வகை  |  odb

தேவனே உயர்ந்து நிற்கிறார்

தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த வனவிலங்கு பாதுகாவலரான கைல்ஸ் கெல்மேன்சன் தான் கண்ட நம்புவதற்கரிய ஒரு காட்சிபற்றிக் கூறினார். அதாவது, ஆறு சிங்கங்களை எதிர்த்து இரண்டு தேன்வளைக் கரடிகள் (பேட்ஜர்) சண்டையிட்டனவாம். சிங்கங்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும், தங்களைவிட பத்துமடங்கு பெரிய உருவமுள்ள கொடிய சிங்கங்களிடமிருந்து அவை பின்வாங்கவில்லை. சிங்கங்கள் அவை இரண்டையும் எளிதில் கொன்றுவிட நினைத்திருக்கலாம்; ஆனால் சண்டையின் முடிவில் வீரநடை போட்டு பேட்ஜர்கள் சென்றதை வீடியோ காட்சி காட்டியது.

தாவீது-கோலியாத் சம்பவமும் நம்பமுடியாத ஒரு சம்பவம்தான். அனுபவமற்ற வாலிபனான தாவீது கொடிய பெலிஸ்தனான கோலியாத்துடன் மோதினார். இந்த இளம் வீரனைவிட கோலியாத் உயரமானவன்; பயங்கரமான பெலசாலி; யாரிடமும் இல்லாத ஆயுதம் அவனிடம் இருந்தது; அதாவது வெண்கல கேடகம், கூரான வெண்கல ஈட்டி (1 சாமு. 17:5-6). ஆனால் தாவீது சாதாரண மேய்ப்பன். தன் சகோதரர்களுக்காக அப்பங்களையும் பால்கட்டிகளையும் எடுத்துக்கொண்டு அந்தப் போர்க்களத்திற்குச் சென்றிருந்தார். வசனங்கள் 17-18. ஒரு கவண் மட்டுமே அவரிடம் இருந்தது.

கோலியாத் இஸ்ரவேலரை யுத்தத்திற்கு அழைத்தான். ஆனால் அவனோடு யுத்தம் செய்ய யாரும் தயாராக இல்லை. சவுல் ராஜாவும் “இஸ்ரவேல் அனைவரும் ... கலங்கி மிகவும் பயப்பட்டார்கள்” (வச. 11). தாவீது களத்தில் குதித்தபோது எவ்வளவுக்கு அதிர்ந்து போயிருப்பார்கள்! அனுபவசாலிகளான இஸ்ரவேலின் போர்வீரர்களுக்கு இல்லாத தைரியம் தாவீதுக்கு எவ்வாறு வந்தது? அங்கிருந்த அனைவருமே கோலியாத்தைத் தான் பார்த்தார்கள். ஆனால் தாவீது தேவனைப் பார்த்தார். “கர்த்தர் உன்னை (கோலியாத்தை) என் கையில் ஒப்புக்கொடுப்பார்” என்று ஆணித்தரமாகச் சொன்னார். (வச. 46). அங்கே எல்லாமே கோலியாத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதாக அனைவரும் நினைத்தார்கள், ஆனால் தேவன்தாம் அங்கு உயர்ந்து நிற்பதாக தாவீது நம்பினார். கவணில் கல்லை வைத்து அந்த ராட்சதனின் நெற்றியில் அடித்து வீழ்த்தி, தன் விசுவாசம் உண்மையானது என்பதை நிரூபித்தார்.

எல்லாமே “கோலியாத்தின்” (நம் பிரச்சனைகளின்) கட்டுப்பாட்டில் இருப்பதாகத்தான் நாம் நினைக்கிறோம். ஆனால் தேவனே உயர்ந்தவர். நம் வாழ்க்கை அவருடைய கட்டுப்பாட்டில்தான் உள்ளது.

