என்னிடம் ஓடி வா
ஒரு சமயம் நானும், என்னுடைய பிள்ளைகளும் அருகிலிருந்த பூங்காவில் நடந்து கொண்டிருக்கையில், கட்டவிழ்த்து விடப்பட்டிருந்த இரண்டு நாய்களை எதிர்கொள்ள நேர்ந்தது. அதில் ஒரு நாய் என்னுடைய மகனை தொந்தரவு செய்ய ஆரம்பித்ததை நாயின் உரிமையாளர் கவனிப்பதாகத் தெரியவில்லை. என்னுடைய மகன் அதைத் துரத்த முயற்சித்த பொழுது அது இன்னும் அதிகமாக அவனைத் தொந்தரவு செய்ய ஆரம்பித்தது.
கடைசியில், என் மகன் மிகவும் பயந்துபோய் சில அடிகள் தூரம் விலகி ஓடினான். ஆனால் அந்த நாய் அவனை விடாமல் துரத்தியது. அப்பொழுது நான், “என்னிடம் ஓடி வா!” எனக் கத்தினேன். என் மகன் இரண்டு மடங்கு வேகத்துடன் என்னிடம் ஓடி வந்து அமைதியானான். அதைக்கண்ட அந்த நாய் வேரிடத்தில் சேட்டை புரிய சென்று விட்டது.
இதைப் போலவே, நம்முடைய வாழ்விலும், “என்னிடம் ஓடி வா!” என தேவன் நம்மை அழைக்கும் நேரங்கள் உண்டு. நம்மைத் தொந்தரவு செய்யும் ஒன்று நம்மை பின்தொடர்ந்து வருகிறது. அதைவிட்டு அதி வேகமாக, மிகத் தூரமாக செல்ல அது நம்மை மிக நெருக்கமாகப் பின் தொடர்ந்து வருகிறது. நம்மால் அப்பிரச்சனையை உதறித் தள்ளவும் முடிவதில்லை, திரும்பிப்பார்த்து அதை நாமாக எதிர்கொள்ளும் தைரியமும் இருப்பதில்லை. ஆனால் உண்மை என்னவெனில் நாம் தனியாக இல்லை. நமக்கு உதவவும், நம்மை ஆறுதல்படுத்தவும், தேவன் நம்மோடிருக்கிறார். நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். நம்மைப் பயமுறுத்தும் காரியத்தை விட்டுத் திரும்பி அவரண்டைச் செல்ல வேண்டும். “கர்த்தரின் நாமம் பலத்த துருகம்; நீதிமான் அதற்குள் ஓடிச் சுகமாயிருப்பான்” (நீதி. 18:10) என வேதம் சொல்லுகிறது.
அது ஒருக்காலும் தீர்ந்து போவதில்லை
பணியிலிருந்து ஓய்வு பெற இருந்த எனது சிநேகிதியிடம், ஓய்வுபெற்ற பின் அவளது வாழ்க்கையில், அவள் பயப்படும் காரியம் என்ன என்று நான் கேட்டபொழுது, “நான் ஓய்வு பெற்றபின், கையில் பணம் தீர்ந்து போகாமல் இருக்கவேண்டும் என்பது குறித்து கவனமாக இருப்பேன்” என்று கூறினாள். அடுத்த நாள் நான் எனது நிதி ஆலோசகரிடம் பேசிக்கொண்டிருந்தபொழுது, பணம் தீர்ந்து போகாமல் தடுப்பது எப்படி என்பது குறித்து எனக்கு ஆலோசனை கொடுத்தார். நமது எதிர்கால வாழ்க்கைக்கு போதுமான நிதி இருக்க வேண்டும் என்ற பாதுகாப்பான சூழ்நிலையைப் பற்றி அறிந்துகொள்ள நாம் அனைவருமே விரும்புகிறோம்.
பாதுகாப்பான உலக வாழ்க்கைக்காக எந்தவிதப் பொருளாதாரத் திட்டமும் உறுதி அளிக்காது. ஆனால், இந்த உலக வாழ்க்கைக்கும் இதற்கு பின்னால் உள்ள வாழ்க்கைக்கும் நித்திய நித்தியமாய் நமக்கு உறுதி அளிக்கும் திட்டம் ஒன்று உள்ளது. “அவர், இயேசுகிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்ததினாலே, அழியாததும் மாசற்றதும் வாடததுமாகிய சுதந்தரத்திற்கேதுவாக, ஜீவனுள்ள நம்பிக்கை உண்டாகும்படி, தமது மிகுந்த இரக்கத்தின்படியே நம்மை மறுபடியும் ஜெநிப்பித்தார்” (1 பேதுரு 1:4) என்று அப்போஸ்தலர் பேதுரு அதை விளக்குகிறார்.
