எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

கெயிலா ஆச்சோவாகட்டுரைகள்

விவரிக்க முடியாத அன்பு

வியக்கும்படி செய்ய தீர்மானித்தனர். எங்கள் ஆலய அங்கத்தினர்கள், ஞாயிறு பாடசாலை வகுப்பறையை பலூன்களால் அலங்கரித்து, அங்கு ஒரு சிறிய மேசையை வைத்து, அதில் ஒரு கேக்கை வைத்திருந்தனர். என்னுடைய மகன் கதவைத் திறந்த போது அனைவரும் ஒன்று சேர்ந்து, “மகிழ்ச்சியான பிறந்த நாள்” என வாழ்த்தினர்.

பின்னர் நான் கேக்கை வெட்டிய போது என்னுடைய மகன் என் காதுகளில் மெதுவாக, “அம்மா, ஏன் இங்கிருக்கின்ற அனைவரும் என்னை நேசிக்கின்றார்கள்?” என்று கேட்டான். நானும் அதே கேள்வியையே கேட்கின்றேன்! அவர்களுக்கு எங்களைக் கடந்த ஆறுமாதங்களாகத்தான் தெரியும், ஆனால் அவர்கள் அநேக நாட்கள் பழகிய நண்பர்கள் போன்று எங்களிடம் நடந்து கொள்கின்றனர்.

இவர்கள் என்னுடைய மகன் மீது வைத்திருக்கும் அன்பு, தேவன் நம்மீது வைத்திருக்கும் அன்பைப் பிரதிபலிக்கின்றது.தேவன் ஏன் நம்மை இவ்வளவு நேசிக்கின்றார் என்பதை புரிந்து கொள்ளவே முடியாது. ஆனாலும் அவர் நம்மை நேசிக்கின்றார். அவருடைய அன்பு நமக்கு இலவசமாக கொடுக்கப்படுகின்றது. அவருடைய அன்பைப் பெற நாமொன்றும் செய்யவில்லை. இருப்பினும் அவர் விவரிக்க முடியாத அளவு அன்பு கூருகின்றார். வேதாகமத்தில் தேவன் அன்பாகவே இருக்கிறார் (1 யோவா. 4:8) எனக் காண்கின்றோம். அன்பு அவருடைய தன்மையின் ஒரு பகுதி.

தேவன் நம்மீது அன்பினைப் பொழிந்து கொண்டிருக்கின்றார். எனவே நாமும் அந்த அன்பினை பிறர்மீது காட்டுவோம். இயேசு தன்னுடைய சீடர்களிடம், “நான் உங்களில் அன்பாயிருந்தது போல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்… நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்து கொள்வார்கள்” என்றார் (யோவா. 13:34-35).

எங்களுடைய ஆலயத்தின் ஜனங்கள் எங்களை நேசிக்கின்றார்கள், ஏனெனில், தேவனுடைய அன்பு அவர்களில் இருக்கின்றது. அவருடைய அன்பு அவர்கள் வழியாக செயல்பட்டு, அவர்களை தேவனுடைய சீடர்களாகக் காண்பிக்கின்றது. நம்மால் தேவனுடைய முழு அன்பையும் புரிந்துகொள்ள முடியாது, ஆனால், அவருடைய விவரிக்க முடியாத அன்பின் எடுத்துக்காட்டாக, பிறர்மீது அன்பைப் பொழிய முடியும்.

அன்பின் அழகு

“ஐராபே டப்பாஷியோ" என்பது மெக்ஸிகோவின் தொப்பி நடனம், அது காதலைக் கொண்டாடும் ஒரு நிகழ்வு. இந்த நடனத்தின் உச்சக்கட்டத்தில் அந்த மனிதன் தன்னுடைய அகன்ற தொப்பியை தரையில் வைப்பான். நடன முடிவில் அந்தப் பெண் அத்தொப்பியை எடுக்க, இருவரும் அத்தொப்பியின் பின்னால் மறைந்து தங்களுடைய காதல் முத்தத்தோடு நடனத்தை முடிப்பர்.

திருமணத்தில் உண்மையாயிருப்பதின் முக்கியத்துவத்தை இந்த நடனம் எனக்கு நினைவுபடுத்தியது. நீதிமொழிகள் 5ல், கெட்ட நடத்தையின் விளைவுகளைப் பற்றி கூறியபின், திருமணம் இருவருக்கிடையேயுள்ள உறவு என்பதை உறுதிப்படுத்துவதை வாசிக்கின்றோம். “உன் கிணற்றிலுள்ள தண்ண்ரையும் உன் துரவில் ஊறுகிற ஜலத்தையும் பானம்பண்ணு (வச. 15). பத்து ஜோடிகளுக்கு மேலாக ஜராபே நடனமாடினாலும் ஒவ்வொருவரும் தன்னுடைய துணையின் மீதே கவனம் செலுத்துவர். நாமும் ஆழமான பிரிக்கமுடியாத அர்ப்பணத்தை நம்முடைய துணையிடம் கண்டு மகிழ்வோம் (வச. 18).

