர்ந்து ஜெபிக்கும் பெண் ஒருவரிடம் முறையிட்டபொழுது, அவர் தன்னுடைய கரங்களை என் கரங்கள் மீது வைத்து, “சரி நாம் நம் அனைவருக்காகவுமே ஜெபிக்கலாம்” என்று கூறினார். 

அதற்கு நான், “நம் அனைவருக்காகவுமா?” என முகம் சுளித்து வினவினேன். 

“ஆம் எப்பொழுதும் இயேசுவே நம்முடைய பரிசுத்தத்தின் அளவுகோலாய் இருப்பதால், நம்முடைய பாவங்களை நாம் ஒருபோதும் மற்றவருடைய பாவங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கக்கூடாது என்று நீயே கூறியிருக்கிறாயே?” என அவர் பதிலளித்தார். 

நான் தவறை உணர்ந்து, “இந்த உண்மை எனக்கு கொஞ்சம் வலிக்கத்தான் செய்கிறது. ஆனாலும் நீங்கள் கூறுவது சரியே. என்னுடைய நியாயந்தீர்க்கும் மனப்பான்மையும் ஆவிக்குரிய பெருமையும் அவளுடைய பாவங்களை விட சாதாரமானதும் இல்லை மோசமானதுமில்லை” எனக் கூறினேன். 

அதற்கு அவர் “மேலும், நாம் உன்னுடைய தோழியை பற்றி பேசுவதின் மூலம் புறங்கூறிக் கொண்டிருக்கிறோம். இதனால்...” என்று கூற… 

“நாம் பாவம் செய்து கொண்டிருக்கிறோம்,” என பதிலளித்தேன். தவறை உணர்ந்து, தலையை தாழ்த்தி, “தயவு செய்து நமக்காக ஜெபம் செய்யுங்கள்,” என்றேன். 

தேவலாயத்திற்கு வந்து வெவ்வேறு விதமாக ஜெபித்த இரண்டு நபர்களைக் குறித்து உவமையாக இயேசு கூறியிருப்பதை லூக்கா 18ஆம் அதிகாரத்தில் காணலாம் (வச. 9-14). அந்த பரிசேயனைப் போல நாமும் நம்மை மற்றவர்களோடு ஒப்பிட்டுப் பார்க்கும் வட்டத்திற்குள் மாட்டிக்கொள்ளலாம். அதுமட்டுமின்றி நாம் நம்மை பற்றியே பெருமை பாராட்டிக்கொள்ளவும் கூடும் (வச. 11-12). இந்த மனப்பான்மையினால், மற்றவர்களை நியாயந்தீர்க்க நமக்கு அதிகாரம் உண்டென்றும், அவர்களை சீர்படுத்த நமக்கு வல்லமை உண்டென்றும், அப்பொறுப்பு நம்முடையதே என்றும் நாம் எண்ணி ஜீவிப்போம். 

ஆனால், நாம் இயேசுவின் பரிசுத்த வாழ்வையே மாதிரியாகக் கொண்டு, அவருடைய நன்மைகளை நம் வாழ்வில் கண்டுணரும் பொழுது, நாமும் அந்த ஆயக்காரனைப்போல, தேவகிருபை நமக்கு இன்னும் எவ்வளவு அதிகமாய் தேவை என்பதை அறிந்துகொள்வோம் (வச. 13). தேவனுடைய இரக்கத்தையும் மன்னிப்பையும் நாம் நம் வாழ்வில் அனுபவிக்கும்பொழுது, நாம் மனமாற்றம் அடைந்து, இரக்கத்தை எதிர்பார்க்வும் அதையே பிறருக்கு அளிக்கவும் வல்லமைபெறுவோம். ஒருபோதும் நாம் பிறரை குற்றவாளியாக தீர்க்கமாட்டோம். 