நம்முடைய பாவங்களை மன்னிக்க இயேசுவின் மேல் விசுவாசம் வைக்கும்பொழுது, தேவனுடைய வல்லமையினால் நித்திய சுதந்திரம் நமக்குக் கிடைக்கிறது. அந்த சுதந்திரத்தினால் நாம் நித்திய காலமாய் வாழ்வோம். நமது தேவைகள் சந்திக்கப்படாத நிலைமை நமக்கு ஒருக்காலும் ஏற்படாது.
ஓய்வு பெறுவதற்கான திட்டத்தை நம்மால் தீட்டுவதற்கு முடிந்தால், அது நல்லது தான். ஆனால், ஒருக்காலும் தீர்ந்து போகாத நித்திய சுதந்திரத்தைப் பெற்றுக்கொள்வது அதைவிட மிக முக்கியமானதாகும். அது இயேசு கிறிஸ்துவின் மேலுள்ள விசுவாசத்தினால் மட்டுமே நமக்கு கிடைக்கும்.
செவிகொடுக்கும் தேவன்
ஜலதோஷத்தாலும், ஒவ்வாமையினாலும் பாதிக்கப்பட்டிருந்த எனக்கு சத்தங்கள் எதையும் தெளிவாகக் கேட்க முடியாமல், நீருக்குள் மூழ்கி இருந்ததுபோல உணர்ந்தேன். அநேக வாரங்களுக்கு சத்தத்தை தெளிவாக கேட்க இயலாமல் கஷ்டப்பட்டேன். அவ்வாறு நான் கஷ்டப்பட்ட பொழுதுதான் சாதாரண நாட்களில் தெளிவாகக் கேட்ககூடிய தன்மையை ஒரு பொருட்டாக எண்ணாமல் இருந்ததை உணர்ந்தேன்.
சிறுவனான சாமுவேல் ஆலயத்தில் தூங்கிக்கொண்டிருந்தபொழுது, அவனது பெயரைச் சொல்லி கூப்பிட்ட சத்தம் கேட்டபொழுது, அரைகுறை தூக்கத்திலிருந்து எழுந்தான் (1 சாமு. 3:4). மூன்று முறை அவன் பிரதான ஆசாரியனாகிய ஏலிக்கு முன்பாக வந்து நின்றான். மூன்றாவது முறைதான், தேவன் சாமுவேலைக் கூப்பிடுகிறார் என்பதை ஏலி உணர்ந்தான். அந்நாட்களிலே கர்த்தருடைய வசனம் அபூர்வமாக இருந்தது (வச. 1). இஸ்ரவேல் மக்கள் தேவனுடைய வார்த்தைகளைக் கேட்கும் பழக்கமில்லாதிருந்தார்கள். ஆனால், தேவனுடைய சத்தத்திற்கு எவ்வாறு மாறுத்தரம் கூறவேண்டுமென்று ஏலி சாமுவேலுக்குப் போதித்தான் (வச. 9).
சாமுவேலின் காலத்தில் இருந்ததை விட இந்தக் காலங்களில் தேவன் அதிகமாக பேசுகிறார். “பூர்வகாலங்களில் பங்குபங்காகவும் வகைவகையாகவும், தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம்பற்றின தேவன், இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம்பற்றினார்” (எபி. 1:1–2) என்று எபிரெயருக்கு எழுதின நிரூபம் கூறுகிறது. அப்போஸ்தலர் 2ம் அதிகாரத்தில் கிறிஸ்து நமக்கு கற்பித்தவைகளில் வாழ, நம்மை வழிநடத்துகிற, பரிசுத்தாவியானவர் பெந்தெகொஸ்தே நாளன்று அருளப்பட்டதைப்பற்றி வாசிக்கின்றோம். ஆனால் அவருடைய சத்தத்தைக் கேட்கவும், அவருடைய வார்த்தைக்கு கீழ்ப்படியவும் நாம் கற்றுக்கொள்ள வேண்டும். என்னுடைய ஜலதோஷத்தின் பொழுது நான் தண்ணீருக்கு அடியில் உள்ளவளைப் போல, எதையும் தெளிவாக கேட்க முடியாமல் இருந்தேனோ, அது போலவே நாம் இருக்கிறோம். கர்த்தருடைய வழிநடத்துதல் இதுதான் என்று நாம் எண்ணும் காரியங்களை வேதாகமத்தின் உதவியின் மூலமாகவும், மூத்த விசுவாசிகளின் மூலமாகவும் சோதித்து அறிந்து கொள்ள வேண்டும். தேவனுக்கு பிரியமான பிள்ளைகளாக இருப்பதால் நாம் அவருடைய சத்தத்தைக் கேட்கிறோம். நமக்கு ஜீவனை கொடுப்பதைப்பற்றி நம்மோடு கூடப்பேச தேவன் அதிகம் விரும்புகிறார்.