நம்முடைய காதலும் கவனிக்கப்படுகிறது. அந்த நடனக் கலைஞர்கள் தங்களுடைய துணையோடேயே மகிழ்கின்றனர். தங்களை ஒருவர் கவனிக்கின்றார் என்ற உணர்வுடனேயே நடனமாடுவார். இதேப் போன்று இந்த அதிகாரத்திலும், “மனுஷனுடைய வழிகள் கர்த்தரின் கண்களுக்கு முன்பாக இருக்கிறது; அவனுடைய வழிகளெல்லாவற்றையும் அவர் சீர்தூக்கிப் பார்க்கிறார்" (வச. 21). தேவன் நம்முடைய திருமணத்தை பாதுகாக்க விரும்புகிறார். எனவே அவர் தொடர்ந்து கவனித்தக் கொண்டேயிருக்கிறார். நாம் ஒருவருக்கொருவர் உண்மையாயிருப்பதன் மூலம் அவரை பிரியப்படுத்துவோம்.

ஐராபேயிலுள்ள தாளத்தைப் போன்றே நம் வாழ்விலும் நாம் தாளத்தைப் பின் தொடரவேண்டியுள்ளது. நம்முடைய திருமண வாழ்வு அல்லது தனிவாழ்வு தாளத்தோடு இசைந்திருந்தால், அதாவது நாம் நம்முடைய படைப்பாளிக்கு உண்மையுள்ளவர்களாயிருந்தால், அவருடைய ஆசீர்வாதங்களையும், சந்தோஷங்களையும் பெற்றுக்கொள்வோம்.

மிக உயரமான இடம்

என்னுடைய கணவர் ஒரு நண்பனை ஆலயத்திற்கு அழைத்துவந்தார். ஆராதனை முடிந்தபோது அந்த நண்பர், “நான் பாடல்களை விரும்புகிறேன், அதன் சூழ்நிலையையும் எனக்குப் பிடித்திருக்கின்றது. ஆனால், ஒன்று மட்டும் புரியவில்லை. மரியாதையில் இத்தனை உயரமான இடத்தை ஏன் நீங்கள் இயேசுவுக்குக் கொடுக்கிறீர்கள்? எனக் கேட்டார். பின்னர் என் கணவர் அவரிடம், கிறிஸ்தவம் என்பது கிறிஸ்துவோடுள்ள உறவு. அவரில்லாமல் கிறிஸ்தவத்திற்கு அர்த்தமேயில்லை. இயேசு எங்கள் வாழ்வில் செய்துள்ள எல்லாவற்றிற்காகவும் நாங்கள் இங்கு ஒன்று கூடி அவரைப் போற்றுகின்றோம் என விளக்கினார்.

இயேசு யார்? அவர் நமக்கு என்ன  செய்துள்ளார்? இந்த கேள்;விகளுக்கு அப்போஸ்தலனாகிய பவுல்  கொலோசெயர் முதலாம் அதிகாரத்தில் பதிலளித்துள்ளார். தேவனை யாரும் கண்டதில்லை. இயேசு, தேவனின் தற்சுரூபமாக வந்து அவரைப் பிரதிபலித்தார் (வச. 15). இயேசு, தேவக் குமாரன். நமக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கும்படி வந்தார். நம்மை பாவத்திலிருந்து விடுதலை செய்ய வந்தார். பாவம் நம்மை பரிசுத்த தேவனிடமிருந்து பிரித்துவிட்டது. எனவே பாவமில்லாத ஒருவர் தான் தேவ சமாதானத்தை கொடுக்க முடியும். அதுதான் இயேசுகிறிஸ்து (வச. 14,20) வேறு வகையாகச் சொல்வோமானால் நாம் தேவனிடமும், வாழ்வுக்குள்ளும் செல்லும் வழியை, வேறொருவராலும் செய்யமுடியாததை இயேசு நமக்காகத் திறந்து கொடுத்தார்
(யோவா. 17:2).

ஏன் இயேசு அத்தகைய உயர்வான இடத்தைப் பெற பாத்திரராயிருக்கிறார்? அவர் சாவை மேற்கொண்டார். அவருடைய அன்பினாலும், தியாகத்தாலும் நம்முடைய உள்ளத்தைக் கவர்ந்தார். அவரே நமக்கெல்லாமுமாயிருக்கின்றார்.

நாம் அவருக்கு மகிமையைச் செலுத்துகின்றோம், ஏனெனில் அவரே அதற்குத் தகுந்தவர். நாம் அவரை உயர்த்துகின்றோம், ஏனெனில், அதுவே அவருடைய இடம். நாம் நம் உள்ளத்தில் மிக உயர்ந்த இடத்தை இயேசுவுக்குக் கொடுப்போம்.

