பிப்ரவரி, 2017 | நமது அனுதின மன்னா Tamil Our Daily Bread

Archives: பிப்ரவரி 2017

இருளில் ஒரு நமுட்டுச் சிரிப்பு

வாஷிங்டன் போஸ்ட் (Washington Post) பத்திரிக்கையில், பீட்டர் தையிலே (Peter Thiele) மற்றும் பிற தொழில்நுட்ப வல்லுநர்கள் மனித வாழ்வை காலவரையின்றி நீடிக்கச் செய்யும் முயற்சிகளைக் குறித்து, “தொழில்நுட்ப ஜாம்பவான்களின் சமீபத்திய திட்டப்பணி: மரணத்தை மீறிடு” என்ற தலைப்பில் ஆரியானா சா (Ariana Cha) ஒரு கட்டுரை எழுதியிருந்தார். இந்த திட்டப்பணிக்காக பல கோடிகளைச் செலவழிக்க அவர்கள் தயாராக இருந்தனர்.

ஆனால், அவர்கள் சற்று காலதாமதமாக வந்து விட்டனர். ஏனென்றால் மரணம் ஏற்கனவே தோற்கடிக்கப்பட்டுவிட்டது. “நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்; உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்,” என்று இயேசு கூறியுள்ளார் (யோவா. 11:25-26). தன் மீது விசுவாசம் வைக்கிற எவனும் ஒருபோதும், எச்சூழ்நிலைமையிலும் சாகவே சாவதில்லை என்று இயேசு உறுதியளிக்கிறார்.

ஆனால் ஒன்றை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். அதாவது நம்முடைய சரீரங்கள் மரித்துப்போகும். அதைக்குறித்து நாம் ஒன்றும் செய்ய இயலாது. ஆனால் “நான்” என்று நாம் கூறும் நம்முடைய சுயம், அதாவது சிந்தித்தல், பகுத்தறிதல், நினைவுகூறுதல், நேசித்தல் போன்ற சாகச பகுதி ஒருபோதும் சாகவே சாவதில்லை.

மேலும் இதன் சிறப்பு என்னவெனில், இது நமக்கு இலவசமாகக் கொடுக்கப்படுகிற ஒரு ஈவு. நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று, இயேசு நமக்களிக்கும் இரட்சிப்பை நாம் பெறுவதே. இவ்வன்பளிப்பைக் குறித்து ஆழ்ந்து சிந்திக்கும்பொழுது, இவ்வளவு பெரிய காரியத்திற்கு இவ்வளவு எளிமையானதொரு பதிலா என்கிற உணர்வு ஏற்படுகிறது என்று சி. எஸ். லூயிஸ் தெரிவிக்கிறார். ஆகவே அதை “இருட்டில் ஒரு நமுட்டுச்சிரிப்பு” போல என விவரிக்கிறார்.

சிலர் இதைக்குறித்து, “இது மிகவும் எளிமையாக உள்ளதே,” என்கின்றனர். நான் ஒன்றை சொல்ல விரும்புகிறேன், நீங்கள் பிறப்பதற்கு முன்பே தேவன் உங்களை நேசித்து நீங்கள் என்றென்றும் அவரோடே வாழ வேண்டும் என்று அவர் விரும்பும்பொழுது, எதற்காக அவ்வழியை கடினமாக அமைத்திடுவார்?

கண்களால் காண முடியாத மோதிரம்

கிரேக்க தத்துவஞானியாகிய பிளாட்டோ (கி.மு. 427 - கி.மு. 348) மனித இருதயத்தின் இருண்ட பக்கத்தை வெளிச்சம் போட்டுக் காட்ட ஓர் கற்பனை வழியை கையாண்டார். பூமியின் ஆழத்திலே நன்கு புதைந்து மறைந்து கிடந்த ஒரு தங்க மோதிரத்தை எதேச்சையாக கண்டுபிடித்த மேய்ப்பனைப் பற்றிய ஒரு கற்பனைக் கதையை கூறினார். ஒரு நாள் ஓர் பயங்கர நிலநடுக்கம் பழங்கால மலைக்கல்லறை ஒன்றை பிளந்து அந்த மோதிரத்தை அம்மேய்ப்பனுக்கு வெளிப்டுத்தியது. அதுமட்டுமன்றி, அந்த மோதிரத்திற்கு மந்திர சக்தி உள்ளதையும் அதை அணிபவர் மற்றவர் கண்களுக்கு தெரியாவண்ணம் மாயமாய் மறைந்து போக முடியும் என்பதையும் எதேச்சையாக அம்மேய்ப்பன் அறிந்துகொண்டான். மாயமாய் மறைந்து போவதைக் குறித்து எண்ணும் பொழுது பிளாட்டோ ஒரு கேள்வி எழுப்பினார். அதாவது மனிதர்கள் தாங்கள் பிடிபட்டு, தங்கள் தவறுகளுக்காக தண்டனை அனுபவிக்கக் கூடும் என்கிற கவலை அவர்களுக்கு இல்லாதிருந்தால், தீமை செய்ய அவர்கள் தயங்குவார்களா என்பதே கேள்வி.