கனம் கனத்தை சந்திக்கட்டும்

அர்லிங்டன் (Arlington) தேசிய கல்லறையிலுள்ள ‘அறியாதவர்களின் கல்லறையில்’ நடந்தேறும் காவலர் மாற்றம் என்னை எப்போதும் வெகுவாய் கவர்ந்ததுண்டு. மிக மரியாதையுடன் கம்பீரமாக அதே சமயம் எளிமையாகவும் அந்நிகழ்வு நடக்கும். ‘தேவன் மாத்திரமே அறிந்த’ அப்போர்வீரர்களையும் அவர்களுடைய தியாகத்தையும் எண்ணி மிக ஜாக்கிரதையாக வடிவமைத்து இயக்கப்பட்ட இந்நிகழ்வு நெஞ்சை
நெகிழ வைக்கும் அஞ்சலி ஆகும். அது மாத்திரமல்ல மக்கள் கூட்டம் ஏதுமில்லாத போதும், முன்னும் பின்னுமாக சீரான வேகத்தில், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணி நேரமும் மோசமான வானிலையிலும் அக்காவலர் நடந்துசெல்வது நெஞ்சை நெகிழச் செய்யும். 

2003ஆம் ஆண்டு வாஷிங்டன் மாநகரை இசபெல் (Isabel) சூறாவளி நெருங்கிக் கொண்டிருந்தபொழுது, அது அந்நகரை தாக்கக்கூடிய மிக மோசமான நேரத்தில் அக்காவலர்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு அவர்களுக்கு கூறப்பட்டது. ஆனால் ஆச்சரியம் என்னவெனில் கிட்டத்தட்ட அக்காவலர் அனைவரும் அவ்விடத்தை விட்டு நகரவே இல்லை. சூறாவளி வீசிய போதும் கூட மடிந்துபோன தங்களுடைய தோழர்களை கனப்படுத்தும் பொருட்டு எவ்வித சுயநலமுமின்றி அவரவர் இடத்திலேயே நின்றார்கள். 

தேவனிடத்தில் மனந்தளராத தன்னலமற்ற பக்தியுடன் நாம் வாழ வேண்டும் என்பதே அவருடைய விருப்பம் என்று மத்தேயு 6ஆம் அதிகாரத்தில் உள்ள இயேசுவின் போதனை நமக்கு தெரிவிப்பதாக நான் விசுவாசிக்கிறேன் (வச. 1-6). நற்கிரியைகளுக்கும் பரிசுத்த ஜீவியத்திற்கும் நேராக வேதாகமம் நம்மை அழைக்கிறது. ஆனால் இவை ஆராதனைக்கும் கீழ்ப்படிதலுக்குமுரிய காரியங்களாக இருக்க வேண்டுமே அன்றி (வச. 4-6), நம்முடைய சுய மகிமைக்காக திட்டமிட்டு செயல்படுத்தபட்ட காரியங்களாக இருக்கக்கூடாது (வச. 2). நம்முடைய ஜீவியம் முழுவதும் உண்மையுள்ளதாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் அப்போஸ்தலனாகிய பவுல், நம்முடைய சரீரங்களை “ஜீவ பலியாக” ஒப்புக்கொடுக்கும்படி நம்மை நோக்கி மன்றாடுகிறார் (ரோம. 12:1) 

தேவனே, எங்களுடைய தனிமையான தருணங்களும் தனிமையற்ற தருணங்களும் நாங்கள் எங்கள் முழு இருதயத்தோடு உம்மிடம் கொண்ட அர்ப்பணிப்பையும், பக்தியையும் பறைசாற்றுவதாக.

ஒரு அடைக்கலான் குருவியாகிலும்!

தன் வாழ்நாள் முழுவதும் கம்பீரமாகவும் கண்ணியமாகவும் இருந்த என் தாயார், இப்பொழுது முதிர்வயதினால் சிறைப்பட்டு தளர்ந்து பலவீனமடைந்து ஒரு நலவாழ்வு மையத்தின் படுக்கையிலே படுத்திருந்தார். மூச்சுவிடவும் சிரமப்பட்டுக் கொண்டிருந்த அவர்களுடைய நிலை மேலும் மோசமாகிக் கொண்டிருந்த பொழுது, அதற்கு நேர் எதிர்மாறாக அவ்வறையின் ஜன்னலுக்கு வெளியே அழகான வசந்தகால நாள் நம்மை இனிதாய் வரவேற்றது. 

உணர்ச்சிமிக்க வழியனுப்புதலின் அப்பட்டமான உண்மை நிலைக்கு ஏற்றாற் போல நம்மை ஆயத்தப்படுத்திக் கொள்ள இவ்வுலகத்தில் உள்ள எப்பேர்பட்ட ஆயத்தமும் நம்மை தயார் படுத்த இயலாது. இதை சிந்தித்தபொழுது சாவு என்பது எவ்வளவு வெட்கக்கேடான ஒன்று! என நான் எண்ணினேன்.