இப்பொழுதே ஆரம்பிக்கலாம்

2017, பெப்ரவரி மாதம் என்னுடைய மூத்த சகோதரிக்கு புற்றுநோய் இருப்பதாக பரிசோதனையில் தெரியவந்தது. உடனே நான் என் நண்பர்களிடம், “கரோலினுடன் நான் அதிக நேரம் செலவிடவேண்டும், இப்பொழுதிலிருந்தே ஆரம்பிக்கப் போகிறேன்” என்று சொன்னேன். நான் அளவுக்கதிகமாக உணர்ச்சிவசப் படுவதாக சிலர் சொன்னார்கள். ஆனால், பத்து மாதங்களுக்குள் அவள் இறந்துபோனாள். அவளோடு நான் பல மணி நேரம் செலவிட்டிருந்தபோதிலும், நாம் ஒருவரை அதிகமாக நேசிக்கும்போது அவருடன் எவ்வளவுதான் நேரம் செலவிட்டாலும் நம் அன்பைப் பொழிவதற்கு நேரம் போதாது என்றே நினைக்கிறேன்.

ஆதிகால சபையிலிருந்த இயேசுவின் சீடர்களிடம், “ஒருவரிலொருவர் ஊக்கமான அன்புள்ளவர்களாயிருங்கள்” என்று சொல்கிறார் அப்போஸ்தலனாகிய பேதுரு (1 பேது. 4:8). அவர்கள் உபத்திரவத்திற்கு ஆளாகியிருந்தார்கள். கிறிஸ்தவ குடும்பத்தின் சகோதர சகோதரிகளுடைய அன்பு முன்பைவிட அவர்களுக்கு அதிகமாக தேவைப்பட்டது. தேவன் தாமே தம்முடைய அன்பை அவர்களுடைய இருதயங்களில் ஊற்றியிருந்ததால், அதே அன்பை அவர்கள் மற்றவர்கள்மேல் காட்ட விரும்பினார்கள். ஜெபம், விருந்தோம்பல், அன்பும் உண்மையுமான பேச்சு போன்றவற்றின் மூலம் அவர்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்த விரும்பினார்கள். தேவன் கொடுத்த அன்பினாலே அவ்வாறு செய்ய விரும்பினார்கள். வசனங்கள் 9-11. தேவனுடைய தயவுள்ள நோக்கங்களுக்காக, தியாக மனப்பான்மையோடு ஒருவருக்கொருவர் சேவைசெய்கிற வரத்தை தேவன் அவர்களுக்குக் கொடுத்திருந்தார். அவருடைய கிருபையின்மூலம் அது சாத்தியமாகியிருந்தது. எனவே, “எல்லாவற்றிலேயும் இயேசுகிறிஸ்துமூலமாய் தேவன் மகிமைப்படும்படியே செய்வீர்களாக” (வச. 11). இதுதான் தேவனுடைய வல்லமையான திட்டம், நம் மூலமாக அவருடைய சித்தத்தை நிறைவேற்றுகிற திட்டம்.

நமக்கு மற்றவர்கள் தேவை, அவர்களுக்கு நாம் தேவை. அன்புகாட்டுவதற்கு தேவன் நமக்குக் கொடுத்திருக்கிற நேரத்தையும், வளங்களையும் நாம் பயன்படுத்துவோம். அதை இப்பொழுதே ஆரம்பிப்போம்.

போதிப்பதின்படி நடப்போம்

பால் டூர்னியர் என்பவர் ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த மருத்துவர்; அதிகம் மதிக்கப்பட்ட போதக ஆலோசகர். அவருடைய விரிவுரை ஒன்றைக் கேட்கிற சிலாக்கியம் போதகரும் எழுத்தாளருமான யூஜீன் பீட்டர்சனுக்குக் கிடைத்தது. மருத்துவரின் பணிகள் பற்றி பீட்டர்சன் வாசித்திருக்கிறார், மேலும் குணப்படுத்துவதற்கு மருத்துவர் கையாள்கிற விதங்களை அறிந்து வியந்திருக்கிறார். அன்றைய கருத்துரை பீட்டர்சனின் மனதில் ஆழமான தாக்கத்தை உண்டாக்கியது. டூர்னியர் தான் பேசுகிறபடி வாழ்கிறார், தான் வாழ்கிறபடி பேசுகிறார் என்று உணரமுடிந்தது. மருத்துவரின் அனுபவம் பற்றிச் சொல்வதற்கு ‘கான்குரயன்ஸ்’ (congruence) என்கிற வார்த்தையை பீட்டர்சன் பயன்படுத்துகிறார். கான்குரயன்ஸ் என்றால் இணக்கம். “அவரைப் பற்றிச் சொல்வதற்கு இதுதான் சரியான வார்த்தை” என்கிறார்.

