
கடைசி மட்டும் கனி கொடுத்தல்
லெனோர் டன்லப், தனது தொண்ணூற்று நான்கு வயதிலும், இளமையோடு இருந்தார், அவள் கூர்மையான சிந்தனையும், பிரகாசமான சிரிப்பும் கொண்டிருந்தாள். அவள் இயேசுவின் மீது கொண்டிருந்த அன்பை அநேகர் உணர்ந்தனர். அவள், எங்களுடைய ஆலயத்தின் வாலிபர்களோடு கொண்டிருந்த தொடர்பை யாவரும் அறிவர். வாலிபர்களோடு, அவள் பங்கு பெற்று வந்தது, மிக்க மகிழ்ச்சியையும், ஊக்கத்தையும் கொடுத்தது. லெனோரின் வாழ்க்கை யாவரையும் அசைக்கிறதாக இருந்ததால், அவளுடைய மறைவு, எங்களை மிகவும் பாதித்தது. ஒரு வலிமையான ஓட்டக்காரனைப் போன்று, அவள் தன்னுடைய வாழ்க்கை ஓட்டத்தை முடித்தாள். அவளுடைய மரணத்திற்கு சில நாட்களுக்கு முன்பு வரை, தன்னுடைய ஆற்றலும், ஆர்வமும் குறையாமல், பதினாறு வாரங்கள் இயேசுவைக் குறித்த செய்தியை உலகிற்கு எடுத்துச் செல்வதில் முனைந்திருந்தாள்.
தேவனை கனப்படுத்திய, கனி நிறைந்த அவளுடைய வாழ்வு, சங்கீதம் 92:12-15ல் கூறப்பட்டுள்ளது போன்று உள்ளது. தேவனோடுள்ள உறவில் ஆழ்ந்து வேர் விட்டு வளர்ந்தவர்களின் வாழ்க்கை மொட்டுக்களும், மலர்களும், கனிகளும் நிறைந்த வாழ்க்கையாக இருக்கும் என இந்த சங்கீதம் விளக்குகிறது (வச. 12-13) இங்கே குறிப்பிடப்பட்டுள்ள இரு மரங்களும், (பனை, கேதுரு) அதன் கனிக்கும், உறுதியான மரத்திற்கும் பேர் பெற்றவை. இவற்றின் மூலம் சங்கீதக்காரன் நீண்ட ஆயுளையும், செழிப்பையும், பயனையும் குறிப்பிடுகின்றார். நம்முடைய வாழ்வில் அன்பும், பகிர்தலும், உதவுதலும், மற்றவர்களை கிறிஸ்துவுக்குள் வழிநடத்தலும் காணப்படும் போது, நம் வாழ்வும் மொட்டுக்களையும், மலர்களையும், கனிகளையும் கொண்டுள்ளது என்பதை நினைத்து மகிழ்வோம்.
“மூத்தவர்கள்”, “பண்பட்டவர்கள்” என்று பெயர் பெற்றவர்களும் , வேர் விடவும், கனி கொடுக்கவும் முடியாதபடி, முதிர்வடைந்து விடவில்லை, லெனோரேயின் வாழ்க்கை இயேசுவின் மூலம், தேவனுக்குள் ஆழ்ந்து வேர் விட்டு, இதற்கும், தேவனுடைய நன்மைக்கும் சாட்சியாகவுள்ளது (வச. 15). நாமும் கூட இதேப் போன்று வளர முடியும்.

உண்மையான, ஆழ்ந்த வாஞ்சை
கீச்சொலி கொண்ட ஒரு சுண்டெலி, அதன் பெயர் ரீபிசீபி. இது நார்னியாவின் நடபடிகள் என்ற கதைகளில் வரும் வீரமிக்க கதாபாத்திரம்.
வினோதமான விலங்குகளும், மனிதரும் வாழும் ஒருகற்பனை உலகத்தில், ரீபிசீபி என்பது ஒரு வீரமிக்க சுண்டெலி. அது தன்னுடைய சிறிய வாளை வீசிய வண்ணம், போர்களத்தில் இறங்கியது. அது, பயத்தை புறம்பே தள்ளி விட்டு, ஓர் இருளடைந்த தீவிற்குள் நுழைந்தது. இந்த ரீபிசீபியின் தைரியத்திற்கான காரணம் என்ன? அந்த சுண்டெலியின் மனதிற்குள், எப்படியாவது அஸ்லான் தேசத்தை அடைந்து விட வேண்டும் என்றிருந்த ஆழ்ந்த ஆவல் தான் இதற்கு காரணம். “அது தான் என் இருதயத்தின் வாஞ்சை” என்று கூறியது .ரீபிசீபியின் உண்மையான, ஆழ்ந்த விருப்பம், அதனை அரசனுக்கு நேராக வழி நடத்தியது.