அப்பொழுது நான் என் பார்வையைத் திருப்பி ஜன்னலுக்கு வெளியே பறவைகளுக்காக வைக்கப்பட்டிருந்த விதை தட்டில் உள்ள விதையை உண்ணும்படி சிறகடித்தவாறு ஒரு சிறு பறவை அதை உண்டுகொண்டிருந்ததை கண்டேன். அக்காட்சியை கண்ட உடனே “உங்கள் பிதாவின் சித்தமில்லாமல், அவைகளில் ஒன்றாகிலும் தரையிலே விழாது”, என்று நான் நன்கு அறிந்த இவ்வசனம் என் மனதிலே தோன்றியது (மத். 10:29). இவ்வார்த்தைகளை இயேசு தம்முடைய சீஷர்கள் யூதேயாவுக்கு சென்று ஊழியம் செய்யும்படி கட்டளையிட்டு அனுப்பி வைத்தபொழுது கூறினார். மேலும், அநேகம் அடைக்கலான் குருவிகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்”, என்றும் அவர்களிடம் கூறினார் (வச. 31). இந்நியமனம் அவர்களுக்கு மாத்திரமல்ல நமக்கும் பொருந்தும். 

என் தாய் சற்று அசைந்து தன் கண்களைத் திறந்து பார்த்தார். அப்பொழுது அவர் தன் பால்ய வயதில் மிகுந்த அன்போடு அவரது தாயை கூப்பிடும் ஒரு டச்சு மொழிச் சொற்றொடரை கூறி, “மூயுட்டி இறந்துவிட்டார்!” என தன் தாயை குறித்து தெரிவித்தார். 

“உண்மைதான். அவர் இப்பொழுது இயேசுவுடன் இருக்கிறார்,” என்று என் மனைவி பதிலளித்தாள். அதைக் கேட்ட என் தாயார் நிச்சயமின்றி, “ஜாய்ஸ் மற்றும் ஜிம்?” என்று தன்னுடைய சகோதரியை குறித்தும் சகோதரனை குறித்தும் கேட்டார். அதற்கு என்னுடைய மனைவி, “ஆம், அவர்களும் இயேசுவோடுதான் இருக்கிறார்கள். நாமும் சீக்கிரத்தில் அவர்களோடு இருப்போம்!” என்று பதிலளித்தார். 

“ஆனால், காத்திருப்பது மிகக் கடினமாக உள்ளது,” என அமைதியாக என் தாயார் கூறினார்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

தேவனால் அறியப்படுதல்

தத்தெடுப்பின் மூலம் பிரிந்த இரட்டைக் குழந்தைகள் இருபது ஆண்களுக்குப் பின் இணைவதற்கு மரபணு பரிசோதனை உதவியது. அதில் ஒருவனான கீரோன் வின்சென்ட்டுக்கு குறுஞ்செய்தி அனுப்பியபோது, அவன் “இது யார் புதிய நபராய் இருக்கிறதே?” என்று யோசித்தான். அவன் பிறக்கும்போது அவனுக்கு வைத்த பெயர் என்ன என்று கீரோன் கேட்டபோது, வின்சென்ட் “டைலர்” என்று பதிலளித்தான். அப்போது அவர்கள் இருவரும் சகோதரர்கள் என்பதை அறிந்துகொண்டனர். அவன் தன்னுடைய பெயரினால் அறியப்பட்டான்! 
உயிர்த்தெழுதல் சம்பவத்தில் பெயர் எவ்வளவு முக்கிய பங்காற்றுகிறது என்பதை பாருங்கள். மகதலேனா மரியாள் கல்லறையினிடத்திற்கு வந்து, இயேசுவின் சரீரத்தைக் காணாமல் அழுகிறாள். “ஸ்திரீயே, ஏன் அழுகிறாய்?” (யோவான் 20:15) என்று இயேசு கேட்கிறார். தன்னை கேள்வி கேட்பது யார் என்பதை அவர் “மரியாளே” என்று அழைக்கும் வரைக்கும் மரியாள் அறியாதிருந்தாள் (வச. 16).    
அவர் சொல்லுவதைக் கேட்ட மாத்திரத்தில் அவள் கண்ணீர் சிந்தி, “ரபூனி” (ஆசிரியர் என்று அர்த்தம்) என்று அரமாயிக் மொழியில் அழைத்தாள் (வச. 16). நம் உயிர்த்தெழுந்த கிறிஸ்து அனைவருக்காகவும் மரணத்தை வென்று, நம் ஒவ்வொருவரையும் அவருடைய பிள்ளைகளாக ஏற்றுக்கொண்டதை உணர்ந்து, உயிர்த்தெழுதல் பண்டிகையில் கிறிஸ்தவர்கள் வெளிப்படுத்தும் மகிழ்ச்சிக்கு ஒப்பாக அவளுடைய மகிழ்ச்சி இருந்தது. அவர் மரியாளிடத்தில், “நான் என் பிதாவினிடத்திற்கும் உங்கள் பிதாவினிடத்திற்கும், என் தேவனிடத்திற்கும் உங்கள் தேவனிடத்திற்கும் ஏறிப்போகிறேன்” (வச. 17) என்று சொல்லுகிறார்.  
ஜியார்ஜியாவில் இரண்டு சகோதரர்கள் தங்கள் பெயர்களின் மூலம் மீண்டும் ஒன்று சேர்ந்து ஒரு புதிய உறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டுசெல்ல தீர்மானித்தனர். உயிர்த்தெழுதல் நாளின்போது, இயேசுவால் அறியப்பட்டவர்களுக்கு அவருடைய தியாகமான அன்பை காண்பிக்கும்பொருட்டு அவர் மேற்கொண்ட பெரிய முயற்சிக்காய் அவரை நாம் மகிமைப்படுத்துகிறோம். அந்த தியாயம் உனக்காகவும் எனக்காகவும் செய்யப்பட்டது. அவர் உயிரோடிருக்கிறார்.  

