வகை  |  odb

தேவனுடன் ஒரு காணொளி அழைப்பு

2022 ஆம் ஆண்டு என் மனைவிக்கும் எனக்கும் மிகவும் விசேஷித்த ஆண்டு. அந்த ஆண்டுதான் எங்கள் பேத்தி சோபியா ஆஷ்லி பிறந்தாள். எங்கள் எட்டு பேரக்குழந்தைகளில் அவள்தான் ஒரே பேத்தி. சோபியாவின் தாத்தா பாட்டி புன்னகையை நிறுத்தவில்லை! எங்கள் மகன் காணொளி அழைப்பின் மூலம் அழைக்கும் போது, ​​குதூகலம் இன்னும் அதிகமாகிறது. நானும் என் மனைவியும் வெவ்வேறு அறைகளில் இருக்கலாம், ஆனால் அவளது சந்தோஷமான கூச்சல், சோபியா அவளைப் பார்க்கிறாள் என்பதை வெளிப்படுத்தும். தொலைவிலிருக்கும் நமது பிரியமானவர்களைப் பார்ப்பதற்கு ஒரு அழைப்பு அல்லது ஒரு சொடுக்கு மட்டுமே போதும்.

நாம் தொலைப்பேசியில் பேசும் நபரைப் பார்க்கும் திறன் ஒப்பீட்டளவில் புதியது, ஆனால் தேவனுடனான காணொளி அழைப்பு அதாவது அவரது பிரசன்னத்தில் மனமார்ந்த விழிப்புணர்வுடன் ஜெபித்தல் என்பது பழையது. 27ஆம் சங்கீதத்தில் தாவீதின் ஜெபத்தில், நெருக்கமான மனிதர்களின் திறனுக்கு அப்பாற்பட்ட ஒத்தாசை தேவைப்படுகிற எதிர்ப்பலையின் மத்தியில் (வ. 10-12) எழுப்பப்பட்ட குரல் இந்த வார்த்தைகளை உள்ளடக்கியது: “என் முகத்தைத் தேடுங்கள் என்று சொன்னீரே, உம்முடைய முகத்தையே தேடுவேன் கர்த்தாவே (வ.8).

"அவருடைய முகத்தைத் தேட" (வ. 8) கடினமான நேரங்கள் நம்மைக் கட்டாயப்படுத்துகின்றன. ஆனால், "உம்முடைய சமுகத்தில் பரிபூரண ஆனந்தமும், உம்முடைய வலது பாரிசத்தில் நித்திய பேரின்பமும் உண்டு" (16:11) என்று போற்றப்படுகின்ற ஒருவருடன் முகமுகமாக துன்பத்தில்தான் ஐக்கியம் கொள்ளவேண்டும் என்றில்லை. நீங்கள் கூர்ந்து கவனித்தால், எந்த நேரத்திலும், "என் முகத்தைத் தேடுங்கள்" என்று அவர் சொல்வதை நீங்கள் கேட்கலாம்.

 

குழந்தை இயேசுவை வரவேற்றிடுங்கள்

கர்ப்பிணிப் பெண்ணான எங்களின் அயலகத்தார் தனது முதல் குழந்தையைப் பெற்றெடுத்தாள் என்ற செய்திக்காக நாங்கள் நீண்டகாலம் காத்திருப்பது போல் உணர்ந்தேன். "பெண் குழந்தை!" என்று அவர்களின் வீட்டுக்கு முன்னிருந்த புல்வெளியில் ஒரு அடையாளத்தை இறுதியாக வைத்த போது, அவர்கள் மகளின் பிறப்பைக் கொண்டாடினோம். மேலும் புல்வெளி காட்சியைப் பார்க்காத நண்பர்களுக்கு குறுஞ்செய்திகளை அனுப்பினோம்.