அமைதியான சாட்சி

நற்செய்தி பிரசங்கிப்பது தடை செய்யப்பட்டுள்ள, கட்டுப்பாடுகள் நிறைந்த நாட்டில் ஏமி வசிக்கிறாள். பிறந்த குழந்தைகளைப் பராமரிக்கும் செவிலியாக ஒரு பெரிய மருத்துவமனையில் பணிபுரிகிறாள். அவள் தன்னுடைய பணியை சிறப்பாகவும், அர்ப்பணிப்போடும் செய்வதால் அவள் தனித்துத் தெரிவாள். இதனால் பல பெண்கள் அவளைப்பற்றி தெரிந்துகொள்ள ஆர்வமாக, தனிமையில் அவளிடம் பல கேள்விகள் கேட்பார்கள். அப்போது ஏமி தன் இரட்சகரைப் பற்றி அவர்களுடன் பகிர்ந்துகொள்வாள்.

அவளுக்கிருக்கும் நல்ல பெயரைப் பார்த்து பொறாமை கொண்ட உடன் பணியாளர்கள், அவள் சில மருந்துகளைத் திருடியதாக குற்றம் சாட்டினார்கள். அவளது மேலதிகாரிகள் அந்தக் குற்றச்சாட்டுகளை நம்பவில்லை. இறுதியில் யார் திருடியது என்று கண்டுபிடித்தார்கள். இந்த சம்பவத்திற்குப் பிறகு ஏமியின் விசுவாசம் குறித்து அவளுடன் பணியாற்றும் செவிலியர்கள் அவளிடம் கேட்டார்கள். ஏமியின் அனுபவம், பேதுரு சொன்னதை எனக்கு நினைவுபடுத்தியது: “பிரியமானவர்களே, புறஜாதிகள் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு அவற்றின் நிமித்தம் சந்திப்பின் நாளிலே தேவனை மகிமைப்படுத்தும்படி நீங்கள் அவர்களுக்குள்ளே நல்நடத்தையுள்ளவர்களாய் நடந்துகொள்ளுங்கள்” (1 பேது. 2:11-12).

தேவன் நம்மில் கிரியை செய்ய நாம் அனுமதிக்கும்போது, வீட்டில், பணித்தளத்தில் அல்லது பள்ளியில் நம் செயல்கள் மற்றவர்கள்மீது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். நாம் எப்படிப் பேசுகிறோம், எப்படி நடந்துகொள்கிறோம் என்பதை கவனிக்கும் மனிதர்கள் நம்மைச் சூழ்ந்திருக்கிறார்கள். நம்முடைய எண்ணங்களையும், செயல்களையும் தேவன் ஆட்கொள்ளும் விதமாக அவரை சார்ந்திருப்போமாக. அதன் விளைவாக விசுவாசம் இல்லாதவர்களை நாம் இயேசுவிடம் வழிநடத்தலாம்.

அநேக அழகிய காரியங்கள்

ஓவியரும், மிஷனரி ஊழியருமான லிலியஸ் ட்ராட்டர் இறப்பதற்கு முன், தன் ஜன்னல் வழியாக பரலோக ரதம் ஒன்றை தரிசனமாகக் கண்டாள். அவளது நண்பர் “அநேக அழகான காரியங்களைக் காண்கிறாயா?” என்று கேட்டதாகவும், “ஆம், அநேகம், அநேகமான அழகான காரியங்களைக் காண்கிறேன்” என்று லிலியஸ் பதில் சொன்னதாகவும், அவளது வாழ்க்கை வரலாற்றை எழுதிய ஆசிரியர் குறிப்பிடுகிறார்.

 

ட்ராட்டரின் வாழ்க்கையில் தேவனின் பங்கை அவளது கடைசி வார்த்தைகள் பிரதிபலிக்கின்றன. அவளது இறப்பில் மட்டுமல்லாது, அவளது வாழ்க்கை முழுவதும் கர்த்தர் பல அழகிய காரியங்களை அவளுக்கும், அவள் மூலமாகவும் வெளிப்படுத்தினார். ஒரு திறமை மிக்க ஓவியராக இருந்தாலும், கிறிஸ்துவை சேவிக்க, அல்ஜீரியாவில் மிஷனரியாகப் பணி செய்ய முடிவு செய்தாள். அவளது இந்த முடிவைக் குறித்து, அவளுக்கு ஓவியக்கலையைக் கற்றுக்கொடுத்த ஜான் ரஸ்கின் என்ற புகழ்பெற்ற ஓவியர் “திறமையை வீணடிக்கிறாள்” என்று கூறினார்.

