எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

சிண்டி ஹெஸ் காஸ்பர்கட்டுரைகள்

பாதங்களையும் பாத்திரங்களையும் கழுவுதல்

சார்லி மற்றும் ஜானின் ஐம்பதாவது திருமண ஆண்டு விழாவில், அவர்கள் தங்கள் மகன் ஜானுடன் ஒரு ஓட்டலில் காலை உணவை சாப்பிட்டனர். அன்று உணவகத்தில் ஒரு மேலாளர், சமையல்காரர் மற்றும் தொகுப்பாளினி, பணிப்பெண் மற்றும் பணம் சேகரிக்கும் ஒருவர் என்று வெகு குறைவான பணியாளர்கள் மட்டுமே இருந்தனர். அவர்கள் காலை உணவை முடித்ததும், சார்லி தனது மனைவி மற்றும் மகனின் பக்கம் திரும்பி, “அடுத்த சில மணிநேரங்களில் உங்களுக்கு வேறு ஏதாவது முக்கியமான வேலை இருக்கிறதா?” என்று கேட்க, அவர்கள் இல்லை என்று பதிலளித்தனர்.

எனவே மேலாளரின் அனுமதியுடன், சார்லியும் ஜானும் உணவகத்தின் பின்புறத்தில் பாத்திரங்களைக் கழுவத் தொடங்கினர். ஜான், உணவுகள் சிதறிக்கிடந்த மேசைகளைத் துடைக்கத் தொடங்கினார். ஜானின் கூற்றுப்படி, அன்று நடந்தது உண்மையில் ஆச்சரியப்படும் காரியம் இல்லை. அவனுடைய பெற்றோர், இயேசு “ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ்செய்ய” வந்தார் (மாற்கு 10:45) என்பதை அவனுக்குக் கற்றுக்கொடுத்தே வளர்த்திருக்கிறார்கள்.

யோவான் 13ல், கிறிஸ்து தம் சீஷர்களுடன் கடைசியாகப் பகிர்ந்துகொண்ட உணவைப் பற்றி வாசிக்கிறோம். அன்றிரவு, அவர்களின் அழுக்கு கால்களைக் கழுவுவதன் மூலம் தாழ்மையின் ஊழியத்தைக் குறித்து இயேசு அவர்களுக்குக் கற்பித்தார் (வச. 14-15). பன்னிரண்டு பேர்களின் கால்களைக் கழுவும் கீழ்த்தரமான வேலையைச் செய்ய அவர் தயாராக இருந்தால், அவர்களும் மற்றவர்களுக்கு மகிழ்ச்சியுடன் ஊழியம் செய்திருக்கக்கூடும். 

நாம் செய்ய வேண்டிய ஊழியங்களின் தன்மை வித்தியாசப்படலாம், ஆனால் அது மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கிறது என்பதை மறுக்கமுடியாது. ஒருவர் புகழைப்பெறுவதற்காய் இந்த சேவைப் பணியில் ஈடுபடுவதில்லை, மாறாக, மற்றவர்களுக்கு சேவை செய்வதின் மூலம் நம்முடைய தாழ்மையான, தியாக உருவான தேவனுக்கு மகிமையைச் செலுத்துகின்றனர்.

நிழலும் தேவனுடைய வெளிச்சமும்

எலைனுக்கு புற்று நோய் இருப்பது கண்டறியப்பட்டபோது, அவளுக்கும் அவள் கணவனான சக்கும் அவள் இயேசுவை ஏற்றுக்கொண்டு வெகுகாலம் ஆகியிருக்காது என்பது அவர்களுக்குத் தெரியும். அவர்கள் இருவரும் தங்கள் ஐம்பத்து நான்கு வருடங்களின் ஆழமான மற்றும் கடினமான பள்ளத்தாக்கில் ஒன்றாகப் பயணிக்கும்போது தேவன் அவர்களுடன் இருப்பார் என்ற சங்கீதம் 23இன் வாக்குறுதியை பொக்கிஷமாக கருதினர். பல தசாப்தங்களுக்கு முன்னரே இயேசுவில் நம்பிக்கை வைத்து, எலைன் இயேசுவைச் சந்திக்கத் தயாராக இருந்தாள் என்று அவர்கள் நம்பினர்.

தன்னுடைய மனைவி மரணத்தின் நினைவு நாளில், சக், இன்னும் “நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே” நடக்கிறேன் (சங்கீதம் 23:4) என்று பகிர்ந்து கொண்டார். அவருடைய மனைவியின் பரலோக வாழ்க்கை ஏற்கனவே தொடங்கிவிட்டது. ஆனால் “மரணத்தின் நிழல்” இன்னும் அவருடனும் எலைனை பெரிதும் நேசித்த மற்றவர்களுடனும் இருந்தது.