எரிகோவிலிருந்த பர்திமேயு என்ற குருடன், தன்னுடைய வழக்கத்தின் படியே ஓரிடத்தில் உட்கார்ந்து, குவளையிலிருந்த காசுகளை குலுக்கிய வண்ணம் பிச்சை கேட்டுக் கொண்டிருந்தான். அப்பொழுது, அவ்வழியே இயேசுவும், திரள் கூட்டமும் வருவதை அறிந்தான். உடனே அவன், “இயேசுவே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் ‘ என்று கூப்பிடத் தொடங்கினான் (மாற். 10:47). அக்கூட்டத்தினர் அவனை அமைதியாயிருக்குமாறு அதட்டினர், ஆனால் அவனை அமைதிப்படுத்த முடியவில்லை.
மாற்கு சொல்கின்றார், “இயேசு நின்றார்” (வ.49) அந்த கூட்டத்தின் நடுவில் ,இயேசு பர்திமேயுவிற்கு செவிகொடுத்தார். அவனிடம், “நான் உனக்கு என்ன செய்ய வேண்டும் என்றிருக்கிறாய்?” என்று கேட்டார் (வச. 51).
அவனுடைய பதில் என்னவாயிருக்கும் என்பது இயேசுவுக்கு நன்றாகத் தெரியும். இருப்பினும், பர்திமேயு தன்னுடைய ஆழ்ந்த விருப்பத்தை வெளிப்படுத்தும் படி, இயேசு விரும்பினார். அவனுடைய உறுதியான விசுவாசத்தின் மூலம் வெளிப்படும் வல்லமையை அவர் அறிந்திருந்தார். “ஆண்டவரே, நான் பார்வை அடைய வேண்டும்” என்றான் பர்திமேயு. இயேசு அவனை வண்ணங்களையும், அழகையும், நண்பர்களின் முகத்தையும் முதல் முறையாக காணச் செய்து, வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.
எல்லா விருப்பங்களும் உடனே சந்திக்கப்படுவதில்லை. இங்கு தேவையானது என்னவென்றால், பர்திமேயு தன்னுடைய உள்ளத்தின் வாஞ்சையை இயேசுவிடம் எடுத்துச் சென்றான். இதை நன்கு கவனித்தோமேயானால், நம்முடைய ஆழ்ந்த விருப்பங்களும் , வாஞ்சைகளும் நம்மை இயேசுவிடம் வழி நடத்திச் செல்லும் என்பதைக் கண்டுகொள்வோம்.

அந்நியரைச் சிநேகித்தல்
எங்களுடைய குடும்பத்தின் நபர் ஒருவர், வேறு மதத்திற்கு மாறியதால், என்னுடைய கிறிஸ்தவ நண்பர்கள், அவளை மீண்டும் இயேசுவிடம் திரும்புமாறு செய்ய, என்னை வற்புறுத்தினர். கிறிஸ்து நம்மை நேசிப்பதைப் போன்று, அவளை நேசிக்க கற்றுக் கொண்டேன், பொது இடங்களில், சிலர் அவள் அணிந்துள்ள அந்நிய உடையின் நிமித்தம், அவள் மீது எரிச்சலைக் காட்டினர், சிலர் அவளைக் கடின வார்த்தைகளால் சாடினர், தன்னுடைய வாகனத்தில் இருந்தபடியே, ஒரு மனிதன், அவளை “உன்னுடைய வீட்டிற்குப் போ! “என்று விரட்டினான், அவள் தன்னுடைய வீட்டில் தான் இருக்கின்றாள் என்பதை அறியாத சிலர் இவ்வாறு செய்தனர்.
வேற்று உடையும், நம்பிக்கையும் கொண்டுள்ள புறஜாதியினரிடம் எப்படி கனிவாக நடந்து கொள்ள வேண்டுமென மோசே தன் ஜனங்களுக்கு கற்றுக்கொடுத்தார். நீதியும், கருணையும் நிறைந்த சட்டங்களை இஸ்ரவேல் ஜனங்களுக்குக் கொடுத்தார். “அந்நியனை ஒடுக்காயாக; எகிப்து தேசத்தில் அந்நியர்களாய் இரு ந்த நீங்கள் அந்நியனுடைய இருதயத்தை அறிந்திருக்கிறீர்களே” (யாத். 23:9). தேவன் புறஜாதியினரின் மேல் கொண்டுள்ள கரிசனையை, இந்த வார்த்தைகள் காட்டுகின்றன. தூண்டப்பட்டவர்களாய், பிறரை காயப்படுத்துபவர்களுக்காகவே இந்த வார்த்தைகள் யாத்திராகமம் 22:21, லேவியராகமம் 19:33 ஆகிய இரு இடங்களில் வருகின்றது.