 

இதேபோல், புதிய ஏற்பாட்டில், குஷ்டரோகியான சீமோன் வீட்டிற்கு வந்த ஒரு பெண் வெள்ளைக்கல் பரணியில் கொண்டுவந்த நளத தைலத்தை இயேசுவின் பாதத்தில் ஊற்றியபோது, அருகில் இருந்தவர்கள் அதை வீண் என்று நினைத்தார்கள். விலையுயர்ந்த அந்தத் தைலமானது, ஒரு ஆண்டிற்குக் கிடைக்கும் கூலிக்கு சமானமாக இருந்ததால், அதை எளியவர்களுக்குக் கொடுத்து உதவியிருக்கலாம் என்று அங்கிருந்த சிலர் நினைத்தார்கள். ஆனால் அந்தப் பெண்ணின் ஆழ்ந்த அர்ப்பணிப்பைப் பாராட்டிய இயேசு கிறிஸ்து “என்னிடத்தில் நற்கிரியையைச் செய்திருக்கிறாள்” என்று கூறினார் (மாற்கு 14:6).

 

தினந்தோறும் கிறிஸ்துவின் ஒளி நம் வாழ்க்கையில் ஒளிவீசவும், அவரது அருமையை உலகுக்கு வெளிப்படுத்தவும் நாமும் முடிவெடுக்கலாம். சிலருக்கு அது ஒரு வீணான காரியமாகத் தோன்றலாம். ஆனால் நாம் சுயவிருப்பத்தோடு அவரை சேவிப்போமாக. அவருக்கு நாம் அநேக அழகிய காரியங்களைச் செய்திருக்கிறோம் என்று இயேசு கிறிஸ்து சொல்வாராக.

இடைவிடாமல் சேவைசெய்

இளைஞர்களிடம் தாலந்துகளை எப்படி உருவாக்குவது என்பதைக்குறித்து ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த கல்வியியல் உளவியலாளர் பென்ஜமின் புளும் என்பவர், விளையாட்டு, ஓவியம், கல்வி என வெவ்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய 120 பேரின் இளமைப் பருவத்தைக் குறித்து ஆராய்ந்தார். அனைவரிடமும் இருந்த ஒரு பொதுவானப் பண்பைக் கண்டறிந்தார். அனைவருமே தீவிரமான பயிற்சியை நீண்ட காலம் எடுத்துள்ளனர் என்பதைக் கண்டு கொண்டார்.

ஓவ்வொருவரும் தம் வாழ்வில் ஏதாவது ஒரு பகுதியில் வளர்ச்சியடைய வேண்டுமாயின், அதற்கு ஒழுங்கும், கிரமுமான பயிற்சி தேவை என புளும் தனது ஆராய்ச்சியின் முடிவைத் தெரிவித்தார். நாம் தேவனோடு செலவிடும் நேரத்திலும் ஓர் ஒழுக்கத்தைக் கையாளுவதன் மூலம் ஆவிக்குரிய ஒழுக்கத்திலிருப்பது, நாம் அவர் மீதுள்ள நம்பிக்கையில் வளர வழிவகுக்கும்.

தேவனோடு ஒழுங்கு முறையைக் கையாண்டதில் தானியேல் ஒரு முக்கிய எடுத்துக்காட்டாகும். தானியேல் இளைஞனான போதிலும் கவனமாகவும், ஞானமாகவும் தீர்மானம் எடுக்க முடிந்தது (1:8). அவன் ஜெபம் செய்யவும் ஒழுங்கைக் கடைபிடித்தான். “தேவனுக்கு ஸ்தோத்திரம் செலுத்தினான்” (6:10).

அவன் அடிக்கடி தேவனைத் தேடிய போது, அவனுடைய விசுவாச வாழ்க்கையை அவனைச் சுற்றியிருந்தவர்கள். எளிதாகப் புரிந்து கொள்ள முடிந்தது. தரியு அரசன் தானியேலைக் குறித்து, “ஜீவனுள்ள தேவனுடைய தாசனே” (வச. 20) எனவும், இடைவிடாமல் தேவனை ஆராதிக்கிறவன் எனவும் இருமுறை குறிப்பிடுகின்றான் (வச. 16,20).

தானியேல் போன்று நமக்கும் தேவனுடைய உதவி மிகவும் தேவை. தேவன் நம்மில் கிரியை செய்கிறார், எனவே நாம் அவரோடு நேரத்தைச் செலவிட விரும்புகிறோம் என்பது எத்தனை இன்பமானது! (பிலி. 2:13) எனவே நாம் ஒவ்வொரு நாளும் அவருடைய பிரசன்னத்தில் வந்து அவரோடு நேரத்தைச் செலவிடும்போது, அவர்மீதுள்ள அன்பில் நிரம்பி வழியச் செய்வார், நமது ரட்சகரை புரிந்துகொள்வதிலும் அறிந்து கொள்வதிலும் வளர்வோம் (1:9-11).

இனிமையான இல்லம்

“நாம் ஏன் நம்முடைய வீட்டை விட்டு வேறிடத்திற்குச் செல்ல வேண்டும்?” என்று என்னுடைய மகன் கேட்டான். ஓர் ஐந்து வயது சிறுவனுக்கு வீடு என்பது என்ன என்பதை விளக்குவது சற்றுக் கடினம். நாங்கள் எங்கள் இருப்பிடத்தைத் தான் மாற்றுகின்றோம். எங்கள் வீட்டையல்ல. வீடு என்பது நமக்கு அன்பானவர்கள் இருக்கும் இடம். ஒரு நீண்ட பயணத்திற்குப் பின் நாம் திரும்பிவர ஏங்கும் ஓர் இடம் அல்லது ஒரு நாளின் கடின வேலைக்குப்பின் திரும்பி வர எண்ணும் இடம் தான் நம் வீடு.