மரண இருளின் பள்ளத்தாக்கில் நாம் பயணிக்கும்போது, நம் ஒளியின் ஆதாரத்தை எங்கே காணலாம்? அப்போஸ்தலனாகிய யோவான், “தேவன் ஒளியாயிருக்கிறார், அவரில் எவ்வளவேனும் இருளில்லை” (1 யோவான் 1:5). மேலும் யோவான் 8:12ல் இயேசு, “நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான்” என்று சொல்லுகிறார்.

இயேசுவை விசுவாசிக்கிறவர்களாக, நாம் “அவருடைய முகத்தின் வெளிச்சத்தில்” நடப்போம் (சங்கீதம் 89:15). மரண பள்ளத்தாக்கின் வழியாக நாம் பயணிக்கும் போது கூட, நம்முடன் இருப்பேன் என்றும் நமக்கு ஒளியின் ஆதாரமாக நம் தேவன் நமக்கு வாக்களித்திருக்கிறார்.

மனதை தளரவிடாதே

என் அம்மா டோரதி நல்ல ஆரோக்கியத்துடன் எப்போது இருந்திருக்கிறார்கள் என்பதை என்னால் யோசிக்கமுடியவில்லை. பல ஆண்டுகளாக உடையக்கூடிய நீரிழிவு நோயாளியாக, அவரது இரத்த சர்க்கரை பெருமளவில் ஒழுங்கற்றதாக இருந்தது. சிக்கல்கள் உருவாகி, அவரது சேதமடைந்த சிறுநீரகங்களுக்கு நிரந்தர டயாலிசிஸ் தேவைப்பட்டது. நரம்பியல் மற்றும் எலும்பு முறிவு காரணமாக சக்கர நாற்காலி பயன்படுத்தப்பட்டது. அவர் பார்வை கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்தது. 

ஆனால் அவரது சரீரம் சிகிச்சையை அனுமதிக்காததால், அவருடைய ஜெப வாழ்க்கை இன்னும் அதிகரிக்கத்துவங்கியது. தேவனின் அன்பை மற்றவர்கள் அறியவும் அனுபவிக்கவும் மணிக்கணக்காக ஜெபித்தார். வேதத்தின் விலைமதிப்பற்ற வார்த்தைகள் அவருக்கு இனிமையாக தெரிந்தது. அவரின் கண்பார்வை மங்குவதற்கு முன்பு, அவர் தன் சகோதரி மார்ஜோரிக்கு 2 கொரிந்தியர் 4-ல் உள்ள வார்த்தைகளை மேற்கோள்காட்டி ஒரு கடிதம் எழுதினாள்: “ஆனபடியினாலே நாங்கள் சோர்ந்து போகிறதில்லை; எங்கள் புறம்பான மனுஷனானது அழிந்தும், உள்ளான மனுஷனானது நாளுக்குநாள் புதிதாக்கப்படுகிறது” (2 கொரிந்தியர் 4:16). 

மனம் தளருவது எவ்வளவு இயல்பானது என்பதை பவுல் அறிந்திருந்தார். 2 கொரிந்தியர் 11இல், அவர் தன்னுடைய ஜீவியத்தை அபாயங்கள், வலிகள் மற்றும் பஞ்சம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டதாகவே வெளிப்படுத்துகிறார் (வச. 23-29). ஆனாலும் அவர் அந்த “தொல்லைகளை” தற்காலிகமானதாகவே கருதினார். நாம் எதைக் காண்கிறோமோ அதைப் பற்றி மட்டும் சிந்திக்காமல், நம்மால் பார்க்க முடியாத நித்தியமானவைகளைப் பற்றியும் சிந்திக்கும்படி அவர் நம்மை ஊக்குவித்தார் (4:17-18).

நமக்கு என்ன நடந்தாலும், நம் அன்பான பரமபிதா ஒவ்வொரு நாளும் நம் உள்ளான சுத்திகரிப்பை தொடர்ச்சியாய் செய்கிறார். அவர் நிச்சயமாய் நம்மோடிருக்கிறார். அவர் கொடுத்த ஜெபம் என்னும் வரத்தின் மூலம் அவர் நமக்கு மிக அருகாமையில் வந்திருக்கிறார். மேலும், அவர் நம்மைப் பலப்படுத்தி, நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் தருவதாக அவர் அளித்த வாக்குறுதிகள் மெய்யானவைகள்.