யோவான் சுவிசேஷத்திலே இக்கருத்தை இயேசு வேறொரு கோணத்தில் சொல்வதை நாம் காணலாம். நல்ல மேய்ப்பன் என அழைக்கப்படும் இயேசு, தங்களுடைய செயல்கள் வெளியரங்கமாகிவிடாதபடி தங்களுடைய இருதயங்களை இருளின் போர்வைக்குள் மறைத்துக்கொண்டிருப்பவர்களைக் குறித்துப் பேசுகிறார் (யோவா. 3:19-20). தங்களுடைய தவறுகளை மூடி மறைத்து வைக்க நினைப்பதை சுட்டிக்காட்டி நம்மை குற்றப்படுத்த அவர் விரும்பவில்லை, மாறாக அவர் மூலமாக அவர் அளிக்கும் இரட்சிப்பை பெற்றுக்கொண்டு, அவரின் வெளிச்சத்திற்குள் நம்மை அழைக்கிறார் (வச. 17). நம்முடைய இருதயங்களின் மேய்ப்பவராகிய அவர் மனுஷ இருதயங்களில் உள்ள மிக மோசமான காரியங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதின் மூலம் தேவன் நம்மீது எவ்வளவாய் அன்புகூர்ந்துள்ளார் என்பதையும் வெளிப்படுத்துகிறார் (வச. 16).

தேவன் தம்முடைய இரக்கத்தின் ஐஸ்வரியத்தினாலே இருளில் இருக்கும் நம்மை ஒளியிலே அவரைப் பின்பற்றி நடக்க அழைக்கிறார்.

முழுமையாய் நெருங்கிச் சேருதல்

சில வருடங்களுக்கு முன்பு, ஒரு கால்ஃப் (Golf) போட்டியைக் காணும்படி என்னுடைய நண்பர் என்னையும் தன்னோடு அழைத்துச் சென்றார். முதல் முறை என்பதால் அங்கு எதை எதிர்பார்ப்பது என்று கூடத் தெரியவில்லை. அங்கு வந்து சேர்ந்த பொழுது, சில பரிசுப்பொருட்கள், தகவல் அட்டை, கால்ஃப் மைதான வரைபடம் ஆகியவற்றை கொடுத்த பொழுது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆனால் இவை எல்லாவற்றிற்கும் மேலாக அவ்விளையாட்டின் 18வது நிலையில், முக்கிய பிரமுகர்கள் கண்டுகளிக்கும் கூடாரத்திற்கு அனுமதி கிடைத்தது. அங்கு எங்களுக்கு அமர இருக்கைகளும் இலவச உணவும் கிடைத்தது. நான் தனியாக வந்திருந்தால் இந்தக் கூடாரத்திற்கு வர எனக்கு அனுமதி கிடைத்திருக்காது. ஆனால் இப்பொழுது அது கிட்டியதற்கு காரணம் என் நண்பர். அவர் மூலம் தான் எனக்கு முழுமையான அனுமதி கிட்டியது.

எந்த உதவியுமின்றி நாம் விடப்பட்டிருந்தால், நாம் அனைவரும் பரிதாபத்திற்குரிய நிலையில் தேவனை விட்டு துண்டிக்கப்பட்டே இருந்திருப்போம். ஆனால், நம்முடைய தண்டனையை இயேசு ஏற்றுக்கொண்டதால், அவருடைய ஜீவனையே நமக்களித்து, தாம் தேவனிடம் கிட்டிச்சேர அனுமதி அளித்துள்ளார். “அவருடைய அநந்த ஞானமானது சபையின் மூலமாய் இப்பொழுது தெரியவரும்” (எபே. 3:10) என அப்போஸ்தலனாகிய பவுல் எழுதியுள்ளார். கிறிஸ்து இயேசுவுக் குள்ளாக யூதனையும், கிரேக்கனையும் ஒன்றாக இணைத்த இந்த ஞானம், நாம் அனைவரும் பிதாவாகிய தேவனை கிட்டிச்சேர வழிவகுத்துள்ளது. “அவரைப் பற்றும் விசுவாசத்தால் அவருக்குள் நமக்குத் தைரியமும் திடநம்பிக்கையோடே தேவனிடத்தில் சேரும் சிலாக்கியமும் உண்டாயிருக்கிறது” (வச. 12).

