என்னுடைய சிறுபிராயத்தில், நர்சரி மருத்துவமனை ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தபோது,புதிதாகப் பிறந்திருந்த குழந்தையை முதன்முறையாகப் பார்த்தேன். தலையில் முடி இல்லாத, கூம்பு வடிவ தலையுடன் ஒரு சிறிய, சுருக்கமான தோலுடன் இருந்த அந்த பிறந்த குழந்தையைப் பார்த்து நான் திகைத்துப் போனேன். என் அருகில் நின்றிருந்த அந்த குழந்தையின் அம்மா, எல்லோரையும் பார்த்து, “குழந்தை அழகா இருக்கா?” என்ற மகிழ்ச்சியுடன் கேட்டார். மேலும் வேறொரு குழந்தையின் அப்பா, அவருடைய மகளைப் பார்த்து, “நீ மிகவும் அழகாயிருக்கிறாய்” என்று பாடல் பாடிய காணொலி ஒன்று எனக்கு நினைவுக்கு வருகிறது. அந்த அப்பாவுக்கு அவருடைய மகள் தான் உலகத்திலேயே அழகான விஷயம். 

தேவன் நம்மை அப்படித்தான் பார்க்கிறாரா? எபேசியர் 2:10, நாம் அவருடைய “செய்கையாயிருக்கிறோம்”- அவருடைய தலைசிறந்த படைப்பு என்று கூறுகிறது. நம்முடைய தோல்விகளை கருத்தில்கொள்ளும்போது, அவர் நம்மை எந்த அளவிற்கு நேசிக்கிறார் என்பதையும், அவருடைய பார்வையில் நாம் எந்த அளவிற்கு மதிப்புள்ளவர்கள் என்பதையும் நம்புவதற்கு கடினமாயிருக்கலாம். ஆனால் நாம் அன்பிற்கு பாத்திரவான்கள் என்பதால் தேவன் நம்மை நேசிக்கவில்லை (வச. 3-4); மாறாக, அவர் அன்பாகவே இருப்பதினால் (1 யோவான் 4:8) நம்மை நேசிக்கிறார். அவருடைய அன்பானது ஒருவகையான இரக்கம். நாம் நம்முடைய பாவங்களுக்கு மரித்தவர்களாயிருந்தபோது, அவர் இயேசுவின் தியாகத்தின் மூலம் நம்மை அவரோடே இருக்கப்பண்ணி, அந்த அன்பின் ஆழத்தை நமக்கு வெளிப்படுத்தினார் (எபேசியர் 2:5,8). 

தேவனின் அன்பு மாறக்கூடியது அல்ல, அது நிலையானது. அவர் குறைவுள்ளவர்களையும், உடைந்தவர்களையும், பலவீனமானவர்களையும், குழப்பவாதிகளையும் நேசிக்கிறார். நாம் விழும்போது, நம்மை உயர்த்துவதற்கு அவர் நம்மோடு இருக்கிறார். நாம் அவருடைய பொக்கிஷம். அவருடைய பார்வைக்கு நாம் அழகானவர்கள்.