வாக்குறுதி நிறைவேறியது

நான் சிறுபிள்ளையாயிருந்தபோது ஒவ்வொரு கோடை விடுமுறையின்போதும் இருநூறு மைல்கள் தூரம் வரை பயணம் செய்து என்னுடைய தாத்தா பாட்டியிடம் விடுமுறையை மகிழ்ச்சியுடன் கழிப்பது வழக்கம். நான் நேசித்த என்னுடைய தாத்தா பாட்டியிடத்திலிருந்து எவ்வளவு ஞானத்தைக் கற்றுக்கொண்டேன் என்று நான் அப்போது அறியாதிருந்தேன். அவர்களுடைய வாழ்க்கை அனுபவங்களும் தேவனோடு நடந்த அனுபவங்களையும் என்னுடைய சிறிய சிந்தையினால் கற்பனை செய்து பார்க்கமுடியாத ஞானத்தை அவர்களுக்கு கற்றுக்கொடுத்திருந்தது. அவர்களோடு தேவனுடைய உண்மைத்துவத்தை பற்றிப்பேசிக்கொண்டிருக்கும்போது, தேவன் தான் செய்த அனைத்து வாக்குத்தத்தங்களிலும் உண்மையுள்ளவர் என்னும் மனவுறுதி எனக்கு ஏற்பட்டது. 

தேவதூதன் இயேசுவின் தாயாகிய மரியாளை சந்தித்தபோது, அவள் இளம் வயதுடையவளாயிருந்தாள். காபிரியேல் தூதனால் கொண்டுவரப்பட்ட செய்தி நம்பமுடியாத ஆச்சரியமாய் தோன்றினாலும் அதை கிருபையோடு செயல்படுத்த அவள் முற்பட்டாள் (லூக்கா 1:38). ஒருவேளை கர்ப்பமாயிருக்கும் அவளுடைய வயதுசென்ற உறவினரான எலிசபெத்தை (அறுபது வயதிருக்கும் என்று சில நிபுணர்கள் கருதுகின்றனர்) பார்க்க சென்றிருந்தபோது, மரியாளுடைய வயிற்றில் கருவுற்றிருப்பது மேசியா என்னும் எலிசபெத்தின் ஆறுதலான வார்த்தைகள் அவளை தேற்றியிருக்கலாம் (வச. 39-45). 

என்னுடைய தாத்தா பாட்டியைப் போன்று நாமும் கிறிஸ்துவில் அதிகதிகமாய் வளர்ச்சியுறும்போது, தேவன் வாக்குத்தத்தத்தை நிறைவேற்றுகிற தேவன் என்பதை விசுவாசிக்க பழகிக்கொள்வோம். எலிசபெத்துக்கும் அவளுடைய கணவனான சகரியாவுக்கும் அவர் செய்த வாக்குத்தத்தத்தை நிறைவேற்றினார் (வச. 57-58). அவர்களுக்கு பிறந்த பிள்ளையான யோவான் ஸ்நானகன், மனுஷீகத்தை எதிர்காலத்தை மாற்றக்கூடிய நபராய் நூற்றாண்டுகளுக்கு முன்னர் தீர்க்கதரிசனமாய் முன்னறிவிக்கப்பட்டவர். வாக்குப்பண்ணப்பட்ட உலக இரட்சராகிய மேசியா வருகிறார் (மத்தேயு 1:21-23).

அமைதிக்கான அறை

நீங்கள் அமெரிக்காவில் அமைதியான இடத்தைத் தேடுகிறவர்களென்றால், மினியாபோலிஸ், மினசோட்டாவில் நீங்கள் விரும்பும் அந்த அறை உள்ளது. இவ்வறையானது அனைத்து ஒலிகளிலும் 99.99 சதவீதத்தை உறிஞ்சிக்கொள்கிறது! ஆர்ஃபீல்ட் ஆய்வகங்களின் உலகப் புகழ்பெற்ற எதிரொலியற்ற அந்த அறை "பூமியின் அமைதியான இடம்" என்று அழைக்கப்படுகிறது. இந்த சத்தமில்லாத இடத்தை அனுபவிக்க விரும்புபவர்கள், கவனம் சிதறாத வண்ணம் உட்கார்ந்து கொள்ள வேண்டும். மேலும் நாற்பத்தைந்து நிமிடங்களுக்கு மேல் யாரும் அந்த அறையில் இருக்க முடியாது.

 

இத்தகைய மௌனத்தை பெரும்பாலும் நாம் விரும்ப மாட்டோம். ஆயினும்கூட, இரைச்சலும் அவசரமும் நிறைந்த இந்த உலகில் சிறிது அமைதிக்காக நாம் அனைவரும் சில சமயங்களில் ஏங்குகிறோம். நாம் பார்க்கும் செய்திகளும், நாம் உள்வாங்கும் சமூக ஊடகங்களும் கூட, நம் கவனத்தை சிதறடிக்கும் ஒருவித ஆரவாரமான "இரைச்சலை" நமக்குள் கொண்டு வருகின்றன. எதிர்மறை உணர்ச்சிகளைத் தூண்டும் வார்த்தைகள் மற்றும் படங்கள் நம் மனதில் பதிந்து விடுகின்றன. அவற்றில் நாம் மூழ்கி விட்டால் தேவனின் சத்தத்தைக் கேட்க முடியாமல் போய்விடும்.