நாம் இயேசுவின் மீது விசுவாசம் வைக்கும் பொழுது, நம்மோடு ஐக்கியம் கொள்ளப் பிரியப்படும் தேவனிடம், அளவற்ற அன்பு செலுத்தும் தேவனிடம் கிட்டிச்சேர உதவும் ஒப்பற்ற நெருக்கத்தை நாம் பெற்றுக்கொள்ளுகிறோம்.

முழு இருதயத்தோடு!

காலேப் ‘முழு இருதயத்தோடு’ ஆண்டவரைச் சேவித்த உத்தமமான மனிதன். வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தை உளவுபார்த்து மோசேவுக்கும் மக்களுக்கும் அறிக்கை அளிக்கும்படி அனுப்பப்பட்ட 12 பேர் கொண்ட குழுவில் காலேபும், யோசுவாவும் இருந்தனர். “நாம் உடனே போய் அதைச் சுதந்தரித்துக் கொள்வோம்; நாம் அதை எளிதாய் ஜெயித்துக்கொள்வோம்” (எண். 13:30) என காலேப் கூறினான். ஆனால் அந்தக் குழுவில் இருந்து 10 பேர் வெற்றிபெற இயலாது என கூறினார்கள். தேவன் அதை அவர்களுக்கு வாக்குப் பண்ணியுள்ளார் என்பதை அறிந்திருந்தும், தடைகளை மாத்திரமே அவர்கள் பார்த்தார்கள் (வச. 31-33).

இந்த 10 பேர் ஜனங்களை நம்பிக்கை இழக்கச்செய்து, தேவனுக்கு எதிராக முறுமுறுக்கச் செய்தார்கள். இதனால் அவர்கள் 40 ஆண்டுகள் வனாந்திரத்திலேயே அலைந்து திரிந்தார்கள். ஆனால் காலேப் தன்னுடைய நம்பிக்கையை இழந்து போகவேயில்லை. “என்னுடைய தாசனாகிய காலேப் வேறே ஆவியை உடையவனாயிருக்கிறபடியினாலும், உத்தமமாய் (முழுமனதுடன்) என்னைப் பின்பற்றிவந்தபடியினாலும், அவன் போய்வந்த தேசத்திலே அவனைச் சேரப்பண்ணுவேன்; அவன் சந்ததியார் அதைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்” (14:24) என கர்த்தர் கூறினார். 45 ஆண்டுகள் கழித்து, காலேப் 85 வயதாய் இருக்கும்பொழுது, “இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை உத்தமமாய் (முழு இருதயத்தோடு) பின்பற்றினபடியினால்” (யோசு. 14:14) எபிரோன் பட்டணத்தை தனக்கென பெற்றுக்கொண்டான்.

பல நூற்றாண்டுகள் கழித்து, “நியாயப்பிரமாணத்திலே எந்தக் கற்பனை பிரதானமானது” என இயேசுவை நோக்கி நியாயப்பிரமாண வல்லுநர் ஒருவர் கேட்ட பொழுது, “உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக; இது முதலாம் பிரதான கற்பனை” (மத். 22:35-38) என இயேசு பதிலளித்தார்.

இன்றும்கூட, நம் முழு இருதயத்தோடு நாம் செலுத்தும் அன்பிற்கும், நம்பிக்கைக்கும், அர்ப்பணிப்பிற்கும் பாத்திரரான தேவன் மீது தான் கொண்ட விசுவாசத்தின் மூலம் காலேப் நமக்கு ஊக்கமளிக்கும் ஒரு எடுத்துக்காட்டாய் இருக்கிறார்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