கான்குரயன்ஸ் – “போதிப்பதின்படி செய்வது” அல்லது “போதிப்பதின்படி வாழ்வது” என்று இதற்கு அர்த்தம் உண்டு. யாராவது தான் “ஒளியில்” இருப்பதாகச் சொல்லியும் தன் சதோதரனையோ சகோதரியையோ பகைத்தால் அவர் “இதுவரைக்கும் இருளிலே” இருப்பதாக அப்போஸ்தலனாகிய யோவான் வலியுறுத்துகிறார் (1 யோவா. 2:9). அப்படிப்பட்டவர் பேசுவதும் செய்வதும் இணக்கமாக இருக்காது. அப்படிப்பட்டவன் “தான் போகும் இடம் இன்னதென்று அறியாதிருக்கிறான்” என்று யோவான் சொல்கிறார். வச 11. பேச்சுக்குக்கும் செயலுக்கும் இணக்கமில்லாதவன் “இருளிலே” இருப்பதாகச் சுட்டிக்காட்டுகிறார்.

தேவ வார்த்தையின் வெளிச்சம் நம் பாதையில் பிரகாசிக்கும்படி நாம் அவரோடு நெருங்கி வாழ்வதுதான், இருளில் வாழாமல் நம்மைப் பாதுகாக்கும். அதனால் தேவபக்தியான ஒரு பார்வை கிடைக்கும், அது நம் வாழ்க்கையில் தெளிவையும் இலக்கையும் கொடுக்கும். அப்போது நம் வார்த்தைகளைப் போலவே நம் செயல்கள் இருக்கும். இதை மற்றவர்கள் கவனிக்கும்போது, போகும் இடம் இன்னதென்று அறியாமல் செல்கிறவர்கள் என்று நம்மை பற்றி எண்ணாமல், போகும் இடத்தை தெளிவாக அறிந்திருப்பவர்கள் என்று புரிந்துகொள்வார்கள்.

ஒவ்வொரு சம்பவமும் அவர் பெயரைச் சொல்லுகின்றன

சம்பவங்களை அருமையாக விவரிக்கும் சிறுவர் வேதாகமத்தைத் திறந்து, என் பேரனுக்கு வாசித்துக் காண்பிக்க ஆரம்பித்தேன். ஒரு சம்பவத்தில் தேவனுடைய அன்பையும் ஏற்பாட்டையும் பற்றி அருமையாக விவரிக்கப்பட்டிருந்தது. அதை வாசித்தபோது பூரித்தோம். பிறகு வாசிப்பதை சற்றே நிறுத்திவிட்டு, புத்தகத்தைத் திருப்பி மீண்டும் ஒருமுறை தலைப்பை வாசித்தேன்: ‘இயேசுவின் சம்பவம் சொல்லும் வேதாகமம்: ஒவ்வொரு சம்பவமும் அவர் பெயரைச் சொல்லுகின்றன’ என்று எழுதப்பட்டிருந்தது.

ஒவ்வொரு சம்பவமும் அவர் பெயரைச் சொல்லுகின்றன. ஒவ்வொரு சம்பவமும்.

உண்மையைச் சொன்னால், சிலசமயங்களில் வேதாகமத்தை வாசிக்கும்போது, குறிப்பாக பழைய ஏற்பாட்டை வாசிக்கும்போது சரியாகப் புரியாது. தேவனை அறியாதவர்கள் அவருடைய மக்களைத் தோற்கடிப்பதுபோலத் தெரியும். தேவன் பரிசுத்தர், அவருடைய நோக்கங்களெல்லாம் நன்மையானவை என்றால், அவ்வளவு கொடுமையை தேவன் எவ்வாறு அனுமதித்தார்?

இயேசு உயிர்த்தெழுந்த பிறகு, எம்மாவூருக்குச் செல்லும் வழியில் இரண்டு சீடர்களைச் சந்தித்தார். அவர்கள் இயேசுவை அடையாளங்காணவில்லை. தாங்கள் நம்பிக்கையோடு எதிர்பார்த்திருந்த மேசியா மரித்துப் போனாரென ஏமாற்றத்தில் இருந்தார்கள். லூக்கா 24:19-24. “அவரே இஸ்ரவேலை மீட்டுரட்சிப்பவர்” என்று நம்பியிருந்தார்கள். வச 21. இயேசு அவர்களுக்கு மறுநிச்சயத்தைக் கொடுத்தது பற்றி லூக்கா பதிவு செய்கிறார்: “மோசே முதலிய சகல தீர்க்கதரிசிகளும் எழுதின வேதவாக்கியங்களெல்லாவற்றிலும் தம்மைக்குறித்துச் சொல்லியவைகளை (இயேசு) அவர்களுக்கு விவரித்துக் காண்பித்தார்” (வச. 27).