இயேசு மரிப்பதற்கு முன்னதாக ஒரு மேல் வீட்டறையில் இருந்த போது தன்னுடைய சீடர்களிடம் “உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக” என்றார் (யோவா. 14:1) இயேசுவின் சீடர்களுக்கு தங்களுடைய எதிர்காலம் என்னவாகும் என்பது தெரியவில்லை, ஏனெனில், இயேசு தான் மரிக்கப்போவதை அவர்களுக்கு முன்னறிவித்தார். ஆனால், இயேசு தன்னுடைய பிரசன்னம் எப்பொழுதும் அவர்களோடிருக்கும் எனவும், மீண்டும் அவரைக் காண்பார்களெனவும் உறுதியளித்திருந்தார். “என்னுடைய பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; … நான் ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம் பண்ணப் போகிறேன்” என்றார் (வச. 2) அவர் பரலோகத்தைக் குறிப்பிவதற்கு வேறு வார்த்தைகளைப் பயன்படுத்தியிருக்கலாம். ஆனால், அவர் நாம் நன்கு பயன்படுத்தும், நன்கு புரிந்து கொள்ளக் கூடிய வீடு என்ற வார்த்தையையே பயன்படுத்தினார். அங்கு இயேசுவும் நாம் நேசிக்கும் நபர்களும் இருப்பார்.

சி.எஸ். லூயிஸ் “நம்முடைய தந்தை, நம்முடைய பயணத்தின் போது நம்மைச் சில மகிழ்ச்சியான தங்கும் விடுதிகள் மூலம் நம்மை பெலப்படுத்துகின்றார். ஆனால், நாம் அவற்றை நிரந்தரமாகத் தங்கும் இடமென நினைத்துவிடக் கூடாது” என எழுதுகின்றார். தேவன் நமக்குத் தரும் மகிழ்ச்சியான விடுதிகளுக்காக அவருக்கு நன்றி சொல்வோம். ஆனால், நம்முடைய நிலையான வீடு பரலோகத்திலிருக்கிறது என்பதை நாம் நினைவில் கொள்வோம். அங்கு “நாம் எப்பொழுதும் கர்த்தருடனே கூட இருப்போம். (1 தெச. 4:17)

வரங்கள் அநேகம் நோக்கம் ஒன்றே

மெக்ஸிகோவிலுள்ள எனது சொந்த ஊரில் சோளம் என்ற மக்காச் சோளம்தான் பிரதானமான உணவு. சோளத்தில் அநேக வகைகள் உண்டு. மஞ்சள், பழுப்பு, சிவப்பு, கருப்பு மற்றும் புள்ளியிட்டவை என பல வகைகளைக் காணலாம். ஆனால், பட்டணங்களில் வசிப்பவர்கள் புள்ளியிட்ட சோளத்தை உண்பதில்லை. உணவகத்தைப் பற்றிய ஆராய்ச்சியாளர் ஆமடோரமிரஸ் என்பவர் ஒரே நிறமுடைய தானியம் தான் தரமானது என நம்பப்படுகிறது எனத் தெரிவித்தார். ஆனாலும், புள்ளியிட்ட தானியம் சுவைமிக்கதாகவும், நல்ல ரொட்டி தயாரிக்க உகந்ததாகவும் உள்ளது.

கிறிஸ்துவின் சபையும் ஒரே நிறத்தையுடைய சோளத்தைப் போலல்லாமல், புள்ளிகளுள்ள சோளத்தைப் போன்றேயுள்ளது. பவுல் அப்போஸ்தலன் ஒரு சரீரத்தை கிறிஸ்துவின் சபையோடு ஒப்பிட்டு விளக்குகின்றார். எவ்வாறெனின், நாமனைவரும் ஒரே சபையும் ஒரே தேவனும் கொண்டவர்களாயிருந்தும், ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு வகையான வரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பவுல் சொல்வது போல, “ஊழியங்களிலேயும் வித்தியாசங்கள் உண்டு, கர்த்தர் ஒருவரே. கிரியைகளிலேயும் வித்தியாசங்கள் உண்டு, எல்லாருக்குள்ளும் எல்லாவற்றையும் நடப்பிக்கிற தேவன் ஒருவரே. (1கொரி. 12:5-6). நாம் ஒருவருக்கொருவர் உதவுவதில் இருக்கின்ற வேறுபாடுகள், தேவனுடைய தயாளத்தையும், படைப்பின் ஆற்றலையும் காட்டுகின்றது.