 

எலியா தீர்க்கதரிசி ஓரேப் பர்வதத்தில் தேவனைச் சந்திக்கச் சென்றபோது, பலத்த, சடுதியான காற்றிலோ, பூகம்பத்திலோ அல்லது நெருப்பிலோ அவரைக் காணவில்லை (1 இராஜாக்கள் 19:11-12). எலியா ஒரு "மெல்லிய சத்தத்தைக்" கேட்கும் வரை, அவர் முகத்தை மூடிக்கொண்டு, "சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தரை" (வவ. 12-14) சந்திப்பதற்காக குகையை விட்டு வெளியேறினார்.

 

உங்கள் ஆவியும்கூட அமைதலுக்காக ஏங்கலாம், ஆனால் அதைக்காட்டிலும் தேவனின் சத்தத்தை கேட்கவே அது வாஞ்சிக்கிறது. உங்கள் வாழ்க்கையில் அமைதிக்கான ஒரு நேரத்தை ஒதுக்குங்கள். அப்பொழுது தேவனின் 'மெல்லிய சத்தத்தை' உங்களால் கேட்க முடியும் (வச. 12).

செய்ய அல்லது செய்யக்கூடாதவை

நான் சிறுவனாக இருந்தபோது, இரண்டாம் உலகப் போரில் செயலிழக்கச் செய்யப்பட்ட ஒரு பீரங்கி என் வீட்டிற்கு அருகில் உள்ள பூங்காவில் காட்சிக்கு வைக்கப்பட்டது. அவ்வாகனத்தின் மீது ஏறுவதிலுள்ள ஆபத்து குறித்துப் பல எச்சரிப்பு குறிகள் இருந்தன. ஆனால் எனது நண்பர்கள் இருவரும் உடனடியாக துடிப்போடு ஏறினர். எங்களில் சிலர் சற்று தயக்கம் காட்டினாலும், இறுதியில் நாங்களும் அவ்வாறே செய்தோம். ஒரு சிறுவன் பதிவிடப்பட்ட எச்சரிப்புகளைக் காட்டி மறுத்துவிட்டான். ஒரு பெரியவர் நெருங்கியதும், இன்னொருவன் வேகமாகக் கீழே குதித்தான். விதிகளைப் பின்பற்றுவதற்கான எங்கள் விருப்பத்தை விட விளையாடும் ஆசை அதிகமாக இருந்தது.

நம் அனைவருக்குள்ளும் குழந்தைத்தனமான முரட்டாட்ட சுபாவம் இருக்கிறது. என்ன செய்ய வேண்டும் அல்லது செய்யக்கூடாது என்று கூறப்பட்டால் நமக்குப் பிடிக்காது. ஆயினும் எது சரியானது என்பதை அறிந்து அதைச் செய்யாவிடில் அது பாவம் (4:17) என்று யாக்கோபில் வாசிக்கிறோம். ரோமரில், அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: “ஆதலால் நான் விரும்புகிற நன்மையைச் செய்யாமல், விரும்பாத தீமையையே செய்கிறேன். அந்தப்படி நான் விரும்பாததை நான் செய்தால், நான் அல்ல, எனக்குள்ளே வாசமாயிருக்கிற பாவமே அப்படிச் செய்கிறது" (7:19-20).

இயேசுவின் விசுவாசிகளாக, நாம் பாவத்துடன் போராடுவது புதிராக இருக்கலாம். ஆனால் பெரும்பாலும் நாம் சரியானதைச் செய்வதற்கு நம் சொந்த பலத்தை மட்டுமே சார்ந்திருக்கிறோம். ஒரு நாள், இந்த வாழ்க்கை முடிவடையும் போது, நாம் உண்மையிலேயே பாவத் தூண்டுதல்களுக்கு மரித்திருப்போம். எவ்வாறாயினும் அதுவரை, தனது மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் மூலம் பாவத்தின் மீதான வெற்றியை வென்றவரின் வல்லமையை நாம் நம்பலாம்.