ஒரு குழந்தையின் வருகைக்காக பெரும் குதூகலம் காத்திருக்கிறது. இயேசு பிறப்பதற்கு முன்பு, யூதர்கள் ஏதோ சில மாதங்கள் மட்டும் காத்திருக்கவில்லை, தலைமுறை தலைமுறையாக இஸ்ரவேல்  எதிர்பார்க்கும் மீட்பரான மேசியாவின் பிறப்புக்காக ஏங்கினார்கள். ஆண்டுகள் கடந்து செல்ல,  உண்மையுள்ள யூதர்கள் தங்கள் வாழ்நாளில் இந்த வாக்குத்தத்தம் நிறைவேறுமோவென்று சந்தேகித்திருக்கலாம் என்று நான் கற்பனை செய்கிறேன்.

ஒரு நாள் இரவு, நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட செய்தி வானத்தில் தோன்றியது, அப்போது ஒரு தூதன் பெத்லகேமில் மேய்ப்பர்களுக்குத் தோன்றி மேசியா இறுதியாகப் பிறந்தார் என்று அறிவித்தான். அவன் அவர்களிடம், "பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையில் கிடத்தியிருக்கக்காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம் என்றான்" (லூக்கா 2:12). மேய்ப்பர்கள் இயேசுவைப் பார்த்த பிறகு, அவர்கள் தேவனைப் புகழ்ந்து, பிள்ளையைக் குறித்துத் தங்களுக்குச் சொல்லப்பட்ட சங்கதியைப் பிரசித்தம்பண்ணினார்கள் (வ.17).

இயேசுவின் பிறப்பைப் பற்றி பிறரிடம் சொல்ல, வெகுகாலமாக எதிர்பார்க்கப்பட்ட பிள்ளை பிறந்ததை மேய்ப்பர்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்று தேவன் விரும்பினார். நாம் இன்னும் அவருடைய பிறப்பைக் கொண்டாடுகிறோம், காரணம் அவரை விசுவாசிக்கிற எவருக்கும் இவ்வுலகின் மாறுபாட்டிலிருந்து அவரது ஜீவனானது மீட்பை வழங்குகிறது. நாம் சமாதானத்தை அறியவும், மகிழ்ச்சியை அனுபவிக்கவும் இனியும் காத்திருக்க வேண்டியதில்லை, இதுவே அறிவிக்க ஏற்ற நற்செய்தியாகும்.

கிறிஸ்துவின் ஒளி

நானும் என் கணவரும் எப்போதும் எங்கள் சபையில் கிறிஸ்துமஸுக்கு முந்தைய நாளின் ஆராதனையில் கலந்துகொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். திருமணமான புதிதில், நாங்கள் ஒரு விசேஷித்த வழக்கத்தைக் கொண்டிருந்தோம், ஆராதனைக்குப் பிறகு கதகதப்பான ஆடைகளை அணிந்துகொண்டு அருகிலுள்ள மலையில் ஏறுவோம், அங்கே  உயரமான கம்பங்களில்  350 ஒளிரும் விளக்குகள் நட்சத்திர வடிவில் கட்டி தொங்கவிடப்பிட்டிருக்கும். பெரும்பாலும் பனியிருக்கும் அங்கிருந்து நாங்கள் நகரத்தைக் கவனித்துப் பார்க்கும்போது, மெல்லிய குரலில் இயேசுவின் அற்புதப் பிறப்பைப் பற்றிய எங்கள் கருத்துக்களைப் பேசிக்கொள்வோம். இதற்கிடையில், நகரத்தில் உள்ள பலர் கீழே பள்ளத்தாக்கிலிருந்து பிரகாசமான, சரமாய் ஒளிரும் நட்சத்திரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

அந்த நட்சத்திரம் நமது இரட்சகரின் பிறப்பை நினைவூட்டுகிறது. "யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவரை" தேடி எருசலேமுக்கு "கிழக்கிலிருந்து" வந்த சாஸ்திரிகளைப் பற்றி வேதாகமம் சொல்கிறது (மத்தேயு 2:1-2). அவர்கள் வானத்தைக் கவனித்துக் கொண்டிருந்தார்கள், மேலும் நட்சத்திரம் உதித்ததைக் கண்டனர் (வ. 2). அவர்களின் பயணம் அவர்களை எருசலேமிலிருந்து பெத்லகேமுக்கு அழைத்துச் சென்றது, அந்த நட்சத்திரம் "பிள்ளை இருந்த ஸ்தலத்திற்குமேல் வந்து நிற்கும்வரைக்கும்" அவர்களுக்கு முன்னால் சென்றது (வ. 9). அங்கு, அவர்கள் "சாஷ்டாங்கமாய் விழுந்து அதைப் பணிந்துகொண்(டனர்)டு" (வ.11).