நாம் நம்முடைய வேறுபாடுகளை ஏற்றுக் கொள்ளும்போது, நாம் நம்முடைய நம்பிக்கையிலும் நோக்கத்திலும் ஒற்றுமையை காத்துக்கொள்ள முயற்சிக்கின்றோம். நமக்குள்ளே வேறுபட்ட திறமைகளும் வேறுபட்ட சூழலும் உண்டு. நாம் வேறுவேறு மொழிகளைப் பேசுகின்றோம். வெவ்வேறு தேசங்களிலிருந்து வந்தவர்களாகவும் இருக்கின்றோம். ஆனால், நம் அனைவருக்கும் ஒரே அற்புதமான தேவன் உண்டு. அவரே படைப்பின் கர்த்தர், வெவ்வேறு வகைகளைப் படைத்து மகிழ்பவர்.

ஒருவரோடொருவர் இணைந்து

பழங்காலத்தில் ஒரு பட்டணத்தின் சுற்றுச் சுவர் உடைக்கப்பட்டதாகக் காணப்படின், அது தோற்றுபோன மக்களையும், ஆபத்திற்கும் வெட்கத்திற்குமுள்ளாக்கப்பட்ட ஜனங்களையும் கொண்டுள்ளதாகக் கருதப்படும். எனவேதான் யூத ஜனங்கள் எருசலேமின் அலங்கத்தை மீண்டும் கட்டுகின்றார்கள். எப்படி? ஒருவரோடொருவர் இணைந்து கட்டுகின்றார்கள். இது நெகேமியா 3 ஆம் அதிகாரத்தில் விளக்கப்பட்டுள்ளது.

இந்த 3ஆம் அதிகாரத்தை வாசிக்கும் போது முதலில் அது நமக்குச் சற்று ஆர்வமில்லாத பகுதியாகத் தோன்றும். யார், எந்த பகுதியை எடுத்துக் கட்டினான் எனத் தெரிவிக்கின்றது. ஆனால், சற்று ஆழந்து பார்ப்போமாகில், மக்கள் எவ்வாறு இணைந்து வேலை செய்தனர் என்பதைக் தெரிந்து கொள்வோம். ஆசாரியர்களும் பிரபுக்களோடு இணைந்து வேலை செய்கின்றனர். அருகிலுள்ள பட்டணங்களில் வாழ்பவர்களும் வந்து உதவுகின்றனர். மற்றவர்கள் தங்கள் வீடுகளுக்கு எதிரேயிருக்கிற பகுதியைப் பழுது பார்கின்றனர். சல்லூமின் குமாரத்திகளும் பிறரோடு இணைந்து வேலை செய்தனர் (3:11) தெக்கோவா ஊரார் இரண்டு பகுதிகளை பழுது பார்க்கின்றனர் (வச. 5,27).

இந்த பகுதியிலிருந்து இரண்டு காரியங்களை நாம் தெரிந்து கொள்ளலாம். ஓன்று அவர்களெல்லாரும் ஒரு பொதுவான நோக்கத்திற்காக இணைந்து வேலை செய்கிறார்கள். இரண்டாவதாக எவ்வளவு வேலை செய்தனர், மற்றவர்களைக் காட்டிலும் குறைவாகத்தான் வேலை செய்தனர் என்பதான பாகுபாடின்றி, அவர்கள் அனைவரும் இந்த வேலையில் பங்கு பெற்றதற்காகப் பாராட்டப்படுகின்றனர். செய்த வேலையின் அளவல்ல; பங்கெடுத்தலே போற்றத்தக்கது.

இன்றைய நாட்களில் நாம் பாதிக்கப்பட்ட குடும்பங்களையும், உடைந்துபோன சமுதாயத்தையும் பார்க்கின்றோம். வாழ்வு மாற்றத்தைக் கொடுப்பதன் மூலம் தேவனுடைய இராஜ்ஜியத்தைக் கட்டும்படியாக இயேசு கிறிஸ்து உலகத்தில் வந்தார். நாம் நம்முடைய அண்டை வீட்டாரின் வாழ்வை மாற்றும்படி, அவர்களுக்கு இயேசு தரும் புதிய வாழ்வையும், நம்பிக்கையையும் காட்டுவோம். நாம் அனைவரும் ஏதாவது ஒன்றைச் செய்யும்படி இடம் இருக்கிறது. எனவே நாம் ஒருவரோடொருவர் இணைந்து பெரிதோ, சிறிதோ நம்முடைய வேலையைச் செய்து, ஓர் அன்பான சமுதாயத்தை உருவாக்கும்படி, ஒவ்வொருவரும் இயேசுவைக் கண்டுகொள்ள உதவுவோம்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