ஜெபிக்கும் நோயாளி
நான் வாழ்ந்து வந்த நகரில் வசித்து வந்த ஆலன் நானிங்கா என்ற நபர் இறந்தபொழுது, அவரைப்பற்றி வெளியான இரங்கல் செய்தி மூலம், எனது ஊரில் வாழ்ந்து வந்த அனைத்துக் கிறிஸ்தவர்களைவிட அவர் “மிகவும் அர்ப்பணிப்புடன் கிறிஸ்துவுக்கு சாட்சியாக வாழ்ந்தவர்” என்ற செய்தி எல்லாராலும் அறியப்பட்டது. அந்த இரங்கல் செய்தியில் அவரது குடும்பம், அவர் செய்து வந்த வேலை ஆகியவற்றைப் பற்றிக் கூறினபின், அவருடைய உடல்நிலை 10 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு நோய்வாய்ப்பட்டிருந்ததையும் விளக்கினது. அவர் மருத்துவமனையில் இருந்தபொழுது, அங்கிருந்த உள்நோயாளிகள் மத்தியில் அர்ப்பணிப்புடன் செய்து வந்த ஜெப ஊழியத்தின் நிமித்தமாக “ஜெபிக்கும் நோயாளி” என்ற சிறப்புப் பட்டத்தை பெற்றார் என்ற விளக்கத்துடன் அந்த இரங்கல் செய்தி முடிவடைந்திருந்தது. அவரது நோயின் வேதனைகள் மத்தியிலும் அவரைச் சுற்றியிருந்த தேவையுள்ள மக்களுக்காக ஜெபித்து வந்த ஒரு மனிதனை இங்கு பார்க்கிறோம்.
இயேசுவை, யூதாஸ் காட்டிக்கொடுப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக “நான் இனி உலகத்திலிரேன், இவர்கள் உலகத்திலிருக்கிறார்கள்; நான் உம்மிடத்திற்கு வருகிறேன். பரிசுத்த பிதாவே, நீர் எனக்குத் தந்தவர்கள் நம்மைப்போல ஒன்றாயிருக்கும்படிக்கு, நீர் அவர்களை உம்முடைய நாமத்தினாலே காத்துக்கொள்ளும்” (யோவா. 17:11) என்று இயேசு அவருடைய சீஷர்களுக்காக ஜெபித்தார். அவருக்கு நேரிடப்போவதை அவர் நன்கு அறிந்திருந்தும், அவர் தன்னைக் குறித்து சிந்திக்காமல், அவரைப் பின்பற்றின சீஷர்களைப்பற்றி அவரது கவனத்தை செலுத்தினார்.
நமது சுகவீனம், துன்பமான நேரங்கள் மத்தியில் பிறருடைய ஜெப உதவிக்காக ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். அந்த ஜெபங்கள் நம்மை ஊக்கப்படுத்த நமக்கு மிகவும் உதவியாக உள்ளன. ஆனால், நாமும் நம்முடைய கர்த்தரைப்போல நம்மைச் சுற்றியுள்ள, உதவி தேவைப்படும் மக்களுக்காக, தேவனை நோக்கி நமது கண்களை ஏறெடுத்து ஜெபிப்போமாக.