கிறிஸ்து நம் வாழ்வில் அடையாளப்பூர்வமாகவும் (நம்மை வழிநடத்துகிறவராக) மற்றும் உண்மையாகவே வானத்தில் சூரியன், சந்திரன் மற்றும் நட்சத்திரங்களைச் சிருஷ்டித்தவராகவும் என்று நமது வாழ்வின் ஒளிக்கு ஆதாரமாக இருக்கிறார் (கொலோசெயர் 1:15-16). அவருடைய நட்சத்திரத்தை (மத்தேயு 2:10) பார்த்தபோது "மகிழ்ச்சியடைந்த" சாஸ்திரிகளைப் போல, பரலோகத்திலிருந்து நம்மிடையே வசிக்க வந்த இரட்சகராக அவரை அறிந்துகொள்வதில் நாம் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். "அவருடைய மகிமையைக் கண்டோம்" (யோவான் 1:14).

தோழமையான இலட்சியம்

நாசியன்சஸின் கிரிகோரி மற்றும் சிசேரியாவின் பேசில் ஆகியோர் நான்காம் நூற்றாண்டில் பெரிதும் மதிக்கப்பட்ட திருச்சபை தலைவர்களாகவும், நெருங்கிய நண்பர்களாகவும் இருந்தனர். தத்துவ பாட மாணவர்களாகத்தான் முதலில் இவர்கள் சந்தித்தனர், பின்னர் கிரிகோரி, அவர்கள் "ஈருடல் ஓருயிர்" போல ஆனதாகக் கூறினார்.

அவர்களின் வாழ்க்கைப் பாதைகள் மிகவும் ஒத்ததாக இருந்ததால், கிரிகோரிக்கும்  பேசிலுக்கும் இடையே போட்டி ஏற்பட்டிருக்கலாம். ஆனால், விசுவாசம், நம்பிக்கை மற்றும் நற்கிரியைகளாலான வாழ்க்கையைத் தங்களின் "ஒரே லட்சியமாக" கொண்டு, மேலும் இந்த லட்சியத்தில் தன்னை காட்டிலும் மற்றவர் சிறக்க வேண்டுமென்று "ஒருவரையொருவர் ஊக்குவித்த" காரணத்தால் இந்தச் சோதனையை மேற்கொண்டதாக கிரிகோரி விளக்கினார். இதன் விளைவாக, இருவரும் நம்பிக்கையில் வளர்ந்தனர் மற்றும் போட்டியின்றி உயர் மட்ட திருச்சபை தலைமைக்கு உயர்ந்தனர்.

எபிரேயர் புத்தகம், நாம் விசுவாசத்தில் வலுவாக இருக்க உதவும் வகையில் எழுதப்பட்டுள்ளது (எபிரேயர் 2:1), நாம் "நம்பிக்கையை அறிக்கையிடுகிறதில்" அசைவில்லாமல் உறுதியாயிருக்கவும், "அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் நாம் ஏவப்படும்படி ஒருவரையொருவர்" (10:23-24) ஊக்குவிக்கவும் ஏவுகிறது. இந்த கட்டளை ஒரு சபைக்கென்று கொடுக்கப்பட்டிருந்தாலும் (வ. 25), அதை தங்கள் நட்புக்குப் பயன்படுத்தியதின் மூலம், கிரிகோரியும் பேசிலும் எவ்வாறு நண்பர்கள் ஒருவரையொருவர் வளர ஊக்குவிக்கலாம் என்றும், அவர்களுக்கு இடையே வளரக்கூடிய போட்டி மனப்பான்மை போன்ற "கசப்பான வேரை" (12:15) தவிர்க்கலாம் என்பதையும் காட்டினார்கள்.