இணைந்து இயேசுவுக்கு ஊழியம் செய்தல்

மைக்ரோனேசியாவில் உள்ள ஓர் தீவில் சிக்கித்தவிக்கும் இரண்டு ஆண்களுக்கு உதவ மீட்புப் பணியாளர்கள் பிரயாசப்பட்டனர். அவர்களுக்கு சுகாதார நெருக்கடி ஏற்படுவதற்கு முன்பு அவர்களை விரைந்து காப்பாற்றுவதற்கு குழுவாய் செயல்படவேண்டியது அவசியமாய் தோன்றியது. அவர்களை முதலில் கண்டுபிடித்த விமானி, அவர்களின் அருகாமையிலிருந்த ஆஸ்திரேலிய கப்பலுக்கு செய்தியனுப்பினார். கப்பல், இரண்டு ஹெலிகாப்டர்களை அனுப்பியது, அவை உணவு, தண்ணீர் மற்றும் மருத்துவ சேவைகளை வழங்கின. பின்னர், அமெரிக்க கடலோர காவல்படை அங்கு வந்து ஆட்களை சரிபார்த்து தகவல் அளித்தனர். இறுதியாக, ஓர் மைக்ரோனேசிய ரோந்துப் படகு அவர்களை பத்திரமாக அழைத்துக்கொண்டு வந்துவிட்டது.

நாம் இணைந்து செயல்பட்டால் நிறைய சாதிக்க முடியும். பிலிப்பிய விசுவாசிகள் அப்போஸ்தலர் பவுலை ஆதரிக்க தங்கள் முயற்சிகளை ஒருங்கிணைத்தனர். லீதியாளும் அவரது குடும்பத்தினரும் அவரை தங்கள் வீட்டிற்குள் வரவேற்றனர் (அப்போஸ்தலர் 16:13-15). கிலேமெந்து, எயோதியாள் மற்றும் சிந்திகேயாள் (இவர்கள் ஒத்துப்போகவில்லை) அனைவரும் நற்செய்தியைப் பரப்புவதற்கு அப்போஸ்தலருடன் நேரடியாக வேலை செய்தனர் (பிலிப்பியர் 4:2-3). பின்னர், பவுல் ரோமில் சிறையில் அடைக்கப்பட்டபோது, தேவாலயம் (விசுவாசிகள்) அவரது பராமரிப்புக்குத் தேவைப்படும் பொருளாதாரத்தை சேகரித்து, எப்பாபிராத்து மூலம் (வச. 14-18) விநியோகித்தது. பவுல் அப்போஸ்தலரின் ஊழியத்திற்காக பிலிப்பிய திருச்சபை தொடர்ந்து ஜெபத்தில் தரித்திருந்திருக்கக் கூடும் (1:19).

இந்த பண்டைய திருச்சபை விசுவாசிகள் ஒன்றாக இணைந்து ஊழியம் செய்ததற்கான எடுத்துக்காட்டுகள் இன்று நம்மை ஊக்குவிக்கும். தேவன் நம்மை வழிநடத்தி, நமக்கு அதிகாரம் கொடுத்ததால், ஜெபிக்கவும் மற்றவர்களுக்கு ஊழியம்செய்யவும், சக விசுவாசிகளுடன் ஒத்துழைக்கவும், நம்மால் இயன்றதைவிட அதிகமாக செய்யமுடிகிறது. “தனித்து வேலை செய்தால் நாம் ஒரு துளி, ஆனால் இணைந்து வேலை செய்தால் நாம் சமுத்திரம்.”

 

தேவனே என் துணையாளர்

என் நண்பர் ராலே தனது எண்பத்தைந்தாவது பிறந்தநாளை நோக்கி விரைகிறார்! அவரை நான் முதன்முதலில் சந்தித்ததிலிருந்து முப்பத்தைந்து வருடங்களுக்கும் மேலாக எனக்கு ஊக்கமளிக்கக்கூடிய ஆதாராமாக அவர் இருந்துள்ளார். பணி ஓய்வு பெற்ற பிறகு, அவர் ஓர் புத்தகம் எழுதும் பணியை நிறைவுசெய்துவிட்டு, வேறொரு வேலையை செய்வதாக என்னிடம் கூறினார். அவற்றைக் கேட்க எனக்கு ஆர்வமாயிருந்தது ஆனால் ஆச்சரியப்படவில்லை. 

தனது எண்பத்தைந்து வயதில், வேதாகமத்தில் இடம்பெற்றுள்ள காலேப் தன் ஓட்டத்தை நிறுத்த தயாராக இல்லை. தேவன் இஸ்ரவேலுக்கு வாக்களித்த கானான் தேசத்தை சுதந்தரிப்பதற்காக பல சகாப்தங்களாக வனாந்தர வாழ்க்கை மற்றும் யுத்தங்கள் ஆகியவற்றின் மத்தியிலும், தேவபக்தியும் விசுவாசமும் அவரை தாங்கியது. அவர், “மோசே என்னை அனுப்புகிற நாளில், எனக்கு இருந்த அந்தப் பெலன் இந்நாள்வரைக்கும் எனக்கு இருக்கிறது; யுத்தத்திற்குப் போக்கும் வரத்துமாயிருக்கிறதற்கு அப்போது எனக்கு இருந்த பெலன் இப்போதும் எனக்கு இருக்கிறது” (யோசுவா 14:11) என்று உரைக்கிறார். அவர் எந்த வழிகளில் ஜெயங்கொள்வார்? “கர்த்தர் என்னோடிருப்பாரானால், கர்த்தர் சொன்னபடி, அவர்களைத் துரத்திவிடுவேன்” (வச. 12) என்று காலேப் பதிலளிக்கிறார். 