நன்றியுள்ள இருதயம்

 ஹான்ஸ்லி பார்ச்மென்ட், ஒரு இக்கட்டான சூழ்நிலையில் சிக்கிக்கொண்டார். டோக்கியோவில் நடைபெறும் தன்னுடைய அரையிறுதி ஒலிம்பிக் போட்டிக்கு செல்லுவதற்கு தவறான பேருந்தில் ஏறிவிட்டார். ஆனால் அதிர்ஷ்டவசமாக விளையாட்டில் உதவிசெய்யும் டிரிஜானா ஸ்டோஜ்கோவிச்சைச் சந்தித்தார். அவர் டாக்ஸியில் செல்லுவதற்கு சிறிது பணத்தைக் கொடுத்து உதவினாள். பார்ச்மென்ட், சரியான நேரத்திற்கு அரையிறுதிக்கு சென்று, 110 மீட்டர் தடகளப் போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்றார். அதற்கு பின்பதாக, அவர் ஸ்டோஜ்கோவிச்சைக் கண்டுபிடித்து அவளது உதவிக்கு நன்றி தெரிவித்தார். 
லூக்கா 17ஆம் அதிகாரத்தில், சமாரியவைச் சேர்ந்த குஷ்டரோகியை இயேசு சுகமாக்கியதின் நிமித்தம் அவருக்கு நன்றி சொல்லுவதற்கு ஒருவன் மாத்திரம் திரும்பி வந்த சம்பவத்தைக் குறித்து நாம் வாசிக்கிறோம் (வச. 15-16). இயேசு ஒரு கிராமத்திற்குள் பிரவேசிக்கிறார். அங்கு பத்து குஷ்டரோகிகளை சந்திக்கிறார். அவர் அனைவரும் சுகமடையும்படிக்கு விரும்பி, அனைவரும் கிருபையையும் வல்லமையையும் பெற்றுக்கொண்டனர். தாங்கள் சுகமானதைக் கண்டு பத்துபேரும் ஆச்சரிப்பட்டாலும், அதில் ஒருவன் மாத்திரம் திரும்பி வந்து இயேசுவுக்கு நன்றி செலுத்தினான். அவன் “உரத்த சத்தத்தோடே தேவனை மகிமைப்படுத்தி, அவருடைய பாதத்தருகே முகங்குப்புற விழுந்து, அவருக்கு ஸ்தோத்திரஞ்செலுத்தினான்” (வச. 15-16).  
தேவனுடைய ஆசீர்வாதத்தை நாம் ஒவ்வொரு நாளும் பல விதங்களில் அனுபவிக்கிறோம். உபத்திரவப்படும் சரியான நேரத்தில் பதில் பெறுவது என்பது, எதிர்பாராத விதமாய் அந்நியரிடத்திலிருந்து நமக்குக் கிடைக்கும் ஆச்சரியமான பலனாய் இருக்கும். சிலவேளைகளில் அவருடைய ஆசீர்வாதங்கள் என்பது நல்ல தட்பவெப்ப நிலை, வெளியரங்கமான சில காரியங்களாய் கூட இருக்கலாம். அந்த நன்றியுள்ள சமாரியனைப் போல் நாமும் தேவனுடைய கிருபைகளுக்காய் அவருக்கு நன்றி செலுத்தக்கடவோம்.

கிருபையும் மாற்றமும்

குற்றம் அதிர்ச்சியூட்டக்கூடிய வகையில் இருந்தது. அதைச் செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. பின்வந்த ஆண்டுகளில் சிறையில் கழித்த அந்த மனிதன், தன்னுடைய சிந்தையையும் ஆவிக்குரிய சுகத்தையும் நாடினான். அது அவனை மனந்திரும்புதலுக்கு வழிநடத்தி, இயேசுவுடனான ஜீவியத்தை புதுப்பித்தது. இந்த நாட்களில் அவன் தன்னுடைய சக சிறைக் கைதிகளிடம் பேசுவதற்கு அனுமதிக்கப்பட்டான். தேவனுடைய கிருபையினாலும் அவனுடைய சாட்சியினிமித்தமும் உடன் இருந்த கைதிகளில் சிலர் இயேசுவை சொந்த இரட்சகராய் ஏற்றுக்கொண்டு அவரிடம் மன்னிப்பைப் பெற்றனர்.  
விசுவாச வீரனாய் கருதப்படும் மோசேயும் அதிர்ச்சியூட்டக்கூடிய ஒரு குற்றத்தை செய்துவிட்டான். ஒரு எகிப்தியன் எபிரேயனை அடித்து துன்புறுத்துவதைப் பார்த்த மோசே, அவனை கொன்றுவிட்டான் (யாத்திராகமம் 2:11-12). அவன் பெரிய பாவத்தை செய்தபோதிலும், தேவன் அதை கிருபையாய் சரிகட்டினார். பின்பாக, தேவன் தன்னுடைய ஜனத்தை அடிமைத்தனத்திலிருந்து மீட்கும்பொருட்டு மோசேயை தெரிந்துகொண்டார் (3:10). ரோமர் 5:14இல், “மரணமானது ஆதாம்முதல் மோசேவரைக்கும், ஆதாமின் மீறுதலுக்கொப்பாய்ப் பாவஞ்செய்யாதவர்களையும் ஆண்டுகொண்டது” என்று நாம் வாசிக்கிறோம். தொடரும் வரிகளில், எங்களுடைய கடந்தகால பாவம் எப்படியிருந்தாலும் அதை மாற்றி அவரோடு ஒப்புரவாக்குதலை கர்த்தருடைய கிருபை சாத்தியமாக்கிற்று என்று பவுல் சொல்லுகிறார் (வச. 15-16). 
நாம் செய்த தப்பிதங்களின் அடிப்படையில் தேவனுடைய மன்னிப்பை பெற்றுக்கொண்டு அவருடைய நாம மகிமைக்காய் செயல்படுவது சாத்தியமில்லாதது என்று ஒருவேளை நாம் எண்ணலாம். ஆனால் அவருடைய கிருபையினிமித்தம், நாம் மறுரூபமாக்கப்பட்டு, மற்றவர்களையும் அந்த மறுரூப அனுபவத்திற்குள் பிரவேசிக்கச் செய்யலாம்.  