தேவையை பார்த்தல்

என் அப்பாவின் கடைசி சில நாட்களில், ஒரு செவிலியர் அவருடைய அறைக்கு வந்து, அவருக்கு முகச்சவரம் செய்ய வேண்டுமா என்று கேட்டார். செவிலியர் மெதுவாக அவர் முகத்தைச் சவரம் செய்கையில், ​​“இவர் தலைமுறையைச் சேர்ந்த வயதானவர்கள் தினமும் சுத்தமாகச் சவரம் செய்ய விரும்புகிறார்கள்” என்று விளக்கினார். ஒருவருக்கு இரக்கம், கண்ணியம் மற்றும் மரியாதையைக் காட்ட வேண்டிய தேவையை உள்ளுணர்ந்து அந்த செவிலியர் செயலாற்றினார். அவர் அளித்த பரிவான கவனிப்பு என் இன்னொரு தோழியை எனக்கு நினைவூட்டியது, அவள் வயதான தாயின் நகங்களுக்கு இன்னும் நகப்பூச்சு பூசுகிறாள், ஏனென்றால் தான் அழகாயிருப்பது அந்த அம்மாவுக்கு முக்கியம்.

அப்போஸ்தலர் 9, தொற்காள் (தபீத்தாள் என்றும் அழைக்கப்படுபவர்) என்ற சீஷியை பற்றி நமக்குக் கூறுகிறது, அவர் ஏழைகளுக்கு கையால் செய்யப்பட்ட ஆடைகளை வழங்குவதன் மூலம் கருணை காட்டினார் (வ. 36,39). அவர் இறந்தபோது, ​​​​அவரது அறை நண்பர்களால் நிரம்பியது, அவர்கள் மற்றவர்களுக்கு உதவ விரும்பும் இந்த அன்பான பெண்ணைக் கண்ணீருடன் துக்கித்தனர்.

ஆனால் தொற்காளின் கதை அங்கு முடிவடையவில்லை. பேதுருவை அவள் உடல் கிடத்தப்பட்ட இடத்திற்குக் கொண்டுவரப்பட்டபோது, ​​அவன் மண்டியிட்டு ஜெபம் செய்தான். தேவனின் வல்லமையால், "தபீத்தாளே, எழுந்திரு" (வ. 40) என்று கூறி அவளைப் பெயர் சொல்லி அழைத்தான். ஆச்சரியமாக, தொற்காள் கண்களைத் திறந்து காலூன்றி நின்றாள். அவள் உயிருடன் இருப்பதை அவளுடைய நண்பர்கள் உணர்ந்தபோது, ​​​​நகரம் முழுவதும் வார்த்தைகள் விரைவாகப் பரவின, மேலும் "அநேகர் கர்த்தரிடத்தில் விசுவாசமுள்ளவர்களானார்கள்" (வ. 42).

தொற்காள் தன் வாழ்க்கையின் அடுத்த நாளை எப்படிக் கழித்தாள்? ஒருவேளை அவள் முன்பு இருந்ததைப் போலவே; மக்களின் தேவைகளைப் பார்த்து அவற்றை பூர்த்திசெய்திருப்பாள்.

மிக அழகான

என்னுடைய சிறுபிராயத்தில், நர்சரி மருத்துவமனை ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தபோது,புதிதாகப் பிறந்திருந்த குழந்தையை முதன்முறையாகப் பார்த்தேன். தலையில் முடி இல்லாத, கூம்பு வடிவ தலையுடன் ஒரு சிறிய, சுருக்கமான தோலுடன் இருந்த அந்த பிறந்த குழந்தையைப் பார்த்து நான் திகைத்துப் போனேன். என் அருகாமையில் நின்றிருந்த அந்த குழந்தையின் அம்மா, எல்லோரையும் பார்த்து, “குழந்தை அழகா இருக்கா?” என்ற மகிழ்ச்சியுடன் கேட்டார். மேலும் வேறொரு குழந்தையின் அப்பா, அவருடைய மகளைப் பார்த்து, “நீ மிகவும் அழகாயிருக்கிறாய்” என்று பாடல் பாடிய காணொலி ஒன்று எனக்கு நினைவுக்கு வருகிறது. அந்த அப்பாவுக்கு அவருடைய மகள் தான் உலகத்திலேயே அழகான விஷயம். 