எனவே, நான் அந்த நபரோடு, சிறிது நேரம் செலவிட்டேன், சிற்றுண்டிச் சாலையில், பூங்காவில், நடைப்பயிற்சியின் போது, எங்கள் வீட்டு முற்றத்தில் உட்கார்ந்தும், வெவ்வேறு இடங்களிலும் அவளோடு பேசி, நான் எந்த அன்பையும், மரியாதையையும் பெற விரும்புகிறேனோ, அதை அவளிடம் காட்டினேன். இயேசு நம் மீது வைத்திருக்கும் இனிமையான அன்பை, அவளுக்கு நினைவு படுத்துவதற்கு இதுவே சிறந்த வழி. இயேசுவை அவள் தள்ளி விட்டதால், அவளை அவமானப்படுத்துவதற்குப் பதிலாக, தேவன் வியத்தகு கிருபையோடு நம் அனைவரையும் நேசிப்பது போல, அவள் மீது அன்பு செலுத்துவதே சாலச் சிறந்தது.

சுலபமாக சிக்குண்டு போதல்
அடர்ந்த, வெப்பமான காட்டினுள் போர் செய்துகொண்டிருந்த போர் வீரர்கள், தங்களை வெறுப்படையச் செய்யும் ஒரு பிரச்சனையை சந்தித்தனர். குத்தக்கூடிய முட்களைக் கொண்ட ஒரு வகை படர்கொடி, திடீரென, எதிர் பாராத விதமாக போர் வீரர்களின் உடலைச் சுற்றிக் கொண்டு, அவர்களை நகர விடாமல் செய்துவிடும். அவர்கள் தங்களை விடுவித்துக் கொள்ள போராடும் போது, மேலும் மேலும் கொடிகள் சுற்றிக்கொள்ளும். போர் வீரர்கள் இந்த கொடிக்கு “ஒரு நிமிடம் காத்திரு” என்று பெயரிட்டனர், ஏனெனில், இந்த கொடிகளால் சுற்றப்பட்டு, நகரமுடியாமல் தவிக்கும் போர் வீரர்கள் மற்ற வீரர்களை, “எனக்காக ஒரு நிமிடம் காத்திருக்கவும், நான் கட்டப்பட்டுள்ளேன்” என்று கூப்பிடுவார்கள்.
இதே போன்று, பாவ வலையில் வீழ்ந்த, இயேசுவின் விசுவாசிகளாலும் முன்னேறிச் செல்ல முடியாமல் போய் விடும். எபிரெயர் 12:1, “பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கி நிற்கிற பாவத்தையும் தள்ளி விட்டு,… பொறுமையோடே ஓடக்கடவோம்.”என்று நம்மை எச்சரிக்கின்றது. ஆனால், நம்மைத் தடுக்கிற பாவத்தை எப்படி தூக்கி எறிவது?
நம் வாழ்வை ஆண்டு கொண்டுள்ள பாவத்திலிருந்து விடுதலை பெற, ஒரே வழி இயேசுவே. நம்மை இரட்சிக்க வல்லவராகிய அவரையே நம் கண்கள் நோக்கக் கடவது (12:3). அவர் தேவக்குமாரனாயிருந்தும், முழுவதும் மனிதனாக வந்தபடியாலே, “அவர் தாமே சோதிக்கப்பட்டு பாடுபட்டதினாலே, அவர் சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவி செய்ய வல்லவராயிருக்கிறார், எல்லா விதத்திலும் நம்மைப் போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதிருக்கிற பிரதான ஆசாரியர் அவர். (2:17-18; 4:15) பாவத்தினாலே கட்டுண்டவர்களாய் நாம் காணப்படலாம், நாம் சோதனைகளை மேற்கொள்ளும் படி தேவன் விரும்புகிறார். நம்முடைய சுய பெலத்தினால் அல்ல, அவருடைய பெலத்தோடே ,நம்மைச் சுற்றி வளைக்கின்ற எந்த பாவத்தையும் உதறித் தள்ளி விட்டு, அவருடைய நீதியின் வழியில் பொறுமையோடு ஓடக்கடவோம். (1 கொரி. 10:13).