ஜெபத்தினால் கிரியைசெய்தல்

என் மகனுக்கு எலும்பியல் அறுவை சிகிச்சை அவசியப்பட்டபோது, அறுவை சிகிச்சை செய்த மருத்துவருக்கு நான் நன்றியுள்ளவனாக இருந்தேன். பணி ஓய்வுபெறும் தருவாயில் இருந்த அந்த மருத்துவர், இதே பிரச்சனையில் இருந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு உதவுவதாக எங்களுக்கு உறுதியளித்தார். ஆகிலும் அவர் அறுவை சிகிச்சையை துவங்கும் முன்பு ஜெபம் செய்து, அந்த அறுவை சிகிச்சை நலமாய் முடியவேண்டுமென்று தேவனிடம் வேண்டிக்கொண்டார். அவருடைய அந்த ஜெபத்திற்கு நான் நன்றிக்கடன்பட்டிருக்கிறேன்.  
மிகவும் அனுபவசாலியான யோசபாத் ராஜா, அதுபோன்ற ஒரு இக்கட்டான சூழ்நிலையில் ஜெபம் செய்கிறான். அவனுக்கு எதிராகவும் அவனுடைய ஜனத்துக்கு எதிராகவும் மூன்று தேசங்கள் படையெடுத்து வந்தது. அவனுக்கு ஏற்கனவே இருபது ஆண்டுகள் அனுபவம் இருந்தபோதிலும், என்ன செய்ய வேண்டும் என்று அவன் தேவனிடம் கேட்கிறான். அவன் ஜெபிக்கும்போது, “எங்கள் இடுக்கணில் உம்மை நோக்கிக் கூப்பிடுகையில், தேவரீர் கேட்டு இரட்சிப்பீர்” (2 நாளாகமம் 20:9) என்று ஜெபிக்கிறான். மேலும், “நாங்கள் செய்யவேண்டியது இன்னதென்று எங்களுக்குத் தெரியவில்லை; ஆகையால் எங்கள் கண்கள் உம்மையே நோக்கிக்கொண்டிருக்கிறது” (வச. 12) என்று சொல்லி ஜெபிக்கிறான்.  
தனக்கு முன்வைக்கப்பட்ட சவாலை தாழ்மையாய் அணுகிய விதம், உற்சாகத்தையும் அந்த சவாலுக்கு தேவனுடைய இடைபாட்டையும் வரவழைத்தது (வச. 15-17, 22). சிலவேளைகளில் நமக்கு எவ்வளவு தான் அனுபவம் இருந்தாலும், நமது தேவையின்போது தேவனிடத்தில் ஜெபிப்பது என்பது நம்முடைய விசுவாசத்தை பெருகச்செய்கிறது. அவர் நம்மை விட அதிகமாக அறிந்திருக்கிறார் என்பதையும், அனைத்தும் அவருடைய கட்டுப்பாட்டிற்குள் இயங்குகிறது என்பதையும் நமக்கு நினைவுபடுத்துகிறது. விளைவு எப்படியிருந்தாலும் அவர் நம்முடைய விண்ணப்பத்திற்கு பதிலளிக்கக்கூடிய தாழ்மையான இடத்தில் இது நம்மை கொண்டுபோய் வைக்கிறது.