வயது, வாழ்க்கையின் நிலை அல்லது சூழ்நிலை ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல், தேவனை முழுமனதோடு பற்றிகொள்ளும் யாவருக்கும் தேவன் உதவிசெய்ய வல்லவராயிருக்கிறார். நமக்கு உதவும் நம் இரட்சகராகிய இயேசுவில், தேவன் வெளிப்பட்டார். சுவிசேஷங்கள், கிறிஸ்துவிடத்திலிருந்து தேவன்மீது விசுவாசம் வைப்பதை நமக்கு போதிக்கிறது. உதவிக்காக தேவனை அண்டிய யாவருக்கும் தேவன் தன் அக்கறையையும் இரக்கத்தையும் வெளிப்படுத்துகிறார். எபிரெய நிருப ஆசிரியர் “கர்த்தர் எனக்குச் சகாயர், நான் பயப்படேன்” (எபிரெயர் 13:6) என்று அறிக்கையிடுகிறார். இளைஞரோ அல்லது வயதானவரோ, பலவீனமானவரோ அல்லது பலவானோ, கட்டுண்டவரோ அல்லது சுதந்திரவாளியோ, வேகமாக ஓடுகிறவரோ அல்லது முடவனோ, யாராக இருந்தாலும் இன்று அவருடைய உதவியைக் கேட்பதிலிருந்து நம்மைத் தடுப்பது எது?

 

கிறிஸ்துவில் ஐக்கிய பன்முகத்தன்மை

பேராசிரியர் டேனியல் போமன் ஜூனியர் தனது “சர்வீஸ் அன் தி ஸ்பெக்ட்ரம்” என்ற கட்டுரையில், ஓர் மனஇறுக்கம் கொண்ட நபராக தனது தேவாலயத்திற்கு எவ்வாறு சேவைசெய்வது என்பது குறித்த முடிவுகளை மேற்கொள்வதில் உள்ள சிரமத்தைப் பற்றி எழுதுகிறார். அவர் குறிப்பிடும்போது “இதுபோன்ற மனஇறுக்கம் கொண்ட மக்கள் ஒவ்வொரு முறையும் முன்னோக்கி செல்ல ஓர் புதிய பாதையை உருவாக்கவேண்டும். அவை ஓர் தனித்துவமான பாதையை அமைக்கிறது... மன, உணர்ச்சி மற்றும் உடல் ஆற்றல்... தனிமை/புத்துணர்வூட்டும் தருணங்கள்; உணர்வு உள்ளீடுகள் மற்றும் ஆறுதல் நிலை...அன்றைய நாள்பொழுது; நாம் நமது பெலனானவைகளுக்காக மதிக்கப்படுகிறோமா மற்றும் உணரப்பட்ட குறைபாடுகளுக்காக ஒதுக்கப்படாமல் நமது தேவைகளுக்கு இடமளிக்கப்படுகிறோமா இல்லையா என்று சிந்தித்தல்...; இன்னும் பற்பல காரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.” அதுபோன்ற தீர்மானங்கள் “மக்களின் நேரத்தையும் ஆற்றலையும் மாற்றியமைக்கும்போது, அவை மற்றவர்களையும் நம்மையும் மறுசீரமைக்க உதவும்” என்று போமன் எழுதுகிறார். 

1 கொரிந்தியர் 12இல் பவுல் விவரிக்கும் பரஸ்பர பார்வை ஓர் குணப்படுத்தும் தீர்வாக இருக்கும் என்று போமன் நம்புகிறார். அதில் 4-6 வசனங்களில், தேவன் தன் ஜனங்கள் ஒவ்வொருவருக்கும் வரங்களை “அவனவனுடைய பிரயோஜனத்திற்கென்று அளிக்கப்பட்டிருக்கிறது” (வச. 7) என்று குறிப்பிடுகிறார். ஒவ்வொருவரும் கிறிஸ்துவின் சரீரத்தில் இன்றியமையாத அவயங்கள் (வச. 22). திருச்சபை அனைவரையும் மாற்றமுடியாத ஒரே பாதையில் பயன்படுத்தாமல், அவரவருக்கு தேவன் கொடுத்த வரங்களின் அடிப்படையில் தேவனுடைய இராஜ்யத்திற்காய் அவற்றை நேர்த்தியாய் பிரயோகிக்க அனுமதிக்கலாம். 

இந்த வழியில், ஒவ்வொரு நபரும் செழிப்பையும் முழுமையையும் காண்பதோடு, கிறிஸ்துவின் சரீரத்தில் தங்கள் மதிப்புமிக்க இடத்தில் பாதுகாப்பாக இருக்க முடியும் (வச. 26).