எண்ணுவதற்கு கற்றுக்கொள்ளுதல்
எனது மகன், 1 முதல் 10 வரை எண்ணுவதற்கு கற்றுக்கொண்டிருக்கிறான். அவனது பொம்மைகள், அவன் பார்க்கும் மரங்கள் அனைத்தையும் எண்ணுவான். அவனது பள்ளிக்குச் செல்லும் வழியில் எனது கவனத்திற்கு உட்படாத காட்டுப்பூக்கள் அல்லது எனது பாதத்திலுள்ள விரல்கள் ஆகியவற்றைக் கூட அவன் எண்ணுவான்.
இப்படியாக என் மகன் எண்ணுவதின் மூலம், நான் மறுபடியும் எண்ணுவதற்கு எனக்குப் போதிக்கிறான். நான் செய்து முடிக்காத காரியங்கள் அல்லது என்னிடம் இல்லாத பொருட்களைப் பற்றிய காரியங்களில் என் முழு கவனத்தையும் செலுத்துவதால், என்னைச் சுற்றியுள்ள அனைத்து நன்மையான காரியங்களையும் கவனிக்கத் தவறிவிடுகிறேன். இந்த ஆண்டில் எனக்குக் கிடைத்த புதிய சிநேகிதர்கள், பதில் கிடைத்த ஜெபங்கள், எனது நல்ல சிநேகிதருடன் நான் சிரித்து மகிழ்ந்த நேரங்கள் அனைத்தையும் மறந்து விட்டேன்.
ஒவ்வொரு நாளும் தேவன் அருளும் ஆசீர்வாதங்களை எண்ணுவதற்கு எனது பத்து விரல்கள் போதாது. “என் தேவனாகிய கர்த்தாவே, நீர் எங்கள் நிமித்தஞ்செய்த உம்முடைய அதிசயங்களும் உம்முடைய யோசனைகளும் அநேகமாயிருக்கிறது; ஒருவரும் அவைகளை உமக்கு விவரித்துச் சொல்லிமுடியாது. நான் அவைகளைச் சொல்லி அறிவிக்கவேண்டுமானால் அவைகள் எண்ணிக்கைக்கு மேலானவைகள்” (சங். 40:5). இரட்சிப்பு, ஒப்புரவாதல், நித்திய ஜீவன் போன்ற ஆசீர்வாதங்களை நம்மால் எப்படி எண்ணுவதற்கு இயலும்?
நம்மீது தேவன் கொண்டுள்ள விலைமதிப்பற்ற எண்ணங்கள், அவர் நமக்குச் செய்த ஆசீர்வாதமான காரியங்கள் ஒவ்வொன்றாக எண்ணி நாமும் தாவீதோடு சேர்ந்து, “தேவனே, உமது ஆலோசனைகள் எனக்கு எத்தனை அருமையானவைகள்; அவைகளின் தொகை எவ்வளவு அதிகம். அவைகளை நான் எண்ணப்போனால், மணலைப்பார்க்கிலும் அதிகமாம்; நான் விழிக்கும்போது இன்னும் உம்மண்டையில் இருக்கிறேன்” (சங். 139:17–18) என்று தேவனை போற்றித் துதிப்போம்.
எண்ணுவதற்கு மறுபடியும் கற்றுக்கொள்வோம்.
படிப்படியாக
வேதாகமத்திலுள்ள எண்ணாகமம் 33ம் அதிகாரத்தை ஆழ்ந்த சிந்தனை எதுவுமில்லாமல் நாம் வாசிக்கலாம். இஸ்ரவேல் மக்கள் எகிப்திலுள்ள ராமசேஸ் பட்டணத்தை விட்டு, மோவாப் சமவெளியை அடையும் வரை அவர்கள் கடந்து வந்த இடங்களின் பட்டியலைத்தவிர, வேறு ஏதும் அந்த அதிகாரத்தில் இல்லை. ஆனால், அப்பகுதி மிக முக்கியமானதாக கருதப்பட வேண்டும். ஏனென்றால் இந்த ஒரு பகுதி மட்டும்தான் “மோசே தனக்குக் கர்த்தர் கட்டளையிட்டபடியே… எழுதினான்” (வச. 2) என்ற வார்த்தைகளுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஏன் இப்படியான குறிப்புகளை பதிவு செய்து வைக்க வேண்டும்? வனாந்தரத்தில் 40 ஆண்டுகளாக பயணம் செய்த இஸ்ரவேல் மக்கள், அவர்கள் கடந்து வந்த இடங்களையும், அந்தந்த இடங்களில், தேவன் அவர்களுக்கு உண்மையுள்ளவராக இருந்து, செய்த நன்மைகளையும், அவர்களது மனதில் நினைத்துப் பார்ப்பதற்கு அந்தக் குறிப்புகள் உதவியாக இருக்கும்.