தேவன் நம்மை அப்படித்தான் பார்க்கிறாரா? எபேசியர் 2:10, நாம் அவருடைய “செய்கையாயிருக்கிறோம்”- அவருடைய தலைசிறந்த படைப்பு என்று கூறுகிறது. நம்முடைய தோல்விகளை கருத்தில்கொள்ளும்போது, அவர் நம்மை எந்த அளவிற்கு நேசிக்கிறார் என்பதையும், அவருடைய பார்வையில் நாம் எந்த அளவிற்கு மதிப்புள்ளவர்கள் என்பதையும் நம்புவதற்கு கடினமாயிருக்கலாம். ஆனால் நாம் அன்பிற்கு பாத்திரவான்கள் என்பதினால் தேவன் நம்மை நேசிக்கவில்லை (வச. 3-4); மாறாக, அவர் அன்பாகவே இருப்பதினால் (1 யோவான் 4:8) நம்மை நேசிக்கிறார். அவருடைய அன்பானது ஒருவகையான இரக்கம். நாம் நம்முடைய பாவங்களுக்கு மரித்தவர்களாயிருந்தபோது, அவர் இயேசுவின் தியாகத்தின் மூலம் நம்மை அவரோடே இருக்கப்பண்ணி, அந்த அன்பின் ஆழத்தை நமக்கு வெளிப்படுத்தினார் (எபேசியர் 2:5,8). 

தேவனின் அன்பு மாறக்கூடியது அல்ல, அது நிலையானது. அவர் குறைவுள்ளவர்களையும், உடைந்தவர்களையும், பலவீனமானவர்களையும், குழப்பவாதிகளையும் நேசிக்கிறார். நாம் விழும்போது, நம்மை உயர்த்துவதற்கு அவர் நம்மோடு இருக்கிறார். நாம் அவருடைய பொக்கிஷம். அவருடைய பார்வைக்கு நாம் அழகானவர்கள். 

போதிய நேரம்

எனது நண்பரின் புத்தக அலமாரியில், லியோ டால்ஸ்டாயின் “வார் அண்ட் பீஸ்” (War and Peace) புத்தகத்தின் பெரிய தொகுப்பை நான் பார்த்தபோது, “நான் அதை இன்னும் முழுவதுமாய் படித்து முடிக்கவில்லை” என்று ஒப்புக்கொண்டேன். “நான் என் ஆசிரியர் பணியிலிருந்து ஓய்வுபெற்றபோது, “இப்போது நீங்கள் இறுதியாக அதைப் படிக்க நேரம் கிடைக்கும்” என்று சொல்லி என் நண்பர் ஒருவர் அப்புத்தகங்களை எனக்கு பரிசாகக் கொடுத்தார்” என்று மார்டி கூறினார்.

பிரசங்கி 3ஆம் அதிகாரத்தின் முதல் எட்டு வசனங்கள், வாழ்க்கையின் முக்கியமான சில உணர்வுகளின் செயல்பாடுகளை தாளத்தோடு எடுத்துரைக்கிறது. வாழ்க்கையின் எந்த கட்டத்தில் நாம் இருந்தாலும், நாம் செய்ய விரும்பும் அனைத்தையும் செய்ய நேரத்தைக் கண்டுபிடிப்பது பெரும்பாலும் கடினம். நமது நேரத்தை நிர்வகிப்பதைப் பற்றிய ஞானமான முடிவுகளை எடுக்க, ஒரு திட்டத்தை ஏற்படுத்திக்கொள்வது உதவியாக இருக்கும் (சங்கீதம் 90:12).

ஒவ்வொரு நாளும் தேவனுடன் நாம் நேரம் செலவிடுவது நமது ஆவிக்குரிய வாழ்க்கைக்கு ஆரோக்கியமானது. ஆக்கப்பூர்வமான வேலையைச் செய்வது நமது ஆவிக்கு நல்லது (பிரசங்கி 3:13). நமக்கான தேவனின் நோக்கத்தை நிறைவேற்ற தேவனைச் சேவிப்பதும் மற்றவர்களுக்கு உதவுவதும் அவசியம் (எபேசியர் 2:10). ஓய்வெடுப்பது என்பது வீண் அல்ல; அது நமது உடலுக்கும் ஆவிக்கும் புத்துணர்ச்சி அளிக்கிறது.
நிச்சயமாக, நம்மில் அநேகருக்கு முக்கியமாக தோன்றும் காரியங்களில் நேரத்தை செலவிடுவது எளிதாக இருக்கும். ஆனால் பிரசங்கி 3:11, தேவன் நம் இருதயங்களில் “நித்தியத்தை” வைத்திருக்கிறார் என்று கூறுகிறது. நித்தியமான காரியங்களுக்கு முன்னுரிமை கொடுக்க நினைவூட்டுகிறது. அது தேவனுடைய நித்தியத்தின் பார்வையை துவக்கமுதல் இறுதிவரை நம் கண்களுக்கு முன்பாக கொண்டு நிறுத்துகிறது.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