சத்தியம் தேடுவோர்

ஒரு பெண் ஒருமுறை என்னிடம் ஒரு கருத்து வேறுபாடு தன் தேவாலயத்தை இரண்டாய் கிழித்தது என்று சொன்னாள். “எதில் கருத்து வேறுபாடு?” என்று நான் கேட்டேன். “பூமி தட்டையாக இருக்கிறதா?” என்னும் விவாதத்தினால் என்று பதிலளித்தாள். சில மாதங்களுக்குப் பிறகு, ஒரு உணவகத்தின் பின் அறையில் குழந்தைகள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதாக கூறி ஒரு மனிதன் தன் கையில் ஆயுதம் எந்தி உள்ளே வந்தார் என்னும் செய்தியைப் படித்தேன். ஆனால் அந்த உணவகத்திற்கு பின்பு எந்த அறையும் இல்லை. ஆகையால் அந்த மனிதனை கைது செய்தனர். இந்த இரண்டு சம்பவத்திலும், மக்கள் இணையதளத்தில் இடம்பெறக்கூடிய சர்ச்சைக்குரிய காரியங்களைப் பார்த்துவிட்டு இப்படிப்பட்ட தகாத செயல்களில் ஈடுபடுகின்றனர்.  
கிறிஸ்தவர்கள் மெய்யான குடிமக்கள்களாய் வாழ்வதற்காய் அழைக்கப்படுகின்றனர் (ரோமர் 13:1-7). நல்ல குடிமகன்கள் தவறான செய்திகளைப் பரப்புவதில்லை. லூக்காவின் நாட்களில் இயேசுவைக் குறித்து பல கதைகள் உலாவந்தன. அவற்றுள் சிலவைகள் உண்மையற்றவைகள் (லூக்கா 1:1). தான் கேட்ட அனைத்து செய்திகளையும் அப்படியே தொடர்புகொள்ளாமல், லூக்கா அவற்றை தீர்க்கமாய் ஆராய்ச்சி செய்து, சாட்சியங்களோடு பேசி (வச. 2), “ஆதிமுதல் எல்லாவற்றையும் திட்டமாய் விசாரித்தறிந்து” (வச. 3), அவருடைய சுவிசேஷத்தில் அவற்றை பெயர்கள், மேற்கோள்கள், சரித்திரதன்மை ஆகியவற்றின் அடிப்படையில் பதிவுசெய்துள்ளார்.  
 