ஒரு கூடாரத்திற்கு வெளியே திறந்த வெளியில் மூட்டப்பட்ட நெருப்பின் அருகில் ஓர் இஸ்ரவேல் தகப்பனார் அமர்ந்து, அவருடைய மகனிடம், “ரெவிதீமை என்னால் மறக்கவே இயலாது! அங்கு நூற்றுக்கணக்கான மைல்களுக்கு எங்கு பார்த்தாலும் மணலும், வறண்ட பிரதேச தாவரங்கள்தான் இருந்தன. நான் தாகத்தால் செத்துக்கொண்டிருந்தேன். பின்பு தேவன், மோசேயிடம் அவனது கோலை ஓங்கி கன்மலையை அடிக்கும்படி கூறினார். அது ஒரு கருங்கல் பாறை. மோசே அதை அடித்தது ஒரு பயனற்ற செயல். அந்தக் கடினமான கல்லிலிருந்து எதையும் பெற்றுக்கொள்ள இயலாது. ஆனால், என்ன ஆச்சரியம்! அந்தக் கன்மலையிலிருந்து தண்ணீர் பீறிட்டு வந்தது. பல்லாயிரக்கணக்கான இஸ்ரவேல் மக்களின் தாகத்தைத் தீர்க்குமளவிற்கு அதிகமான தண்ணீர் அதிலிருந்து வந்தது. அந்த நாளை என்னால் மறக்கவே இயலவில்லை” (சங். 114:8; எண். 20:8–13; 33:14 பார்க்க) என்று அந்த தகப்பனார், அவர் கடந்து வந்த இடங்களில் நடந்தவற்றை மறுபடியும் நினைவில் கொண்டுவந்து கூறுவதாக நான் என் மனதில் கற்பனை பண்ணுகிறேன்.
ஆகவே நீங்களும் ஏன் இந்தவித முயற்சியை எடுக்கக்கூடாது? உங்களது வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் நடந்த காரியங்களை நினைவு கூர்ந்து, தேவன் வாக்குப்பண்ணின அவரது அன்பை உண்மையாக உங்கள் மீது ஒவ்வொரு நிலைமையிலும் காண்பித்து நடத்தி வந்ததை நினைவு கூறுங்கள்.
இருதயங்களை சீர்செய்தல்
சமீபத்தில், சில ஆடைகளை சரிசெய்ய துணிதைக்கும் ஒரு பெண்ணின் கடைக்குச் சென்றேன். நான் அக்கடையில் நுழையும் பொழுது அதன் சுவற்றில் மாட்டப்பட்டிருந்த பதாகைகளை பார்த்தவுடன் நான் மிகவும் உற்சாகமடைந்தேன். அந்தப் பதாகைகள் ஒன்றில் “நாங்கள் உங்கள் ஆடைகளை சரிசெய்வோம், ஆனால் உங்கள் இருதயத்தை கடவுளால் மட்டும் தான் சரிசெய்ய இயலும்” என்று எழுதப்பட்டிருந்தது. அதன் அருகில் உயிர்த்தெழுந்த இயேசு, அழுதுகொண்டிருந்த மகதலேனா மரியாளுக்கு கொண்டிருந்த காட்சி சித்தரிக்கப்பட்டிருந்தது. மற்றொரு பதாகையில் “ஜெபம் உங்களுக்கு தேவைப்படுகிறதா? நாங்கள் உங்களுடன் சேர்ந்து ஜெபிக்கிறோம்” என்று குறிக்கப்பட்டிருந்தது.
அந்தக் கடைக்கு சொந்தக்காரப் பெண் அந்தக் கடையை 15 ஆண்டுகளாக நடத்தி வருவதாகக் கூறினாள். “இங்கு பல்வேறு இடங்களில் குறிக்கப்பட்டுள்ள விசுவாச வார்த்தைகளால் தேவன் எப்படியாகக் கிரியை செய்துள்ளார் என்பதை அறிந்து ஆச்சரியப்படுகிறோம். சிறிது நாட்களுக்கு முன்பாக, இதே இடத்தில் ஒருவர் கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டுள்ளார். தேவன் கிரியை செய்வதை பார்க்கும்பொழுது, மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது” என்று கூறினாள். நானும் ஒரு கிறிஸ்தவன் என்று அவளிடம் கூறி, அவள் பணி செய்யும் இடத்தில் இப்படியாக கிறிஸ்துவை அறிவித்து வருவதைக் குறித்து பாராட்டினேன்.