விசுவாசத்தின் ஜெயம்

நான்கு வயது சிறுவனான கால்வினின் வழக்கமான சரீர ஆரோக்கிய சோதனையில் அவனது உடலில் சில எதிர்பாராத புள்ளிகள் கண்டறியப்பட்டன. அவனுக்கு சில மருந்துகள் பரிந்துரைக்கப்பட்டு, ஊசி போடப்பட்டு, அந்த இடத்தை கட்டுகட்டி அனுப்பினர். அந்த கட்டை அகற்றும் நாளில், அவனுடைய தந்தை கட்டை பிரிக்க முயன்றபோது, கால்வின் பயத்துடன் சிணுங்கினான். மகனுக்கு ஆறுதல் கூற முயன்று, அவனது தந்தை, “கால்வின், உன்னைக் காயப்படுத்தும் எதையும் நான் ஒருபோதும் செய்யமாட்டேன் என்று உனக்குத் தெரியும்!" என்று சொன்னார். கட்டை அகற்றும் பயத்தைவிட, தன் மகன் தன்னை நம்பவேண்டும் என்று அவனது தந்தை விரும்பினார்.

அசௌகரியத்தினால் நான்கு வயது குழந்தைகள் மட்டும் பயம் அடைவதில்லை. அறுவைசிகிச்சைகள், அன்புக்குரியவர்களிடமிருந்து பிரிதல், மன அல்லது உளவியல் சவால்கள் மற்றும் பலவிதமான பயங்கள், பெருமூச்சுகள், அழுகைகள் மற்றும் கூக்குரல்களை சந்திக்கும் அனைத்து தரப்பினர்களும் பயத்தினால் சூழப்படுகின்றனர். 

தாவீது, தன்மீது பொறாமைகொண்டு தன்னை கொல்ல வகைதேடிய சவுலிடமிருந்து தப்பித்து பெலிஸ்திய தேசத்திற்கு ஓடியபோதிலும், அங்கு அவர் கண்டுபிடிக்கப்பட்ட தருணம், வாழ்க்கையின் பயம் மிகுந்த ஓர் தருணமாயிருந்துள்ளது. அவர் அடையாளம் காணப்பட்டபோது, அவருக்கு என்ன நேரிடும் என்று கவலைப்பட்டார். (1 சாமுவேல் 21:10-11): “தாவீது... காத்தின் ராஜாவாகிய ஆகீசுக்கு மிகவும் பயப்பட்டான்.” இந்த சங்கடமான சூழ்நிலையைப் பற்றி யோசித்து, தாவீது “நான் பயப்படுகிற நாளில் உம்மை நம்புவேன்… தேவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்படேன்” (சங்கீதம் 56:3-4) என்று எழுதுகிறார். 

வாழ்க்கையின் அசௌகரியங்கள் நமக்கு அச்சத்தைத் தூண்டும்போது நாம் என்ன செய்வோம்? நம்முடைய பரலோகத் தகப்பன்மீது நம்பிக்கை வைக்கலாம்.

 

ஜெபம் முக்கியமானது

“நடக்கவிருக்கும் மூளை ஸ்கேனுக்கான பிரார்த்தனைகள்;” “என் குழந்தைகள் மீண்டும் தேவாலயத்திற்கு வரவேண்டும்;“ “தன் மனைவியை இழந்த டேவின் ஆறுதலுக்காக" இதுபோன்ற ஜெப விண்ணப்பங்களை எங்களின் ஜெப ஊழியக் குழு வாரந்தோறும் பெறுகிறது. நாங்கள் அதற்காக ஜெபித்து, பதில் கடிதத்தையும் அனுப்புவது வழக்கம். ஜெப விண்ணப்ப பட்டியல் பெரிதாய் இருப்பதினால், எங்களுடைய முயற்சி கவனிக்கப்படாத வகையில் சிலவேளைகளில் இருக்கும். ஆனால் சமீபத்தில் டேவ் என்பவர் இறந்துபோன தன்னுடைய மனைவியின் இரங்கல் செய்தியின் நகலுடன், ஓர் நன்றிக் கடிதத்தையும் வைத்து அனுப்பியிருந்தார். அதைப் பார்த்த பின்பு எங்களுடைய சோர்வான சிந்தை மாறியது. ஜெபம் மிகவும் அவசியம் என்பதை நான் புதிதாக உணர்ந்தேன்.

நாம் ஊக்கமாக, இடைவிடாமல், நம்பிக்கையுடன் ஜெபிக்கவேண்டும் என்று இயேசு முன்மாதிரியாகக் கூறினார். பூமியில் அவருடைய வாழ்ந்த காலம் குறைவாகவே இருந்தது. ஆனால் அவர் ஜெபிப்பதற்காக தனி நேரம் செலவழிப்பதற்கு முக்கியத்துவம் கொடுத்தார் (மாற்கு 1:35; 6:46; 14:32).

நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, இஸ்ரவேலின் ராஜாவான எசேக்கியாவும் இந்தப் பாடத்தைக் கற்றுக்கொண்டார். ஓர் வியாதியின் நிமித்தம் அவர் சீக்கிரம் மரிக்கப்போகிறார் என்று அறிவிக்கப்பட்டது (2 இராஜாக்கள் 20:1). எசேக்கியா வேதனையோடும் வியாகுலத்தோடும், “தன் முகத்தைச் சுவர்ப்புறமாகத் திருப்பிக்கொண்டு” (வச. 2) கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணினார். இந்த விஷயத்தில் தேவன் உடனே பதில்கொடுக்கிறார். தேவன் எசேக்கியாவின் வியாதியை சுகமாக்கி, அவருக்கு பதினைந்து ஆண்டுகள் ஆயுசுநாட்களை பெருகப்பண்ணி, அவருடைய எதிரிகளிடமிருந்து இளைப்பாறுதலையும் வாக்குப்பண்ணுகிறார் (வச. 5-6). எசேக்கியா நல் வாழ்க்கை வாழ்ந்தார் என்பதற்காக தேவன் இந்த கிருபைகளை அவருக்குக் கொடுக்கவில்லை, மாறாக, “என் நிமித்தமும் என் தாசனாகிய தாவீதின் நிமித்தமும்” தேவன் அவருக்கு கிருபையளிப்பதாக கூறுகிறார். நாம் கேட்கிற அனைத்தையும் தேவனிடத்திலிருந்து பெறாமல் இருக்கலாம், ஆனால் தேவன் நம்முடைய அனைத்து ஜெபங்களையும் கேட்டு கிரியை நடப்பிக்கிறவராயிருக்கிறார் என்பதை நாம் உறுதியாக நம்பலாம்.

 

நாம் நம்பத்தகுந்த சிருஷ்டிகர்

மேரி ஷெல்லியின் “ஃபிராங்கண்ஸ்டைன்” என்ற பிரபல நாவலில் உள்ள “அரக்கன்” மிகவும் பரவலாக அறியப்பட்ட இலக்கிய பாத்திரங்களில் ஒன்றாகும். ஆனால் அந்த நாவலை ஆழமாய் படித்தவர்கள், அந்த அரக்கனை தோற்றுவித்த மாயை விஞ்ஞானியான விக்டர் ஃபிராங்கண்ஸ்டைனையே உண்மையான அரக்கனாக ஷெல்லி சித்தரிக்கிறார் என்று அறிவர். புத்திசாலித்தனமான உயிரினத்தை உருவாக்கிய பிறகு, விக்டர் அதற்கு வழிகாட்டுதல், தோழமை அல்லது மகிழ்ச்சியின் நம்பிக்கையை கொடுக்க மறுக்கிறார். அந்த உயிரினம், விரக்தி மற்றும் கோபப்படும் நிலைக்கு தள்ளப்படுகிறது. ஓர் தருணத்தில் அந்த உயிரினம் விக்டரைப் பார்த்து, “என் படைப்பாளியே, நீ என்னை துண்டு துண்டாக கிழித்து வெற்றி பெறும்” என்று கூறுவதைப் பார்க்கமுடியும். 

ஆனால் தன் படைப்புகள் மது தீராத அன்புகொண்ட மெய்யான சிருஷ்டிகர் எப்பேற்பட்டவர் என்பதை வேதம் வெளிப்படுத்துகிறது. ஏதோ சிருஷக்கவேண்டும் என்பதற்காக தேவன் உலகத்தை படைக்கவில்லை, மாறாக, அதை அழகாகவும் நேர்த்தியாகவும் படைத்திருக்கிறார் (ஆதியாகமம் 1:31). ஆனால் கொடூரமான தீமையைத் தேர்ந்தெடுக்க மனிதகுலம் அவரிடமிருந்து திசைமாறியபோதும், மனிதகுலத்திற்கான தேவனுடைய அர்ப்பணிப்பும் அன்பும் மாறவில்லை.

நிக்கோதேமுக்கு இயேசு விளக்கியதுபோல், தன்னுடைய ஒரே பேறான குமாரனை இந்த உலகத்திற்காய் பலியாய் கொடுக்குமளவிற்கு இந்த உலகத்தின்மீதான தேவனுடைய அன்பு விலையேறப்பெற்றது (யோவான் 3:16). இயேசு தம்மையே பலியாய் ஒப்புக்கொடுத்து, நம்முடைய பாவத்தின் விளைவுகளைச் சுமந்துகொண்டு, “தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு” (வச. 15) நம்மை உயர்த்துகிறார். 

நாம் மனப்பூர்வமாய் நம்பக்கூடிய ஓர் சிருஷ்டிகர் நமக்கு இருக்கிறார்.