ஒவ்வொரு சம்பவமும் அவருடைய பெயரைச் சொல்லுகின்றன, புரியக்கடினமான சம்பவங்களும் கூட. ஏனென்றால், நம் உலகம் பெரும் சிதைவுக்கு உள்ளாகியிருப்பதையும் அதிலிருந்து நம்மைக் காப்பாற்ற ஒருவர் தேவை என்பதையும் அவை வெளிப்படுத்துகின்றன. வழிவிலகிப்போன பிரியமான தம் பிள்ளைகளை மனதில்கொண்டு தேவன் ஏற்படுத்தியுள்ள மீட்பை, அதாவது அவர்களை மீண்டும் தம்மிடம் கொண்டுவருகிற வழியைத்தான் ஒவ்வொரு செயலும், ஒவ்வொரு சம்பவமும், ஒவ்வொரு தலையீடும் சுட்டிக்காட்டுகின்றன.

தேவனிடம் உண்மையாய் இருப்பது

என் பேரனுக்கு மூன்று வயது. அன்றைக்கு ஆரம்பமே மோசமாக இருந்தது. அவனுக்குப் பிடித்தமான சட்டையைக் காணவில்லை. அவன் விரும்பி அணிகிற ஷூக்கள் (காலணிகள்) சூடாக இருந்தன. தன் கோபத்தை எல்லாம் தன் பாட்டியின் மேல் கொட்டினான். பிறகு உட்கார்ந்து அழத்தொடங்கினான்.

“எதற்காக இப்படி அழுகிறாய்?” என்று அவனிடம் கேட்டேன். சிறிது நேரம் அவனிடம் பேசினேன். அவன் அமைதியான பிறகு, நான் அவனிடம் அன்பாக, “பாட்டியிடம் நல்ல பிள்ளையாக நடந்துகொண்டாயா?” என்று கேட்டேன். ஏதோ யோசனையில் தன் ஷூக்களையே பார்த்துக்கொண்டு, “இல்லை. கெட்டபிள்ளையாக நடந்து கொண்டேன். மன்னியுங்கள்” என்று சொன்னான்.

அவன்மேல் எனக்கு பரிதாபம் உண்டானது. தான் செய்ததை மறுக்காமல், நேர்மையோடு ஒத்துக்கொண்டான். அதன்பிறகு ஜெபித்தோம், நாங்கள் தவறு செய்யும்போது எங்களை மன்னிக்கவும், நல்லவர்களாக வாழ்வதற்கு எங்களுக்கு உதவிசெய்யவும் தேவனிடம் வேண்டிக்கொண்டோம்.

ஏசாயா 1 தம்முடைய மக்கள் செய்த தவறுகளை எல்லாம் சொல்லி, அவர்களை தேவன் கண்டிக்கிறார். நீதிமன்றங்களில் பரிதானமும் அநீதியும் தலைவிரித்தாடின; உலக ஆதாயத்திற்காக திக்கற்றோரையும் விதவைகளையும் கொள்ளையிட்டார்கள். அப்படியிருந்தும் அவர்களிடம் தேவன் இரக்கத்தோடு நடந்து கொண்டார், யூதாவின் ஜனங்கள் தாங்கள் செய்த தவறுகளை அறிக்கைபண்ணி, அவற்றிலிருந்து திரும்பும்படிச் சொன்னார்: “வழக்காடுவோம் வாருங்கள் . . . உங்கள் பாவங்கள் சிவேரென்றிருந்தாலும் உறைந்த மழையைப் போல் வெண்மையாகும்” (ஏசா.1:18).

நம்முடைய பாவங்களை நாம் மறைக்காமல் தேவனிடம் சொல்ல அவர் விரும்புகிறார். நாம் மனநேர்மையுடன், மனந்திரும்பும்போது, அன்போடு அவர் மன்னிக்கிறார்: “நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்” (1 யோவா. 1:9). நம் தேவன் இரக்கமுள்ளவர், புதிதாக நாம் வாழ்க்கையைத் துவங்குவதற்கு அவர் உதவுகிறார்!