நாமும் அப்படியே செய்யமுடியும். தவறான செய்திகள் திருச்சபைகளை பிளவுபடுத்தி ஆத்துமாக்களை ஆபத்தில் ஆழ்த்தக்கூடும் என்பதினால் உண்மைகளைச் சரிபார்ப்பது அவர்களை நேசிப்பதற்கான ஒரு அடையாளமாகும் (10:27). ஒரு பரபரப்பான சம்வத்தை நாம் கேள்விப்படும்போது, அது உண்மையா என்று அறிந்து சரிபார்த்து, நிபுணர்களின் உதவியை நாடுவது நல்லது. அவ்வாறு செய்து நல்ல தரமான செய்திகளை நாம் பரப்புவது என்பது சுவிசேஷத்திற்கான நம்பகத்தன்மையை பிரதிபலிக்கிறது. அவ்வாறு செய்வதின் மூலம் “சத்தியத்தினால் நிரைந்தவரை” (யோவான் 1:14) நான் சேவிக்கமுடியும்.  

உள்ளான சுகத்திற்கான வேட்டை

அமெரிக்க மாநிலமான மிச்சிகனில் வசிக்கும் கார்சன், வேட்டையாடுவது, மீன்பிடிப்பது, பைக்குகள் ஓட்டுவது மற்றும் ஸ்கேட்போர்டில் செல்வது என்று எப்போதும் மும்முரமாகவே செயல்படுவார். அவர் வெளியே பொழுதைக் கழிப்பதில் அதிக பிரியப்பட்டார். ஆனால் அவர் திடீரென்று ஒரு மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி விபத்திற்குள்ளானதால், அவருடைய மார்புக்கு கீழ் அனைத்தும் செயலிழந்துபோனது. விரைவில் மனச்சோர்வுக்குள் மூழ்கினார். அவருடைய எதிர்காலம் இருண்டுபோனது. அவனுடைய சிநேகிதர்களில் சிலர் அவனை மீண்டும் வேட்டைக்கு கூட்டிச்சென்றனர். அந்த தருணத்தில் தன்னுடைய துயரங்கள் அனைத்தையும் மறந்து சுற்றியிருக்கும் அனைத்து அழகையும் ரசித்தான். இந்த அனுபவம் அவனுக்கு உள்ளான இருதய சுகத்தை ஏற்படுத்தி, அவனுடைய வாழ்க்கைக்கு ஓர் அர்த்தத்தைக் கொடுத்தது. அவனைப் போல் இருப்பவர்களும் அந்த அனுபவத்தை பெறும் நோக்கத்தோடு, “வேட்டையிலிருந்து சுகத்துக்கு” (ர்ரவெ 2 ர்நயட) என்ற பெயரில் ஓர் இயக்கத்தை ஆரம்பித்தான். அவன், “என்னுடைய விபத்தானது எனக்கு ஆசீர்வாதத்தைக் கொண்டுவந்தது... நான் எப்போதும் செய்ய விரும்பியதை இப்போது மற்றவர்களுக்கு செய்வதின் மூலம் நான் மகிழ்ச்சியடைகிறேன்” என்று சொல்லுகிறான். மிகவும் கடுமையான சரீர குறைபாடுகள் உள்ளவர்களுக்கு தேவையான இடவசதியை ஒழுங்குசெய்து அவர்களுக்கு உள்ளான சுகத்தை கொடுப்பதில் இப்போது அவர் மும்முரமாய் செயல்பட்டு வருகிறான்.  
நொருங்குண்ட இருதயங்களை காயங்கட்டும் ஒருவரின் வருகையைக் குறித்து ஏசாயா தீர்க்கதரிசி முன்னறிவித்துள்ளார் (ஏசாயா 61). அவர் “இருதயம் நொறுங்குண்டவர்களுக்குக் காயங்கட்டுதலையும்... துயரப்பட்டவர்களைச் சீர்ப்படுத்தவும்” கிரியை செய்வார் (வச. 1-2). இயேசு இந்த வேத வாக்கியங்களை தேவாலயத்தில் வாசித்த பின்பு, “உங்கள் காதுகள் கேட்க இந்த வேதவாக்கியம் இன்றையத்தினம் நிறைவேறிற்று” (லூக்கா 4:21) என்றார். இயேசு நம்மை இரட்சிக்கவும் பூரணப்படுத்தவும் வந்தார்.  
உங்களுக்கு உள்ளான சுகம் அவசியப்படுகிறதா? இயேசுவிடம் வாருங்கள், அவர் “ஒடுங்கின ஆவிக்குப் பதிலாகத் துதியின் உடையை” (ஏசாயா 61:3) உங்களுக்குக் கொடுப்பார்.