நாம் அனைவருமே நாம் பணிசெய்யும் இடங்களில் அந்த தையல்கார பெண்மணியைப்போல தைரியமாக செயல்பட இயலாது. ஆனால் பிறர் எதிர்பாராத முறையில் அவர்களிடம் அன்பு, பொறுமை, இரக்கம் காண்பிப்பதன் மூலம் புதிய செயல்முறைத் திட்டங்களை நாம் கண்டறியலாம். அந்த தையல் கடையை விட்டுவந்ததிலிருந்து, “நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்” (மத். 5:14) என்று இயேசு கூறினதை வாழ்ந்து காண்பிக்க எத்தனையோ வழிமுறைகள் இருக்கின்றன என்பது பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்.
இந்த வரம்
நான் சேகரித்து வைத்திருந்த பிரம்புகள், தடிகள், கைத்தடிகள் பற்றி அநேக ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு கட்டுரை எழுதினேன். அவற்றை நான் பயன்படுத்த வேண்டிய காலம் வரும் என்று எனக்குள் நானே சிந்தித்தேன். அந்த நாளும் வந்தது. முதுகில் ஏற்பட்ட பிரச்சனையுடன் கூட நரம்புத்தளர்ச்சியும் சேர்ந்து, மூன்று சக்கரங்களையுடைய நடக்க பயன்படும் உபகரணத்தை (Walker) பயன்படுத்தக்கூடிய சூழ்நிலை எனக்கு ஏற்பட்டது. என்னால் நீண்ட தூர நடைப்பயிற்சி செய்ய இயலாது; மீன் பிடிக்க இயலாது; எனக்கு மகிழ்ச்சியை அளித்த அநேக செயல்களை என்னால் செய்ய இயலாது.
என்னுடைய செயல்பாடுகள் குறிப்பிட்ட எல்லைக்குள் உட்பட்டு இருந்தாலும், அவை அனைத்தும் தேவன் எனக்கு அருளிய வரங்கள் என்றும், அந்த வரங்களோடு நான் தேவனுக்கு ஊழியம் செய்ய வேண்டுமென்பதையும் கற்றுக்கொண்டு வருகிறேன். தேவன் எனக்கு அளித்துள்ளது இந்த வரம்தான், மற்றப்படி வேறு வரம் அல்ல. நமது செயல்களை எல்லைக்கு உட்படுத்தும் இந்தக் காரியங்கள் - நமது உணர்வுகள் சார்ந்ததாகவோ, சரீரப்பிரகாரமானதாகவோ அல்லது அறிவாற்றல் சார்ந்ததாகவோ இருக்கலாம். இது நம் அனைவருக்கும் பொருந்தக்கூடியது. பவுல் அவரது பலவீனத்தில் தேவனுடைய வல்லமை அவர்மேல் தங்கத்தக்கதாக அவருடைய பலவீனங்களைக் குறித்து மேன்மை பாராட்டுவேன் என்று தைரியமாகக் கூறினார் (2 கொரி. 12:9).
நம்முடைய குறைகளை இந்தக் கண்ணோட்டத்தில் நாம் பார்ப்பது, நமது செயல்பாடுகளை நம்பிக்கையோடும், தைரியத்தோடும் செயல்படுத்த உதவுகிறது. நமது குறைபாடுகளை எண்ணி குறைவுபடவோ, சுயபரிதாபமடையவோ விட, அவைகளின்று அவருடைய சித்தத்தை நம்மில் நிறைவேற்ற நம்மை அவரிடம் ஒப்புக்கொடுப்போம்.
உங்களைக் குறித்தோ, என்னைக் குறித்தோ தேவன் என்ன சித்தம் கொண்டுள்ளார் என்று தெரியாது. ஆனால், அது குறித்து நாம் கவலைப்படக்கூடாது. காரியங்களை இருக்கிற வண்ணமாகவே ஏற்றுக்கொண்டு அதில் திருப்தியாக இருந்து, அன்பில், ஞானத்தில், தேவன் அருளும் காரியங்கள் அனைத்திலும் இந்த நிமிடம் மிகச் சிறந்ததாகவே இருக்கிறது என்பதை அறிந்து கொள்வதே இன்று நாம் செய்ய வேண்டிய காரியமாகும்.