விசுவாசம், நம்பிக்கை மற்றும் நற்கிரியைகளை நமது சொந்த நட்பின் லட்சியமாகக் கொண்டு, இந்த இலட்சியத்தில் நம்மைக் காட்டிலும் நமது நண்பர்கள் சிறக்கும்படி அவர்களை ஊக்குவித்தால் என்ன? இரண்டையும் செய்யப் பரிசுத்த ஆவியானவர் நமக்கு உதவத் தயாராக இருக்கிறார்.

உணரக்கூடிய அன்பு

மருத்துவமனையில் படுக்கையிலிருந்த என் தோழி மார்கரெட் அருகில் அமர்ந்திருந்தபோது, ​​மற்ற நோயாளிகள், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் பார்வையாளர்களின் சலசலப்பு மற்றும் செயல்பாடுகளை நான் கவனித்தேன். நோய்வாய்ப்பட்ட தன் தாயின் அருகில் அமர்ந்திருந்த ஒரு இளம் பெண், "உங்களைத் தொடர்ச்சியாக வந்து விசாரிக்கும் இவர்கள் யார்?" என்று மார்கரெட்டைக் கேட்டாள். அவள், "இவர்கள் என் சபை குடும்பத்தின் உறுப்பினர்கள்!" என்று பதிலளித்தாள். அந்த இளம் பெண், தான் இதைப் போன்ற எதையும் முன்னர் கண்டதில்லை என்று குறிப்பிட்டார்; இந்த வருகையாளர்கள் "அன்பிற்கு உருவம் கொடுத்தது போல" இருப்பதாக அவள் உணர்ந்தாள். மார்கரெட் சிரித்துக்கொண்டே பதிலளித்தார், “அது எல்லாம் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து மூலம் தேவன்மேல் நாம் வைத்திருக்கும் அன்பினால் வருகிறது!”

மார்கரெட் தனது பதிலில், சீஷன் யோவானை எதிரொலித்தார். யோவான் தனது இறுதி நாட்களில் அன்பால் நிறைந்த மூன்று நிருபங்களை எழுதினார். அவர் தனது முதல் நிருபத்தில், “தேவன் அன்பாகவே இருக்கிறார்; அன்பில் நிலைத்திருக்கிறவன் தேவனில் நிலைத்திருக்கிறான், தேவனும் அவனில் நிலைத்திருக்கிறார்” (1 யோவான் 4:16) என்றார். அதாவது, "இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று" ஏற்றுக்கொள்பவர்கள் (வ.15) "அவர் தம்முடைய ஆவியில் நமக்குத் தந்தருளினதினாலே நாம் அவரிலும் அவர் நம்மிலும் நிலைத்திருக்கிறதை" (வ.13) அறிந்திருக்கிறார்கள். நாம் எப்படி பிறரை அன்புடன் கவனித்துக் கொள்ள முடியும்? "அவர் முந்தி நம்மிடத்தில் அன்புகூர்ந்தபடியால் நாமும் அவரிடத்தில் அன்புகூருகிறோம்" (வ.19).

தேவனின் அன்பெனும் ஈவின் காரணமாக, மார்கரெட்டைப் விசாரிப்பது எனக்கும் எங்கள் சபையில் உள்ள பிறர்க்கும் ஒரு கஷ்டமாகத் தோன்றவில்லை. மார்கரெட்டிடமிருந்து மட்டுமல்ல, அவளுடைய இரட்சகரான இயேசுவைப் பற்றிய அவளுடைய மென்மையான சாட்சியைக் கவனிப்பதன் மூலம் நான் கொடுத்ததை விட அதிகமாகப் பெற்றேன். இன்று உங்கள் மூலமாகத் தேவன்  எவ்வாறு பிறரை நேசிக்க இயலும்?