மாற்றத்தை தேர்ந்தெடுத்தல்
எனது மகனுக்கு ஒரு சிறிய ரோபோ கிடைத்தபொழுது, அவன் விரும்பின சிறிய, சிறிய வேலைகள் செய்யத்தக்கதாக அதை திட்டமிட்டு அமைத்தது அவனுக்கு நல்ல பொழுதுபோக்காக இருந்தது. அந்த ரோபோவை முன்புறமாக நடக்கவைக்க, நடப்பதை நிறுத்த, பின்நோக்கி நடக்கவைக்க அவனால் முடிந்தது. அது பீப் ஒலி எழுப்பவோ அல்லது ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட ஒலியை திரும்பக்கூறவோ வைத்தான். என் மகன் கூறினபடியே அந்த ரோபோ எல்லாவற்றையும் செய்தது. ஆனால், இயற்கையாக சிரிக்கவோ அல்லது ஏற்கனவே திட்டமிடப்படாத திசையில் திரும்பவோ அதனால் இயலாது. ஏற்கனவே திட்டமிட்டவைகளைத் தவிர வேறு எந்த செயலையும் அதனால் செய்ய இயலாது.
தேவன் மனிதர்களை சிருஷ்டித்த பொழுது, (அவர்களை) ரோபோக்களைப்போல சிருஷ்டிக்கவில்லை. தேவன் அவருடைய சாயலில் நம்மை சிருஷ்டித்தார். அதனால் நாம் சிந்தித்து செயலாற்றலாம். நாமே தீர்மானங்களை எடுக்கலாம். நன்மை எது, தீமை எது என்பதை நாம் அறிந்து தேர்ந்தெடுக்கலாம். தேவனுக்கு கீழ்ப்படியாத தன்மையை நாம் பழக்கப்படுத்தியிருந்தாலும் கூட, நமது வாழ்க்கையை மறுபடியும் திருத்திக்கொள்ள நம்மால் தீர்மானம் எடுத்துக்கொள்ள இயலும்.
தேவனுடைய வழிகளில் நடப்பதைவிட்டு, இஸ்ரவேல் புத்திரர் வழிதவறினபொழுது, எசேக்கியேல் தீர்க்கதரிசியின் மூலம் தேவன் பேசினார். “நீங்கள் மனந்திரும்புங்கள், உங்களுடைய எல்லா மீறுதல்களையும் விட்டுத் திரும்புங்கள்; அப்பொழுது அக்கிரமம் உங்கள் கேட்டுக்குக் காரணமாயிருப்பதில்லை… புது இருதயத்தையும் புது ஆவியையும் உண்டுபண்ணிக்கொள்ளுங்கள்” (எசே. 18:30–31) என்று எசேக்கியேல் கூறினார்.
இப்படிப்பட்ட மாற்றம், நாம் தேர்ந்தெடுக்கும் ஒரு காரியத்தின் மூலமாக ஆரம்பிக்கப்பட்டு பரிசுத்தாவியின் வல்லமையினால் செயல்படுகிறது (ரோம. 8:13). மிகவும் நெருக்கடியான நேரத்தில் தேவையற்ற தேர்ந்தெடுத்தலை தவிர்க்கவேண்டிய நிலையாகும். வம்பு வார்த்தைகள் கிடையாது, பேராசை கிடையாது, பொறாமை கிடையாது ______________ (கோடிட்ட இந்த இடத்தில் நீங்கள் விடவேண்டும் என்று நினைக்கிற காரியங்களை நிரப்பிக்கொள்ளுங்கள்). நீங்கள் இயேசுவை அறிந்திருந்தீர்களானால் நீங்கள் பாவத்திற்கு அடிமைகளல்ல. நீங்கள் மாறுவதற்கான காரியங்களை தேவனுடைய உதவியோடு தேர்ந்தெடுக்கலாம். தனிப்பட்ட வாழ்க்கையில் நீங்கள் செய்ய வேண்டிய மாற்றத்தை இன்றே துவங்கலாம்.